தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 25 மே, 2019

திருக்குறள் அதிகார வைப்புமுறையில் மானுட மேன்மை Thirukkural


திருக்குறள் அதிகார வைப்புமுறையில் மானுட மேன்மை

முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், துணைப்பேராசிரியர், காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையம், புதுச்சேரி-605 008. உலாப்பேசி – 99406 84775

        எழுத்துக்களைக் கூட்டிச் சொல்லாக்கும் முயற்சியில் உலகில் பலமொழிகள்  தடுமாறிக்கொண்டிருந்த போது ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்லில் சொல் வடித்த பெருமை தமிழரையே சாரும். அத்துனைப் பழமையானதும் சிறப்புடையதும் தமிழ்மொழியே. அத்தகைய மொழிக்குப் புதல்வர்கள் என்னும் பெருமை தமிழர்க்கே உரித்து. பண்பாடு, நாகரிகம், ஒழுக்கம் என அனைத்தையும் உள்ளடக்கிய மானுடமேன்மை என்னும் சொல்லின் பொருள் இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதனைத் திருக்குறளின் வழி விளக்க விழைந்ததன் விளைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

திருக்குறளின் அதிகாரவைப்பு முறை

        அறிந்ததிலிருந்து அறியாதது என்னும் நிலையில் புரிந்துகொள்வதே இலக்கணமுறை. அவ்வாறு திருக்குறள் ஒவ்வொன்றும் எல்லா நிலைகளிலும் எளிதாக விளக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளமையே தமிழரின் பெருமைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. இதனை அதிகாரத்தின் பெயரிடும் முறையிலும் வைப்புமுறையின் வழியுமே தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம்பிள்ளை முதல் பேராசிரியர் சாலமன் பாப்பையா வரை பலரும் திருக்குறளின் அதிகார வைப்புமுறையை ஆய்ந்து தம் விருப்பத்திற்கேற்ப , விளக்கத்திற்கேற்ப மாற்றி அமைத்துள்ளனர். எனினும் பெரும்பாலான தமிழறிஞர்கள் வழக்கத்தில் நிற்கும் பழமையான முறையினையே ஏற்றுக்கொள்கின்றனர். மொழிபெயர்ப்புகளும் அவ்வாறே இடம்பெற்றுள்ளதனைக் காணமுடிகிறது. இவ்வதிகார வைப்புமுறையினை ஆய்ந்தாலே தமிழரின் பண்புநலன்களையும் அறிவுத்திறத்தையும் காண இயல்வதோடு மானுடமேன்மைக்கு வழிகாட்டும் திறத்தையும் உணர்ந்துகொள்ளமுடிகிறது.

தெய்வப்புலவர் திருவள்ளுவரும் கடவுள் வாழ்த்தும்

        ’திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை’ என்னும் பழமொழி மானுட வாழ்விற்குப் பற்றுக்கோட்டினை ஏற்படுத்தும், கடவுளின் துணைகொண்டு வாழ்வை முன்னெடுத்துச்செல்ல முதல் அதிகாரமான ‘கடவுள் வாழ்த்து’ - இன் வழி அறிவுறுத்துகிறார் தெய்வப்புலவர். ஒவ்வொன்றாகப் பூத்த ஐம்பூதங்களைக் கண்டு அறியாமையால் அஞ்சிய மனிதர்கள் அவற்றைத் தெய்வமாகக் கருதினர். பின்னர் அவற்றுடன் இயைந்து வாழ்ந்து, அவற்றைப் பயன்படுத்தி வளமாக வாழத் தொடங்கியதன் வழியும் மக்களின் வளர்ச்சி நிலையினை தெய்வப்புலவர் தெளிவுறுத்துகிறார் நற்பண்போடு வாழ்வோர்க்குத் தெய்வம் துணைநிற்கும் என்னும் கோட்பாட்டினை

வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல (திருக்குறள் -4)



என்னும் திருக்குறள் எழிலுற எடுத்தியம்புகிறது. இதன்வழி இறைவன் படைத்த உயிர்களுக்கு கேடு நிகழாதவாறு வாழ்வோர் இறைவனின் அன்பைப்பெற்று துன்பமின்றி வாழமுடியும் எனத் தெளிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. முதல் அதிகாரத்தின் வழியே எல்லா உயிர்களின் மேன்மைக்கும் துணைநிற்கும் மானிடர்க்கே கடவுளின் அருளுண்டு என்பதனைப்புலப்படுத்தி அவ்வாறு வாழ வழிகாட்டியுள்ளதையும் காணமுடிகிறது.

வான்சிறப்பும் மானுடமேன்மையும்

        தனிமனித ஒழுக்கத்தின் மேன்மையே மானுடமேன்மைக்கு வழி என வாழ்வை நோக்குவோர்க்கு இரண்டாவது அதிகாரமான ‘வான் சிறப்பு’-இன் வழி தெய்வப்புலவர் விடையிறுப்பதனைக் காணமுடிகிறது. அறவாழ்விற்கு வளமான வாழ்வே அடிப்படையாகிறது. எனவே வளம் குன்றின் நலம் குன்றி அறநெறியினின்று பிறழ்ந்து மனிதர்கள் பிற உயிர்களை ஏய்த்து வாழும் நிலை உண்டாகிவிடும் என்பதனைத் தெளிவுறுத்துகிறார். இவ்வற வாழ்விற்கு மாரியன்றி வேறு துணை இல்லை என்பதனை

        கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை (திருக்குறள் - 15)



என்னும் திருக்குறள் தெளிவுறுத்துகிறது. மானுடமேன்மை சிறப்பதும் குன்றுவதும் மழைப்பொழிவாலேயே நிகழ்கிறது. மேலும் அதனால் விளையும் நிலச்செழிப்பாலுமே அமையும் என்பதனைத் தெளிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. மானுடமேன்மையில் சிறந்துள்ள நாடு என ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட இயலுமாயின் அது அந்நாட்டின் வளத்தினைக் கொண்டே அளவிட்டிருப்பதனைக் காணவியலும் என்பதனை இதன்வழி உணர்ந்துகொள்ளமுடிகிறது.

இல்லறமே நல்லறம்

        பெரியோரைப் போற்றுவதும் அறவழி வாழ்தலின் முக்கியத்துவத்தையும் அடுத்தடுத்துச் சுட்டிக்காட்டிய திருவள்ளுவர் இல்லறமே தெய்வ நிலைக்கு உயர்த்திச் செல்லும் என்பதனை ‘இல் வாழ்க்கை என்னும் ஐந்தாவது இயலில் எடுத்துரைக்கிறார்.

        வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும் (திருக்குறள் - 50)



என்னும் திருக்குறள் ஏழை எளியவர்களுக்கு மட்டுமின்றி பிற உயிர்களுக்கு நன்மை செய்து வாழும் மானுட நேயம் தெய்வ நிலைக்கு உயர்த்தும் என்பதனைத் தெளிவுறுத்துகிறது.

மானுடமேன்மையில் பெண்ணும் ஆணும்

பெண்ணையே முதன்மைப்படுத்தும் தமிழர் வாழ்க்கை முறையின் பெருமையினை இல்லறத்தை அடுத்து ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்னும் அதிகாரத்தின் வழி புலப்படுத்துகிறார். தன் படைக்கும் திறனை பெண்ணுக்கு அளித்து அனைத்து உயிர்களையும் போற்றும் மானுடமேன்மைக்கு உருவாகப் பெண்ணைக்காட்டியுள்ளதனைக் காணமுடிகிறது. 

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு (திருக்குறள் - 58)



என்னும் திருக்குறள் பெண்ணானவள் பிற உயிர்களுக்கு நன்மை செய்து வாழ்தலைப் போலவே தன்னைப் பெற்றவனாகிய கணவனையும் பெருஞ்சிறப்புடையவனாக வாழச்செய்தல் பெருமைக்குரியது எனத் தெளிவுறுத்துகிறது. இவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் தன்னைச்சுற்றியுள்ள ஆண்களை நல்வழிப்படுத்துவதன் வழி மானுடமேன்மை சிறக்கும் எனத்    தம் ஆறாவது அதிகாரமான ‘வாழ்க்கைத் துணைநலத்தின் வழி தெளிவுறுத்துகிறார் தெய்வப்புலவர்.  

கடவுள் வாழ்த்தும் ஊழும்

        அறத்துப்பால் கடவுளில் தொடங்கி ஊழில் முடிகிறது. மானுடமேன்மைக்கு வழிகாட்டாத எவ்வகை வாழ்வும் சிறக்காது என்பதனை உணர்த்தும் வகையிலேயே முப்பத்தேழு அதிகாரங்களையும் படைத்துள்ளார் தெய்வப்புலவர், அந்நிலையிலிருந்து மாறுபட்டு அறச்செயலில் சிறந்திருப்பினும் சில வீடுகளும் நாடுகளும் ஏழ்மையில் இருப்பதனை ‘ஊழ்’ என்னும் அதிகாரத்தின் வழி நிறைவுசெய்கிறார்.

        வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது (திருக்குறள் -377)



என்னும் திருக்குறள் இறையருளாலேயே வாழ்வமைகிறது என்பதனைத் தெளிவுறுத்தி மானுடமேன்மைக்குத் துணைசெய்யாத எவர்வாழ்வும் சிறக்காது என அறிவுறுத்தி வழிகாட்டியுள்ளதனைக் காணமுடிகிறது.

இறைமாட்சியும் கயமையும்

        அற வாழ்விற்கும் இன்ப வாழ்விற்கும் அடிப்படையாக அமைவது பொருளுடைய வாழ்வேயாகும் என்பதனாலேயே பொருளதிகாரத்தை இடைவைத்து மற்ற இரண்டையும் முன் பின்னாக வைத்துள்ளதனைக் காணமுடிகிறது. மேலும் பொருளுக்கே நூற்றி முப்பத்துமூன்று அதிகாரங்களில் எழுபது அதிகாரங்களை இடம்பெற்றிருக்கச்செய்வதன் வழி அதன் முக்கியத்துவத்தினை உணர்த்தியுள்ளார் தெய்வப்புலவர். மானுடமேன்மைக்குப் பொருள் துணைசெய்யும் அருமையினை இதன்வழி உணர்ந்துகொள்ளமுடிகிறது. உலகையாளும் கடவுளான இறைவனை அறத்துப்பாலில் எடுத்துரைத்த தெய்வப்புலவர் பொருட்பாலில் மண்ணாளும் இறைவனாகிய மன்னனை ’இறைமாட்சி’ என்னும் அதிகாரத்தின் வழி முன்னிலைப்படுத்துகிறார். இறைவனாகிய மன்னனின் ஆளுமையைக் கொண்டே மக்களின் வாழ்க்கை நிலையும் அறவாழ்வும் சிறக்கும் என்பதனை உணர்த்தியுள்ளார். அவ்வாறு பொருளைக் கொண்டு பிறருக்குக் கேடு நிகழ்த்துவராயின் அது ‘கயமை’யிலேயே  முடியும் என்பதனாலேயே நூற்றெட்டாவது அதிகாரமாக கயமையைப் படைத்துள்ளதனைக் காணமுடிகிறது.

அரசனே இறைவன்

        அரசன் இறையென்று போற்றப்படுவதற்குக் காரணம் அவன் மக்களைப் போற்றிப் பாதுகாப்பதனாலேயே என்பதனை

        முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு

இறையென்று வைக்கப் படும் (திருக்குறள் -388)



என்னும் திருக்குறளின் வழி தெளிவுறுத்துகிறார் தெய்வப்புலவர். பகையினின்று மக்களைக்காத்து மானுடமேன்மைக்கு வழிகாட்டும் அரசன் கல்வி அறிவும் கேள்வி அறிவும் உடையவனாகி அறிவுடைமையுடன் திகழவேண்டும் என்பதனாலேயே அடுத்தடுத்து அதிகாரத்தை அமைத்துள்ளதனைக் காணமுடிகிறது. இவ்வறிவின்றி குடிகளைக் காத்தற்கும் மானுடமேன்மைக்கும் வழிகாட்டுதல் இயலாது என்பதனைத் தெளிவுறுத்துகிறார் தெய்வப்புலவர்.

வாழ்வின் தேர்ச்சிக்கு கல்வி

        மானுடமேன்மைக்கு வழிகாட்டுவதாகவே கல்வி அமைதல் வேண்டும் என்பதனாலேயே அதனை ஒரு பணியாக மேற்கொள்ளாது அதனை ஒரு தொண்டாக மேற்கொள்வதனைக் காணமுடிகிறது. நாற்பது விழுக்காடு மதிப்பெண் பெற்றால் தான் தேர்வுகளிலே வெற்றிபெறமுடியும் என்பது போலவே ‘கல்வி’ கற்றாலே வாழ்வில் தேர்ச்சி பெறமுடியும் என்பதை உணர்த்தும் வகையில் நாற்பதாவது அதிகாரமாகக் கல்வி அதிகாரத்தை அமைத்துள்ளதாகக் கொள்ளமுடிகிறது.

        தாம் இன்புறுவது உலகுஇன் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார் (திருக்குறள் - 399)



என்னும் திருக்குறள் மானுடமேன்மையினைப் போற்றி வாழ்வதே கல்வியின் பயன் எனத் தெளிவுறுத்தியுள்ளதனைக் காணமுடிகிறது. தான் மட்டும் இன்புற பிறர் நலிவடைதல் உண்மையான கல்வியாகாது எனவும் மானுடமேன்மைக்காக அமையும் கல்வியே சிறப்புடைய கல்வி என அறிவுறுத்தியுள்ளதனையும் அறிந்துகொள்ளமுடிகிறது. பொருளுக்காக மட்டுமே வழிகாட்டும் கல்வியாக இல்லாமல் மானுட நேயத்துடன் வாழ வழிகாட்டும் கல்வியே சிறந்தது என்பதனையும் தெளிவுறுத்தியுள்ளதனையும்  காணமுடிகிறது. பல மனிதர் நோக சில மனிதர் வாழும் நிலை அவலத்திற்கு உரியது என்பதனை உணர்த்துவதாகவும் இவ்வதிகார வைப்பு முறையினை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

சுற்றம் தழுவும் வாழ்வு

        தன்னைக் காத்துக் கொள்வதைக் காட்டிலும் தம்மைத் தழுவிவாழும் குடிகளைக் காக்கும் அரசனைப் போலவே குடிகளும் தங்கள் சுற்றத்தைத் தழுவி வாழவேண்டும் என்பதனை அறிவுறுத்தும் வகையிலேயே ‘சுற்றம் தழால்’ என்னும் அதிகாரத்தை பொருட்பாலில் ஐம்பத்துமூன்றாவது அதிகாரமாகப் படைத்துள்ளார் தெய்வப்புலவர். வாழ்வில் அரைப்பங்கு மகிழ்ச்சி சுற்றத்தாலேயே அமைவதனையும் இங்கு எண்ணி மகிழலாம்.

        சுற்றத்தால் சுற்றப்படஒழுகல் செல்வம்தான்

பெற்றத்தால் பெற்ற பயன் (திருக்குறள் - 524)



என்னும் திருக்குறள் செல்வத்தின் பயன் சுற்றத்தைப் போற்றி வாழ்தலே என அறிவுறுத்துகிறது. ஒருவன் நல்ல நிலைக்குச் சென்ற பிறகு தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என எண்ணாது தம்மைச் சுற்றி இருப்போருக்கும் வழிகாட்டி மானுடமேன்மைக்கு வழி காட்டுவதே சிறப்புடையது எனத் தெளிவுறுத்துகிறார் தெய்வப்புலவர். அத்தகைய வாழ்வே பொருளுடைய வாழ்வாகி வாழ்வின் அரைப்பங்கு மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்னும் நிலையிலேயே ஐம்பத்துமூன்றாவது அதிகாரமாக இடம்பெற்றிருப்பதனையும் எண்ணிப்பார்க்கமுடிகிறது.

மானுட மேன்மைக்கு வழிகாட்டும் நட்பு

        சுற்றம் சிறக்க அமைந்தவர் வாழ்வால் வாழ்வின் ஐம்பது விழுக்காடு மகிழ்ச்சியுடன் வாழமுடியும் எனில் நட்பைச் சிறப்பாகப் பெற்றவர்கள் எண்பது விழுக்காடு மகிழ்ச்சியுடன் வாழமுடியும் என்பதனைத் தெளிவுறுத்துவதாக் கொள்ளமுடிகிறது. தெய்வப்புலவர். நல்ல சுற்றம் அமைந்தவர்க்கும் நட்பு சிறப்பாக அமையாவிடில் வாழ்வில் தீய பழக்கங்களுக்கு உடன்படுவதும் நல்ல நட்பால் தீயபழக்கங்கள் ஒழிந்து விடுவதனையும் காணமுடிகிறது.

        உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு  (திருக்குறள் -388)



என்னும் திருக்குறள் மானுடமேன்மைக்குத் துணை நிற்கும் நட்பின் அருமையினை எடுத்துரைக்கிறது. நட்பிற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுத்த திருவள்ளுவர் முறையே நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு என ஐந்து அதிகாரங்களைப் படைத்துள்ளதனைக் காணமுடிகிறது. எனவே சுற்றத்தால் முடியாத மானுடமேன்மை நட்பால் சிறக்கும் என்பதனையும் இங்குத் தெளிவுறுத்தியுள்ளதனையும் காணமுடிகிறது.

தகையணங்கு உறுத்தலும் ஊடல் உவகையும்

        காதலிக்கத் தொடங்கும் போது வாழ்க்கை அழகாகிறது என்பதனாலேயே காமத்துப்பாலைப் படைத்துள்ளார் தெய்வப்புலவர். காதலினால்தான் நன்கு வாழவேண்டும் என்னும் எண்ணமும் மற்றவர்களை வாழவைக்கவேண்டும் என்னும் எண்ணமும் உறுதிப்படும். இயற்கையின் படைப்பில் ஒருவர் மற்றவரைப் பொருளால் மட்டுமின்றி அன்புகாட்டும் பண்பாலும் மனமகிழ்வோடு வாழவைக்க இயலும் என்பதனை வலியுறுத்துவதாகவே மூன்றாவது பாலான காமத்துப்பாலை நோக்கமுடிகிறது. கண்களால் தொடங்கும் காதலானது உவகையில் முடிவதே மானுடமேன்மைக்கு வழிவகுக்கும் என்னும் நிலையிலேயே அதிகாரவைப்பு அமைந்துள்ளதனைக் காணமுடிகிறது.

        காதல் உயர்வானது ; அதனால் விளையும் அன்பு அளவுகடந்த செயல்பாட்டினை உணர்த்தும் என்பதனை

        நெஞ்சத்தார் காதல் அவராக வெய்துண்டால்

அஞ்சுதும் வேபாக்கு அறிந்து (திருக்குறள் -388)



என்னும் திருக்குறள் உணர்த்திநிற்கின்றது. காதலானது சூடான உணவையும் தவிர்க்கிறது எனும் போது அத்தகைய காதல் எவ்வகை அன்பைக் காட்டிலும் உயர்ந்துநிற்பதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.. எனினும் பொய்யான காதலால் எத்தனையோ மக்களுடைய வாழ்வு சீரழிந்து ஏமாற்றத்துக்கு உள்ளான நிலையினையும் காணமுடிகிறது. பெண்களுடைய அன்பின் வலிமையினை உணர்ந்துகொள்ளாது அவர்களின் அன்பையே ஆயுதமாகக்கொண்டு ஏமாற்றும் சூழலாலேயே நாட்டில் பல பெண்கள் நாள்தோறும் சீரழிந்துவருவதனை நடைமுறையில் காணமுடிகிறது. இவ்வாறு முறையின்றி வாழும் வாழ்க்கையை விடுத்து அனைத்து உயிர்களிடமும் காதல் கொண்டு மானுடமேன்மைக்கு வழிவகுக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

நிறைவாக

        திருக்குறளின் ஒவ்வொரு அதிகாரத்தையும் வைப்புமுறையின்  வழி அந்நூலின் அருமையினை விளக்கமுடியும் எனினும் கட்டுரையின் விரிவுகருதி ஒருசில அதிகாரங்களின் வழியே திருக்குறளின் அதிகார வைப்பு முறையில் மானுடமேன்மைக்குரிய சிறப்பு அமைந்துள்ளது எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

        மானுடமேன்மைக்கு அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று நிலைகளிலும் திருக்குறள் வழிகாட்டியுள்ளதனைக் காணமுடிகிறது.

        அறத்துப்பால் கடவுள் வாழ்த்தில் தொடங்கி ஊழில் முடிவதன் வழி கடவுளில் தொடங்கி கடவுளில் முடியும் வகையில் பல்வேறு அதிகாரங்கள் முறையாக வரிசைப்படுத்தப்பட்டிருப்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இதன்வழி எல்லா உயிர்களையும் புரக்கும் கடவுளின் அருளைப் பெறவேண்டுமாயின் எல்லா உயிர்களையும் அரவணைத்துப் போற்றிக்காக்க வேண்டும் என அறிவுறுத்தி மானுடமேன்மைக்கு வழிகாட்டியுள்ளதனைக் காணமுடிகிறது.

        பொருட்பால் இறைமாட்சியில் தொடங்கி கயமையில் முடிகிறது. பொருட்பாலானது பொருளினை முறையாகச் செலவிடுவதன் வழியும் முறையாகச் செலவிடாத போது கயமையை வெளிப்படுத்துவதனைப் புலப்படுத்துகிறது. முன்னதைப் பெருக்கி பின்னதைச் சுருக்கும் இறைமாட்சியே மானுடமேன்மைக்கு வழிவகுக்கும் எனத் திருக்குறள் தெளிவுறுத்துகிறது.

        காமத்துப்பாலானது காதலின் அருமையினாலேயே உலக இயக்கம் நடைபெறுவதனையும் அக்காதலின் அருமையினை உணர்ந்து செயல்படுவதானாலேயே மானுடமேன்மை சிறக்கிறது என்பதனையும் இருபத்தைந்து அதிகாரங்களின் வழி தெய்வப்புலவர் உணர்த்தியுள்ளதனை எடுத்துரைக்கிறது.

        திருக்குறளின் அதிகாரவைப்புமுறையானது மானுடமேன்மைக்கான முறையான படிக்கட்டுகளாக அமைந்துள்ளதனையும் முறையான வாழ்விற்கும் வழிகாட்டுவனவாகவும் அமைத்துள்ள பெருமை தெய்வப்புலவர் திருவள்ளுவர்க்கு மட்டுமே உரியது எனத் தெளியமுடிகிறது.



*******







         


1 கருத்து: