தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 14 ஆகஸ்ட், 2021

ராணி காயிதின்லியு : ‘மலையின் மகள்’

 



ராணி காயிதின்லியு : ‘மலையின் மகள்’

என்னை எங்காவது வெளியில் அழைத்துச்செல்கிறீர்களா? எனக் கேட்காத குழந்தைகள் உண்டா? அல்லது பெரியவர்கள்தான் உண்டா? சுதந்திரமாகத் திரிவதில் இருக்கும் சுகமே சுகம்தான். எல்லாவசதிகளும் இருந்தாலும் நான்கு சுவர்களுக்குள் சிறைபட்டிருப்பது கொடுமைதானே. அப்படித்தான் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.  அதனை எதிர்த்துப்போராடியவர்கள் வேர்களைப் போல் அடையாமல் காணப்படாமலே மறைந்துவிட்டனர். அவர்களைக் கண்டறிந்து நினைவுகொள்வது நல்லோர் கடமை.

  ராணி காயிதின்லியு, நாகா இனத்தைச் சார்ந்த ஆன்மிகத்தலைவராகப் போற்றப்பட்டவர். தம் மக்களை ஆங்கிலேயர்கள் மலைவாழ்மக்களின் சமயத்திலிருந்து மாற்றியதால் அவர்களை எதிர்த்துப்போராடினார்.

ஆயுதமேந்தி வருபவர்களுக்கு நேராகப் புறாக்களை விடுவதும் மலர்களைக் கொடுத்து அமைதிப்பேச்சு நடத்துவதும் தவறென எண்ணியவர் அவர். எதிரிகள் எந்தமொழியில் பேசுகிறார்களோ அதே மொழியில் பேசினால்தான் அவர்களுக்குப் புரியும் என்னும் கொள்கையை முன்னிறுத்தியவர். ஆயுதத்தால் அடக்கிய ஆங்கிலேயரை ஆயுதம் கொண்டே எதிர்த்தவர்.    26 ஜனவரி 1915 இல் மணிப்பூர்  அருகில் ‘நுங்கோ’ என்னும் இடத்தில் பிறந்தார். நாகா மக்களிடையே பெரும் இனமாக விளங்கிய ‘ரோங்க்மீ’ என்னும் மலைவாழ்மக்கள் இனத்தில் பிறந்தார். கற்றுக்கொள்ளக்கூடிய ஆர்வமும் திறமையும் உடையவராக இருந்தாலும் பள்ளிகள் இல்லாததால் அவரால் முறையான கல்வியைக் கற்கமுடியவில்லை. ஆங்கிலேயர்கள் அங்குள்ள மக்களையெல்லாம் தம்சமயத்துமக்களாக மாற்றுவதில் தீவிரம் காட்டினர். இதனை எதிர்த்து, இவருடைய உறவினர் ‘ஜெடாநங்க்’ தோற்றுவித்த ‘ஹெரேகா’ என்னும் இயக்கத்தில்தான் தம்மை இணைத்துக்கொண்டார். பழமையான ‘நாகா’ மக்களின் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இவருடைய இனக்குழுவுடன் பிற இனக்குழுக்களும் தம் இனப் பண்பாட்டினை ஆங்கிலேயரிடமிருந்து மீட்பது குறித்து எண்ணி ஆங்கிலேயருக்கு எதிராகப்போராடத்தொடங்கினர்.  ஆங்கிலேயர்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வருந்தினர். எனவே, பெண்குழந்தைகளையும், மகளிரையும் இணைத்துக்கொண்டார். பெண்களும் தம்முடைய வீரத்தை வெளிப்படுத்த இவ்வாய்ப்பை மகிழ்வுடன் ஏற்றுப் போராடினர்.

துப்பாக்கிகளைக் கண்டறியாத மலைவாழ்மக்களை ஆங்கிலேயர்கள் அன்றைய புதியகண்டுபிடிப்புகளானத் துப்பாக்கிகளைக் கொண்டு கொன்றுகுவித்தனர். எனவே, மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர் முறையிலேயே ஆங்கிலேயரை எதிர்த்தனர்.  “சுதந்திரம் எங்களது பிறப்புரிமை” என்னும் விடுதலை மந்திரத்தை முழக்கிய பாலகங்காதர திலகரின் பொன்மொழியினைப் பின்பற்றினார். “நாங்கள் சுதந்திரமான மனிதர்கள். வெள்ளைக்காரர்கள் எங்களை அடிமைப்படுத்தக்கூடாது’ என்னும் முழக்கத்துடன் போராடினார்.

1931 ஆம் ஆண்டு தமது உறவினரான ‘ஹெரேகா இயக்கத்தின் தலைவர் ஜடோனங்க்,-ஐ கைது செய்து தூக்கிலிட்டது. உடனே  ஆங்கிலேயரைக் கண்டு அஞ்சாது, குருவாகத் தாம் எண்ணிய ஜடோங்கின் தலைமைப்பொறுப்பினை கயிதான்லியு ஏற்றுக்கொண்டார். மக்களுக்குத் தன்னம்பிக்கையூட்டுவதற்காகவும் தலைமையின்றித் தடுமாறாமல் இருக்கவும் தம்இனத்தைக் காப்பதே முதல் கடமை என விழிப்புணர்வூட்டினார். ஆங்கிலேயரின் சதி வலையில் சிக்காதீர். என மக்களுக்கு அறிவுறுத்தினார். தேசிய உணர்வினை உண்டாக்கினார். நாட்டுப்பற்று இருந்தால்தான் பண்பாட்டினைக் காக்கமுடியும் எனத் தெளிவுறுத்தினார். மத அமைப்புகள் மக்களை அடிமைப்படுத்தும் வேளையில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக நின்றன. எனவே இவர் மதத்துவ அமைப்புகளையும் எதிர்த்தார். இவரைக் கண்டுபிடிக்க முடியாமல் ஆங்கிலேய அரசு திணறியது. மேலும், கண்டுபிடித்துத்தருவோர்க்கு 500 பணமும், பத்தாண்டுகளுக்கான வரிவிலக்கும் அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் மக்கள் அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் நின்றனர். அத்தனை மதிப்புக்கொண்டிருந்தனர். அன்று அப்பகுதியில் பலரும் இவருடைய பெயரையே வைத்திருந்தனர். இதனால் காவல்துறை திண்டாடியது.   மக்கள் கொண்ட ஈடுபாட்டால் காவலர்களிடம் சிக்காமலே போராடினார்.  மரத்தால் கோட்டை கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது ‘புலோமி’ கிராமத்தில் இவரை ஆங்கிலேயர் கைதுசெய்தனர்.

1932 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16. ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. அவருக்குத் துணை நின்றவர்களுக்கும் ஆயுள்தண்டனையும் தூக்குத்தணடனையும் வழங்கப்பட்டன. 1933 முதல் 1947 வரை பதினைந்து ஆண்டுகள் பல்வேறு சிறைகளில் அடைத்துக் கொடுமை செய்தனர். பதினைந்து ஆண்டுகள் விடுதலைப்போராட்டத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டவர் இவரே.  நாட்டு விடுதலைக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டார். விடுதலையான பின்னரும் இவர் ‘நாகா’ மக்களின் பண்பாடு மறைந்துபோவதனைக் கண்டு மனம்வருந்தினார். மலைவாழ்மக்களின் பண்பாட்டை விட்டுவிட்டு ஆங்கிலேயர் மதத்திற்கு ‘நாகா’ மக்கள் மாற்றப்படுவதனை எதிர்த்துப் போராடினார்.  எனவே மக்கள் இவரை அவர்களுடைய கடவுளாகவே பார்த்தனர்.  வடகிழக்கு மாநிலங்களின் விடிவெள்ளியாகவே இவர் விளங்கினார். நாகா மக்களின் தெய்வமான ‘சேராச்சாமுண்டி’ -இன் வடிவமாகவே இவரைக்கண்டனர். 

ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போராடிய இவரை 1937 இல்  சிறையிலிருந்தபோது பண்டிட் ஜவஹர்லால் நேரு சந்தித்து அவர் விடுதலைக்கு உறுதியளித்தார்.  ‘ராணி’ என்னும் பட்டத்தை வழங்கினார். தியாகியான இவருக்கு 1982 ஆம் ஆண்டு ‘பத்மபூஷன்’ விருதும் வழங்கியது. ‘விவேகானந்தா’ சேவைவிருது 1972 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தியாகிகளுக்காக வழங்கப்படும் ‘தாமரைப்பத்திர’ விருதும் வழங்கப்பட்டது.  1993 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் பதினேழாம் நாள் 78 வயதில் மறைந்தார். இவருக்கும் ‘பிர்ஸா முண்டா’ விருதும் இறப்புக்குப்பின் வழங்கப்பட்டது. அவர் மறைந்தாலும் இன்றும் அவருடைய வீரம் கொண்டாடப்படுகிறது.

‘மலையின் மகள்’  என ராணி கயிதன்லியு கொண்டாடப்படுகிறார். மக்களுக்காகப் போராடியவர்களின் வரலாறுதான் மக்களுக்கு வழிகாட்டுதலாக அமைகிறது. எத்தனையோ மழைத்துளிகளின் தியாகத்தால்தானே நிலம் செழிக்கிறது. இப்படி எத்தனையோ தியாகிகளின் இரவு பகல் பாராத உழைப்பால்தான் நாடு பாதுகாப்புடன் திகழ்கிறது.

 

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

படிப்பு எதற்கு ? - கடவுளே சொன்ன கதை

 


படிப்பு எதற்கு ? - கடவுளே சொன்ன கதை

“கடவுளே ! படிக்காத குழந்தையா கொடு” மருத்துவமனையில் பிரசவப்பிரிவுக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த கணவன் வேண்டுகிறான். “குழந்தை பிறக்க வைப்பதுதான் என் பொறுப்பு. அதற்குப் பின் நீதான் குழந்தையை வளர்க்கிறாய். படிக்கவைப்பதும் மறுப்பதும் உன் பொறுப்பு. புரிகிறதா” என்றார் கடவுள். “என்ன கடவுளே. இப்படி சொல்லிவிட்டீர்” என்றான் அந்த பக்தன். “சரி! கவலைப் படாதே ! அந்த வேலையைத் திரைப்படமும் தொடர்களும் பார்த்துக்கொள்ளும். இல்லாவிட்டால் மதுவும், புகையும் பார்த்துக்கொள்ளும். அதுவும் இல்லையெனில் தீய பழக்கமுடைய நண்பர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று கடவுள் சொல்கிறார். “அப்படியென்றால் என்மகனை நீ இந்த நிலையிலிருந்து காப்பாற்றமாட்டாயா?” எனக்கேட்கிறான். “யார் என்ன கேட்கிறார்களோ அதைத்தான் கொடுப்பேன். எது நல்லது? எது கெட்டது ? யாரை நம்பவேண்டும்? யாரை நம்பக்கூடாது? என்னும் தெளிவையும் கொடுத்துவிட்டேன். வேறு என்ன செய்யவேண்டும்” எனக் கடவுள் கேட்டார். வேறு எதுவும் பேசமுடியாமல் திகைத்துவிடுகிறான் பக்தன்.

அந்த இடைவெளியில் கடவுள் கேட்கிறார் “நான் ஒன்று உன்னைக் கேட்கட்டுமா?”. “கேளுங்கள்” என்றான் பக்தன். “நீ எதற்குப் படிக்காத குழந்தையைக் கேட்கிறாய்” என்றார் கடவுள். “படித்தால் வேறு எந்த வேலையும் செய்யமாட்டன். குழந்தை படிக்கிறான் என எந்த வேலையும் சொல்லவும் முடியாது. கடைக்குச் செல்லவும், திருமணம், விழாக்கள் என எந்த விழாக்களுக்கு அழைத்துச்செல்லவும் முடியாது. திருநீறு அணிவது, கயிறுகட்டுவது பொட்டுவைத்துக்கொள்வது என எந்தப் பழக்கவழக்கமும் பின்பற்றமுடியாது. தாய்மொழியில் பேசமுடியாது. பிறமொழியில் பேசத்திணறவேண்டும். தாய்மொழியில் பேசினால் தண்டம் விதிப்பார்கள். எந்தக்கேள்வியும் கேட்கமுடியாது. கேட்டால் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம் என அச்சுறுத்துவார்கள். படித்தால் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன” எனக் கூறினான் பக்தன். “அடடா ! இவ்வளவு பிரச்சினைகளா ! இது எதுவும் தெரியாமல் நாள்தோறும் எத்தனையோபேர் என்னிடம் வந்து என் பிள்ளைக்கு நல்ல படிப்பைக்கொடு” என என்னிடம் வேண்டுகிறார்களே” என்றார் கடவுள்.

     “அப்படித்தான் வேண்டுவார்கள் கடவுளே. காலம் போகப்போகத்தான் குழந்தைகளின் மனநிலையை சரியாக்குதல் எத்தனை கடினம் என்பது புரியும். குழந்தையாக இருக்கும்போதுதான் அவர்களைப் பாதுகாப்பது கடினம். ‘வளர்ந்தபின்னாலே நிம்மதியாக இருக்கலாம்’ என எண்ணுவார்கள். ஆனால் காலம் செல்லச்செல்ல அவர்களுக்கு பிரச்சினைகள் பெருகிக்கொண்டுதான் இருக்குமேயன்றி குறைவதில்லை. அப்போதுதான் உன்னிடம் வருவார்கள் கடவுளே” என்றான். “நீ மட்டும் எப்படி பிறப்பதற்கு முன்னரே கேட்டுவிட்டாய்” என்றார் கடவுள்.

