தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 26 மே, 2019

தமிழ் இலக்கியங்கள் காட்டும் நுகர்வோர் பண்பாடு - Consumer culture in Tamil Literature


மிழ் இலக்கியங்கள் காட்டும் நுகர்வோர் பண்பாடு

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், தமிழ்ப் பேராசிரியர் (துணை), புதுச்சேரி -8 உலாப்பேசி – 9940684775

        தமிழ் இலக்கியங்கள் தமிழ் மொழியின் வளத்தினை மட்டுமே வெளிக்காட்டுவதாக அமையாமல் தமிழர் வாழ்வையும் படம்பிடித்துக் காட்டுவனவாக அமைகின்றன. தமிழ் இலக்கணத்தில் பொருள் இலக்கணம் தமிழர் வாழ்வை விளக்கியுரைப்பது தமிழரின் செம்மாந்த நிலையினைப் பறைசாற்றுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிற நாடுகளுடன் வணிகம் செய்த பெருமை தமிழர்க்கு உண்டு என்பதனை இலக்கியங்கள் வழி உணரமுடிகிறது.
உலகில் பல மொழிகள் சொல் அறுவடை செய்து வளர்ந்து கொண்டிருந்த போதே உலகுக்கே நெல் அறுவடை (2,500 ஆண்டுகளுக்கு முன்னரே) செய்து கொடுத்த இனமாகத் தமிழர் திகழ்ந்ததனை தொல்பொருள் ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். இலக்கியங்கள் வரலாற்று ஆவணங்களாக நின்று தமிழர்கள் வணிகத்தில் உலக முன்னோடிகளாகத் திகழ்ந்ததனைப் பறைசாற்றுகின்றன. தமிழர் வாழ்வு நாகரிகத்தாலும் பண்பாட்டாலும் பழமையானது என்பதனைப் பழந்தமிழ் இலக்கியங்களின் வழி அறிந்துகொள்ள முடிகிறது. அத்தகைய பண்பாட்டுச் சிறப்பு மிக்க தமிழர்கள் நுகர்வோர்களாய் வாழ்ந்த நிலையினை அறிய விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.
நுகர்வோர் எனப்படுவோர்
        நுகர்தல் என்பது பயனைப்பெறுதல் என்னும் பொருளில் அமைகிறது. ஒரு பொருளைப் பெறுவதற்கு  ஒரு பொருளைக் கொடுத்து வாழ்க்கை நடத்தும் எவரும் நுகர்வோர் எனக் குறிப்பிடப்படுவர். இதன்வழி பெறும் பொருளுக்குரிய ;உரிமை  நுகர்வோர்க்கு உரியதாகிறது. இவ்வடிப்படை உரிமையைக் கொண்டே நுகர்வோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. தாம் வாங்கும் பொருளின் உண்மை நிலையினை ஆய்ந்து விழிப்புணர்வுடன் அதற்குரிய பற்றுச்சீட்டினை (ரசீது) பெறுபவரே சிறந்த நுகர்வோர் என உணரமுடிகிறது. நுகர்வோர் பற்றிய விழிப்புணர்வினை கற்றல் இன்றைய வணிக உலகத்தில் மிகவும் அவசியமானதொன்றாகும். கற்க இயலாவிடில் கேட்டாவது விழிப்புணர்வு பெறுதல் வேண்டும். அவ்வாறு விழிப்புணர்வுடன் வாழ்ந்தால் தான் ஏமாறாது வாழ இயலும். இதனை
        கற்றிலனாயினும் கேட்க அஃதொருவற்கு
        ஒற்கத்தின் உற்றாந் துணை                  (திருக்குறள் – 414)

என்னும்  தெய்வப்புலவரின் கூற்றின் வழி தெளிவாக உணரமுடியும். திருவள்ளுவரின் கூற்று நுகர்வோரின் நலனுக்கும் பொருந்துமாற்றை இங்கு உணர்ந்து மகிழலாம். ஒருங்கிணைந்த செயல்பாட்டினை உடைய நிறுவனங்களின் குறைகளை நிறைவாக்க வேண்டுமாயின் ஒருங்கிணையாத நுகர்வோரின் நிலையினை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமாகின்றது. நுகர்வோர் கூடிப் போராடத் தயங்குவதனாலேயே நியாயவிலைக்கடைகளில் எடைக் குறைவாகப் பொருள் வழங்குவது  முதல் எரிவாயு குறைபாடு வரை அனைத்து நிலைகளிலும் நுகர்வோர் ஏமாற்றப்படும் நிலையினைக் காணமுடிகிறது. இவ்வாறு அனைத்து நிலைகளிலும் தம் உரிமையை நிலைநாட்டிக் கொள்பவரே விழிப்புணர்வுடைய நுகர்வோர் எனக் குறிப்பிடமுடிகிறது.

