தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.
அறிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிஞர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 24 ஜூலை, 2021

உழைப்பின் அருமை

 


உழைப்பின் அருமை

     இருபதாம் நூற்றாண்டுக் கடைசியில் பிறந்தவர்கள் “ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” என்னும் பாடலையும் “உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே” என்னும் பாடலையும் அறிந்திருப்பார்கள் ; பாடியிருப்பார்கள். அத்தனை அழகான பாடல். அழகு என்பது அறிவுடன் கூடியது மட்டும்தான். ஏனெனில் புற அழகிற்குக் காலஎல்லை உண்டு.  இந்தப்பாடலடிகள் எத்தனை வேகமாகவும் எத்தனை அன்பாகவும் காலம் கடந்தும் கருத்துக்களைப் பதித்துவிட்டிருக்கிறது. அதனால்தான் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தனர். வாழ்க்கை அழகானது. வாழ்வதிலும் விருப்பம் உண்டானது.

     இன்றைய இளைஞர்களைப்பற்றி கேட்டுப்பாருங்கள். “அவன் சொன்ன பேச்சை கேட்கமாட்றான்” “அவன் இந்த வேலைக்கெல்லாம் போகமாட்டானாம்” “அவன் எப்பபார்த்தாலும் கைப்பேசியில் படம்பாத்துக்கிட்டு இருக்கான்” “அவன் திறன்பேசியில் விளையாடிக்கிட்டே இருக்கான்” இப்படித்தான் சொல்வார்கள். அப்படி சொல்லாமலிருந்தால் அவர்களே தவத்தின் பயனாகப் பிள்ளைகளைப் பெற்றோர் ஆவர். இளைஞர்களிடம் ஒரு குறையும் இல்லை. இந்தச்சூழல்தான் அவர்களை அவ்வாறு கெடுத்துவிட்டிருக்கிறது.

     “உழைப்பது நம்ப உடம்புக்கு ஆகாது” என்று ஒரு திரைப்படத்தில் கதாநாயகர் சொல்கிறார். அவருக்கு ஒரு துணை நடிகர் “என்னை எங்கம்மா வேலைக்குப் போகச் சொல்லி கொடுமைப்படுத்துறாங்க” எனக் கிண்டலாகப் பேசுகிறார். இவை, பிஞ்சு மனத்தில் பதியத்தானே செய்யும். இளைஞர்கள் என்றாலே பல்துலக்காமல் பேருந்து நிலையத்தில் குளிர்க்கண்ணாடியைப் போட்டுக்கொண்டு (ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் என கண்ணாடியை மாற்றிப்போட்டுக்கொண்டு) நிற்பதாகக் காட்டுவது எத்தனை அவலம். உலகம் இப்படங்களைப் பார்க்கும்பொழுது என்ன நினைக்கும்? எதையாவது நினைத்துக்கொண்டு போகட்டும். திரைப்படம் என்பது மாயைதானே. விட்டுவிடலாம்  என நினைத்தால் பல மதுக்கடைகளில் இளைஞர்கள் கூட்டம்தான் அதிகமாக இருக்கிறது.

நாட்டை தலைநிமிர்ந்து நடத்தவேண்டிய தலைமுறை தெருஓரங்களில் விழுந்துகிடக்கிறது. அவர்களை நம்பிய நாட்டுக்கும் வீட்டுக்கும் எத்தனை இழப்பு. அதுமட்டுமா? அவர்களுக்கே எத்தனை இழப்பு. திரை நாயகர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாக நடிக்கிறார்களே ஒழிய உண்மையான வாழ்வில் யோகப்பயிற்சியும் உடற்பயிற்சியும் செய்து அழகாகத் தம்மைப் பாதுகாத்துக்கொள்கின்றனர். ஏமாற்றுவது அவர்கள் பாத்திரம் ; ஏமாறுவது இளைஞர்களின் அறியாமை.

     “இதையெல்லாம் எப்படிச் சொல்கிறீர்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ நான் கண்ட ஒரு அருமையான நேர்காணல், ஒரு தொழிலதிபரிடம் நீங்கள் தமிழராக இருந்தும் ஏன் தமிழர்களுக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கொடுப்பதில்லை. பெரும்பாலும் வடநாட்டார்தான் வேலைசெய்கிறார்களே” எனக் கேட்டார். “நான் தமிழர்களைத்தான் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்றுதேடுகிறேன். ஒருவரும் வேலைக்கென்றால் வருவதில்லை. அதனால் வடமாநிலங்களிலிருந்து விமானம் வழியாக இலட்சக்கணக்கில் பணம் செலவுசெய்து அழைத்துவருகிறேன்” என்றார். அது மட்டுமன்று “சனிக்கிழமை கூலிகொடுப்பதால், ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு, திங்கள் கிழமை எழமுடியாமல், செவ்வாய்க்கிழமைதான் வேலைக்கு வருகிறார்கள்” எனக்கூறுகிறார். இந்நிலையை உருவாக்கியது யார்?.” இக்குரல் ஒவ்வொரு தாயாரின் குரல் ;  வறுமையில் தவிக்கும் மனைவியின் குரல் ; பசியோடு தவிக்கும் குழந்தைகளின் குரல்.  இதற்குத்தீர்வு காணவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழர்க்கும் உண்டு.

நாயகர்கள் நினைத்தால் மாற்றமுடியும். ஒவ்வொரு நடிகரும் உழைப்பின் அருமையினை விளக்கவேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்னும் எண்ணத்தைப் பரப்பவேண்டும். குடிப்பது தவறு என்பதனை துணிந்து அனைவர்க்கும் சொல்லவேண்டும். பிறநாட்டிலிருந்துவரும் இறக்குமதியைக் குறைக்கவேண்டும். உறபத்தியால் ஏற்றுமதி நிறையவேண்டும். செய்வார்களா ?

     முன்னைய காலத்தில் இலக்கியங்கள்தான் மக்களுக்கு நல்வழிகாட்டின. இந்த வேலையைப் புலவர்கள் என்ன அழகாக செய்திருக்கிறார்கள். உலகநாதர் இயற்றிய ‘உலகநீதி’ சொல்லும் கருத்துக்களைப் பாருங்களேன்.

     சேராத இடம் தனிலே சேரவேண்டாம்

     செய்த நன்றி ஒருநாளும் மறக்கவேண்டாம்

ஊரோடும் குண்டுணியாய்த் திரியவேண்டாம்

உற்றாரை உதாசினங்கள் சொல்லவேண்டாம்

பேரான காரியத்தைத் தவிர்க்கவேண்டாம்

பிணைபட்டுத் துணைபோகித் திரியவேண்டாம்

வாராரும் குறவரிடை வள்ளிபங்கண்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே        (உலகநீதி:8)

 

என எத்தனை வலிமையான கருத்துக்களையெல்லாம் தரமான பூக்களைக்கொண்டு கட்டிய மாலைபோல் கட்டியிருக்கிறார் உலகநாதர்.

     சேராத இடத்தில் சேர்வது முதல் தவறு. அப்படித் தவறி சேர்ந்தால் உடனே விலகிவிடு. தாய்தந்தை செய்த நன்றியை மறந்துவிடாதே. தேவையில்லாத செய்திகளை ; பழிச்சொற்களை வீசாதே. நல்வழி சொல்லும் உறவினர்களை இழிவாகப்பேசாதே ; புகழ்தரும் பணி கிடைக்குமாயின் அதனைத் தவிர்க்காதே. வீணாணவர்களுடன் நின்று பெருமைகளை இழந்துவிடாதே. இவையெல்லாம் அமையவேண்டுமெனில் மனதை ஒருநிலைப்படுத்து என்கிறார். அவர் முருகபக்தர் ஆதலால், அவர்கண்ட மயிலேறும் பெருமானாகிய முருகப்பெருமானை வாழ்த்தவேண்டும் என்கிறார். அதுவும் வள்ளி மகளை இணையாகக் கொண்ட முருகப்பெருமானை எனக் கூறியுள்ளார். இதனுள் பெண்களை மதிக்கவேண்டும் என்னும் குறிப்பும் அடங்கியுள்ளதுதானே.

     தாய்,தந்தை சொல்லை மதிக்காமல் இருப்பதிலிருந்து தவறு தொடங்குகிறது. அதனால் தவறானவர்களின் நட்பு கிடைக்கிறது. தவறுசெய்யும்போது சிக்கிக்கொண்டால் பொய்சொல்ல நேரிடுகிறது. பிறரைப்பழிசொல்லி ; துன்பம்செய்து தப்ப மனம் நினைக்கிறது. இத்தகைய தவறுகளைச்செய்யக்கூடாது என எவரேனும் சொல்லிவிட்டால் என்செய்வது என உறவுகளை எதிர்க்கிறது. தவறான வழியில் செல்வம் சேர்ப்பது எளிதாக இருப்பதனால், புகழான வழியில் வரும் செல்வத்தை ஏற்க மறுக்கிறது. தீயவர்களுடன் இருப்பதே நல்லதெனத் தோன்றிவிடுகிறது. அதனால் வாழ்க்கைவாழ்வதே வீணென்று எண்ணத்தோன்றுகிறது. இத்தகைய குற்றங்களிலிருந்து மீளவேண்டுமெனில் மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும். பெற்றோரின் பேச்சைக்கேட்டு உழைத்து வாழவேண்டும் என்கிறார் உலகநாதர்.

     உழைப்பில் இருக்கும் உப்பு தான் வாழ்க்கையைப் பெருமையாக்கும். ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே” எனக்கூறியது உழைப்பின்றி உண்பது அனைத்தும் குப்பை என்பதனை உணர்த்தத்தானோ?

 

வியாழன், 20 மே, 2021

தமிழ் இலக்கிய வேர்கள் - Root of Tamil Literature

 


வேர்களால் வாழ்கிறோம்

           இலக்கிய மை. கருப்பாக இருந்தாலும் கற்போர் உள்ளத்தில் வெளிச்சத்தை ஊட்டிவிடுகிறது கரும்பலகை வெளிச்சம் ஊட்டுவதுபோல்.

           தமிழ் இலக்கிய வேர்கள்தான் தமிழ்மரபினைக் காத்துவருகின்றன. வேர்களைக் கொஞ்சம் கொஞ்சமாக வெட்டிக்கொண்டே சென்றால் மரம் என்னாகும் என்பதை அறிவோம்தானே! தமிழ்மரமும் அவ்வாறே. தமிழ் இலக்கியங்களைப் படிப்பது நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. “புத்தக விற்பனை அதிகமாக இருக்கிறதே!” என  எனக்கு விடையளிக்க முயல்வீர்களேயானால் மகிழ்ச்சிதான். ஆனால், அவ்விடையை புத்தகம் பதிப்பிக்கும் நூலாசிரியர்களிடம் சொல்லுங்கள். வீட்டில் பல பரண்கள் புத்தகங்களால் வழிந்துகொண்டிருக்கும் அவலத்தைச் சொல்வார்கள். தங்கள் சொத்து தங்களிடம் இருப்பதை எந்த எழுத்தாளரும் விரும்புவதில்லைதானே?

           மரங்களைப் பாதுகாத்தல் நன்றுதான். முடியாவிட்டால் விட்டுவிடலாமா?. வேர்களுக்கு கேடுசெய்தால் கனிகள் குறையும் ; காய்கள் குறையும் ; பூக்கள் குறையும்  ; கிளைகள் குறையும் ; இலைகள் குறையும் ; மரம் விறகாகும் ; நிழல் மறையும் ; காற்று மாசாகும் ; மண் மணலாகும் . மருதம் பாலையாகும். இது மரங்களுக்கு மட்டுமா ?  இலக்கியங்களுக்கும்தான். ஒவ்வொரு மொழியின் வேர் இலக்கியங்கள்தானே? அந்த மொழியே மனிதர்க்கு வேர். வேர் இல்லாத மரம் என்னாகும்? அதுபோல்தான் தாய்மொழி இல்லாத மனிதர்களும் அடையாளம் தெரியாமல் முழு ; முக்கால் ; அரை ; கால் எனக் காணாமல் போனார்கள் ; போகிறார்கள் ; போவார்கள்.

           மதிப்பிற்குரிய வாசகர்களே ! விழித்துக்கொள்ளுங்கள். உங்கள் தாத்தாவின் தமிழ்வளம் உங்கள் தந்தையிடம் இருந்ததா? உங்கள் தந்தையின் தமிழ்வளம் உங்களிடம் இருந்ததா? உங்களின் தமிழ்வளம் உங்கள் பிள்ளைகளிடம் இருக்கிறதா? செழுமையான இலக்கியங்கள் எல்லாம் நூலகங்களில் உறங்கிக்கொண்டிருக்கின்றன. அருமையான பதிப்புகள் எல்லாம் கரையான்களால் கரைக்கப்படுகின்றன. மின்னாக்கம் செய்யவேண்டிய நூல்களை அடையாளம் சொல்வதற்காவது தமிழ்ப்புலமை வேண்டுமன்றோ ! தமிழறிஞர்களுடன் தமிழ் இலக்கியங்களும் மறைந்துபோகிறது. ஒரு இலக்கியத்தைப் படிப்பதற்கே வாழ்நாள் போதாது என்னும் நிலையில், தமிழில் படிக்க என்ன இருக்கிறது? எனக் கேட்பது எத்தனை அறியாமை. குழந்தைகளுக்கு தமிழின் அருமையைக் கற்பிக்கவேண்டியது தமிழர்களால்தானே முடியும். அவ்வருமையை நாள்தோறும் ஊட்டிமகிழ்வோம்.

            இந்த உலகத்தில் “நீங்கள் நன்றி சொல்ல விரும்பினால் யாருக்குச் சொல்வீர்கள்?” என்று ஒருவர் பலரை நேர்காணல் செய்கிறார். ஒவ்வொருவரும் மருத்துவர், பொறியாளர், விஞ்ஞானி எனப் பலரை சொல்கின்றனர். எல்லோரிடமும் கேட்டுவிட்டு, யாரும் குறிப்பிடாத ; நாள்தோறும் அனைத்து உயிர்களின் உணவுக்காக உழைத்திடும் உழவனைப்பற்றி கருத்து கேட்கிறார். எல்லோரும் புன்னகைத்து ; உண்மைதான் எனக்கூறி ; பொறுத்தருளவேண்டி ; “உழவர்தான் நாம் மதிக்கவேண்டிய முதல் மனிதர்” என ஆனந்தக்கண்ணீருடன் கூறுகிறார்கள். உழவன் மட்டுமே தன் பசியை அடக்கிக்கொண்டு ஊர் பசிக்குச் சோறு போடுகிறான். கடவுள் என்னும் முதலாளியின் முதல் தொழிலாளி உழவன் எனில் மறுப்பாருண்டோ?  அத்தகைய உழவனாலேயே நாடு நலம்பெறும் என்பதனைத் தமிழ் இலக்கியங்கள் எத்தனை அழகாக எடுத்துக்காட்டுகின்றன.

           அடிப்படை நன்றாக இருந்தால் கட்டிடம் நன்றாக இருக்கும்தானே? அப்படி நாடு நன்றாக இருக்க உழவுத்தொழில் சிறக்கவேண்டும் என உலகுக்கே நெறிகாட்டியவர் தமிழர். வரப்பு உயர்ந்தால் நீர் நிறைவாகும் ; நீர் நிறைவானால் நெல் முதலாகிய தானியங்கள்  நிறைவாகும் ; நெல் நிறைவானால்  உழவர்கள் வளம் பெறுவர். உழவர்கள் வாழ்வு வளமானால் நாடு வளமாகும். அதற்குத் துணைநின்ற மன்னனின் உயர்வினை நாடே புகழும். இப்பெருமையினை, உலகம் ஓயாமல் சொல்லிக்கொண்டே இருக்கும் எனப் பாடியுள்ளார் சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான்.

வார்சான்ற கூந்தல் ; வரம்புயர வைகலும்

நீர் சான்று உயரவே நெல்லுயரும் – சீர்சான்ற

தாவாக் குடியுயரத் தாங்கரும் சீர்க்கோ உயரும்

ஓவாது உரைக்கும் உலகு (சிறுபஞ்சமூலம் – 46)

 

என்னும் இப்பாடல் காலத்தால் மறையாத ; பொய்க்காத சொற்களின்வழி எடுத்துக்காட்டியுள்ள திறம் வியக்கத்தக்கதுதானே!

           இக்கருத்தினையே ‘தமிழ் மூதாட்டி” ஔவையார் மிகவும் எளிமையாகவும், இனிமையாகவும் பாடியுள்ளார். காரியாசான் கூறிய கூற்றோடு செங்கோலின் அறத்தையும் கூட்டிப் பாடியுள்ளார். அறமின்றி அரண் ஏது? என்னும்  செங்கோல் அறத்தையும் பதிவுசெய்கிறார்.

           வரப்பு உயர்ந்தால் நீர் நிறைவாகும் ; நீர் நிறைவானால் நெல் முதலாகிய தானியங்கள்  நிறைவாகும் ; நெல் நிறைவானால்  உழவர்கள் வளம் பெறுவர். உழவர்கள் வளமாக வாழ்ந்தால் மன்னனின் செங்கோல் எவ்வுயிர்க்கும் கொடுங்கோலாகாது. .செங்கோல் தாழாது உயர்ந்து நிற்பின் மன்னனின் உயர்வினை நாடே புகழும் என்பதனைத் “தமிழ் மூதாட்டி” ஔவையார் அருந்தமிழில் பாடினார்.

வரப்புயர நீர் உயரும் ; நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும் ; குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன்  உயர்வான்.

 

எனக் குலோத்துங்க சோழனுக்காகத் ‘தமிழ் மூதாட்டி” ஔவையாரின் அறிவுரை எண்ணியெண்ணி வியக்கத்தக்கதுதானே. இன்றைய குழந்தைகளுக்கு தமிழ் இலக்கியங்களை விரித்துரையுங்கள். தமிழில் ஆர்வம் தலைக்கேறும். பின்னர், அவர்களே உங்களை இலக்கியம் படிக்கச்சொல்வார்கள். தமிழின் செவ்விலக்கியங்களை செவிமடுக்கச்செய்வீர். தமிழ்த்தாயின் தவப்புதல்வர் என்னும் பெருமைதனைக் காப்பீர்.

          

 

புதன், 5 மே, 2021

தாகூர் - மனிதமே என் சமயம் - Tagore - Humanity is my religion

 




கவியோகி இரபீந்திரநாத் தாகூர் (07.05.1861 – 07.08.1941)

எண்பது ஆண்டுகள் மனிதனாக வாழ்ந்த கவிதையே கவியோகி இரபீந்திரநாத் தாகூர். சொல்லை நெல் போல் பயனுடையதாக மாற்றிய கவிஞர். ஊடகம் வளராத காலத்திலேயே நாடகம் எழுதியவர். உயர்ந்த உண்மைகளை நயம்பட உரைத்த மெய்யியலாளர். தம் கவிதைக்கு தாமே மெட்டமைக்கும் வல்லமைபெற்ற இசையமைப்பாளர். விதைகளை கதைகளாக்கிய சிறுகதையாசிரியர். எழுத்து மொழியும் இசைமொழியும் ஓவிய மொழியும் அறிந்த  தன்னிகரற்ற அறிஞர். எழுத்துமொழியில் வங்காளம், ஆங்கிலம், சமஸ்கிருதம் எனப் பலமொழிகளைக் கற்றறிந்தவர்.

            “சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்” என்னும்  சொற்றொடருக்கு முரணானவர் ; வளமான கவிதைகளுக்கு அரணானவர். கவிதைகளைத் தொகுத்து ‘கீதாஞ்சலி’ ஆக்கினார். பாரத நாட்டில் இலக்கியத்திற்காக முதன்முதலாக (1913) நோபல் பரிசு  பெற்றவரும் இவரே. அன்னிய நாட்டவர் மட்டுமே பெற்றுவந்த இப்பரிசினை முதன்முதலாகப் பெற்றவரும் இவரே. இலக்கியத்தில் இறைவனைக் கலந்த பெருமைக்குரிய கவிஞர்.

“மனிதமே என் சமயம்” என முழங்கிய மாமனிதர் தாகூர், கொல்கத்தாவில் ஜமீந்தார் பரம்பரையில் தேவேந்திரநாத் தாகூருக்கும் சாரதாதேவி அம்மையாருக்கும் பிறந்தவர். 1883 ஆம் ஆண்டு திசம்பர் 9 ஆம் நாள் மிருணாளினிதேவியை மணந்தார். எட்டுவயதில் கவிதை எழுதிப் பாராட்டு பெற்றவர். ஆங்கில அரசையே சிங்கம்போல் எதிர்த்து நின்றவர். அதனால்தான் அவருடைய கவிதைகள் ‘பானுசிங்கோ’ என்னும் புனைப்பெயரில் வெளிவந்தது.  பானு என்றால் சூரியனையும், ‘சிங்கோ’ என்பது சிங்கத்தையும் குறித்தது.  

எட்டு வயதில் கவிஞர் ; பதினாறு வயதில் சிறுகதை ஆசிரியர் ; இருபது வயதில் நாடக ஆசிரியர் ; இளமையில் நாட்டு விடுதலைக்கும் முதுமையில் ஆன்ம விடுதலைக்கும் வழிகாட்டியவர். இவருடைய ‘கீதாஞ்சலியை” ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆண்ட்ரூஸ் தாகூரின் புலமையில் மயங்கி அமைதிப் பூங்காவான சாந்திநிகேதனில் தம்மை இணைத்துக்கொண்டார். கவிஞன் மக்களுடன் கலந்து அவர்கள் சுவாசத்தை உணர்ந்து கவிதைகளைப் படைக்கவேண்டும் என்னும்  தந்திரத்தை அறிந்தவர் தாகூர். அரேபிய பழங்குடி மக்களுடன் மக்களாக வாழ்ந்து கவிதை படைத்தார்.

பள்ளியில் படிப்பதைவிட இயற்கையைப் படிப்பதையே பெரிதும் விரும்பினார். படிப்பில் கவனம் இல்லையென இவரை, படிப்புக்காக இலண்டன் அனுப்பினர். ஆனால் அவருடைய மனம்  கலைகளோடும் கடவுளோடும் ஒன்றியிருந்தது. கல்வியால் பெறும் அனுபவத்தைக் காட்டிலும், அனுபவத்தால் பெறும் கல்வி உயர்ந்தது என எண்ணி அதனையே தம் படைப்புகளின் வழி உலகிற்கு உணர்த்திக்காட்டினார்.  எனினும், கல்வியால் மட்டுமே குழந்தைகளை நல்வழிப்படுத்த இயலும் என எண்ணினார்.

கல்வியின் அருமையினை உணர்ந்தே கல்விக்கூடங்களையும் நிறுவினார். கலைகளுடன் கூடிய கல்வியே உயர்ந்ததென எண்ணி, தனது சாந்திநிகேதனில் பள்ளியைத் தொடங்க எண்ணினார். அவருடைய மனைவி நகைகளை விற்று, பள்ளி தொடங்குவதற்காகப் பணம் கொடுத்தார். அலைகளின் ஒலியையும் காற்றின் மொழியையும் உணர்ந்து கவிதைகளைப் படைத்தார். பொறுப்புணர்வுமிக்க இல்லறத்தைக் காட்டிலும் துறவறம் சிறந்ததன்று” என்னும் கருத்தை ‘துறவி’ என்னும் நாடகத்தில் உணர்த்தியுள்ளார்.

மக்களிடம் கொண்ட கருணை அவரை விடுதலை வீரராக மாற்றியது. நாட்டுப்பற்றும் கருணை உள்ளமும் வீரமும் நிறைந்த கவிஞராகத் திகழ்ந்தார். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டு ஆங்கிலேயர் கொடுத்த ‘சர்’ பட்டத்தைத் திருப்பிக்கொடுத்தார். உலகமே அஞ்சி நடுங்கிய இத்தாலிய கொடுங்கோலனான முஸோலினிக்கு அறிவுரை கூறிய பெருமை இவருக்கே உண்டு.

            இரண்டாயிரம் பாடல்கள் எழுதிய பெருமைக்குரியவர். கலைஞர்களின் கடமை, புகழையும் பணத்தையும் மக்களிடமிருந்து அள்ளிக்கொள்வதன்று ; மக்களின் மறுமலர்ச்சிக்கு வித்திடுவது. அதன் பலன் வாழும் காலத்தில் பயனளித்தாலும் அளிக்காவிட்டாலும் வருங்காலத்திற்கு உரமூட்டவேண்டும். அதற்காக சொல்லில் மட்டுமின்றி செயலாலும் சிறந்து நின்றவர் தாகூர். விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவி கல்வி கற்க வழிசெய்தார். இன்றும் பொலிவுடன் கல்விப்பணியில் முன்னிற்கும் அப்பல்கலைக்கழக அழகிற்கு பின்னிற்பவர் கவியோகி. கல்விப்பணியில் மட்டுமின்றி இலக்கியப்பணியிலும் அவர்தொடாததுறையே இல்லை. எனவே, பல்கலைக்கழகத்தை நிறுவிய பல்கலைக்கழகம் என கவியோகியைக் குறிப்பிடலாம்தானே?.

            முப்பது நாடுகளுக்கு மேலாகப் பயணம் செய்தவர். இவ்வனுபவத்தை ‘யாத்ரி’ என்னும் நூல் எடுத்தியம்பும். விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இலக்கியவாதி பங்கிம் சந்திரர், எச்.ஜி.வெல்ஸ், மகாத்மா காந்தியின் சீடரான ஆண்ட்ரூஸ், ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் ஈட்ஸ், எஸ்ரா பவுண்ட்  எனப் பல அறிஞர்கள் இவரைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

இருநாடுகளுக்கு தேசிய கீதம் எழுதிய ஒரே கவிஞர் என்னும் பெருமையும் தாகூருக்கே உண்டு . பாரதத்தில் ‘ஜன கன மண..” என்னும் கீதமும் பங்களாதேஷில் “அமர் சோனார் பங்களா..” என்னும் கீதமும் நாட்டு மக்களுக்கு உயிரூட்டுவன ; ஊக்கமூட்டுவன. நாட்டுப்பற்றை வளர்க்கும் நயமான வரிகள் அவை.

வங்காளக் கவிஞரின் தங்கமான வரிகள் வங்காளிகளை ஈர்த்தன. பேச்சு நடையில் கவிதை வீச்சு கொண்ட எழுத்துக்கள் அவருடையவை.  தங்கப்படகு (சோனார் தரி - 1894) , சித்ரா (சித்ரங்கடா-1892) புகழ்பெற்றவை. இவ்வாறு ஒவ்வொரு படைப்பும் காலத்தை விஞ்சி நிற்பன. பல பதிப்புகள் கடந்தும் நன்கு விற்பன.

கவிதையை மொழிபெயர்ப்பது கடினம். மொழியின் அருமையும் கவித்துவமும் காணாமல் போய்விடும். சிறுகதை, நாவல், நாடகம் எப்படைப்பாயினும் தத்துவமே ஆயினும் தாய்மொழியில் காட்டிய உணர்வை மொழிபெயர்ப்பில் ஊட்டுதல் இயலாது. முயன்று எழுதும்பொழுது கவியோகியின் வரிகள்  பொன்னிழைகளாகி மின்னுகின்றன.

·        தண்ணீரைக் கண்டு அஞ்சும்வரை கடலைக் கடக்க இயலாது.

·        அன்பு கட்டுப்படுத்துவதில்லை ; விடுதலை உணர்வையே தரும்.

·        கடவுள் மனித இனத்தை விரும்புவதை குழந்தை பிறப்பே உணர்த்துகிறது.

·        நிருபிக்கப்பட்ட உண்மைகள் பல ; நிருபிக்கப்படாத உண்மை ஒன்றுதான்.

·        மனம் ஒரு கத்தி. பயன்படுத்த தெரியாதபோது ரத்தம் சிந்த நேர்கிறது.

·        பட்டாம்பூச்சிகள் நிகழ்காலத்தில் சிறகடிப்பதால்தான் அழகாக இருக்கிறது.

·        ஒரு மலரானது, பல முட்களைப் பார்த்து பொறாமை கொள்வதில்லை

·        இலை நுனியின் பனித்துளிபோல் வாழ்க்கை. மெல்ல ஆடுவோம்.

·        மகிழ்ச்சியாக வாழ்வது எளிது. எளிமையாக வாழ்வது கடினம்

·        மனம் அஞ்சாதபோது தலை நிமிரும்.

கடலின் சில துளிகள் இவை. 1961 ஆம் ஆண்டு  பாரதத்தின் “திரையுலக மேதை”யான சத்யஜித்ரே  ‘ரபீந்திரநாத் தாகூர்’ என்னும் ஆவணப்படத்தை எடுத்து  கவியோகிக்குக் காணிக்கையாக்கினார். “கவியோகியின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டம் கிளப்பிய புழுதியை விட சிறந்த அஞ்சலி இருக்கமுடியாது” என அறிஞர் மிருணாள்சென் குறிப்பிடுகிறார்.  நாம் என்ன செய்வோம்? கவியோகியின் ஒவ்வொரு சொல்லும் வாழ்க்கையை அழகாக்கும்தானே?. நன்றிக்கடனாய் நன்கு வாழ்ந்துகாட்டுவோம்.