     “அதுவா! நேற்று எங்கள் வீட்டுப் பக்கத்துவீட்டில் ஒரு கோடீஸ்வரர் இறந்துவிட்டார். அவர் பிணத்தை எரித்து சடங்குகளைச்செய்ய வெளிநாட்டில் பணிசெய்துகொண்டிருந்த மகனை வரச்சொன்னார்கள். “வீடியோ காலில் வாருங்கள். இங்கிருந்தே கொள்ளிவைத்துவிடுகிறேன். நீங்கள் தொடர்ந்து சடங்குகளைச் செய்துவிடுங்கள்” எனக் கூறினான். அதனைக்கேட்டு அவனுடைய தாய் அழுதுஅழுது கன்னங்கள் வீங்கி காய்ச்சல்வந்து மருத்துவமனையில் இருக்கிறார். அப்போதுதான் பணம் எவ்வளவு இருந்தாலும் குணம்தான் முக்கியம் என்பது தெரிந்தது. அதுமட்டுமன்று படித்ததால்தானே வெளிநாட்டுக்குச் செல்கிறான். படிக்காவிட்டால் தாய்தந்தையோடு நிலத்தையும் ஆடுமாடுகளையும் பார்த்துக்கொள்வான். இயற்கையான உணவு உண்பான். உடல் நலமும் நன்றாக இருக்கும். நாள்தோறும் கடவுளை வணங்கமுடியும். திருநீறு அணியமுடியும். கையிலும் கழுத்திலும் கயிறு அணிந்துகொள்ளமுடியும். யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக வாழமுடியும்” என்றான். “படிப்பதில் இவ்வளவு சிக்கல் இருக்கிறதா?” என்றார் கடவுள்.

“நீங்கள் பள்ளிக்கூடம் சேர்ந்தால்தான் தெரியும். காலையில் ஆட்டோவிலோ வேனிலோ உங்களை அடைத்துச்செல்லும் ஒரே நாளில் அவ்வளவுதான். நீங்கள் தனியாக ஒரு அறையில் இருந்து பழக்கப்பட்டவராயிற்றே. உங்களால் முடியுமா? அதுவும் நல்ல ஆட்டோ ஓட்டுநராக இருந்தால் தப்பித்தீர். இல்லாவிட்டால் ஆட்டுகிற ஆட்டத்தில் பள்ளிக்குச்சேர்வதற்குள் அவ்வளவுதான்” என்றான் பக்தன். “சரி! உன் புலம்பலைக்கேட்டு வந்தால் என்னையே நீ பள்ளியில் சேர்த்துவிடுகிறாய். நான் வருகிறேன்” எனக்கூறிவிட்டு கடவுள் புறப்படுகிறார்.

“கடவுளே கொஞ்சம் நில்லுங்கள். எங்கள் உணவுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்” என்றான் பக்தன். “மனிதர்களின் தேவைக்கு மேலாகவே உணவு கொடுத்துவிட்டேன். அதனை ஒளித்துவைத்துக்கொள்ளாமல் இருந்தால் ஒருவர்கூட வறுமையில் சாகமாட்டார்கள். தன்னலத்தால் திருட்டுத்தனமாக ஒளித்துவைப்பவர்களால்தான் நாள்தோறும் பலர் வறுமையால் இறக்கிறார்கள்.  இதையெல்லாம் என்னால் பார்க்கமுடியவில்லை. கோவிலுக்குள் இருப்பதே நன்றாக இருக்கிறது. அன்புடையவர்கள் மட்டுமே அங்குவருவதால் அவர்களுக்கு அருள்வது எளிமையாகவும் இருக்கிறது” என்றார் கடவுள். “அப்படியென்றால் வறுமையில் சாவது உங்களுக்குச் சம்மதமா?”எனக்கேட்டான் பக்தன்.

“நான் ஒருகதை சொல்லட்டுமா” எனக்கேட்டார் கடவுள். “சொல்லுங்களேன்” என்றான் பக்தன். ஒரு ஓட்டலுக்கு நான்குபேர் குடும்பத்துடன் செல்கின்றனர். செல்வந்தர்கள் போல நால்வர் சாப்பிட எட்டுபேர் சாப்பிடுவதுபோல் பல உணவுகளைக் கேட்டார்கள். பணிவுடன் பரிமாறப்படுகிறது. விருப்பமான உணவுகளை உண்டுவிட்டனர். மீதமுள்ள உணவை அப்படியே விட்டுவிட்டார்கள்.  கடைசியில் கட்டணத்திற்கான சீட்டினைக் கொடுத்தார்கள். இரண்டு சீட்டு இருந்தது ஒன்றில் முந்நூறு என்றும் இரண்டாவது சீட்டில் அறுநூறு என்றும் இருந்தது. மொத்தம் தொள்ளாயிரம் என்றனர். “ஏன்” எனக்கேட்டார் செல்வந்தர். “இந்த முந்நூறு ரூபாய் சீட்டு நீங்கள் உண்ட உணவிற்கு. அறுநூறு ரூபாய் நீங்கள் வீண்செய்த உணவிற்கான தண்டம்” என்றார் உணவு பரிமாறியவர் கூறினார். “ஏன்” எனக்கேட்டார் செல்வந்தர். நீங்கள் உண்ட உணவு கடவுள் உங்களுக்காக கொடுத்த உணவு . நீங்கள் வீண்செய்த உணவானது,  வேறு ஒருவருக்கான உணவு. அதனால் அதற்கு இருபங்கு கட்டணம். மேலும் இனி உங்களுக்கு இந்த ஓட்டலில் உணவு வழங்கத்தடையும் விதிக்கப்பட்டுவிட்டது. இனி தயவுசெய்து இந்த ஓட்டலுக்கு வரவேண்டாம் என்றனர். “ஏன்” எனக் கேட்டார் செல்வந்தர். “இந்த ஓட்டல் கடவுளின் கருணையால் நடைபெறுவது. எத்தனை ஏழைகளின் உழைப்பை வீணாக்கினீர்” என்றார் பணியாளர். “பொறுத்தருள்க” என்றார் செல்வந்தர். “பெரிய சொற்களையெல்லாம் சொல்லாதீர்கள். இந்த வீணான உணவை நீங்கள் விரும்பினால் கட்டிக்கொடுக்கிறோம். அதை யாராவது ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டால் உங்களை அடுத்தமுறை வரவேற்போம்” என்றார். “அப்படியா கொண்டுவந்துகொடுங்கள். யாருக்காவது கொடுத்துவிடுகிறேன்” என்றார் செல்வந்தர். புன்னகையுடன் கட்டிக்கொடுத்தனர். இப்படி ஒவ்வொருவரும் பொறுப்புடன் வாழ்ந்தால் வறுமை இருக்குமா?” எனக்கேட்டார் கடவுள். எல்லாவற்றிற்கும் நாங்களே காரணமாகிவிட்டு உன்னைக் குறைசொல்கிறோம் பொறுத்தருள்க கடவுளே” என்றான் பக்தன்.

“சரி நான் செல்லட்டுமா?”. என்றார் கடவுள். உள்ளே “குவா குவா” என்று புதிய உயிரின் ஓசை கேட்கிறது.

புதன், 11 ஆகஸ்ட், 2021

அடிப்படை உரிமைகள் ஏழு

 


அடிப்படை உரிமைகள் ஏழு

  அடிப்படை உரிமைகள் ஏழும் உங்களுக்குத் தெரியுமா? 1. அனைவரையும் சமமாக நடத்தும் உரிமை 2. சுதந்திரமாக வாழும் உரிமை 3. சுரண்டலை எதிர்க்கும் உரிமை 4. சமயத்தைத் தேர்வு செய்யும் உரிமை 5. பண்பாடு மற்றும் கல்வியைப்  பின்பற்றுவதற்கான உரிமை 6. அரசியல் நிர்ணயச்சட்டத்தை தீர்வுகளை செயல்படுத்துவதற்கான உரிமை 7. கல்வி கற்பதற்கான உரிமை.

     இந்த ஏழு உரிமைகளையும் நீங்கள் பின்பற்றுகிறீரா? பின்பற்றினீர்கள் என்றால் நீங்கள் சுதந்திரமானவர்தான். ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் பெற்ற வீராங்கனை சிந்துவின் வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள். பெற்றோர் துணை நின்றதால் எத்தனை வெற்றிகளைக் குவித்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். தம் திறமையை வெளிப்படுத்த முடிந்த விடுதலை உணர்வின் வெளிப்பாடுதான் சிறந்த வீரங்கனையாக மிளிர்வதன் காரணம். சிலர் தம் ஆற்றலை அறிவார் ; செயல்படுத்த இயலாது. சிலரால் செயல்படுத்த முடியும். ஆனால் அதற்கான முயற்சி இருக்காது.

தன்னம்பிக்கை, குறிக்கோள், திறமை இவற்றின் முதல் மூன்றெழுத்தும் அவர்களுக்கான தகுதியினை கூறிவிடும்தானே. இவை மூன்றையும் முறையாகச் செயல்படுத்தி தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த நீரஜ் சோப்ராவையும், பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மீராபாய் சானுவையும், வெண்கலப்பதக்கம் வென்ற வளைதடி அணியையும், மலியுத்த வீரர் ரவிகுமார் தஹியா, பஜ்ரங் புனியா வீராங்கனை லவ்லினாபோர்கோஹைன் அனைவரும் தம் தகுதியைப்போற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்கள்தானே. இவர்கள் அனைவரும் இவ்வேழு உரிமைகளையும் பெற்றவர்கள்.

     முதல் உரிமை, அனைவருக்கும் ஒன்றுபோலவே வாய்ப்பு. பாதுகாப்புப்படையில் சேரவேண்டுமானால் உடல்நலத்தில் சிறந்தவர் எவரும் சேரலாம். வணிகம் தெரிந்த எவரும் வணிகம் செய்யலாம். கற்றவர் எவரும் கற்பிக்கலாம். உழைக்கத்தெரிந்தவர் எவரும் உழைக்கலாம். கேட்பதற்கே மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறது. இதனை உணர்ந்து செயல்படுவதே முதல் விடுதலை.

     இரண்டாவது உரிமை, ஒரு பெண் சாலையில் தனியாக நடந்து செல்கிறார். இருவர் கிண்டல் செய்கின்றனர். தப்பித்தால்போதும் என வீட்டிற்குவந்து தம்பியிடம் சொல்கிறாள். தம்பி “யாரது? எங்கே?” எனத் திரைப்படத்தில் வருவதுபோல் இல்லாமல், “என்னிடம் ஏன் சொல்கிறாய்.” என்றான். ‘பளார்’ என அறைந்துவிட்டு “சரியான கோழை” என்கிறாள். “உன்னையே நீ காப்பாற்றிக்கொள்ளமுடியாவிட்டால் நீ எப்படி குடும்பத்தை ; நாட்டைக் காப்பாற்றப் போகிறாய். பகல் நேரம். பலரும் நடமாடும் சாலை. சத்தமாக குரல் எழுப்பினாலே போதும். அரசு 1098 என்னும் எண்ணையும் கொடுத்திருக்கிறது. பிறகு ஏன் இப்படி ஓடி வருகிறாய். பெண்ணுக்குச் சம உரிமை எனப்பேச மட்டும் தெரிகிறது. இன்று ஓடிவந்தால் நாளையும் அப்படித்தானே கிண்டல் செய்வார்கள்” என்றான். உடனே, கிண்டல் செய்த அதே இடத்திற்குச் செல்கிறாள். இருவரையும் “பளார்” என்று அறைகிறாள். அவர்கள் ஓடிவிடுகிறார்கள். தம்பி பின்னால் நின்று இப்படித்தான் ஒவ்வொரு பெண்ணும் வீரத்துடன் இருக்கவேண்டும் என்கிறான். சுதந்திரமாக வாழ்வதன் பொருளை அறிந்து தம்பிக்கு நன்றி கூறுகிறாள்.

     மூன்றாவது உரிமை, இயற்கை அனைவருக்குமான சொத்து. இதனை எவரும் கொள்ளையடிக்க உரிமை இல்லை. நீர், மணல், கல், மலை, கனிமம் அனைத்தும் மக்களுக்கானது. இதனை எவர் சுரண்டினாலும் தவறுதான். சிலர் பணத்தையும் சிலர் உழைப்பையும் சுரண்டுவர் எதுவானாலும் தவறுதான். அதனால்தான் இத்தனை மணிநேர உழைப்பு  என அரசு நிர்ணயித்து இருக்கிறது. இயற்கையாக ஓடும் நீரை குடுவையில் அடைத்து அதிக விலைக்கு விற்பது எத்தனை ஏமாற்றுத்தனம்தானே. ஆயிரம் லிட்டர் தண்ணீர் பத்துரூபாய்க்குப் பெற்று ஒரு லிட்டர் நீரை இருபது ரூபாய்க்கு விற்கும் நிலையினைக் காணமுடிகிறதுதானே. இப்படி உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்பது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலைவாங்குவது. திருமணமாகாத பெண்களை மட்டுமே வேலைக்கு வைப்பது. திருமணமான பெண் எனில் சமைப்பது ; குழந்தையைப் பார்த்துக்கொள்வது எனக் கூறுவது. பெண்கள் எனவும் பாராமல் இரவு காலம் கடந்து பணியிலிருந்து அனுப்புவது. மகப்பேறுக்கு விடுப்பு கொடுக்காமலிருப்பது ; அப்படியே கொடுத்தாலும் சம்பளப்பிடித்தம் செய்வது. இப்படி எத்தனையோ சுரண்டல்கள் உள்ளன. இவற்றைச்செய்வோர் அனைவரும் குற்றவாளிகளே. தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிட நல்லவழியில் மெதுவாகச் செல்வதே பெருமை என்று உணரவேண்டும். தண்ணீர் அனைத்தையும் விற்று பணமாக்கியவர்கள் நாளைய தலைமுறைக்குத் தண்ணீர் கிடைக்காது வாடும்நிலை ஏற்படுவதனை உணரவேண்டும். பணத்தைவைத்து வாழமுடியாதுதானே.