நுகர்வோரே முதன்மையானவர்
        நுகர்வோரைப் பொருத்தே வணிகத்தின் வளர்ச்சி நிலை அமைவதனாலேயே மகாத்மாவும் நுகர்வோரை கடவுளுக்கு இணையாகக் குறிப்பிடுகிறார். நுகர்வோரே வணிகர்களை வாழ்விக்கின்றனர். இதனை உணர்ந்து தொழில் செய்வோரே முன்னேற்றமடைய இயலும் என்பதனைக் கூறி வணிகர்களின் மேம்பாட்டுக்கு வழிவகுத்தார் மகாத்மா. வணிகம் என்பது மாறுபட்ட ஒரு கலை. இங்கு விலையைக் குறைக்க குறைக்க வியாபாரம் பெருகுகிறது. விலை அதிகமானால் வியாபாரம் குறைகிறது. எவ்வாறெனினும் மக்களின் பொருளாதரச் சூழலினை உணர்ந்தே பல தொழில்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. இதனால் தமக்குரிய நுகர்வோரைத் தேர்வு செய்துவிட்டு தொழில் தொடங்கும் நிலையும் பரவிவருகிறது.. இதற்கேற்ப பொருளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
பொருள் விற்கும் இடத்தின் தன்மைக்கேற்ப பொருளின் விலை கூட்டியும் குறைத்தும் விற்கப்படுகிறது. .பொருளின் விலையோடு இடத்தின் விலையும் சேர்ந்துகொண்டு நுகர்வோர் அறியாத வகையில் அவர்களிடமிருந்து கொள்ளை அடிக்கும் நிலையும் வளர்ந்துவருகிறது. பொருளை இழப்பதனால் எவரும் பாதிப்படைவதாகக் கொள்ளமுடியாது. எனினும் பொருளின் மதிப்பினை உணராது செல்வந்தர் செய்யும் செயலானது மற்றவர்களுக்குப் பெரும் பாதிப்பினை உண்டாக்கி விடுகிறது. பொருள் உடைய ஒரே காரணத்தால் தம் விருப்பப்படி பொருளினை செலவு செய்வதனை அறத்தின் அடிப்படையில் சரியெனக் கூற இயலாது. நுகர்வோரின் தரத்தினை வணிக நுட்பமாகக் கொள்ளாது பொருளின் தரத்தை மட்டுமே கணக்கிட்டுப் பொருளை விற்பதும் பெறுவதுமான கொள்கையுடன் வாழ்ந்தவர்கள் தமிழர் என்பதனைப் பட்டினப்பாலை படம்பிடித்துக் காட்டுகிறது. சிறந்த வியாபாரிகள் நுகர்வோரையே கடவுள் போல் எண்ணி அவர்களிடம் கனிவாகவும் குறையின்றியும் நடந்துகொள்வார். அவ்வாறு நேர்மையுடன் பொருளுக்குரிய தொகையினை மிகுதியாகக் கொள்ளாது கொடுக்கும் பொருளின் மதிப்பு குறைவுபடாது கொடுத்தலுமாக நின்ற சிறப்பினை
கொள்வதூஉம் மிகைகொளாது கொடுப்பதூஉம் குறைகொடாது
பல்பண்டம் பகர்ந்து வீசும்
தொல் கொண்டி . . . . . . . . .                 (பட்டினப்பாலை – 210-212)
என்னும் அடிகளின் வழி உணர்த்துகிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இப் பாடலின் வழி விலையினைத் தெளிவாகக் கூறுவதோடு மட்டுமின்றி வாங்கிய விலை ; விற்கும் விலை ; கிடைக்கும் நிகர லாபம் என மூன்றையும் வெளிப்படையாகக் கூறி வணிகம் செய்த நிலையினைக் காணமுடிகிறது. நுகர்வோர் எவ்வகையிலும் ஏமாறாது பொருளைப் பெறுவதை உறுதி செய்துகொள்ளும் வகையில் வணிகம் செய்ததனையும் பல பண்டங்களை முறையாக விற்ற சிறப்பினையும் இவ்வரிகள் உணர்த்துகின்றன.
நுகர்வோர் பண்பாடு
        நுகர்வோர் நாகரிகம் பெருகிவிட்ட காலம் இது. எவ் வகையான காரணமுமின்றி கடைக்குச் செல்லுதல் என்பதே நாகரிகமாகிவிட்டது. இன்று சிறப்பங்காடிகள் பல்வேறு நிலைகளில் பெருகிவிட்டதனால் இதைத்தான் வாங்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் செல்பவர்கள் கூட அங்குக் குவிந்திருக்கும் பொருள்களைக் கண்டு தம் பொருளாதார நிலைகளுக்கேற்ப அவசியமில்லாத பொருள்களையும் வாங்கி வீட்டிற்குள் குவித்துவிடுகின்றனர். தேவையான பொருட்களை மட்டும் வீட்டில் வைத்துக் கொள்வது என்னும் மேலை நாட்டார் நிலை  இங்கில்லை. மாறாக அவர்களுக்குரிய அங்காடிகள் போல் பெரும் அங்காடிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. எனவே தம்தமக்குரிய பண்பாட்டை விட்டுவிட்டுப் பிற பண்பாட்டு முறைகளைப் பின்பற்றுவதன் விளைவாகவே உயர்வு தாழ்வு மனப்பான்மைகள் பெருகி குடும்பத்தில் குழப்பங்கள் பெருகி வருவதனைக் காணமுடிகிறது.
வீட்டிற்கேற்ற பொருள் என்னும் நிலை மாறி பொருளுக்கேற்ற வீடு என்னும் சூழலும் பெருகிவருகிறது. எவ்வாறெனினும் பொருளை நுகர்வோருக்குக் கொண்டு செல்வதில் இன்றைய வணிக நிறுவனங்கள் விளம்பரங்கள் என்னும் பெயரில் பல்வேறு நடைமுறைகளைக் கொண்டுள்ளன. இவ் விளம்பரங்களுக்கு முன்னோடியாகத் தமிழர்கள் கொடி வைத்து பொருளை அறிமுகப்படுத்திய  நிலையினை “கடைகளில் விற்பனை செய்யப்பட்ட பொருள்கள் கொடிகளில் எழுதித் தொங்கவிடப்பட்டிருந்தன. வாணிகர்கள் பிற ஊர்களுக்கு வாணிகம் செய்யுங்கால் கூட்டம் கூட்டமாகச் செல்வது வழக்கமாக இருந்தது. அக்கூட்டம் வாணிகச்சாத்து என அழைக்கப்பட்டது.” (த.வ.த.ப. ப.83) என்னும் அடிகளின் வழி நுகர்வோரின் கவனத்தை ஈர்க்க விளம்பரம் செய்த தமிழர் நிலையினை எடுத்துக்காட்டுகிறார் வரலாற்றாசிரியர் இராமகிருட்டினன்.
வணிகத்தில் சிறந்த தமிழர்
        தமிழர்கள் கப்பல் வழி உலகில் (சுமேரியா, ரோம், இலங்கை) எனப் பல நாடுகளுக்குப் பயணம் செய்து வணிகம் செய்ததனைக் காணமுடிகிறது. அடைமொழி என்பது அவர்களுடைய சிறப்புடை பண்பால் இடம்பெறுகிறது. அக்காலப் புலவர்கள் பாடல் இயற்றி மகிழ்வித்ததோடு அல்லாமல் வணிகம் செய்தும் பொருள் ஈட்டினர் என்பதனைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார், அறுவை வாணிகன் இளவேட்டனார் இளம்பொன் வணிகனார், பண்ட வாணிகன் இளந்தேவனார் (த.வ.த.ப. ப.83) என்னும் பெயர்களின் வழி அறியமுடிகிறது. உயர்ந்த பதவியில் உள்ளோர் மட்டுமேயன்றி நிறுவனங்களும் நுகர்வோரை அணுகவேண்டுமாயின் எளிமையினைக் கையாள வேண்டிய சூழல் அவசியமாகிவிட்டதனைக் காணமுடிகிறது. எனவே வெளிநாட்டு நிறுவனங்கள் விளம்பரப்படுத்தும்போது அந்தந்த  இடத்திற்குரியவர்களைக் கொண்டே பொருளினை அறிமுகம்செய்கிறது. நுகர்வோருக்குரிய மொழி, மனிதர் என்னும் நிலைகொண்டே பொருளை விற்கமுடியும் என்பதனைப் பழங்காலத்திலேயே தமிழர்கள் நெறியாகக் கொண்டிருந்ததனை
மொழி பல பெருகிய பழிதீர் தேஎத்தும்
புலம்பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும்
முட்டாச் சிறப்பின் பட்டினம் . . . . . . . .(பட்டினப்பாலை : 216 -217)