தேசியக்கவியினைக் கற்போம் ; கற்பிப்போம் ; கலைகளை வளர்ப்போம் ; வாழ்க்கையைக் கொண்டாடுவோம் ;

 

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஓஷோ என்னும் ஓஷன் (கடல்) - Osho is an ocean

 


ஓஷோ என்னும் ஓஷன்  (கடல்) -
Osho is an ocean

“ஓஷோ பிறக்கவும் இல்லை ; இறக்கவும் இல்லை. இந்த உலகைப் பார்வையிட்டுப் போனவன்” எனத் தன் கல்லறையில் எழுதச்சொன்ன மகான் ; புனிதன் ; மா மனிதன் ; மெய்ஞ்ஞானி ; குரு ; வழிகாட்டி ; வீரத் திருமகன். எத்தனை அடைமொழிகளுக்கும் அடங்காத கடல். மகாகுரு ஓஷோ போபாலில் பிறந்தவர். ‘சந்திர மோகன்’ என்னும் இயற்பெயரில் (11.12.1931) தத்துவம் படித்து ;  பேராசிரியராக வளர்ந்தவர். அவருடைய மெய்யறிவு உலகையே ஈர்த்தது. சரஸ்வதி பெற்றெடுத்த பிள்ளையாயிற்றே. தாயார் சரஸ்வதி பாய்ஜெயின்.  தந்தை பாபாலால் ஜெயின்.  

இவரைப் பின்பற்றுவது மிகவும் எளிமையானது. எல்லாம் சரியாக இருக்கும் நிலைக்கு உங்களைப் பக்குவப்படுத்திக்கொள்ளுங்கள் என்கிறார். சரியாக இருப்பது என்பது என்ன? என்று கேட்டுப்பாருங்கள். விடைக்காகச் சில நொடிகள் காத்திருங்கள். விடைகிடைக்காது ; கிடைத்தாலும் அனைவரும் ஏற்கத்தக்கதாக அமையாது. ஆனால் ஓஷோ சொல்லும் ‘சரி’ என்பதற்கான விளக்கம் எளிமையானது.   அமைதியான சூழலில் இருப்பதுதான் ‘சரி’ என்கிறார். ஆரவாரம், கோபம் செயற்கையானவை. அதனை விடுத்தால் வாழ்க்கை எளிதாகிவிடும் ; அழகாகிவிடும் என்கிறார்.  'கடலின் ஒரு துளியும் கடல்தான்' என்பதனை உணர்ந்துகொண்டதை உணர்த்தும்வகையிலேயே  'ஓஷோ' என்னும் பெயர் பொருந்திவிட்டதனையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.  

பிரச்சினைகளைக் கண்டு ஓடாதீர்கள் ; எதிர்க்காதீர்கள். அது எப்படியும் நடக்கப்போகிறது. அதனைக் கவனியுங்கள். அது நம்மைவிட்டு விலகிவிடும் என வழிகாட்டுகிறார்.

நாம் நினைப்பது நடக்கலாம் ; நடக்காமலும் இருக்கலாம். நடக்கவேண்டாம் என நினைத்தாலும் மரணம் நிகழப்போகிறது. அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். உறக்கம் போன்ற இயற்கை நிகழ்வுதான் மரணம் என்பதனை உணர்ந்துகொள்ளும் உள்ளுணர்விருந்தால் அச்சமில்லை என்கிறார். இன்றும் கூட நாக்பூரில் கருணையுடன் நடந்துகொண்ட நிகழ்வு நெஞ்சை உருக்குகிறது. மருத்துவமனையில் படுக்கையின்றி நாற்பது வயது நோயாளி தவிக்கிறார். மருத்துவரிடம் மனைவியும் குழந்தைகளும் கெஞ்சுகின்றனர்.  மருத்துவர் படுக்கை இல்லாத நிலையைக் கூறித்தேற்றுகிறார். அந்நிலையில் ‘நாராயண் தபோல்கர்’ என்னும்  எண்பத்தைந்து வயது நாட்டுப்பற்றுடைய முதியவர் நாற்பது வயது நோயாளிக்குத் தன் படுக்கையைக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். மூன்று நாள் வீட்டிலேயே தங்கியிருந்து இறந்தார். தான் உரிய வாழ்க்கை வாழ்ந்துவிட்டதாகவும் அந்நோயாளி வாழவேண்டும் எனக்  கூறியது எத்தனைத் தெய்வீகமான செயல்.

இருப்பு, இறப்பு என்னும் காரணங்களை அறிந்தால் வாழ்க்கை  இலேசாகிவிடும் என்றார் ஓஷோ. மனம் இலேசாகிவிடும்போது அனைத்து உயிர்களிலும் ஆனந்தத்தை உணரமுடியும். அன்பு  பிறரிடம் இருந்து வருவதில்லை. அன்பு உன்னிடம் இருந்தே பரவி உன்னிடமே திரும்பி வருகிறது. நீ மலரை எறிந்தால் பூமாலையாகவும், கல்லை எறிந்தால் காயமாகவும் வருகிறது என்கிறார்.

மரணம் அச்சப்பட வேண்டியதில்லை. அது இயற்கை நிகழ்வு.  அது இருளை போல, புதிய இடத்தைப் போல ; புதிய மனிதர்களை நெருங்குவது போல ஓர் அச்சத்தை ஏற்படுத்தும். உணர்ந்துகொண்டபின் அச்சம் நீங்கிவிடுகிறது. ‘வாழ்வின் உச்சம் மரணம்’ என உணர்ந்துகொண்டால்  துறவு மனப்பான்மை கைகூடுகிறது. இன்றும் அதற்கான சான்று உண்டு. ரிலையன்ஸ் கம்பெனியில் அம்பானியின் வலக்கரமாக விளங்கியவர் பிரகாஷ் ஷா துறவியானார். எழுபத்தைந்து கோடி ஊதியம் பெற்றவர் வேலையைத்துறந்து துறவியானது எத்தனைப் பக்குவமான செயல்.

பசியுணர்வும் பாலுணர்வும் இயற்கையானவை. அதுவே சக்தியாக நம்மைப் பாதுகாக்கிறது. இரண்டையும் முறையாகக் கையாளவேண்டும். அந்த சக்தியின்  உணர்வு  தாழ்நிலையில் பாலுணர்வாகிறது. உயர்நிலையில் தியானமாகிறது. பலர் தாழ்நிலையிலேயே தேங்கிவிடுகின்றனர். சிலர் உயர்நிலையில் தியான நிலைக்குச்சென்று உடலையும் உள்ளத்தையும் பாதுகாத்துக்கொள்கின்றனர்.

அன்று, உலகிலேயே விலை உயர்ந்த கார்  ரோல்ஸ்ராய். அதனை வாங்குவதற்குப் பணமிருந்தாலும் ; கூடுதலாக எத்தனைக் கோடி கொடுத்தாலும் வாங்குபவரின் தரம் சிறப்பில்லாமல் இருந்தால் அந்தக் காரினை ரோல்ஸ்ராய் நிறுவனம் விற்காது. அப்படிப்பட்ட கார்கள் பலவற்றை உடைமையாகக் கொண்டிருந்த பெருமைக்குரியவர்தான் ஓஷோ என்னும் தத்துவ மேதை.

ஐந்தாயிரம் மக்களுடன் பாலைவனமாக இருந்த அமெரிக்காவின் ஒரேகான் என்னும் பாலைவனத்தில் தன் அடியார்களுடன் குடியேறினார். ரஜனிஷ்புரமானது. அவருடைய முயற்சியால் பாலைவனம் சோலைவனமாக மாறியது. மக்கள் அவருடைய இயற்கை வாழ்வுடன் இணைந்து வாழ விரும்பினர். படிப்படியாக அடியார்கள் கூட்டம் பதினைந்தாயிரமாக (15000) வளர்ந்துவிட்டது. நாளும் அவருக்கான அடியார்கள் பெருகப்பெருக மதவாதிகள் மிரண்டனர். தங்களுக்கான மக்களெல்லாம் அவரிடம் சென்றுவிடுகிறார்களே என எண்ணி அவரை மிரட்டினர்.  உலகத்தையே வீடாகக் கொண்டவருக்கு நாடு என்ன தடைவிதித்துவிட முடியும். கடவுச்சீட்டைக் கிழித்துப்போட்டுவிட்டு கடவுச்சீட்டில்லாத குற்றத்திற்காக கைது செய்தனர். சிறையில் குரு இருப்பதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத சீடர்கள்  கேள்வி கேட்கத்தொடங்கினர். பிரச்சினை பெரிதாகும் என எண்ணிய மதவாதிகள் சிறையிலேயே கள்ளத்தனமாகக் கொல்ல சதிசெய்தனர். 'தாலியம்’ என்னும் விஷ ஊசியைச் செலுத்தினர் என  அவரே அவருடைய நூலில் எழுதியுள்ளார் ஓஷோ.

அன்பும் ஆன்மிக உணர்வும் கொண்ட ஓஷோவை உலகில் உள்ள அனைவருக்கும் பிடித்திருந்தது. அவரைக் கடவுளே மனித வடிவில் வந்ததாக எண்ணினர். எனவே ‘பகவான்’ எனவும் குறிப்பிட்டனர்.  இதனால் பொறாமை எண்ணம்கொண்ட மதவாதிகளின் அழுத்தத்தால் அனைத்து நாடுகளும் அவரைத் தங்கள் நாட்டிற்குள் நுழையாமல் தடுத்தன. அவருடைய விமானம் பல நாடுகளில் தரை இறக்கப்படாமலே திருப்பி அனுப்பப்பட்டது.

யோகக்கலையைக் கற்றுக்கொடுத்து நோயின்றி வாழ வழிகாட்டினார். வாழ்க்கை எவ்வாறு ஆனந்தமாக வாழ்வது என்பதனைக் கற்றுக்கொடுத்தார். யோகம் செய்து கவலையின்றி வாழ வழிகாட்டினர்.  நோயின்றி வாழ்வதற்கான பயிற்சியினைக் கற்றுத்தந்தார். உலகத்தில் பல நாடுகளில்  அவருடைய அடியார்கள் முளைத்துக்கொண்டே இருந்தனர். வாழ்க்கையின் பொருளை உணர்ந்தனர். “வானம் பூக்கொடுத்து ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன்’ எனக் கொண்டாடினர்.

மனிதர்கள் நல்லவர்கள். அவர்களைப் பழிக்காதீர்கள். மதம் என்னும் பெயரால் ஒடுக்கிவிடாதீர்கள் எனக் கூறி ‘ஜோர்பா’ என்னும் புதிய மனிதனை அறிமுகப்படுத்தினார். எந்தக் கட்டுப்பாடுமின்றி மகிழ்ச்சியுடன் அஞ்சாது வாழும் ஒரு பாத்திரத்தைப் படைத்தார். அப்பெயரையே உலகுக்கு அறிமுகம் செய்தார். அவ்வாறு வாழ்வதற்கான வழியையும் கற்பித்தார்.

தத்துவமேதை சாக்ரடீஸ் போல் யாருக்கும் தலை வணங்காமல் தம் கொள்கையிலிருந்து விலகாமல்  ஐம்பத்தெட்டு வயதில் மரணத்திடமும் அன்பு காட்டி ஏற்றுக்கொண்டார். (19.01.1990). ரஜினிஷ் என்னும் பெயர் உலகையே பிரமிக்கவைத்துவிட்டது. ‘ரஜினி’ என்பது இருளையும்  ‘ஈஷ்’ என்பது கடவுளையும் குறிப்பதாக அமைகிறது. ‘ரஜினி’ என்பது இருளையும் ‘நீஷ்’ என்பது ஒளியையும் குறிப்பதாக அமைந்து சந்திரனைக் குறிப்பதாகவும் அமைகிறது. சந்திரமோகன் என்னும் இயற்பெயரையே சமஸ்கிருதத்தில் அவ்வாறு மாற்றிக்கொண்டுள்ளார். எத்தனையோ புக்ஸ் (புத்தகங்கள்) எழுதிய சாமியாரின் அருமையை மடைமாற்ற எண்ணிய மதவாதிகள் ‘செக்ஸ் சாமியார்’ என அடையாளப்படுத்தினர்.

யோகி, பேச்சாளர், பொதுவுடைமையாளர் எனப்பலரும் கொண்டாடி வரும் பெருமைக்குரியவரின் புகழை அறிந்துகொண்டு  அவர்காட்டிய வழியில் ஒற்றுமையாக ; அமைதியாக ; ஆனந்தமாக வாழ்வோம். வாழ்விப்போம்.

திங்கள், 21 செப்டம்பர், 2020

மகாகவி பாரதியாரின் தேசப்பற்று - Great Poet Barathiar's Patriotism

 

பாரதி காட்டும் தேசப்பற்று

     எத்தனை முறை பேசினாலும் அத்தனை முறை இனிக்கும் பாடல்கள் மகாகவியின் பாடல்கள். அத்தகைய முண்டாசுக் கவிஞன் விண்ணுலகத்தை ஆட்கொண்டு (99) தொண்ணூற்றொன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் அந்தசக்தி தாசன்பேசப்படுகிறார் எனில் அதற்குக் காரணம்கவிதை உணர்வல்லவிடுதலை உணர்வு. ஒரு சமூகத்தின் உள்ளக்குமுறலைக் கண்டு உள்ளம் கொதித்து எழுதுகோலில் மையினை ஊற்றாமல் இரத்தத்தை ஊற்றிப் பாடல் பாடினான். வழி தேடினான் ; முடியாமல் வாடினான். காந்தக் கவிஞனின் எழுத்துக்கள் கந்தகமாய் மாறின. மெல்லினம் கூட வல்லினமாய் மாறின. வல்லின எழுத்துக்கள் ஆயுத எழுத்துக்களாயின. அதனால்தான் வெள்ளை அரசாங்கம் இவனுடைய எழுத்துக்களை ஆயுதங்களாய் எண்ணின ;  கைது செய்ய நரி போல் வலை பிண்ணின..

