தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

புதன், 2 டிசம்பர், 2020

வேலு நாச்சியார் - வீரத்தமிழ் ராணி - Great Tamil Queen Velu Naachiyaar

 

செப்பேடுகளைச் செதுக்கிய எழுதுகோல்

       வரலாறு – சமூகத்தைப் புரட்டிப்போடும் வலிமை உடையது. உண்மைகளைப் பொய்களாகவும் பொய்களை உண்மையாகவும் காட்டிவிடும் வரலாறுகள் வாழ்க்கைப் பதிவுகளாகிவிடுகின்றன. வரலாறுகள் வெற்றிபெற்றவர்கள் மட்டுமே எழுதக்கூடிய ஆவணமாகிப் போனதனால் தோல்வியடைந்த வீரர்களின் வீர வரலாறு காணாமல் போனது. அத்தகையவர்களின் உண்மையான வரலாறுகளைத் தேடிக்கண்டுபிடித்துப் பதிவுசெய்வது வாழ்நாளின் பயனாகவே கொள்ளவேண்டி இருக்கிறது. அத்தகைய அரும்பணியினைச் செய்ய விழைந்துள்ள இந்நூலாசிரியர் கலைவரதன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

       வரலாறு என்னும் சொல், வந்த வழி என்னும் பொருளினை உள்ளடக்கியது. இனத்தின் பெருமை அவ்வினத்தின் வரலாற்றினைக் கொண்டே உணரமுடியும். இதனை பல்வேறு சூழலில் நன்கு உணர்ந்துள்ளார் இந்நூலாசிரியர். மத்திய கலால் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி பணி நிறைவு பெற்றுள்ளதால் பட்டறிவுக்குப் பஞ்சமில்லை என்பதனை ஒருவாறு உணர்ந்துகொள்ளமுடியும். எதைச் சொல்வதனாலும் சான்றாவணத்துடன் சொல்லவேண்டும் என்னும் பாடம் அவருக்குக் கை வந்த கலை. ஏனென்றால் அவர் கலைவரதனன்றோ ?. எனவே தான், வீரமங்கை ராணி வேலு நாச்சியாரின் (வீமராவேநா) வாழ்க்கை வரலாற்றினைப் பதிவு செய்திட விழைந்தவர் குற்றம் குறை நிகழாதவாறு படங்களுடன் தம் கருத்துக்களைப் பதிவிட்டுள்ளார்.

       தமிழினத்தின் பண்பாட்டைக் காக்கும் நோக்கில் வீமராவேநா. வரலாற்றை நூலாக்க விழைந்துள்ளது நூலாசிரியரின் இனப்பற்றை எடுத்துக்காட்டுகிறது. வீரம் விளைந்த மண், பெண்ணின் பெருமை என்னும் இருகூற்றையும் இருப்புப்பாதை போல இந்நூல் எடுத்துரைக்கிறது. பெண்ணை அழகுப் பதுமைகளாகவே எடுத்துக்காட்டி முடக்கிவைத்துவிட்ட இச்சமூகத்தில் பெண்ணின் பெருமையினை ; வீரத்தினை ; அறிவுத்திறத்தை எடுத்துக்காட்ட விழைந்துள்ள இம்முயற்சி பாராட்டத்தக்கது.

       தமிழர்களின் வீரம் வரலாற்றில் பெரும்பாலும் எடுத்துரைக்கப்படவில்லை. காரணம், எழுதியவர்கள் தமிழர்களாய் இல்லை என்பதனைத் தவிர வேறில்லை. அவர்களுள் மிகச்சிலர் தமிழர்களின் வீரத்தை இருட்டடிப்பு செய்துள்ளதனை வரலாற்றின் வழி கற்றுணர்ந்துள்ளார். அக்குறைகளைக் களையவே இந்நூலை வடித்துள்ளார். தமிழர்களை எந்நாளும் ; எவரும் வீரத்தால் வெற்றிகொண்டார்கள் என்பதனை எங்கும் பார்க்கவே இயலாது. மாறாக, தமிழரை எதிர்த்து நின்றவர்களின் தோல்விகளையே பெரிதாக வரலாறு எடுத்துரைக்கிறது. மாவீரன் அலெக்ஸாண்டர் முதல் கஜினி முகம்மது வரை பலரும் தமிழர்களிடம் தோற்றதை வரலாறு எடுத்துரைக்கவில்லை. துரோகத்தால் வெற்றிகொள்வதும் தோல்விக்கே நிகராகும். தொடக்கம் முதலே தமிழர் வீரம் எடுத்துரைக்கப்படவில்லை. ஆங்கிலேயரை எதிர்த்த வீமராவேநா. வரலாறும் முறையாக வரலாற்றில் பதிவுசெய்யப்படவில்லை.

       சிவகங்கையை ஆண்ட முத்துவடுகநாதப்பெரிய உடையாத்தேவரின் மறைவுக்குப் பின் மக்களைக் காக்க யாருமில்லாத சூழல் உருவானது. அத்தகைய இக்கட்டான சூழலில் மறைவிடத்தில் இருந்துகொண்டே படையைத் திரட்டி மீண்டும் ஆட்சியைப் பிடித்தார் வீமராவேநா.  இவ்வரலாற்றை காலப்பின்னணியுடன் எடுத்துக்காட்டுகிறார் நூலாசிரியர். ஆங்கிலேயரின் பிரித்தாளும் சூழ்ச்சியினை அறியாது நம்மவர்களே நம்மைக் காட்டிக்கொடுத்த வரலாறுகள் எண்ணிலடங்கா. அவ்வாறு பல துரோகங்களை எதிர்கொண்டு வெற்றிநடையிட்ட வீமராவேநா. புகழினை இந்நூல் சிறப்புற எடுத்துரைக்கிறது.

       உயிரை விடத் தன்மானம் பெரிது. வீரம் என்பது ஆயுதங்களில் இல்லை உள்ளத்தில் இருக்கிறது என நிறுவிய வீமராவேநா.-இன் படைத்தளபதிகளும், வீராங்கனைகளும், பொதுமக்களும் வாழ்ந்துச்சிறந்ததனை எடுத்துக்காட்டியுள்ளார் நூலாசிரியர்.  ‘வரிகேட்டு வந்தான் நெறிகெட்டுப்போனான்’ என்னும் தலைப்பில் வீமராவேநா- இன் பன்மொழிப்புலமை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது அருமை. வீரபாண்டிய கட்டபொம்மனும் ஜாக்சன் துரையும் பேசிக்கொள்ளும் காட்சி போல மன்னர் முத்துவடுக நாதருக்கும் கும்பெனி லார்டு டீகாட்டுக்கும் பேசும் காட்சியைக் காட்டுவது சிறப்பு.   ‘பிஞ்சு இதயத்தில் மிஞ்சிய தியாகம்’ என்பது போன்ற துணைத்தலைப்புகள் கவிதை நடையில் அமைந்துள்ளது இந்நூலுக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. மருது சகோதரர்களின் பண்பு, உடையாளின் வீரம், குயிலியின் தியாகம் என ஒவ்வொரு வரலாற்றுப்பாத்திரத்தையும் எடுத்துரைத்துள்ள சிறப்பு போற்றத்தக்கது. ஒவ்வொரு காட்சியினையும் அழகுற எடுத்துள்ளதனை சுவைஞர்கள் (வாசகர்கள்) இந்நூலினைப் படித்து இன்புற வேண்டும் என்னும் கருத்தினை உள்ளத்தில் கொண்டே நூலின் அருமையினை விளக்கிக்கூறவில்லை.

       திசம்பர் திங்கள் இருபத்தைந்தாம் நாள் (25.12.1796) தம் வீரப்பயணத்தை நிறைவு செய்துகொண்ட வீமராவேநா.-இன் புகழினை இந்நூலில் ஒவ்வொரு காட்சியாகப் படம்பிடித்துக்காட்டியுள்ளார். இனி திசம்பர் இருபத்தைந்தாம் தமிழர் தன்மானம் காக்கும் நாளாக ; பெண்ணின் பெருமை பேசும் நாளாகக் கொண்டாடவேண்டும் என்னும் விழைவை இந்நூல் ஏற்படுத்துகிறது. அவ்வகையிலும் இந்நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கது.

       சிவகங்கைக்குச் சென்று அரண்மனையினையும், வீமராவேநா- இன் திருவுருவத்தினையும்,   மன்னர் பட்டியலையும், சமாதியினையும், நினைவுத்தூண்களையும் படமாக இணைத்துள்ளது சான்றாதாரத்திற்குப் பெரிதும் துணைபுரிகின்றது. இந்நூலின் சுருக்கத்தை ‘மானம் காத்த மங்கை நாச்சியார்’ என்னும் கவிதையாகவும் இந்நூலில் இணைத்துள்ளது இவருடைய கவிப்புலமைக்குச் சான்று.

       பணிநிறைவுபெற்றபின் வாழ்க்கையே முடிந்துவிட்டதுபோல் சோர்வடையும் இயல்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டு புதுமையான வாழ்க்கையைத் தொடங்கியிருக்கக்கூடிய நூலாசிரியருக்குப் பாராட்டுக்கள். முன் அறுபது அரசாங்கத்திற்காகப் பணி செய்தவர் பின் அறுபதில் நாட்டின் பெருமையினை ; இனத்தின் அருமையினை ; மொழியின் வளமையினைக் காப்பதற்காகச் செலவிடவேண்டும் என வாழ்த்துவதில் பெருமையடைகிறேன்.

 

 

செவ்வாய், 1 டிசம்பர், 2020

வானவில் கே. ரவியின் படைப்பாளுமை - காற்று வாங்கப்போனேன் - Vanvail K. Ravi's " I went to buy breeze"

 

சூரிய ஒளியில் சந்திரக் கவிதைகள் – ரவியின் கவிப்பயணம்

(முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், துணைப்பேராசிரியர், காஞ்சிமாமுனிவர் அரசுப் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி-8. உலாப்பேசி :99406 84775)

எழுத்து வளர்ந்து சொல்லாகிறது ; சொல் வளர்ந்து தொடராகிறது. தொடர்கள் வளர்ந்து படைப்பாகிறது. இவ்வாறு வெளிவரும் ஒவ்வொரு படைப்பின் பின்னும் ஒரு படைப்பாளியின் பிரசவ முயற்சி இருப்பதனைக் காணமுடிகிறது. தாயாகும் பெண்ணின் தவத்தால் பிறக்கும் குழந்தைபோலவே படைப்பாளியின் எண்ணம் கருவாகி உருவாகி தருவாகிறது. படைப்பென்னும் இத்தரு சமூகத்திற்கு பூ, காய், கனி, நிழல் எனப் பல நிலைகளில் பயன்தருவதாக அமைதல்வேண்டும். சில தருக்கள் மருந்தாகவும் சில தருக்கள் விருந்தாகவும் அமைவதும் உண்டு. அவ்வகையில் தன்வரலாற்றினை ; கவிதைப் பயணத்தைக் குறித்துக் கட்டுரையாகத் தொகுத்துள்ள ‘வானவில்’ கே. ரவியின் ‘காற்று வாங்கப் போனேன்’ படைப்பின் திறத்தைக் காண்பதே என்னுடைய உரைப்பொருள்.  

வானவில் படைப்புகளுள் கவிதை வண்ணம்

        ஏழு நிறங்களைக் கொண்ட வானவில்லைப் போல் – “நமக்குத் தொழில் கவிதை, உன்னோடு நான், மின்னற்சுவை, சொற்களுக்குள் ஏறிக்கொள், வள்ளுவரின் வாயிலில், காற்று வாங்கப்போனேன், இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு, என்னும்  ஏழு படைப்புகள் படைப்பாளி ரவியின் எண்ண நிறங்களைக் காட்டுகின்றன.

இப்படைப்புகளுள் ‘காற்று வாங்கப் போனேன்’ என்னும் நூலில் தனது கவிப் பயணத்தைக் கட்டுரையாகப் படைத்துள்ளார் நூலாசிரியர்.  கவிதைகள், கற்பனை வழிந்த கலை மட்டுமன்று ; உயிரைப் பிழிந்து வடிக்கும் கலை என்பதனை அவருடைய ‘காற்று வாங்கப் போனேன்’ என்னும் கவிப்பயணக்கட்டுரை நூலின் தொடக்க நிலையிலேயே உணர்த்திவிடுகிறார். அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனினும் அரிது வழக்கறிஞராக சிறத்தல் ; அதனினும் அரிது வழக்கறிஞர் கவிஞராக சிறத்தல். ஆனால் இரு துறைகளிலும் முத்திரைப் பதித்த படைப்பாளியின் திறத்தைக் ‘காற்று வாங்கப் போனேன் இயல்பாக ஒரு நதியின் பயணத்தைப் போல எடுத்தியம்புகிறது. 

கவிதையின் வழி கவிஞனின் உள்ளத்தை அறிவது அரிது ; அதனைக் கட்டுரையாக வடித்துக்கொடுத்தபின் அறிதல் எளிது. அத்தனை முயற்சிகளையும் -  முயலாமைகளையும் அருள்நிலையோடு எழுதிய தருணங்களையும் ரவி இந்நூலில் எளிய நடையில் எடுத்தியம்ப விழைந்துள்ளார். மன மகிழ்வோடும் - வலிகளோடும் எழுதிய நிலைகளையும் எழுத்து வண்ணங்களாக்கியுள்ளதனை ஐம்பத்து மூன்று பகுதிகளாக வகுத்துக் கொடுத்துள்ளார். தம் வாழ்க்கை வண்ணத்தை உயிரோட்டமான கட்டுரைகளாக வடிக்கவேண்டும் என்னும் விழைவு, முயற்சி அத்தனையும் உயிர்பெற்று ‘காற்று வாங்கப் போனேன்’ என்னும் நூல் வடிவில் வெளிவந்துள்ளதனைக் காணமுடிகிறது.

ரவி எழுதிய கவி

        கவிதைக்கும் காற்றுக்குமான வயதினை அறிதல் இயலாது. இவை ஏதேனும் ஒரு வகையில் உருக்கொள்ளும்போது பிறப்பின் அடையாளம் பதிவாகிவிடுகிறது. காலம் இரண்டினையும் தேவைக்கேற்ப உருவாக்கிக்கொள்கிறது. அவ்வாறு கவிதையே தன்னைத் தேர்வு செய்துகொண்டதனை இக்கட்டுரையாசிரியர் எடுத்தியம்பியுள்ளார். “கவிதை எனக்குப் பயன்படுகிறது என்பதைவிட, அதை நான் பயன்படுத்திக்கொள்கிறேன் என்பதைவிட, ஒரு கருவியாகக் கவிதை என்னைப் பயன்படுத்திக்கொள்கிறதோ என்றுதான் எண்ணத்தோன்றுகிறது” (காவாபோ.,ப.5) கவிஞனை எடுத்துக்காட்டும் கட்டுரையாசிரியராகவே படைப்பாளி இந்நூலில் புலப்படுவதனால் கட்டுரையாசிரியர் என்பதே சாலவும் நன்று என எண்ணி அவ்வாறே குறிப்பிடலாம் என எண்ணுகிறேன்.  

பேரறிவே கவிதை

                கவிதை கற்பனையின் பிழிவு என்பதே பொதுவான கருத்து. கவிதை என்பதே (க)விதையினை உள்ளடக்கியதுதானே. அதிலிருந்து விருட்சங்கள் எழுவதும் விதைகள் விழுவதும் தொடர் நிகழ்வு. எனவே, ஒரு கவிதையானது கவிதையை மட்டுமன்று ; ஒரு கவிஞனையும் உருவாக்கிவிடுகிறது.

கவிதை பொழுதுபோக்கு என்னும் நிலையினின்று உயர்ந்து நிற்பதனைக் காணமுடிகிறது.  எனவே, அதனைக் கவிஞனின் அறிவிப் பிழிவு எனக் காட்டுகிறார் ரவி. அறிவினை, சிற்றறிவு, பேரறிவு என இருவகைப்படுத்துகிறார் ரவி. “அறிவு ஆயிரம் சொல்லும். அதனால்தான்  அதைச் சிற்றறிவு என்கிறோம். அதனைக் கடந்துபோனால்தான் பேரறிவாகிய அருட்கடலில் நீந்தமுடியும். கவிதை அந்தப் பேரறிவோடு சம்பந்தப்பட்டது” (காவாபோ.,ப.6) எனக் குறிப்பிட்டுள்ளதன் வழி கவிஞர்களுக்குரிய பெருமிதத்தைப் புலப்படுத்துகிறார் ரவி.

“அறிவு ஆக்கும் கருவி இல்லை. அதனால்தான் அதனைச் சிற்றறிவு என்கிறோம். பேரறிவு என்ன என்றால் ... அட, காற்று நின்றுவிட்டதே! மரம் செடி கொடிகள் ஆடாமல் அசையாமல் மௌனத்தை அடைகாக்கின்றன. காற்று மீண்டும் வரக்கூடும். வரும் . காத்திருக்கிறேன். வரட்டும் மேலும் எழுதுகிறேன். வந்தால்” (காவாபோ.,பக்.7,8) என்னும் அடிகளின்வழி கவிதை பிறக்கும் சூழலை ; பெருமிதத்தை சுட்டிக்காட்டுகிறார் ரவி.

செய்யுளின் பிறப்பு – தமிழ்மொழியின் சிறப்பு

        தமிழ்மொழி கவிதை வடிவில் எழுதப்பட்ட முதல்மொழி. அதனால் தமிழ்மொழியைக் கவிதை மொழி என்பதே சிறப்பு. எத்தனை அருமையான வடிவில் வளமான கருத்துக்களைச் சுருக்கிச் செதுக்கி வைத்துள்ளது தமிழ் . இன்றைய தமிழ் வாரிசுகளாலேயே எளிதில் உணர்ந்துகொள்ளஇயலாத அளவிற்கு வளமான சொற்கள் கொண்டவை அவை. அத்தகைய செழுமையான வடிவில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே புனையப்பட்டதெனில், எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ் தோன்றியிருக்கவேண்டும் என்பதனை எண்ணிப் பார்த்தால் அந்நியரும் வியப்பர் ; தமிழரை மதிப்பர். அவ்வாறு சுருக்கி எழுதப்பட்டதற்குக் காரணம்  பனையோலையில் எழுதும் வழக்கம் இருந்தமையாலேதான் என்பதனையும் எண்ணிப்பார்க்க முடிகிறது.

பனை ஓலை சிதைந்தாலும் மொழி சிதையாமல் இருக்கவேண்டும் என்னும் நோக்கில் அருமையான இலக்கிய வடிவத்தைக் கையாண்ட திறத்தை வியக்காதிருத்தல் இயலாது. இதனையே “அச்சுத் தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்படாதபோது, எழுதி வைப்பவற்றைத் தக்கமுறையில் பாதுகாக்க வசதிகள் இல்லாதபோது, தான் சொல்வதைக் கேட்பவர் மனப்பாடம் செய்து அப்படியே பிறருக்குச் சொல்லக் கூடியவாறு சொல்லும் வழக்கம் உண்டாயிற்று.” (காவாபோ.,ப.6) எனக் குறிப்பிட்டுள்ள ரவியின் எண்ணம் கவிஞர்களின் படைப்புத் திறனை எடுத்துரைக்கிறது. ஓய்வு நேரங்களில் மனனம் செய்துச் சொல்லும் அழகு எத்தனை தவம் என்பதனை எடுத்துக்காட்டியுள்ளார் கவி ரவி.

சொற்கள் – சுடர்ப்பொறிகள்

        இயற்கை தன்னையே கவிதையாக வடித்துக்கொள்கிறது. கவிஞன் இயற்கையைக் கவிதைக்குள் அடக்கிவிட எண்ணுகிறான். அவ்வாறு எழுத முனைந்து தோற்பதிலும் மகிழ்ச்சிகொள்கிறான்.

 

        மனமலரைத் தென்றல் வருடிவிடும் –

ஒளி மகரந்தங்கள் சிதறி விழும்

தினமிது போல் சில கவித்துளிகள்

எட்டுத்திசைகளிலும் விழும் சுடர்ப்பொறிகள்” (காவாபோ.,ப.10)

என்னும் ரவியின் கவிதை கவிஞர்களின் எண்ணத்தைப் படம்பிடித்துக்காட்டிவிடுகிறது.

தன்னை இழப்பவனே கவிஞன்

        பெண் தன்னை இழந்து மகவைப் பெற்றெடுப்பது போல் கவிஞன் தன்னை இழந்து கவிதையைப் பெற்றெடுக்கிறான்.

        “மனைவி மக்கள் என்பதெல்லாம் மரணம் வரையிலே

மனையும் பொருளும் தேகத்தை நான் மறக்கும் வரையிலே – நீ ...

இந்த இடத்தில் ஏனோ என் தொண்டையடைத்துக் கொண்டு விட்டது. மேலும் பாடவரவில்லை” (காவாபோ.,ப.14,15) என்னும் அடிகள் ரவி கவிப்பொருளுக்குள் மூழ்கித் தன்னை மறந்த நிலையினை எடுத்துரைக்கின்றன.

இறைவன் என்னும் கவிஞன்

         இறைவன் எழுதும் ஒவ்வொரு கவிதையும் இவ்வுலகில் ஒவ்வொரு உயிராக வலம்வருகிறது. அதில் சிறந்த கவிதையாக மனிதன் இருப்பதனாலேயே ‘அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ எனத் தமிழ்மூதாட்டி விளக்கியுள்ளார்.  அதிலும் கவிஞர்கள் இறைவனின் ஆகச்சிறந்த படைப்பாக இருப்பதனை

        நீ ஏற்றி வைத்த தீபம் மட்டும் அணைவதில்லையே

        எந்தக்காற்று வந்து மோதினாலும் கலைவதில்லையே

        இறைவனே ! இறைவனே !

என்னை எழுதிடும் கவிதையே (காவாபோ.,ப.15)

என்னும் ரவியின் கவி எழிலுற எடுத்தியம்புகிறது.

உயிரில் கலந்த நகைச்சுவை

        ‘புன்னகை பொன்னகையை விட சிறந்தது’ என அறிந்திருந்தும் செயல்வடிவம் கொடுப்போர் ஒரு சிலரே. அவ்வரம் பெற்றோர் வரிசையில் இடம்பெறுகிறார் கட்டுரையாசிரியர் ரவி. கவிதையிலும் கட்டுரையிலும் நகைச்சுவை விரவி நிற்பது இவருடைய படைப்பிற்குப் பெருமை சேர்க்கிறது. சுவைஞர்களின் ஆர்வத்தைக் கூட்டுகிறது.

நூலாசிரியரின் வளர்ப்புத் தந்தை கல்யாணராமனின் அன்பில் கரைந்தவர் ரவி. அவருடைய அளவில்லாத அன்பினை “இருபதாவது பிறந்தநாள் பரிசாகத் தன் மகனுக்குச் சாய்வு நாற்காலி வாங்கித்தந்த ஒரே தந்தை” (காவாபோ.,ப.18) என நகைச்சுவைப் பூச்சுடன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கவியரசர் கண்ணதாசன் எந்நிலையிலும் அஞ்சாது கவிபாடும் திறன் பெற்றவர் என்பதனைத் தமிழுலகம் அறியும். அவரிடமே துணிந்து அறிவுரை கூறிய ரவியின் திறத்தை “அன்று இளமைக்கே உள்ள துடிப்போடும் குறும்போடும் கவிதை படித்தேன் ; மன்னிக்கவும். இப்பவும் உண்டுங்க. நான் எப்பவும் இளைஞன் தானுங்க. (அடடா, இந்தப் பல்லவி நல்லா இருக்கே!) (காவாபோ.,ப.48) என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.

“குடியாலே குழறுகிற நாவில் உண்மை குடியிருக்க முடியாது மறந்துவிட்டார்

பிடிவாதம் செய்யாமல் விடச்சொல்கின்றேன்-பிழைதிருத்த வரவில்லை. விண்ணப்பம்தான்.

(காவாபோ.,ப.48)

என்னும் கவியரசிடம் ரவி கொண்ட காதல் கண்டிப்பினை எண்ணி மகிழலாம்

ரவியின் கவியுள்ளம்

         பாடாத பொருளைப் பாடவேண்டும் என்பதே கவிஞனின் விழைவு. கவிதை எழுதுவது கடிதம் எழுதுவதைக் காட்டிலும் எளிமையானது என எண்ணும் ரவியின் எழுத்துக்கள் புலமைக்குக் கட்டியம் கூறுவன.

“முதிராத மகரந்தப் புதிரோடு தவம்செய்யும் மொட்டுக்களுக்கு ஒரு பாட்டிசைப்பேன்- அந்த

மௌனத்தின் வாசலை மோதித் திறக்கும் – பனி முத்துக்களுக்கு ஒரு பாட்டிசைப்பேன்”     (காவாபோ.,ப.6)

என்னும் அடிகள் ரவியின் கவிபாடும் திறனை எடுத்துரைக்கின்றன.

புத்தி சிகாமணியும் மனோன்மணியும்

        கவிஞர்கள் கட்டுரை எழுதுவது அரிது. கவிதையில் மக்களுடன் நேருக்குநேர் பாடிப் பழகியவன் கவிஞன்.  அத்தகைய கவிஞன் கட்டுரை எழுதும்பொழுது கவிதை நடை இயல்பாகவே வசியப்பட்டுவிடுகிறது. அவ்வகையிலேயே ரவியும் தன்னுடைய கட்டுரைப்பொழிவிற்காக தன் மனசாட்சியினைப் பாத்திரமாக்கிக் கொண்டிருக்கிறார். அப்பாத்திரங்களோடே வினா விடை அமைத்துள்ளது சிறப்பாகவே அமைகிறது. அப்படி அமைந்த எண்ண நாயக நாயகியே புத்தி சிகாமணியும் மனோன்மணியும். கவிஞனை வேறு யாரும் கேட்க முடியாத கேள்விகளை மிக எளிதாகக் கேட்டு விளக்கம் தரும் பாத்திரங்கள் அவை. இப்போக்கு கவியின் எண்ண ஓட்டத்தின் அருமையினை ; படைப்பாளியை வெளிப்படையாக விளக்கி நிற்கும் போக்கினைக் காணமுடிகிறது. காற்றுக்கும் கவிதைக்குமான நெருக்கத்தினை ரவியும் சிகாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அதற்குப்பின் திருக்குற்றாலக்குறவஞ்சி “வானரங்கள் கனிகொடுத்து மந்தியோடு கொஞ்சும்” என்னும் சந்தத்துடன் ஒத்த பாடலைப் புனைகிறார் ரவி.

“காற்றுவந்து கைப்பிடித்துக் கூட்டிச்செல்வதெவ்விடம்

காதல் கவிதை பாடல் நெஞ்சில் கண்சிமிட்டும் ஓவியம்

தோற்றம் என்பதா – ஒரு தொடர்கதையாய் வளர்கிறதா (காவாபோ.,ப.23)

காற்று வேறு கவிதை வேறு

இரண்டும் ஒன்றாய் இணையும்போது பாடல் உருவாகும் –

அதில் பார்வை தெளிவாகும் (காவாபோ.,ப.25)

என்னும் அடிகளின் வழி இயற்கையழகு கவிஞனை உருவாக்கிவிடும் திறத்தினைப் புலப்படுத்துகிறார் ரவி. “நாம் காற்றைத் தேடுவதுபோல் காற்றும் கவிதை தேடுகிறதோ என்று சகோதரி கீதா மதிவாணன்” (காவாபோ.,ப.26) குறிப்பிட்ட அழகினையும் எடுத்துக்காட்டி காற்றுக்கும் கவிதைக்குமான இணக்கத்தைத் தெளிவுபடுத்துகிறார் ரவி.

 

நாடகப் போக்கில் கட்டுரை

        கட்டுரை என்பது கருத்துக்களின் செறிவு. சொற்களைப் பொருளோடு கட்டி உரைக்கும் கலை. அவ்வகையில் தாம் கடந்து வந்த பாதையினை நாடகப்போக்கில் எடுத்துரைப்பதனைக் காணமுடிகிறது. “புத்தி சிகாமணிக்கு ஒரு மனைவி உண்டு என்று சொன்னேன் இல்லையா? அவள் பெயர் மனோன்மணி என்று வைத்துக்கொள்ளலாமே. அவள் ஒரு கற்பனைப் பாத்திரமென்று எண்ணிட வேண்டாம். அவள்தான் கற்பனை. கற்பனைதான் அவள்” (காவாபோ.,ப.28) என்னும் இவ்வடிகள் படைப்பாளியின் நாடகப்பாங்கில் அமைந்த தெளிவான எண்ண ஓட்டத்திற்குச் சான்றாக கிறது.

வரங்களே திறன்களாக

        பேச்சுக்கலையில் வல்லவராக இருப்பது அரிது ; நகைச்சுவை கலந்து பேசுவது அதனினும் அரிது. திறமாகச் சட்ட நுணுக்கங்களை அறிந்து பேசுவது அதனினும் அரிது ; பேச்சோடு கவிதை புனைதல் அதனினும் அரிது ; கவிதைப் புனைந்து மனம் நெகிழப்பாடுதல் அதனினும் அரிது ; அப்பாடலையும் ராகத்துடன் பாடுதல் அதனினும் அரிது ; அவ்வாறு பாடிய சூழலை கட்டுரையாகச் சுவை குன்றாமல் கூறுதல் அதனினும் அரிது. அவ்வாறு இந்நூலில் ஒவ்வொரு சூழலில் எந்த ராகத்தில் என்ன பாடலைப் பாடினார் எனக்குறிப்பிட்டுச் செல்வதனை இசை அறிந்தவர்கள் மேலும் சுவையாகப்பாடி மகிழ இயலும். இத்தனைக் கலைகளைப் பெற்றிருந்தாலும் தன்னை உயர்ந்தவராகக் காட்டிக்கொள்வதற்கு பிறிதொரு காரணத்தைக் கூறிச்செல்வது படைப்பாளியின் தன்னடக்கத்தின் வெளிப்பாடு ; அடக்கம் அழகினுள் உய்க்கும் அந்த அடிகள் –“சுரதா, ஔவை நடராஜன், சுகிசிவம், இசைக்கவி ரமணன், வ.வே.சு. போன்ற பெரிய மனிதர்களோடு என் வாழ்க்கை நிகழ்ச்சிகள்  பின்னியிருப்பதால், சுயசரிதை எழுதும் அளவுக்கு நானும் பெரிய மனிதன்தான் என்ற நம்பிக்கையோடு எழுதுகிறேன்” (காவாபோ.,ப.31) எனத் தன் பெருமைக்கு அளவுகோலாக இலக்கியச் சிகரங்களை எடுத்துக்காட்டியுள்ளார்.

ஊற்றெடுத்து வந்த கவிதை

        கவிதை எழுதுவது கலை ; இறைவனைப் பற்றி எழுதுவது தெய்வீகக் கலை. இறைவன் தான் உணர்த்த விழையும் மந்திரச்சொற்களை காலந்தோறும் ஒரு படைப்பாளியின் வழி எழுதவைத்துவிடுவதனை தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன. தோத்திரப்பாடல்களான திருவாசகமும், திருக்குறளும், சாத்திரப் பாடல்களான திருவருட்பாவும், திருமந்திரமுமே இக்கூற்றுக்குச் சான்று. அவ்வாறு ஒவ்வொரு படைப்பாளிக்கும் இறையருள் துணை நின்று அரிய கருத்துக்களை வெளிப்படுத்தும். ரவியும் இறையருள் பெற்று இலக்கியம் படைத்துள்ளதனை “திருமூலரின் திருமந்திரம் சாயலில் இருந்ததால் அவற்றை என் கவிதைத் தொகுப்பில் ‘குரு மந்திரம்’ என்னும் தலைப்பில் சேர்த்தேன்” (காவாபோ.,ப.39) என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன.

        “வெளியே இருந்து விளக்கேற்றி வைக்காமல்

ஒளியாகி உட்புகுந்து ஊடுருவிச் சென்று

வெளியையே உட்கொள்ளும் வித்தை அறிவித்து

ஒளியாக்கும் உண்மை உபதேசமாமே (காவாபோ.,ப.39) என உபதேசத்தின் அருமையினை விளக்கும் அடிகள் விளக்கொளி போல் ஒளிகாட்டி நிற்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

கருவிலும் உருவிலும்

        தமிழரின் விருந்தோம்பல் அன்பின் அடையாளம் ; உணவிட்ட பின்னரே, உரையாடும் வழக்கம் கொண்ட அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ். அவ்வாறு ரவியின் பரம்பரை உணவிட்டு மகிழ்ந்த நிலையினைக் குறிப்பிட்டுக்காட்டியுள்ளார் ரவி. “மாமா, அதாவது என் வளர்ப்புத்தந்தை கல்யாணராமனிடம் மேலோங்கி இருந்த குணம் விருந்தோம்பல். வருவோர்க்கெல்லாம் வீட்டில் நல்ல சாப்பாடு போடவேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தார். 1956-57....வெளியே எங்கும் சாப்பிடாத எம்.ஜி.ஆர் அவர்கள் கூட இசையமைப்பாளர் ஜி. ராமநாதன், தஞ்சை ராமையாதாஸ் ஆகிய இருவருடனும் சேர்ந்து காலைச் சிற்றுண்டி அருந்த, அப்பொழுது தினமும் எங்கள் அலுவலகத்திற்கு வந்துவிடுவார்” (காவாபோ.,ப.60) என்னும் அடிகளின்வழி விருந்தோம்பலின் பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார் ரவி. சத்துணவு போட்டவர்க்கே சிற்றுண்டி பரிமாறியது எத்தனைப் பேறு.

        இசையிடம் இசைவு வந்த காரணத்தினை “நாலு வயதுச் சிறுவனான என்னைத் தம் மடியில் அமர்த்திக்கொண்டே ஜி. ராமநாதன் ஆர்மோனியத்தில் பல பாடல்களுக்கு  மெட்டுப் போட்டிருக்கிறார். என் இசை ஈடுபாடு எப்படி வந்தது தெரிகிறதா? கருவில் வந்தது பாதி. ஜி.ராமநாதன் உருவில் வந்தது மீதி. பத்து விரல்களிலும் வைரக்கல் மோதிரங்கள் பளபளக்க அவர் ஆர்மோனியம் வாசித்த அழகை அங்கிருந்து ரசிக்கும் பேறு எனக்குக் கிட்டியது” (காவாபோ.,ப.60) என்னும் அடிகளில் தாம் பெற்ற பேறினை கவிதை வடிவில் அழகாக வெளிப்படுத்துகிறார் ரவி.

தமிழ் விதை

        தாய்மொழியில் வளமைபெறும்போது வாழ்க்கையே வளமாகிவிடுகிறது. தாய்மொழி அறியாதவர்கள் அநாதைகளாகவே உணரப்படுகின்றனர். ஒரு துறையில் அல்லது வாழும் முறைமையில் தாய்மொழி இல்லாதபோது வெறுமையுடன் குற்ற உணர்வுடன் மக்கள் வாழ்ந்துவருந்துவதனைக் காணமுடிகிறது. சிலர், அன்னியமொழியான ஆங்கிலத்தில் பேச முடியாமைக்கு வருந்துகின்றனர். அவர்கள், தாய்மொழியாம் தமிழைப் பிழையாகப் பேசுவதற்கு வருந்தாதிருக்கின்றனர். இவ்வாறு சிறுவயதிலேயே வருந்திய வருத்தம்தான், விருத்தம் பாடி தமிழில் நிருத்தம் ஆடும் அளவிற்கு ரவியினை வளர்த்துவிட்டிருக்கிறது. இதனை அவருடைய படைப்புகளே பறைசாற்றுகின்றன. 

தமிழைப் பிழையில்லாமல் எழுதிய வருத்தம்  உள்ளத்துள் இருப்பினும் உச்சரிப்புத் திறனைப் பாராட்டினார் தமிழாசிரியர். அப்பெண்மணி தூவிய விதையே முதல்விதையானதைக் குறிப்பிட்டுள்ளார் ரவி. ‘கோழி’ என்பதனைக் ‘கேழி’ என எழுதிவிட்டு அவமானப்பட்டதை வெகுமானமாக மாற்றவேண்டும் என எண்ணி நூலகத்தில் தவம் கிடந்ததனை எடுத்துக்காட்டுகிறார். “கோடை விடுமுறையில் நான் தினமும் சென்னை, மவுண்ட் ரோட்டில் இருந்த மத்திய நூலகத்தில் 3,4 மணிநேரம் செலவிட்டுத் தமிழ் இலக்கிய நூல்களை எடுத்துப்படிப்பேன்” (காவாபோ.,ப.66) என்னும் ரவியின் கூற்று இன்றைய தலைமுறை கற்றுக்கொள்ளவேண்டிய பாலபாடம்.

முதல் கவிதை – முத்தாய்ப்புக் கவிதை

        “அகத்திய முனிவரின் அகத்தினில் உதித்தவள்” (காவாபோ.,ப.67)  எனத் தொடங்கும் முதல்கவிதையினை ‘தமிழ்ச்சங்கு’ எனத் தாம் தொடங்கிய கையெழுத்துப் பத்திரிகையில் வெளியிட்டுள்ளார் ரவி. முதல் கவிதையே இலக்கிய இலக்கண நயத்துடன் அமைந்துள்ளதனைக் காணமுடிகிறது.

மின்னலாய் வந்த கன்னல்

        மின்னல் தோன்றி மறைவது . இயற்கையானது. ரவி கண்ட மின்னல் நாற்பத்தைந்து ஆண்டுகளாக உடன் நின்று இல்லறவாழ்வில் இனிமை சேர்க்கிறது. அந்த மின்னலே ‘ஷோபனா’ எனப் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். நண்பர்களிடம், மனைவியின் பெயரைச் சொல்லி வீட்டிற்கு நழுவிச்செல்லும் ஆண்களைப்போல், இடர்ப்பாடுகளையெல்லாம் கடக்கத்துணைநின்ற துணைவியாரின் பொறுமையின் பெருமையினைக் குறிப்பிட்டுள்ளார் ரவி. இந்நூலில் திரைப்பட நாயகன் போல நின்று நாயகியை மாமல்லபுரத்துக்கு அழைத்துச்சென்ற காதல் கதையினைச் சுவைபட எழுதியுள்ளார். தமிழ் அவர்களை ஒன்றிணைத்ததையும் தமிழால் வாழ்க்கைச் சிறந்ததனையும் எடுத்துக்காட்டியுள்ளமை இக்கால இல்லறம் புகுவோர்க்கு இனியதொரு எடுத்துக்காட்டு. ‘எம்மைப் போல் வாழ்வீராக’ என வாழ்த்துவதற்கேற்ற துணிவு பெற்ற வாழ்வாக அகவாழ்வு அமைந்துள்ளதனை அவருடைய எழுத்துக்கள் படம்பிடித்துக்காட்டுகின்றன.

        கொஞ்சம் பேசும் குணமுடையாளாக மனைவி இருந்தாலே கணவனுக்கு அலுவலகத்தில் வேலை அதிகமாகிவிடுகிறது. பேசும் கலையில் வரம் பெற்ற மனைவியெனில் சொல்லத்தான் வேண்டுமோ? என எண்ணத்தோன்றும். ஆனால், பன்மொழிப்புலமையிலும், கவிதைப் புனையும் திறத்திலும் ; இல்லறம் நடத்தும் இனிமையிலும் ; வீணை வாசிப்பதிலும் சிறந்து வாழ்நாள் முழுதும் காதலின் மறுவடிவமாக துணைநிற்கும் காதல் மனைவியின் பெருமையினைச் சுட்டிச் செல்கின்றார் ரவி.  “இவள் பெயர் ஷோபனா’ என்று விஜயா சொன்னது மட்டும் நெஞ்சில் பதிகிறது. அந்தக் காட்சியின் மின்னல் அதிர்ச்சியில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆகியும்” (காவாபோ.,ப.68) என்னும் அடிகள் காதல் வாழ்வின் அருமையினை உணர்த்தி நிற்கின்றன.

நெகிழ்ந்த நிகழ்வுகள்

        தாயைப் போற்றுவது சிறப்பு ; அதனினும் சிறப்பு வாழ்நாள் முழுதும் தாங்கி நிற்கும் தேசத்தைப் போற்றுவது ; அதனினும் சிறப்பு இவை இரண்டையும் உணர்த்திய தெய்வத்தைப் போற்றுவது. அவனருளாலே அவன் தாள் வணங்கும் அத்தகைய பேறு பெற்றோரின் அன்பைப் பெற்றதனைப் பெரும்பேறாகக் கருதுகிறார் ரவி. “பாரத நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அங்கிருந்து ஒரு பிடி மண் எடுத்துவந்து இந்தக் கலசத்தில் போட்டு வைப்பேன். இது எப்பொழுதும் பூஜை அறையில்தான் இருக்கும். இதை நான் பாரத மாதாவாகவே ஆவாகனம் செய்து பூஜை செய்து வருகிறேன். என்று அவர் சொன்னதும் நான் நெகிழ்ந்து போனேன்.” (காவாபோ.,ப.66) எனக் கவியரசி சௌந்திரா கைலாசம் குறித்துக் கூறியுள்ளது ரவியின் தேசப்பற்றினைப் புலப்படுத்துகிறது.

        ஆங்கிலேயன் நாய்க்கு ‘வந்தே மாதரம்’ எனப் பெயர் வைத்திருந்தான். இந்தியரை இழிவுபடுத்தியதாக எண்ணினான். அங்கு சென்ற இந்தியர் சிரித்தாராம். ஏன் சிரிக்கிறீர். ‘தாய்க்கு வணக்கம்’ என்பதே பொருள். நீங்கள் நாயையே தாயாக்கி விட்டீரே. அவமானமாகிவிட்டது.

        பாடலிலே பாரினையே நிமிர்த்திய மகாகவியின் அருமையினை அறிவார் யார்? பாம்பின் கால் பாம்பறியும் என்பார்களே. அப்படி அப்பாவலன் சொல்லை இப்பாவலன் உணர்ந்திருந்தார். உணர்ச்சிப்பெருக்கு கண்ணீரானது. கண்ணீர்த்துளிகள் கவிதையானது

“கானல் நீரில் காணி நிலத்தைக் காண நினைத்தானே

காட்டு வெளியில் பாட்டுச் சுடர்கள் ஏற்றி வைத்தானே

தேடிச்சென்ற திசையெல்லாம் பெருந்தீ வளர்த்தானே

தேகம் எடுத்ததனாலே அவனும் தேய்ந்துவிட்டானே

அவனுக்காக கொஞ்சம் அழக்கூடாதா” (காவாபோ.,ப.88)  

என்னும் அடிகளில் மகாகவியின் தன்னலமற்ற வாழ்வை நினைத்து கண்கள்\ நனைந்ததனைக் குறிப்பிட்டுள்ளார்.  காணி நிலமும் இன்றி அவர்கண்ட கனவு கானல் நீராகிப்போனதனையும், சுடர் எத்தனை வெளிச்சம் தந்தாலும் அகலின் இருட்டை நீக்கமுடியாதுபோனதுபோல் வறுமையில் உழன்றதையும் எடுத்துக்காட்டுகிறார் ரவி. நாளெல்லாம் தேய்ந்ததாலும் விடுதலை தீவளர்த்த பெருமையினையும் கூறிச் செல்லும் எழில்நடையினை எண்ணிப்பார்த்தால் கல் மனமும் சுடும்பாறை மேல் இட்ட நெய்யாகும் ; கண்கள் குளமாகும்.

        ஆங்கிலத்தில் அருமையான பாடல் என உலகமே நூறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட பாடுபொருளைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே  ஆயிரம் தமிழர்கள் அத்தகைய் பாடுபொருளைத் தத்தமது இலக்கியங்களில் எண்ணிப்பார்க்கவே இயலாத அளவிற்குப்  பாடியிருக்கின்றனர்.  ஆனால் அத்தமிழ்ப்பாடலை உலகறியச் செய்யாத பிழை தமிழர்க்குண்டு. அக்குறையை நீக்கப் பன்மொழிப் படைப்பாளிகளால் மட்டுமே இயலும். அவ்வாறு தம் ஆங்கிலப் புலமைக்குச் சான்றாக 1970- இல் வொர்ட்ஸ்வொர்த் குறித்து எழுதிய கவிதையை நினைவுறுத்துகிறார் ரவி.  நினைவில் பின் தங்கிய அக்கவிதையின் கையெழுத்துப் படியினை நகலெடுத்து நண்பர் மின் அஞ்சலில் அனுப்பிய போது நெஞ்சம் நெகிழ்ந்ததனைக் குறிப்பிடுகிறார்.

        “பாரதியை ஒத்தவனே பார்போற்றும் வித்தகனே

        ஓரத்தில் நின்றே மைய ஒளிப்பொருளாய்

        உன்னை உணர்ந்தவனே ! ஒப்பில்லா உத்தமனே (காவாபோ.,ப.104) 

என்னும் ரவியின் கவிதை அடிகள் வொர்ட்ஸ்வொர்த்தின் புலமையை உணர்த்தி நிற்பதனைக் காணமுடிகிறது.

        உதடுகள் சிரித்தாலும் உள்ளத்தின் நிலையினை அறிதல் நட்பின் பெருமையினை எடுத்துரைக்கும். மேலும், மௌனத்தின் பொருளைப் புரிந்துகொள்ளும் நட்பு உறவுகளை விட மேலானது. அவ்வகையில் உணர்வால் ஒன்றிய நட்பு கிடைத்ததன் அருமையினை சுட்டுகிறார் ரவி. “ அம்பத்தூர் பள்ளியிலே நள்ளிரவு நேரம் வரை, மொட்டை மாடியில், அங்கே தரையில் பதித்திருந்த சதுரமான கண்ணாடி வழியாக வந்த வெளிச்சத்தில் கவிஞர் முருகு சுந்தரத்தின் கவிதைகளை நான் படிக்க, சிவமும், சு.ரவியும்  மற்ற நண்பர்களும்  சுற்றிப் படுத்துக்கொண்டு கேட்டு ரசிக்க, ஓ, சொர்க்கமே அதுதானோ என்பதுபோல் சொக்கிக் கிடந்தோம்” (காவாபோ.,ப.105)  என்னும் அடிகள் நட்பில் நெகிழ்ந்த தருணத்தை எடுத்துக்காட்டுகிறது.  இன்று மாடிக்கு நண்பர்கள் சென்றாலே அச்சமாக இருக்கிறது. பூவிலே சிறந்த பூ நட்பு தானே. அதனை வரமாகப் பெற்றவர் கவிஞர்.

        கவிஞன் தனக்கென ஒரு தனி உலகத்தைப் படைத்துக்கொள்கிறான். எத்தனைபேர் சூழ்ந்திருந்தாலும் தனிமையில் இருப்பதும் ; தான் தனிமையில் இருப்பினும் பலர் சூழ்ந்திருப்பதுபோல் மகிழ்ச்சியில் திளைப்பதும் கவிஞர்களின் இயல்பு. அவ்வாறு, ஒருமுறை தம் வழக்கிற்கான நேரம் வந்ததையும் அறியாமல் கவிதையில் மூழ்கிப்போகிறார் ரவி. இந்நிலையினை உணர்ந்து நீதிபதி, வழக்கறிஞரும் கவிஞருமான ரவிக்காக காத்திருக்கிறார். “உங்களுக்கு முந்தைய கேஸ் முடிந்து உங்கள் கேஸ் அழைக்கப்பட்டபோது, நீங்கள் ஏதோ மும்முரமாக எழுதிக்கொண்டிருந்தீர்கள். தொந்தரவு செய்யவேண்டாம் என்றுதான் காத்திருக்கிறேன். நீதியரசர் சொன்னதைக் கேட்டு நெகிழ்ந்து போனேன்” (காவாபோ.,ப.111) என்னும் அடிகள் ரவியிடம் நீதிபதி கொண்டிருந்த மதிப்பினை எடுத்துக்காட்டுகிறது.

        நல்ல கலைஞன் ஒரு நல்ல கலைஞனை உருவாக்க வேண்டுமேயன்றி துணைக்கலைஞனாகவே வைத்திருத்தல் கூடாது. வில்லாற்றலில் சிறந்த ஏகலைவனிடம் கட்டைவிரலை தட்சணையாகக் கேட்ட துரோணர் போல் அமைதல் கூடாது. அவ்வாறின்றி அருமையான ஒரு இசைக்கலைஞரைக் காணும் பேறு பெற்றதனைக் குறிப்பிடுகிறார் ரவி.  ‘ஏழாவது மனிதன்’ திரைப்படத்தில் காலத்தை வென்று நிற்கும் பாடல்களைக் கொடுத்தவர் தன்னிடம் உதவியாளராகப் பணியாற்றிய எளிமை பண்பின் அருமையினை “இசையமைப்பாளர்  அமரர் எல். வைத்தியநாதன் தம்மைவிட வயதிலும் அனுபவத்திலும் குறைந்த எனக்கு உதவி செய்யமுன்வந்த பெருந்தன்மையை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். அந்தப் பாடலை எஸ்.பி.பி. எப்படித் தம் இனிய குரலால் வளம் செய்திருக்கிறார் என்பதை நினைத்தால் இப்பொழுதும் என் கண்கள் குளமாகின்றன” (காவாபோ.,ப.120) என்னும் அடிகள் நன்றிக்கும் திறமைக்கும் அடையாளமாகத் திகழ்ந்த ரவியின் நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்றன.  கவியழகுடன் இசையழகும் இசையழகுடன் குரலழகும் சேர்ந்தால் கண்கள் ஈரமாவதில் வியப்பில்லை என்பதும் புலனாகிறது.  

குருவால் உருவானேன்

        கரு வழி பிறப்பதால் உண்டாகும் சிறப்பினைக் காட்டிலும் குருவழி பிறக்கும் பிறப்பினால் உண்டாகும் சிறப்பே சிறப்பு. தமிழ்மொழிக்கு ஆசிரியர் ‘தண்டமிழ்க் கொண்டல்’ சிதம்பர சுவாமிநாதன் குருவாகி நின்றதனை எடுத்துரைத்துள்ளார். வசை பாடிய வாயினின்று வாழ்த்துவந்த பெருமையினை எண்ணி மகிழ்ந்துள்ளதனைப் பல இடங்களில் சுட்டிச்செல்கிறார்.

“ஒ.பி. நய்யர், நௌஷத், மதன்மோஹன், சலீல் சௌத்ரி, சங்கர் ஜெய்கிஷன் போன்ற இசை மேதைகளே என் குருநாதர்கள்” (காவாபோ.,.109)  என இசை நாட்டத்திற்கான குருநாதர்களை எடுத்துக்காட்டுகிறார்.

        தாயை விரும்பித் தேர்வுசெய்து பிறந்த குழந்தை தரணியில் உண்டோ? அவ்வாறே குருவும் அறியாமலே கிடைக்கும் பொக்கிஷமாக அமைந்துவிடுவதனை ரவி எடுத்துக்காட்டுகிறார். கரு வழி பிறப்பும் குருவழி பிறப்பும் இவ்வகையில் ஒன்றிணைந்திருப்பதனை அறிந்துகொள்ளமுடிகிறது. “நாம் எவ்வளவுதான் ஞானத்தைத் தேடியலைந்தாலும் , எவ்வளவு உயர, உயரப் பறந்தாலும் ஞானம் கிட்டாது. ஞானமே இசைந்து, தாழ்ந்து வந்து, நம்மை வரவேற்று, நம்முள் இசையாகக் கலந்தாலன்றி. அப்படித்தான் என் குருநாதரும் என்னைத் தேடிவந்து ஆற்றுப்படுத்தினார். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், இறைவனே ஒரு மனித வடிவிலோ அல்லது வேறு வடிவிலோ இறங்கிவந்து குருநாதனாக ஆற்றுப்படுத்துவான்” (காவாபோ.,ப.135) எனத் தன் குருநாதர் டாக்டர் நித்யானந்ததின் அருமையினை எடுத்துக்காட்டுகிறார்.

காதலும் பக்தியும்

        காதலினும் பெருமிதமுடையது பக்தி. காதல் துன்பத்தில் அழச்செய்யும். பக்தி இன்பத்தில் அழச்செய்யும்.  காதலில் தோல்வியுண்டு பக்தியில் வெற்றி மட்டுமே உண்டு. இத்தகைய  இழையளவு வேறுபாட்டினை உணர்வுடையோர் உணர்வர். இவ்விழையின் அருமையினை ரவி உணர்ந்து மகிழ்ந்துள்ளதனை “ஜேசுதாஸ் காதல் பாட்டுப் பாடினாலும் அது பக்திப் பாடல் போல் இருக்கும். எஸ்.பி.பி. பக்திப்பாடல் பாடினாலும் அது காதல் பாடல் போல இருக்கும். அடுத்த காரணம், எனக்கே பக்திக்கும், காதலுக்கும் வேறுபாடு புரியாது. ... நான் காதலைப் பாடினாலும் பக்திதான் ; மதுரை மீனாட்சியைப் பாடினாலும் காதல்தான்” (காவாபோ.,ப.131) என்னும் அடிகள் உணர்த்தி நிற்கின்றன. உயர்வகை அன்பினைத் துணையிடம் கொள்ளும்போது காதலாகவும் கடவுளிடம் கொள்ளும்போது பக்தியாகவும் வெளிப்படும் அருமையினை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

சூரியனுக்கு முன்னால் வானவில்

        சூரிய வெளிச்சத்தில் கவிதை மழை பொழிய ‘வானவில்’ தோன்றுகிறது. ‘மாணவரிஸம்’ என்னும் பழமையும் புதுமையும் கலந்த இதழின் வழி ரவி இனிய படைப்புலகத்தைப் படைத்தார்.  ‘சிந்தனைக்கோட்டம்’ என்னும் இலக்கிய அமைப்புக்குப் பின் ‘வானவில்’ பண்பாட்டு மையம் என்னும் அமைப்பினைத் தொடங்கினார். இலக்கியப்பணியினைச் செம்மையுறச்செய்ய வேண்டும் எனத் தொடங்கித் தோற்றவர்கள் பலர். ஆனால் விடாமுயற்சியுடன் மொழி வளர்ச்சிக்கான உண்மையான அமைப்பாக இன்றும் சிறப்பாக நடத்திவருவதனைக் காணமுடிகிறது. மகாகவியின் பெருமைபாடும் இவ்விலக்கிய அமைப்பின் பெருமையினை உலகறியும் என்பதே இவ்வமைப்புக்கான வாழ்த்தாகவும் அமைகிறது.

குடியரசுத்தலைவரிடம் விருது வாங்குவதே பெருமை என எண்ணுவது இயல்பு. ஆனால் குடியரசுத்தலைவராவதற்கு முன்னரே ஏ.பி.ஜே. அப்துல்கலாமிற்கு விருது வழங்கிப் பாராட்டினார் ரவி. குடியரசுத்தலைவரின் மாளிகை சைவ மாளிகையாக மாற்றிய தமிழனின் பெருமையை ; சீனர்களே திருக்குறளை மொழிபெயர்த்து படிக்கவைத்த பெருமையினை உடைய மக்கள் குடியரசுத்தலைவரின் அருமையினை உணர்ந்து பாராட்டியது (தொலைநோக்குப்பார்வை) சிறப்புடையதாகிறது.

மகாகவியின் கனவை நினைவாக்கல்

        எத்தனையோ கனவுகளால் இந்திய விடுதலைக்கு வித்திட்ட மகாகவியின் காலத்தை வென்ற எழுத்துக்களின் வலிமையினை நினைத்துக்கூட பார்க்க இயலாது. ‘நதிகளை இணைக்கும் கனவு’ அவற்றுள் ஒன்று. அத்தகைய பெருமையுடைய மகாகவி, தான் எவ்வாறு மதிக்கப்படவேண்டும் எனத் தனிப்பட்ட கனவொன்று கண்டார். அக்கனவினை மெய்யாக்கிய பெருமை ரவிக்கு உண்டு. “அவன் தனக்கென்று கண்ட அந்த ஒரே கனவை அவனுக்குப் பிறகாவது நிறைவேற்றி வைக்க, அவனுடைய பிறந்தநாளான டிசம்பர் 11-ஐக் கவிஞர் திருநாளாகக் கொண்டாடுகிறோம். அன்று அவனுடைய உருவச்சிலையைப் பல்லக்கில் எழுந்தருளச் செய்து, அதற்குச் சால்வை போர்த்திப் பொன்முடிப்புக் காணிக்கை வைத்துச் சிறுவர், சிறுமிகள் ஜதிசொல்லிக்கொண்டு நடனமாடிவரக் கவிஞர் கூட்டம் புடைசூழ, அவனை யானை மிதித்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் இருந்து பாரதி இல்லத்திற்குக் கொண்டுவரும் ஜதிபல்லக்கு நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம்” என்னும் கூற்று கவிதை உலகத்தின் சார்பாக மகாகவிக்கு நன்றி செலுத்தும் நிகழ்வாக விளங்கிச் சிறப்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

சிறகடித்த கவிதை

        புலவர்கள், மக்களுக்கும் மன்னனுக்கும் இடையே பதவியில் இல்லாத தூதுவர்களாக செயல்பட்டுநின்றனர். அப்பண்பாடே வழிவழியாக சமூக ஈடுபாடு கொண்ட கவிஞர்களாக சிலரை உருவாக்கிவருகிறது. அவ்வகையில் ரவியின் சமூக ஈடுபாடும் போற்றத்தக்கதாக அமைகிறது. “குடிமக்களாகிய நாம் (We The People)   என்ற அமைப்பை நிறுவி ஊழல் எதிர்ப்புக்கூட்டங்களை நடத்தியிருக்கிறேன். என் மீதுள்ள அன்பு மிகுதியால், என்னுடைய ஊழலெதிர்ப்பு நடவடிக்கை பற்றி ‘அமுதசுரபி’ இதழில் ஒருதனித்தலையங்கமே எழுதிவிட்டார். அதன் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன்” (காவாபோ.,ப.165) என்னும் அடிகள் கவிஞன் சமூக ஈடுபாட்டுடன் செயல்பட்ட திறத்தை எடுத்துக்காட்டுகிறது. கவி உள்ளம் கவிதையினின்று மாறுபட்டு நின்றதனையும் குறிப்பிடுகிறார் ரவி. “உலகத்தின் அன்றாட மானுட நிகழ்ச்சிகள் என் கவிதைப் பொறியைத் தூண்டிவிடவில்லை. என் கவிதை வேறெங்கோ சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தது.” (காவாபோ.,ப.165) என்னும் அடிகளின்வழி தனது கவியின் பாதை ஒவ்வொரு காலத்திலும் தனிப்பட்டு சிறப்புற்று நின்றதனையும் புலப்படுத்தியுள்ளார். கவி உள்ளம் விதியின் வழி எங்கோ சிறகடித்துக்கொண்டிருப்பதனை இக்கூற்று உணர்த்தி நிற்கின்றது.

        “மீண்டும் மீண்டும் சொல்கிறேன், கவிதை என் கைவாள் இல்லை; என் கேடயம் இல்லை, என் ஆயுதமோ, கருவியோ சாதனமோ இல்லை, நானே கவிதையின் கருவி, ஆயுதம், சாதனம். கவிதையே என்னை ஆட்டி வைக்கும் பிச்சி, பேய், பெருந்தெய்வம்” (காவாபோ.,ப.168) என்னும் அடிகளின் வழி கவிதையிடம் கொண்டிருக்கும் ஆழ்ந்த காதலைப் புலப்படுத்துகிறார் ரவி. கவி வேறு ரவி வேறு என எண்ண இயலாத அளவிற்கு ஒன்றிவிட்ட தன்மையினையும் அவருடைய கவிப்பயணம் அமைந்துள்ளதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

நிறைவாக

        அழகான கவிதைப் பயணத்தை ; வாழ்க்கைப் பயணத்தினின்று வேறுபடுத்த முடியாது. இக்கூற்றுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த ‘வானவில்’ ரவியின் வாழ்க்கையே ‘காற்று வாங்கப்போனேன்’ என்னும் தன்வரலாற்று நூலாக வெளிவந்துள்ளதனைக் காணமுடிகிறது.

வாழ்க்கை வண்ணங்கள் சேர்க்கப்படும் போதுதானே அழகு. வண்ணங்கள் இல்லாத ஓவியமும் எண்ணங்கள் சொல்லாத வாழ்க்கையும் சிறப்பாக இருப்பதில்லை. தம் வாழ்க்கையில் சுவை சேர்த்த கவிதைகளை, களை நீக்கி கலையாக்கி கவி வந்த கதையினை அழகாக எடுத்துரைக்கிறார் கவிஞர் ரவி.  

ரவியின் கவிதைப் பயணத்தை அல்லது வாழ்க்கைப் பயணத்தை அருமையான கட்டுரைகளாக வடித்துக்கொடுத்துள்ள இந்நூல் சொல்லழகிலும் பொருளழகிலும் போற்றத்தக்கதாக அமைகிறது.

        நகைச்சுவையினை இடையில் புகுத்திச் சொல்லும் திரைப்படம்போல் இல்லாமல் இயல்பாகவே நகைச்சுவை கலந்த திரைக்காவியம் போல் இந்நூல் புனையப்பட்டிருப்பது நூலாசிரியரின் கவிப்புலமைக்கும் மொழிப்புலமைக்கும் சான்றாக அமைகிறது.

        காலம் கடந்து நிற்கும் மகாகவியிடம் கொண்ட ஈடுபாடு, கவியரசருக்கே அறிவுரை கூறிய அன்புள்ளம்,  முன்னைக் குடியரசுத்தலைவருக்கு விருது வழங்கிய சிறப்பு என எண்ணற்ற தமிழ்ப்பணி செய்த ரவியின் பெருமை காலத்தை வென்று நிற்கும் செயல்களாக அமைந்துள்ளதனை உணரமுடிகிறது.

ஒரு நூலைப்படிக்கும்போது, அந்தப் படைப்பாளியோடு பயணிப்பதும். அந்தப் படைப்போடும் பயணிப்பதும் வாசகர்களின் இயல்பு.. ஒரு நூலகத்தில் அமர்ந்து படிக்கும்போது எத்தனையோ அறிஞர்களுக்கிடையில் அமர்ந்திருப்பதுபோல் தோன்றுவது கற்றறிந்தவர்களின் உணர்வாகவே அமைகிறது. . அவ்வாறு இந்நூலானது, சுவைஞர்களை நட்புக்குரியவர்களாக மாற்றிவிடும் அளவிற்கு எளிய நடையில் புனையப்பட்டிருப்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

பனிக்கூழினை (ஐஸ் க்ரீம்)டம் தீர்ந்துவிடக்கூடாதென கொஞ்சம் கொஞ்சமாக உண்டு மகிழும் குழந்தையைப்போல் வாசகர்கள் நூலினை முடித்துவிடாமல் படிக்கும் உணர்வு நூலின் பெருமைக்குச் சான்றாகிறது. அவ்வகையில் இந்நூலினை எழிலுறப் பின்னியிருப்பதும் இந்நூலின் பெருமைக்கும் இந்நூலாசிரியரின் திறமைக்கும் சான்றாவதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது

        வழக்கறிஞர் தொழிலில் இருப்பினும், கவிதையைத் தொழிலினும் மேலாகக் கருதிய ரவியின் திறத்தை அவருடைய கவிதைகளின் நுண்மாண்நுழைபுலம் வெளிப்படுத்தி நிற்பதனைக் காணமுடிகிறது.

        “கல்வியெனும் சீரேந்தி ; கண்களிலே நீரேந்திச்

        செல்கின்றோம் சேவிக்கின்றோம்

என ரவி பாடிய கவியே, இக்கட்டுரை எழுதிமுடிக்கும்போது உணர்வில் ஒன்றி உள்ளத்துள் நின்று அவர் பெருமையினைப் பாடி நிற்பதனை உணர்ந்துகொள்ளமுடிகின்றது.

********************

தேசிய ஒருமைப்பாட்டு நாள் - National Integration Day

தேசிய ஒருமைப்பாட்டு நாள் – 19.11.2020

தேசத்தின் வலிமையானது, அது சொந்தமாக எதைச் செய்ய முடிகிறதோ அதனைப் பொருத்தே அமைகிறது. அது எவற்றையெல்லாம் கடனாகப் பெற்றது என்பதைப் பொருத்து அல்ல – மேனாள் பிரதமர் இந்திராகாந்தி, அவருடைய பிறந்த நாளை தேசிய ஒருமைப்பாட்டு நாளாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

565 பிரிவாக இருந்த இந்தியாவை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேல் ‘இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டதைப்போலவே இந்தியாவை ஒருங்கிணைக்கப் பாடுபட்ட இந்திராகாந்தியை ‘இரும்புப் பெண்மணி’ என அழைத்தனர்.

இந்தியர்களிடம் வணிகத்திற்காக  ஒப்புதல் கேட்டு வந்த ஆங்கிலேயர்கள், இந்தியர்களின் இரக்க குணத்தைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டனர். திண்ணையில்  அமர இடம் கேட்டு பின் வீட்டையே சொந்தம் கொண்டாடினர். இந்தியர்களைச் சேரவிடாமல் பிரிவினையை உண்டாக்கினர். அடிமைகளாக்கினர். ஒன்றாக, ஒரே குடும்பமாக வாழ்ந்திருந்த இந்தியர்களை சாதியால் பிரித்தனர் ; நிறத்தால் பிரித்தனர்; மொழியால் பிரித்தனர் ; மதத்தால் பிரித்தனர்.

இந்தியத் தலைவர்கள் இவ்வுண்மையை மக்களுக்கு உணர்த்தினர். உணர்ந்துகொண்ட பலர் தேச பக்தர்களாயினர். உணர்ந்துகொள்ளாதவர்கள் தீவிரவாதிகளாயினர். பூனை பல்வேறு நிறத்தில் இருந்தாலும் அது ஒரே இனம் தானே. அதுபோல் இந்தியர்கள் பல நிறத்தில் இருந்தாலும், நாடு என்னும்போது ஒரே துடிப்புடன் ஒன்றுசேரவேண்டும் என்றார் மகாகவி பாரதியார். அவருடைய எண்ணம் ஒவ்வொரு ஆண்டும் வலிமை பெற வேண்டும் என்பதற்காகவே இந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

இளைஞர்கள் நிறைந்த வலிமையான நாடு இந்தியா. இதன் வலிமையினைப் பொறுத்துக்கொள்ளமுடியாத எதிரி நாடுகள் நம் கையாலேயே நம் கண்களைக் குத்தும் வகையில் கலவரங்களையும், தீவிரவாதத்தையும் உருவாக்கி வந்தது ; வருகிறது. போதைப்பொருட்களையும் கடத்திவருகிறது. இளைஞர்களுக்கு கொடுத்துவருகிறது. இதனால் அவர்களுடைய ஆற்றலை வீணாக்கிவிட முயற்சிக்கிறது. போதையில் சிக்காமல் இருக்கும் இளைஞர்கள் சாதனைப் படைக்கிறார்கள். இதனை உணர்ந்து தேசத்தின் வலிமைக்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நம்மை யாராலும் பிரிக்கமுடியாது. நாம் யாரும் விலை போகமாட்டோம் என்பதனை உலகுக்கு உணர்த்த வேண்டும்.

       தீபாவளி, பொங்கல் போன்ற மகிழ்ச்சியான விழாக்காலங்களில் கூட எல்லையில் உயிரினைப் பற்றி கவலைகொள்ளாமல் தேசத்தைக் காக்கும் பாதுகாப்புப்படை வீரர்களின் தியாகத்தை எண்ணிப்பார்க்கவேண்டும். அவர்களின் தேசப்பற்றை உணர்ந்துகொண்டாலே நாட்டில் கலவரங்கள் இருக்காது. கலவரம் இல்லையெனில் அமைதி நிலவும். அமைதி நிலவினால் முன்னேற்றப்பாதையில் கவனம் செலுத்த இயலும். இந்தியா உலக நாடுகளை வழி நடத்திச் செல்லும். அதற்கு உங்களைத்தான் இந்தியா எதிர்பார்க்கிறது. உங்களால் இயன்ற அளவிற்கு தேசத்தின் முன்னேற்றத்திற்குப் பாடுபடுங்கள். முடிந்த அளவிற்குப் பிறர்க்கு உதவி செய்யுங்கள்.

       இந்தியர்கள் திறமை இன்று உலகெங்கும் பேசப்படுகிறது. இந்தியர்கள் பிறநாடுகளில் பிரதமராக, துணை ஜனாதிபதியாக, அமைச்சர்களாக, இராணுவ அதிகாரிகளாக, தொழில் நுட்ப வல்லுநர்களாக, மருத்துவர்களாக சிறக்கின்றனர். இதனை உணர்ந்து ‘இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்’. நல்லவர்களுடைய அமைதி தீயவர்களை வளர்த்துவிடும். எனவே, தீமைகளைத் தடுப்போம். அனைவரும் ஒன்றுபட்டு தேசத்தின் நன்மைக்குப் பாடுபடுவோம். நாளைய தலைமுறைக்கு நாம் நல்ல தேசத்தைக் கொடுக்க வேண்டிய கடமை  இருக்கிறது. நமக்குள்ள கடமையை உணர்வோம். ஒன்றுபடுவோம் ; உயர்வடைவோம்.

 


ஞாயிறு, 22 நவம்பர், 2020

மெய்கண்டார் - சீடரே குருவானார் - Mei kandaar - Disciple turn into Guru

 

மெய் கண்ட மெய்கண்டார் 

சைவ சமயக் குரவர்கள்  நால்வர். அப்பர் என்னும் திருநாவுக்கரசர், ஆளுடைய பிள்ளை என்னும் திருஞானசம்பந்தர், ஆளுடைய நம்பி என்னும் சுந்தரர், வாதவூரார் என்னும் மாணிக்க வாசகர். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு குருவாக நின்று தம் சீடர்களை வழி நடத்தினர். சந்தானக் குரவர்கள் நால்வர். மெய்கண்டார், அருணந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதிசிவம். இவர்கள் அனைவரும் முறையே குரு, சீடர் என்னும் நிலையில் தொடர்புடையவர்கள். உமாபதி சிவத்தின் குரு மறைஞானசம்பந்தர், மறைஞானசம்பந்தரின் குரு அருணந்தி சிவம், அருணந்தி சிவத்தின் குரு மெய்கண்டார்.

மெய்கண்டாரின் பிறப்பு கி.பி. 1223 எனக்குறிப்பிடப்படுகிறது. அச்சுதக்காப்பாளர் என்னும் சிவபக்தர் நீண்ட காலம் குழந்தைப்பேறின்றி வருந்தினார். எனவே, தம் குருவான சகல ஆகம பண்டிதரிடம் குழந்தைப்பேறு குறித்து கேட்கிறார். குல குருவும், மூவர் தேவாரங்களில் கயிறு சார்த்திப் பார்க்கும்படி கூறுகிறார். திருஞானசம்பந்தரின்பேயடையா பிரிவெய்தும்என்னும் அருள் பாடல் வருகிறது. “வரம் பெறுவர். ஐயுற வேண்டாஎன்னும் அடிகள் இடம்பெற்றுள்ளதைக் கொண்டு உமக்குக் குழந்தை பிறக்கும் என ஆசி கூறுகிறார். எவ்வினாவிற்கும் விடையேறும் பெருமானையே கேட்டு வாழ்ந்த பக்தியின் பெருமையை இங்கு நோக்கமுடிகிறது.  அவ்வாறு குருவின் ஆசி பெற்று அச்சுதக்காப்பாளர் தம் மனைவியுடன் திருவெண்காட்டு ஈசனை வழிபடுகிறார். சிவபெருமான் தோன்றி இப்பிறவியில் உமக்குப் பிள்ளைப்பேறு இல்லை. சீகாழிப் பிள்ளையிடம் (திருஞானசம்பந்தர்) கொண்ட நம்பிக்கையாலும் இங்கு வந்து உண்ணாநோன்பு இருந்தமையாலும் சீகாழிப்பிள்ளையைப்போலவே மகன் பிறப்பான் என வாழ்த்தினார். அவ்வாறே குழந்தை பிறக்க, திருவெண்காட்டு ஈசனின் பெயரான ‘சுவேதனப் பெருமான்எனப் பெயரிட்டார்.

 விருத்தாசலத்திற்கு அண்மையில் உள்ள பெண்ணாடத்தில் பிறந்தார் ; வளர்ந்தார். அகச்சந்தான ஆச்சாரியருள் ஒருவரான பரஞ்ஜோதி முனிவர், குழந்தைப்பருவம் முதலே இறை நாட்டம் கொண்ட குழந்தையின் ஞானத்தை உணர்ந்து மெய்கண்டாரிடம் வருகிறார். தம் குருவின் பெயரானசத்தியஞான தரிசினிஎன்னும் பெயரைத் தமிழாக்கிமெய்கண்டார்எனப் பெயரிட்டார். திருக்கயிலாய பரம்பரை என்னும் பதினெட்டு ஆதினங்கள் எழுவதற்கு வித்திட்டவர் இவரே. எனவே திருக்கயிலாயப் பரம்பரையின் முதல் இடத்தில் இவரையே வைத்து வணங்குகின்றனர்.

     மெய்கண்டார் மெய்யறிவை உணர அருணந்தி சிவத்திடம் சீடரானார்.  நாட்கள் வளர்ந்தது. பின்னர் மெய்கண்டார் தானே உபதேசம் செய்யத் தொடங்கினார். சீடன் எப்படி உபதேசம் செய்யலாம்? என எண்ணினார். அவருடைய ஆணவம் அவரை பொறமைகொள்ளச்செய்தது. ஒவ்வொரு சீடராக மெய்கண்டாரின் செயல்பாடுகளை அறிந்துவர னுப்பினார். சென்றவர்கள் அனைவரும் மெய்க்கண்டாரின் உபதேசத்தில் மயங்கி அங்கேயே தங்கிவிட்டனர். அருணந்திசிவம், அளவிலா சினம்கொண்டு மெய்கண்டாரைக் கடிந்துகொள்ள சீடரைத் தேடிச் சென்றார். அச்சமயத்தில், ‘ஆணவம் என்னும் அறியாமைகுறித்து மெய்கண்டார் உபதேசம் செய்துகொண்டிருந்ததைக் கேட்டார் ; சுவைத்தார் ; மெய்மறந்தார். மெய்கண்டாரின் உபதேசம் நிறைவுபெற்றபின் அவரிடம் ஆணவத்தின் வடிவம் எது? எனக் கேட்கிறார் அருணந்திசிவம். ஆணவத்திற்கு வடிவம் இல்லை எனத் தெரிந்தும் வினா கேட்கும் நீங்களே ஆணவத்தின் வடிவம் என விடையளித்தார் மெய்கண்டார். புறத்தே புலப்படாத ஆணவத்தை அடையாளம் கண்டுகொண்ட மெய்கண்டாரின் ஞானத்தை உணர்ந்த அருணந்தி சிவம்நீரே எமக்கு குருநாதர். அருள்கூர்ந்து ஏற்கவேண்டும்’ என வேண்டிநின்றார். மெய்கண்டாரும் காழ்ப்புணர்வினை பெரும்பொருட்டாக எண்ணாது சீடராக ஏற்றுக்கொண்டார். சீடரையே குருவாக ஏற்றுக்கொண்டார் அருணந்தி சிவம். இருவரையும் பெருமையினையும் உணர்வுடையோர் உணர்வர்.

குருவின் போதனையைசிவஞானபோதம்என்னும் தத்துவ நூலாக்கினார். இதில் இடம்பெறும் சூத்திரங்கள் – 12, அடிகள் – 40, சொற்கள் – 216, எழுத்துக்கள் – 624. தத்துவ நூல்களில் சிறியதும் பெருமையுடையதும் இந்நூலே. இப்போத நூலை முதன்மையாகக்கொண்டே தத்துவ நூல்களை ‘மெய்கண்ட சாத்திரம்எனப் போற்றுகின்றனர்.

பதி, பசு, பாசம் குறித்து, சிவஞானபோதத்தில் விளக்கப்படுகிறது. மெய்கண்டாரிடம், மனவாசகம் கடந்தார் என்னும் சீடர் வினாக்கள் கேட்டு விளக்கம் பெற்றதுஉண்மை விளக்கம்என்னும் சாத்திர நூலானது. ‘பஞ்சாட்சரம்என்னும் ஐந்தெழுத்து குறித்து விளக்கமும் இதில் இடம்பெற்றுள்ளது சிறப்பு.

திங்கள், 21 செப்டம்பர், 2020

எம்.எஸ்.சுப்புலட்சுமி – பாடிய மயில் - Singing Peacock M.S.Subbulakshmi

 

எம்.எஸ்.சுப்புலட்சுமிபாடிய மயில்

       கலைவாணியின் அருள்பெற்ற இசைராணி. மதுரை சுந்தரடிவு சுப்புலட்சுமி. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா. நிலவின் முகத்தில் சூரியனைப் பார்த்ததுண்டா? பார்க்கலாம் எம்.எஸ் அம்மாவின் நிலவு முகத்தில் சூரியன் திலகமாய் இருக்கும் ; அதுவே அம்முகத்தின் ஒளியைப் பெருக்கும். பெண்களைப் பார்த்தவுடன் வணங்கத் தோன்ற வேண்டும் என்னும் கூற்றுக்கு அடையாளம். குரலில் குயில் ; வடிவில் மயில். மொத்தத்தில் பாடும் மயில்.

       1916 ஆம் ஆண்டு செப்டம்பர் பதினாறாம் நாள் சண்முகவடிவு அம்மையாருக்கும் சுப்பிரமணிய ஐயருக்கும் இந்தியாவின் இசையரசி குழந்தையாய்ப் பிறந்தது.  பூவில் பூ பூக்குமா? ஆம் பூத்தது. தாமரை முகத்தில் குவளைப் பூ போன்ற இரண்டு கண்கள் பூங்கொத்து போல. பூங்கொத்து எனப்பொருள்படும் குஞ்சம்மாள் என கொஞ்சு மொழியில் அழைத்து மகிழ்ந்தார்கள். குஞ்சித பாதம்அழகிய திருவடி, தூக்கிய திருவடி என்பர். குஞ்சு என்றால் தலைமுடி.  சுருண்ட கூந்தல் வளத்தாலும் இப்படிப் பெயர் வைப்பது வழக்கம். அவருடைய சுருண்டகூந்தல் கூட செஞ்சுருட்டியை நினைவுறுத்தும். 

எல்லா குழந்தையும் குவா குவாஎன்று கத்த இந்தக்குழந்தை மட்டும் குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாஎன இசைத்தது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின்னாளில் தான் தெரிந்தது. பாட்டி அக்கம்மாள் வயலின் வாசிப்பார். அம்மா வீணை வாசிப்பார். இவரோ குரலிலேயே இவை இரண்டையும் சுவாசிப்பார். இவருடைய இசைப்பயணம் பத்து வயதில் தொடங்கிற்று. தாயார் கச்சேரி தடைப்பட்டபோது மகளை மேடைக்கு அழைத்துப் பாடச்சொல்கிறார். பத்து வயதில் முத்து தெறிப்பது போல் பாடுகிறார். இசைச்சொத்துக்கு வாரிசாகிறார். மரத்தைப் பற்றிக்கவிதை எழுதவேண்டுமென்றால் நீ மரமாக மாறவேண்டும் என்பார்கள். அப்படி மீரா என்னும் படத்தில் மீராவாகவே வாழ்ந்தார். மீரா ஆற்றில் செல்லும்போது மயங்கி விழவேண்டும். கிருஷ்ணர் வந்து காப்பாற்றுவார். இதுதான் காட்சி. அக்காட்சியை படமாக்கும்போது உண்மையில் மயங்கிவிட்டார். படகோட்டி குதித்து காப்பாற்றினார். அந்தப் படகோட்டியின் பெயர் கிருஷ்ணா. அம்மையாரின் பக்தியின் பெருமைக்குச் சான்றாக இந்நிகழ்வினைக் குறிப்பிடுவார்கள்.

       என்.டி. ராமராவ் தெலுங்குத் திரையுலகின் சூப்பர்ஸ்டார். கடவுளாகவே மதிக்கப்பட்டவர். முதலமைச்சராக ஆட்சி செய்தபோது, எங்களுடைய பதவி, மக்கள் எங்களிடம் கொண்ட அன்பு எல்லாம் மாறிப்போகும். ஆனால் எம்.எஸ் அவர்களின் குரல் உலகம் உள்ள வரை வாழும். நாள்தோறும் அவருடைய குரல் கேட்டுத்தான் பெருமாளே எழுகிறார்.  இதை விடப்பெருமை என்ன வேண்டும். அவர்பஜ கோவிந்தம்எனப்பாடினால் எல்லா துன்பமும் கஜ தூரம் ஓடிவிடும்.

       பண்டிட் ஜவஹர்லால் நேரு அவருடைய பாடும் திறனை மௌண்ட்பேட்டனுடன் கண்டு களித்தவர். நான் இந்த நாட்டுக்குத் தான் பிரதமர். அவரோ இசையுலகுக்கே ராணி எனப் பாராட்டினார்.

       இந்தியாவின் பெருமைக்கு அடையாளமான அம்மையாருக்கு ஆந்திராவில் வெண்கலச்சிலை பதினான்கடி அடி உயரம் ; நான்காயிரம் கிலோ வெள்ளி -மும்பையில் சிலை என இசையரசியின் புகழை நிலைநிறுத்திப் பெருமை சேர்த்துக்கொண்டனர். தமிழகத்தின் பெருமைக்குக் காராணமான இராஜராஜ சோழனுக்கு, கடல்கடந்து தமிழனின் கொடி ஏற்றிய இராஜேந்திர சோழனுக்கு, கல்லணை கட்டி உலகுக்கே அணை கட்டக் கற்றுக்கொடுத்த தமிழன் காரிகாலனுக்கு, ஆங்கிலேயரை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளைக்கு, விடுதலை முழக்கத்தால் விழிக்க வைத்த சுப்பிரமணிய சிவாவுக்கு வீரத்தின் அடையாளமான வாஞ்சிநாதனுக்கு உலகையே இசையால் வென்ற இசைவாணி எம்.எஸ். அம்மையாருக்கு சிலை எழுப்பினால் அது அவர்களுக்குச் செய்யும் பெருமை அல்ல. நாளை வரும் தலைமுறை தலைநிமிர்ந்து இவர்கள் பிறந்த மண்ணில் பிறந்தவன் என்னும் பெருமையை எடுத்துச்சொல்லிக்கொள்வதற்கு வழியாக அமையும்.

`ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாளும் ஒரு ஆண் இருக்கிறான். என்பதற்கு எடுத்துக்காட்டு அவருடைய கணவர் சதாசிவம். கணவன் மனைவி என்றால் அத்தனை மதிப்பு. மிகவும் கண்டிப்பு கட்டுப்பாடு நிறைந்தவர். பாடும் பொழுது முதல் வரிசையில் அமர்ந்து கேட்பார். குறையிருப்பின்இப்படிப்பாடுவதற்கு இந்த உயிர் தேவையா?’ எனக் கேட்பாராம். இதைவிடக் கடுமையாக யாராவது கேட்கமுடியுமா? எப்படிக்கேட்டாலும் அமைதியாக இருப்பார். இரு கை தானே ஓசை வரும் என்னும் நுட்பத்தை அறிந்தவர். அவரிடம் பேட்டி காணவேண்டும் என்றால் இவர் தான் பேசுவார். ரோஜாவுக்கு மலர்த்தான் தெரியும். அது எவ்வாறு என்று அதனிடம் கேட்டால் சொல்லத்தெரியாது. அதுபோல்தான் எம்.எஸ். என்று சொல்லிவிடுவார்.

       எப்படியோ ஒரு வகையில் எம்.எஸ் அவர்களையே கேட்டார்கள். உங்கள் கணவர் இவ்வளவு கண்டிப்புடன் இருக்கிறாரே. நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். அவர் நன்கு படித்தவர். அவர் எடுக்கும் முடிவுதான் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். ஆமைக்கு அதன் ஓடு பாரமல்ல ; பாதுகாப்பு என உணர்த்தியவர்.

       அவர் பிறந்த நாள் பதினாறு. கூட்டினால் ஏழு. அதனால்தானோ என்னவோ ஏழிசை நாயகியாக ஒளிர்ந்தார். ஆங்கிலம் கலந்துசொல்லவேண்டுமெனில்ஏழிசை ஏஞ்சல்’. ஏழு மொழிகளைக் கற்றிருந்தார், தமிழ், ஆங்கிலம், இந்தி மராத்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி.

       இசை அரசி அவர். எப்படி? அரசி என்றால் என்ன செய்யவேண்டும், மக்களுக்கு அள்ளிக்கொடுக்கவேண்டும் அல்லவா. அப்படி தான் பெற்ற பரிசுகளை எல்லாம் அள்ளிக்கொடுத்தவர். நினைத்துப்பாருங்கள்கல்கி கார்டன்என்னும் மிகப்பெரிய இடத்தில் வாழ்ந்தவர். பின்னாளில் வாடகை வீட்டில் வாழ்ந்தார். முப்பெருந்தேவி போல் வலம்வந்தவர்.  அவர் கலையில் வல்லவராதலால் கலைமகள். அள்ளிக்கொடுப்பதில் அலைமகள். சிவத்தின் மனைவியாதலால் மலைமகள்.

       மதுரைக்கு மல்லிக்கு மட்டுமல்ல இசைத்துள்ளி வருவதற்கும்தான் என எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி.

       உங்களைப் புரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் எதுவும் சொல்லவேண்டியதில்லை. உங்களை புரிந்துகொள்ளாதவர்களுக்கு எது சொன்னாலும் புரியப்போவதில்லை. என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். எத்தனை விமர்சனம் வந்தபோதும் அமைதியாகவே நடந்துகொண்டார். எத்தனையோ அலைகளின் ஆராவாரம் அந்த மௌன மலையினை ஒன்றும் செய்துவிடமுடியவில்லை.

       மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் . அது முடிந்தபின்னால் ஒரு பேச்சிருக்கும். என்பதற்கு எடுத்துக்காட்டு அம்மையார். படித்த ஆசிரியர்களை விட படிக்கின்ற ஆசிரியர் வேண்டும் என்பார்கள். இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல எந்த்த் தொழில் செய்பவரும் அந்த்த் தொழிலைத் தெய்வமாக எண்ணிச்செய்யவேண்டும். புருஸ்லீ, டெண்டுல்கர், தோனி  யாராக இருந்தாலும் ஏன் சிறந்தார்கள். கடுமையான பயிற்சி தான் காரணம். அப்படித்தான் எந்தத் துறையாக இருந்தாலும் கடும்பயிற்சி, ஈடுபாடு, சமரசம் செய்துகொள்ளாமை, தள்ளிப்போடாமல் நிகழ்ச்சி அமைப்பாளர்களே நன்றாக இருக்கிறது என்று கூறினாலும் சரியில்லை. முதலிலிருந்து பதிவு செய்யலாம் என்னும் கடமை உணர்வு மிக்கவராக வலம்வந்தவர். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதல்ல வாழ்க்கை. இப்படித்தான் வாழவேண்டும் என்பதே வாழ்க்கை.

       இது இசைத்துறைக்கு மிகவும் பொருந்தும். பாடகரை விட பேச்சாளராகப் புகழ்பெறுவது கடினம். ஏனென்றால் ஒரு மேடையில் பேசியதைப் பேசமுடியாது. இதை ஏற்கெனவே பேசிவிட்டீர் என்பார்கள். ஆனால் பாடகர் வேறு பாடலைப்பாடினாலும், நீங்கள் அந்தப் பழைய பாடலைப் பாடுங்கள் என்பர்.      இவர் ஒரு தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மிகச் சிறந்த கலைஞர்கள் எல்லாம் இவருடைய கச்சேரிக்கு வாசிக்க வருவார்கள். வீரம் மிக்க பெண்மணி. தன்  திறமையில் அலாதியான நம்பிக்கை கொண்டவர். தன்னுடன் இருப்பவர்கள் தங்களுடன் பலமானவராக இருக்கக்கூடாது என எண்ணுவது பொதுவான இயல்பு. ஆனால் இவர்  சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து வரவழைப்பார். அந்த இசையையும் விஞ்சும் வகையில் பாடுவார்.

கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று ; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று’ – என்னும் புறநானூற்றுப் பாடலுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் அம்மையார். புரட்சித்தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் வள்ளலாக வாழ்ந்தவர். அவர் சத்துணவுத்திட்டம் கொண்டுவந்தபோதுஅன்று சந்திரனைக் காட்டிச்சோறூட்டுவார்கள். இன்று சந்திரனே சோறூட்ட்கிறதுஎன்பார்கள். அவர், வாடகை வீட்டில் அம்மையார் இருப்பதை அறிந்து  இரண்டு வீட்டுப்படங்களைக் கொடுத்து ஏதாவது ஒன்றினைத் தேர்ந்தெடுக்குமாறு கூறினார். சதாசிவம் அவர்களோஎங்களுக்குக் கொடுத்துத்தான் பழக்கம். வாங்கிப்பழக்கமில்லைஎன மறுத்துவிட்டார்.

       திருப்பதி தேவஸ்தானத்தில் அன்னமாச்சாரியார் பாடலைப் பாட வேண்டுதல், பணம் கொடுத்தால் வாங்கமாட்டார் என்பதனால் இந்த ஏற்பாடு. அவருடைய நிலை முன் போல் இல்லை. பாடவேண்டுமென்றால் மீண்டும் படிக்கவேண்டும். பயிற்சி செய்யவேண்டும். என மறுத்துவிடல். இறைப்பணியாயிற்றே எனப் பணிவுடன் கூற வயதான போதிலும் கற்க அஞ்சாதவர்.

மகாத்மா காந்தி இவர் பாடக்கேட்டு மகிழ்ந்தவர். இதைவிட வேறு விருது வேண்டுமோ. ஆனால் பல விருதுகள் இவரைத்தேடிவந்தன.  திருப்பதி தேவஸ்தானத்தில் இவருக்கு பெருமை செய்ய ஆஸ்தான வித்வான் விருதுவழங்க விரும்புவதாக கூறும்போது. என்னுடைய குருவுக்குக் கொடுக்காமல் எனக்குக் கொடுப்பது எப்படிச் சரியாகும் என மறுத்தார். உடனடியாக அவருடைய குருவுக்குக்கொடுத்துவிட்டு இவருக்கு மரியாதை செய்கிறார்கள். இவருடைய குரு செம்மங்குடி ஐயாவிடம் பேட்டி கண்டார்கள். உங்களுடைய சிஷ்யை இப்படிப்பாடுகிறார்களே. நீங்கள் ஏன் பாடுவதில்லை.  சுப்புலட்சுமியால் தான் பாடமுடியும்எனப் பெருமையாக கூறுகிறார்.  குருவை பெருமைப்படுத்தும் சீடர். சீடரைப் பெருமைப்படுத்தும் குரு எத்தனை அழகு. பண்டிட் நாராயண வியாசரிடம் இந்துஸ்தானி இசையைக்கற்றார்.

கண்ணிற்கு மையிட்டு அழகு செய்தார். காதிற்கு கம்மல் பூட்டி அழகு செய்தார். மூக்கிற்கு இருபக்கமும் மூக்குத்தியால் அழகுசெய்தார். வாய்க்கு மட்டும் தம் குரலாலே அழகு செய்தார். ‘சகுந்தலைபடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது மறுத்தார். வேறோருவரை கதாநாயகியாக்கிவிட்டனர். நாரதருக்கு ஆள்தேடி இவரைக் கேட்டார்கள். பாடல்கள் பாடும் மிக முக்கியப் பாத்திரம் எனக் கூறி ஒப்புக்கொள்ளவைத்தனர். கல்கி இதழ் தொடங்க பணம் தேவைப்பட்டது. நடிக்க ஒப்புக்கொண்டு பணம் அளித்தார்.

அம்மையார் ஒரு புரட்சிப்பெண். தாயின் பெயரையே தலைப்பெழுத்தாகக் கொண்டவர். அவர் இருநூறுக்கும் மேற்பட்ட அறக்கட்டளைக்கு அடித்தளமாக நின்றவர். பத்து கோடிக்கும் மேல் ந்ன் கொடை திரட்டிக் கொடுத்தவர். அமைதியாக எத்தனைக் குழந்தைகளை, முதியோரை, அநாதைகளைக் காத்தார். எனவேஇசையுலகின் அன்னைத்தெரசாஎன்றும் இவரைக் குறிப்பிடலாம்.

மீரா படத்தில் நடிக்கும்பொழுது யானைகள் குதிரைகள் இடம் பெறும் காட்சி அமைக்க வேண்டும். கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தயாரிப்பாளருக்கும் புரியவில்லை. மைசூர் மகாராஜா அவருக்காக என் ராஜ்ஜியத்தையே விட்டுக்கொடுப்பேன். யானை, குதிரைப்படையையா கொடுக்கமாட்டேன் எனக் கொடுத்தார்.

       சாந்த முகம், காந்தக் குரல்இளமையில்  எல்லோரும் அழகாக இருப்பார்கள். முதுமையில் இளமைப் பருவத்தைவிட அழகாக இருந்தவர்கள் இருவர் ஒருவர் மகாத்மா காந்தி. இன்னொருவர் எம்.எஸ் அம்மா.  பாடும்பொழுது கூட முகபாவம் அழகாக இருக்கும். சிலருக்கு முகம் பாவமாக இருக்கும். இவருடைய பாடலால்சேவாசதனம்படம் நன்றாக ஓடியது.

        மீரா படத்திற்குப் பின் எத்தனையோ பட வாய்ப்புகள் வந்தன. புகழின் எல்லைக்குச் சென்றபிறகு அதைவிட சிறந்த படத்தைத் தரமுடியாது எனக் கணவர் கூற அதை அப்படியே ஏற்றுக்கொண்ட  பணிவுமிக்க பெண்மணியாகத் திகழ்ந்தார்.

தங்கத்தட்டுக்களை விட இவருடைய இசைத்தட்டுக்கள்  அதிகம் விற்பனையாயின. பதின்ம வயதிலேயே இவருடைய  பெயரினையே விளம்பரமாக ஓட்டி இசைத்தட்டுக்களை வெளியிட்டனர். இரண்டாயிரத்து ஐநூறு பாடலுக்கு மேல் மனப்பாடமாக வைத்திருந்தவர். யுஎன் ஓ. எனப்படும் பன்னாட்டு அமைப்பில் 1966 இல் பாடினார். இலண்டன், நியூயார்க், மாஸ்கோ, எடின்பர்க் எனப் பல நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் பெருமையைக் காத்தவர்.

1954 –இல் பத்ம பூஷன்

1956- இல் சங்கீத நாடக அகாதெமி விருது.

1974 – இல் ஆசியாவின் நோபல் பரிசு என்னும் இராமன் மகசேசே விருது(முதல் இசைக்கலைஞர்)

1975- இல் பத்ம விபூஷன்

1975 – சங்கீத கலாசிகாமணி 11 விருது.

1988- காளிதாஸ் சம்மான் விருது

1990- இல் இந்திராகாந்தி விருது

1998- பாரத ரத்னா விருது

என அனைத்து விருதுகளையும் பெற்றுக்கொண்டார். 2005 ஆம் ஆண்டு ஸ்டாம்ப் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியது. காஞ்சிபுரம் புடவைக்குக் கூடஎம்.எஸ். ப்ளுஎனப் பெயரிட்டுப் பெருமைப்படுத்தினர். ‘தபஸ்வினிஎன லதா மங்கேஷ்கர் பாராட்ட, உஸ்தாத் குலாம் அலிசுஸ்வரலட்சுமிஎனப்பாராட்டினார்.

இவர் குரல் கேட்டால் சொர்க்கம் என உலகமே போற்ற, இவர் குரல் இல்லா விட்டால் சொர்க்கம் இல்லை என நினைத்த சொர்க்கலோகம் 2004 ஆம் ஆண்டு திசம்பர் 11 ஆம் நாள் இவரை அழைத்துக்கொண்டது. ‘காற்றினிலே வரும் கீதம்இருக்கும் வரை இவருடைய குரல்இசைஉலகில்வேதம் போல் நிற்கும் என்பதில் ஐயமில்லை.