தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 28 மே, 2019

தமிழ்க் கல்வியும் தமிழர்ப் பின்புலமும் - Tamil Education


தமிழ்க் கல்வியும் தமிழர்ப் பின்புலமும்

முனைவர் ம..கிருட்டினகுமார்உலாப்பேசி : 9940684775

        தமிழர்கள் வரலாற்றின் ; பண்பாட்டின் ; மொழியின் ; நாகரிகத்தின் முன்னோடிகளாகத் திகழ்கின்றனர் என்பதன் அடையாளம் தான் உயர்தனிச்செம்மொழித் தமிழ்என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழன் தன்னுடைய அடையாளத்தைக் கூட அறிய முயலாத போது வெளிநாட்டவரான பார்ப்போலா தமிழரின் பழமையை ; பெருமையை அடையாளம் காட்டினார். அத்தகைய பெருமையுடைய பின்புலத்தைக் கொண்ட தமிழ்மொழியின் பெருமையினைக் காக்கும் வகையில் அமையும் இக்கருத்தரங்கம் எக்காலத்தவரும் போற்றும் சிறப்புக்குரியது. கல்வியாளர்களின் மொழிப்பற்றும் தன்மான உணர்வும் அறம் குறித்த சிந்தனையும் மேம்பட வேண்டும் என்னும் விழைவே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

அறச்சாலைகளே கல்விச்சாலைகள்
       
         அறத்தைப் போற்றி மக்களைப் பண்படுத்தி நல்ல குடிமகனாக ஆக்குவதே கல்விச்சாலைகளின் பணியாக இருந்தது. வணிக நோக்கில் வளரும் கல்விச்சாலைகள் பிறமொழியினை ஊட்ட விழைகின்றன. அதனால் அம்மொழிக்குரிய பண்பாடும் ஊட்டப்படுகிறது. அதனால் விளையும் கேடுகளே சமூக அவலங்களாகின்றன. எனவே கால ஓட்டத்திற்கேற்ப நாட்டை முன்னேற்றுவது அவசியமெனினும் தமிழர் அறத்தை புறந்தள்ளிவிட்டு முன்னேற எண்ணுவது கண்களை விற்று சித்திரம் வாங்குவதைப் போன்றது.

தமிழர் கற்க வேண்டிய பாடம்

        தமிழரின் பின்புலத்தை அறியாது தமிழ் மொழிக்கு இயன்றவரை கேடு செய்வோரெல்லாம் தமிழ்த்தாயின் உதரத்தில் பிறந்தவர்கள். தமிழ் உதிரத்தில் வாழ்பவர்கள். எனவே அத்தகையோரை குற்றம் கூறுதல் தேவையற்றது. அவர்களுக்கு தமிழ்மொழிக்காக உயிர்நீத்த ; கொடையளித்த ; இலக்கியங்களைக் காத்த படைப்பாளிகளின் வரலாற்றினை உணர்த்த வேண்டியது கல்வியாளர்களின் கடமை. வீழ்ந்தாவரை வாழ வைப்பதே ஆட்சியாளர்களின் கடமையாக இருக்கிறது. வீழாது காப்பதே கல்வியின் மாட்சியாகும். எனவே இலங்கையில் கூட தமிழினத்தின் பெருமையைக் காக்க கல்விச்சாலைகளே நிறுவப்பட்டன. ஆனால் சிங்கள ஆட்சி முதலில் அக்கல்வி நிறுவனங்களை அழித்துப் படிப்படியாக தமிழினத்தையே அழித்துவிட்டது. அதே நிலைதான் இங்கும் மிக மென்மையாக நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளமாகத்தான் சிறப்புத்தமிழ் குறித்த வினா எழுந்துள்ளது.

தமிழரே முன்னோடி

             இலக்கணத்திலும் இலக்கியத்திலும் தனித்தன்மையுடைய தமிழர் அம்மொழி வளத்தை அறியாது இருப்பதனாலேயே பிறமொழியைப் பெருமையாகப் பேசுகின்றனர். ”முற்காலத்தில் சுவடியைநெடுங்கணக்குஎன்று கூறுதலும் எழுத்தறிவிக்கும் ஆசிரியனைக்கணக்காயர்என்று கூறுதலுங் காண்க.

