தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

புதன், 30 ஜூன், 2021

குழந்தைகள் ஊமைகளாகின்றன

 


ஊமைகளாகும் குழந்தைகள் – தாய்மொழியை வாய்மொழியாக்குவோம்

மூளை,  தலைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதால்தானே “எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்” என்னும் பொன்மொழி  உண்டாயிற்று. அந்த மூளையை எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்றுபோலவே இறைவன் படைத்துள்ளார். அதனை உணர்ந்துகொள்ளவேண்டியது முதல்கடமை. இதை உணர்ந்துகொண்டாலே மற்றவையெல்லாம் தெளிவாகிவிடும். எப்படி? என்றுதானே கேட்கிறீர்கள். உடல் என்னும் அரசாங்கத்தின் தலைமைச்செயலகம்தான் மூளை. பிறக்கும்பொழுது எல்லோருக்கும் 300 கிராம் தான்.  வளரவளர ஆண்களுக்கு 1,500 கிராம் அளவிற்கு வளர்கிறது. பெண்களுக்கு 1,300 கிராம். உடனே பெண்களுக்கு …? என இழுக்காதீர். எடை தான் குறைவு. செயல்பாடு அனைவருக்கும் ஒன்றுபோலவே இருக்கும். பெண்கள், சரியாகப் பயிற்சி கொடுப்பதால் எல்லாவற்றையும் நினைவில்வைத்துக்கொள்கின்றனர். எடையுள்ள கைப்பேசியைவிட எடைகுறைந்த கைப்பேசிதான் விலை அதிகம்.

 இப்போது ஒரு உண்மையை உணர்ந்துகொண்டீர்தானே. குழந்தைகள் அறிவுமிக்கவர்களாக வளர்வது வளர்ப்பவர்களின் பொறுப்பன்றி குழந்தைகளின் பொறுப்பில்லை. எந்தக் குழந்தையையும் அறிவு இருக்கா? எனக் கடிந்துகொள்ளக்கூடாது. அப்படிக் கடிந்துகொண்டால் கடிந்துகொள்பவரின் அறிவைத்தான் ஆய்வுசெய்யவேண்டும்.

*எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

பின் நல்லவராவது தீயவராவது அன்னை வளர்க்கையிலே

 

என்னும் புலவர்  புலமைப்பித்தனின் பாடலடிகளைப் பாடிப்பாருங்கள். குழந்தைகள் அறிவும் குணமும் மாறுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

     அன்னை என்றால் அன்னையை மட்டுமன்று, இந்த உலகத்தில் அந்தக் குழந்தை வளர்ச்சிக்குத் துணைசெய்வோர் அனைவரும்தான் காரணம். சூழலால்தானே குழந்தைகள் வளர்கிறார்கள். இவ்வரிசையில் முதல் இடம் பெறுவோர் ஆசிரியர்கள்.

     அதனால்தான் “ஆசிரியர்கள் சம்பளத்திற்குக் கணக்குப் பார்க்கக்கூடாது. விதை நெல்லுக்குக் கணக்குப் பார்க்கலாமா?” எனக்கேட்டார் கல்விக்கண் திறந்த காமராசர். கல்விச்சாலை என்னும் கோவிலை நன்றாகக் கட்டிவிட்டு பணிசெய்வோர்க்கு உரிய வசதிகள் செய்யாவிட்டால் என்னாகும். கடவுள் என்னும் கல்வியைப் போற்ற இயலுமா? முடியாதுதானே? ஆசிரியர்கள் சுதந்திரமாகச் செயல்பட வழிவகை செய்யவேண்டும். அப்படியென்றால், தாய்மொழியில் கற்பிப்பதுதானே சிறப்பாக அமையும். கற்போருக்கும் கற்பிப்போருக்கும் அதுதானே எளிமை. அங்குதானே கற்பித்தல் சீராக அமையும்.

     தாய்மொழியில் கேள்வி கேட்க எண்ணும் ஆசிரியர், அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடி ஆங்கிலத்தில் “Flowers Name …” எனக் கேள்வி கேட்கட் தொடங்குகிறார். “செவ்வந்தி, சாமந்தி, கனகாம்பரம், செம்பருத்தி, மல்லி, அல்லி, லில்லி, ரோஜா… எனக் குழந்தைகள் அடுக்கிக்கொண்டே சென்றனர். உடனே ஆசிரியர் “நோ டமில். ஒன்லி இங்க்லீஷ்” என்றார். சுடுகாட்டு மௌனம் நிலவிற்று. குழந்தைகளுக்கு நன்றாக விடைதெரிந்தும் தாய்மொழியில் கூறக்கூடாதென்பதால் ஊமைபோல் நிற்கின்றனர். ‘ஊமை’ என்னும் சொல்லால், இங்கு குறிப்பிடுவது வாய்பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளை அன்று. வாயிருந்தும் பேசமுடியாத ; பேச விடாத சமூக அமைப்பில் சிக்கிக்கொண்டவர்களையே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

     தாய்மொழிக்குத் தடைவிதித்ததால், நன்றாக விடைதெரிந்தும் கூற முடியாது தவிக்கும் குழந்தைகளின் அறிவாற்றால் மேம்படுமா? கீழ்ப்படுமா? இப்படி நாளுக்கு நாள் தன்னம்பிக்கை இழக்கும் குழந்தைகள், கல்வியை விட்டுவிடும் சூழலும் மேற்படிப்பினைத் தொடரமுடியாத சூழலும் பெருகிவிடுகிறது. அரசு பள்ளிகளில் நாளுக்குநாள் குழந்தைகள் குறைவதற்கு அதுதானே மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இனி, தாய்மொழியில் கற்றோர்க்கு மட்டுமே கல்வி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு எனில் என்னாகும். அரசுப்பள்ளியில் பிள்ளைகள் குவிவார்கள்தானே?

     வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இருந்தால் அனைத்துக் குழாய்களிலும் தண்ணீர் வரும்தானே? தாய்மொழிக்கான வாய்ப்பு இருந்தால் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் தமிழ்ப்பயிலும் குழந்தைகள் வளமாக வாழ்வார்கள்தானே.

     ஆங்கிலம் தெரியாவிட்டால் பெரியகுற்றம்போல் நினைக்கும்நிலை மாறவேண்டும். நம் நாட்டில் பிறநாட்டுமொழி செம்மாந்து நடக்க, தாய்மொழி கற்ற குழந்தைகள் தலைகுனிந்து நடக்கும் சூழல் எத்தனை இழிவானது.

     *பாதை தவறிய கால்கள், விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை

     நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர், பேர்சொல்லி வாழ்வதில்லை.

 

என்னும் புலவர் புலமைப்பித்தனின் அடிகளை உணர்ந்து சரியான பாதையில் சென்றால் விரும்பிய ஊரினை அடையமுடியும். குழந்தைகளுக்கும் நல்ல பண்பினை வளர்க்கமுடியும். பேர் சொல்லும் பிள்ளையாக சிறப்புடன் வாழவழிகாட்டமுடியும்.

