தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

தமிழ்க்கற்பிக்கும் விடுகதை – Riddle –Play way to learn tamil


தமிழ்க்கற்பிக்கும் விடுகதை – Riddle –Play way to learn tamil

விடுகதை என்பது கதை விடுவதன்று ; கேட்கப்படும் வினாவிற்கு விடைகூறிச் சிக்கலை விடுவிப்பது. எச்சொல்லையும் ஆய்ந்து நோக்கும் பண்பினை வளர்ப்பது. குழந்தைகளின் கற்கும் ஆரவத்தைத் தூண்டுவது. மொழியின் அருமையினை உணர்த்துவது. எடுத்துக்காட்டிற்கு ஒரு விடுகதை :  

உயிர் இல்லாமல் ஓடித் திரிவான்

மூக்கு இல்லாமல் மூச்சு விடுவான்

வாய் இல்லாமல் தண்ணீர் குடிப்பான்

வயிறு இல்லாமல் கரியைத் தின்பான்

காற்றிற்கு அஞ்சான் மழைக்கு அஞ்சான்

காட்டிலும் மேட்டிலும் அலைவான்

உயிர் இல்லாமல் எப்படி ஓட முடியும்?. மூக்கில்லாமல் எப்படி மூச்சு விடமுடியும்.? வாய் இல்லாமல் எப்படித் தண்ணீர் குடிக்க முடியும் ? வயிறு இல்லாமல் எப்படித் தின்ன முடியும்? இத்தனையும் இருந்தால் அந்த உயிர் காற்றிற்கு அஞ்சாமல் மழைக்கு அஞ்சாமல் எப்படி இருக்கமுடியும் ?. இத்தகைய வீரன் காட்டிலும் மேட்டிலும் எப்படி அலைவான் ? எனக்கேட்டு ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள் விடுகதை கேட்போர். யாரும் சொல்லமுடியாதபோது ‘புகைவண்டி” எனக் கூறி விடையை விடுவிக்கிறார்.