             கற்றதூ உமின்றிக் கணக்காயர் பாடத்தாற்
             பெற்றதாம் பேதையோர் சூத்திர-மற்றதனை
             நல்லா ரிடைப்புக்கு நாணாது சொல்லித்தன்
             புல்லறிவு காட்டி விடும்

என்றநாலடியாரினும் இச்சொல் யாங்கூறிய பொருளில் வழங்குதலுணர்க. தமிழர்க்கு ஆரியர் இந்தியாவிற்கு வருமுன்னரே, எழுதப்படிக்கத் தெரியும். ‘எழுத்து’ ‘சுவடிஎன்பன தனித்தமிழ்ச் சொற்களாதலுங் காண்க. இதனால் அகத்திய முனிவர் தமிழ்ப் பாஷைக்கு நெடுங்கணக்கு வகுத்தனரென்பதும் ஆரியரோடு கலந்த பிரகே தமிழர் தங்கள் பாஷைக்கு நெடுங்கணக்கு ஏற்படுத்திக் கொண்டனரென்பதும் பொருந்தாமை யறிக.” (தமிழ் மொழியின் வரலாறு, . 8) என்னும் பரிதிமாற்கலைஞரின் கூற்று தமிழ்மொழியின் பெருமையினை உணர்த்தும்

மானம் காக்கும் மொழி

        உலகில் அடையாளம் அழிந்த மொழிகளையெல்லாம் மீட்டெடுக்க அம்மொழியைச் சார்ந்தோர் முயன்று வருகின்றனர். அதற்காகச் செய்யும் செலவு பண்பாட்டையும் தன்மானத்தையும் காக்கும் செலவாகவே எண்ணிய அரசுகள் முழுமனதுடன் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறன்றன.

        கி.மு. 4000 அளவில் மெசபொடேமியாவின் தென்பகுதியில் (இன்றைய ஈராக்கில்) ஈஃப்ரேட்ஸ், (Euphrates), டைக்ரெஸ் (Tigres) நதிகளுக்கு இடைப்பட்ட சுமேர் என்னும் சிறிய நிலப்பரப்பில் குடியேறியவர்கள் சுமேரியர்கள் என்ப்படுவர். அவர்களது நாகரிகம் உலகத் தொல் நாகரிகங்களுள் ஒன்றாகப் போற்றப் பெறுகிறது. செமிடிக் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளுள் ஒன்றான அக்காடியன் என்பது அவர்களுடைய மொழியாகும். அசிரியன், பாபிலோனியன் ஆகிய கிளைமொழிகளை உள்ளடக்கி அக்காடியனென்னும் பொதுப்பெயரால் அம்மொழி சுட்டப்பெறுகிறது. அவர்கள் அந்நாளில் ஒரே கல்லில் தமது கருத்துகளை வெட்டியுள்ளனர். அன்றியும் எழுத்தாணியால் களிமண்ணில் எழுதி அதனை வெயிலில் உலர்த்தி அல்லது தீயில் சுட்டு ஓடுகளாய் (clay tablets) பாதுகாத்தும் வந்துள்ளனர். ஆப்பு வடிவிலான அவர்களது எழுத்துமுறை  cuneiform உலகத் தொல் எழுத்துமுறைகளுள் ஒன்றாகும்……….. மிகத் தொன்மையானதும் ஈராயிரம் ஆண்டு காலமாகப் பேச்சு வழக்கில் இல்லாத்துமான அசிரியன் (Assyrian) மொழிக்கு மேற்குறித்த ஆவணங்களிலிருந்து தரவுகள் திரட்டப்பெற்று அகராதி உருவாக்கப்பெற்றுள்ளது. இவ்வகராதிப் பணி 1921 இல் ஜேம்ஸ் ஹென்றி பிரெஸ்டெட்(James Henry Brested) என்பவரால் தொடங்கப்பெற்றது. அண்மையில் மார்த்தா டி.ரோத் (Martha T. Roth) என்பவர் தலைமையில் நிறைவுற்றது. 80 அறிஞர்கள் 90 ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய இவ்வகராதி மொத்தம் 21 தொகுதிகளை உடையது…………………………கால வெள்ளத்தில் அடித்துச்செல்லபெற்ற பழம்பெரும்  சமூகத்தை, அதன் நாகரிகத்தை, பண்பாட்டை மீளவும் காண உதவும் சாளரமாக இம்மாபெரும் நன்முயற்சி அமைந்துள்ளது என்பதை உணரவேண்டும். மொழி என்பது ஒலிகளில் குறீயீட்டுக் களஞ்சியம் மட்டும் அன்று; ஓர் இனத்தின் அடையாளமும் பண்பாட்டின் ஆவணமும் ஆகும் என்ற அறிவுத் தெளிவாலேயே அவ்வகராதி ஆக்கப்பெற்றுள்ளது.”(நோக்கு ஜூலை 2011 இதழ் பக். 3,4) என அரிமா நோக்கு இதழில் அதன் இணையாசிரியர் பேராசிரியர் வ.ஜெயதேவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதனை எண்ணி மொழியின் முக்கியத்துவத்தினை உணரலாம்.