என்னும் அடிகள் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றன. காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகம் செய்வோர் பல மொழிகளை அறிந்தவராகவும் எவ்வகையான வேறுபாடுமின்றி ஒற்றுமையுடன் வாழ்ந்ததனையும் அறிந்துகொள்ளமுடிகிறது.  இதனால் அளவிட இயலாத சிறப்புடன் காவிரிப்பூம்பட்டினம் திகழ்ந்ததனையும் இப்பாடலடிகள் எடுத்துக்காட்டியுள்ளன. இவ் இலக்கியங்களின் வழி தமிழரின் வணிகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சிறந்திருந்ததனைக்  காணமுடிகிறது.
நுகர்வோரைக் காக்க
        மக்களின் தேவையினை உணர்ந்து புதிய பொருளை அறிமுகம் செய்யும் நிறுவனம் நுகர்வோருக்குரிய சேவையினைச் செய்து அதற்குரிய பொருளை மட்டுமே பெறுதல் வேண்டும். நுகர்வோரின் தேவையினை உணர்ந்து தம் மனநிலைக்கு ஏற்றார் போல் விலையினைக் கூட்டி விற்பது வணிக அறமாகாது. இந்நிலை ஒரே நிறுவனத்தால் மட்டுமே கொண்டு வரப்பட்ட பொருளுக்கே ஏற்புடையதாகும். ஆங்கிலேயர்கள் அவ்வாறே கப்பல் போக்குவரத்தைத் தொடங்கி தாம் நிர்ணயித்த படி தம் விருப்பத்திற்கேற்ப கட்டணம் வசூலித்தனர். இந்தியாவை அடிமைப்படுத்தி சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருந்ததைக் கண்ட தமிழர் ஒருவர் வலிமை வாய்ந்த ஆங்கிலேய அரசையே எதிர்த்துக் கப்பலோட்டினார். அத்தகைய பெருமையுடையவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார். வணிகத்தால் ஆட்சியைக் கைப்பற்றிய ஆங்கிலேயரின் நிலையினை முடக்க வேண்டுமாயின் அவர்களின் வணிகத்தை முடக்க வேண்டும். வணிகத்தை முடக்க வேண்டுமாயின் நுகர்வோரை தம் பக்கம் இழுக்க வேண்டும் என எண்ணி அந்நாளிலேயே கப்பலோட்டிய நிகழ்வினை எண்ணி மகிழலாம். நுகர்வோரின் துணையின்றி எந்த ஆட்சியும் நடைபெற இயலாது. ஒரு நாடோ ; நகரமோ ; ஊரோ எதுவாயினும் அவ் இடம் முன்னேற்றமடைய வேண்டுமாயின் தொழில் பெருகுதல் வேண்டும் என்பதனையும் இங்கு எண்ண இயலும். மகாகவி பாரதியார் அவ்வாறே புதுவை முன்னேற்றப்பாதையை நோக்கி நடைபோடும் நிலையினை
வேதபுரத்திலே வியாபாரம் பெருகுது
தொழில் பெருகுது; தொழிலாளி வாழ்வான் ….”(புதிய கோணங்கி 3)

என்னும் கூற்றின் வழி வாழ்த்துவதனைக் காணமுடிகிறது. தொழில் வளர்வதற்கும் தொழிலாளி வாழ்வதற்கும் வியாபாரமே அடிப்படையாகத் திகழ்வதனைப் புலப்படுத்தியுள்ளார் மகாகவி பாரதியார்.
நுகர்வோர் மகிழ
நுகர்வோரின் நன்மையையே முதன்மையாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களே வெற்றி பெறுகின்றன. பொருள் ஈட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்கள் வெற்றி பெறாது. மக்கள் எளிதில் கையாளும் வகையில் செய்யப்படும் பொருட்களே (நீர்க்குவளை முதல் உலாப்பேசியில் கணினி வரை Water bottle to Mobile Computer) எளிதில் சந்தையைப் பிடித்துவிடுகின்றன. நுகர்வோரின் பொருள் வீணாகாதவாறு பனிக்கூழைக் கொடுக்கும் குவளையையே (Cone Ice cream), உண்ணும் வகையில் அமைத்தது பெரும் வெற்றியைக் கொடுத்தது. அவ்வாறே நுகர்வோரின் பொருளைக் காக்கும் வகையில் உலாப்பேசிக்கான உறை (Mobile Cover) கண்டுபிடிக்கப்பட்டதும் பெரும் வெற்றி பெற்றது. எப்போதெல்லாம் நுகர்வோர் மகிழ்விக்கப்படுகிறார்களோ அப்போது வணிகமும் நாடும் உயர்வு பெறும் எனத் தெளியமுடிகிறது. மக்கள் நலனுக்காக நிறுவனத்தார் பலரும் ஒன்று கூடி பல தொழில்களைத் தொடங்க வேண்டும். நுகர்வோரும் தொழில் முனைவோரும் ஒன்றுபட வேண்டும் என்பதனை
“சிறு முதலால் லாபம் சிறிதாகும் ; ஆயிரம் பேர்
உறுமுதலால் லாபம் உயருமன்றோ தோழர்களே . . .
ஒற்றைக் கை தட்டினால் ஓசை பெருகிடுமோ
மற்றும் பலரால் வளம் பெறுமே தோழர்களே…               (கூடித்தொழில் செய்க)

எனப் பாவேந்தர் பாரதிதாசன் குறிப்பிட்டள்ளதனையும் எண்ணி மகிழலாம். குறைவான பொருட் செலவில் நிறைவான பயனைப் பெறவிரும்புதலே மனித இயல்பு. ஒவ்வொரு மனிதரும் ஏதேனும் ஒரு வகையில் நுகர்வோராகவே இருக்கிறார். எனவே நுகர்வோர் நலனே மக்கள் நலன் ; நாட்டின் நலன் எனத் தெளிந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
நுகர்வோர் நலமே நாட்டின் வளம்
        நுகர்வோரை நிறைவு செய்யும் நாடே வளர்ந்த நாடாகக் கொள்ளப்படுகிறது. ஏனெனில் சிறிய குறைபாடே ஆயினும் அதனை முழுமையாக மாற்றிக் கொடுக்கும் பொறுப்பு வணிக நிறுவனங்களுக்கு உண்டு. பொருளைத் திரும்பப் பெற முடியாது என்பதே குற்றத்திற்குரியது. இதனை நுகர்வோர் உணர்ந்து தம் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும். ஓர் இடத்தில்  நுகர்வோருக்குத் தேவையான பொருள் ஒருவரிடம் மட்டுமே கிடைக்கும் என்னும் நிலை ஏற்படும் போது தாம் நினைத்தபடி விலையை நிர்ணயித்தல் (திரையரங்குகள், சுற்றுலா தலங்கள், சிறப்பங்காடிகள், பேருந்து நிறுத்தங்கள் இன்னும் பல) கொள்ளை அடித்தலுக்கு நிகரானது என்பதனை உணரவேண்டும். இது எப்படி கொள்ளை ஆகும். அது தான் வணிகத் தந்திரம் எனக்கூறுவோரும் உண்டு.  இரவு நேரத்தில் தானி (ஆட்டோ) ஓட்டுநர் தம் விருப்பப்படி கட்டணம் கேட்டல், கடையடைப்பு, ஊரடங்கு ஆணை போன்ற நெருக்கடி காலங்களில் தம் விருப்பப்படி விலையை நிர்ணயித்தல் போன்றவை அறம் என எவராலும் ஒத்துக்கொள்ள இயலாது. பிறர் பொருளை எவ்வாறேனும் பெற்றுவிடுதல் என்பது மட்டுமன்று நினைத்தலே குற்றம் என்கிறது தமிழ்மறை திருக்குறள்.
உள்ளத்தால் உள்ளளும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்                          (திருக்குறள் – 282)

என்னும் திருக்குறள் நுகர்வோர் வழி நின்று நோக்கும்போது ஏமாற்றி பொருளைப் பெறுதல் கள்ளத்தனத்திற்கு ஈடானது எனத் தெளிவுறுத்துவதனைக் காணமுடிகிறது
நுகர்வோர் உரிமையைப் பாதுகாத்தல்
        அறிவு எப்படி அனைவர்க்கும் பொதுவானதோ அவ்வாறே அறியாமை என்பதும் அனைவர்க்கும் பொதுவானதே. ஏனெனில் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு துறையில் விழிப்புணர்வு இல்லாதவராக இருக்கக் கூடும். அவ்வகையில் ஏதேனும் ஒரு பொருள் குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்க்கும் அப்பொருளை வாங்க வேண்டிய நிலை ஏற்படும். பெரும்பாலானவர்கள் வாங்கும் பொருளின் நுட்பங்கள் தெரியாமலே பயன்படுத்தி வருவதனைக் காணமுடிகிறது. எனினும் அவர்களை ஏமாற்றி ஒரு பொருளை விற்று விடுவது என்பது ஏற்புடையதாகாது. அதற்காகக் கொண்டு வரப்பட்டதே நுகர்வோர் பாதுகாப்பு என உணரமுடிகிறது.
படிக்காதவர்கள் இருந்த காலத்தில் ஏமாற்றுதல் என்பது வழக்கில் இருந்ததாகப் பெரிய சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் இன்று படித்தவர்களே பல்வேறு வகைகளில் புதிது புதிதாக ஏமாற்றுகின்றனர். இவ்வாறு ஏமாந்தவர்கள் நிலை மிகவும் வருந்தத்தக்கது. தாமே விரும்பி எவ்வளவு பொருளை இழந்தாலும் அதனால் கேடு விளைவதில்லை. ஆனால் ஏமாற்றப்பட்டோம் என்னும் நிலை ஏற்படும் போது பொருள் இழப்பு சிறிதாயினும் பெருந்துன்பம் ஏற்படும். இதனை உணர்ந்த மகாகவி பாரதியார்
படிச்சவன் சூதும் பாவம் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று போவான் (புதிய கோணங்கி 2)

எனக் கூறி ஒழுக்கத்துடன் வாழ வழிகாட்டுகிறார். இக்கூற்று உணவுப் பொருளில் கலப்படம் செய்து நுகர்வோரை ஏமாற்றுவோர்க்கு மிகவும் பொருத்தமாக அமைவதனை உணரமுடிகிறது.
சந்தையும் நுகர்வோரும்
        இன்றைய சந்தைகள் அனைத்தும் மக்களை ஏமாற்றுவதுமாகவும் அச்சுறுத்துவதாகவுமே நிலவுகின்றன. வயதானவர்களுக்கு மூட்டு வலி இயல்பானதே. அதிலிருந்து விடுபட தினமும் நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டால் போதுமானது. அதனை உணர்த்த வேண்டியது வணிக நிறுவனங்களின் தேவை இல்லை. எனினும் தங்கள் பொருளை விற்பதற்காக ’உங்களுக்கு மூட்டு வலி வரக்கூடும் அதிலிருந்து விடுபட எங்கள் நிறுவன பானங்களைக் குடியுங்கள்’ என விளம்பரத்தின் வழி அச்சுறுத்துகின்றனர். குழந்தைகள் தேர்வில் தேர்ச்சியடைய வேண்டுமானால் எங்கள் நிறுவனத்தின் பானங்களைக் குடியுங்கள் என விளம்பரம்படுத்தலும் அச்சுறுத்தலே. நீங்கள் இன்னும் எங்கள் நிறுவனப் பொருளைப் பயன்படுத்தவில்லையா அப்படியெனில் நீங்கள் இந்த சமூகத்தால் மதிக்கப்படுபவராக வாழ்தல் கடினம் என்பதைப் போல் ஆடைகளை விளம்பரம்படுத்துவதும் நடைமுறையாகி விட்டது.  அழகில்லையெனில் உலகில் வாழவே இயலாது என்பது போல் தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கி அழகுபடுத்தும் பொருட்களை விளம்பரப்படுத்தி பல கோடி இலாபம் பெறும் நிறுவனங்களும் உள்ளன. பெண்களை முழுமையாகத் தங்கள் பக்கம் ஈர்த்துக் கொண்ட நிறுவனங்கள் இன்று ஆண்களையும் அழகுபடுத்தும் பொருட்களை பயன்படுத்தத் தூண்டுகின்றன. வயிற்றுக்குச் சோறுண்ணுதலை விட அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிலை வளர்ந்துவிட்டதனால் ஊட்டமில்லாத சமுதாயத்தை இந்தச் சந்தை உருவாக்கி வருவதனைக் காணமுடிகிறது. ஏற்கெனவே வெள்ளையாக இருக்கும் பெண்களுக்கும் மை பூசி கருப்பாகக் காட்டி பின் அதனை நீக்கி வெண்மையாகக் காட்டும் ஏமாற்று வேலையை நுகர்வோர் உணரவேண்டும்.
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்                                       (திருக்குறள் – 754)

என்னும் குறள் மக்கள் நலனில் அக்கறை கொண்டு உருவாக்கும் பொருளே இன்பத்தைத் தரும் என்பதனை நுகர்வோர் நோக்கில் நின்று உணர்த்துவதைக் காணமுடிகிறது. வெண்மை என்பது தான் அழகு என்பதே தவறான கண்ணோட்டம். இவ் உணர்வை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாதது வருந்தத்தக்கது. இவை பின்னாளில் உடல்நலக் கேட்டினையே உண்டாக்கும். ’நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதனை உணர்ந்தே நுகர்வோர் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
இந்தியாவில் நுகர்வோர்
        இந்தியா மிகச் சிறந்த சந்தையாக விளங்குவதற்குக் காரணம் இந்தியாவின் குடும்ப அமைப்பு முறையே. பொருளைச் சேமித்தல் என்னும் வழக்கம் குடும்ப அமைப்பு முறையினால் மட்டுமே அமைகிறது. எனவே, அனைத்து நாடுகளும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவையே சிறந்த சந்தையாக எண்ணிச் செயல்படுவதனைக் காணமுடிகிறது. இத்தகைய அடர்த்தியான மனித வளம் கொண்ட நிலம் நல்ல பொருட்களை மட்டுமே நுகர்வோரிடையே கொண்டு செல்ல வேண்டும். ஆட்சியாளர்களும் அதற்குரிய நடவடிக்கைகளை விழிப்புணர்வுடன் மேற்கொள்ள வேண்டும். அம்முயற்சியில் தளர்வு ஏற்படுமாயின் தேவையில்லாத பொருட்கள் உள்ளே நுழைந்து நாட்டின் பொருளாதாரத்தையும் மனித வளத்தையும் குன்றச்செய்துவிடும். ஒரு நாட்டின் அதிகாரத்தில் உள்ளோரின் விழிப்புணர்வின்மையால் அந்நாட்டின் புகழே ஒழிந்து விடும் என்னும் நிலையினை
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்                     (திருக்குறள் - 239)

என்னும் தெய்வப்புலவரின் கூற்றினைக் கொண்டு உணரமுடிகிறது. எத்தகைய வளமுடைய நாடாயினும் குற்றமுடையோரைப் பொறுத்துக் கொண்டிருந்தால் தன் நிலை குன்றும் என்பதனை நுகர்வோர் நலனுடனும் பொருத்தி அறியமுடிகிறது.
மக்களாட்சியில் நுகர்வோர்
        மன்னராட்சியே ஆயினும் மக்களை முன்னிலைப்படுத்தி ஆட்சி நடத்தியோரே நல்லாட்சி நடத்தியோரென வரலாறு இயம்புகிறது. இன்றைய மக்களாட்சியில் முதலாளித்துவ நோக்கில் விலையை நிர்ணயித்தல் கூடாது. உழைப்பின் பயனை மக்கள் பெற வேண்டும் என்னும் எண்ணம் அடிப்படையாக அமையவேண்டுமே ஒழிய பொருளை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வணிகம் நடைபெறக்கூடாது. வணிக நிறுவனங்களுக்கு மட்டுமின்றி நுகர்வோருக்கும் மூலதனம் என்பது உழைப்பின் அருமையே என்பதனை உணர்த்தவேண்டும். ”மூலதனம் இன்றியமையாதது. ஆனால் முதலாளித்துவம் அப்படியன்று மூலதனம் என்பது கூட பென்சான் கூற்றுப்படி ‘சேமிக்கப்பட்டுள்ள உழைப்பு என்பதே” (தி இந்து நாளிதழ் 15-09-2014) என்னும் அறிஞர் அண்ணாவின் கூற்றினை  நாகநாதன் குறிப்பிட்டுள்ளது இங்கு எண்ணத்தக்கது. உழைப்பின் மதிப்பை உணர்வதனால் பொருளின் மதிப்பும் பாதுகாக்கும் திறனும் கூடும் என்பதனை உணரமுடிகிறது.
சிறந்த நுகர்வோரே உயர்வர்
        நுகர்வோரின் தேவையே பொருளை உருவாக்குகிறது. நுகர்வோரின் நிறைவே சிறந்த பொருளை உருவாக்குகிறது. நுகர்வோரின் தேவையினை நிறைவிக்க இயலாத நிலையினைக் கண்டு நுகர்வோரே நிறுவனத்தாரவதும் உண்டு. தம்முடைய நலனுக்காக மட்டுமின்றி தம்மைச் சுற்றி இருப்பவரின் நலனுக்காகவும் பாடுபடுபவர் எவரோ அவர் மேன்மேலும் பெருமையடைவார் என்பதனை
        விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
        ஆக்கம் பலவும் தரும்                                         (திருக்குறள் – 522)

என்னும் குறளின் வழி தெளிவுறுத்துகிறார் திருவள்ளுவர். நுகர்வோர் பண்பாட்டின் வழி நோக்குகையில் இக்குறளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ்.
நுகர்வோரே நிறுவனத்தாராக மாறுவதன் வழி நுகர்வோரின் தேவைக்கும் வசதிக்கும் விருப்பத்திற்கும் ஏற்ற சிறந்த பொருளை உருவாக்குதல் இயலும்.  அவ்வாறு மேன்மேலும் உயர்ந்தவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற  நிறுவனரான (ஆப்பிள்) ஸ்டீவ் ஜாப்ஸ் இனிய இசை சுவைஞராக இருந்தார். அப்போது தரமற்ற இசையையே பதிவு இறக்கம் (டவுன் லோட்) செய்ய முடிந்த நிலையினை எண்ணி வருந்தினார். எனவே தரமான இசையைப் பெற விரும்பிய அவர் பிறர்க்கும் தம்மைப் போலவே நல் இசை கேட்கும் தேவை இருப்பதனை உணர்ந்து தாமே தம் நிறுவனத்தின் வழி அத்தேவையை நிறைவு செய்தார். அதன் விளைவாக “ஒரு பாட்டுக்கு டவுன் லோட் கட்டணம் வெறும் 96 சென்ட்கள் மட்டுமே (சுமார் 60 ரூபாய்) வசூலில் 70 சென்ட் ரெகார்ட் கம்பெனிக்கு 29 சென்ட் ஆப்பிளுக்கு. 2,000 –க்கும் அதிகமான இசைக் கம்பெனிகள் 3 கோடி 70 லட்சம் பாடல்கள் 45,000 சினிமாக்கள், 20,000 டி.வி. நிகழ்ச்சிகள் இந்த ஆன்லைன் ஸ்டோரில் கிடைக்கின்றன. கடந்த 13 வருடங்களில் 7,000 கோடி டவுன் லோடு செய்யப்படுகின்றன. இதனால் 2,000 கோடி” டாலர்களுக்கு (1,20,000 கோடி ரூபாய் அதிகம்) (மூர்த்தி க.ஆ. தி இந்து நாளிதழ் செப்டம்பர் 23) வணிகம் நடைபெற்றுள்ளதனைக் குறிப்பிட்டுள்ளது இங்கு எண்ணத்தக்கது.
அற வாழ்வே அடிப்படை
        எந்நிலைக்கும் அறம் அடிப்படையாயினும் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்ட வணிகத்தில் அதனைப் பின்பற்றுதல் தலையாயதாக அமைகிறது. இதனை உணர்ந்த சங்க கால மன்னன் எத்தகைய சிறப்புப் பெறுவதாயினும் அறத்திலிருந்து வழுவாது வாழ வேண்டும் என அறிவுறுத்துகிறான். தன்னலம் கருதாது பொது நல நோக்குடன் வாழ்பவராலேயே இந்த உலகம் வாழ்கிறது எனப் பாடியுள்ளதனை
உண்டால் அம்ம இவ்வுலகம் ! இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத்
தமியர் உண்டலும் இலரே ; முனிவிலர் ,துஞ்சலும் இலர்
பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்
 உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்விலர் ; அன்னமாட்சி அனையர் ஆகி
தமக்கென முயலா நோன்றாள் ; பிறர்க்கென முயலுநர் உண்மையானே (புறம் ; 182)

என்னும் அடிகளின் வழி அறியமுடிகிறது. இப்பாடலை நுகர்வோரின் நலனை  நாடி அறத்துடன் வணிகம் செய்யவேண்டுமென அறிவுறுத்தக்கூடிய பாடலாகவும் நோக்க முடிகிறது. நுகர்வோர் நலனை முதன்மையாகக் கொண்டு தம் நிறுவன நலனைப் பின்னதாகக் கொண்டு செயல்படும் வணிக அறத்தையே இப்பாடலின் வழி இங்கு உணரவேண்டியுள்ளது.
நிறைவாக
        தமிழர்கள் உலக இலக்கியங்களுக்கு மட்டுமின்றி வணிகத்திலும் முன்னின்றனர் என்பதனை பட்டினப்பாலை இலக்கியம் தெள்ளிதின் உணர்த்துகிறது. அவ் வழியில் இன்றைய வணிகம் செயல்படுமாயின் மீண்டும் வணிகத்தில் ஒரு பொற்காலம் அமையும் எனத் தெளியமுடிகிறது.
        நுகர்வோரே வணிகர்களின் முன்னேற்றத்திற்கு முதன்மையானவர்களாக இருக்கின்றனர். இதனை உணர்ந்து நுகர்வோரின் நலனையே முதன்மையாகக் கொண்டு செயல்பட்ட நிறுவனங்களே பெருமையுடையனவாக நிலை பெற்றிருப்பதனைக் காணமுடிகிறது.
        அற வாழ்க்கை என்பது தனி வாழ்க்கையினின்றும் பொதுவாழ்க்கைக்கு மிகவும் தேவையானது என உணர்ந்த வணிகர்களாலேயே நுகர்வோரின் தேவையினை நிறைவு செய்ய முடிகிறது.
        அழகிய விளம்பரங்களால் மக்களை மயக்கி பொருளை விற்பனை செய்து நுகர்வோரின் உடல் நலத்திற்குக் கேட்டினை விளைவிப்பது வணிகத்தின் இழி நிலையினையே காட்டுகிறது. அவ்வாறு செய்வது அறமாகாது என்பதனைத் தமிழ் இலக்கியங்களின் அறநெறி தெளிவாக உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.
        நுகர்வோரின் நெருக்கடி நிலையினை உணர்ந்து தம் விருப்பம் போல் பொருளினை விற்பது கொள்ளையடிக்கும் குற்றத்திற்கு நிகராகும் என்பதனையும் தமிழ் இலக்கியங்களின் வழி உணர்ந்துகொள்ள முடிகிறது.
        சிறந்த நுகர்வோர் மக்கள் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவாராயின் அவரே சிறந்த நிறுவனராகவும் வளர இயலும் என்பதனை தமிழ் இலக்கியங்கள் வழியும் நன்குணர முடிகிறது.
        அறிவு அற்றம் காக்கும் கருவி என்னும் திருக்குறளை  நுகர்வோரின் உரிமையினைக் காக்கவும் பொருந்தும் நிலையினை உணர்ந்து விழிப்புணர்வுடன் வாழ வேண்டியது அவசியமாகிறது.
நுகர்வோர் சிறப்பார் விழிப்புடனே தம்உரிமை
        புகன்றே பொருளைப் பெறின்

என்னும் புதுக்குறளை நுகர்வோர்க்குரியதாக உருவாக்கிக் கொள்ள முடிகிறது.
*****************************









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக