தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வெள்ளி, 30 ஏப்ரல், 2021

ஓஷோ என்னும் ஓஷன் (கடல்) - Osho is an ocean

 


ஓஷோ என்னும் ஓஷன்  (கடல்) -
Osho is an ocean

“ஓஷோ பிறக்கவும் இல்லை ; இறக்கவும் இல்லை. இந்த உலகைப் பார்வையிட்டுப் போனவன்” எனத் தன் கல்லறையில் எழுதச்சொன்ன மகான் ; புனிதன் ; மா மனிதன் ; மெய்ஞ்ஞானி ; குரு ; வழிகாட்டி ; வீரத் திருமகன். எத்தனை அடைமொழிகளுக்கும் அடங்காத கடல். மகாகுரு ஓஷோ போபாலில் பிறந்தவர். ‘சந்திர மோகன்’ என்னும் இயற்பெயரில் (11.12.1931) தத்துவம் படித்து ;  பேராசிரியராக வளர்ந்தவர். அவருடைய மெய்யறிவு உலகையே ஈர்த்தது. சரஸ்வதி பெற்றெடுத்த பிள்ளையாயிற்றே. தாயார் சரஸ்வதி பாய்ஜெயின்.  தந்தை பாபாலால் ஜெயின்.  

இவரைப் பின்பற்றுவது மிகவும் எளிமையானது. எல்லாம் சரியாக இருக்கும் நிலைக்கு உங்களைப் பக்குவப்படுத்திக்கொள்ளுங்கள் என்கிறார். சரியாக இருப்பது என்பது என்ன? என்று கேட்டுப்பாருங்கள். விடைக்காகச் சில நொடிகள் காத்திருங்கள். விடைகிடைக்காது ; கிடைத்தாலும் அனைவரும் ஏற்கத்தக்கதாக அமையாது. ஆனால் ஓஷோ சொல்லும் ‘சரி’ என்பதற்கான விளக்கம் எளிமையானது.   அமைதியான சூழலில் இருப்பதுதான் ‘சரி’ என்கிறார். ஆரவாரம், கோபம் செயற்கையானவை. அதனை விடுத்தால் வாழ்க்கை எளிதாகிவிடும் ; அழகாகிவிடும் என்கிறார்.  'கடலின் ஒரு துளியும் கடல்தான்' என்பதனை உணர்ந்துகொண்டதை உணர்த்தும்வகையிலேயே  'ஓஷோ' என்னும் பெயர் பொருந்திவிட்டதனையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.  

பிரச்சினைகளைக் கண்டு ஓடாதீர்கள் ; எதிர்க்காதீர்கள். அது எப்படியும் நடக்கப்போகிறது. அதனைக் கவனியுங்கள். அது நம்மைவிட்டு விலகிவிடும் என வழிகாட்டுகிறார்.

நாம் நினைப்பது நடக்கலாம் ; நடக்காமலும் இருக்கலாம். நடக்கவேண்டாம் என நினைத்தாலும் மரணம் நிகழப்போகிறது. அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். உறக்கம் போன்ற இயற்கை நிகழ்வுதான் மரணம் என்பதனை உணர்ந்துகொள்ளும் உள்ளுணர்விருந்தால் அச்சமில்லை என்கிறார். இன்றும் கூட நாக்பூரில் கருணையுடன் நடந்துகொண்ட நிகழ்வு நெஞ்சை உருக்குகிறது. மருத்துவமனையில் படுக்கையின்றி நாற்பது வயது நோயாளி தவிக்கிறார். மருத்துவரிடம் மனைவியும் குழந்தைகளும் கெஞ்சுகின்றனர்.  மருத்துவர் படுக்கை இல்லாத நிலையைக் கூறித்தேற்றுகிறார். அந்நிலையில் ‘நாராயண் தபோல்கர்’ என்னும்  எண்பத்தைந்து வயது நாட்டுப்பற்றுடைய முதியவர் நாற்பது வயது நோயாளிக்குத் தன் படுக்கையைக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். மூன்று நாள் வீட்டிலேயே தங்கியிருந்து இறந்தார். தான் உரிய வாழ்க்கை வாழ்ந்துவிட்டதாகவும் அந்நோயாளி வாழவேண்டும் எனக்  கூறியது எத்தனைத் தெய்வீகமான செயல்.