தமிழனே தமிழனுக்குத் தடைக்கல்

        இலக்கியங்களின் அடிப்படையைக் கொண்டு நோக்குகையில் ஈராயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஒரு மொழியின் பெருமையினைக் காக்க முயல்வதற்கு தமிழர்களே தடையாக நிற்பது வேடிக்கைக்குரியது. காலம் தாழ்த்தி தண்ணீர் கொண்டு வந்தான் என்பதற்காக உயிர்விட்ட கணைக்கால் இரும்பொறையின் வழியில் வந்த தமிழினம் தண்ணீருக்காக கையேந்தி நிற்கும் அவலநிலைக்கு வந்துவிட்டது.  இமயத்தில் கொடியைப் பறக்கவிட்டு குமரி வரை ஆட்சி செய்த தமிழன் இன்று ஒரு குறுகிய எல்லைக்குள் ஒடுங்கி நிற்கிறான். சென்னை என்ற ஒரே மாநிலமாகத் திகழ்ந்த தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் அனைத்தும் இன்று தனி மாநிலமாகப் பிரிந்து தாயையே அடித்துத் துன்புறுத்தும் குடிகாரனைப் போல்  அல்லது நாகரிமாகச் சொல்ல வேண்டுமென்றால் தாய்க்கு தண்ணீர் கொடுக்காத தனையனைப்போல் வருந்த வைக்கிறது. இதற்கெல்லாம் காரணம் தமிழன் தன் வரலாற்றை அறியாதது தான். இந்த அவல்நிலை தொடராதிருக்க தமிழ்க் கல்வி அவசியம் என்பதனை கல்வியாளர்களேனும் உணரவேண்டும்.
        
           தமிழ்மொழி தெரியாமல் தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பிறமொழியில் எழுதிப் படிக்கும் மாணாக்கர்கள் பெருகிவருகின்றனர். பிறமொழி படிப்பதிலேயே அனைவரும் கவனமும் உள்ளது. காரணம் தாய்மொழிப் பற்றின்மை எனக் கூற இயலாது வேலைவாய்ப்பு எனக் கொள்ளலாம்.
தமிழன் ஏமாந்தான்
        
       தமிழ் மொழியை முதன்மை மொழி (ஃபஸ்ட் லேங்குவேஜ்) எனக் கூறி அதற்கு தேர்ந்தெடுக்கும் நிலையை உருவாக்கிவிட்டனர். ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கொண்டு அனைவரையும் படிக்கவைத்து தமிழர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டனர் ; கொள்கின்றனர் ; கொள்வர்.
        
       தாய் மொழிச் சிந்தனையால்தான் அறிவு வளரும் என்பதனை அனைவருமே உணர்ந்திருந்தாலும் பிறமொழி மோகத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அரசி கயல்விழி என்னும் பெயர்கள் ரக்ஷனா, நேத்ரா என்னும் பெயர்களாக மாறிவரும் அவலநிலைத் தொடர்கிறது. பெயரின் பொருள் தெரியாமலே பெயர் வைக்கும் போக்கும் பெருகிவிட்டது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் தமிழ்மொழியின் பெருமையினை உணரத் தவறிவிட்டமையே. தமிழன் தன் அடையாளமாக இருந்த பெயரைக் கூட இழப்பதில் மகிழ்ச்சி கொள்கிறானே தவிர வருத்தம் கொள்வதில்லை என எண்ணும்போது தமிழனின் நிலை குறித்து வருந்தவேண்டியுள்ளது.
        
       எங்கெல்லாம் தமிழ் வாழ்கிறதோ அங்கெல்லாம் தமிழன் வாழமுடியும் என்பதனை உணரவேண்டும். ஆங்கிலம் அவ்வாறே உலகையே தன்கைக்குள் கொண்டுவந்ததனை ஏனோ தமிழர்கள் மறந்துவிடுகிறார்கள். அவர்களுக்கு இவ் அறிவை ஊட்ட வேண்டிய கடப்பாடு கல்வியாளர்களுக்கும் உண்டு.
முன்னேறிய நாடுகள்
     
   தாய்மொழியைக் கற்றவர்கள்தான் உலகிலுள்ள கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்கின்றனர். பிறமொழியில் சிந்தித்தவர்கள் சாதனைப் படைத்தார்கள் எனக் கூறினால் அதற்குப் பின்னால் அவர்களுடைய போராட்டம் எத்தனைக் கடுமையானது எனக் கேட்டால்தான் தெரியும். அவர்களுக்கு தாய்மொழியில் சிந்திக்க வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் வேகமாக அச்செயலை செய்துமுடித்திருப்பார்கள் என்பதனை சொல்லத்தேவையில்லை.

        தொழில் நுட்பத்தில் சாதனைப் படைத்த ஜப்பானியர்கள், உலகச் சந்தையையே தனது கட்டுக்குள் வைத்திருக்கும் சீனா பொறியியலில் முன்னோடியாக நிற்கும் ஜெர்மனி ஆகிய நாடுகள் அனைத்தும் தாய்மொழியால் மட்டுமே முன்னேறியுள்ளதனைக் காணலாம்.

உலக அரங்கில் தமிழ்

        தனித்தியங்கும் தன்மையற்ற ஆங்கிலம் இன்று உலகம் முழுதும் பயன்பாட்டில் இருக்கிறது. ஆனால் தனித்தியங்கக் கூடிய மொழிவளம் பெற்ற தமிழ் உலக அரங்கில் இல்லை. இந்நிலையிலும் அதிகமான வலைதளங்கள் உள்ள மொழியாகத் தமிழ்மொழி திகழ்கிறது. பலவகையில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டும் தமிழ் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது எனில் வாய்ப்புக் கொடுத்தால் தமிழ் மட்டுமின்றி தமிழனும் உலக அரங்கில் தலைமை இடத்தில் அமரமுடியும். இதனை உணர்ந்து கல்வியாளர்கள் செயல்படவேண்டும்.

        தமிழை அழகாகப் பிழையின்றிப் பேசப் பயிற்சி அளிப்பதில்லை. தமிழைப் பிழையில்லாமல் எழுதப் பயிற்சி அளிப்பதில்லை. பத்தாண்டுகளுக்கு முன் அதற்கெல்லாம் ஒரு பாடவேளை இருந்தது. ஆனால் இன்று நீதிக்கருத்துக்களைக் கூறுவதற்கான பாடவேளை நீக்கப்பட்டுவிட்டது. பிறகு எப்படி நாகரிகமானப் பேச்சாற்றலை ,மொழிப்பயன்பாட்டை, நல்லொழுக்கங்களை எதிர்பார்க்கமுடியும்.

        அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என எழுத்தைக் கற்றுக்கொடுக்கும் போதே அறத்தையும் கற்றுக்கொடுத்த தமிழ்மூதாட்டி போல் உலக மொழிகளுள் எவரையேனும் அடையாளம் காட்ட இயலுமா. அத்தகைய பெருமையுடைய தமிழைப் படிக்கத் தடை விதித்தால் ஆசிரியரை வாத்தி எனக் கூறுபவர்களும். தமிழாசிரியர்களை கிண்டலடிப்பவர்களும் ஆசிரியர்களை எதிர்த்துப் பேசுபவர்களும் பெருகத்தான் செய்வார்கள். ஆனால் அதன் வளர்ச்சி நிலையாக ஆசிரியரையே கொன்ற நிலைதான் மிகவும் கசப்பான செய்தியாகும். அந்தச் செய்திக்குப் பின்னராவது உலகத்துக்கு அறத்தைக் கற்றுக்கொடுத்த இலக்கியங்களைச் சேர்க்காமல்  எவ்வாறு பண்பாட்டை கற்றுக்கொடுத்துவிட முடியும். அதற்கு நேர்மாறாக சில நல்ல மாணாக்கர்களை நல்வழிப்படுத்தும் வகையில் கல்வியாளர்கள் பயிற்றுவித்த சிறப்புத்தமிழ் இன்று நீக்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது எனில் இதைவிட தமிழர் தனக்குத்தானே கேடு செய்துகொள்ள வேறு வழி தேவைப்படாது.
வேண்டுதலும் வேண்டாமையும்

        தமிழ் படித்தவர்கள் அனைவரும் இன்று பிறமொழியில் படிப்பதற்கு தோள் கொடுக்கிறார்கள். ஏனென்றால் எனக்குத் தெரியாதது என் பிள்ளைகளுக்குத் தெரிய வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் ஒழுக்கத்தில் மட்டும் தமிழ்ப்பண்பாட்டோடு இல்லையென்றால் காலம் கெட்டு விட்ட்து என்று தாங்கள் செய்த பிழையைக் காலத்தின்மீது போட்டுவிட்டு தப்பித்துக் கொள்கிறார்கள் என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. எதிலும் சிறந்த்தையே பெற வேண்டும் என எண்ணும் பெற்றோர்கள் தமிழ்மொழியின் பெருமையினை அறிந்தால் தமிழையே கற்பிக்க விரும்புவர் என்பதில் ஐயமில்லை. ஒழுக்கமாகவும் வளமாகவும் குழந்தையாக வாழ்வதில்தான் பெற்றோர் மகிழ்ச்சியடைவர். எனவே தமிழ்மொழியை, தமிழர் பண்பாட்டைக் காப்பதில் கல்வியாளர்கள் கவனத்துடன் செயல்படவேண்டும்.

வடமொழியினும் சிறந்த தமிழ்

        தமிழன் ஏமாந்த களங்கள் ஒன்றிரண்டல்ல. வெள்ளைமனம் படைத்த தமிழனின் மொழியை அவன் கட்டிய கோயில்களிலும் கூட அனுமதிக்காத நிலை இருந்தது. சமஸ்கிருதம் தேவபாஷை. தமிழ் நீச பாஷை எனத் தமிழைத் தாழ்த்திய நிலை கண்டும் தமிழன் கவலைகொள்ளவில்லை. ஆனால் கால வெள்ளத்தில் சமஸ்கிருதம் வீழ்ந்தது ; தமிழ் வாழ்ந்தது. இந்நிலை கண்டும் சமஸ்கிருதமே முதல்மொழி என்று கூறும் நிலையும் நிலவிவருவது வேடிக்கைக்குரியது.

        திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற தமது நூலில் கால்டுவெல் ஐயர் அவர்கள், தமிழ் மொழியிலிருந்து வடமொழிச் சொற்களை நீக்கிவிட்டால், எஞ்சியிருக்கும் பழம்பெரும் சிறப்பு வாய்ந்த திராவிடச் சொற்கள் ஆரியக் கலப்பற்ற திராவிட நாகரிக வாழ்க்கை முறையை உணர்த்தவல்லன (திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், கால்டுவெல் ஐயர், .146) என்று தமிழின் தனித்தன்மையை 18 ஆம் நூற்றாண்டுகளில் வரையறுத்துள்ளார். .”(நோக்கு ஜூலை 2011 இதழ் பக். 15) எனச் செ. சாரதாம்பாள் எடுத்துக்காட்டியுள்ளதன் வழி தமிழின் பெருமையினை அறியலாம்

        சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் தோன்றியிருக்கவே முடியாது. ஏனெனில் சமஸ்கிருதம் ஓர் உட்பிணைப்பு மொழி, தமிழ் ஓர் ஒட்டுநிலைமொழி என்னும் எளிய மொழியியல் உண்மை பல்வேறு சிறப்புப்பாடம் பயில்வோருக்கும் தெற்றென விளங்கியிருக்கும். இதற்காக ஒவ்வொரு முறையும் தமிழில் முதுகலையோ, முனைவர்ப் பட்டமோ பெற்ற ஒருவர் வந்து வாதாட வேண்டும் என்னும் சூழ்நிலை தோன்றியிருக்காது. அதை ஒட்டித் தமிழைச் சிறப்புப் பாடமாகப் படித்த ஒருவர் எப்போதும் அதன் தனித்துவங்களை விதந்துரைப்பது இயல்புதான் என்னும் சாய்வுப் பார்வையும் பேரெண்ணிக்கையிரிடம் ஏற்பட்டிருக்காது. .”(அரிமா நோக்கு ஜூலை 2011 இதழ் ப. 6) என வீ.பரிமளா அவர்கள் குறிப்பிடும் கூற்றும் இங்கு எண்ணத்தக்கது.