     நான்காவது உரிமை, எந்தச்சமயத்தையும் எவர் வேண்டுமானாலும் பின்பற்றும் உரிமை. எவருடைய தலையீடும் இல்லாமல் எந்தக்கடவுளையும் வணங்கும் உரிமை. மன அமைதியைத் தருவதற்கும் நாட்டில் அமைதி நிலவுவதற்கு சமயம் துணையாக நிற்கவேண்டும். அதற்கான சுதந்திர உரிமை.

     ஐந்தாவது உரிமை, முன்னோர் மரபினைப் பின்பற்றுவதில் உரிமை. முன்னோர்கள் காரணமறிந்தே பழக்கவழக்கங்களை வரையறுத்தார். அதனை உணர்ந்து பின்பற்றவேண்டும். அவற்றை மறந்து புதிய வழக்கங்களுக்கு ஆட்பட்டதனாலேயே நோய்கள் பெருகி வருந்துவதனைப் பார்க்கமுடிகிறது. அவ்வாறே விருப்பம்போல் விரும்பிய கல்வியினைப் படிப்பதிலும் உரிமை. யாரையும் கட்டாயப் படுத்தக்கூடாது. இன்றுகூட ‘தானே’ என்னுமிடத்தில் பதினைந்து வயது சிறுமியை ‘நீட்’ தேர்வுக்குப் படித்தே ஆகவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்கள். தாய்க்கும் மகளுக்கும் நடந்த சண்டையில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் தாயைத்தள்ளிவிடுகிறாள் மகள். தலை கட்டிலின்மீது பட்டதும் ரத்தம் தெறிக்கிறது. தாய் இறக்கிறாள். எத்தனை கொடுமை. கட்டாயப்படுத்துவதால் ஒரு குடும்பம் என்ன நிலைக்கு மாறிவிடுகிறது. எனவே, ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் கல்வியைப் பயில்வதற்கான உரிமை.

     ஆறாவது உரிமை, அரசியல் நிர்ணயச்சட்டம் செயல்படுத்தப்படவேண்டிய நிலையினைப் பின்பற்றும் உரிமை. நாட்டை வழிநடத்தும் சட்டதிட்டங்களை எவர் அவமதித்தாலோ, பின்பற்றப்படாவிட்டாலோ அதனை உணர்த்துவதற்கான உரிமை.

     இந்த ஆறு உரிமையுடன் ஏழாவது உரிமையாகச் சொத்துரிமை இருந்தது. ஆனால், இந்தச் சொத்துரிமையைத் தவறாகப் பயன்படுத்தி அளவுக்கு மீறிய சொத்துக்களைச் சேர்த்தனர். அரசுக்குத்தேவையானபோது சாலை, தொடர்வண்டி போக்குவரத்து பாலம், தொழிற்சாலை, என ஏதேனும் ஒரு நாட்டு நலனுக்காக ; மக்களின் வேலை வாய்ப்புக்காக ; அந்நிய இறக்குமதியைக் குறைப்பதற்காக ; அந்நிய ஏற்றுமதியை ஊக்குவிக்க என அரசு பல திட்டங்கள் வைத்திருக்கும்தானே. நாடு வல்லரசாவதனைப் பிறநாடுகள் விரும்புமா? அதனால் யாருக்காவது காசுகொடுத்து போராட்டம் நடத்தி நாட்டுநலனைக் கெடுத்துவிடுவர். பணத்திற்கு ஆசைப்பட்டு, “அரசு தரும் நிலத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டோம்” எனத் தங்கள் அரசையே எதிர்ப்பர். எனவே இந்தச் சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து 1978 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அதனால் ஆறாக மட்டுமே இருந்தது. ஆனால் குழந்தைகளின் கல்வி குறித்து எண்ணிய அரசு அதற்கான உரிமையை ஏழாவது உரிமையாகக் கொண்டுவந்தது.  

     ஏழாவது உரிமை:  சில குழந்தைகள் கற்கவும் ; சில குழந்தைகள் பணிக்குச் சென்று உழைப்பதும் ஏற்றத்தாழ்வாகும். எனவே, அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க அரசு ஆவன செய்யவேண்டும். இச்சட்டம் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் நாள்முதல் நடைமுறைக்குக்கொண்டு வரப்பட்டுள்ளது.  எனவே, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. இதுவே கல்வி உரிமை.

     இந்த ஏழு உரிமையினை அனைவரும் அறிந்து செயல்படுத்தினால் நாடு வல்லராசாகும். பின் என்ன நாட்டு மக்களும் வல்லரசர்தானே.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

கடவுளுக்கு உங்களைப் பார்க்கவேண்டுமே

 


கடவுளுக்கு  உங்களைப் பார்க்கவேண்டுமே

“யாராவது காப்பாத்துங்க” எனச் சொல்லி முடிப்பதற்குள் மூழ்கி விடுகிறான் ஒரு சிறுவன் அவனுடன் விளையாடியவன் திரும்பிப்பார்ப்பதற்குள் கைமட்டும் ஆடிக்கொண்டிருந்தது. உடனே மற்றொருவன் அந்தக் கையைப் பிடித்துவிட்டான். ஆனால் அவனையும் இழுத்துவிட்டான் முதலில் மூழ்கியவன். மூன்றாவது ஒருவன் கைகொடுக்க, அவனும் உள்ளுக்கு இழுக்கப்பட்டான். கடைசியாக இவர்கள் மூவர் விளையாடுவதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் கையைக்கொடுக்காமல் தலைமுடியைப் பிடித்து இழுத்தான். ஒவ்வொருவருவராய் வெளியில் வந்தார்கள். முதலில் சென்றவன் மயங்கிக்கிடந்தான். தண்ணீர் தெளித்து கன்னத்தில் தட்டி வயிற்றை அழுத்தி போனஉயிரை ஒரு சிறுவன் கொண்டுவந்துவிட்டான். ஒருவர்பின் ஒருவர் மூழ்கினாலும் ஒருவர் மற்றொருவரை விடாமல் இருந்ததுதான் ஒவ்வொருவரும்செய்த புண்ணியம். கடைசியில் இருந்த சிறுவனை அனைவரும் தெய்வமாகவே பார்த்தார்கள். ஆம், அந்த நான்கு சிறுவர்களும் வெளியூரிலிருந்து கோவிலுக்கு வந்தவர்கள்.

கோயிலுக்குப்பக்கத்தில் வயல்வெளி. கொஞ்சமாக சேற்றுநிலத்தில் தண்ணீர். தாய் தந்தை செல்லவேண்டாம் எனக் கூறினாலும் கேட்காமல் சென்றனர். அங்கு மகிழ்ச்சியாக விளையாடியபோது நடந்த நிகழ்வுதான் இது. அந்நிகழ்வுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால்தான் அந்தக்கோவிலில் கூழு கொடுத்தார்கள். கூழினை விரும்பாது மூவர் ஓடிப்போனார்கள். சிறுவன் மட்டும் கூழ் குடித்தான். அதனால், அம்மன் அருள்தான் இந்தச்சிறுவனாக வந்து எங்களைக் காப்பாற்றியது எனத் தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டாடினர். தாயும் தந்தையும் காப்பாற்றிய சிறுவனுக்கு கண்ணேறு கழித்தனர். சென்றவாரம் நடந்த நிகழ்வு இது.

 “கோவிலுக்குச் சென்று வா” எனப் பெரியோர்கள் கூறினாலும் இளையோர்கள் “நான் வரல” என்கிறார்கள். என்ன செய்வது? பெற்ற பாவத்திற்காக பெற்றோரே கோவிலுக்குச் சென்று பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என அர்ச்சனை செய்கின்றனர். உள்ளத்தை மென்மையாக மாற்றும் கலை பக்திக்குத்தானே உண்டு. மகிழ்ச்சி வெளியே கிடைக்கும் பொருளா? உள்ளிருந்து வருவதுதானே மகிழ்ச்சி.  உணர்வுகள் எத்தனை அருமையானவை. அதனை இன்று இளைஞர்கள் கைப்பேசிகளிடம் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். எப்போதாவது அவர்கள் மன அமைதியுடன் இருப்பதைக் காணமுடிகிறதா? எப்போதும் கைப்பேசியில் பதற்றத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது கண்ட நிகழ்ச்சிகளைக்கண்டு மனதைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அவர்களை மாற்றவேண்டியது பெரியோர்கடமைதானே.

உடைமைகளும் பதவிகளும் பெறுவதற்காக உழைப்பவர்கள்கூட மன அமைதிக்காகக் கோவிலுக்குச் செல்வதனைக் காணமுடிகிறது. எனவே, நாள்தோறும் கோவிலுக்குச்செல்லவேண்டும். நடைபயிற்சியும் மனப்பயிற்சியும் நலம்தரும். எல்லா உயிரினங்களையும் விட அழகாக, அறிவாக மனிதனைப் படைத்த கடவுளுக்கு நன்றி கூற வேண்டாமா? நன்றியுணர்வுக்காக இன்னொரு இனிய நிகழ்ச்சி ஒன்றைக் கூறட்டுமா?

ஒரு யானை பள்ளத்தில் விழுந்து எழமுடியாமல் தவிக்கிறது. அந்தப்பக்கம் பொக்லைன் எந்திரம் ஓட்டிவந்த ஒருவர் யானை தவிப்பதைப் பார்க்கிறார்.  கை போன்ற அள்ளும் அந்த கருவியை பின் பக்கமாகத் திருப்பி யானையின் பின்னேமுட்டி தூக்கிவிடுகிறார். யானை மேலேறிவிடுகிறது. மேலேறி வந்தயானை உடனே அந்த இடத்தைவிட்டுப்போய்விடவில்லை. யானை அந்த எந்திரத்தை திரும்பிவந்து முட்டி அன்பை வெளிப்படுத்துகிறது. யானை எப்படி தலையை ஆட்டுமோ அந்த பொக்லைன் ஓட்டுநரும் அந்தக்கருவியை ஆட்டுகிறார். என்ன அருமையான நிகழ்ச்சி. இதுவும் யாரோ படம்பிடித்த அருமையான நிகழ்வுதான். நன்றியுணர்வுக்கு இதனைக் கூறலாம்தானே?

     பாரா ஒலிம்பிக் என்னும் ஒரு போட்டி. மாற்றுத்திறனாளிக்காக நடைபெறும்போட்டி. இதில் எத்தனைத்துணிவுடன் போட்டி போடுகிறார்கள். அனைத்து உறுப்புகளையும் இயல்பாகக் கொண்டவர்கள் சிலர் சோம்பலால் தண்ணீர் கூட எடுத்துக்கொடுக்க பிறரை அழைப்பர். இந்நிகழ்வை வீடுகளில் பார்க்கலாம்தானே. எனவே, கடவுளுக்கு நாளும் நன்றி கூறும் பழக்கத்தினை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும்

     கோயிலுக்கு எதற்குப் போகவேண்டும். கோவிலுக்குச் சென்று நீங்கள் இறைவனைப் பார்க்கவேண்டும் என்பதற்காக அன்று. கடவுளுக்கு உங்களைப்பார்க்கவேண்டும் எனத்தோன்றும்தானே.

     உங்களுக்காக மட்டுமே நீங்கள் படைக்கப்படவில்லை. எத்தனைபேர் உங்களால் பயன்பெறவேண்டியிருக்கும் என அறிவீரா? ஒரு சிலர் இலட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள், பலர் ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள். இன்னும் பலர் நூற்றுக்கணக்கான ; பத்துக்கணக்கான மக்களுக்கு வேலைகொடுக்கிறார்கள். ஏன் ஒருவரை வாழவைத்தாலும் அது எவ்வளவு பெரிய பெருமை. அப்படி சிலர் வேலை கொடுப்பதற்காகப் பிறந்திருப்பார்கள் ; சிலர் வேலை செய்யப் பிறந்திருப்பார்கள். இருவரும் பெருமைக்குரியவர்கள்தான். கடவுள் யாருக்கு என்ன கடமை கொடுத்திருக்கிறார் என்பதை உணரமுடியாதே !

     குளத்தை வெட்டினால் மழைநீர் தேங்கும். குளம் கட்ட வேண்டிய இடத்தில் மணலை அள்ளிவிட்டாலோ, வீடுகட்டி விட்டாலே மழைநீர் என்னாகும்?. அதுபோலத்தான், கடவுளின் கருணை. ஏற்றுக்கொள்ளும் வகையில் கருணையோடு வாழவேண்டும். எப்போது யாருக்குக் என்ன கிடைக்கும் எனக் கூறமுடியாது. எவர் வழியாவது நன்மை நிகழும். அந்த ஒருவர் நீங்களாகக் கூட இருக்கலாம்தானே.

     அனைத்து உயிர்களும் கடவுளின் படைப்பு என்பதனை உணர்ந்தாலே கடவுள் உங்களை கவனிக்கத்தொடங்குவார். ஆனால் உண்மையான கருணையாக இருக்கவேண்டும். யாரேனும் ஏழையைப் பார்த்து ‘உச்’ கொட்டிவிட்டு கார் கண்ணாடியை மேலேற்றிவிட்டு படம்பார்த்துக்கொண்டு செல்வதில்  என்ன இருக்கிறது. துளியேனும் பயனுண்டா. அப்படி பலபேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நான் படித்த ஒருநிகழ்வைக் கூறினால் நீங்களே வியப்பீர்கள்.

     ஒரு வடை விற்கும் சிறுவன் தொடர்வண்டியில் ஏறினான். (சமோசா நம் உணவன்று என்பதால் வடைக்கு மாற்றிவிட்டேன்) அவனைப் பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த இளைஞன் பக்கத்தில் அழைத்தான். “ஏன் தம்பி இவ்வளவு கஷ்டப்படுகிறாயே. என்னைப்போல் படித்திருந்தால் மாதம் இருபத்தைந்தாயிரம் சம்பாதிக்கலாமே” எனக்கேட்டான். உடனே அந்த சிறுவன் “நானும் படித்திருக்கிறேன். இந்த வேலை பிடித்திருப்பதால் செய்கிறேன்” என்றான். “சரி! ஒரு நாளைக்கு எத்தனை வடை விற்பாய்?” எனக் கேட்கிறான் இளைஞன். “ஒரு வண்டிக்கு இருநூறு வடை விற்றுவிடுவேன். ஒரு நாளைக்கு இருபதுவண்டி. நாலாயிரம் வடை விற்றுவிடுவேன்” என்றான். “அப்படியா ! என வாயைப்பிளந்துமூடி “எவ்வளவு பணம் இலாபம் கிடைக்கும்” எனக் கேட்கிறான். “ஒரு வடைக்கு ஒருரூபாய்” என் முதலாளி கொடுப்பார் எனச்சிறுவன் கூற இளைஞன் “நான்தான் சிறுவனிடம் பாடம் கற்க வேண்டும்” என நினைக்கிறான். வெற்று சொற்களை மட்டுமே சொல்வதை விட்டுவிட்டு முடிந்த செயலை ஆற்றுவதில்தான் பெருமை இருக்கிறது என்பதனை கூறாமல் கூறிச்செல்கிறான் சிறுவன்.

“நம்மால் இது முடியுமா? முடியாது” என அந்தச் சிறுவன் சென்ற பாதையையே பார்த்துக்கொண்டிருக்கிறான். கடவுளின் கணக்கினை அறிவார் யார்?

 

 

 

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

இந்தியா உலகுக்கு வழிகாட்டும்

 


உலகுக்கு வழிகாட்டும் இந்தியா

இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் எல்லாம் அடிதடிதான். ஆனால், இங்குமட்டும் அமைதியாக வாழமுடிகிறதே எப்படி? இதுதான் புண்ணியபூமி. எண்ணிப்பாருங்கள் நமது முன்னோர்கள் கற்றுக்கொடுத்த பாடம் அப்படி.

     வீரச்சிறுவர்களுக்கு விருதளிக்கும் விழா நடந்துகொண்டிருக்கிறது.  விருதுவாங்கவந்த குழந்தைகளைக்கண்டு விருதளிக்கும்விழாவிற்கு வந்தோர் வியப்படைந்தனர். யார் இவர்கள் எலும்பும் தோலுமாய்? என கேட்டபோதுதான் தெரிந்தது. அந்தக் குழந்தைகள், ஏரியின் நீரைக் கடத்திச்செல்ல செய்யப்பட்ட குழாய்களையே வீடாகக் கொண்டவர்கள் என்பது. இவர்களுக்கு ஏன் வீர விருது.  அந்த சின்ன வட்டத்திற்குள் இவர்கள் வாழ்க்கை வட்டம் அமைந்துள்ளதே அதற்காகவா? என்றுதானே கேட்கிறீர்கள். இல்லை. அப்படியென்றால் விருதுக்கு ஆயிரக்கணக்கானோர் தகுதியாகிவிடுவார்கள். சுனாமி வெள்ளத்தின்போது வீடுகளில் இருந்தவர்கள் எல்லாம் மாடிக்கு ஓடிப்போய் உயிரைக்காப்பாற்றிக்கொண்டார்கள் நினைவிருக்கிறதா?. ஆம் ! அந்த நேரத்தில் விமானத்திலிருந்தும் உலங்கு (ஹெலிகாப்டர்) ஊர்தியிலிருந்தும் உணவுப்பொட்டலங்களை வீசினார்களே நினைவிருக்கிறதா?. ஆம் ! அந்நேரத்தில் மாடியில் விழாமல் வெள்ளத்தில் விழுந்த பொட்டலங்களை எடுத்துக்கொடுத்த குழந்தைகள்தான் இவர்கள். அதற்காகத்தான் இந்த விருது. அவர்களின் உண்மையான அன்பினை அரசு பாராட்டுவது சிறப்புதானே !

     ஒட்டிய வயிறுடன் நிற்கும் அந்தக் குழந்தைகளிடம், “நீங்கள் உணவுப்பொட்டலங்களையெல்லாம் எங்களுக்குக் கொடுக்கிறீர்களே. நீங்கள் சாப்பிடவில்லையா?” என மாடியில்நின்றுகொண்டு பசியில்தவித்த ஒருவர் கேட்கிறார். “நீங்க பசிதாங்க மாட்டீங்க சாமி. எங்களுக்குப் பட்டினி பழகிவிட்டது” எனக் கூறி சிரித்த முகத்துடன் அடுத்த பொட்டலத்தை எடுக்க தண்ணீருக்குள் பாய்ந்தான் அந்த வீரச்சிறுவன். இங்கு, “யார் சாமி?” என்றுதானே எண்ணுகிறீர்கள். உண்மைதான். எத்தனையோ இயல்பான நாட்களில் எல்லாம் அவர்கள் சோறுகேட்டார்கள். இவர்கள் துரத்திவிட்டார்கள். ஆனால், இன்று அவர்கள் கேட்காமலே இவர்கள் சோறு போடுகிறார்கள். கடவுள் எப்போதும் யார் வழியாகவே படி அளக்கிறார். பாடமும் அளிக்கிறார்தானே. இப்படிப்பட்ட மண் நம் மண். நம்புகிறீர்களா? இல்லையா? மேலே நடந்த நிகழ்வினைப் படம்பிடித்துக்காட்டியவர் ஒரு சிறந்தசொற்பொழிவாளர். நீங்கள் நம்பினால் நன்றி. முன்னரே நம்பியிருந்தால் மிக்க நன்றி.

     இந்தப்பொன்னான பூமியில் விளைவதை உண்டுகொண்டே இந்நாட்டினை இழிவாகப் பேசுவோரைக்கண்டால்தான் கவலையாக இருக்கிறது. பெற்றதாயையே குறைசொல்லும் மகனை என்னென்பது?. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் திறமையைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு அவரைக் கைதுசெய்தது. மொட்டை அடித்தது. கோணியில் ஆடைசெய்து அணியச்செய்தது. செக்கிழுக்க வைத்து சாட்டையில் அடித்தது. கயிறு திரிக்கவைத்து கைகளைப் புண்ணாக்கியது. புழுக்கள் நெளியும் உணவைக் கொடுத்தது.

நாள்தோறும் பலருக்கு உணவிட்டு வேலைகொடுத்து மகிழ்வித்த பெருமகனை இவ்வாறெல்லாம் இழிவுபடுத்தியது ஆங்கிலேய அரசு. தன்மானத்துடன் எதிர்த்தவர்களை எல்லாம் பறவைகளைச் சுட்டுத்தள்ளியதுபோல் தள்ளினர். பறவைகளாவது பறக்கமுடியும். ஆனால், விடுதலை வீரர்களை (கை, கால்களில்) சங்கிலியால் பிணைத்திருந்தனர். தன்னலம் பெரிதென எண்ணியிருந்தால் வக்கீல் தொழிலில் பெரும் பணக்காரராக வாழ்ந்திருக்கலாம். மக்களை அடிமை நிலையிலிருந்து காக்கவேண்டும் என எண்ணினார். அதனால் கொடுமைக்கு உள்ளானார். வக்கீல் தொழில் செய்யக்கூடாதென்று உரிமையைப் பறித்துக்கொண்டனர் ஆங்கிலேயர்கள். அரிசி கடையில் வேலைசெய்து அரிசியினைக் கூலியாகப் பெற்றார். அதனைக்கண்டு பொறுக்கமுடியாமல் அவருக்கு வேலைக்கொடுத்த கடைக்குப் பூட்டுபோட்டனர். இப்படி வாழ்நாள் முழுதும் தலைவணங்கி வாழவேண்டிய தலைவரை இழிவுபடுத்தி மகிழ்ந்தனர். கப்பலோட்டிய தமிழர் வழியில் தேசத்திற்காக தனது இன்ப வாழ்வை துன்பமாக்கிக்கொண்டவர்கள் பலர்.

உலகையே ஆண்ட தமிழினம் ; கடல் கடந்துசெல்ல கற்றுக்கொடுத்த தமிழினம் ; கோவில்களையும் அணைகளையும் கட்டி உலகமே வியக்கவாழ்ந்த தமிழினத்தை ஆங்கிலேயர்கள் வஞ்சகத்தால் அடிமையாக்கினர். தமிழர்கள் வீரத்தைக்கண்டு மிரண்டவர்கள் ஆங்கிலேயர்கள். அதனால்தான் தங்களால் எதிர்க்கமுடியாத நிலையில் பல நாட்டவருடன் கூட்டுசேர்ந்து சதிசெய்து வீழ்த்தினர். திப்புசுல்தானை வெல்லமுடியாத ஆங்கிலேயர்கள் நெப்போலியனின் துணைகொண்டு வீழ்த்தினார்கள். ஆனால், அதற்குப் பின் தீரன் சின்னமலையுடன் போரிட்டு தோற்றோடினார்கள். நம் முன்னோர்கள், மாவீரன் நெப்போலியன் எனப்பாடம் சொல்லிக்கொடுத்தார்களேயன்றி ‘மாவீரன்’ தீரன் சின்னமலை எனப் பாடம்சொல்லிக்கொடுக்க மறந்தனர்.

ஒவ்வொருவரும் தேசியகீதத்தை நாள்தோறும் பாட வேண்டும். தேச உறுதிமொழியை நாள்தோறும் ஒரு முறையாவது முழங்கவேண்டும். அப்பொழுதுதான் தேசப்பற்றுவளரும். தேசப்பற்று வளர்ந்தால்தான் நாட்டினை முன்னிறுத்த வேண்டும் என உழைக்கும் எண்ணம் ஏற்படும். குடும்பமும் நலம்பெறும். நாடும் நலம்பெறும்.

தேசியகவி இரவீந்திரநாத்தாகூருக்கு ‘சர்’ பட்டம் என்னும் உயரிய பட்டத்தை வழங்கினார். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற படுகொலையில் அப்பாவி மக்களைக் கொன்றான் டயர். ஈவு இரக்கமற்ற அச்செயலைக்கண்ட ‘தேசியகவி’ அந்தப்பட்டத்தைத் திருப்பிக்கொடுத்தார். ஒவ்வொரு குடிமகனும் தம்மால் இயன்ற செயலைச்செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும். வெளிநாடுகளுக்கு இது பொறுக்குமா? பொறுக்காது. அதனால்தான் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த பெண்களுக்கு தொலைக்காட்சி, குழந்தைகளுக்கு விளையாட்டு, இளைஞர்களுக்குப் போதை, தவறான உணவுப்பழக்கம்  என தீய பழக்கங்களை இறக்குமதி செய்துவருகின்றனர். மக்கள் அறியாமையால் சிக்கிக்கொண்டு உடல் வலிமையை இழந்துவிடுகின்றனர். 

தங்களுடைய நாட்டு மக்களுக்கு, விளையாட்டுப்பயிற்சியளிக்க தொழில் நுட்ப விஞ்ஞானிகளையும் வல்லுநர்களையும் தொழில் நிறுவனங்களையும், வானவியல் தொழில்நுட்பத்தையும் கொண்டு பயிற்சியளிக்கின்றனர். உலக நாடுகள் வளர்வதில் தவறில்லை. ஆனால், நம்மை வளரவிடாமல் செய்வது எத்தனை தவறு. இதனை இன்றைய தலைமுறை நன்குணரவேண்டும். உங்கள்மீது வீசப்படும் வலைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது. உங்கள் நலமே முக்கியம் ; உங்கள் குடும்பம் முக்கியம் ; உங்கள் தலைமுறை முக்கியம் என்பதனை உணரவேண்டும்

உலகமே இன்று இந்தியாவை வியந்துபார்க்கிறது. அதற்குக்காரணம் வேகம் மட்டுமன்று ; விவேகமும்தான்.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

தியான்சந்த் – ஹாக்கியின் கதாநாயகன்

 


தியான்சந்த் – ஹாக்கியின் கதாநாயகன்

     தியான்சந்த் ஆடக்கூடிய  ஹாக்கி (வளைதடி) கட்டையை ‘மந்திரக்கட்டை’ என நினைத்தனர். அதனை வாங்கி உடைத்தும்பார்த்தனர். அதில் ஏதாவது பந்தை ஈர்க்கும் காந்தம் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். ‘இல்லை’யென அறிந்தபின்னர் அவருடைய விளையாட்டுத்திறனைக்கண்டு தலைவணங்கினர். அந்த அளவிற்குப் பந்தை எடுத்துச்செல்லும் திறன் வியக்கத்தக்கது. எதிர்நிலையில் நிற்கும் வீரர்களுக்குப் பந்து மாயமாவதே தெரியாமல் திணறுவர். வெறுங்காலோடு ; சீரற்ற விளையாட்டுத்திடலில் ; அந்நியர் ஆண்ட இந்தியாவில் இத்தனை திறமைகளுடன் ஒருவர் விளையாடினார் எனில், அவரை இந்தியர் ஒவ்வொருவரும் தலைமேல்வைத்துத்தானே கொண்டாடவேண்டும்.

இவருடைய ஆட்டம் ஐரோப்பியநாடுகளுக்கு அச்சமூட்டியது. இந்தியா அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கியது. அன்று அவர்தொடங்கிய ஆட்டமே இன்று தேசிய விளையாட்டாக்கும் பெருமையினைக் கொண்டதாகத் திகழ்கிறது. இப்போட்டியில் இந்தியாவைக் கண்டு அனைத்து நாடுகளும் அஞ்சின. 1928 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் நெதர்லாந்தை  மூன்றுக்கு ஒன்று என்னும் புள்ளிக்கணக்கில் வென்று சாதனைப் படைத்தது. பின்னர் 1932 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இருபத்துநான்குக்கு ஒன்று என்னும் புள்ளிக்கணக்கில் வென்று சாதனைப்படைத்தது. 1936 ஆம் ஆண்டு எட்டுக்கு ஒன்று என்னும் புள்ளிக்கணக்கில் வென்று சாதனைப்படைத்தது. இவ்வெற்றிக்குப் பின்னால் நின்றவர் தியான்சந்த். இவர் விளையாடிய பன்னிரண்டு ஒலிம்பிக் போட்டியில் முப்பத்துமூன்று கோல்கள் அடித்தார்.

1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற விளையாட்டில், உலகமே கண்டு அஞ்சிய ஜெர்மனியின் தலைவர் ஹிட்லர் தியான்சந்தின் ஆட்டத்திறனில் மயங்கினார். தியான்சந்தை அழைத்து ஜெர்மனியின் குடிமகனாக மாறவும் தரைப்படையின் உயர்ந்தபதவியான கர்னல் பதவியைத் தருவதாகவும் கூறினார். “உங்கள் நாடு மிஞ்சிப்போனால் என்ன பதவியை அளித்துவிடப்போகிறது. என்னைப்போல் உன்னை உயர்த்தும் கடமையினை உன்னுடைய நாடு செய்யாது” என்றார். அதற்கு தியான்சந்த “என்னுடைய நாட்டிற்கு என்னை உயர்த்துவது மட்டும் பொறுப்பில்லை. அங்கு கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு என் நாட்டைப் உயர்த்தும் பொறுப்பு இருக்கிறது” எனக் கூறினார். கொடுங்கோலரான ஹிட்லர்,  தியான்சந்தின் ஆட்டத்தை மட்டுமில்லாமல் நாட்டுப்பற்றைக் கண்டு வியந்துநின்றார்.

ஐரோப்பியர்களின் அடிமைப்பிடியில் இருந்த இந்தியர்கள், தியான்சந்த் விளையாட்டில் ஐரோப்பியர்களை திணறடிப்பதைக் கண்டு மகிழ்ந்தனர் ; பெருமை கொண்டனர்.

மேஜர் தியான்சந்த் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் இருபத்தொன்பதாம் நாள் இராஜபுத்திரவம்சத்தில் அலகாபாத்தில் பிறந்தார். தந்தை இராணுவத்தில் பணிசெய்தார். பணிமாற்றம் பெற்றதால் உத்தரப்பிரதேச மாநில ஜான்சியில் வளர்ந்தார். ஹாக்கி வீரரின் மகனாகப் பிறந்ததால் இயல்பாகவே அவ்விளையாட்டில் திறமையுடையவராக விளங்கினார். இதனை அவர் உணராமல் மலியுத்தம் குத்துச்சண்டை விளையாட்டுகளில்தான் ஆர்வமுடையவராக விளங்கினார். பதினாறு வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் நடைபெற்ற ஹாக்கிப்போட்டியில் இவருடைய திறமையை அனைவரும் கண்டு வியந்தனர்.

தியான்சந்த் இரவு நேரத்தில் பணிக்குப்பின் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவார். சந்திரன் வெளிச்சத்தில் விளையாடிய அவரை அனைவரும் ‘சந்த்’  என்றே அழைத்தனர். என்ன அழகான பெயர்பொருத்தம் பாருங்கள்.

புதிதாகத் தொடங்கிய இந்திய ஹாக்கி கூட்டமைப்பு 1928 ஆம் ஆண்டு தியான்சந்தைத் தேர்வு செய்து ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பியது. அங்கு நடைபெற்ற ஐந்து போட்டியில் பதினான்கு கோல்கள் அடித்தார். 1932 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இவருடைய சகோதரர் ரூப் சிங்கும் பங்கேற்றார். 1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்குத் தலைமைப்பொறுப்பேற்று கலந்து கொண்டார். இப்போட்டியில் இரண்டாவது சுற்றில்  வெறுங்காலோடு ஆடிவெற்றிபெற்றார்.  

 

ஹாக்கியின் மந்திரவாதியாகவே மதிக்கப்பட்டார். 1926 முதல் 1949 வரை அவர் விளையாடிய 185 போட்டிகளில் 570 கோல்களை அடித்தார்.

     தியான்சந்த் பிறந்த ஆகஸ்டு 29 ஆம் நாள் தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. தலைநகரில் உள்ள தேசிய அரங்கம் “மேஜர் தயான் சந்த்’ தேசிய அரங்கமாக ஒளிர்கிறது.  

1928 இல்  இந்தியா ஒலிம்பிக்கின் எட்டுத்தங்கப்பதக்கங்களில் ஏழினை வெற்றிப்பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து இந்தியாவின் பெருமையினை உலகறியச்செய்தார். அவர் 1979 ஆம் ஆண்டு திசம்பர் மூன்றாம் நாள் மறைந்தாலும் 1956 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கிப் பாராட்டியது.  

     இப்பொழுது சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அவருடைய பெயரால் விருது தரப்படுகிறதென்றால் பொற்குடத்தில் வைரக்கல் வைப்பதுபோலத்தானே.

சனி, 7 ஆகஸ்ட், 2021

ஆகட்டும் பார்க்கலாம். ஆட்டத்தின் முடிவிலே - தியாகிகள்

 



ஆகட்டும் பார்க்கலாம். ஆட்டத்தின் முடிவிலே  - தியாகிகள்

 ஒரு குடிகாரன் குடித்துவிட்டு நடுசாலையில் அமர்க்களப்படுத்திக்கொண்டிருக்கிறான். கட்டுப்படுத்தமுடியவில்லை. காவல்காரர் வருகிறார். அவருடைய கையைப்பிடித்துக்கொண்டு நடனமாடுகிறான். அவருக்கு அடிக்க மனம்வரவில்லை. அடித்துவிட்டால் இறந்துவிடுவதற்கும் வாய்ப்புண்டு. குடும்பத்திற்கு யார் விடைசொல்வது என்னும் அச்சத்தின் காரணமாகவும் பொறுத்துக்கொண்டிருக்கலாம்தானே. யாருக்கும் அடங்காமல் அங்கேயே ஆடிக்கொண்டிருந்தவன் திடீரென காவலர் கையை உதறிவிட்டு ஓடினான். “என்ன ஆயிற்று?” என எல்லோரும் திரும்பிப்பார்க்கையில் அங்கு ஒருபெண்மணி தூய்மை செய்யும் ஆயுதம்தாங்கி வேகமாக முன்னேறி வருகிறாள். “யாரம்மா நீ” எனக் காவலர் கேட்க, அதோ அந்த மைக்கல் ஜாக்சனோட மனைவி என்றாள். எல்லோரும் சிரிப்பை வெளிப்படுத்தாமல் “வீட்டுக்குக் கூட்டிட்டுப்போம்மா” என்றனர். குடும்பத்திற்க்காகத் தன்னையே கரைத்துக்கொள்ளும் பெண்களுக்கு குடியின் கொடுமை வேறு. பாவம்தானே?

     டோக்கியோவில் நடந்த ஹாக்கிப்போட்டியில் முதலில் ஜெர்மன் கோல் அடித்தது. பின்னர் இந்தியர்கள் கோல் அடிக்க ஒன்றுக்கு ஒன்று எனப்புள்ளிகள் இருந்தன. அடுத்து இரண்டு கோல்களை ஜெர்மனி அடிக்கவே இந்தியா ஒன்றுக்கு மூன்று என்னும் நிலையில் பின் தங்கியது. அடுத்து, இந்தியா இரண்டு கோல்களை அடிக்கவே மூன்றுக்கு மூன்று என்றானது. அடுத்து, இரண்டு கோல்களை இந்தியா அடிக்க ஐந்து மூன்று என்னும் நிலையாயிற்று. ஜெர்மனி அணி மிகுந்த வேகத்துடன் நாற்பத்தெட்டாவது நிமிடத்தில் ஒருகோல்போட்டது. இந்தியா ஐந்து ; ஜெர்மனி நான்கு என்னும் நிலையில் இருந்தது. போட்டியைக்காண்போருக்கும் அனைவருக்கும் ஆர்வம் கூடிற்று. ஜெர்மானியர் அடித்தகோலை கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுக்கிறார். இந்திய அணியினர் வெற்றிக்கனியைப் பறித்தனர். நாற்பத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம். 1980 மாஸ்கோவில் தங்கம் வென்ற இந்தியா இன்று வெண்கலத்தைப் பெற்றிருக்கிறது. பதக்கக்கனவு நிறைவேறியது. தொடக்கத்தில் புள்ளிகளை இழந்தாலும் முடிவில் வெற்றி கிடைத்தது. இந்த அணியின் தலைவர் மன்பிரீத்சிங் “பதினைந்து மாதக் கடுமுயற்சியின் பலன் இது” எனக்கூறி, இந்த வெற்றியினை கொரோனோவில் மக்களைக்காத்த மருத்துவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் காணிக்கையாக்கினார்.

     முதல் கதையில், நாயகனுக்கு முதலில் வெற்றிக்களிப்பு. பின் தோல்வி. இரண்டாவது நிகழ்வில்,  முதலில் நாயகர்களுக்குத் தோல்வி பின் வெற்றி. எது வரலாற்றில் நிலைபெறும் என்பதனை  அறிவோம்தானே. எந்தச் செயலுக்குப் பின்னால் உண்மையும் உழைப்பும் உள்ளதோ அதுவே வரலாறாகும் ; வழிகாட்டும்.

     முதலில் சிறுமையைப் பார்த்தோம் ; இரண்டாவது பெருமையைப் பார்த்தோம். இனி அருமையைப் பார்ப்போமா?

     இந்த வாரம் தாய்ப்பால்வாரம் . ஆகஸ்டு ஒன்று முதல் எட்டு வரை. தாய்ப்பாலின் அருமையினைக்கூட கொண்டாடவேண்டியிருக்கிறது. “மழை நீரைப் போற்றுங்கள்” எனக் கூறுவதைப்போல “தாய்ப்பாலினைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்” எனச்சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது கொடுமைதானே. கலப்படப்பொருட்களை ; மசாலா பொருட்களை ; இனிப்புகளை (சாக்லெட்) ; பனிக்கூழினை (ஐஸ்க்ரீம்) தூய்மையில்லாத கடைஉணவுகளை உண்டு உடலைக்கெடுத்துக்கொள்ளும் பெண்களின் குழந்தைகள் என்ன செய்வார்கள். அத்தகைய பெண்களின் குழந்தை பாலுக்கு அழும்தானே. அத்தகைய குழந்தைகளுக்காகவே தாய்ப்பாலைச் சேமித்துவைக்கும் மருத்துவமனைகள் இருக்கின்றன. சில கொடையுள்ளம்கொண்ட தாய்மார்கள் தம்குழந்தைக்குக் கொடுத்து எஞ்சியபாலை கொடையளித்தனர் ; அளிக்கின்றனர். இந்நிகழ்வு தாயுள்ளத்தின் அருமையினை எடுத்துக்காட்டுகிறதுதானே? இது கலியுக தியாகம்.

     தாயுள்ளம் கொண்டு எத்தனையோ ஆண்கள் சமைக்கின்றனர் ; உணவிடுகின்றனர். நளபாகம் , பீம பாகம் என அவர்கள் சுவையுடன் சமைப்பதனைப் பாராட்டுவதனையும் காணமுடிகிறது. சரி அதற்கென்ன? என்றுதானே கேட்கிறீர். உணவளிப்பவரை தாயாக எண்ணுவதுதானே தமிழர் இயல்பு. அவ்வாறு எண்ணி மடிந்த வீரனைத் தெரியுமா? அவர்தான் தீரன் சின்னமலை.

     பெயரைக் கூறினாலே வீரம் பொங்கும் பெயர். சிலையைக் கண்டாலே வீரம்பொங்குகிறதே. அடுத்தமுறை தீரன் சின்னமலையின் சிலையைக் கண்டால் உற்றுப்பாருங்கள். அந்நியர்கள் அஞ்சியதில் தவறில்லை எனத்தோன்றும். திப்பு சுல்தானை வீழ்த்திய ஆங்கிலேயர்கள், தீரன் சின்னமலையை எளிதாக வென்றுவிடலாம் என எண்ணி போரிட்டனர். அறச்சலூர் போரில் தீரன்சின்னமலை கர்னல் ஹாரிஸை துரத்தியடித்தார். “இத்தகைய வீரனை எதிர்கொள்ளமுடியாது” என எண்ணிய ஆங்கிலேயர்கள் மிரண்டனர். துரோகிகள் யாரென ஆய்ந்தாய்ந்து அவர்கள்வழியாக அப்பாவித்தமிழர்களை வென்றனர் ; கொன்றனர். அப்படித்தான் தீரன் சின்னமலையின் சமையல்காரனுக்கு ஆசையைமூட்டி காட்டிக்கொடுக்கச்செய்தனர். 1805 ஆம் ஆண்டு ஜூலை முப்பத்தோராம் நாள் தீரன் சின்னமலையை உடன்பிறந்தோரையும் தூக்கிலிட்டுக் கொன்றனர். நேருக்குநேர் நின்று போர்செய்யாமல் துரோகத்தால் கொன்றவர்களை என்னென்பது?

     பக்கத்து நாடுகளில் கொள்ளையடித்துச்சென்றாலும் அவர்களைத் தடுத்து “எங்களுடைய செல்வங்களை நீங்கள் கொள்ளையடிக்கக் கூடாது” எனக்கூறி அஞ்சாமல் எதிர்நின்ற தீரம் தீரன்சின்னமலைக்கு உண்டு.  மறக்கருணையோடு அறக்கருணை கொண்டவராகவும் தீரன்சின்னமலை விளங்கினார். “சென்னி மலைக்கும் சிவன்மலைக்கும் இடையே சின்னமலை இருக்கிறது. அதுதான் செல்வங்களை எடுத்துக்கொண்டது. என உங்கள் தலைவரிடம் சொல்லுங்கள்” என வீரத்துடன் எதிரிகளை எதிர்கொண்ட பெருமையே தமிழர்பெருமைக்கு எடுத்துக்காட்டு.

     துரோகம் என்பதனை அறியாத தமிழ் மன்னர்கள் எளிதில் ஏமாந்திருக்கின்றனர். உன் மனதையே உன்னால் அறியமுடியாதபோது எப்படி எதிரிகளை அறிந்துகொள்ளமுடியும் என ஆங்கிலேயன் தூரோகத்தின் பாடத்தைக் கற்பித்தான். தமிழர்கள் அந்நியர்களுக்கு எப்படி அன்புடன் வாழவேண்டும் எனக் கற்பிக்க, அந்நியர்கள் எப்படி அன்புடன் வாழக்கூடாதெனக் கற்பித்தனர்.

     தொடக்கத்தில் எது நன்மை? எது தீமை? என்று அறியாமல் ; எந்தப்பக்கம் நிற்கவேண்டும் என்பது புரியாமல் மக்கள் தவித்தனர். ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகி நல்லோர்களைக் காட்டிக்கொடுப்பதா? விடுதலை வீரர்களின் பக்கம் நின்று நாட்டு விடுதலைக்காகப் போராடுவதா? என எண்ணினர். கோடாலிக்காம்புகளையும் தந்தங்களையும் ஒன்றாக ஒப்பிடுவது சரியில்லைதானே.

     இப்படி மக்களைக்காக்க தமிழ் மன்னர்களும் , மன்னர்களைக்காக்க மக்களும் போராடிய போராட்டமாகவே விடுதலைப்போராட்டம் அமைந்தது. எண்ணற்றதியாகிகளின் உழைப்பெல்லாம் வீணாகவில்லை. இன்று கல்வி கற்பதற்கும் பணிக்குச் செல்வதற்கும் முழுமையான விடுதலை கிடைத்திருக்கிறது. தொய்வின்றி உழைத்தால் வறுமை ஓடும் ; வளமை கூடும் என்பதில் ஐயமில்லை.  அவர்களுடைய வீழ்வு அடுத்த தலைமுறைக்கான வாழ்வாக அமைந்திருக்கிறதுதானே?

     ஆட்டத்தின் தொடக்கம் எப்படி இருந்தாலும் முடிவைக்கொண்டுதான் உங்கள் திறமையினை உலகம் அறியும் என வாழ்ந்துகாட்டியோர் பலர். வெற்றிபெறாதவரை வீண்முயற்சி என்பதும் வெற்றி பெற்றுவிட்டால் விடாமுயற்சி என்பதும் உலகத்தின் இயல்புதானே? எனவே தொடக்கத்தைக் குறித்த கவலையின்றி இலக்கினை அடைய துணிந்து நிற்போம் ; வழிகாட்டியாக வாழ்வோம்

    

    

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

என் மனைவி ஊருக்குப் போயிட்டா

 



“என் மனைவி ஊருக்குப் போயிட்டா”

“என் மனைவி ஊருக்குப் போயிட்டா” எனச் சொல்வதில் ஆனந்தப்படுவோர் எத்தனைபேர் . சிலபேர் மட்டுமே கை உயர்த்துகிறீர்கள். மற்றவர்கள் அமைதியாகப் பக்கத்தில் பார்க்கிறார்கள்.  கைதூக்கியவர்களின் மனைவிமார்கள் இவர்கள் பக்கத்தில் இல்லை என்றுதானே. அந்த மனைவிமார்கள் இவர்களுக்காக எதையோ வீட்டில் சமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

     மனைவி ஊருக்குச்செல்லும் நாளில்கூட, அன்றைய உணவு சமையலறையிலும் குளிரூட்டியிலும் வைக்கப்பட்டிருப்பதனைக் கூறிவிட்டேசெல்வாள். அப்படியென்றால் எத்தனை அன்பு என்பதனை எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா?

     பெண்ணுக்கு மட்டுமே கயிறில்லாமல் கட்டிப்போடும் வித்தை தெரிந்திருக்கிறது. அத்தகைய அறிவினைப் பெற்றிருப்பதால்தான் பெண்ணைக்கேட்டே ஆண்கள் செயல்படுவதனைக் காணமுடிகிறது.

     ஆண்கள் நடுரோட்டில் பெண்களை அடிப்பதனைப் பார்க்கமுடிகிறது. ஆனால், அத்தகைய ஆணை பெண்கள் திருப்பி அடிப்பதில்லை. காரணம் என்ன என்று யோசித்திருக்கிறீர்களா? அடியைக் கொடுப்பதைவிட அடியைப் பொறுத்துக்கொள்வதற்குத்தானே வீரம் வேண்டும்.

     விடுதலைப் போராட்டத்தைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். உடல்வலிமை பெற்றிருந்தாலும் தம்மைவிட உடல்பலம் குன்றிய ஆங்கிலேயரிடம் அடிவாங்கிக்கொண்டு கொடியினைக் கூட விடாமல் “எவ்வளவு வேண்டுமானலும் அடி ; கையிலிருந்து விழாது கொடி” எனத் துணிந்து நின்றவீரம் போற்றத்தக்கதுதானே. புழு பூச்சிகூட எதிரியை எதிர்த்துப்போராடும். ஆனாலும் விடுதலை வீரர்கள் திறமை இருந்தும் ; ஆயுதம் இருந்தும் ; அடிவாங்கியது எத்தனை பொறுமை. அத்தகைய பொறுமையானகுணம் படைத்தவர்களை அடிக்க வேண்டுமென்றால் அவன் விலங்கினும் கீழாகவன்றோ இருந்திருக்கவேண்டும்.

     மனைவியை அடிப்பவனுக்கும் இது பொருந்தும்தானே. அவர்களுக்காக 1098 என்னும் எண் எப்பொழுதும் விழிப்புடன் காத்திருக்கிறது. இருப்பினும் கணவன், குடும்பம் என்னும் அமைப்பிற்காக எவ்வளவு பொறுமையுடன் புகாரளிக்காமல் செயல்படுகிறார்கள்.

     அத்தனை பொறுமையுடன் விஞ்சிநிற்பதால்தானே, குழந்தைகளுக்கு வகுப்பெடுக்க பெண்களே ஆசிரியர்களாக முன்வருகிறார்கள். ஒரு குழந்தையாக இருந்தாலும் ; ஒருவகுப்புக்குரிய குழந்தைகளானாலும் ஈடுகட்ட பெண்ணால்மட்டுமே முடிகிறது. நலமான குழந்தையானாலும் உடல்நலம் குறைந்த குழந்தைகளாயினும் செவிலித்தாயானவள் எவ்வளவு அழகாகப் பார்த்துக்கொள்கிறாள்.

      ஒரு ஆண் வெற்றிபெறுவதற்காக உழைக்கும் உழைப்பைவிட பெண்ணுக்கான போராட்டம் பெரிதுதானே. ஒரு பெண் வெற்றிபெற்றால் அது நல்லூழ் (அதிர்ஷ்டம்) எனக்கூறிவிடுவோரும் உண்டு. அதற்காக உழைத்த உழைப்பை (பெற்றோரோ/ கணவரோ) உடனிருந்தோர் மட்டுமே அறிவர். எனவேதான் ஒருமுறை வெற்றிபெறுவதனைவிட ஒவ்வொரு முறையும் வெற்றிபெறவேண்டும் என்பார் ஏவுகணை நாயகரும் முன்னாள் குடியரசுத்தலைவருமான அப்துல்கலாம்.

     விண்வெளியில் ராக்கெட்டை செலுத்துவதுபோல் ‘பெண்கல்வி’யானது பெருமுயற்சியாக இருந்தநிலைமாறிவிட்டதுதானே. அதனால்தான் நன்றாகக் கல்விகற்ற பெண்ணாயினும் கணவனின் தவறினை நேரடியாகச் சொல்வதில்லை. ஏனென்றால் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கணவனுக்கு இருக்காது ; இருந்தாலும் தன்முனைப்பு அவனை ஏற்றுக்கொள்ளவிடாது. அதனால்தான் ‘இவன் எது கூறினாலும் கேட்கமாட்டான்” எதற்குச்சொல்லவேண்டும் எனப் பெண்கள் அமைதியாகவே இருந்துவிடுவதனைக் காணமுடிகிறது. “தலைக்கவசம் அணிந்துகொள்ளுங்கள்” எனக் கூறினாள். “அதெல்லாம் தேவையில்லை” எனக்கூறிவிடுவான். தான் மறந்ததை ஒத்துக்கொள்ளமாட்டான். வழியில் போக்குவரத்துக்காவலரிடம் சிக்கித்தண்டம் கட்டியபிறகு அசடுவழிவான்.

     பெண்களை தேனீக்களுடன் ஒப்பிடலாம்தானே. ‘இ’கரம் பெண்பால் விகுதிதானே. ரேவதி, செல்வி, தேவி, ராணி இப்படி சொல்லிப்பாருங்கள் புரிந்துவிடும். இலக்கியப்பார்வையிலும் தேனீதான். ‘தேனீ’ எப்படி உழைக்குமோ அப்படித்தானே பெண்கள் உழைக்கிறார்கள். எந்தத் தேனீயாவது நான் இவ்வளவு கடினப்படுகிறேன் என்று கூறியதுண்டா. அது இயல்பான ஈக்களைக் காட்டிலும் கடினமாக உழைப்பதால்தானே அது கெடாத தேனை உருவாக்கிவிடுகிறது. சாகாமருந்தாகும் தேனை உணவாகக்கொடுக்கும் அரிய பூச்சாக இருக்கும் தேனீ எத்தனை அழகு. அப்படித்தானே பெண்ணும் வாழ்நாள் முழுதும் உணவினைச் சமைத்துத்தருகிறாள்.

     விடுப்பின்றி கடுப்பின்றி அடுப்பில் இடுப்பொடிய வேலைசெய்யும் துடிப்புடைய பெண்களால்தானே குடும்பம் குடும்பமாக இருக்கிறது.

     கடவுளும் மனைவியும் ஒன்றுதானே. எவ்வளவு கொடுத்தாலும் திட்டுவது அவர்களைத்தான். அவர்கள்மட்டுமே காதுகொடுத்து கேட்பார்கள், பிறரிடம் குறைகளைச் சொல்லமாட்டார்கள். அப்படியே கேட்காவிட்டாலும் அவர்களிடம் சொல்வதில் ஏதோஒரு மகிழ்ச்சி இருக்கிறதுதானே? மனக்குறை நீங்கிவிடுகிறது. தெளிவாக செயல்படமுடிகிறது.

     பெண்ணுக்காகவே வாழும் ஆண் போருக்குச் செல்கிறான். போரில் சண்டையிட்டு முகத்தில் காயப்படுகிறான். மீண்டும் தன் மனைவியின் முகத்தைக்காண வெட்கப்படுகிறான். மனைவி அவனை ஏற்பாளா? என்னும் அச்சத்துடன் ஒதுங்கி நிற்கிறான். அவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த தலைவி முன்பிருந்த காதலைவிட பல மடங்கு பெருகிய காதலோடு அவனை அணைத்துக்கொள்கிறாள். அப்படியென்றால் மனைவியின் பேரன்பு பெருமையுடையதுதானே. இக்காட்சி தமிழ் இலக்கியத்தில் களிறு என்னும் ஆண் யானையையும் பிடி என்னும் பெண்யானையையும்கொண்டு விளக்கப்படும். களிறானது போரில் எதிரிகளுடைய கோட்டையை தந்தத்தால் தகர்த்துவிடுகிறது. எதிர்த்துநின்ற யானைகளை வீழ்த்துகிறது. இதனால் தந்தம் உடைந்து அழகுகுன்றி இருக்கிறது. பிடி என்னும் தன் பெண்யானையைக் காண வெட்கப்படுகிறது. என்பது எத்தனை அழகான காட்சி. விருப்புடன் பெண்யானை நோக்குகிறது. இது எத்தனையோ பாதுகாப்புபடை வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுதான்.

     அத்தகைய பெண்யானையைப் போன்றவர்களே பெண்கள். எத்தனை இடர்வரினும் அன்பு நிறைந்த கணவனுடன் இல்வாழ்க்கையில் சிறப்புற்று விளங்கும்பேறு சிறப்புடையது. ஆணுக்கும் இக்கூற்று பொருந்தும் என்பதில் ஐயமில்லை.

 

     இனி “என் மனைவி ஊருக்குப் போயிட்டா” எனச் சொல்வதற்குமுன் ஒருமுறை உறவுகள் அனைத்தையும் விட்டுவந்த தியாகத்தை எண்ணிப்பார்ப்பீர்கள்தானே?

         

 

 

               

புதன், 4 ஆகஸ்ட், 2021

பிர்ஸா முண்டா - வனம் காத்த வல்லவர்

 


பிர்ஸா முண்டா 


“விடுதலை ! விடுதலை ! விடுதலை ! என மூன்று முறை சொல்லிப்பாருங்கள். உங்கள் மனம் புத்துணர்வு பெறும் முடங்கிக்கிடப்பதில் பெருமையில்லை.  உழைத்துச் சோர்வதில் சிறுமையில்லை. சந்தனம் வாழும்வரை வாசம் தருகிறது. தென்றல் வீசும்வரை இன்பம் தருகிறது. மலர்கள்  வாடும்வரை வாசம் தருகிறது. ஆறானது வாழும்வரை தாகம் தீர்க்கிறது. அப்படி வாழும்வரை , ஆறாக ; சந்தனமாக ; தென்றலாக ; மலர்களாக நாட்டின் நலனுக்காக வாழ்ந்த நல்லோர்கள் குறித்தே இன்று சிந்திக்க இருக்கிறோம்.

மகாகவி பாரதியார் பாடிய “பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் எனப் பாடியது போலவே “நீர் நமது ; நிலம் நமது வனம் நமது” என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார,.  பிர்ஸா முண்டா, மலைவாழ் மக்களில் ஒருவரான விடுதலைப் போராட்டவீரர். ராஜஸ்தான் மாநிலத்தில் மலைவாழ் மக்கள் இயக்கத்தை உருவாக்கினார். 1875 ஆம் ஆண்டு பிறந்தவர்.  சுக்ணா முண்டா, கர்மி ஹட்டு இவரது பெற்றோர்.

திறமையாகப் படித்த இவரை பெற்றோர்கள் பள்ளியில் சேர்க்க எண்ணினர். ஆனால் அங்கு படிக்கவேண்டுமானால் ஆங்கிலேயர்கள் தங்கள் சமயத்திற்கு மாறவேண்டும் எனக் கூறினர். படித்தாகவே வேண்டுமே என ‘பிர்ஸா டேவிட்’ என மாறினார். பின்னர் சர்தார் வல்லபாய்படேல் இயக்கத்தில் சேர்ந்தார். ஆங்கிலேயருக்கு அடிமையாகும் மலைவாழ்மக்களைக் காக்கவேண்டும் என எண்ணினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1895 ஆம்ஆண்டு தமது பத்தொன்பதாம் வயதிலேயே  மக்களைத் திரட்டிப் போராட்டத்தைத் தொடங்கினார். “ஆங்கிலேய அரசு முடியட்டும். நம் அரசு மலரட்டும்” என்பதே அவருடைய முழக்கமாக நின்றது. இத்தகைய வீர முழக்கமிட்டு ஓர் இனத்தையே நாட்டின் வளர்ச்சிக்காக வழிநடத்திய பெருமையுடைய இவருடைய படம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்புதானே.

ஆங்கிலேய அரசாங்கம் எப்படியெல்லாம் நிலத்தைக் கொள்ளையடிக்கலாம் என எண்ணிக்கொண்டிருந்தது.  வாரிசு இல்லாத நிலத்தை தனக்குச் சொந்தம் என அறிவித்தது. வாரிசுகளைத் தத்து எடுக்கவும் தடைவிதித்தது. எதைப்பயிரிடவேண்டும் என ஆங்கில அரசே முடிவு செய்து மக்கள் வறுமையில் சாக வழி செய்தது.

“வனங்கள் அனைத்தும் இனி ஆங்கில அரசுக்கே சொந்தம்” என்னும் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதனை எதிர்த்துப் போராடியவர்தான் இந்த பிர்ஸா முண்டா. வணிகம் செய்ய வந்தவர்கள் இயற்கை அன்னை கொடுத்ததை உரிமை கொள்வது கொடுமை எனப் போராடினார். ஜமீந்தார்களையும் நிலவுடைமையாளர்களையும் மிரட்டியும் பொருள்கொடுத்தும் அச்சுறுத்தியும் தன்வசமாக்கியது ஆங்கிலேய அரசு.  “தனி மரம் தோப்பாகாது” என மக்களைத் திரட்டி நாட்டைக்காக்கப் போராடினார். மண்ணைக் காக்கப் போராடியதால் இவருடன் மலைவாழ் மக்களும் இணைந்து போராடினர். “மண்ணின் தந்தை’ எனக் கொண்டாடினர்.

ஆங்கிலேயர்கள், இந்தியர்களை எப்போதும் வெல்ல முடியாத அளவிற்கு வீரத்தில் குன்றியே இருந்தனர். ஆனால், ஆயுதங்களைக்கொண்டே இந்தியர்களை வீழ்த்தினர்.. துப்பாக்கி, பீரங்கி குறித்து அறியாத மக்களிடம் வீரத்தைக் காட்டியவர்கள் ஆங்கிலேயர்கள். அறநெறியாகப் போர்செய்தே பழக்கப்பட்ட இனமாக இருந்த இந்தியர்கள், அக்காலத்தில் புதிதாகக் கண்டுபிடித்த இத்தகைய வெடிக்கும் ஆயுதங்களைப் புரிந்துகொள்ளமுடியாமலே தோற்றனர். இதனைக் கண்டு பலரும் அஞ்சினர். அஞ்சுவது இயல்புதானே. ஆனால் அஞ்சாது போராடிய வல்லவர்களும் இருந்தனர். அவர்கள் முண்டாவுடன் இணைந்து போராடினார். 1899 ஆம் ஆண்டு கொரில்லா முறையில் ஆங்கிலேயர்களை எதிர்கொண்டனர். தம்மிடமிருந்த வில், அம்புகளைக் கொண்டு போராடினர்.  ‘உல்குலான்; என இப்போர் அழைக்கப்பட்டது.  உல்குலான் என்பது புரட்சியைக் குறிக்கும். 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் நாள் இவரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். கொடுமையாகத் தண்டித்தனர்.

ஆங்கிலேயர்கள் மக்களை அச்சுறுத்தசெய்த முதல் காரியம், மக்களிடம் செல்வாக்கு மிகுந்தவர்களை மிகவும் இழிவாக நடத்துவது. சாலையில் ஆடைகளின்றி அடித்து இழுத்துச்செல்வது, சாட்டையால் அடிப்பது, எட்டி உதைப்பது, மக்களுக்கு நடுவே தூக்கிலிடுவது. தலையை வெட்டுவது எனப் பல கொடுமைகள் செய்தனர். ஒவ்வொரு ஊரிலும் எதிர்த்த அல்லது ஒன்றுகூட்டிய தலைவர்களையே இவ்வாறு கொடுமை செய்தனர். ஆனால், நயவஞ்சகமாகச் சிலர் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சொந்த தாய்நாட்டுக்கு எதிராக நின்றனர் ; வீரத்துடன் போராடிய தலைவர்களைக் காட்டிக்கொடுத்து பணத்தையும் ; பதவியையும் பெற்றனர். அத்தகைய துரோகிகளால் வீரர்கள் தோல்வியடைந்தனர் ; உயிரிழந்தனர்.

சிறையில் கொடுமைக்குள்ளான அவ்வீரர் இரத்த வாந்தியெடுத்து கடும் நோயால் பாதிக்கப்பட்டார். இக்கொடுமைகளால் இறந்ததனை மக்கள் அறிந்தால் போராட்டம் எழக்கூடும் என எண்ணிய ஆங்கில அரசு “காலரா பெருந்தொற்று நோயால் இறந்தார்” என அறிவித்தது. அப்போது அவருடைய வயது இருபத்தைந்துதான். இருபத்தைந்து வயதிலேயே நாட்டுப்பற்று கொண்டு மக்களின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களைப் போற்றுவது நம்கடமைதானே. அவர் அன்றுபோராடியதால்தான், பஞ்சமர் நிலத்தை யாரும் கையகப்படுத்தக்கூடாது என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உழைப்பவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் எனவும் போராடியவர்.

       நம்முடைய நாடு எத்தனை ஆண்டுகள் ஆயினும் இத்தகைய பொன்னான மனிதர்களின் உழைப்பினைப் போற்ற மறந்ததில்லை. இன்று அவருடைய பெயரில் கல்லூரி திறக்கப்பட்டிருக்கிறது. ஜார்கண்ட் விமான நிலையத்துக்கே அவருடைய பெயர்தான் சூட்டப்பட்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் – இது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்

என்னும் மகாகவியின் சொற்களுக்கு செயல்வடிவமாக நின்றவர் இந்த பிர்ஸாமுண்டா. தேசத்தைக்காக்கப் போராடியமுன்னோர்களைப்போல் தேசத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்.

       மானம் மட்டுமல்ல தேசமும் உயிரை விடப்பெரிது என்பதனை உணர்த்துவோம்.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

நீங்கள் யார்?

 


“நீங்கள் யார்?”

“நீங்கள் யார்?” என்று யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள். வீட்டில் வந்துகேட்டால் “நான் இன்னாரது மகன் அல்லது மகள் ; இன்னாரது தந்தை அல்லது தாய்” என்று யாரேனும் ஒருவரை மையமிட்டு அடையாளம் காட்டுவீர். சாலையில் கேட்டால், கேட்பவர் யாரென்று பார்த்து, “எதற்காகக் கேட்கிறீர்கள்” எனக் கேட்பதுண்டுதானே? அவர் பணம் கொடுப்பவராக இருந்தால் விருப்பாகவும் ; பணம் கேட்பவராக இருந்தால் வெறுப்பாகவும் விடை சொல்வதும் இயல்புதானே. காகிதப்பணம்தான் குணத்தைத் தீர்மானிக்கும் திறமுடையதாக இருக்கிறது. ஒரு அலுவலகத்தில் இதே கேள்வியைக் கேட்டால் “இந்தப் பதவி” எனக்கூறுவதனையும் காணமுடிகிறது. கையூட்டு பெறுபவர்தான் பதவியினையும் பெயரினையும் சொல்ல அஞ்சுவர். அதனால்தான் யாரேனும் தவறுசெய்தால்,  “உன் பெயர் என்ன?” என்று  கேட்டுப்பாருங்கள். உடனே, கோபம் பலூனில் வெடித்துவரும் காற்றுபோல் “ஏன்…கேட்கிறாய்?” என வேகத்துடன் ஒலிக்கும்.

“நீங்கள்” என்பது அத்தனை வலிமையுடைய சொல். உங்கள் ஊரிலிருந்து நகரத்திற்குச் செல்லும்போது “நீங்கள் யார்?” எனக் கேட்டால்  என்ன சொல்வீர்கள். ‘இந்த ஊரன்” எனச் சொல்வீர். வேறு மாநிலத்திற்குச் சென்றிருக்கிறீர். என்ன சொல்வீர்?. “இந்த மாநிலத்தன்” என்று சொல்வீர். வேறு நாட்டிற்குச் சென்றிருக்கிறீர். என்ன சொல்வீர். உங்கள் நாட்டின் பெயரைத்தானே சொல்வீர். அப்படியென்றால் உங்களுடைய பெரிய அடையாளம் உங்கள் நாடுதானே? அந்த நாட்டை நீங்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறீரா?. ‘இல்லை’ என்றாலும் ‘ஆம்’ என்றாலும் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க. எத்தனை மதிப்பெண் என்று கேட்கிறீரா? ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண் போட்டுக்கொண்டு எத்தனை மதிப்பெண் என நீங்களே கணக்கிட்டுக்கொள்க. அந்த மதிப்பெண்தான் உங்களுக்குரிய மதிப்பெண். மதிப்பெண் கூடுதலாக இருந்தால் நீங்கள் உங்களை பெருமிதமாகக் காட்டிக்கொள்வதில் வல்லவர் என நீங்களே தோளில் தட்டிக்கொள்ளுங்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால், நேர்மையாக ஒப்புக்கொண்ட உம் நற்குணத்திற்காக நீங்களே உங்களைப் பாராட்டிக்கொள்ளுங்கள்.

வினா 1. உங்களுடைய நாடு இறைமை நாடு – அப்படியென்றால்?

“இறைமை” என்பது இத்தகைய பெருமை உடையது என வரையறுக்க இயலாத பெருமையினை உடையது. தானேதன்னை இயக்கிக்கொள்ளும் முழுமையினை உடையது. பிறநாடுகளின் தலையீடு இல்லாமல் முழுமையாகச் செயல்படும் திறமுடையது

வினா -2 : உங்கள் நாடு குடியரசு நாடு - அப்படியென்றால்?

குடிமக்களால் இயக்கப்படுவது. குடிமக்களே தம் தலைவரைத் தேர்வுசெய்து ஆளச்செய்வது. பரம்பரையால் வருவதில்லை.

வினா -3 : உங்கள் நாடு பொதுவுடைமை நாடு – அப்படியென்றால் ?

தன்னுடைமைக்கு எதிரான சொல் பொதுவுடைமை. தனக்காகப் பொருளைவைத்துக்கொள்ளாமல் அனைவருடனும் பங்கிட்டுக்கொள்வது.

வினா -4 : உங்கள் நாடு மதச்சார்பற்ற நாடு – அப்படியென்றால்?

அனைத்து மதத்தினருக்கும் ஒரே வகையான உரிமையினையும் சுதந்திரத்தையும் அளிப்பது.

வினா -5 : உங்கள் நாடு சமத்துவத்தைப் பின்பற்றும் நாடு – அப்படியென்றால்?

சாதி, மதம், நிலை என எவ்வகை வேறுபாடுமின்றி ஒரே நிலையில் அனைவரையும் நோக்குவது.

வினா -6 : உங்கள் நாடு அரசியல் உரிமை உடைய நாடு – அப்படியென்றால்?

எத்தகைய மனிதராக இருந்தாலும் அவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு. ஒவ்வொரு ஓட்டிற்கும் சமமான மதிப்பெண் அளிக்கப்படுவது.

வினா – 7 : உங்கள் நாடு நீதிமன்றத்தையே உச்சநிலையாகக் கொண்டு செயல்படுவது – அப்படியென்றால்?

அனைவர்க்கும் அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி ஒரே வகையான நீதியினை வழங்குவது.

வினா – 8 : உங்கள் நாடு சகோதரத்துவத்தைப் பின்பற்றுவது – அப்படியென்றால்?

அனைத்து மக்களையும் உடன் பிறந்தவராக எண்ணி அன்பு பாராட்டுவது.

வினா- 9 : மக்களாட்சியை மூன்று தூண்களே தாங்கிக்கொண்டிருக்கிறது . அப்படியென்றால் ?

சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை என மூன்றும் மக்களைக் காக்கச் செயல்படுவது.

வினா – 10 : உங்கள் நாட்டிற்கென ஒரு உறுதிமொழி உண்டு – அப்படியென்றால்?

இந்தியா என் நாடு . இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்.

என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்நாட்டின் பழம்பெருமைக்காகவும், பன்முக மரபுச்சிறப்புக்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன். என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள் எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன். எல்லோரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன். என் நாட்டிற்கும் என் நாட்டும் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன். ஜெய் ஹிந்த்.

இப்போது நீங்கள் நூற்றுக்கு நூறு பெற்றிருந்தால் உங்களுடைய மதிப்பினை நீங்கள் முழுமையாக உணர்ந்துவிட்டீர்கள். அப்படி உங்கள் குழந்தைகளையும் பெரியோர்களை மதித்து வாழக் கற்றுக்கொடுத்துவிட்டால்போதும். நாட்டில் சோம்பல் இருக்காது ; குடி இருக்காது ; முதியோர் இல்லம் இருக்காது ; வறுமை இருக்காது.

இந்தக்கருத்துக்களை எல்லாம் குழந்தைகள் காதில் நூல்போல் நுழையவிடுங்கள். அவர்கள் ஆடையாக்கி தங்கள் மானத்தைக் காத்து நாட்டையும் காத்துவிடுவார்கள்.

வறுமை நிலையில் வளர்ந்த குழந்தைகள் எல்லாம் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு நாட்டுக்குப் பெருமை தேடித்தந்துள்ளார்களே. சில குழந்தைகள் வறுமை நிலையிலிருந்து ஆட்சியராக, பட்டயக்கணக்கராக, மருத்துவராக வந்தார்கள் ; வருகிறார்கள் ; வருவார்கள். உங்கள் குழந்தையையும் அப்பெருமைக்குரியவரில் ஒருவராக மாற்றலாம்தானே? மாற்றிவிட்டால் நீங்கள் நீங்கள் தான்.

 

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

உழவு மட்டுமில்லை நலிந்தது

 


உழவு மட்டுமில்லை நலிந்தது

     தாய்மொழியில் பாடங்களைக் கற்பிக்கவேண்டும் என்று சொல்லாதவர் எவரேனும் உண்டா? எல்லோரும் அதற்காகப் பாடுபடுகிறார்கள். ஆனால் நடைமுறையில் நடைபெறவில்லை. எப்படி? இதற்கான சதியில் பின்னால் இருந்து யாரோ தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை. உணவில் உப்பு போன்றது, சமூகத்தில் கல்வி. அது இல்லாவிட்டால் வாழ்க்கை சுவைக்காது. ஆனால், உப்பு என்பது கெடுதியானது. உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொன்றுவிடுகிறது. அதனால்தன் இறந்தவற்றைக் கூட கெடாமல் வைத்திருக்க உப்பு பயன்படுத்தப்படுகிறது. அந்த உப்பிலும் கல் உப்பா? பொடி உப்பா? எனக் கேள்வி கேட்டு ஒவ்வொரு நாளும் இது நல்லது ! அது நல்லது ! என மக்களைக் குழப்பிவிடும் நிலையினையும் காணமுடிகிறது. யார் என்று கேட்கிறீர்களா?

இன்று வீட்டில் பெரியவர்கள் இருந்தால் பெரியவர்கள் சொல்வதைக் கேட்போம். வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் முதியோர் இல்லங்களிலும் வீட்டு மூளைகளிலும்  முடங்கித்தானே கிடக்கிறார்கள். அவர்களுக்குரிய மதிப்புடன் அவர்கள் மதிக்கப்படுகிறார்களா? இல்லைதானே. அப்படி மதிப்பதாயிருந்தால் உலகம் வெப்பமயமாகி இருக்காது ! வெள்ளம் ஊருக்குள் புகுந்திருக்காது ! முப்போகம் விளைவது கனவாகி இருக்காது ! உழவு நிலம் வறண்டிருக்காது ! உழவன் வறுமையில் உழன்றுக்கொண்டிருக்கமுடியாது ! குளங்களில் வீடுகள் கட்டப்பட்டிருக்காது ; தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்காது. இன்னும் எத்தனையோ காதுகள் சொல்லலாம். ஆனால், காது கொடுத்து கேட்பவர்கள் எத்தனை பேர்?. உங்களைப்போல் சில நல்லவர்களைத் தவிர.

உழவுத்தொழில் வேர். மற்றவை கிளைகளும் இலைகளும். மற்றதொழில்களுக்கு அடிப்படையாக வேர் போன்ற உழவுத்தொழில் உணவிடும். மற்ற தொழில்கள் இலைகள் பச்சையம் சேர்ப்பதுபோல் சேர்த்து வேருக்குப் பலம் சேர்ப்பதுபோல் உழவைக் காக்கவேண்டும். ஆனால், செய்கிறதா? அனைத்துத் தொழில்களும் வானைத் தொட முயற்சிக்கின்றனவே அன்றி உழவுத்தொழிலைக் கவனிக்க மறந்துவிட்டது.  கதிரவன் எழும் முன்னே எழும் கதிரவன்கள் உழவர்கள்தானே. மற்றவர்கள் எவ்வெவ்வாறோ வளர்ச்சியடைந்துவிடும்போது உழவர்கள் மட்டும் எப்படி ஏழையாகவே இருக்கிறார்கள். எண்ணிப்பார்க்கவேண்டும்தானே? இதற்குப் பின்னணி என்ன?

அன்றைய இளைஞர்கள் தலைவர்கள் அழைத்த பாதையில் சென்று நாட்டு விடுதலைக்குப் போராடினர். விடுதலை பெற்றனர். பின்னர் இளைஞர்களுக்கு என்ன வேலை? புதிது புதிதாகத் தொழில் தொடங்கினரா? மகாகவி பாரதியார் கூறிய ‘ஆலை அமைப்போம்.. ஊசிகள் செய்வோம்” என்றெல்லாம் பாடினாரே. எத்தனை இளைஞர்கள் முன் வந்தார்கள். நாட்டில் சட்டங்களும் வாய்ப்புகளும் குவிந்துகிடக்கின்றன. முன்வரவேண்டியது யார் பொறுப்பு? இன்றைய இளைஞர்களுக்குத் தலைவர்களாக திரைநாயகர்களே இருக்கிறார்கள். அவர்கள் கூறினால்தான் ஒரு தொழிலைத் தொடங்குவார்கள் என்னும் நிலையில் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இதை உணர்ந்து நாயகர்கள் தொழிற்சாலைகளை உருவாக்கச்சொல்லலாம்தானே? எல்லைகளில் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொருட்களை வாங்கிக்கொண்டிருப்பதுதான் இன்றைய கவலைக்குரிய நிலை. நாமே எதிரிக்குக் காசு கொடுத்தால் என் செய்வது? இதற்குப் பின்னணியில் இருப்பதுயார்?

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் யார் இத்தகைய செயல்களுக்கு எல்லாம் பின்னால் இருந்துகொண்டு செயல்படுவார்கள் என்று. ஆம், நாட்டிற்கு எதிரானவர்கள்தான். “அவர்கள் யார்?” என்று கேட்கிறீர்களா? எந்த நாட்டிலெல்லாம் தங்கள் பொருட்களை விற்பனையாக வேண்டும் என எண்ணுகிறார்களோ, எங்கே நம் நாடு வளர்ந்துவிட்டால் அவர்கள் வருமானம் குறையும் என்று நினைக்கிறார்களோ அந்த நாடுகள்தான். அவர்களே, நம் நாட்டில் உள்ளவர்களை சோம்பேறிகளாக ; போதைக்கு அடிமைகளாக ; குடிகாரர்களாக ; புகைப்பவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பசியை மறக்க இப்பழக்கத்திற்கு அடிமையானவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களையெல்லாம் காப்பாற்றுவது யார்? இளம் வயதிலேயே போதைப்பொருட்களில் சிக்கிக்கொண்டு இறப்பவர்களைக் காப்பாற்றுவது யார்? அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் காப்பது யார்? அநாதைக் குழந்தைகளை உருவாக்கும் சூழலை உருவாக்குவது யார்? இந்த இத்தனை யாருக்குப் பின்னும் பெருமுதலைகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. விழிப்புணர்வோடு பாருங்கள்.

நம் நாடு முதலிடத்தில் வந்துவிடக்கூடாதென எண்ணும் கயவர்களே அவர்கள். நாளிதழைப் புரட்டிப்பாருங்கள். சொத்தினைக் கேட்ட மகனைக் கொன்ற தந்தை ; குடிகாரக் கணவனைத் திருத்தமுடியாமல் தாயும் மகளும் தற்கொலை ; குடிப்பதைக் கண்டித்ததால் கணவன் தற்கொலை என ஒரே நாளில் ; ஒரே பக்கத்தில் வெளிவந்த செய்திகள்தான் இவை. இப்படி இறப்பவர்கள் பெரும்பாலும் இருபது முதல் நாற்பது வயதுக்குள் இருப்பவர்கள் தான். யாரால் உலகில் உள்ள நாடுகள் அனைத்து வளம் பெற்றுக்கொண்டிருக்கிறதோ அத்தகைய மக்களை தெருக்களில் மயங்கிக்கிடக்கவைத்திருக்கிறது அந்நியரின் ஆளுமை.

எப்போதிலிருந்து தொடங்கியது எனக் கேட்கிறீரா? இதற்கு இயற்கை வேளாண் அறிஞர் காலஞ்சென்ற நம்மாழ்வாருடைய சொற்களைச்சொல்கிறேன், எளிமையாகப் புரிந்துகொள்வீர்.  “ஆங்கிலேயர்கள் பாலில் தண்ணீரைக் கலக்க மாவினைக் கண்டுபிடித்தார்கள். ஆனால், தமிழர்கள் பாலில் தண்ணீரைக் கலந்துகுடித்தார்கள். தமிழர்களின் அறிவுத்திறத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயன் மாட்டின் வளத்தை அறிந்தான். இதனால்தான் இவர்கள் எவ்வளவு பஞ்சத்தை உண்டாக்கினாலும் நன்றாக விளைவித்து உடம்பைத் தேக்குபோல் வைத்திருக்கிறார்கள் என எண்ணுகிறான். எனவே, மாடுகளைக் கொல்வதற்கென்றே சாவடிகளைக் கொண்டுவருகிறான். நாடுமுழுதும் இலட்சக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டன. மாடுகள், மனிதர்கள் எதைத் தின்பதில்லையோ (புல், வைக்கோல்) அதனைத் தின்று குழந்தைகளுக்குப் பால்கொடுத்தன. மாடுகளைக் கொன்றபிறகு போனவை: குழந்தைகளுக்குப் பால் போனது ; பயிர்களுக்கு எரு போனது ; ஏர் உழும் உழவு போனது. வந்தவை : டிராக்டர் வண்டி , புகை, டீசல் எரிபொருள், குப்பை குவிதல், எந்திரங்கள். இவை அனைத்தும் இயங்க மின்சாரம். இவை அனைத்திலும் எவ்வளவும் பணம். எவ்வளவு சிக்கல்கள். இத்தனை சிக்கல்களையும் தீர்க்கும் ஒரே தீர்வாக மாடுகள் இருந்தன. அவை மிகவும் நன்றியுணர்வுடன் தன்னை வளர்ப்பவர்களுக்குத் துணைசெய்ய வருடந்தோறும் கன்றினைக்கொடுத்தது. அந்தக் கன்றினைக்கொன்று பொள்ளாச்சியில் பஜ்ஜி செய்துவிடுகின்றனர் ; அப்படியும் விலைபோகாவிட்டால் கேரளாவுக்கு அடிமாட்டுக்கு விற்றுவிடுகின்றனர். குருடனிடம் அரிக்கன் விளக்கு கிடைத்தது போல் ஆகிவிடுகிறது” என உழவுத்தொழில் நலிந்ததற்கான காரணத்தைத் தெளிவாகவும் வருத்தத்துடனும்  குறிப்பிட்டுள்ளார்.

அன்று இந்தியாவிற்குள் அவர்கள் நின்றுகொண்டு கெடுத்தார்கள். இன்று அவர்களுடைய எந்திரங்களும் பொருட்களும் எடுபிடிகளும் கெடுத்துக்கொண்டிருக்கின்றன.

விழிப்புணர்வுடன் வாழ்ந்தால்தான் உழவர்களைக்காக்கமுடியும். மாடுகளைப் பெருக்குவோம் ; உழவுத்தொழிலைப் பெருக்குவோம் ; பிற தொழில்களை உருவாக்குவோம். அதுவே நம் கடமை.