     காற்றைக் கைது செய்ய முடியாமல் மாற்று வழி தேடின.  எட்டப்பர்களையும் யூதாஸ்களையும் விலை கொடுத்து வாங்கிய வெள்ளை அரசாங்கத்தின் ஆசை வார்த்தைகளை நம்பி மோசம் போனவர்கள் எத்தனையோ பேர் இவரைக் காட்டிக்கொடுக்கமுன்வந்தனர். நல்லவர்களுக்குத் துணை நிற்பதற்கு அஞ்சி வெள்ளையர்களுக்குத் துணை நின்றனர் சிலர். அஞ்சியவர்கள் ஆங்கிலேயர்களுடன் கைகோத்து தலை நிமிர்ந்தனர். விலை போகும் அவர்களை எண்ணி  மகாகவி வாடினார் ; பின்பு பாடினார்.

நெஞ்சு  பொறுக்குதில்லையே !  இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் அஞ்சி அஞ்சி சாவார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலேஎன்றார். தம்மை அறியாமலே தீமைக்குத் துணைநின்ற அவர்களைத் திருத்த முயன்றார்.

இந்தியர்களைப் பிரித்தாளும் நரியின் சூழ்ச்சியினை அறிந்தான்; வெள்ளையன் ; நம் நாட்டைக் கொள்ளையடித்த கொள்ளையன். நம் நாட்டு வீர்ர்களை விலைகொடுத்து வாங்கினான். போதையால் ; தீய பாதையால்.  இந்தியர்கள் எப்படி ஏமாந்தனர் என்பதற்கு ஒரு சிறிய கதை. முயல் கிடைக்கும் என எண்ணிய நரி ஒரு குகையுள் சென்றது. அங்கு சென்றபிறகுதான் அது முயல் வாழும் இடமல்ல புலியின் குகை என்று அறிந்தது. ஒரு புலியிடம் சிக்கிக்கொண்டோமே? என்ன செய்வது எனத் தயங்கியது. உடனே தந்திரம் செய்தது. புலியிடம், என்னுடைய பலம் உனக்குத் தெரியுமா? எனக் கேட்டது. நம்முடைய குகைக்குள் நரி ஏன் வந்திருக்கிறது ? என எண்ணிய புலியின் எண்ணத்தைக் கணித்தது. என்னைக் கண்டால் இந்தக்காட்டில் எல்லோரும் நடுங்குவார்கள் என்றது நரி. புலி அப்படியா? என்றது. ‘நம்பவில்லை என்றால் என் பின்னால் வாஎனக் கூறியது நரி. நரி முன்னால் நடக்க பின்னால் புலி பின் தொடர்ந்தது. காட்டில் உள்ள விலங்குகள் மான்,முயல், காட்டெருமை என அனைத்தும் அஞ்சி ஓடின. தன்னைக்கண்டுதான் பிற விலங்குகள் ஓடுகின்றன என்பதனைப் புலி அறியவில்லை. நரியின் தந்திரம் புரியவில்லை. அதுபோலத்தான் குறுநிலமன்னர்களின் ஆளுமையை, இந்திய ஆட்சியாளர்களின் திறத்தை வெள்ளையர்கள் ஏமாற்றித் தமதாக்கிக்கொண்டனர்.

அப்படி ஏமாறாத புலிகள்தான் உயிருக்கு அஞ்சாத தியாகிகள், தன் உயிரைக்காட்டிலும் நாடு பெரிதென எண்ணிய நல்லோர்கள். அடிவாங்கிக்கொண்டு தலையில் இரத்தம் வடிந்தாலும் தலைமுறை வாழவேண்டும் என எண்ணினர். உப்பு காய்ச்சும் போராட்டத்தில் விடுதலை வீர்ர்கள் ஒன்றுகூடிப் போராடினர் போராட்டம் என்பது அமைதியான முறையில் சகிப்புத்தன்மையுடன் எதனையும் பொறுத்துக்கொள்வது.  

அப்படிப்பட்ட வீரர்களால் விடுதலைப் பயிர் செழித்தது. ‘தண்ணீர் விட்டா வளர்த்தோம்சர்வேசா  இப்பயிரை கண்ணீரால் காத்தோம் . கருகத் திருவுளமோ.’ எனப் பாடினார். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் அமைதியான முறையில் போராடிய விடுதலை வீரர்களைக் குதிரையில் வந்த ஆங்கில அரசின் வீரர்கள் (தமிழர்கள்தான் ஆங்கில அரசின் காவலர்களாக) தடியுடன் தாக்க வருகிறார்கள். வேகமாக அவர்கள் வருவதைப் பார்த்தவுடன் சிதறிஓடாது எதிர்கொண்டனர். எல்லோரும் படுத்துக்கொள்ளுங்கள் என்றார் ஒருவர். குதிரைகள் மனிதர்களை மிதிப்பதில்லை என்றார். அவ்வாறே குதிரைகள் ஓடிவந்து நின்றுவிட்டன. ஆங்கில அதிகாரி தனது வீரர்களுடன் திரும்பிச்சென்றார். குதிரைகளுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இல்லாமல் ஆங்கிலேயன் இந்தியரைச் சித்திரவதை செய்தான். எத்தனையோ உயிர்கள் பறிபோயின.

ஆங்கிலேயருக்கு அஞ்சி வாழ்வதும் கெஞ்சி வாழ்வதும் வீரர்களால் இயலாது. எனவே பராசக்தியிடம் கேட்கிறார். “தசையினைத் தீச்சுடினும் சிவசக்தியைப் பாடும் நல் அகங்கேட்டேன். நசையறு மனங்கேட்டேன். நித்தம் நவமென சுடர்தரும் உயிர்கேட்டேன். அசைவறு மதி கேட்டேன். இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோஎன வேண்டுகிறார்.

      ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வுஎன்றார். யார் ஆங்கில அரசுக்குப் பணிந்தார்களோ அவர்களுக்குப் பதவிகள் கிடைத்தன. அந்த அடிமை வாழ்வின் சுகத்தை விரும்பி பலரும் தங்களை அடிமைகளாக மாற்றிக்கொண்டனர். அவர்களியக் கண்டு

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்

என்று மடியும் எங்கள் அடிமையின்மோகம்

என வருந்திப்பாடுகிறார். ஆங்கிலேயன் கையில் நாட்டைக்கொடுத்து விட்டு அடிமையாக வாழ்வது எவ்வளவு இழிவு. ஆளத் தெரியாத உங்கள் நாட்டை ஆள்வதற்கு வந்திருக்கிறோம் என்றான் வெள்ளையன். நம் செல்வத்தை திருடிச்சென்ற கொள்ளையன்.

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு

என்பதை உணர்வீராக. எம்மை நன்கு ஆண்டதால்தான் எத்தனைச் செல்வங்கள் குவிந்திருக்கின்றன.  வ்வுண்மையை உணராமல் இங்கே வந்து எம்மை ஆள்வீர் எனக் கூறுவது எத்தகைய மூடத்தனம் எனப் பாடினார் மகாகவி. தன்னுடைய நாடு தனதென்று அறியாமல் வெள்ளையனுக்கு அடிமையான இந்தியர்களின் அறியாமையைக் காண்கிறார் பாரதியார். மனம் வருந்திப் பாடுகிறார்

பாரத நாடு பழம்பெரும்நாடு நீரதன் புதல்வர் ; இந்நினைவகற்றாதீர்

என்றார். ஆங்கிலேயர்களின் கொடுஞ்செயல்களால் மிரண்டுபோன இந்தியர்களால் ஆங்கில அரசை எதிர்க்கும் எண்ணம் வரவில்லை. என்னால் என்ன செய்துவிட முடியும் என வருந்தினார்கள்.

இந்தியர்களில் பலர் சாம்பல்களாக தங்களைக் கரைத்துக்கொண்டிருந்தபோது சிலர் மட்டும் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அத்தகைய விடுதலை வீரர்களின் தியாக உணர்வால் தான் இந்தியா வெளிச்சம் பெறப்போகிறது என உணர்ந்தார்.

அக்னிக் குஞ்சொன்று கண்டேன் ; அதை ஆங்கொரு காட்டிடை பொந்திடை வைத்தேன் ; வெந்து தணிந்தது காடு ; தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ;தத்தரிகிட த்ததரிகிட தித்தோம் ;தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்னப்பாடுவது வீரத்தழலான விடுதலை வீரர்களைக் கண்டதன் வெளிப்பாடே. அவர்களைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார் மகாகவி. ஒவ்வொருவரும் விடுதலை உணர்வுடன் மாறும்போதுதான் நாடு நலம்பெறும் என்பதனை கவிதையாக மட்டுமின்றி உரைநடையாகவும் எழுதினார்.  விடுதலை உணர்வு விதைகளை தரணியெங்கும் தூவிவிட்டார்.

 குடும்ப பாசத்தைக்காட்டிலும் நாட்டுப்பாசம் மகாகவியிடம் விஞ்சி நின்றது. ‘சுதந்திர தேவி உன்னைத் தொழுதிடல் மறக்கிலேனேஎனப் பாடினான். ஆங்கில அரசின் கொடுமையைப் பார்த்து ஓடியவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தினார்.  வீரத்தாய்ப்பாலை தமிழ்ப்பாலின் வழி ஊட்டினார் மகாகவி. “மனதில் உறுதி வேண்டும். வாக்கினிலே இனிமை வேண்டும். நினைவு நல்லது வேண்டும். நெருங்கின பொருள் கைப்பட வேண்டும். கனவு மெய்ப்படவேண்டும். கைவசமாவது விரைவில் வேண்டும். தனமும் இன்பமும் வேண்டும். தரணியிலே பெருமை வேண்டும்என வேண்டியதையெல்லாம் பாடாலாய் பாடி அனைவர்க்கும் உணர்த்தினார்.

விடுதலை உணர்வு என்றால் என்ன? எதற்கும் யாரையும் எதிர்பாராமல் தன்னிறைவுடன் வாழ்வது என்பதை அன்றே சொல்லிவைத்தார் பாரதி. எப்போது ஒருவரை எதிர்பார்த்துவிடுகிறோமோ, அப்போதே அடிமைத்தனம் தொடங்கிவிடுகிறது. மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதே விடுதலை வாழ்வு.

தாய்நாட்டின் மீது பற்றில்லாது வாழ்வோரைபிறர் வாடப் பல செயல்கள் செய்யும்வேடிக்கை மனிதர்என்கிறார்.  வேடிக்கை மனிதரைப்போலே வீழ்வேன் என்று நினைத்தாயோஎன்றார்.

வாழ்வதற்குப் பொருள் வேண்டும் எனப் பாடியதோடு நில்லாமல் வாழ்வதிலும் பொருள் வேண்டும் என்றும் பாடினார் மகாகவி. இவை இரண்டையும் உணர்ந்து விடுதலை உணர்வுடன் வாழ்வோம்.

வெள்ளி, 8 மே, 2020

சங்கரதாஸ்சுவாமிகளும் வீரபாண்டிய கட்டபொம்மனும் - ஔவை தி.க. சண்முகம் - sankaradas swamigal and veera pandya kattabomman - Avvai T.K.Shanmugam



  1. நாடகம் என்பது நாடகமல்லஉண்மை

சங்கரதாஸ்சுவாமிகளும் வீரபாண்டிய கட்டபொம்மனும் - ஔவை தி.க. சண்முகம்
  1.        புஸ் புஸ்எனப் பாம்புகளின் ஒலி காதில் அக்னி குழம்பாய் நுழையும். இதயம் படபடக்கும். இருட்டில் பாம்பு எங்கு இருக்கிறது எனத் தெரியாது. இரவு நடுநிசி நேரத்தில் கயிறு போல் நெளியும். கொடியா ? பாம்பா ? எனத் தெரியாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்வார்கள். நாடகம் நடத்துபவர்களுக்கு இது வாடிக்கையாகி இருந்தது. அப்படி ஒரு முறை போலிநாயக்கனூரில் இருந்து முடிமன்னிக்கு நாடகம்முடித்துவிட்டுச் சென்று கொண்டிருந்தது ஒரு கூட்டம். அப்படிப் பயத்துடன் செல்லும்போது ஒரு கருத்த உருவம் ; ஆஜானுபாகுவான தோற்றம் ; வெள்ளை கிருதா ; மீசை ; கையில் வேல்கம்புடன் தடுத்து நிறுத்தியது. ‘உங்க கூட்டத்தில் சங்கரதாஸ் சுவாமிகள்இருக்காரா?” என அந்த உருவம் கேட்டது. ‘இல்லை. அவருக்கு உடல் நிலை சரியில்லாததால் வரவில்லை. நாளை முடிமன்னிக்கு வந்தால் பார்க்கலாம்எனச் சொன்னதைக் கேட்டு அந்த உருவம் செல்ல அனுமதித்தது. அடுத்தநாள் அந்த உருவம் வந்தால் அது மனிதன் இல்லாவிட்டால் பேய் என அந்தச் சிறுவன் நினைத்துக்கொண்டு காத்திருந்தான். எதிர்பார்த்தபடி அந்த உருவம் வந்தது. எனவே, மனிதன் என்பது உறுதியானது. ‘ஐயா, நான் கட்டபொம்மு, ஊமைத்துரை, தானாப்பதிப்பிள்ளை, பகதூர்வெள்ளை இவர்களைப் பற்றிய உண்மைக்கதையை வைத்திருக்கிறேன். ஆங்கிலேயரிடம் கொண்ட பயத்தால் இவர்களைப் பற்றிய உண்மையை யாரும் சொல்லவில்லை. வெள்ளையத்தேவர் வமிசத்தினர் எழுதிய பழைய ஏடுகள் என்னிடம் உள்ளன. ‘சிறுமூட்டையில் கந்தல் துணியில் பாதுகாத்த சுவடிகளை எடுத்துக் கொடுத்தார். ‘ஒரு சில அடிகளைப் படித்துப்பார்த்தார். நடை அருமையாக இருக்கிறது. இதற்கு உங்களுக்கு என்ன வேண்டும் ?’ என நாடகத்துறையின் தலைமையாசிரியர்எனப் போற்றப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் கேட்டார். ‘கண்கள் சிவக்க, குரல் தழுதழுக்கஉண்மையை மக்கள் அறிந்துகொண்டால் போதும். அதற்கு நீங்கள் இக்கதையை நாடகமாக்கி நடிக்கவேண்டும். அதுவே என் ஆசைஎன்றார். பின்னர்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்த பெருமையினை உலகம் அறிந்துகொண்டது. இவ்வுண்மையை சிறுவனாக இருந்தபோது அறிந்துகொண்டதனை  எனது நாடக வாழ்க்கைஎன்னும் சுயசரிதையில் குறிப்பிடுகிறார் நாடகத் துறையின் தொல்காப்பியர்என அழைக்கப்பெற்ற அவ்வை தி.. சண்முகம்.  
  2.