திராவிடமொழியில் தலையாயது தமிழ்

        தமிழ் தமிழர்களுக்கு மட்டுமின்றை திராவிடர் அனைவருக்கும் தாயாக் விளங்கும் பெருமையினை உடையது. ”இந்தியாவின் தென்பாகத்தில் வழங்கும் மொழிகள் திராவிட மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று மொழியறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். திராவிட மொழிகளுள் திருந்திய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், துளு ஆகியவையாகும். இவற்றுள் மற்றைய நான்கு மொழிகளுக்கும் தலைமை வாய்ந்த தகுதியைப் பெற்றுள்ளது தமிழ் மொழியாகும்.(Encyclopaedia Britannica, Vol. 2, p.733) .”(நோக்கு ஜூலை 2011 இதழ் ப. 14) எனச் செ. சாரதாம்பாள் எடுத்துக்காட்டியுள்ளதன் வழி தமிழின் பெருமையினை அறியலாம்.

மொழியியலிலும் சிறந்த தமிழ்

        இன்று உலகமே ஏற்றுக்கொண்ட துறை மொழியியல் துறை. அத்துறையிலும் தமிழ்மொழிப் பொருத்தப்பாடுடையதாக இருப்பதனை மொழி வல்லுநர்கள் மெய்ப்பித்துள்ளனர். அதனால்தான் கணினிக்கு ஏற்ற மொழியாக தமிழ்மொழி இருப்பதனை எடுத்துக்காட்டியுள்ளனர். தமிழர்கள் பொறுப்புணர்வுடன் பணியாற்றினால் தமிழ்மொழி கணினி மொழியாகும். இதனால் தமிழ் ஓங்குவதோடு தமிழரும் பெருமையடைவர் என்பதில் ஐயமில்லை.

        தமிழ்மொழி திருந்திய வடிவம் பெற்ற தொன்மைத் தன்மை உடைய இலக்கண இலக்கிய வளமுடைய செம்மொழி என்பது மொழியியல் வல்லுநர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும் .”(நோக்கு ஜூலை 2011 இதழ் ப. 15) எனச் செ. சாரதாம்பாள் கூற்று இங்கு எண்ணத்தக்கது.

செவ்வியல் மொழி

        தமிழர்கள் இலக்கியங்கள் வழி அறத்தை மட்டுமின்றி இலக்கணத்தையும் கற்பித்தனர். அவ்வாறே இலக்கணம் கற்பிக்கும் போது திணை என வகுத்து ஒழுக்கத்தையும் கற்பித்தனர். இலக்கியத்தைக் கற்பிக்கும்போது தங்கள் பெயரை வெளியிடாமல் கருத்துக்கே முக்கியத்துவம் கொடுத்து தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத அறத்தையும் கற்பித்தனர். இத்தகைய பெருமைகளே தமிழ் செவ்வியல் மொழி என்பதனை நிறுவியுள்ளது. அதனை அறிந்து வெளிப்படுத்துவதற்கான காலம்தான் நீண்டுவிட்டது.

        செவ்வியல் என்பது மேன்மை பொருந்திய உயர்ந்த பாடுபொருளைக் (Excellence and Dynamic conceptions of thoughts) கொண்டது. அதாவது வாழ்வியல் செய்திகள், மானுடம் தழுவிய பாடுபொருளைச் சுட்டும்.

        மரபு வழிப்பட்ட கவிதை நடையினை உடையது. மரபைப் பின்பற்றும் மரபின் வழி அறிவு முதிர்ச்சி காணப்படும். இதனால் இலக்கியச் செம்மை வெளிப்படும். செம்மைப் பண்பினால் பண்புடைய இலக்கியமாய்த் திகழும்
        படைப்பாளியை இனம் காட்டாது , பாடுபொருளில் கவனம் செலுத்தும்.

        கருத்து வெளிப்பாட்டில் குழுமன வெளிப்பாடு இருக்கும். தனிமனிதச் சிந்தனை என்பதைவிடக் குழுவினரின் சமுதாயச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் தன்மையுடையது. .”(நோக்கு ஜூலை 2011 இதழ் ப. 14) எனச் செ. சாரதாம்பாள் குறிப்பிட்டுள்ளதனை தமிழ் இலக்கியங்களோடு பொருத்திப்பார்த்துத் தமிழ்மொழி செவ்வியல் மொழியாவதனை எண்ணி மகிழலாம்.

