தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 21 செப்டம்பர், 2020

எம்.எஸ்.சுப்புலட்சுமி – பாடிய மயில் - Singing Peacock M.S.Subbulakshmi

 

எம்.எஸ்.சுப்புலட்சுமிபாடிய மயில்

       கலைவாணியின் அருள்பெற்ற இசைராணி. மதுரை சுந்தரடிவு சுப்புலட்சுமி. பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா. நிலவின் முகத்தில் சூரியனைப் பார்த்ததுண்டா? பார்க்கலாம் எம்.எஸ் அம்மாவின் நிலவு முகத்தில் சூரியன் திலகமாய் இருக்கும் ; அதுவே அம்முகத்தின் ஒளியைப் பெருக்கும். பெண்களைப் பார்த்தவுடன் வணங்கத் தோன்ற வேண்டும் என்னும் கூற்றுக்கு அடையாளம். குரலில் குயில் ; வடிவில் மயில். மொத்தத்தில் பாடும் மயில்.

       1916 ஆம் ஆண்டு செப்டம்பர் பதினாறாம் நாள் சண்முகவடிவு அம்மையாருக்கும் சுப்பிரமணிய ஐயருக்கும் இந்தியாவின் இசையரசி குழந்தையாய்ப் பிறந்தது.  பூவில் பூ பூக்குமா? ஆம் பூத்தது. தாமரை முகத்தில் குவளைப் பூ போன்ற இரண்டு கண்கள் பூங்கொத்து போல. பூங்கொத்து எனப்பொருள்படும் குஞ்சம்மாள் என கொஞ்சு மொழியில் அழைத்து மகிழ்ந்தார்கள். குஞ்சித பாதம்அழகிய திருவடி, தூக்கிய திருவடி என்பர். குஞ்சு என்றால் தலைமுடி.  சுருண்ட கூந்தல் வளத்தாலும் இப்படிப் பெயர் வைப்பது வழக்கம். அவருடைய சுருண்டகூந்தல் கூட செஞ்சுருட்டியை நினைவுறுத்தும். 

எல்லா குழந்தையும் குவா குவாஎன்று கத்த இந்தக்குழந்தை மட்டும் குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணாஎன இசைத்தது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின்னாளில் தான் தெரிந்தது. பாட்டி அக்கம்மாள் வயலின் வாசிப்பார். அம்மா வீணை வாசிப்பார். இவரோ குரலிலேயே இவை இரண்டையும் சுவாசிப்பார். இவருடைய இசைப்பயணம் பத்து வயதில் தொடங்கிற்று. தாயார் கச்சேரி தடைப்பட்டபோது மகளை மேடைக்கு அழைத்துப் பாடச்சொல்கிறார். பத்து வயதில் முத்து தெறிப்பது போல் பாடுகிறார். இசைச்சொத்துக்கு வாரிசாகிறார். மரத்தைப் பற்றிக்கவிதை எழுதவேண்டுமென்றால் நீ மரமாக மாறவேண்டும் என்பார்கள். அப்படி மீரா என்னும் படத்தில் மீராவாகவே வாழ்ந்தார். மீரா ஆற்றில் செல்லும்போது மயங்கி விழவேண்டும். கிருஷ்ணர் வந்து காப்பாற்றுவார். இதுதான் காட்சி. அக்காட்சியை படமாக்கும்போது உண்மையில் மயங்கிவிட்டார். படகோட்டி குதித்து காப்பாற்றினார். அந்தப் படகோட்டியின் பெயர் கிருஷ்ணா. அம்மையாரின் பக்தியின் பெருமைக்குச் சான்றாக இந்நிகழ்வினைக் குறிப்பிடுவார்கள்.

       என்.டி. ராமராவ் தெலுங்குத் திரையுலகின் சூப்பர்ஸ்டார். கடவுளாகவே மதிக்கப்பட்டவர். முதலமைச்சராக ஆட்சி செய்தபோது, எங்களுடைய பதவி, மக்கள் எங்களிடம் கொண்ட அன்பு எல்லாம் மாறிப்போகும். ஆனால் எம்.எஸ் அவர்களின் குரல் உலகம் உள்ள வரை வாழும். நாள்தோறும் அவருடைய குரல் கேட்டுத்தான் பெருமாளே எழுகிறார்.  இதை விடப்பெருமை என்ன வேண்டும். அவர்பஜ கோவிந்தம்எனப்பாடினால் எல்லா துன்பமும் கஜ தூரம் ஓடிவிடும்.

       பண்டிட் ஜவஹர்லால் நேரு அவருடைய பாடும் திறனை மௌண்ட்பேட்டனுடன் கண்டு களித்தவர். நான் இந்த நாட்டுக்குத் தான் பிரதமர். அவரோ இசையுலகுக்கே ராணி எனப் பாராட்டினார்.

       இந்தியாவின் பெருமைக்கு அடையாளமான அம்மையாருக்கு ஆந்திராவில் வெண்கலச்சிலை பதினான்கடி அடி உயரம் ; நான்காயிரம் கிலோ வெள்ளி -மும்பையில் சிலை என இசையரசியின் புகழை நிலைநிறுத்திப் பெருமை சேர்த்துக்கொண்டனர். தமிழகத்தின் பெருமைக்குக் காராணமான இராஜராஜ சோழனுக்கு, கடல்கடந்து தமிழனின் கொடி ஏற்றிய இராஜேந்திர சோழனுக்கு, கல்லணை கட்டி உலகுக்கே அணை கட்டக் கற்றுக்கொடுத்த தமிழன் காரிகாலனுக்கு, ஆங்கிலேயரை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன் சிதம்பரம் பிள்ளைக்கு, விடுதலை முழக்கத்தால் விழிக்க வைத்த சுப்பிரமணிய சிவாவுக்கு வீரத்தின் அடையாளமான வாஞ்சிநாதனுக்கு உலகையே இசையால் வென்ற இசைவாணி எம்.எஸ். அம்மையாருக்கு சிலை எழுப்பினால் அது அவர்களுக்குச் செய்யும் பெருமை அல்ல. நாளை வரும் தலைமுறை தலைநிமிர்ந்து இவர்கள் பிறந்த மண்ணில் பிறந்தவன் என்னும் பெருமையை எடுத்துச்சொல்லிக்கொள்வதற்கு வழியாக அமையும்.

`ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாளும் ஒரு ஆண் இருக்கிறான். என்பதற்கு எடுத்துக்காட்டு அவருடைய கணவர் சதாசிவம். கணவன் மனைவி என்றால் அத்தனை மதிப்பு. மிகவும் கண்டிப்பு கட்டுப்பாடு நிறைந்தவர். பாடும் பொழுது முதல் வரிசையில் அமர்ந்து கேட்பார். குறையிருப்பின்இப்படிப்பாடுவதற்கு இந்த உயிர் தேவையா?’ எனக் கேட்பாராம். இதைவிடக் கடுமையாக யாராவது கேட்கமுடியுமா? எப்படிக்கேட்டாலும் அமைதியாக இருப்பார். இரு கை தானே ஓசை வரும் என்னும் நுட்பத்தை அறிந்தவர். அவரிடம் பேட்டி காணவேண்டும் என்றால் இவர் தான் பேசுவார். ரோஜாவுக்கு மலர்த்தான் தெரியும். அது எவ்வாறு என்று அதனிடம் கேட்டால் சொல்லத்தெரியாது. அதுபோல்தான் எம்.எஸ். என்று சொல்லிவிடுவார்.

       எப்படியோ ஒரு வகையில் எம்.எஸ் அவர்களையே கேட்டார்கள். உங்கள் கணவர் இவ்வளவு கண்டிப்புடன் இருக்கிறாரே. நான் ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்திருக்கிறேன். அவர் நன்கு படித்தவர். அவர் எடுக்கும் முடிவுதான் சரியாக இருக்கும் என எண்ணுகிறேன். ஆமைக்கு அதன் ஓடு பாரமல்ல ; பாதுகாப்பு என உணர்த்தியவர்.

       அவர் பிறந்த நாள் பதினாறு. கூட்டினால் ஏழு. அதனால்தானோ என்னவோ ஏழிசை நாயகியாக ஒளிர்ந்தார். ஆங்கிலம் கலந்துசொல்லவேண்டுமெனில்ஏழிசை ஏஞ்சல்’. ஏழு மொழிகளைக் கற்றிருந்தார், தமிழ், ஆங்கிலம், இந்தி மராத்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி.

       இசை அரசி அவர். எப்படி? அரசி என்றால் என்ன செய்யவேண்டும், மக்களுக்கு அள்ளிக்கொடுக்கவேண்டும் அல்லவா. அப்படி தான் பெற்ற பரிசுகளை எல்லாம் அள்ளிக்கொடுத்தவர். நினைத்துப்பாருங்கள்கல்கி கார்டன்என்னும் மிகப்பெரிய இடத்தில் வாழ்ந்தவர். பின்னாளில் வாடகை வீட்டில் வாழ்ந்தார். முப்பெருந்தேவி போல் வலம்வந்தவர்.  அவர் கலையில் வல்லவராதலால் கலைமகள். அள்ளிக்கொடுப்பதில் அலைமகள். சிவத்தின் மனைவியாதலால் மலைமகள்.

       மதுரைக்கு மல்லிக்கு மட்டுமல்ல இசைத்துள்ளி வருவதற்கும்தான் என எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி.

       உங்களைப் புரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் எதுவும் சொல்லவேண்டியதில்லை. உங்களை புரிந்துகொள்ளாதவர்களுக்கு எது சொன்னாலும் புரியப்போவதில்லை. என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். எத்தனை விமர்சனம் வந்தபோதும் அமைதியாகவே நடந்துகொண்டார். எத்தனையோ அலைகளின் ஆராவாரம் அந்த மௌன மலையினை ஒன்றும் செய்துவிடமுடியவில்லை.

       மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் . அது முடிந்தபின்னால் ஒரு பேச்சிருக்கும். என்பதற்கு எடுத்துக்காட்டு அம்மையார். படித்த ஆசிரியர்களை விட படிக்கின்ற ஆசிரியர் வேண்டும் என்பார்கள். இது ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல எந்த்த் தொழில் செய்பவரும் அந்த்த் தொழிலைத் தெய்வமாக எண்ணிச்செய்யவேண்டும். புருஸ்லீ, டெண்டுல்கர், தோனி  யாராக இருந்தாலும் ஏன் சிறந்தார்கள். கடுமையான பயிற்சி தான் காரணம். அப்படித்தான் எந்தத் துறையாக இருந்தாலும் கடும்பயிற்சி, ஈடுபாடு, சமரசம் செய்துகொள்ளாமை, தள்ளிப்போடாமல் நிகழ்ச்சி அமைப்பாளர்களே நன்றாக இருக்கிறது என்று கூறினாலும் சரியில்லை. முதலிலிருந்து பதிவு செய்யலாம் என்னும் கடமை உணர்வு மிக்கவராக வலம்வந்தவர். எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதல்ல வாழ்க்கை. இப்படித்தான் வாழவேண்டும் என்பதே வாழ்க்கை.

       இது இசைத்துறைக்கு மிகவும் பொருந்தும். பாடகரை விட பேச்சாளராகப் புகழ்பெறுவது கடினம். ஏனென்றால் ஒரு மேடையில் பேசியதைப் பேசமுடியாது. இதை ஏற்கெனவே பேசிவிட்டீர் என்பார்கள். ஆனால் பாடகர் வேறு பாடலைப்பாடினாலும், நீங்கள் அந்தப் பழைய பாடலைப் பாடுங்கள் என்பர்.      இவர் ஒரு தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம். ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் மிகச் சிறந்த கலைஞர்கள் எல்லாம் இவருடைய கச்சேரிக்கு வாசிக்க வருவார்கள். வீரம் மிக்க பெண்மணி. தன்  திறமையில் அலாதியான நம்பிக்கை கொண்டவர். தன்னுடன் இருப்பவர்கள் தங்களுடன் பலமானவராக இருக்கக்கூடாது என எண்ணுவது பொதுவான இயல்பு. ஆனால் இவர்  சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து வரவழைப்பார். அந்த இசையையும் விஞ்சும் வகையில் பாடுவார்.

கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று ; அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று’ – என்னும் புறநானூற்றுப் பாடலுக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் அம்மையார். புரட்சித்தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் வள்ளலாக வாழ்ந்தவர். அவர் சத்துணவுத்திட்டம் கொண்டுவந்தபோதுஅன்று சந்திரனைக் காட்டிச்சோறூட்டுவார்கள். இன்று சந்திரனே சோறூட்ட்கிறதுஎன்பார்கள். அவர், வாடகை வீட்டில் அம்மையார் இருப்பதை அறிந்து  இரண்டு வீட்டுப்படங்களைக் கொடுத்து ஏதாவது ஒன்றினைத் தேர்ந்தெடுக்குமாறு கூறினார். சதாசிவம் அவர்களோஎங்களுக்குக் கொடுத்துத்தான் பழக்கம். வாங்கிப்பழக்கமில்லைஎன மறுத்துவிட்டார்.

       திருப்பதி தேவஸ்தானத்தில் அன்னமாச்சாரியார் பாடலைப் பாட வேண்டுதல், பணம் கொடுத்தால் வாங்கமாட்டார் என்பதனால் இந்த ஏற்பாடு. அவருடைய நிலை முன் போல் இல்லை. பாடவேண்டுமென்றால் மீண்டும் படிக்கவேண்டும். பயிற்சி செய்யவேண்டும். என மறுத்துவிடல். இறைப்பணியாயிற்றே எனப் பணிவுடன் கூற வயதான போதிலும் கற்க அஞ்சாதவர்.

மகாத்மா காந்தி இவர் பாடக்கேட்டு மகிழ்ந்தவர். இதைவிட வேறு விருது வேண்டுமோ. ஆனால் பல விருதுகள் இவரைத்தேடிவந்தன.  திருப்பதி தேவஸ்தானத்தில் இவருக்கு பெருமை செய்ய ஆஸ்தான வித்வான் விருதுவழங்க விரும்புவதாக கூறும்போது. என்னுடைய குருவுக்குக் கொடுக்காமல் எனக்குக் கொடுப்பது எப்படிச் சரியாகும் என மறுத்தார். உடனடியாக அவருடைய குருவுக்குக்கொடுத்துவிட்டு இவருக்கு மரியாதை செய்கிறார்கள். இவருடைய குரு செம்மங்குடி ஐயாவிடம் பேட்டி கண்டார்கள். உங்களுடைய சிஷ்யை இப்படிப்பாடுகிறார்களே. நீங்கள் ஏன் பாடுவதில்லை.  சுப்புலட்சுமியால் தான் பாடமுடியும்எனப் பெருமையாக கூறுகிறார்.  குருவை பெருமைப்படுத்தும் சீடர். சீடரைப் பெருமைப்படுத்தும் குரு எத்தனை அழகு. பண்டிட் நாராயண வியாசரிடம் இந்துஸ்தானி இசையைக்கற்றார்.

கண்ணிற்கு மையிட்டு அழகு செய்தார். காதிற்கு கம்மல் பூட்டி அழகு செய்தார். மூக்கிற்கு இருபக்கமும் மூக்குத்தியால் அழகுசெய்தார். வாய்க்கு மட்டும் தம் குரலாலே அழகு செய்தார். ‘சகுந்தலைபடத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோது மறுத்தார். வேறோருவரை கதாநாயகியாக்கிவிட்டனர். நாரதருக்கு ஆள்தேடி இவரைக் கேட்டார்கள். பாடல்கள் பாடும் மிக முக்கியப் பாத்திரம் எனக் கூறி ஒப்புக்கொள்ளவைத்தனர். கல்கி இதழ் தொடங்க பணம் தேவைப்பட்டது. நடிக்க ஒப்புக்கொண்டு பணம் அளித்தார்.

அம்மையார் ஒரு புரட்சிப்பெண். தாயின் பெயரையே தலைப்பெழுத்தாகக் கொண்டவர். அவர் இருநூறுக்கும் மேற்பட்ட அறக்கட்டளைக்கு அடித்தளமாக நின்றவர். பத்து கோடிக்கும் மேல் ந்ன் கொடை திரட்டிக் கொடுத்தவர். அமைதியாக எத்தனைக் குழந்தைகளை, முதியோரை, அநாதைகளைக் காத்தார். எனவேஇசையுலகின் அன்னைத்தெரசாஎன்றும் இவரைக் குறிப்பிடலாம்.

மீரா படத்தில் நடிக்கும்பொழுது யானைகள் குதிரைகள் இடம் பெறும் காட்சி அமைக்க வேண்டும். கிடைக்கவில்லை. என்ன செய்வதென்று தயாரிப்பாளருக்கும் புரியவில்லை. மைசூர் மகாராஜா அவருக்காக என் ராஜ்ஜியத்தையே விட்டுக்கொடுப்பேன். யானை, குதிரைப்படையையா கொடுக்கமாட்டேன் எனக் கொடுத்தார்.

       சாந்த முகம், காந்தக் குரல்இளமையில்  எல்லோரும் அழகாக இருப்பார்கள். முதுமையில் இளமைப் பருவத்தைவிட அழகாக இருந்தவர்கள் இருவர் ஒருவர் மகாத்மா காந்தி. இன்னொருவர் எம்.எஸ் அம்மா.  பாடும்பொழுது கூட முகபாவம் அழகாக இருக்கும். சிலருக்கு முகம் பாவமாக இருக்கும். இவருடைய பாடலால்சேவாசதனம்படம் நன்றாக ஓடியது.

        மீரா படத்திற்குப் பின் எத்தனையோ பட வாய்ப்புகள் வந்தன. புகழின் எல்லைக்குச் சென்றபிறகு அதைவிட சிறந்த படத்தைத் தரமுடியாது எனக் கணவர் கூற அதை அப்படியே ஏற்றுக்கொண்ட  பணிவுமிக்க பெண்மணியாகத் திகழ்ந்தார்.

தங்கத்தட்டுக்களை விட இவருடைய இசைத்தட்டுக்கள்  அதிகம் விற்பனையாயின. பதின்ம வயதிலேயே இவருடைய  பெயரினையே விளம்பரமாக ஓட்டி இசைத்தட்டுக்களை வெளியிட்டனர். இரண்டாயிரத்து ஐநூறு பாடலுக்கு மேல் மனப்பாடமாக வைத்திருந்தவர். யுஎன் ஓ. எனப்படும் பன்னாட்டு அமைப்பில் 1966 இல் பாடினார். இலண்டன், நியூயார்க், மாஸ்கோ, எடின்பர்க் எனப் பல நாடுகளுக்குச் சென்று இந்தியாவின் பெருமையைக் காத்தவர்.

1954 –இல் பத்ம பூஷன்

1956- இல் சங்கீத நாடக அகாதெமி விருது.

1974 – இல் ஆசியாவின் நோபல் பரிசு என்னும் இராமன் மகசேசே விருது(முதல் இசைக்கலைஞர்)

1975- இல் பத்ம விபூஷன்

1975 – சங்கீத கலாசிகாமணி 11 விருது.

1988- காளிதாஸ் சம்மான் விருது

1990- இல் இந்திராகாந்தி விருது

1998- பாரத ரத்னா விருது

என அனைத்து விருதுகளையும் பெற்றுக்கொண்டார். 2005 ஆம் ஆண்டு ஸ்டாம்ப் வெளியிட்டுப் பெருமைப் படுத்தியது. காஞ்சிபுரம் புடவைக்குக் கூடஎம்.எஸ். ப்ளுஎனப் பெயரிட்டுப் பெருமைப்படுத்தினர். ‘தபஸ்வினிஎன லதா மங்கேஷ்கர் பாராட்ட, உஸ்தாத் குலாம் அலிசுஸ்வரலட்சுமிஎனப்பாராட்டினார்.

இவர் குரல் கேட்டால் சொர்க்கம் என உலகமே போற்ற, இவர் குரல் இல்லா விட்டால் சொர்க்கம் இல்லை என நினைத்த சொர்க்கலோகம் 2004 ஆம் ஆண்டு திசம்பர் 11 ஆம் நாள் இவரை அழைத்துக்கொண்டது. ‘காற்றினிலே வரும் கீதம்இருக்கும் வரை இவருடைய குரல்இசைஉலகில்வேதம் போல் நிற்கும் என்பதில் ஐயமில்லை.

மகாகவி பாரதியாரின் தேசப்பற்று - Great Poet Barathiar's Patriotism

 

பாரதி காட்டும் தேசப்பற்று

     எத்தனை முறை பேசினாலும் அத்தனை முறை இனிக்கும் பாடல்கள் மகாகவியின் பாடல்கள். அத்தகைய முண்டாசுக் கவிஞன் விண்ணுலகத்தை ஆட்கொண்டு (99) தொண்ணூற்றொன்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்றும் அந்தசக்தி தாசன்பேசப்படுகிறார் எனில் அதற்குக் காரணம்கவிதை உணர்வல்லவிடுதலை உணர்வு. ஒரு சமூகத்தின் உள்ளக்குமுறலைக் கண்டு உள்ளம் கொதித்து எழுதுகோலில் மையினை ஊற்றாமல் இரத்தத்தை ஊற்றிப் பாடல் பாடினான். வழி தேடினான் ; முடியாமல் வாடினான். காந்தக் கவிஞனின் எழுத்துக்கள் கந்தகமாய் மாறின. மெல்லினம் கூட வல்லினமாய் மாறின. வல்லின எழுத்துக்கள் ஆயுத எழுத்துக்களாயின. அதனால்தான் வெள்ளை அரசாங்கம் இவனுடைய எழுத்துக்களை ஆயுதங்களாய் எண்ணின ;  கைது செய்ய நரி போல் வலை பிண்ணின..

     காற்றைக் கைது செய்ய முடியாமல் மாற்று வழி தேடின.  எட்டப்பர்களையும் யூதாஸ்களையும் விலை கொடுத்து வாங்கிய வெள்ளை அரசாங்கத்தின் ஆசை வார்த்தைகளை நம்பி மோசம் போனவர்கள் எத்தனையோ பேர் இவரைக் காட்டிக்கொடுக்கமுன்வந்தனர். நல்லவர்களுக்குத் துணை நிற்பதற்கு அஞ்சி வெள்ளையர்களுக்குத் துணை நின்றனர் சிலர். அஞ்சியவர்கள் ஆங்கிலேயர்களுடன் கைகோத்து தலை நிமிர்ந்தனர். விலை போகும் அவர்களை எண்ணி  மகாகவி வாடினார் ; பின்பு பாடினார்.

நெஞ்சு  பொறுக்குதில்லையே !  இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் அஞ்சி அஞ்சி சாவார். இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலேஎன்றார். தம்மை அறியாமலே தீமைக்குத் துணைநின்ற அவர்களைத் திருத்த முயன்றார்.

இந்தியர்களைப் பிரித்தாளும் நரியின் சூழ்ச்சியினை அறிந்தான்; வெள்ளையன் ; நம் நாட்டைக் கொள்ளையடித்த கொள்ளையன். நம் நாட்டு வீர்ர்களை விலைகொடுத்து வாங்கினான். போதையால் ; தீய பாதையால்.  இந்தியர்கள் எப்படி ஏமாந்தனர் என்பதற்கு ஒரு சிறிய கதை. முயல் கிடைக்கும் என எண்ணிய நரி ஒரு குகையுள் சென்றது. அங்கு சென்றபிறகுதான் அது முயல் வாழும் இடமல்ல புலியின் குகை என்று அறிந்தது. ஒரு புலியிடம் சிக்கிக்கொண்டோமே? என்ன செய்வது எனத் தயங்கியது. உடனே தந்திரம் செய்தது. புலியிடம், என்னுடைய பலம் உனக்குத் தெரியுமா? எனக் கேட்டது. நம்முடைய குகைக்குள் நரி ஏன் வந்திருக்கிறது ? என எண்ணிய புலியின் எண்ணத்தைக் கணித்தது. என்னைக் கண்டால் இந்தக்காட்டில் எல்லோரும் நடுங்குவார்கள் என்றது நரி. புலி அப்படியா? என்றது. ‘நம்பவில்லை என்றால் என் பின்னால் வாஎனக் கூறியது நரி. நரி முன்னால் நடக்க பின்னால் புலி பின் தொடர்ந்தது. காட்டில் உள்ள விலங்குகள் மான்,முயல், காட்டெருமை என அனைத்தும் அஞ்சி ஓடின. தன்னைக்கண்டுதான் பிற விலங்குகள் ஓடுகின்றன என்பதனைப் புலி அறியவில்லை. நரியின் தந்திரம் புரியவில்லை. அதுபோலத்தான் குறுநிலமன்னர்களின் ஆளுமையை, இந்திய ஆட்சியாளர்களின் திறத்தை வெள்ளையர்கள் ஏமாற்றித் தமதாக்கிக்கொண்டனர்.

அப்படி ஏமாறாத புலிகள்தான் உயிருக்கு அஞ்சாத தியாகிகள், தன் உயிரைக்காட்டிலும் நாடு பெரிதென எண்ணிய நல்லோர்கள். அடிவாங்கிக்கொண்டு தலையில் இரத்தம் வடிந்தாலும் தலைமுறை வாழவேண்டும் என எண்ணினர். உப்பு காய்ச்சும் போராட்டத்தில் விடுதலை வீர்ர்கள் ஒன்றுகூடிப் போராடினர் போராட்டம் என்பது அமைதியான முறையில் சகிப்புத்தன்மையுடன் எதனையும் பொறுத்துக்கொள்வது.  

அப்படிப்பட்ட வீரர்களால் விடுதலைப் பயிர் செழித்தது. ‘தண்ணீர் விட்டா வளர்த்தோம்சர்வேசா  இப்பயிரை கண்ணீரால் காத்தோம் . கருகத் திருவுளமோ.’ எனப் பாடினார். உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் அமைதியான முறையில் போராடிய விடுதலை வீரர்களைக் குதிரையில் வந்த ஆங்கில அரசின் வீரர்கள் (தமிழர்கள்தான் ஆங்கில அரசின் காவலர்களாக) தடியுடன் தாக்க வருகிறார்கள். வேகமாக அவர்கள் வருவதைப் பார்த்தவுடன் சிதறிஓடாது எதிர்கொண்டனர். எல்லோரும் படுத்துக்கொள்ளுங்கள் என்றார் ஒருவர். குதிரைகள் மனிதர்களை மிதிப்பதில்லை என்றார். அவ்வாறே குதிரைகள் ஓடிவந்து நின்றுவிட்டன. ஆங்கில அதிகாரி தனது வீரர்களுடன் திரும்பிச்சென்றார். குதிரைகளுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இல்லாமல் ஆங்கிலேயன் இந்தியரைச் சித்திரவதை செய்தான். எத்தனையோ உயிர்கள் பறிபோயின.

ஆங்கிலேயருக்கு அஞ்சி வாழ்வதும் கெஞ்சி வாழ்வதும் வீரர்களால் இயலாது. எனவே பராசக்தியிடம் கேட்கிறார். “தசையினைத் தீச்சுடினும் சிவசக்தியைப் பாடும் நல் அகங்கேட்டேன். நசையறு மனங்கேட்டேன். நித்தம் நவமென சுடர்தரும் உயிர்கேட்டேன். அசைவறு மதி கேட்டேன். இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோஎன வேண்டுகிறார்.

      ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வுஎன்றார். யார் ஆங்கில அரசுக்குப் பணிந்தார்களோ அவர்களுக்குப் பதவிகள் கிடைத்தன. அந்த அடிமை வாழ்வின் சுகத்தை விரும்பி பலரும் தங்களை அடிமைகளாக மாற்றிக்கொண்டனர். அவர்களியக் கண்டு

என்று தணியும் இந்தச் சுதந்திர தாகம்

என்று மடியும் எங்கள் அடிமையின்மோகம்

என வருந்திப்பாடுகிறார். ஆங்கிலேயன் கையில் நாட்டைக்கொடுத்து விட்டு அடிமையாக வாழ்வது எவ்வளவு இழிவு. ஆளத் தெரியாத உங்கள் நாட்டை ஆள்வதற்கு வந்திருக்கிறோம் என்றான் வெள்ளையன். நம் செல்வத்தை திருடிச்சென்ற கொள்ளையன்.

பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு

என்பதை உணர்வீராக. எம்மை நன்கு ஆண்டதால்தான் எத்தனைச் செல்வங்கள் குவிந்திருக்கின்றன.  வ்வுண்மையை உணராமல் இங்கே வந்து எம்மை ஆள்வீர் எனக் கூறுவது எத்தகைய மூடத்தனம் எனப் பாடினார் மகாகவி. தன்னுடைய நாடு தனதென்று அறியாமல் வெள்ளையனுக்கு அடிமையான இந்தியர்களின் அறியாமையைக் காண்கிறார் பாரதியார். மனம் வருந்திப் பாடுகிறார்

பாரத நாடு பழம்பெரும்நாடு நீரதன் புதல்வர் ; இந்நினைவகற்றாதீர்

என்றார். ஆங்கிலேயர்களின் கொடுஞ்செயல்களால் மிரண்டுபோன இந்தியர்களால் ஆங்கில அரசை எதிர்க்கும் எண்ணம் வரவில்லை. என்னால் என்ன செய்துவிட முடியும் என வருந்தினார்கள்.

இந்தியர்களில் பலர் சாம்பல்களாக தங்களைக் கரைத்துக்கொண்டிருந்தபோது சிலர் மட்டும் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அத்தகைய விடுதலை வீரர்களின் தியாக உணர்வால் தான் இந்தியா வெளிச்சம் பெறப்போகிறது என உணர்ந்தார்.

அக்னிக் குஞ்சொன்று கண்டேன் ; அதை ஆங்கொரு காட்டிடை பொந்திடை வைத்தேன் ; வெந்து தணிந்தது காடு ; தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ;தத்தரிகிட த்ததரிகிட தித்தோம் ;தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்னப்பாடுவது வீரத்தழலான விடுதலை வீரர்களைக் கண்டதன் வெளிப்பாடே. அவர்களைக் கண்டு மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கிறார் மகாகவி. ஒவ்வொருவரும் விடுதலை உணர்வுடன் மாறும்போதுதான் நாடு நலம்பெறும் என்பதனை கவிதையாக மட்டுமின்றி உரைநடையாகவும் எழுதினார்.  விடுதலை உணர்வு விதைகளை தரணியெங்கும் தூவிவிட்டார்.

 குடும்ப பாசத்தைக்காட்டிலும் நாட்டுப்பாசம் மகாகவியிடம் விஞ்சி நின்றது. ‘சுதந்திர தேவி உன்னைத் தொழுதிடல் மறக்கிலேனேஎனப் பாடினான். ஆங்கில அரசின் கொடுமையைப் பார்த்து ஓடியவர்களை எல்லாம் தடுத்து நிறுத்தினார்.  வீரத்தாய்ப்பாலை தமிழ்ப்பாலின் வழி ஊட்டினார் மகாகவி. “மனதில் உறுதி வேண்டும். வாக்கினிலே இனிமை வேண்டும். நினைவு நல்லது வேண்டும். நெருங்கின பொருள் கைப்பட வேண்டும். கனவு மெய்ப்படவேண்டும். கைவசமாவது விரைவில் வேண்டும். தனமும் இன்பமும் வேண்டும். தரணியிலே பெருமை வேண்டும்என வேண்டியதையெல்லாம் பாடாலாய் பாடி அனைவர்க்கும் உணர்த்தினார்.

விடுதலை உணர்வு என்றால் என்ன? எதற்கும் யாரையும் எதிர்பாராமல் தன்னிறைவுடன் வாழ்வது என்பதை அன்றே சொல்லிவைத்தார் பாரதி. எப்போது ஒருவரை எதிர்பார்த்துவிடுகிறோமோ, அப்போதே அடிமைத்தனம் தொடங்கிவிடுகிறது. மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதே விடுதலை வாழ்வு.

தாய்நாட்டின் மீது பற்றில்லாது வாழ்வோரைபிறர் வாடப் பல செயல்கள் செய்யும்வேடிக்கை மனிதர்என்கிறார்.  வேடிக்கை மனிதரைப்போலே வீழ்வேன் என்று நினைத்தாயோஎன்றார்.

வாழ்வதற்குப் பொருள் வேண்டும் எனப் பாடியதோடு நில்லாமல் வாழ்வதிலும் பொருள் வேண்டும் என்றும் பாடினார் மகாகவி. இவை இரண்டையும் உணர்ந்து விடுதலை உணர்வுடன் வாழ்வோம்.