 

     தமிழர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்துவிளங்கியதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத ஆங்கிலேயர்கள், அடிமையாக்கவே தங்கள் மொழியான ஆங்கிலக்கல்வியைப் புகுத்தினார். அம்மொழியைக் கற்றவர்க்கும் மட்டுமே அரசு வேலையும் கொடுத்தனர். இக்கொடும்போக்கினை எதிர்த்த தமிழர்கள் தங்கள் அரசுப்ப்பணியினை விட்டு விடுதலை வீரர்களாக மாறினர். இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்ட சில துரோகிகள் ஆங்கிலேயர்களுடன் கைகோத்துக்கொண்டு தமிழர்களைப் பேசவிடாது ஊமைகளாக்கினர். “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்னும் கொள்கையைப் பின்பற்றினர். இப்படி மொழியின் வழி ஊமைகளாக்கும் நிலையினை அந்நியர்கள் வழிவகை செய்தனர். அவர்கள்வழியிலிருந்து விடுபட்டு, தாய்மொழியில் கற்றுக்கொடுத்தால்  பேசாத குழந்தைகளும். எங்கும் தமிழ்மணம் வீசும். உண்மைதானே?

 

(‘நீதிக்குத்தலைவணங்கு’ என்னும் திரைப்படப்பாடலான “இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத் தொட்டிலில் கட்டிவைத்தேன்” என்னும் பாடலிலுள்ள அடிகள்)

திங்கள், 28 ஜூன், 2021

தேநீர் கவிதை

 


சிங்கைப்பெண்ணின் தங்கக் கவிதை 


(மொழிபெயர்ப்பு மட்டுமே நான். கவிதை பேராசிரியர் லீ சூ பெங்க் , சிங்கப்பூர் பண்பாட்டுப் பதக்க வெற்றியாளருடையது)

 

தேநீர் கவிதை

 

தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும் ….

இறுதிப் பயணம்

எப்போதென்று யாரறிவார்?

இருக்கும்வரை மகிழ்ந்திடுவாய்

 

தேநீரைச் சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்  

 

பனித்துளி வாழ்க்கை

கடலாய்த் தெரியும்

உலகமே உன்னால் விடிவதாய்த் தெரியும்

செய்யும் செயலெல்லாம் தடையாய் முடியும்

போராட்ட வாழ்க்கை இது. எதிர்கொள்ளக் கற்றுக்கொள்

காலம் கடந்தபின் ஞானம் வழிந்தென்ன?

காலன் இங்கே காத்திருக்கிறான்

 

தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்

 

நட்புகள் சில மலர்ந்திருக்கும்

இன்னும் சில மாய்ந்திருக்கும்

வானவில்லாய் உடன் நின்றபலரும்

வானத்தின் முகவரியில் மறைந்தே போயிருப்பர்

குழந்தைகளுக்கு இறக்கை முளைக்கும்

பறந்துசென்றே பார்வை மறைக்கும்

வாழ்க்கை இப்படித்தான் கடக்குமென்று

கணித்திட ஒருவர் பிறந்திடவில்லை.

 

அதனால், தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்

 

இறுதிவாழ்க்கை அன்பால் நிறையும்

உலகம் முழுதும் உறவாய்த் தெரியும்

விண்மீன் வெளிச்சம் அன்பால் ஒளிரும்

பாசத்துடன் வாழ்ந்தோரைப் பாராட்டிடுவோம்

 

புன்னகையோடு சுவாசிப்போம்

கவலைகள் யாவும் ஓடிவிடும்

 

அதனால், தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்

 

உறவுகளைக் கடந்தது இக் கவிதை

அனைவர்க்குமானது இக்கவிதை

 

நான் இறந்தபின்னே

கண்ணீர்துளிகளை  காணிக்கையாக்குவீர்

அப்போது அதைநான்  அறிவேனோ?

இன்றே என்னுடன் அழுதிடுவீர்.

 

மலர்களைத் தூவி வணங்கிடுவீர்

என்னால் பார்க்க இயலாதே?

இன்றே மலர்களைக் கொடுத்திடுவீர்.

 

என்னை அன்று புகழ்ந்திடுவீர்

எனது செவிக்குள் நுழையாது

இன்றே என்னைப் புகழ்ந்திடுவீர்

 

எந்தன் பிழைகளை மன்னிப்பீர்

எனக்கு ஒன்றும் தெரியாது

இன்றே என்னை மன்னிப்பீர்

 

என்னை இழந்து வருந்திடுவீர்

என்னால் உணர முடியாதே

இன்றே என்னை இழந்திடுவீர்.

 

என்னுடன் பழக விரும்பிடுவீர்

என்னால் அறிய  முடியாதே

இன்றே பழக வருவீரே.

 

 

பல்லாண்டாய் பிரிந்த நண்பரெல்லாம்

அஞ்சலி செலுத்த வந்திடுவீர்

அப்போது நானும் அறிவேனா?

இப்போதே என்னைத் தேடிடுவீர்.

 

நேரத்தை யாவர்க்கும் செலவிடுவீர்

உதவிகள் செய்து  மகிழ்ந்திடுவீர்

குடும்பத்தை நட்பை மதித்திடுவீர்

எப்போதும் எதுவும் நடந்திடலாம்

யாரை இழப்பீர் அறியீரே

 

தனியாக நீங்கள் புலம்பலாம்

இணைந்தால்தானே பேசலாம்

தனியாக நீங்கள் மகிழலாம்

இணைந்தால்தானே கொண்டாடலாம்

தனியாக நீங்கள் புன்னகைக்கலாம்

இணைந்தால்தானே சிரிக்கலாம்

 

இப்போதில்லையெனில் எப்போது?

 

 

 

நகைச்சுவை மருந்து – திருவள்ளுவர் வழியில்

 


நகைச்சுவை மருந்து – திருவள்ளுவர் வழியில்

     இம்மருந்து கசக்காது ; புளிக்காது ; துவர்க்காது .கரிக்காது ; காராது, இனிக்கமட்டுமே செய்யும்.  மருந்து கொடுப்போர்க்கும் இனிக்கும் ; உண்போர்க்கும் இனிக்கும். பக்கத்தில் நின்று கேட்போர்க்கும் இனிக்கும்.

     நகைச்சுவை என்பது பிறரைக் காயப்படுத்துவதல்ல ; காயத்திற்கு மருந்திடுவது. நகைச்சுவை எவ்வகையிலும் பிறரைக் காயப்படுத்திவிடக்கூடாது என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி  பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு (திருக்குறள் – 995)

 

என்னும் அடிகளில் பண்புடையவர்களின் மாண்பை நகைச்சுவையிலும் காணமுடியும் எனத் தெளிவுறுத்துகிறார்தானே? சில நகைச்சுவைகளைக் காண்போமா?

 

நகை : 1

 

     ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார். “திணை – இரண்டு, உயர்திணை, அஃறிணை, திணையிலிருந்து பால் பிரியும்.  உயர்திணை – ஆண் பால், பெண்பால், பலர் பால் என மூன்றாகப் பிரியும்” எனப் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரு மாணவன் கவனிப்பதுபோல கண்களைத் திறந்தே தூங்கிக்கொண்டிருக்கிறான். “அது ஒரு கலைதானே”. அவனைப் பக்கத்திலிருந்த மாணவன் சீண்டுஉலுக்குகிறான். உலுக்கிய வேகத்தில் “ஐயா” என்கிறான். பால் எதிலிருந்து பிரிகிறது. பசுவின் பால் என நினைத்து “மடியிலிருந்து” என்றான். எல்லோரும் சிரித்தார்கள். ஆசிரியர் அவனுடைய திறமையைப் பாராட்டினார். உண்மைக்குப் பாராட்டுக் கிடைப்பது இயல்புதானே.

நகை - 2

பெண்கள், தங்களுக்குப் பிரச்சினை ஏற்படக்கூடும் என எண்ணும்பொழுதே, அதனைத் தடுத்துவிடவேண்டும். வளர்ந்துவிட்டால் தடுக்கமுடியாது.  மருத்துவரான மகனுக்கு மருத்துவரான மருமகளையே திருமணம் செய்வித்தார் ஒரு பெரியவர். நாட்கள் நகர்கின்றன. ஒருநாள், மருமகளும் மகனும் பணி முடித்துவந்தபின், மகன் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார். மருமகள் காஃபி கலந்துவந்துகொடுத்தார். காஃபியை ஒரு வாய் குடித்துவிட்டு, “காஃபியா இது” எனக் கீழே தட்டிவிட்டார். காஃபி குறித்த அன்று காலை நடைபெற்ற முதியோர் கலந்துரையாடலில் “மருமகளை முதலிலேயே அடக்கிவைக்கவேண்டும்” என ஆலோசனைக் கூறப்பட்டதன் விளைவு அது. மீண்டும், செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த அவர் காலுக்கருகே பாத்திரம் தவறி விழுந்த சத்தம் கேட்டது. திருமகளாய் நின்ற மருமகள் காளியாக அவர்முன் நின்றுகொண்டிருந்தாள். அவள்தான் பால் பாத்திரத்தை அவர்முன் போட்டுடைத்தாள். வீடு முழுதும் பால் சிதறிக்கிடந்தது. காளி முன் சிவன் போல் அமைதியாக எழுந்து வெளியே போனார் மகன்.  மருமகளின் கோபம் அரை லிட்டர் பாலுடனும் பாத்திரம் நசுங்கியதோடும் முடியவில்லை. காளியின் கோபத்தால் என்ன விளையுமோ? என்னும் அச்சம் பெரியவர் முகத்தில் பரவியிருந்தது. தன் தவறை உணர்ந்தார். அடுத்தநாள் காலை, மருமகள் மகளாகி இருந்தாள். மிகுந்த பாசத்துடன் பேசினார். காளி திருமகளானாள். மாமனார் தந்தையானார்.

நகை - 3

குழந்தைக்குச் சோறூட்டும் கலை – குழந்தைக்குச் சோறூட்டும் தாய் தனக்குப் பக்கத்தில் குழந்தைக்கு நிகரான உருவத்தில் ஒரு பொம்மையை வைத்திருக்கிறாள். குழந்தைக்கு முதலில் சோறூட்டாமல் பொம்மைக்குச் சோறூட்டுவதுபோல் ஊட்டுகிறாள். “வேண்டாம்” என்பதுபோல் அவளே பொம்மையின் தலையினை இடதுகையால் ஆட்டுகிறாள். வேண்டாமா? எனக் கேட்டுவிட்டு, பக்கத்தில் இருந்த பூரிக்கட்டையால் வேண்டாமெனத் தலையாட்டிய பொம்மையை இரண்டு அடி அடிக்கிறாள். மீண்டும் சோறூட்டுவதுபோல் கையை எடுத்துச்செல்கிறாள். பொம்மை அமைதியாக இருக்கிறது. “சாப்பிட்டுவிட்டாயே” எனக் கூறிவிட்டு தனது குழந்தையின் பக்கம் திரும்புகிறாள். குழந்தைக்கும் சோறூட்ட கையினை வாயருகே கொண்டு செல்கிறாள். உடனே மறுக்காமல் குழந்தை உண்டுவிடுகிறது. பொம்மை அடிவாங்கியதைப் பார்த்த குழந்தையாயிற்றே. பாம்பின் கால் பாம்பறியும் என்பது இதுதானோ?

நகை - 4

கைப்பேசியால் குடும்பங்கள் சீரழிந்து வருவது உண்மைதானே?  அன்று, வேவ்வேறு இடத்தில் இருந்தாலும் மனிதர்கள் ஒன்றாக இருந்தனர் ; பாசத்துடன் இருந்தனர். ஆனால், இன்று ஒரே இடத்தில் இருந்தாலும் ஆளுக்கு ஒரு கைப்பேசியில் இருக்கிறார்கள். உலகத்தவரோடு நட்பு கொள்ள விரும்புவோர், பக்கத்தில் இருக்கும் உறவுகளோடு பேசுவதில்லை.  ஒரு காட்சி எல்லோரையும் திருத்திவிடுகிறது. ஓர் அறையில் கணவன், தம்பி, குழந்தைகள் என ஆளுக்கு ஒரு கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மனைவி கணவரிடம் கைப்பேசியைக் கேட்கிறாள். அவர் கொடுக்கவில்லை. ‘பளார்’ என்று கன்னத்தில் ஒரு அடி. உடனே கொடுத்துவிடுகிறார். பக்கத்தில் இருந்த குழந்தைகளும் கையை நீட்டியதும் கொடுத்துவிடுகின்றன. என்ன அழகான ஆளுமை. திட்டமிட்டு செய்தது தான் என்றாலும் கணவரின் நடிப்பால்தான் எல்லாம் சாத்தியமானது. உண்மைதானே?. மனைவி இதுதான் வாய்ப்பென்று நடிகர்திலகம் போல் முழுத்திறமையையும் வெளிப்படுத்தியிருந்தாள். எப்படி என்று கேட்கிறீர்களா? கணவனின் சிவந்த கன்னம் தான் அதற்குச் சாட்சி. 

“நல்லதா நாலு வார்த்தை சொல்” என்றுதானே பெரியோர் சொல்வார்கள். அதனால் நான்கு நகைச்சுவைகளை மட்டும் கூறியுள்ளேன். இதைப் படித்தபின்னும் உங்கள் கவலை விலகவில்லையா? நீங்கள் ஆழமான ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றுபொருள். இனி, நீங்கள் காலையில் எழுந்தவுடன் நாள்காட்டியில் நாள் தாளைக் கிழிக்கும் போது பழைய எண்ணங்களையும் கிழித்துவிடுங்கள். புதிதாக நாளைத் தொடங்குங்கள். மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடியுங்கள். நாளடைவில் அதுவே பழகிவிடும். உலகமே மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தோன்றும். இருளாக இருந்த வாழ்வில் வெளிச்சம் கூடும்.

நகல்வல்லார் அல்லார்க்கு  மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள் (திருக்குறள் – 999)

 

என்னும் திருக்குறளின் வழிநின்று இருளை விலக்குவோம். இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி. அது உங்களைத் திருத்தாது. அதனைக் கண்டு நீங்கள்தான் திருந்தவேண்டும். உண்மைதானே? திருவள்ளுவர் வழியில் நின்று மகிழ்வோம் ; மகிழ்விப்போம்.

ஞாயிறு, 27 ஜூன், 2021

பெண்ணியம் பேசிய முதல்வர் – திருவள்ளுவர்

 


பெண்ணியம் பேசிய முதல்வர் – திருவள்ளுவர்

     பெண்ணியம் பேசிக்கொண்டே காலத்தைக் கடந்துகொண்டேபோகும் சூழலைக் காணமுடிகிறது. எத்தனையோ நூற்றாண்டுகள் ; எத்தனையோ தலைமுறைகள் கடந்தபின்னும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நின்றபாடில்லை. மாறாகப் பெருகிவரும் சூழலையும் காணமுடிகிறது. இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமாயின் பெண்களை இழிவுபடுத்தும் சூழல் கொடூரமானதாக மாறிவருகிறது.

     “பெண்விடுதலை” என்னும் மாயையினை நம்பி வெளியே துணிவுடன் எதிர்த்து நிற்கும் பெண்கள் நாள்தோறும் காணாமல் போவது வாடிக்கையாகிவிட்டது. நாள்தோறும் அப்பெண்களைப் பெற்ற தாய்மார்களின் கண்ணீர்தான் எழுத்துக்களாக செய்தித்தாள்களில் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

     குற்றங்கள் செய்தவர்களைத் தண்டிக்கும் முன் பணம், புகழ், பதவி என எத்தனையோ கவசங்கள் குற்றவாளிகளைக் காப்பாற்றிவிடுகிறது. சரி, பிறரை குறை சொல்லியே தப்பித்துக்கொள்ள நினைப்பதில் ஒரு பயனும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கு பெண்களின் மீதான மதிப்பினை உயர்த்துவஹ்டு ஒன்றுதான் வழி. விதைகள் நன்றாக அமைந்துவிட்டால் செடி நச்சுடையதாக அமையாதுதானே? எனவே சிறுவயது முதலே பெண்களை மதித்துவாழ ஆண் குழந்தைகளுக்கு ; இளைஞர்களுக்கு ; பெரியோர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். பெண்களைப் பாதுகாப்பாக வளர்க்கவேண்டும். பெண்களைக் காப்பதாக எண்ணி அவர்களுடைய திறமையை முடக்கிவிடக்கூடாது.

     ஆண்களுக்குப் பெண்ணிய அறிவை ஊட்டுவது முள் மேல் படர்ந்துவிட்ட சேலையை எடுக்கும் அளவிற்கான கவனம் தேவை. வீடுகளில் ; பள்ளிகளில் ; கல்லூரிகளில் ; பணியிடங்களில் ; சாலைகளில் ; மண்ணில் ; விண்ணில் என அனைத்து இடங்களிலும் பெண்கள் மதிக்கப்படவேண்டும்.

     ‘பெண்ணிய முழக்கம்’ என்பது பெண்களின் திறத்தை மதிக்கவேண்டும் என்பதற்கான ஒரு வழக்குதானே? மனிதர்களை மனிதனாக எண்ணவேண்டும் என்னும் இயல்பான ஒரு வாழ்வைக்கூடப் போராடித்தான் பெறவேண்டுமென்றால், மனித இனத்துக்கு ஆறறிவிருந்து என்ன பயன்? என்றுதானே கேட்கத்தோன்றுகிறது. அதனால் வீட்டில் பெண்குழந்தைகளை ஆண்குழந்தைகளுக்கு இணையாக; மேலாக வளர்க்கவேண்டும். அப்பொழுதுதான் மதிக்கவேண்டும் என்னும் எண்ணம் ஆண் குழந்தைகளுக்கும், வீரத்துடன் வளரவேண்டும் என்னும் எண்ணம் பெண்களுக்கும் ஏற்படும். முதலில் இப்படி வளர்ப்பது சாத்தியமில்லாததாகத் தோன்றினாலும் காலப்போக்கில் பழகிவிடும்.

     காசுக்காக தன் உடலையே விற்கும் பெண்களைக் கூட “வரைவின் மகளிர்” என எத்தனை மதிப்புடன் சுட்டியிருக்கிறார் திருவள்ளுவர். வரைவு எனில் திருமணம் என்று பொருள். திருமணம் செய்யாத பெண்கள் எனக்கூறுவது எத்தனை மேன்மை.

     “வரைவுஇலா மாண் இழையார் மென் தோள்”  (திருக்குறள்- 919) எனக் குறிப்ப்பிடுகிறார். மேலும் “இருமனப் பெண்டீர்” (திருக்குறள் – 920)  பொது நலத்தார் (திருக்குறள் – 915) பொருட்பெண்டீர் (திருக்குறள் -914) என எத்தனை மதிப்புடைய சொற்களால் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்று வாடி, போடி என ஊடகங்களில் பெண்களை அழைப்பது, பெண்ணே மற்றொரு பெண்ணை, ஆணை அழைத்துக் கொடுமை செய்யச்சொல்வது என எத்தனைக் காட்சிகளைக்காணமுடிகிறது. இதுவா வளர்ச்சி? சமூகத்திற்கே இகழ்ச்சிதானே?

பெண்களை ‘கட்டை’ என அழைப்பதும் ‘குட்டி’ என அழைப்பதும் பாடல் எழுதுவதும் இன்னும் எத்தனையோ இழிவான சொற்களால் பெண்களைக் குறிப்பது வாடிக்கையாகிவிட்டது.

தமிழர்களுடைய வாழ்வில் பசுவானது மிகவும் புனிதமானது. அதனால்தான் மாட்டுப்பொங்கல் அன்று காளைகளை மட்டுமின்றி பசுக்களையும் வணங்குவர். பசு புனிதமானது என்பதனை பண்பாட்டு அடிப்படையில் மட்டும் குறிக்கப்படுவதில்லை. தாயனவள் குழந்தைக்குப் பாலூட்டி வளர்ப்பதுபோல், பசுவும் பாலினைக் கொடுத்து குழந்தையைக் காக்கிறது. கைக்குழந்தை முதல் இறக்கும் நிலையில் உள்ளவர் வரை பால் எத்தனை முக்கியத்துவம் பெறுகிறது. ஏன்? இன்னும் சொல்லப்போனால் இறந்த பின்னும் பாலூற்றும்நிகழ்வு நடக்கத்தானே செய்கிறது. என்ன கட்டுரைக்குத் தொடர்பில்லாமல் பால் குறித்துப் பேசப்படுகிறதே என்றுதானே எண்ணுகிறீர்கள். காரணம் இருக்கிறது. சொல்லட்டுமா?

கன்று உயிருடன் இருக்கும்வரை, முதலில் கன்றினை பசுவின் மடியினை முட்டச்செய்து பால் கறப்பர். பசு தன் கன்றுக்குப் பால் சுரக்கும். அதனை மனிதன் பிடித்துக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவான். அது தன் குழந்தையாக இருக்கலாம். அல்லது சமூகத்தில் ஏதேனும் ஒரு குழந்தையாக இருக்கலாம். ஆனால் பயன் அடைவது மனித குலமே. பசுவினது கன்று இறந்துவிட்டாலும், வைக்கோலைவைத்து கன்று வடிவத்தில் பசுவின் முன் காட்டுவர்கள். அப்பொழுதுதான் பால் கறக்கும். பசுவிற்கு கன்று இறந்துவிட்டது. இது பொம்மை எனத்தெரியும். ஆனால், அதன் பாசம், பாலாக வடியும்.  

அப்படித்தான் பெண்களும். பசுவிடம் கன்றின் பொம்மையைக் காட்டி மயக்குவது போல கயவர்கள் பெண்ணின் இரக்க உணர்வுகளைப் புரிந்துகொண்டு, பாசம் என்னும் பெயரில் பெண்களை அடிமையாக்கிவிடுகின்றனர். ஆசை வார்த்தைகளால் மோசம் செய்கின்றனர். “நீ இல்லை என்றால் தற்கொலை” எனப்பேசிப்பேசி வசப்படுத்தி வலையில்வீழ்த்திவிடுகின்றனர். இத்தகைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் பெண்களுக்கு வேண்டும். திட்டமிட்டு ஏமாற்றும் கயவனின் பண்பை அறியாமல் “அவன் தீங்கு செய்யமாட்டான்” என எண்ணினால் பின்னால்வருந்தவேண்டி வரும். எல்லா துன்பங்களுக்கும் அந்த இரக்கமே காரணமாகிவிடும். எல்லோரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் காவலர்தான் குற்றவாளிகளை அடையாளம் காண்பார். குற்றம் நிகழாது காப்பார். அவ்வாறே ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக்கொள்ள விழிப்புடன் செயல்படவேண்டும். ஆண்கள் எவராயினும், பெண்களுக்குக் கேடு செய்தால் உடனடியாகத் தண்டிக்க வழி செய்யவேண்டும். தொடக்கத்தில் மன்னித்து விட்டுவிட்டால் நாளுக்கு நாள் பெருகி பெரும் ஆபத்தை விளைவித்துவிடும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பல பழகியவர்களாலேயே ஏற்படுகிறது எனக் காவல்துறை கூறுகிறது. உங்களுடைய நகம்தானே என வளரவிட்டால் முகத்தைக் கீறிவிடும்தானே?  பகையை வெல்ல பெண்களுக்கு வழிகாட்டுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

     இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

     கைகொல்லும் காழ்த்த இடத்து (திருக்குறள்- 879)

 

     முளைவிட்ட முள்மரத்தை பார்த்த உடனே வெட்டிவிடவேண்டும். வளர்ந்தபின் வெட்டலாம் என எண்ணினால் அதனால் காயங்கள் ஏற்படும் என அறிவுரை கூறுகிறார். பெண்களைத் துணிவுடன் வாழச்செய்ய அறிவுறுத்துவதால் பெண்ணியம் பேசிய முதல்வர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் எனக் குறிப்பிடலாம்தானே?

 

 

    

 

 

சனி, 26 ஜூன், 2021

குடிகார நண்பர்களே – திருவள்ளுவர் அழைக்கிறார்

 




குடிகார நண்பர்களே – திருவள்ளுவர் அழைக்கிறார்

“இராமன் ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலை இல்ல” எனப் பாடிக்கொண்டு குடித்துவிழும் குடிகாரரர்களைப் பார்த்திருப்பீர்கள்தானே? 1980- இல் வெளிவந்த ‘முள்ளும் மலரும்’ படத்தில் வெளிவந்தபாடல் இது. இன்றும் அந்தப்பாட்டைப் பாடிக்கொண்டு குடித்து விழுந்துகொண்டிருக்கிறார்கள் என்றால், என்ன பொருள்?. அந்த அளவிற்கு அந்தப் பாடலை விரும்பியிருக்கிறார்கள் என்றுதானே பொருள். அதுபோலவே 1974 இல் வெளிவந்த “அவள் ஒரு தொடர்கதை“ படத்தில் “தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு” என்னும் பாடலும் குடித்துவிட்டுப்பாடும் பாடல். அப்பாடலைப் பாடுவதனையும் அன்றாடம் பார்க்கமுடிகிறதுதானே. அறுபது வயது குடிகாரரின் கச்சேரியில் இப்பாடலுடன் நடிப்பும் பார்ப்பவரை ஈர்க்கும். இளைய குடிகாரர்களுக்குப் பாடல் பஞ்சமே இல்லை. இன்று வெளிவரும் படங்களில் ஒரு பாட்டு குடிப்பாட்டாக இருக்கவேண்டும் என்பது விதியாகவே எழுதப்பட்டுவிட்டிருக்கிறதுபோல.  குழந்தைகள்கூட இப்பாடல்களைப்பாடித்திரிவதுதான் வேதனை. தெரிந்தோ தெரியாமலோ சில நடிகர்கள் தங்கள் ரசிகர்களைக் குடிகாரர்களாக  மாற்றிக்கொண்டுதான் இருந்தனர் ; இருக்கின்றனர். சிங்கம்போன்று வீறுநடை போட வேண்டிய இளைஞர்கள் வீதீயில் விழுந்து கிடப்பது எத்தனை இழிவு. இந்நிலையினை மாற்றுவது நடிகர்களுடைய பொறுப்பு.   ஏன் இயக்குநர்களுக்குப் பொறுப்பில்லையா? எனக் கேட்காதீர். பெற்றோர் பேச்சைக்கேட்காத பிள்ளைகள்கூட நடிகர்பேச்சைக்கேட்டுத்தான் நடக்கிறார்கள் : நடக்கவும் செய்கிறார்கள்.

தாயானவள், குழந்தையின் எந்த நிலையினையும் கண்டு பொறுத்துக்கொள்வாள். ஆனால், குடித்து விழுந்திருக்கும் நிலையினைக் கண்டால் மனம் பொறாள். பெற்றவளே மன வருத்தம்கொள்ளும்போது, சான்றோர்கள் கண்டால் என்ன ஆகும்? எனக்கேட்கிறார் திருவள்ளுவர். படிப்பு, பணி, திருமணம், உடல் நலம் என அனைத்தையும் ஒருங்கே கெடுத்துவிடும்தானே?

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி (திருக்குறள் – 923)

 

என்னும் திருக்குறள் குழந்தையின் முகத்தைக் கண்டு இன்பமடைந்த தாயின் மனம், துன்பமடையக்கூடிய நிலைக்குக் குடி மாற்றிவிடுவதனை எடுத்துக்காட்டியுள்ளது.

குடிகாரர்கள் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்களே எப்படி?. குடிகாரன் எப்படி உளறுவான்? எப்படி நடப்பான்? எப்படி விழுவான்? என்பதைப் பார்க்க எல்லோருக்கும் ஆவல் உண்டு. அதனால்தான் கயவர்கள் ‘விருந்து’ என்னும் பெயரில் நேர்மையானவர்களை குடிக்கவைத்து, தவறான செயல்களில் ஈடுபடவைத்து படமெடுத்துவைத்துக்கொள்கின்றனர். பின்னாளில் மயக்கியோ, அச்சுறுத்தியோ பணியவைக்கின்றனர். போதையில் கையெழுத்துபோட்டுவிட்டு வீட்டையும் நாட்டையும் இழந்தவரலாறு பலவுண்டு. பெரிய விடயங்களுக்குள் புகவேண்டாம். குடும்பங்களில் கலவரம் ஏற்படுத்தும் குடியினைத் தடுக்கத் திருவள்ளுவர் என்ன கூறுகிறார்? என்பதைப் பார்த்தால் போதும். வீடு நன்றாக இருந்தால்தானே நாடு நன்றாக இருக்கும்.

அரசு குடும்ப வறுமையை நீக்க உதவித்தொகை கொடுத்தால், உடனே அப்பணத்தை எடுத்துக்கொண்டு குடிக்கச்சென்றுவிடும் குடிகாரர்களைப் பார்க்கமுடிகிறது. குழந்தைகளுக்குக் கஞ்சி வார்க்கவும் வழியின்றித் தவிக்கும் குடும்பச்சூழலை மறந்துவிட்டு எங்கோ விழுந்துகிடக்கும் பொறுப்பற்ற குடிகாரர்களை என்னென்பது? அப்படிக் கேட்பாரற்று அளவுக்கு அதிகமாகக் குடித்து இறந்துபோகும் குடிகாரர்கள் இருபத்தைந்து (25) முதல் நாற்பத்தைந்து (45) வரை வயதுள்ளோரே. திருமணம் நடந்து சில மாதங்கள், வருடங்களானோர், ஒன்று, இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றோர் என எத்தனையோபேர்  இறப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டிருக்கிறது.

ரோஜா மலர் போன்ற பிஞ்சுக்குழந்தைகளை விட்டுவிட்டு குடியில் மூழ்கி இறக்கின்றனர். அதனால் பிச்சை எடுக்கும் நிலைக்கு அக்குடும்பம் தாழ்ந்துபோகிறது. தந்தையை இழந்த குழந்தை வேலைக்காரியாகி பத்துப்பாத்திரம் தேய்த்துக் கைகள் காய்ந்து புண்ணாகிவிடும் நிலையினைப்பார்க்கமுடிகிறது. இதனை, குடிப்பவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்தானே? மருத்துவராக ; பொறியாளராக ; ஆசிரியராக ; விளையாட்டு வீர்ர்களாக ; கலைஞர்களாக வரவேண்டிய குழந்தைகள் வறுமையில் உணவுக்காகவே வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக்கொள்வது எத்தனை அவலம். தன் குடும்பத்தினரிடம் பாசம் கொண்டவர்கூட, குடியானது நஞ்சு எனத்தெரிந்தும் குடிக்கின்றனர். அத்தகையோர் அறிவுடையராகார் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்உண் பவர் (திருக்குறள் – 926)

 

என்னும் திருக்குறளின்வழி, குடும்ப நன்மையையும், உடல் நலத்தின் அவசியத்தையும் உணர்ந்தால் மட்டுமே இக்குடியிலிருந்து ; நஞ்சிலிருந்து விடுபடமுடியும் என உணர்த்துகிறார் தெய்வப்புலவர்.

     ஒருவன் குடித்துவிட்டு சாலையில் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருகிறான். போவோர் வருவோரையெல்லாம் கிண்டல் செய்கிறான். ஊடகங்கள் அப்படித்தானே குடிகாரர்களைக் காட்டிக்கொண்டிருக்கிறது. இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் அவரைத் தண்டிக்கும் வகையில் தான் வைத்திருந்த குச்சியில் ஒரு அடி அடிக்கிறார். சுற்றி இருந்தவர்கள். “நல்லா அடிங்கய்யா? குடித்துவிட்டு சாலையில் ஆட்டம் போடுகிறான்”. என இளைஞரை ஊக்கப்படுத்துகின்றனர். அடித்த அடியினைத்தாங்கமுடியாமல் அவன்மேல் விழுகிறான் குடிகாரன். “என்மேலா கைவைத்தாய்” என இளைஞன் பலமாக அடிக்க, குடிகாரன் மயங்கி விழுகிறான். சுற்றி இருந்தவரில் ஒருவன் ஓடி வந்து விழுந்த குடிகாரனின் நாடியைப் பார்த்தான். “செத்துட்டான்பா” என்கிறான். கூட்டம் புலம்பிக்கொண்டு இருக்கிறது. ஒரு பெண்ணும், மூன்று பெண்குழந்தைகளும் ஓடி வருகிறார்கள்.  “இது ஒரு கதை” என எண்ணாதீர். அன்றாட நிகழ்வு. கேட்பதற்கு நாதியின்றி நாள்தோறும்  இறக்கும் குடிகாரர்கள் பலர்.

     மதுக்கடைகள் எத்தனைக் குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறது? எனக் கேட்ட காலம் மலையேறிவிட்டது. குடி எத்தனைக் குடும்பங்களை வாழ்விக்கிறது? எனக் கேட்கும் அளவிற்கு, குடிப்பது நகைச்சுவையாகிவிட்டதுதான் கொடுமை.

இவர்களைத் திருத்தவே முடியாதா? என்றுதானேகேட்கிறீர்கள். குடியில் மூழ்கி இருக்கும்போது திருத்த எண்ணுவது, விளக்கினை ஏற்றி எடுத்துக்கொண்டு  நீரில் மூழ்கியவனைக் காப்பது போன்றது என்கிறார் தெய்வப்புலவர்.

     களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைக் தீத்துரீஇ அற்று (திருக்குறள் – 929)

 

சேற்றில் விழுந்த செங்கதிர்போல் ஒளியின்றி வாழ்வைக்கெடுத்துக்கொள்வோரைப் பார்த்தால் வெறுப்பினைவிட அவர்களுடைய குழந்தைகளை ; மனைவியை ; பெற்றோரை எண்ணி வருந்தவே வேண்டியிருக்கிறது. குடியை எதிர்த்து எத்தனை ஆயிரம் மக்கள் போராடினாலும் பயனில்லை. இதற்கு அந்த ஆலைகளை வைத்திருக்கும் ஒருசிலர் எண்ணினால் போதும். நாடும் வீடும் நலம்பெறும்தானே.

குடி குடிப்போரே கேளுங்கள் ! குடி விற்போரே கேளுங்கள் ! இன்று  உங்களுக்கு மகிழ்ச்சி தருவதால் இச்செயலைச் செய்கிறீர்கள்.  ஆனால் இது  மகிழ்ச்சியைத் தராது. அப்படியே நிகழ்காலத்தில் மகிழ்ச்சி தந்தாலும் எதிர்காலத்தில் துன்பத்தையே தரும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

     கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்

     முடிந்தாலும் பீழை தரும் (திருக்குறள் – 658)

 

     சான்றோர்கள் போற்றாத செயல்களைச் செய்தால் இழிவுமட்டுமே உண்டாகும். குடிப்பதுபோல் நடிப்பது தவறு. நடிப்பதுபோல் குடிப்பது அதனைக் காட்டிலும் தவறு.  இதனை, உணர்ந்து தவறான வழியில் செல்லாதிருத்தலே பெருமைக்கு வழி. தெய்வப்புலவர் பேச்சைக் கேட்கலாம்தானே?

 

புதன், 23 ஜூன், 2021

கடவுள் இருக்கின்றார் – கவியரசர் கண்ணதாசன்

 


     “கடவுள் இருக்கிறார்”  என்று சொல்வதற்கே அஞ்சிநின்ற நாத்திக வாழ்விற்கு இடையே “கடவுள் இருக்கின்றான்” எனக்கவிதைபாடி மக்களுக்கு விழிப்புணர்வூட்டி ஒழுக்கத்துடன் வாழவழிகாட்டியவர் கவியரசர் கண்ணதாசன். தாயானவள், குழந்தை மதுக்கடையைத் தேடிச்சென்றால் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பாளா? மகன் எட்டி உதைத்தாலும் மயங்கும்வரை அடிவாங்கிக்கொண்டுதானே இருப்பாள். அத்தகைய தாயுள்ளத்தோடு, எவர் எதிர்ப்பையும் கண்டுகொள்ளாது, தீயவழியில் சென்ற மக்களுக்கு நல்வழிகாட்டிய பெருமை கவியரசருக்கு உண்டு. புலவர்கள் என்றாலே மக்களின் நல்வாழ்வுக்காகப் பாடுபவர்கள்தானே? அக்காலப் புலவராகவும் இக்காலக் கவிஞராகவும் புகழ்பெற்று மக்கள் உள்ளத்தில் நீங்கா இடம்பெற்றவர் இவர் ஒருவர்தானே?

     தாயானவள், வெளியே சென்றமகன் வீட்டிற்குள் நுழைந்ததும் ‘அவன் பசித்திருப்பானே’ என உணவு சமைத்துக் காத்திருப்பதைப் போல இறைவன் தன்னிடம் வருவோர்க்கு அருளை அள்ளித்தரக் காத்திருக்கிறான் என்று சான்றோர் குறிப்பிடுவர். நீ ஓரடி முன்வைத்தால் இறைவன் பத்தடி முன்வைப்பானல்லவா? ஆனால், எங்கெங்கோ செல்லும் கால்கள் இறைவனைத் தேடிச்செல்வதில்லை ; மாயை, செல்லவிடுவதும் இல்லை. இத்தகைய கொடுமையைக்கண்டு, காலந்தோறும் நல்வழிப்படுத்திய  அருளாளர்கள் ; சான்றோர்கள் ; பெரியோர்கள் ; கவிஞர்கள் பலர். அவர்களுள் சிறியோர் ; பெரியோர்  என்னும் வேறுபாடின்றி அனைவரையும் நற்றமிழால் நல்வழிப்படுத்தித் தமிழுள்ளங்களை ஈர்த்தவர் கவியரசர் கண்ணதாசன்.

     கடவுள் இருக்கின்றான் ; அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?

எனக்கேட்கிறார். கண்ணிருந்தால் தெரியவேண்டுமே? எனக்குத் தெரியவில்லை. அதனால் கடவுள் இல்லை எனக் கூறிவிடுகிறான். அவர்களுக்கு விடை கூறுகிறார் கவியரசர். காற்றைக் காணமுடிகிறதா? காணமுடியவில்லைதானே? உடனே, காற்று இல்லையென்று சொல்லிவிடுவீரா? என மறைமுகமாகக் கேட்கிறார்.

     காற்றில் தவழுகிறான் ; அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?

எனக்கேட்கிறார். குழந்தைகளுக்குப் பக்தியுணர்வை ஊட்டவேண்டியது யாருடைய கடமை? மக்கள் ஒவ்வொருவரின் கடமைதானே? வீட்டிலுள்ள பெரியவர்கள் கோவிலுக்கு நாள்தோறும் அழைத்துச்செல்வார்கள். அதனால், குழந்தைகளுக்குக் கடவுளிடம் மதிப்பு இருந்தது ; அச்சமும் இருந்தது. அதனால், எப்போதும் “கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்னும் அச்சத்தால் தவறும் செய்யாம ஒழுக்கமாக வாழ்ந்தனர் ; அதனால் பெருமை கூடிற்று ; உடல் நலமும் உள்ளநலமும் நன்றானது.

முதலில், குழந்தைகள் கடவுளை மதிக்கக் கற்றுகொண்டனர்; பின்னர் கடவுளைக்காட்ட கோவிலுக்கு அழைத்துச்சென்ற பெரியோர்களை மதித்தனர் ; பின்னர், ஒழுக்கமாக வாழவேண்டும் எனக் கற்றுக்கொடுத்த பெற்றோர்களை மதித்தனர். உடன்பிறந்த தமக்கையை, அண்ணனை, தங்கையை மதித்தனர் ; அவர்களைச் சுற்றியிருந்த உறவுகளை, சுற்றத்தாரை மதித்தனர். கற்ற கல்வியை மதித்தனர். இவர்களையெல்லாம் ; இவற்றையெல்லாம் மதிக்கவேண்டும் எனக்கற்பித்த ஆசிரியரை மதித்தனர்.  ஆனால், இன்று இவர்கள் அனைவருடைய இடத்தையும் கைப்பேசி விரட்டிவிட்டது. ஒரு கைப்பேசி இருந்தால் அவர்களால் வாழமுடியும். பத்து நிமிடம்  எந்திரங்கள் இன்றி அவர்களால் வாழமுடிவதில்லை. பொய்களை உண்மையாக எண்ணும் நிலை பரவிவிட்டது. உறவுகளை வெறுக்கும் நிலை பெருகிவருகிறது. கதவை தட்டினாலும், கைப்பேசியில் அழைப்பு வந்தாலும் ‘உச்’ கொட்டும் நிலைக்கு வந்துவிட்டதனைக் காணமுடிகிறது. எல்லோரும் வெளிச்சக்கண்ணாடிகளிடம் சிக்கிக்கொண்டு இருட்டில் வாழப்பழகிவிட்டிருக்கின்றனர். இப்படி ஏதேனும் ஒரு மாயையில் சிக்கிக்கொண்டு இறைவழிபாட்டில் கவனம் செலுத்தாதிருக்கின்றனர். காலக்கணிதமான கவியரசர் இதனையே,

இருளில் இருக்கின்றாய் ; எதிரே இருப்பது புரிகின்றதா?

எனக் கேட்கிறார். கண்முன்னால் நிற்கும் பெற்றோர்கள் தான் தெய்வங்கள். அவர்கள் சொல்லைக் கேட்காமல் புகைக்கவும், குடிக்கவும், எதிர்க்கவும் கற்றுக்கொடுக்கும் சில நடிகர்களின் சொல்லுக்குத் தவம் கிடக்கிறார்கள். பண்பாட்டைக் கெடுக்கும் நிலைகளைச் செய்தால் ஒத்துக்கொள்கிறார்கள். கடவுளையே கிண்டல் செய்யும் கொடுமையைப் பொறுத்துக்கொள்ளப் பழகியிருக்கிறார்கள். கடவுள் பெயரை வைத்தவர்களை இழிவுபடுத்தும் நிலையினையும் காணமுடிகிறது. தன் விரலைவைத்தே தன் கண்களைக் குத்தச் செய்யும் நாயகர்களை நம்புகிறார்கள்.

நம்முடைய பண்பாட்டை விளக்கும் மகாபாரதம், இராமாயணம் போன்ற  நல்லெண்ணங்களை விதைக்கும் காவியங்களைப் படமாக்க வெளிநாட்டார், வெளிமாநிலத்தார் முயல்கின்றனர். தமிழில் அத்தகைய தொடர்கள் எடுத்தால் நன்றாக இருக்கும்தானே? அரேபிய நாடுகளிலும் இராமாயணம், மகாபாரத ஒழுக்கங்களைக் குழந்தைகளுக்குக் கற்பிக்கின்றனர். உண்மையைக் கற்றுக்கொடுத்தால் மட்டுமே குழந்தைகள் ஒழுக்கமாக வளர்வார்கள். வீடும் நாடும் நலம்பெறும் என்பதனை உணர்ந்திருக்கின்றனர். உண்மை அமைதியாகத் தன் கடமையைச் செய்துகொண்டே இருக்கும். இதனை,

உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம் வெளியே தெரிகின்றதா?

என்னும் வினாவின்வழி உணர்த்தியுள்ளார்.  உண்மையின் வடிவாக இருக்கின்ற இறைவன், உள்ளத்தில் இருப்பதனையும் அது கண்ணுக்குத்தெரியாமல் மக்களை மகிழ்விக்கும் நிலையினையும் கவியரசர் உணர்த்தியுள்ளது எத்தனை அழகு?

     நாத்திகர்கள் இராமனையும், கிருஷ்ணனையும் எவ்வாறு நம்புவது? எனக் கேட்கின்றனர்தானே? அவர்களுக்கு உண்மையை உணர்த்த எவ்வளவு படிக்கவேண்டியிருக்கிறது ; எத்தனை அறிவுத்தேடல் வேண்டும். ஆனால், ‘இல்லை’ என்று சொல்வதற்கு அறிவு தேவையா? தேவையில்லைதானே? எனக்கேட்கிறார் கவியரசர். சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த மனிதர்களையே நூல்களின்வழிதானே தெரிந்து கொள்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகளாக வழிவழியாக கடவுளின் பெருமை பேசப்படுவதனை எப்படியெல்லாம் கொண்டாடவேண்டும். காலம் கடந்து நிற்கும் அவ்வுண்மைகளைச் சந்தேகிப்பது எத்தனை அறியாமை? என வினாத்தொடுக்கிறார் கவியரசர்.

புத்தன் மறைந்துவிட்டான்.அவன் போதனை மறைகின்றதா?

எனப்பாடி உண்மை என்றும் அழியாது நிலைக்கும் என்பதனை உணர்த்தியுள்ளார்.

சத்தியம் தோற்றதுண்டா? உலகில் தர்மம் அழிந்ததுண்டா?

எனக்கேட்கிறார். வாழ்நாள் முழுதும் கடவுள் வாழ்ந்துகாட்டிய தர்மங்களைச் சொல்லிக்கொடுக்கவேண்டும். குழந்தைகள், தவறான வழியில் சென்று வாழ்வை அழித்துக்கொள்ளக்கூடாது. நல்லவர்களாகவாழ, கடவுளின் திருவிளையாடல்களை விளக்கவேண்டும். அப்படியும் ஏற்றுக்கொள்ளாது கயவர்களின் பேச்சில் மயங்கி நிற்போரிடம்

     இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும் சஞ்சலம் வருகின்றதா?

எனக் கேட்கிறார். எதிரிநாடுகள் நேரடியாக நமது நாட்டை எதிர்க்கமுடியாது என உணர்ந்துகொண்டனர். மாற்றுவழியாக, காசு வாங்கிக்கொண்டு தொழில்செய்யும் கயவர்களை உள்நாட்டில் தேடுகின்றனர். அவர்களைத் தேர்வு செய்து பணத்தைக்கொடுத்து, நாட்டில் குழப்பம் விளைவிக்கின்றனர். தன்விரலை வைத்து தன்கண்ணைக் குத்துவதுபோல் நம்நாட்டவரைக்கொண்டே நாட்டில் குழப்பங்களை உண்டாக்குகின்றனர். இந்நிலை, குடிக்கக் காசின்றி அடிமைப்படும் கடைமகனிலிருந்து மிகுந்த செல்வாக்குள்ள விலைபோகும்நடிகர்வரை பரவியிருக்கிறது.

உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடான இந்தியாவை வீழ்த்தமுடியாமல், நாட்டையேகாட்டிக்கொடுக்கும் இழிவானவர்களை விலைக்குவாங்கி முதலில் பண்பாட்டை அழிக்கின்றனர் ; படிப்படியாக போதையைக் கற்பிக்கின்றனர் ; வன்முறைகளுக்கு அடிமையாக்கி இளையோரின் ஆற்றலை, குழந்தைகளின் அறிவுத்திறனை ஒழித்துவிடுகின்றனர். இதனை உணராத குழந்தைகள் “நடிகர்களே தம்மை வழிபடுத்தும் நல்லவர்கள்” என நினைக்கின்றனர். அவர்களிடமிருந்து புகைபிடிப்பது, குடிப்பது என தீயபழக்கங்களைக் கற்றுக்கொள்கின்றனர்.  நடிகர்கள் பெண்களை ; பெரியோர்களைக் கிண்டல்செய்வதைப் பார்த்துப்பார்த்து குழந்தைகளும் பெண்களை ; பெற்றோரை எதிர்த்துப் பேசுகின்றனர். இதனால் தம்மைத்தாமே அழித்துக்கொள்ளும் நிலை உருவாகிவிடுகிறது.

கடவுள் இயற்கையின் வடிவமாக நின்று உயிர்களைக் காக்கின்றார். இதனை உணராது இயற்கைக்கோ ; ஏதேனும் ஒரு உயிருக்கோ, கேடு செய்வாராயின் கடவுள் தண்டிக்காமல் விடமாட்டார். “பிற உயிர்களைத் தாக்குவது தர்மம் இல்லை” எனக் கற்றுக்கொடுத்த இறைக்கோட்பாட்டை கடவுளன்பர்கள் பின்பற்றுவர். இதனை அறிந்துகொண்ட கயவர்கள் மென்மையானவர்களை எதிர்க்கின்றனர். இது எத்தனை இழிவு. தாயின் கவனம் மென்மையான குழந்தையிடமே இருக்கும். அதுபோலவே கடவுள் நல்லோரைக் காப்பார். இதனை உணராது கேடு செய்தால்,

     காலத்தில் தோன்றி ; கைகளை நீட்டி ; காக்கவும் தயங்காது

என்கிறார் கவியரசர். இறைநாட்டம் உடையவர்கள் எந்நாளும் கடவுளின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதனை எடுத்துக்காட்டுகிறார். தலையில் சுமைவைத்துக்கொண்டு நடப்பவர்களைவிட, சுமை இல்லாமல் நடக்க வழிசெய்தவர் கடவுள்தானே? ஏனென்றால், இறையடியார்கள் தம் சுமைகளை இறைவனிடம் ஒப்படைத்துவிடுகிறார்கள்தானே? இப்படித்தான் வாழவேண்டும் என வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக்கொடுத்தவர் கவியரசர்.

கவியரசர் விதைத்த விதைகள் இன்று விருட்சமாகி எத்தனையோ நல்லவர்களை உருவாக்கி இருக்கிறது. இந்தக் கடவுள் பக்தி  உண்மையானது. அதனைக் காணமுடியாது ; அதனைக் கட்டுப்படுத்த முடியாது ; அதனை அடக்கிவிடமுடியாது என்பதனை,

நீதி தெருவினில் கிடைக்காது ; சாட்டைக்கு அடங்காது ; நீதி சட்டத்தில் மயங்காது 

எனப் பாடியுள்ளார். உலகியல் நீதிமன்றத்திற்கு சாட்சி தேவை. இறைவனுடைய நீதிமன்றத்தில் உண்மையான வாழ்வே சாட்சியாகும்  என்பதனை உணர்த்தியுள்ளார்.

     இப்பாடலைக் கவியரசர், புரட்சித்தலைவர் எனக்கொண்டாடப்பட்ட எம்.ஜி.ஆர் அவர்களின் ‘ஆனந்த ஜோதி” படத்துக்காக எழுதினார். எம்.ஜி.ஆரைத் தம் தலைவராக மக்கள் கொண்டாடிய காலகட்டம்அது. இச்சூழலைப் பயன்படுத்திக்கொண்டு தொண்டர்களிடம் கடவுள் பக்தியை விதைத்து ஒழுக்கமாக வாழவழிவகுத்தார் எம்.ஜி.ஆர். இவ்வாறு, நடிகர்கள் ஒவ்வொருவரும் ரசிகர்களின் ஒழுக்கத்தைக் காக்க ; பண்பாட்டைக் காக்க ; உடல் நலம் காக்க ; உயிரைக் காக்கத் துணை நிற்பாராயின் படத்தில் மட்டுமன்று ; வாழ்விலும் நாயகராய் வலம்வருவார்தானே?

      மக்களை நல்வழிப்படுத்த எண்ணிய கவியரசரின் ஒவ்வொரு சொல்வெட்டும் உள்ளத்தில் பதிக்கவேண்டிய கல்வெட்டுதானே. கவியரசர் கவிதைக்கு இணங்குவோம் ; கடவுளை வணங்குவோம்.

 

*****************