மதிப்பெண்ணும் மனித உயிரும்

        மதிப்புடைய வாழ்வை மதிப்பெண்ணுக்காகத் துறக்கும் அவலநிலை தொடர்கிறது. அறத்தைப் பாடமாகக் கற்பிக்காது போட்டி மனப்பான்மையை மட்டுமே வளர்க்கும் கல்விக்கூடங்கள் மாணாக்கர்களுக்குரிய மயானங்களாகவே மாறிவிடுகிறது தன்னம்பிக்கையினை ஊட்டும் அற இலக்கியங்களையும் அன்பை ஊட்டும் அக இலக்கியங்களையும் வீரத்தை ஊட்டும் புற இலக்கியங்களையும் உடைய தமிழ் புறக்கணிக்கப்படுவது நாளைய தலைமுறையினை பிற இனத்தவர்க்கு அடிமைப்படுத்தும் முயற்சியாகவே அமைகிறது. புரியாத பாடங்களைப் படித்து வெற்றி பெறுவதுதான் வாழ்க்கை எனக் கற்றுக்கொடுத்து எந்திர பொம்மைகளாக உலவவிடுவதில் சமூகம் இன்பம் காண்பது துன்பத்திற்குரியது. “தனது வாழ்க்கையைக் கண்டெடுத்துத் தனக்கும் பிறருக்குமாக அதைப் பகிர்வுசெய்து நிறைவுகாணும் மானுட அறத்திற்கு மாறாக, மற்றவர் தோல்வியின் மீது தனது வாழ்வையும் வருங்காலத்தையும் நிறுவ எத்தனிக்கும் மானுடச்சிறுமையை வளர்த்தெடுக்கும் கல்விக் குற்றம் அழியப்போகும் சமூகத்தின் அடையாளமேயன்றி வேறு என்ன?. மாணவர்களைத் தேர்வுகள் என்னும் அதிரடித் தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற வேண்டாமா? உண்மையில் இந்த நாட்டில் மாணவர்களை இடர்ப்படுத்தும் தம் காலடியே அவர்களைப் போட்டு மிதித்து நசுக்கும் வன்முறைச் சம்பவங்கள் வேறு எதுவும் உண்டோ? .”(நோக்கு ஏப்ரல் 2012 இதழ் பக். 14) என அரிமா நோக்கு இதழின் ஆசிரியர் ஈரோடு தமிழன்பன் குறிப்பிடுவது இங்கு எண்ணத்தக்கது.

             இக்காலத்தில் ஆங்கில பாஷை கற்ற தமிழ் மக்களிற் பலர் தமது தாய்மொழியாகிய தமிழைப் படிக்க வேண்டுவது அவசியமன்றென்றும், தமக்கு வேண்டிய விஷயங்கள் யாவும் ஆங்கிலத்திலேயே அகப்படுகின்றனவென்றும் பலதிறப்படக் கூறுவர். அவர் ஆங்கில மொழிச் சிறப்புமட்டிற் கூறியமைவதே நன்றாகுமன்றித் தமிழ் கற்கவேண்டிய தவசியமன்று என்பது அறியாமையொடு கூடிய துணிந்துரையாம். இது சுதேசாபிமானமும் சுபாஷாபிமானமு மற்றவர் கூற்றாம்”(தமிழ் மொழியின் வரலாறு, . 93) என்னும் பரிதிமாற் கலைஞரின் கூற்று இன்று தமிழ்மொழியைப் புறக்கணிப்போருக்குக் கொடுக்கும் கசையடி போல் திகழ்கிறது.

நிறைவாக

             தமிழர்களின் மொழி தமிழ் என்பதனை நாளைய தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை வராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு தமிழர்க்கும் உரியது. அதில் கல்வியாளர்களுக்கு உரிய பங்கு அளப்பரியது. அறிவுக்கு அடிப்படையான பள்ளி முதல் வாழ்வுக்கு வழிகாட்டும் கல்லூரி வரை (எங்கெல்லாம் மனிதன் அறத்துடன் வாழ வேண்டும் என்னும் தேவை உள்ளதோ அங்கெல்லாம்) தமிழ்மொழியைக் கற்பித்தால் (பழி பாவத்திற்கு அஞ்சி அறவாழ்க்கை வாழும்) நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் எனத் தெளியமுடிகிறது.

****************

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக