தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 30 மே, 2021

அரசியல் சாக்கடையல்ல – வாழ்க்கை – கம்பன் காட்டும் வழி


            கல்வி அமைச்சராக யார் இருக்கிறார்? எனக்கேட்டுப்பாருங்கள். உடனே, “எனக்கு அரசியலில் விருப்பம் கிடையாது” எனக் கூறும் இளைஞர்கள் பலரைக்காணமுடியும். “அரசியல்வாதிகளால்தான் கல்விக்கான திட்டங்களையும், பணிக்கான வாய்ப்புகளையும் பரிந்துரைக்கமுடியும். தெரியுமா?” எனக்கூறியதும் அரசியல் குறித்தும் ஆட்சி குறித்தும் அறியவேண்டியதன் அவசியத்தை உணர்வார்கள்.

    “ஒரு நாளைக்கு, ஒரு ஏழைக்கேனும் உணவு கொடுக்கவேண்டும்” என நினைக்கும் சமூக அக்கறை கொண்டவர் அமைச்சராகிவிட்டால், அன்ன சத்திரங்களைக் கட்டி எத்தனையோ ஏழைகளின் பசியைப் போக்கிவிடுவார்கள்தானே?. “மக்கள் எவ்வாறு வாழவேண்டும்” என முடிவுசெய்வது அரசியல்வாதிகளுடைய செயல்பாட்டினைப் பொறுத்தே அமைகிறது. அத்தகைய வலிமையுள்ள அரசியலிலிருந்து இன்றைய இளைஞர்கள் விலகி நிற்பது நாட்டிற்கு நன்மையா?  அரசியல்வாதிகளைக் கயவர்களாகக்காட்டியே சில திரைப்படங்கள் வெறுப்பினை உண்டாக்கிவிட்டன. அந்நிலையிலிருந்து மாற்றவேண்டிய கடப்பாடும் அவர்களுக்குண்டு. கெடுப்பது எளிது ; ஆனால் திருத்துவது மிகக் கடினம். நாடு நலமாக அச்செயலை செய்துதானே ஆகவேண்டும்.


    தீயபழக்கங்களை. புகைபிடிப்பது ; மது குடிப்பது ; பெண்களைப் பகடி செய்வது என எத்தனைத் தீய பழக்கங்களைத் திரைப்படக்கதாநாயகர்கள் சிலர் கற்றுக்கொடுத்தனர் ; கொடுக்கின்றனர் ; கொடுப்பர். பொறுப்புணர்வுடனும் விழிப்புணர்வுடனும் மக்கள் விழித்துக்கொள்ளவேண்டும். மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும். அதனை அரசியல்வாதிகள் செய்துவிட்டால்போதும்.  அரசியல் சாக்கடையல்ல ; அதுவே வாழ்க்கை என்பதனை உணரமுடியும்.

    மக்கள் பொறுப்புடன் இருந்தால் தலைவனும் பொறுப்புடன்தானே இருக்கமுடியும். மக்களின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட தலைவன் மக்களை உயிர்போலும் தன்னை உடல்போலும் எண்ணவேண்டும் என்பதனை எடுத்துக்காட்டுகிறார் ‘கவிச்சக்கரவர்த்தி’ கம்பர்.

வயிரவான் பூணணி மடங்கன் மொய்ம்பினான்

உயிரெலாந் தன்னுயி ரொப்ப வோம்பலால்

செயிரில வுலகிற் சென்று நின்றுதீர்

உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்

 

என்னும் அடிகள் எத்தனை அழகானது. ‘மக்கள்’ எனக் கூறாமல் ‘உயிர்கள்’ எனக் கூறியது எத்தனை ஆழமானது.  மக்களை மட்டுமின்றி ஓரறிவு முதல் ஆறறிவு வரை அத்தனை உயிர்களையும் தன்னுயிராக எண்ணிக் காக்கும் அரசன் எத்தனைப் பெருமைக்குரியவன். அத்தகைய பெருமையுடைய அரசன் நாடாண்டால் மக்கள் மகிழ்ச்சியில்தானே திளைப்பார்கள். அப்படிப்பட்ட அரசியல்வாதிகள் ஆட்சிசெய்தால் ‘அரசியல் சாக்கடை’ எனக்குறிப்பிட இயலுமா?

     நாட்டு மக்களின் நலம் ஒன்றே நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரசியல்வாதிகள் ஆட்சி செய்தால் மக்களுக்கான நலத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்தானே? மக்கள் பணத்தை சூறையாடினால் என்னாகும்? ஏழ்மை பெருகும் ; பஞ்சம் ஏற்படும் ; கொள்ளை நடக்கும் ; தீய செயல்கள் படிப்படியாய் பெருகிக்கொண்டே இருக்கும்.


     எத்தனையோ ஏழைகள் அரசியலின் வழி பதவிபெற்று உயர்ந்த நிலைக்கு வந்துவிடுவதனையும் காணமுடிகிறது. அத்தகையோர் மக்களின் ஏழ்மையைப் போக்கி மகிழ்வர்.

ஒரு நல்ல நாட்டில் எவ்வாறு ஆட்சி நடைபெறவேண்டும்?. யார் செல்வந்தர்? யார் ஏழை? என அறிய இயலாத அளவிற்கு வறுமை இல்லாது மக்கள் வளமாக இருக்கவேண்டும்.  உடலை வலிமையாக்கிக்கொள்ளவேண்டும் என்னும் எண்ணமே ஏற்படாதவாறு அளவிற்குப் பகைமை இன்றி வாழவேண்டும். ஏமாற்றிப் பிழைக்கவேண்டும் என்னும் நிலையில்லாததால் பொய் என்பதனையே அறியாத மக்களாக இருக்கவேண்டும். எச்செயல் செய்தாலும் ஏன்? எதற்கு ? என ஆய்ந்து ஒவ்வொரு செயலையும் செய்வதால், அறியாமை அற்ற மக்களாக இருக்கவேண்டும். இத்தனைத் திறனும் ஒருநாட்டில் மொத்தமாக இருந்தால் எப்படி இருக்கும் அத்தகைய ஆட்சியினையே கம்பர் படம்பிடித்துக்காட்டுகிறார்.


“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்

திண்மை இல்லை நேர் செறுநர் இன்மையால்

உண்மை இல்லை பொய்யுரை இலாமையால்

வெண்மை இல்லை, பல்கேள்வி மேவலால்”

 

என்னும் இவ்வடிகள் நாடு எவ்வாறு விளங்கவேண்டும் என்பதற்கு அழகிய எடுத்துக்காட்டு. "கம்பன் கவிக்கொம்பன்" என்பதனை இப்பாடலும் எடுத்துக்காட்டுகிறதுதானே?. 


            இத்தனைப் பயனையும் ஒரு நாட்டுக்கு அளிக்கும் வல்லமை அரசியல்வாதிகளுக்கே உண்டெனில் அந்த அரசியலை விட்டு விலகி நிற்கலாமா? இனி, “அரசியல் சாக்கடையல்ல ; வாழ்க்கை”. உணரலாம்தானே?

  


சனி, 29 மே, 2021

தீங்கற்றதே வாய்மை – திருக்குறள்

 



தீங்கற்றதே வாய்மை – திருக்குறள்

     எல்லோருக்கும் கடவுளைப் பிடித்திருக்கிறது. உறவுகளில் தாயாரையும், பின் தந்தையையும், உடன்பிறந்தோரையும், சுற்றத்தாரையும் ; நட்புக்களையும், உடன் பணியாற்றுவோரையும், பயணம் செய்வோரையும் எனத் அடுத்தடுத்து வரிசை தொடர்கிறது. இது உண்மைதானே. “ஏன்? இவ்வாறு வரிசைப்படுத்தினீர்” எனக்கேட்டால் என்ன சொல்வீர்கள்?. முதலில் தயங்குவீர். “இதைக் கூறினால்தான் உங்களுக்கு அடுத்தவேளை உணவு” எனக்கூறிவிட்டால் என்ன செய்வீர்கள்?. வரிசைப்படுத்திவிடுவீர்கள்தானே. வரிசைப்படுத்தி எழுதியதைப் பாருங்கள். யாருக்கெல்லாம் நீங்கள் உண்மையாக இருக்கிறீர்களோ அவர்களைத்தான் வரிசைப்படுத்தியிருப்பீர்கள். உங்களிடம் உண்மையாக இருப்பவர்களை நீங்கள் மறந்தும் போயிருக்கலாம்தானே. இப்போது இரண்டு மூன்று பெயர்கள் நினைவுக்கு வருகிறதா? அவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இப்பட்டியலில் உள்ள அனைவருமே வாய்மையின் விழுக்காட்டிற்கேற்ப முதல் இடத்தினையும் கடைசி இடத்தினையும் பெற்றிருப்பதைக் கண்டறியலாம்.

     வாய்மையுடன் வாழ்பவர்க்கே இல்லத்திலும் உள்ளத்திலும் இடம்கொடுக்கிறோம். “உன் பிள்ளைக்குப் படிப்பு ஏறாது” எனப் பள்ளிக்கூடத்தை விட்டுத் துரத்தியபோது மகனிடம் அச்செய்தியை மறைக்கிறாள் தாய். “உன்னுடைய மூளையின் வேகமான செயல்பாட்டிற்கு பள்ளிக்கூடம் தேவையில்லை. நானே கற்றுக்கொடுக்கிறேன்” எனக்கூறி உலகத்திற்கே ஒரு விஞ்ஞானியைக் கொடுத்தார். அவர்தான் எடிசன். இன்று உலகமே மின் வெளிச்சத்தில் இருக்க அவரே வழி செய்தார். இந்தத் தாயின் பொய்தான் புரைதீர்ந்த நன்மை பயத்தது. எனவே, இந்தப் பொய்மை வாய்மை இடத்ததே எனத் தெய்வப்புலவர் வழிநின்று உணரலாம்தானே?

     ஒரு கொள்ளையோ, கொலையோ, மானத்திற்கு இழுக்கோ நடந்தால் அதனைக் கூறிக்கூறி மகிழ்ச்சியடையக் கூடிய மக்களை ; ஊடகத்தை என்னென்பது? அதுவும் ஏழைகளாக இருந்தால் சொல்லவே வேண்டாம். அவர்களைக் கிழிகிழியென்றுகிழித்து வறுத்தெடுத்துவிடுவதனைக் காணமுடிகிறது. ஒரு முறை விளைந்த அவமானம் இத்தகைய சில கீழ்த்தரமான ஊடகத்தாரால் நாள்தோறும் அரங்கேறும். இந்த வாய்மை வாய்மையாகுமா? ஆகாது.

    பக்கத்து வீட்டுக் கூரை எரிவதைப் பார்த்து ரசிப்பவர்கள் தன் வீட்டை எவ்வாறு பாதுகாத்துக்கொள்ள இயலும். ஒரு ஆணுக்கோ, பெண்ணுக்கோ அவமானம் எனில் அதனைத் திருத்துவதற்கு ஊடகங்கள் துணைசெய்யவேண்டும். தாக்குதலுக்குண்டானவர்களுக்கான இழப்பீடு, காப்பீடு, சட்ட உதவிகள் என உதவிசெய்வதற்கே ஊடகங்கள் துணைசெய்யவேண்டும். அதற்குத் துணைசெய்யும் ஊடகங்கள் போற்றத்தக்கனவே.  மாறாக யாரிடம் இருந்து பணம்பெறலாம்? செய்தியைத் தொடர்ந்து மெல்லுவதா?  தள்ளுவதா? எனத் தந்திரம் செய்யும் ஊடகங்களால் சமூகம் கெடும் ; தலைமுறைகள் தடுமாறும்.

     வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்

     தீமை இலாத சொலல் (திருக்குறள் - 291) 

என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் வாக்கினை அறியாத தமிழரே இருக்கமுடியாது.  அப்படி இருந்தும் எப்படி எல்லா இடங்களிலும் பொய்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.

நடக்கின்ற செயல்களெல்லாம் நல்லவையாக நடந்தால் ; அச்செய்தி சமூகத்திற்கு நன்மை பயந்தால், சொல்லலாம் ; தீமை பயக்குமெனில் மௌனமாய் இருத்தல் நன்று. எனவே, இத்திருக்குறள் சூழலைத் திருத்தி அறத்துடன் வாழவேண்டியதன் அவசியத்தினை உணர்த்தியுள்ளதனைக் காணமுடிகிறது.

“எப்போது பேசுவது நல்லது?” எனக் குருவிடம் ஒரு சீடன் கேட்கிறார். அதற்குக் குரு “எப்பொழுது உன்னுடைய மௌனத்தை விட பேச்சு நன்மை தரும் என நினைக்கிறாயோ அப்பொழுது பேசுவதே நல்லது” என்கிறார். இதனையே மக்கள் அனைவரும் தாரக மந்திரமாகக் கொள்ளவேண்டும்.

நடந்த செயலாக இருந்தாலும், நடவாத செயலாக இருந்தாலும் அது தீமை பயக்குமாயின் அதனைச் சொல்வது வாய்மையாகாது. அவ்வாறே, நடந்த செயலாக இருந்தாலும், நடவாத செயலாக இருந்தாலும் அது நன்மை பயக்குமாயின் அதனைச் சொல்வது பொய்மையாகாது என உரையாசிரியருள் சிறந்தவரான பரிமேலழகரின் உரை தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது.  இனி, ஒவ்வொரு சொல்லையும் பேசும்பொழுது வாய்மை என்னும் கல்லில் சொற்களை உரசிப்பார்த்துப் பேசுவீர்தானே? அப்படிப்பேசினால் உங்கள் சொற்கள் தங்கமாகும் ; நீங்களும்தான்.

 

 

 

    

வெள்ளி, 28 மே, 2021

திருக்குறளில் வாய்மை என்னும் பொய்யாவிளக்கு

 


அக இருள் நீக்கும் வாய்மை விளக்கு 

வாய்மை சுடும். அதனால்தான் அதனைப் பேசப் பெரும்பாலோனோர் தயங்குகின்றனர். உண்மை பேசத்தெரிந்தவர்களைவிட பொய் பேசத்தெரிந்தவர்கள் திறமைசாலிகள்தான். ஏனென்றால் யார் யாரிடம் என்னென்ன பொய் பேசிஇருக்கிறோம்? என்னும் நினைவுடன் இருத்தல்வேண்டும். திறமையான பொய்யாளர் நினைவாற்றலில் சிறந்தவர் என்பதில் ஐயமில்லைதானே. அப்படித் திறமையாகப்  பேசத்தெரிந்தவர்களையே சில நிறுவனங்கள் தேர்வு செய்கின்றன. திறமையாகப் பேசத்தெரிந்தால்போதும் அவர்களுக்குப் “பொய்களை எவ்வாறு பேசவேண்டும்?” என்னும் பயிற்சி கொடுத்துத் தேற்றிவிடுவர். அப்பாவி மக்கள்தான் இப்படிப்பட்ட கயவர்களிடம் சிக்கிக்கொண்டு பொருளையும் செல்வாக்கையும் இழக்கின்றனர். ஏமாற்றப்பட்டதை வெளியே சொல்லவும் தயங்குவர். அது மக்களுக்கு மானப்பிரச்சினைதானே?

“அகத்தின் அழகு முகத்தில் தெரிவதில்லை” என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பொய்யர்கள் “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” என்னும் உண்மையினை அறியாமல் வாழ்கின்றனர். இளமையில் பணத்திற்கு ஆசைப்பட்டு பொய்சொல்லிப் பழகுபவன் வாழ்நாள் முழுதும் பொய் சொல்லியே இழிவாகச் சாகிறான். பொய்யனாக வாழ்பவனைப் பொய்யாகவே சமூகம் மதிப்பதை அவன் அறிவதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக பெரிய பெரிய பொய்களைச் சொல்லி நிறுவனத்தின் வயிற்றையும் தங்கள் வயிற்றினையும் வளர்ப்பவர்கள் உண்டு. வெயிலைப் பாராது பாலம் கட்டும் தொழிலாளர்களின் ஐந்து நிமிட உழைப்பையாவது அவர்கள் பார்க்கவேண்டும். “உழைத்து உண்மையாக வாழவேண்டும்” என்னும் மன உறுதியின் அருமையினை அவர்களிடம் கற்றுக்கொள்ளமுடியும்.

பொய்களைப்பேசி வாழும் பெண்கள், ஐந்து வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் பாட்டியைப் பார்க்கவேண்டும். “வாழும்வரை நேர்மையாக உழைக்கவேண்டும்” என எண்ணும் அந்தப்பாட்டியின் பெருமையினை அறியவேண்டும். பிச்சை எடுக்காமல் உழைத்து உண்மையாகவாழும் பாட்டியை வணங்கத்தானே வேண்டும்? ஏதோ ஒரு நிறுவனத்துக்காக பொய்களைப்பேசி மயக்குவது மக்களுக்கு எத்தனைத் துன்பம்தரும். கிடைக்கும் ஊதியத்துக்காக எத்தனைப் பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். பொய்களுக்கேற்ப ஊதியம் அளிக்கும் நிறுவனங்களால் மூளை பொய்சுரபிகளாக மாறிவருவது ஆபத்துதானே?

பொய்பேசாமல் எப்படி வாழமுடியும்? எனக் கேட்பது வழக்கமாகவே மாறிவிட்டது. “பொய்சொன்னால் வாய்க்குச் சூடுபோடுவேன்” எனக்கண்டித்த தாய்மார்கள் காணாமல் போய்விட்டார்கள். குழந்தைகள் தேர்வுக்குப் படித்ததைக் கூடச் சொல்லக்கூடாது எனக் கற்றுக்கொடுத்துவிடுகிறார்கள். ‘கண்ணடி பட்டுவிடும்’ என்பதனால் அவ்வாறு சொல்லிக்கொடுக்கிறார்கள். அவ்வாறே ‘யாருக்கும் கொடுக்காமல் சாப்பிட்டுவிடவேண்டும்’ எனச் சொல்வதும் உண்டு? இது குழந்தையிடம் கொண்ட அக்கறைதான் என்றாலும் குழந்தையின் சமூக மதிப்பு குறைவதற்கும் அவர்களே காரணமாகிவிடுகிறார்கள்.  பின்னாளில் தாயை காக்கும் அறத்தையும் மறந்து முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிடுகின்றனர். விதை ஒன்று விதைக்க  வேறொன்றா விளையும்.?

இப்போது, “வாய்மை சுட்டுவிடுமோ” என்னும் அச்சத்தால் பொய்பேசும் இளைஞர்களை ; குழந்தைகளை ; தாய்மார்களை, பார்த்தோம்தானே? வாய்மைபேசினால் வேலை கிடைக்காது. வாய்மைபேசினால் தன்னலம் பாதிக்கும். என்னும் எண்ணங்கள் பரவிவிட்டது. யாரும் யாரையும் நம்புவதில்லை. எந்திரம் கொடுக்கும் சீட்டுகளையும், பத்திரங்களையுமே நம்பும் நிலைக்கு வந்துவிட்டோம்தானே? எந்தப்பெற்றோராவது பிள்ளைகள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்னும் நம்பிக்கையுடன் வாழ்கிறார்களா? அதற்கு மாறாக, அவ்வாறு பிள்ளைகளை எதிர்பார்த்து வாழ்வது தவறு எனக் கற்பித்துவருகின்றனர். குழந்தைகளைப் பெற்றோர் நம்புவது தவறா? “வயதான பெற்றோர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது” என்னும் எண்ணத்தில் இக்கூற்று பரவியிருந்தால் நன்றே.  

மின்சாரத்தில் எரியும் பல விளக்குகளுக்கிடையே ஒரு அகல் விளக்கு ஏற்றப்படுகிறது. மின் துண்டிப்பு ஏற்பட்டவுடன் அகல் விளக்கு மட்டும்தானே எரியும். அப்படித்தான் பொய் விளக்குகள் ஏற்றப்பட்டுவிட்டதால் உண்மை விளக்கின் வெளிச்சம் தெரியாமலே போய்விட்டது. சமூகத்தின் நிலையும் அப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், அறத்தின் அறையில் அவ்விளக்கு மட்டுமே எரியும். இதனையே தெய்வப்புலவர் திருவள்ளுவர்

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு (திருக்குறள்:299)

என அறிவுறுத்துகிறார். புற இருளை நீக்கும் விளக்குகளைக் காட்டிலும் அக இருளை நீக்கும் விளக்குதானே உயர்ந்தது. வாய்மை என்னும் தீ மற்ற தீயைக் காட்டிலும் உயர்ந்ததுதானே.

     விடுதலைப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்கள் ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உசி. மற்றும் ‘வீர முரசு’ சுப்பிரமணிய சிவாவையும் தெரியுமா? எனக்கேட்டால் “தெரியவே தெரியாது” என அனைவரும் உயிருக்கு அஞ்சி பொய் கூறினர். அவர்களிடையே “சூரியனையும் சந்திரனையும் பார்த்து தெரியுமா? எனக் கேட்கிறீர்” எனத் துணிவுடன் வாய்மையைப்  பேசிய மகாகவியின் சொற்கள் “தசையினைத் தீச்சுடினும் சிவசக்தியைப் பாடும் நல் அகம் தானே.

 

 

 

 

               

வியாழன், 27 மே, 2021

இலக்கியம் சொல்லும் எளிய வழிபாடு

 

தாயினும்  சிறந்தோன்

     ஏழைகளால் இறைவனை வழிபடமுடியுமா? செல்வங்களின்  அதிபதி ; சொர்க்கத்தின் தனிபதி.  தங்கத்தால் ஒளிவீசுபவன் ; மறைமொழியால் உடன்பேசுபவன். இப்படி அத்தனை அருமையினையும் உடைய இறைவனை, வறுமையினை மட்டுமே சொத்தாக வைத்திருக்கக்கூடிய எளியவர்கள் எவ்வாறு அறியமுடியும்? இந்த அச்சம் மனிதர்களுக்கிடையே இருக்கலாமேதவிர, அனைத்து மக்களையும் ஒன்றாகப் படைத்த இறைவனிடம் இருக்கக்கூடாது. தாயானவள் குழந்தைகளில் ஏற்றத்தாழ்வு காண்பாளா? தாயினும் சாலப்பரிந்தூட்டுபவரல்லவா இறைவன்.

     இறைவனை வழிபடுவதற்கு தீபம் ஏற்றவேண்டுமே என்செய்வது? அதற்கும் நாதியற்று வாழ்கின்றேனே என எளியவர்கள் எண்ணக்கூடும்தானே. நாயன்மார்களும் ஆழ்வார்களும். அவர்களின் அச்சத்தை நீக்குகிறார்கள். விளக்கேற்ற திரி வேண்டும் ; நெய் வேண்டும் ; அகல் வேண்டும். இவை வாங்குதற்குக் கூட வழியற்றுக் கிடக்கிறேனே என வருந்துகிறார் அடியவர் ஒருவர். அத்தகைய எண்ணமுடைய எளியோர்களை நல்வழிப்படுத்த நக்கீரதேவநாயனார் ‘கயிலை பாதி காளத்திபாதி” என்னும் நூலைப் படைக்கிறார்.

     சொல்லும்  பொருளுமே தூத்திரியும் நெய்யுமா

     நல்லிடிஞ்சில் என்னுடைய நாவாகச் – சொல்லரிய

     வெண்பா விளக்கா வியன்கயிலை மேலிருந்த

     பெண்பாகர்க்கு ஏற்றினேன் பெற்று.

 

என்னும் முதல்பாடலே இறைவனின் எளிமையினை எடுத்துக்காட்டுகிறது.  சொல்லே திரியாகவும்,  அதன் பொருளே நெய்யாகவும், நாவே அகலாகவும் இருக்கிறது. எனவே, இம்மூன்றையும் பயன்படுத்தி வெண்பா என்னும் விளக்கினை ஏற்றுகிறேன். கயிலை மலையில் வீற்றிருப்பவனும் பெண்ணை ஒருபாகத்துக் கொண்டவனுக்காகவுமே இவ்விளக்கை ஏற்றுகிறேன் எனப்பாடுகிறார்.

     கயிலையையும் காளத்தியையும் ஒரே நூலில் பாடிய அழகினுக்கு இந்நூல் எடுத்துக்காட்டு. தென்னாடுடைய சிவனையும் வடநாடுடைய சிவனையும் ஒருங்கே இணைக்கும் இலக்கியமாக இவ்விலக்கியம் அமைகிறது. ஒற்றைப்படை எண்களுடைய ஐம்பது வெண்பாக்கள் கயிலை மலையைப் பாடுகிறது. இரட்டைப்படை உள்ள ஐம்பது வெண்பாக்கள் காளத்தி மலையைப் பாடுகிறது. அப்படியென்றால் நூறுபாடல்கள் உடைய நூலிது என்பதனைச் சொல்லாமலே நீங்கள் விளங்கிக்கொண்டிருப்பீர்தானே?

     கயிலை நாதனும் காளத்தி நாதனும் மட்டும்தான் அடியார்களின் அன்புக்கு இரங்குவரோ? அரங்கநாதன் இரங்கமாட்டாரா? எனக் கேட்கிறீர்களா? நீங்கள் கேட்பீர் என்று தெரிந்துதான் பன்னிரு ஆழ்வார்களுள் முதல் ஆழ்வாரான பொய்கையாழ்வார்

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று

 

எனப்பாடியுள்ளார். மண்ணுலகத்தை அகலாகவும், அதனைச் சூழ்ந்துள்ள கடலை நெய்யாகவும் ஞாயிற்றை விளக்காகவும் கொண்டு சொல்மாலை சூட்டியதனைச் சுட்டிக்காட்டுகிறார். பன்னிரு ஆழ்வார்களுள் இரண்டாவதான பூதத்தாழ்வார்

     அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக

     இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி

     ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு

     ஞானத் தமிழ் புரிந்த நான்

 

எனப்பாடியுள்ளார். அன்பை விளக்காகவும் ஆர்வத்தை நெய்யாகவும் சிந்தையைத் திரியாகவும்  கொண்டு ஞான விளக்கை ஏற்றினேன் என்கிறார்.

தமிழ்ச்சொற்கள் அன்புக்குரியன. எனவே இறைவனின் அருள்பெற தமிழால் பாடுவதே போதுமானது. ஞானத்தமிழால் இறைவனைப் பாடினாலே இறைவன் அருள் கிடைக்கும் எனப்போற்றுவதனைக் கொண்டு இறைவனின் எளிமையினை அறியலாம்தானே?

புதன், 26 மே, 2021

நூறாண்டு வாழ்வோமா ?

 

நூறாண்டு வாழ்வோமா ?

     வாழ்வோம் என்று துணிவாகத்தான் சொல்லுங்களேன். மூச்சுவிடுவதும் வாங்குவதும் உங்கள் கையிலா இருக்கிறது?. அது தானாகவே தன் கடமையைச் செய்துகொண்டிருக்கிறது. எதுவும் உங்கள் கையில் இல்லாதபோது வாழும்வரை மகிழ்ச்சியுடன் வாழலாம்தானே? “நோயால் இறந்தவர்களைவிட அந்த பயத்தில் இறந்தவர்கள்தான் அதிகம்” என்பதனை பி.எம்.ஹெக்டே என்னும் மருத்துவர் எடுத்துக்காட்டுகிறார். உலகிலேயே சிறந்த மருந்து ஒன்று உண்டு. தெரியுமா உங்களுக்கு? … அதுதான் தன்னம்பிக்கை.

“என்னைப் படைத்த இறைவன் என்னைக் காப்பான்” என்னும் நம்பிக்கை வேண்டும். “இறைவனை நான் காணாதவரை நம்பமாட்டேன்” எனக் கூறினால் “நீங்கள் உயிருடன் இருக்கிறீரா?” எனக்கேளுங்கள். தனது காலை தானே பார்த்துக்கொண்டு உயிருடன் இருப்பதை உறுதிசெய்வார். அப்படியெனில், “அந்த உயிர் எங்கே இருக்கிறது? பார்த்ததுண்டா?”  எனக் கேளுங்கள்.. யோசிப்பார்.  “உங்கள் உடலை இயக்கும் உயிரையே உங்களால் பார்க்க முடியாதபோது, உயிரைப்படைத்த பேராற்றலை எப்படிப்பார்க்க முடியும்? எனக் கேளுங்கள். மௌனம் மட்டுமே விடையாய் வரும்.

                எத்தனையோ மருத்துவர்கள், “தேவையற்ற மருந்துகளை உட்கொள்ளாதீர்” எனக் கூறி இருக்கிறார்கள். அவர்களை மருத்துவமனைகள் விரட்டிவிடுகின்றன. நிறைய மருந்துகள் எழுதும் மருத்துவர்களைப் பாராட்டி மகிழ்கிறது. எத்தனைக் கோடிகொடுத்து பட்டம் வாங்கியிருக்கிறார். மருத்துவமனை கட்டியிருக்கிறார். சம்பாதிக்க வேண்டாமா? என நியாயம் பேசுவோரும் உண்டு.

உயிர்காக்கும் மருத்துவர் கடவுளுக்கு இணையானவர்தானே? கடவுள்  கணக்குப் பார்த்தால் உயிர்கள் வாழுமா? நிலத்திற்கு விலை. நீருக்கு விலை, காற்றுக்கு விலை, மழைக்கு விலை, சூரிய ஒளிக்கு விலை என இறைவன் விலைவைத்தால் உயிர்கள் வாழ இயலுமா?. கடவுளின் சொத்தினை மனிதன் பிரித்துக்கொண்டது எவ்வளவு அறியாமை. பிணத்திற்கு மருத்துவம் பார்த்து காசைக்கறந்த பல மருத்துவமனைகள் செய்தித்தாளில் வந்துகொண்டுதானே இருக்கிறது. எல்லோருக்கும் தெரிகிறதுதான். ஆனால் உயிர்காக்க மருத்துவமனைகளை நாடித்தானே போகவேண்டியிருக்கிறது.

அவர்களை விட்டுவிடுங்கள். நல்ல மருத்துவர்கள் எத்தனையோபேர் வெளிநாடுகளில் மருத்துவராகும் வாய்ப்பு கிடைத்தபோதும் செல்லாமல் தனது ஊர் மக்களுக்கு மருத்துவத்தைச் சேவையாகப் பார்க்கின்றனர். அத்தகைய மருத்துவர்கள் வணங்கத்தக்கவர்கள்தானே?. ஏழை மக்களை அச்சுறுத்தாமல், தேவையான மருத்துவம் மட்டும் பார்த்து உயிரைக் காத்தவர்களும் உண்டு ; காப்பவர்களும் உண்டு. அத்தகைய மருத்துவர்களாலும் வாழ்நாள் நீட்டிக்கப்படுகிறது.

மருந்துகளைப் பொதுவாகவே உடல் ஏற்பதில்லை. புதிதாக ஒரு பொருள் உள்ளே நுழைந்தவுடன், வீட்டிற்குள் வெளியாள் நுழைந்தால் ஏற்படும் அச்சம்போல் உடலும் அஞ்சுகிறது. இயல்பாகவே, நமக்குள் இருக்கும் எதிர்ப்புசக்திகளே நமக்குள் நுழையும் கிருமிகளைக் கொன்றுவிடும். விதிவிலக்காக அமையும் தொற்றுகளுக்கு அரசு கூறும் மருந்துகளையும் ஊசிகளையும் போட்டுக்கொண்டே ஆகவேண்டும்.

சிறிய தலைவலிக்குக்கூட, அஞ்சி மாத்திரைகளை உணவுபோல் விழுங்குவோருமுண்டு.அவர்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம்.   அப்படி மனம்போன போக்கில் செல்லவிடாமல் தடுக்கவேண்டிய கடமை ஒவ்வொருவர்க்கும் உரியது என ஒரு மருத்துவரே குறிப்பிட்டு இருக்கிறார். இது நம்பும்படி இல்லை, பிறகு எப்படி நோய்க்கு மருந்துபோட்டால் குணமாகிறது? என்றுதானே கேட்கிறீர்கள். இதற்கு விடை உங்கள் மன ஆற்றல்தான் என்றால் நம்புவீர்களா? நம்பமாட்டீர்கள்தானே? உங்களுக்காக மருத்துவர் ஹெக்டே ஒரு குட்டிக்கதை இல்லை குட்டி நிகழ்வைச் சொல்கிறார்.

ஒருவன் மன நிலை சரியில்லை என்று மருத்துவமனை செல்கிறார். உடனே மருத்துவர் மூளை செயல்பாட்டுக்கு மருந்துகொடுக்கிறார். மனம் சரியாகிறதா? மருந்தால் சரியாகாது. நம்பிக்கையால் சரியாகும்.  மனம் எங்கே இருக்கிறது? என்றுதான் எவரும் கண்டறியவில்லையே. மாறாக, மூளைக்குத்தான் சிகிச்சை நடைபெறுகிறது. நன்றாக செயல்படும் மூளை சிதைவடைகிறது. இதுதேவையா? எனக்கேட்கிறார். இது உண்மைதானே? எனவே, மனம்தான் எல்லா குறைகளுக்கும் நிறைகளுக்கும் காரணம் என உணர்த்துகிறார். அவருடைய அழகான ; அன்பு நிறைந்த எண்ணத்தை எவ்வாறு பாராட்டி மகிழ்வது?. உண்மையைக் கண்டறியுங்கள். விழிப்புணர்வுடன் இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். இவையே அவருக்கு நன்றி சொல்லும் வழி.

     இன்னும் நம்பிக்கை வரவில்லையா? இணையத்தில் அவரைத் தேடுங்கள். கூற்றினை உதைத்த கூத்தனாகிய  சிவபெருமானை வழிபடுங்கள். நூறாண்டுகள் வாழமுடியும் என வழிகாட்டுகிறார் கபிலதேவநாயனார்.

     ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள் வாழ்ந்து

     ஒன்றும் மனிதர்  உயிரையுண்டு  - ஒன்றும்


     மதியாத கூற்று உதைத்த சேவடியான் வாய்ந்த

     மதியான் இடப்பக்கம் மால்.

என்னும் ‘சிவபெருமான் திருவந்தாதி’யின் முதல்பாடல் நூறாண்டு வாழ வழிகாட்டுகிறது. நாளும் தேய்ந்துபோய் வருந்திய சந்திரனுக்கு தலையிலே அடைக்கலம் கொடுத்துக்காத்தான். சக்தியின் வடிவமான பெண்களுக்கு அடைக்கலம் கொடுக்கும்வகையில் உமையம்மைக்கு வலப்பாகத்தில் இடம்கொடுத்துள்ளான், ஆணோ, பெண்ணோ காப்பதற்கு இறைவன் உண்டு.   எனவே,. மரணம் வந்தால் வாழமுடியாதே என அஞ்சாமல், வாழும்வரை மரணம் வராது என நம்பிக்கையுடன் வாழலாம்தானே.

செவ்வாய், 25 மே, 2021

நகைச்சுவை நகைக்க அன்று

 


நகைச்சுவை நகைக்க அன்று

நகைச்சுவை அறுசுவையினைவிட நிறைவு தருகிறது. உண்மைதானே? அதனால்தான் இனிக்கஇனிக்கப் பேசும்போது பசி தெரிவதில்லை. நகைத்து முடித்தபின் நன்கு பசிக்கும். நகைக்கத் தெரிந்தவருக்கு பசி மட்டுமன்று வாழ்நாளும் கூடும். உறவுகளிடமும் நண்பர்களிடமும் பேசத்தெரிந்தவரைச் சுற்றி எப்போதும் கூட்டம் இருக்கும். “கண்களில் கருணை  இருந்தால், அனைவரிடமும் நீங்கள் விருப்பமாக இருக்கிறீர்கள்” என்று பொருள்.  “சொற்களில் இனிமை இருந்தால், அனைவரும் உங்களிடம் விருப்பமாக இருக்கின்றார்கள்” என்று பொருள். இரண்டனுள், முன்னதைவிட இரண்டாவதுதான் போற்றப்படுகிறது என்பது பெரியோர் வாக்கு.

நீங்கள் இரண்டு நிமிடம் உங்களைப்பற்றி எண்ணிப்பாருங்கள். உங்களுடைய அருமை உங்களுக்குப் புரியும். அனைவரைப் பற்றியும் அறிந்துகொள்ள விழையும் மனிதர்கள் தங்களைப் பற்றி அறிந்துகொள்ளவிழைவதில்லைதானே. கடந்தகாலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை எண்ணிப்பாருங்கள். அழுத நிகழ்வுகள் சிரிப்பையும், சிரித்த நிகழ்வுகள் அழுகையையும் கொண்டுவந்துவிடுகிறது. இப்பொழுது நகைச்சுவை என்பது நகைக்க மட்டுமல்ல என உணரமுடிகிறதல்லவா?

உயர்ந்த பொறுப்பில் இருப்பவர்கள் சிரிப்பதில்லை ; சிரிக்கத்தெரிந்தாலும் வெளிப்படுத்துவதில்லை. அப்படி பொறுப்புணர்வுடனும் புன்னகையுடனும் வாழ்பவர்களைக்கண்டால் வணங்கத்தான்வேண்டும். அப்படி சில தாத்தாக்களோ ! பாட்டிகளோ  ! உங்கள் வீட்டில் இருந்தால் நீங்கள் கொடுத்துவைத்தவர்கள்தான். எந்தச் சூழலையும் எளிமையாக எதிர்கொள்ளக்கூடிய வல்லமை அவர்களுக்குள் இருப்பதைக் காணலாம். நடு இரவில், குழந்தை, வயிற்றுவலியில் துடிக்கிறது. பெற்றோர் பதைக்கிறார்கள். தாத்தாவும் பாட்டியும் அலறும் சத்தம்கேட்டு தூக்கத்திலிருந்து எழுந்து குழந்தையிடம் வருகிறார்கள். பாட்டி, பதற்றப்படாமல் பொறுமையாக, குழந்தை வயிற்றில் விளக்கெண்ணையைத் தடவிவிட்டு, கை, காலை நீவிவிட்டு படுக்கவைத்தார். புன்னகை இல்லாமலே குழிவிழும் புன்னகை முகத்துடன் ‘நீங்க போய் தூங்குங்க. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்றாள் பாட்டி. தாத்தாவும் அதனையே வழிமொழிகிறார். வானைக் கிழித்த குழந்தையின் அழுகை படிப்படியாக மழை நிற்பதைப்போல் நின்று உறங்கிவிடுகிறது. ஒருவர் மற்றொருவரைப் பார்த்துப்புன்னகைத்த புன்னகை, வாழ்க்கையில் அவர்கள் இப்படி எத்தனை  சூழலை எதிர்கொண்டிருப்பார்கள் என்பதன் வெளிப்பாடு.

சரி, நகைச்சுவையைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கிறோம். புன்னகைக்குத் தாவிவிட்டீரே. என எண்ணாதீர்கள். புன்னகை, நகைச்சுவையின் ஒன்றுவிட்ட சித்தப்பா முறைதான். மிகவும் நெருக்கமானது என்பதற்காகவே இந்த உவமை. பொறுத்தருள்க.

நகைச்சுவை என்பது பிறர் நகைக்கத் துணைசெய்யலாமே தவிர யாரையும் நகைப்புக்கு உரியவராக ; உள்ளத்தைக் காயப்படுத்துவதாக அமைதல் கூடாது. “நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி” என்னும் தெய்வப்புலவர் வாக்குதானே நம் வாழ்வின் போக்கு. அப்படி, யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவை நடிகராக விளங்கியதால்தான் என்.எஸ்.கிருஷ்ணன் ‘கலைவாணர்’ ஆனார்.  குழந்தைகளிடம் பேசும்முறை அறிந்துபேசவேண்டும் என்பதனை, “நான் என்ன செய்யட்டும்” எனக் குழந்தைகேட்க, கோபத்தில் “என் தலையில் தீயை வை” என்பார் கலைவாணர். அவர் கவனிக்காதபோது குழந்தை தலைப்பாகையில் தீயைவைக்கும். அவருடைய பதற்றமே நகைச்சுவை காட்சியாகும். இத்துடன் காட்சி முடியவில்லை. “குழந்தைகளிடம் தவறான சொற்களைக் கூறினால் விளைவு இப்படித்தான் இருக்கும்” என்பதனைக் கலைவாணர் படம்பிடித்துக்காட்டிவிடுவார்.  இது படம் மட்டுமல்ல பாடமும்தானே.

“ஒரு நாள் முழுதும் சும்மா இருந்துகாட்டு. பிறகு, அது எவ்வளவு கஷ்டமுன்னு புரியும்” என ஒரு திரைப்படத்தில் சொல்வார் நகைச்சுவை நடிகர் வடிவேலு”. அப்போதுதான், மனிதர்களால் சும்மா இருத்தல் இயலாது. அப்படி முரணாக ஒருவர் இருந்தால் அது நகைப்புக்குரியதாகிவிடும் என்பதனையே அந்த நகைச்சுவைக்காட்சி உணர்த்தியிருக்கும்.

‘இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்பா” என்னும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் புகழ்பெற்ற வசனத்தை அனைவரும் அறிவர். இது நகைச்சுவைக்காக மட்டுமா? பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுபவர்களே அரசியல்வாதிகள் என்னும் செய்தியினை உறுதிப்படுத்தும் காட்சியாகவே அக்காட்சி அமைகிறது. இதனை, அரசியலுக்கு மட்டும் உரியதாக எடுத்துக்கொள்ள இயலாது. ஏமாற்றும் இடங்களில் எல்லாம் “அங்கு அரசியல் நடைபெறுகிறது” எனக் கூறுவதனையும் காணமுடிகிறது. அவ்வாறெனில், அரசியலில் நேர்மையாக வாழ்வதற்குப் பழகிக்கொண்டால் நாடு நலம்பெறும்தானே. அரசியலுக்கு வர அஞ்சும் இளைஞர்களும் எளிதில் அரசியலுக்குள் நுழைவார்கள்தானே. இத்தனை உண்மைகளையும் புலப்படுத்தும் காட்சியாகவே அக்காட்சி அமைகிறது.

காவலர்கள் கையூட்டு பெறும் நகைச்சுவைக் காட்சிகள் எத்தனையோ திரைப்படங்களில் இடம்பிடித்துள்ளன. அவை அனைத்தும் நகைச்சுவைக்குரியதா? ‘எந்திரன்’ திரைப்படத்தில் சிட்டியாக வரும் ‘எந்திரன்’ மொழியைப் புரிந்துகொள்ளுமே தவிர குறியீட்டுமொழியினை அறியாது. போக்குவரத்துக்காவலர், சிட்டி வேகமாகக் காரை ஓட்டியதற்காக தண்டம் விதிப்பார். அதிலிருந்து தப்பிக்க கையூட்டு கேட்பார். ‘வெட்டு’ என்பது “கையூட்டுக் கொடு” என்னும் பொருளினைக்குறிக்கும். இதனை அறியாத ‘சிட்டி’ காவலரின் கையை வெட்டிவிடும். இதுதான் காட்சி. 

உலகிலேயே சிறந்த காவல்துறை வரிசையில் இரண்டாவது இடத்தையும், இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை வரிசையில் முதல் இடத்தையும் பெற்றுள்ள காவல்துறையை இப்படி திரைப்படங்கள் நகைச்சுவைக்காகக்காட்டுவது நாட்டிற்கு நன்மையா? இல்லைதானே.  “நாட்டில் நடப்பதைத்தானே காட்டுகிறார்கள்” எனத் தணிக்கைக் குழுவினர் ஒப்புதல் அளித்ததே இதற்குக்காரணம். அப்படியென்றால் யாரைக் குறைசொல்வது. எங்கும் குற்றம் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்னும் விழிப்புணர்வை இக்காட்சி குறித்து சிந்திப்பவர்களுக்கு எழும்தானே?

ஆம், நகைச்சுவைக் காட்சியினைக் கண்டு நகைக்கும் நகை அழகுதான். ஏனென்றால் அந்த நகைதான் ஏழை, பணக்காரன் என்னும் வேறுபாடில்லாமல் அனைவரிடமும் இருக்கிறது.  ஆனால், அதே நேரத்தில் ஒவ்வொரு காட்சியையும் எண்ணிப்பார்த்தால், பின்புலமாக நிற்கும் பல குறைகளைக் களையமுடியும். இனி நகைச்சுவை நகைச்சுவைக்காக மட்டுமில்லை என்பதனை உணரலாம்தானே?

 

 

திங்கள், 24 மே, 2021

மனைவி – மகாலட்சுமியா? மகா …….

 


மனைவி -விளக்கேற்ற வந்த விளக்கு

     மனைவி இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாதசோலைதானே? எத்தகைய அறிஞனுடைய அறியாமையினையும் உணர்த்திவிடுகிறாள் அவன் மனைவி. ஒவ்வொரு வெற்றிக்கும், தோல்விக்கும் அவளே காரணமாகிறாள். தோல்விக்கு வலியாகவும் மருந்தாகவும் இருப்பவளும் அவள்தானே? அன்னையின் கண்களுக்கு குறைகள் தெரிவதில்லை ; மனைவியின் கண்களுக்கு குற்றங்கள் மட்டுமே தெரியும். ஆசிரியரின் கண்களுக்கு தவறுகள் தெரிவதைப்போல.

     அவள் இருந்தால் எல்லாம் இருக்கிறது. அவள் இல்லை என்றால் எதுவும் இல்லை. அவள் வேலைக்காரியாகப் பணி செய்தாலும் வீட்டிற்கு முதலாளியாகவே இருக்கிறாள். பெயருக்கு மட்டுமே தலைவன் முன்னிற்கிறான். இனி, குடும்பத்தலைவிக்குத்தான் குடும்பஅட்டை உதவித்தொகைக் கொடுக்கப்படும் என்று சிலஅரசுகள் அறிவித்ததை அறிவீர்தானே?

குழந்தைகளின் தேவையை மனைவியே எளிதில் அறிந்துகொள்கிறாள்.  கணவன் எளிதில் உணர்ச்சிவசப்படுகிறான். பதற்றத்தில் அண்டாவில் கை நுழையாது என்பதனை அவனுக்கு உணர்த்துபவள் அவளே.

     இல்லது என் இல்லவள் மாண்பானால் ; உள்ளது என்

     இல்லவள் மாணாக் கடை. ( திருக்குறள் :53)

     எதுவும் இல்லையென்றாலும் மனைவி மாண்புடன்  இருப்பாளானால் கணவனுக்கு இல்லாதது ஒன்றுமில்லை. எல்லாம் இருந்தாலும் மனைவி மாண்புடன் இல்லையனால் கணவனுக்கு உள்ளது என்று எதுவும் இல்லை  ஏனென்றால், எல்லாம் அவளே. அதனால்தான் மனைவியின்றி கணவனால் வாழமுடிவதில்லை.  விதிவிலக்குகள் இல்லையா? எனக் கேட்காதீர். நீங்கள் கேட்கும் வினாவிலேயே விடை இருக்கிறதுதானே?

     நடு இரவில் எரிந்துகொண்டிருந்த விளக்கு அணைகிறது. விளக்கு அணைந்ததும் மின்விசிறி நிற்கிறது. மின்தடை தான். சரியாக கணித்துவிட்டீர்கள். இனி உறங்கமுடியாதுஎனப் புலம்பிகொண்டே மெழுகுவர்த்தி ஏற்றுகிறான். அதை நிற்கவைக்கவே முடியவில்லை. “மெழுகுவர்த்தியின் கீழேயும் தீக்குச்சியைக் காட்டுங்கள்” என்றாள் மனைவி. அவனும் தீக்குச்சியைத் தீட்டி சூடுகாட்டி மெழுகுவர்த்தியை நிற்கவைத்தான். அவள் உடல்நிலை சரியில்லாததால், இரண்டு நிமிடவேளை இருபது நிமிடங்கள் ஆனது. வேர்வை ஆடையை நனைத்துக்கொண்டிருந்தது. பெருந்தொற்று காலத்தில் வெளியே போகலாமா? வேண்டாமா? என எண்ணியவன், வேறுவழியே இல்லை. என முகக்கவசம் அணிந்துகொண்டு வெளியே செல்லத்தயாரானான். அவன் கூறிக்கொண்டிருந்தபோதே அணைந்தவிளக்கு எரிந்தது. மெழுகுவர்த்தியை அணைக்க எண்ணி ஊதினான். அணையவில்லை. வேர்வை கொட்டியது. இதயத்துடிப்பு அதிகமானது. உடனே, மனைவியை அழைத்தான். “முச்சுக்காற்று (ஆக்ஸிஜன்) அளவு குறைந்துவிட்டது போலிருக்கிறது” என்று அலறினான். “அணைக்கமுடியவில்லையே” எனப் பதறினான். பதற்றப்படாத மனைவி, “முகக்கவசத்தை கழற்றிவிட்டு ஊதுங்கள்” என்றாள்.  முகக்கவசத்தை கழற்றிவிட்டு  அசடுவழிந்தான். என்ன அழகாக மனைவியின் துணையைச் சொல்லிவிடுகிறது இந்தக்கதை.  இப்படித்தான் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வேகத்தடையாகிப் பாதுகாக்கிறாள் மனைவி.

     இன்னொரு காட்சியைப் பார்க்கலாமா? கணவனிடம் கோபம்கொண்ட மனைவி “நான் அம்மாவீட்டிற்குப் போகிறேன்” என்கிறாள். “ஓவ்வொரு முறையும் சொல்கிறீர்களே தவிர  போறது இல்லை. ஆசை காட்டி மோசம் செய்கிறீர்கள்” என்கிறான் கணவன். இவ்வளவு மரியாதையாக மனைவியைக் கணவன் பேசுகிறானா? எனக் கேட்காதீர்கள். அவன் ஈழத்தமிழ்க்கணவன். பெண்களை மதிப்பதால் எத்தனை அழகாகிவிடுகிறது தமிழும் ; தலைவனுடைய பண்பும். கணவனின் சொல்கேட்ட மனைவி புன்னகைக்கிறாள். கோபம் தணிகிறது. இது ஒரு சிறிய காட்சிதான். ஆனால் எத்தனை வலிமையானது.

மனைவி தாய் வீட்டுக்குப் போகிறேன் என்று கூறினாலும் கணவனை விட்டுப் பிரிய அவளுக்கு மனம் வருவதில்லை. உணவுக்கு அவன் திண்டாடுவான் என்பதனை அறிவாள்தானே?. கணவனுக்கும் அது தெரியும் இருப்பினும் தாய்வீட்டுக்குச் சென்றாள் ஓய்வெடுப்பாள்.  ஓரிருநாள் துன்பப்பட்டாலும் பரவாயில்லை என நினைக்கிறான் கணவன். இத்தனை அன்பும் தேநீருக்குள் கலந்திருக்கும் தேயிலைபோல் கண்ணுக்குப்புலப்படாமல் வாழ்வினை இனிக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அப்படி குடும்பத்தை நடத்திச்செல்லும் மனைவி மகாலட்சுமிதானே?

மனைவிக்குப் பிறந்தநாள். குடும்பத்துடன் ஓட்டலுக்குச்செல்கிறார்கள். வேலைக்குச் சென்றுவிட்டு, சமையல்செய்து வேளாவேளைக்குக் கொடுப்பது கடினம்தானே?. விடுப்பும் இல்லை ; அடைப்பும் இல்லை. இன்று அடுப்படிக்கு ஒருவேளை விடுப்பு. கணவன், மனைவி, மகன், மகள்.  இதுதானே இன்றைய கூட்டுக்குடும்பம்?. கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்க்குடும்பத்தின் அளவு குறைந்துவருவதனை அறிவீர்தானே. முந்தைய காலத்தில் ஒரே வீட்டில் ஐந்து அண்ணன், தம்பிகள் சேர்ந்து வாழ்வார்கள். வீடு  சிறியதாக இருந்தாலும் மக்கள் பெருகி இருந்தனர். இன்று வீடு பெரிதாக இருக்கிறது. மக்கள் சுருங்கிவிட்டனர். எல்லாம் முரணாகிவிட்டதுதானே? வீட்டிற்கு வெளியே இருந்த கழிவறைகள் வீட்டிற்கு உள்ளே வந்துவிட்டது. வீட்டிற்கு உள்ளே இருந்த பெரியவர்கள் வெளியேறிவிட்டார்கள். விளைவு ஓட்டல்களில் உணவு.  திண்ணையில் உணவிட்ட மகிழ்ந்த  இனம். உணவுக்கு காசு கொடுக்கும் அளவிற்கு மாறிவிட்டது எத்தனை அவலம். சரி, இது நமது தலைப்பில்லை.  இல்லத்தலைவியைப் பற்றித்தானே பேசிக்கொண்டிருக்கிறோம்.  

ஓட்டலில் சாப்பிட்டு முடித்தபின் சாப்பிட்டதற்கான தொகையோடு சேவை செய்தவருக்கு இருபது ரூபாய் கொடுத்து “சாப்பாடு அருமை” எனக் கூறிவிட்டு வெளியே வந்தான். மகள் கேட்டாள் “இப்படி ஒரு நாளாவது அம்மாவைப் பாராட்டி இருக்கிறீர்களா?”. மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான். புன்னகையில் அவனுடைய தவறுக்கான வருத்தமும் கலந்திருந்ததனைப் புரிந்துகொண்டாள் படித்த மனைவி.  அப்படி கணவனைப் புரிந்துகொண்டு குடும்பத்தை நடத்திச்செல்லும் மனைவி சரஸ்வதிதானே?

உங்கள் மனைவி மகாலட்சுமியா? மகா சரஸ்வதியா?

 

ஞாயிறு, 23 மே, 2021

இனிக்கும் ஈழத்தமிழ்

 


தமிழின் அழகினைப் பழக்கிடுவோம்

தமிழ் என்றாலே அமிழ்தம். மூன்று முறை ‘தமிழ்’ என்னும் சொல்லைத் தொடர்ந்து கூறினால் முத்தமிழ் அமிழ்தாவதனை உணரமுடியும். அமிழ்தம் என்னும் சொல்லை ‘அம் + தமிழ்’  என எழுத்துக்களை மாற்றிப் பிரித்தால் “அழகான தமிழ்” எனப் பொருள்தரும்.  ஐந்து எழுத்துக்களையும் உள்ளடக்கியிருப்பதும் ஓர் அழகுதானே. அத்தகைய பெருமையுடைய உலகின் முதன்மொழி தமிழ்.

தமிழை எப்படிப் பேசினாலும் இனிக்கும்தானே. தேன் எங்கு தொட்டாலும் இனிப்பது அதன் இயல்பு. ஆனால் கொம்புத்தேன், மலைத்தேன் என எத்தனையோ தேன் இருக்கிறதல்லவா? அப்படித்தான் தமிழும் பல நாடுகளில்  இந்தியத்தமிழ், இலங்கைத்தமிழ், சிங்கைத்தமிழ், மலேயத்தமிழ் என  ஒலித்துக்கொண்டிருப்பதனைக் காணலாம்.

ஈழத்தமிழ் அன்னத்தால் பிரித்தெடுக்கப்பட்ட தமிழ். பிறமொழி கலவாத தூய்மையான தமிழ்ச்சொற்கள் அவை.  இன்பத்தால் இனிக்கும் ; பொருளால் சிறக்கும் ; அறத்தால்  அணைக்கும். எப்படி? எனக் கேட்க விழைகிறீர்களா? ‘கம்பவாருதி’ எனப் புகழப்பெறும் இலங்கை ஜெயராஜ் அவர்களுடைய தமிழ் இலக்கியச் சொற்பொழிவினைக் கேட்டுப்பாருங்கள். நான் சொல்வது துளி ; நீங்கள் கேட்டது கடல் என  உணர்வீர்கள்.

“ஈழத்தமிழை ஏன் உயர்வாகச் சொல்லவேண்டியிருக்கிறது?” என நினைக்கிறீர்கள். அப்படித்தானே? எப்போது ஒருவரை உயர்வாகச்சொல்லவேண்டி இருக்கிறது எனில், யாரோ ஒருவர் தாழ்வாக நடந்துகொள்ளும்போதுதான் உயர்வானவர்களை எடுத்துக்காட்டவேண்டியிருக்கிறது. அவ்வாறே, தமிழ்மொழியின் தரத்தைக் குறைக்கும் வகையில் பிறமொழியில் கலந்துபேசும் வழக்கம் பெருகிவருகிறது. தமிழில் ஆங்கிலம் கலந்துபேசும் நிலைமாறிவிட்டது. அப்படியா? எனக் கேட்டு பெருமைகொள்ளாதீர்கள். இன்று, ஆங்கிலத்தில் தமிழ்கலந்துபேசும் அளவிற்கு ஆங்கிலம் குழந்தைகளிடம் அடைக்கலப்பட்டுவிட்டது. “நாநுனியில் என் குழந்தை ஆங்கிலம் பேசும்” என உங்கள் நண்பர்கள் சொல்லக்கேட்டதுண்டுதானே? தாய்மொழியான தமிழின் நிலை என்ன? எனக் கேட்டுவிடாதீர்கள்.  தவறாமல்  கிடைக்கும் தேநீருக்குத் தடைவரலாம்.

மதிப்புமிக்க தமிழ் ஈழத்தமிழ். ஏனென்றால், அவர்கள் “வாங்க!,வாரும்” என்றே அழைப்பார்கள். ஒருமையில் பேசிப்பார்த்ததே இல்லை. சிறுகுழந்தைகளாக இருந்தாலும் சரி, கணவன், மனைவியாக இருந்தாலும் சரி, இத்தனை மரியாதையுடன் அழைப்பதை வேறேங்கும் பார்க்க இயலாது. சிறுவயதிலிருந்தே பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும்  கொடுக்கும்போது “பெண்களைப் பாதுகாக்கவேண்டும்” எனக் கற்பிப்பதே தேவையற்றதாகிவிடுகிறதுதானே? பண்பாட்டினை மொழியே கற்பித்துவிடும்தானே? மேலும் சில சான்றுகளைப் பார்ப்போமா?

 இயல்பான பேச்சுவழக்கு

ஈழத்தமிழ் - பேச்சுவழக்கு

என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

என்ன கதைக்கிறீர்கள்?

டீ

தேத்தண்ணி 

ஆம்

ஓம்

ஒன்னுமில்லை,காலி

வெறுமையாயிருக்கு

ரொம்ப

கனக்க

கலாட்டா

குழப்படி

தூக்கம்

நித்திரை

ஜுரம்

கா(ய்)ச்சல்

அழகு

வடிவு

ஓவியம் வரை

கீறு

படி

வாசி

ஷூ, செருப்பு

சப்பாத்து

ஆடை

உடுப்பு

பல்துலக்கு

பல்தீட்டு

உட்கார்

இரு

ஸ்கூல்

பள்ளிக்கூடம்

ஒழுங்காக

முறையாக

சொல்ல முடியாது

சொல்ல இயலாது

சமையல்

குசினி

புரிஞ்சுது

விளங்குது

சாய்ங்காலத்தில்

பின் நேரத்தில்

 

இப்படி ஒவ்வொரு சொல்லையும் அடுக்கிக்கொண்டே போகலாம். இச்சொற்களுள் மிகவும் வருந்தத்தக்க சொல் ஒன்று உண்டு. குழந்தைகள் ஸ்கூலுக்குப் போவதுதான். “ஸ்கூலுக்குப் போவதில் என்ன வருத்தம்?” எனக் கேட்காதீர்கள். பள்ளிக்கூடத்தை “ஸ்கூல்” என்றுதான் பல குழந்தைகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இதனை எண்ணிப்பார்த்தால் தமிழ்க்குழந்தைகள் தாய்மொழி மறந்ததைப் புரிந்துகொள்ளமுடிகிறதல்லவா?

தமிழில் உயர்ந்த சொல்லான “ஓம்” என்னும் சொல்லை ஈழத்தமிழர்கள் அறிந்தோ அறியாமலோ ஒரு நாளில் பலமுறை சொல்லிக்கொண்டிருப்பது எத்தனை அழகு. தமிழில் ‘ஆம்’ என்பதைத்தான் அப்படிச்சொல்லிப் பழகியிருக்கிறார்கள். அதனால்தானோ என்னவோ தமிழ்க்கடவுளின் அருளோடு தமிழ் வளம் குறையாமல் அவர்களுக்கு வசப்பட்டிருக்கிறது.

“நான் உங்களைக் கீறட்டுமா?” என ஒரு குழந்தை உங்களிடம் கேட்டால் அச்சம்தானே வரும். ஆனால், ஈழத்தமிழ் என அறிந்தால் மகிழ்ச்சி உண்டாகும். “நான் உங்களை ஓவியமாக வரையட்டுமா?” எனஒரு குழந்தைகேட்டால் மகிழாதவர்கள் யார்?

பற்களைத் துலக்குவது விட தீட்டுவது நல்லது என்று பல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். சிலர் பற்களை பாத்திரம் துலக்குவதுபோல் துலக்கி பற்களுக்குத் தேவையான சத்தையும் துலக்கிவிடுவார்கள். இதனால் ஈறுகளும் கெட்டுவிடும். அப்படி இல்லாமல் ஈழத்தமிழில் தீட்டுவது அழகுதானே. பற்களுக்கு மட்டுமன்று ; மொழிக்கும்தான்.

ஈழத்தமிழ்க்குழந்தைகள் பேசும் தமிழ் அழகாக இருக்கிறது. ஆங்கிலப்பள்ளியில் பயிலும் தமிழ்க்குழந்தைகள் ஆங்கிலம் சரளமாகப் (தடையின்றிப்) பேசுவதைப்போல.  

 

சனி, 22 மே, 2021

புறநானூற்றில் "செய்தி "அறம்

 


செய்தி என்னும் நன்றி மொழிதல்  – NEWS – Thanking Words

செய்தியாளர்கள், மக்களைக் காப்பதற்கென்றே அறப்பணி செய்யவந்த அருமனிதர்கள் ; எத்தனையோ இடர்ப்பாடுகளைக் கடந்து செய்திகளைத் தொகுத்துத் தரும் அவர்களின் உழைப்பால்தான் நாடு நலமாகிறது ; கடவுளுக்குப் பயப்படாதவர்கள் கூட செய்தியாளர்களின் ஒளிப்பதிவுக்குப் பயப்படுகிறார்கள். பெற்றோர்களிடம் பிள்ளைகள் நன்றியுணர்வுடன் இருப்பதுதானே அறம். ஏனென்றால், பிள்ளைகளை மட்டுமே பெற்றோர்கள் முழுமையாக நம்புவர். அப்படித்தான், இந்தச் சமூகம் செய்திகளை நம்புகிறது. அப்படியென்றால அந்நன்றியைப் போற்றுவதுதானே செய்தி அறம்.

                நான் செய்தியாளராக என்ன செய்யவேண்டும்? எனக் கேட்கிறார் ஒருவர். நீங்கள் செய்திகளை ‘மை’நிரப்பி எழுத வேண்டும் என்றார் ஓர் அறிஞர். என்ன மை? எனக்கேட்டபோது நேர்மை, வாய்மை, உண்மை எனக் கூறினார் அறிஞர். இக்கூற்று செய்தி அறத்தைச் சுட்டிக்காட்டுகிறதுதானே? அப்படியென்றால் செய்தியாளர்களின் எழுத்து எத்தனைப் பெருமையுடையதாக இருக்கவேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செய்தியாளர்களுக்கிடையில் அச்சுறுத்தும் செய்தியாளர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள்தான் ஆபத்தானவர்கள்.

                செய்தி இல்லாமல் உலகம் இயங்குமா? இந்த உலகமே செய்திகளால்தானே நிரம்பியிருக்கிறது. அதன் மெய்ம்மையே உலகின் வளர்ச்சியை எடுத்துக்காட்டும். அதனால்தான், பெரியவர்கள் முதலில் கேட்கக் கூடிய கேள்வி “என்ன சேதி?”. ஒரு மனிதனைப் பற்றி செய்திதானே ஆளுமையின் அளவுகோலாகிறது. எனவே, எத்தனை திறமையும் புலமையும் இருந்தாலும் அதனைச் செய்தியாக்கத் தெரியாவிட்டால், பணி வாய்ப்புகளை இழக்கநேரிடுகிறது. அதுமட்டுமன்று, இல்லாததை இருப்பதாகச் சொல்லிவிட்டாலும் துன்பம்தானே.  உண்மை தெரியும்போது விரட்டிவிடுவார்கள்தானே? சொல்வதனை விளக்கமாகச் சொல்வதில் தவறில்லை. உண்மையை மறைத்து பொய்மையைப் பெருக்கிச்சொன்னால் அதனால் விளையும் துன்பத்தை அனுபவித்துத்தானே ஆகவேண்டும்.

                “இந்தப் பகுதி ஆபத்தானது” “இந்த வளைவு ஆபத்தானது” “மெதுவாகச் செல்லவும்” “இது ஒருவழிப்பாதை” “இங்கு பள்ளி உள்ளது” “ இது மருத்துவமனைப் பகுதி” “சத்தம்போடாதே” “பூக்களைப் பறிக்காதீர்கள்” “குப்பை போடாதீர்கள்” “வரிசையில் நிற்கவும்” “முதியோர்கள் மட்டும்” “வாகனத்தை நிறுத்தாதீர்” என எத்தனைப் பதாகைகள் செய்திகளைத் தாங்கிக்கொண்டிருக்கின்றன. ஓரிடத்தில் நிற்கும் பதாகைகளே எத்தனையோ உயிர்களைக் காக்கின்றன ;  நாட்டை நல்வழிப்படுத்துகின்றன. அப்படியெனில் செய்தியாளர்கள் தவறான செய்திகளை வெளியிட்டு அச்சத்தை விளைவிக்கலாமா? உயிரோடு இருக்கும் பெரியவர்களை இறந்துவிட்டதாகச் செய்தி அனுப்புவது ; காவல்துறைக்குத் தவறான செய்திகளை அனுப்புவது ; உண்மையான செய்திகளைத் திரித்துச்சொல்வது ; குற்றவாளிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு உண்மைச் செய்திகளை மறைத்துவிடுவது  என எத்தனை   செய்திகளைக் காணமுடிகிறது. இப்படிப் பொறுப்பற்ற செய்திகளை வெளியிடும் சில செய்தியாளர்களால்தான் உண்மையாக வாழும் செய்தியாளர்களுக்கு மதிப்பு இருப்பதில்லை.

                எத்தனையோ தலைவர்கள், செய்திகளை மக்களுக்குத் தெரிவிப்பதனையே முக்கியப்பணியாக எண்ணி நாட்டுப்பணிகளுக்கிடையே செய்தி நிறுவனங்களையும் நடத்தியும், எழுதியும் வந்தனர். அதனால்தானே நாடு விடுதலைபெற்றது. ஆங்கிலச் செய்தித்தாள்களும், இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தை ; மக்களின்  உண்மையான மன நிலையினை ; ஆங்கிலேயர்கள் செய்த கொடுமையினை அப்படியே விளம்பியது. அதுதான் செய்தி அறம். ‘செய்தி’ என்றால் ‘நன்றி’ என்றும் பொருள் உண்டு. மக்களால் வளரும் செய்தி நிறுவனங்கள் மக்களுக்குத் தெரிவிக்கும் நன்றிதான் செய்தி. அதனை எப்படி பொறுப்புணர்வுடன் அளிக்கவேண்டும் என்பதனைச் சங்க இலக்கியப்பாடல் எளிதாக உணர்த்திவிடுகிறது.

ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்,

மாண்இழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்,

குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும்,

வழுவாய் மருங்கின் கழுவாயும் உளஎன,

நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்’ …’

 

என்கிறது ஆலத்தூர் கிழாரின் புறநானூற்றுப்பாடல்(34).