இருப்பு, இறப்பு என்னும் காரணங்களை அறிந்தால் வாழ்க்கை  இலேசாகிவிடும் என்றார் ஓஷோ. மனம் இலேசாகிவிடும்போது அனைத்து உயிர்களிலும் ஆனந்தத்தை உணரமுடியும். அன்பு  பிறரிடம் இருந்து வருவதில்லை. அன்பு உன்னிடம் இருந்தே பரவி உன்னிடமே திரும்பி வருகிறது. நீ மலரை எறிந்தால் பூமாலையாகவும், கல்லை எறிந்தால் காயமாகவும் வருகிறது என்கிறார்.

மரணம் அச்சப்பட வேண்டியதில்லை. அது இயற்கை நிகழ்வு.  அது இருளை போல, புதிய இடத்தைப் போல ; புதிய மனிதர்களை நெருங்குவது போல ஓர் அச்சத்தை ஏற்படுத்தும். உணர்ந்துகொண்டபின் அச்சம் நீங்கிவிடுகிறது. ‘வாழ்வின் உச்சம் மரணம்’ என உணர்ந்துகொண்டால்  துறவு மனப்பான்மை கைகூடுகிறது. இன்றும் அதற்கான சான்று உண்டு. ரிலையன்ஸ் கம்பெனியில் அம்பானியின் வலக்கரமாக விளங்கியவர் பிரகாஷ் ஷா துறவியானார். எழுபத்தைந்து கோடி ஊதியம் பெற்றவர் வேலையைத்துறந்து துறவியானது எத்தனைப் பக்குவமான செயல்.

பசியுணர்வும் பாலுணர்வும் இயற்கையானவை. அதுவே சக்தியாக நம்மைப் பாதுகாக்கிறது. இரண்டையும் முறையாகக் கையாளவேண்டும். அந்த சக்தியின்  உணர்வு  தாழ்நிலையில் பாலுணர்வாகிறது. உயர்நிலையில் தியானமாகிறது. பலர் தாழ்நிலையிலேயே தேங்கிவிடுகின்றனர். சிலர் உயர்நிலையில் தியான நிலைக்குச்சென்று உடலையும் உள்ளத்தையும் பாதுகாத்துக்கொள்கின்றனர்.

அன்று, உலகிலேயே விலை உயர்ந்த கார்  ரோல்ஸ்ராய். அதனை வாங்குவதற்குப் பணமிருந்தாலும் ; கூடுதலாக எத்தனைக் கோடி கொடுத்தாலும் வாங்குபவரின் தரம் சிறப்பில்லாமல் இருந்தால் அந்தக் காரினை ரோல்ஸ்ராய் நிறுவனம் விற்காது. அப்படிப்பட்ட கார்கள் பலவற்றை உடைமையாகக் கொண்டிருந்த பெருமைக்குரியவர்தான் ஓஷோ என்னும் தத்துவ மேதை.

ஐந்தாயிரம் மக்களுடன் பாலைவனமாக இருந்த அமெரிக்காவின் ஒரேகான் என்னும் பாலைவனத்தில் தன் அடியார்களுடன் குடியேறினார். ரஜனிஷ்புரமானது. அவருடைய முயற்சியால் பாலைவனம் சோலைவனமாக மாறியது. மக்கள் அவருடைய இயற்கை வாழ்வுடன் இணைந்து வாழ விரும்பினர். படிப்படியாக அடியார்கள் கூட்டம் பதினைந்தாயிரமாக (15000) வளர்ந்துவிட்டது. நாளும் அவருக்கான அடியார்கள் பெருகப்பெருக மதவாதிகள் மிரண்டனர். தங்களுக்கான மக்களெல்லாம் அவரிடம் சென்றுவிடுகிறார்களே என எண்ணி அவரை மிரட்டினர்.  உலகத்தையே வீடாகக் கொண்டவருக்கு நாடு என்ன தடைவிதித்துவிட முடியும். கடவுச்சீட்டைக் கிழித்துப்போட்டுவிட்டு கடவுச்சீட்டில்லாத குற்றத்திற்காக கைது செய்தனர். சிறையில் குரு இருப்பதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத சீடர்கள்  கேள்வி கேட்கத்தொடங்கினர். பிரச்சினை பெரிதாகும் என எண்ணிய மதவாதிகள் சிறையிலேயே கள்ளத்தனமாகக் கொல்ல சதிசெய்தனர். 'தாலியம்’ என்னும் விஷ ஊசியைச் செலுத்தினர் என  அவரே அவருடைய நூலில் எழுதியுள்ளார் ஓஷோ.

அன்பும் ஆன்மிக உணர்வும் கொண்ட ஓஷோவை உலகில் உள்ள அனைவருக்கும் பிடித்திருந்தது. அவரைக் கடவுளே மனித வடிவில் வந்ததாக எண்ணினர். எனவே ‘பகவான்’ எனவும் குறிப்பிட்டனர்.  இதனால் பொறாமை எண்ணம்கொண்ட மதவாதிகளின் அழுத்தத்தால் அனைத்து நாடுகளும் அவரைத் தங்கள் நாட்டிற்குள் நுழையாமல் தடுத்தன. அவருடைய விமானம் பல நாடுகளில் தரை இறக்கப்படாமலே திருப்பி அனுப்பப்பட்டது.

யோகக்கலையைக் கற்றுக்கொடுத்து நோயின்றி வாழ வழிகாட்டினார். வாழ்க்கை எவ்வாறு ஆனந்தமாக வாழ்வது என்பதனைக் கற்றுக்கொடுத்தார். யோகம் செய்து கவலையின்றி வாழ வழிகாட்டினர்.  நோயின்றி வாழ்வதற்கான பயிற்சியினைக் கற்றுத்தந்தார். உலகத்தில் பல நாடுகளில்  அவருடைய அடியார்கள் முளைத்துக்கொண்டே இருந்தனர். வாழ்க்கையின் பொருளை உணர்ந்தனர். “வானம் பூக்கொடுத்து ஆசிர்வதிக்கப்பட்ட மனிதன்’ எனக் கொண்டாடினர்.

மனிதர்கள் நல்லவர்கள். அவர்களைப் பழிக்காதீர்கள். மதம் என்னும் பெயரால் ஒடுக்கிவிடாதீர்கள் எனக் கூறி ‘ஜோர்பா’ என்னும் புதிய மனிதனை அறிமுகப்படுத்தினார். எந்தக் கட்டுப்பாடுமின்றி மகிழ்ச்சியுடன் அஞ்சாது வாழும் ஒரு பாத்திரத்தைப் படைத்தார். அப்பெயரையே உலகுக்கு அறிமுகம் செய்தார். அவ்வாறு வாழ்வதற்கான வழியையும் கற்பித்தார்.

தத்துவமேதை சாக்ரடீஸ் போல் யாருக்கும் தலை வணங்காமல் தம் கொள்கையிலிருந்து விலகாமல்  ஐம்பத்தெட்டு வயதில் மரணத்திடமும் அன்பு காட்டி ஏற்றுக்கொண்டார். (19.01.1990). ரஜினிஷ் என்னும் பெயர் உலகையே பிரமிக்கவைத்துவிட்டது. ‘ரஜினி’ என்பது இருளையும்  ‘ஈஷ்’ என்பது கடவுளையும் குறிப்பதாக அமைகிறது. ‘ரஜினி’ என்பது இருளையும் ‘நீஷ்’ என்பது ஒளியையும் குறிப்பதாக அமைந்து சந்திரனைக் குறிப்பதாகவும் அமைகிறது. சந்திரமோகன் என்னும் இயற்பெயரையே சமஸ்கிருதத்தில் அவ்வாறு மாற்றிக்கொண்டுள்ளார். எத்தனையோ புக்ஸ் (புத்தகங்கள்) எழுதிய சாமியாரின் அருமையை மடைமாற்ற எண்ணிய மதவாதிகள் ‘செக்ஸ் சாமியார்’ என அடையாளப்படுத்தினர்.

யோகி, பேச்சாளர், பொதுவுடைமையாளர் எனப்பலரும் கொண்டாடி வரும் பெருமைக்குரியவரின் புகழை அறிந்துகொண்டு  அவர்காட்டிய வழியில் ஒற்றுமையாக ; அமைதியாக ; ஆனந்தமாக வாழ்வோம். வாழ்விப்போம்.

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

நுகர்வோர் கட்டணம் - consumer charge

 நுகர்வோர் கட்டணம்

        கட்டணத்தை உரிய நேரத்தில் கட்டாததால் விதிக்கப்படும் தண்டத்தொகை,  திருப்பிச் செலுத்தும் தொகை, நிதித் தொகை என்பவை நுகர்வோர் கட்டணமாகும்.

    போக்குவரத்து, தொலைபேசி, மின்சாரம் , கட்டுமானம், வங்கி, காப்பீடு, மருத்துவ சிகிச்சை அனைத்தும் அடங்கும். 

    நுகர்வோருக்கும்  சேவை அளிப்போருக்கும்   சட்டப்படியான ஒப்புதல்  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  இவ்வகையான ஒப்புதல்களே பொருளை வாங்குவதற்கான நம்பிக்கையை ; ஆர்வத்தை  நுகர்வோரிடம் ஏற்படுத்துகிறது. இதனை உறுதி செய்வதற்காகவே நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. மக்களின் நியாயமான தேவைக்கேற்ப  சட்ட திருத்தங்களும்  அவ்வப்போது செய்யப்பட்டு வருகிறது. 

    நுகர்வோர் குறைகளைத் தீர்த்துக்கொள்ளும்  பொருட்டு நுகர்வோர் குறை தீர் மன்றங்களை அணுகலாம்

நம் உரிமை அறியாது  பணத்தை இழத்தல் அறியாமை.  தெரிந்து பணத்தை அளிப்பது அறிவுடைமை. தெரியாமல் அளிப்பது அறியாமை.

1. விலை அதிகமாக விற்றனர் எனில் விலைக்குறிப்பிட்ட பொருளின் அடையாளத்தையும்  ரசீதையும் கொண்டு வழக்குத் தொடர்க.

2. பொருள் பழுதெனின் பதிவு அஞ்சலில் புகார் அளித்துவிட்டு, சரி செய்ய நடவடிக்கை எடுக்காவிடில் வழக்குத் தொடர்க.

3. எடை பிரச்சினைகள் எனில், உரிய பொருளை அப்படியே காட்டி வழக்குத் தொடர்க.  பிரித்த பிறகு அறிந்திருந்தால்  வேறொரு பாக்கெட்டை வாங்கிவைத்துக்கொண்டு பின் புகார் செய்க.

    எச்செயலைச்செய்தாலும் நமக்கு சாட்சி தேவை.  உரிய  ரசீது இன்றி வழக்குத் தொடர்தல் எதிரிக்குச் சாதகமாகிவிடலாம்.

வழக்குதொடர வழக்கறிஞர் தேவையில்லை. நுகர்வோரே வழக்காடலாம்.  கட்டணம் இல்லை.

  உண்மை உங்களிடம் இருப்பதனை உணர்ந்து  உரிய ஆவணங்கள் இருப்பின்

     மாவட்ட நுகர்வோர் ஆணையத்தை அணுகுக.  தீர்ப்பு உடன்பாடாகா விடில்

             மாநில ஆணையத்தை அணுகலாம். தீர்ப்பு உடன்பாடாகாவிடில்

            தேசிய ஆணையத்தை அணுகலாம்.    மக்களின் உயிருக்கும் உடைமைக்கும்  தீங்கு விளைவிக்காதிருக்கவேண்டும் என்பதே அரசின் கொள்கை.

    எந்நிலையிலும் நுகர்வோர் ஏமாறக் கூடாது என்பது முதல் கொள்கை. ஏமாற்றவும் கூடாது என்பது இரண்டாவது கொள்கை. 

    உண்ணும் பொருளில் கலப்படமா?

    எடையில்  ஏமாற்றும் நிலவரமா?

    குறைகள் தீர்ப்பதில் தாமதமா?

  துணை நிற்கும் என்றும் ;                                     அதற்கே, 

நுகர்வோர் நீதி மன்றம் ;

    




வாழிய அவர் குலம் ! வாழிய அவர் நலம் ! | நல்லவர்களால் உலகம் வாழ்கிறது - Good People Make Good world

 

ஈரோட்டில்  ஒரு புரட்சி

அமைதியாய் ஒரு  புரட்சி. 

நிலத்தைக் கிழித்து வரும் செடிபோல

உலகம் செழிக்க வைத்த புரட்சி

நடராசன் என்னும் நல்ல மனிதர்

உடல் நலம் குன்றினாலும் உள்ளத்தால் கர்ணனார்

தன் சொத்தைப் பள்ளிக்குக் கொடுக்கச் சொல்லி

விண்ணாளச் சென்றார்

தந்தை நாச்சிமுத்து  மகன் கனவை நிறைவேற்ற 

மகளிடன் ஒப்புதல் கேட்டார்; 

மகிழ்ச்சியுடன் மகள் ஈஸ்வரியும் ஒப்ப

உயிலில் அவ்வாறே செப்பினார்.

தந்தை  இறந்தவுடன்  கணவனிடம் கேட்டார்

 தம் மக்களிடம் கேட்டார். 

எல்லோரும் ஓர் குரலில் சரி என்று மகிழ்வுடனே சொல்ல

தந்தை மகனுக்காக சேர்த்த கோடிக்கணக்கான சொத்தை

அரசு பள்ளிக்கு அன்பளிப்பாக ஆட்சியரிடம் வழங்க

மனித நேயம் எங்கும் பரவியது.

எத்தனை எத்தனை அழகு உள்ளங்கள் 

எங்கேனும் ஒரு தடை தான் நிகழ்ந்திருந்தால்

எண்ணங்கள் வண்ணமாகியிருக்காது.

நல் உள்ளம் நற் செயலைத் தடுக்காது.

வாழிய அவர் குலம் ! வாழிய அவர் நலம் !

மீண்டும் மீண்டும் பிறப்பாய் நடராசா

என்றே நாளும்  மலரும்  புது ரோசா.



 

தன்னம்பிக்கை : மூன்றாவது கை - Self confidence - The Third Hand

 தன்னம்பிக்கை விதைகள்-1

பாடும்போதும், ஆடும்போதும் நாடி நின்ற தமிழே, சோறூட்டி வளர்க்கும் தாயைப் போல் நாளும் தமிழூட்டி வளர்த்த தமிழ்த்தாயே. எமைக் காப்பாயே.

கன்னித்தமிழே, தங்கத்தமிழே, சங்கத்தமிழே, அன்னைத்தமிழே,முத்தமிழே, செந்தமிழே என எத்தனை சொன்னாலும் அத்தனையிலும் அடங்காத மாத்தமிழே, வான் தமிழே, தேன் தமிழே, உனை வணங்கித்தொடங்குகிறோம்.

கோடி மலர் கூடி நின்றாலும், இருபது கோடி நிலவுகள் கூடி நின்றாலும் தரமுடியாத அழகினை இங்கு இக்கட்டுரையை வாசிக்கும் தங்களால் தரமுடியும் என்பதனை அறிவேன்.

பகலில் நட்சத்திரங்களைக் காணமுடியாது எனக் கூறியவர்கள் எங்கே? பகலில் நிலாவைக் காணமுடியாது எனக் கூறியவர்கள் எங்கே. உழைப்பவர்களைப் பாருங்கள். இரவு நேரத்தில் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தால் எங்கும் தேனீக்களாய் மனிதர் கூட்டம்.  பகலில் வயல்களைப் பாருங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்தின் நெற்றியிலும் முத்துக்கள் வேர்வையாக நிலத்தில் சிந்திக்கொண்டிருக்கும். ஐயமாக தெளிய உழவனைப் பாருங்கள்.

உலகத்தில் ஒரு சூரியன் தான் பார்த்திருப்பீர்கள். இவ்வுலகில் தம் வாழ்வைக் காட்டிலும் பிறர் வாழ வேண்டும் என மண்ணில் வலம் வரும் ஒவ்வொருவரும் சூரியன் தான்.  அத்தகைய சூரியன்களால்  எத்தனையோ ஏழைகளின் உள்ளத்தாமரை மலர்கிறது.

திறமையே வெற்றியாகும்  POTENTIAL BECOMES ACHEIVEMENT என்பது தான் நம் கொள்கை.  இலக்கியம்போல் திரைப்படமும் நல்ல செய்திகளைக் கூறிய காலமுண்டு. அதனால்தான் திரை இலக்கியம் எனத் தனித்துறையாயிற்று. வீணான செய்திகளைச் சிலர் திரைப்படமாக்கி காசை அள்ளிக்குவிக்கிறார்கள். சமுதாயம் எக்கேடு கெட்டால் என்ன என நினைக்கலாமா? " தாயிற் சிறந்த கோயிலுமில்லை", " தாயில்லாமல் நானில்லை" எனத் தாய்ப்பாசத்தை வளர்த்த திரைப்படங்களின்   தரம் இன்று தவறான வழி காட்டும் வகையில் வலம் வரலாமா?  நடப்பதைத்தானே படமாக எடுக்கிறோம்? எங்களிடம் தவறில்லை. என்கிறார்கள்.

சமுதாயத்தின் மீது தான் தவறு எனத் தப்பிச்செல்ல முனையாதீர்.  தன்னம்பிக்கை விதைகளைப் புதையுங்கள். அது நாளை விருட்சமாகி உங்களுக்கு நிழல்தரும்.  காடுகளை வெட்டித்தள்ளிவிட்டால் நாளை காற்றுக்கு எங்கே போவீர்கள்.

ஒரு நாளைக்கு பெண்களுக்கு எதிரான பன்னிரண்டு குற்றச்சம்பங்கள் நடக்கின்றன. அதைத் தடுக்க ஒருவரால் முடியாது. ஆனால் நாம் ஒருங்கிணைந்தால் முடியும் அதுதான் நம்  கொள்கை. பெண்களைக்காக்க எத்தனையோ இளைஞர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். பெண்களை ; குழந்தைகளை ; நலிந்தவர்களை ; மாற்றுத்திறனாளிகளை தம் உறவாக எண்ணிப் பாதுகாத்து வருகின்றனர். 

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். அது பொய்யில்லை. இயலாமை, முயலாமை என்னும் இரண்டு ஆமைகள் தான் அவை.  இனி நம்மால் இயன்றவரை நல்லனவற்றை மட்டுமே பேசுவோம் ; செயல்படுவோம். வளமோடு வாழ்வோம்.

செவ்வாய், 13 ஏப்ரல், 2021

தமிழ் புத்தாண்டா? தமிழ்ப்புத்தாண்டா?


 தமிழ் புத்தாண்டு  இல்லை தமிழ்ப்புத்தாண்டு


    தமிழ் + புத்தாண்டு = தமிழ்ப்புத்தாண்டு எனப் புணரும். நான்காம் வேற்றுமை உருபாகிய 'கு' தொக்கு நிற்பதால் இது நான்காம் வேற்றுமைத்தொகையாகிறது.


    'புத்தாண்டு' பொதுப்பெயராகவும் 'தமிழ்' சிறப்புப் பெயராகவும் கொண்டு நோக்கின் இருபெயரொட்டுப் பண்புத்தொகையாகவும் அமைந்துள்ளது.


    அனைத்துத் தமிழன்பர்களும் தமிழ்ப்புத்தாண்டு எனப் பயன்படுத்துவீர்.