தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 14 ஆகஸ்ட், 2021

ராணி காயிதின்லியு : ‘மலையின் மகள்’

 



ராணி காயிதின்லியு : ‘மலையின் மகள்’

என்னை எங்காவது வெளியில் அழைத்துச்செல்கிறீர்களா? எனக் கேட்காத குழந்தைகள் உண்டா? அல்லது பெரியவர்கள்தான் உண்டா? சுதந்திரமாகத் திரிவதில் இருக்கும் சுகமே சுகம்தான். எல்லாவசதிகளும் இருந்தாலும் நான்கு சுவர்களுக்குள் சிறைபட்டிருப்பது கொடுமைதானே. அப்படித்தான் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.  அதனை எதிர்த்துப்போராடியவர்கள் வேர்களைப் போல் அடையாமல் காணப்படாமலே மறைந்துவிட்டனர். அவர்களைக் கண்டறிந்து நினைவுகொள்வது நல்லோர் கடமை.

  ராணி காயிதின்லியு, நாகா இனத்தைச் சார்ந்த ஆன்மிகத்தலைவராகப் போற்றப்பட்டவர். தம் மக்களை ஆங்கிலேயர்கள் மலைவாழ்மக்களின் சமயத்திலிருந்து மாற்றியதால் அவர்களை எதிர்த்துப்போராடினார்.

ஆயுதமேந்தி வருபவர்களுக்கு நேராகப் புறாக்களை விடுவதும் மலர்களைக் கொடுத்து அமைதிப்பேச்சு நடத்துவதும் தவறென எண்ணியவர் அவர். எதிரிகள் எந்தமொழியில் பேசுகிறார்களோ அதே மொழியில் பேசினால்தான் அவர்களுக்குப் புரியும் என்னும் கொள்கையை முன்னிறுத்தியவர். ஆயுதத்தால் அடக்கிய ஆங்கிலேயரை ஆயுதம் கொண்டே எதிர்த்தவர்.    26 ஜனவரி 1915 இல் மணிப்பூர்  அருகில் ‘நுங்கோ’ என்னும் இடத்தில் பிறந்தார். நாகா மக்களிடையே பெரும் இனமாக விளங்கிய ‘ரோங்க்மீ’ என்னும் மலைவாழ்மக்கள் இனத்தில் பிறந்தார். கற்றுக்கொள்ளக்கூடிய ஆர்வமும் திறமையும் உடையவராக இருந்தாலும் பள்ளிகள் இல்லாததால் அவரால் முறையான கல்வியைக் கற்கமுடியவில்லை. ஆங்கிலேயர்கள் அங்குள்ள மக்களையெல்லாம் தம்சமயத்துமக்களாக மாற்றுவதில் தீவிரம் காட்டினர். இதனை எதிர்த்து, இவருடைய உறவினர் ‘ஜெடாநங்க்’ தோற்றுவித்த ‘ஹெரேகா’ என்னும் இயக்கத்தில்தான் தம்மை இணைத்துக்கொண்டார். பழமையான ‘நாகா’ மக்களின் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இவருடைய இனக்குழுவுடன் பிற இனக்குழுக்களும் தம் இனப் பண்பாட்டினை ஆங்கிலேயரிடமிருந்து மீட்பது குறித்து எண்ணி ஆங்கிலேயருக்கு எதிராகப்போராடத்தொடங்கினர்.  ஆங்கிலேயர்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வருந்தினர். எனவே, பெண்குழந்தைகளையும், மகளிரையும் இணைத்துக்கொண்டார். பெண்களும் தம்முடைய வீரத்தை வெளிப்படுத்த இவ்வாய்ப்பை மகிழ்வுடன் ஏற்றுப் போராடினர்.

துப்பாக்கிகளைக் கண்டறியாத மலைவாழ்மக்களை ஆங்கிலேயர்கள் அன்றைய புதியகண்டுபிடிப்புகளானத் துப்பாக்கிகளைக் கொண்டு கொன்றுகுவித்தனர். எனவே, மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர் முறையிலேயே ஆங்கிலேயரை எதிர்த்தனர்.  “சுதந்திரம் எங்களது பிறப்புரிமை” என்னும் விடுதலை மந்திரத்தை முழக்கிய பாலகங்காதர திலகரின் பொன்மொழியினைப் பின்பற்றினார். “நாங்கள் சுதந்திரமான மனிதர்கள். வெள்ளைக்காரர்கள் எங்களை அடிமைப்படுத்தக்கூடாது’ என்னும் முழக்கத்துடன் போராடினார்.

1931 ஆம் ஆண்டு தமது உறவினரான ‘ஹெரேகா இயக்கத்தின் தலைவர் ஜடோனங்க்,-ஐ கைது செய்து தூக்கிலிட்டது. உடனே  ஆங்கிலேயரைக் கண்டு அஞ்சாது, குருவாகத் தாம் எண்ணிய ஜடோங்கின் தலைமைப்பொறுப்பினை கயிதான்லியு ஏற்றுக்கொண்டார். மக்களுக்குத் தன்னம்பிக்கையூட்டுவதற்காகவும் தலைமையின்றித் தடுமாறாமல் இருக்கவும் தம்இனத்தைக் காப்பதே முதல் கடமை என விழிப்புணர்வூட்டினார். ஆங்கிலேயரின் சதி வலையில் சிக்காதீர். என மக்களுக்கு அறிவுறுத்தினார். தேசிய உணர்வினை உண்டாக்கினார். நாட்டுப்பற்று இருந்தால்தான் பண்பாட்டினைக் காக்கமுடியும் எனத் தெளிவுறுத்தினார். மத அமைப்புகள் மக்களை அடிமைப்படுத்தும் வேளையில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக நின்றன. எனவே இவர் மதத்துவ அமைப்புகளையும் எதிர்த்தார். இவரைக் கண்டுபிடிக்க முடியாமல் ஆங்கிலேய அரசு திணறியது. மேலும், கண்டுபிடித்துத்தருவோர்க்கு 500 பணமும், பத்தாண்டுகளுக்கான வரிவிலக்கும் அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் மக்கள் அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் நின்றனர். அத்தனை மதிப்புக்கொண்டிருந்தனர். அன்று அப்பகுதியில் பலரும் இவருடைய பெயரையே வைத்திருந்தனர். இதனால் காவல்துறை திண்டாடியது.   மக்கள் கொண்ட ஈடுபாட்டால் காவலர்களிடம் சிக்காமலே போராடினார்.  மரத்தால் கோட்டை கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது ‘புலோமி’ கிராமத்தில் இவரை ஆங்கிலேயர் கைதுசெய்தனர்.

1932 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16. ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. அவருக்குத் துணை நின்றவர்களுக்கும் ஆயுள்தண்டனையும் தூக்குத்தணடனையும் வழங்கப்பட்டன. 1933 முதல் 1947 வரை பதினைந்து ஆண்டுகள் பல்வேறு சிறைகளில் அடைத்துக் கொடுமை செய்தனர். பதினைந்து ஆண்டுகள் விடுதலைப்போராட்டத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டவர் இவரே.  நாட்டு விடுதலைக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டார். விடுதலையான பின்னரும் இவர் ‘நாகா’ மக்களின் பண்பாடு மறைந்துபோவதனைக் கண்டு மனம்வருந்தினார். மலைவாழ்மக்களின் பண்பாட்டை விட்டுவிட்டு ஆங்கிலேயர் மதத்திற்கு ‘நாகா’ மக்கள் மாற்றப்படுவதனை எதிர்த்துப் போராடினார்.  எனவே மக்கள் இவரை அவர்களுடைய கடவுளாகவே பார்த்தனர்.  வடகிழக்கு மாநிலங்களின் விடிவெள்ளியாகவே இவர் விளங்கினார். நாகா மக்களின் தெய்வமான ‘சேராச்சாமுண்டி’ -இன் வடிவமாகவே இவரைக்கண்டனர். 

ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போராடிய இவரை 1937 இல்  சிறையிலிருந்தபோது பண்டிட் ஜவஹர்லால் நேரு சந்தித்து அவர் விடுதலைக்கு உறுதியளித்தார்.  ‘ராணி’ என்னும் பட்டத்தை வழங்கினார். தியாகியான இவருக்கு 1982 ஆம் ஆண்டு ‘பத்மபூஷன்’ விருதும் வழங்கியது. ‘விவேகானந்தா’ சேவைவிருது 1972 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தியாகிகளுக்காக வழங்கப்படும் ‘தாமரைப்பத்திர’ விருதும் வழங்கப்பட்டது.  1993 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் பதினேழாம் நாள் 78 வயதில் மறைந்தார். இவருக்கும் ‘பிர்ஸா முண்டா’ விருதும் இறப்புக்குப்பின் வழங்கப்பட்டது. அவர் மறைந்தாலும் இன்றும் அவருடைய வீரம் கொண்டாடப்படுகிறது.

‘மலையின் மகள்’  என ராணி கயிதன்லியு கொண்டாடப்படுகிறார். மக்களுக்காகப் போராடியவர்களின் வரலாறுதான் மக்களுக்கு வழிகாட்டுதலாக அமைகிறது. எத்தனையோ மழைத்துளிகளின் தியாகத்தால்தானே நிலம் செழிக்கிறது. இப்படி எத்தனையோ தியாகிகளின் இரவு பகல் பாராத உழைப்பால்தான் நாடு பாதுகாப்புடன் திகழ்கிறது.

 

புதன், 11 ஆகஸ்ட், 2021

அடிப்படை உரிமைகள் ஏழு

 


அடிப்படை உரிமைகள் ஏழு

  அடிப்படை உரிமைகள் ஏழும் உங்களுக்குத் தெரியுமா? 1. அனைவரையும் சமமாக நடத்தும் உரிமை 2. சுதந்திரமாக வாழும் உரிமை 3. சுரண்டலை எதிர்க்கும் உரிமை 4. சமயத்தைத் தேர்வு செய்யும் உரிமை 5. பண்பாடு மற்றும் கல்வியைப்  பின்பற்றுவதற்கான உரிமை 6. அரசியல் நிர்ணயச்சட்டத்தை தீர்வுகளை செயல்படுத்துவதற்கான உரிமை 7. கல்வி கற்பதற்கான உரிமை.

     இந்த ஏழு உரிமைகளையும் நீங்கள் பின்பற்றுகிறீரா? பின்பற்றினீர்கள் என்றால் நீங்கள் சுதந்திரமானவர்தான். ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் பெற்ற வீராங்கனை சிந்துவின் வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள். பெற்றோர் துணை நின்றதால் எத்தனை வெற்றிகளைக் குவித்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். தம் திறமையை வெளிப்படுத்த முடிந்த விடுதலை உணர்வின் வெளிப்பாடுதான் சிறந்த வீரங்கனையாக மிளிர்வதன் காரணம். சிலர் தம் ஆற்றலை அறிவார் ; செயல்படுத்த இயலாது. சிலரால் செயல்படுத்த முடியும். ஆனால் அதற்கான முயற்சி இருக்காது.

தன்னம்பிக்கை, குறிக்கோள், திறமை இவற்றின் முதல் மூன்றெழுத்தும் அவர்களுக்கான தகுதியினை கூறிவிடும்தானே. இவை மூன்றையும் முறையாகச் செயல்படுத்தி தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த நீரஜ் சோப்ராவையும், பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மீராபாய் சானுவையும், வெண்கலப்பதக்கம் வென்ற வளைதடி அணியையும், மலியுத்த வீரர் ரவிகுமார் தஹியா, பஜ்ரங் புனியா வீராங்கனை லவ்லினாபோர்கோஹைன் அனைவரும் தம் தகுதியைப்போற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்கள்தானே. இவர்கள் அனைவரும் இவ்வேழு உரிமைகளையும் பெற்றவர்கள்.

     முதல் உரிமை, அனைவருக்கும் ஒன்றுபோலவே வாய்ப்பு. பாதுகாப்புப்படையில் சேரவேண்டுமானால் உடல்நலத்தில் சிறந்தவர் எவரும் சேரலாம். வணிகம் தெரிந்த எவரும் வணிகம் செய்யலாம். கற்றவர் எவரும் கற்பிக்கலாம். உழைக்கத்தெரிந்தவர் எவரும் உழைக்கலாம். கேட்பதற்கே மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறது. இதனை உணர்ந்து செயல்படுவதே முதல் விடுதலை.

     இரண்டாவது உரிமை, ஒரு பெண் சாலையில் தனியாக நடந்து செல்கிறார். இருவர் கிண்டல் செய்கின்றனர். தப்பித்தால்போதும் என வீட்டிற்குவந்து தம்பியிடம் சொல்கிறாள். தம்பி “யாரது? எங்கே?” எனத் திரைப்படத்தில் வருவதுபோல் இல்லாமல், “என்னிடம் ஏன் சொல்கிறாய்.” என்றான். ‘பளார்’ என அறைந்துவிட்டு “சரியான கோழை” என்கிறாள். “உன்னையே நீ காப்பாற்றிக்கொள்ளமுடியாவிட்டால் நீ எப்படி குடும்பத்தை ; நாட்டைக் காப்பாற்றப் போகிறாய். பகல் நேரம். பலரும் நடமாடும் சாலை. சத்தமாக குரல் எழுப்பினாலே போதும். அரசு 1098 என்னும் எண்ணையும் கொடுத்திருக்கிறது. பிறகு ஏன் இப்படி ஓடி வருகிறாய். பெண்ணுக்குச் சம உரிமை எனப்பேச மட்டும் தெரிகிறது. இன்று ஓடிவந்தால் நாளையும் அப்படித்தானே கிண்டல் செய்வார்கள்” என்றான். உடனே, கிண்டல் செய்த அதே இடத்திற்குச் செல்கிறாள். இருவரையும் “பளார்” என்று அறைகிறாள். அவர்கள் ஓடிவிடுகிறார்கள். தம்பி பின்னால் நின்று இப்படித்தான் ஒவ்வொரு பெண்ணும் வீரத்துடன் இருக்கவேண்டும் என்கிறான். சுதந்திரமாக வாழ்வதன் பொருளை அறிந்து தம்பிக்கு நன்றி கூறுகிறாள்.

     மூன்றாவது உரிமை, இயற்கை அனைவருக்குமான சொத்து. இதனை எவரும் கொள்ளையடிக்க உரிமை இல்லை. நீர், மணல், கல், மலை, கனிமம் அனைத்தும் மக்களுக்கானது. இதனை எவர் சுரண்டினாலும் தவறுதான். சிலர் பணத்தையும் சிலர் உழைப்பையும் சுரண்டுவர் எதுவானாலும் தவறுதான். அதனால்தான் இத்தனை மணிநேர உழைப்பு  என அரசு நிர்ணயித்து இருக்கிறது. இயற்கையாக ஓடும் நீரை குடுவையில் அடைத்து அதிக விலைக்கு விற்பது எத்தனை ஏமாற்றுத்தனம்தானே. ஆயிரம் லிட்டர் தண்ணீர் பத்துரூபாய்க்குப் பெற்று ஒரு லிட்டர் நீரை இருபது ரூபாய்க்கு விற்கும் நிலையினைக் காணமுடிகிறதுதானே. இப்படி உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்பது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலைவாங்குவது. திருமணமாகாத பெண்களை மட்டுமே வேலைக்கு வைப்பது. திருமணமான பெண் எனில் சமைப்பது ; குழந்தையைப் பார்த்துக்கொள்வது எனக் கூறுவது. பெண்கள் எனவும் பாராமல் இரவு காலம் கடந்து பணியிலிருந்து அனுப்புவது. மகப்பேறுக்கு விடுப்பு கொடுக்காமலிருப்பது ; அப்படியே கொடுத்தாலும் சம்பளப்பிடித்தம் செய்வது. இப்படி எத்தனையோ சுரண்டல்கள் உள்ளன. இவற்றைச்செய்வோர் அனைவரும் குற்றவாளிகளே. தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிட நல்லவழியில் மெதுவாகச் செல்வதே பெருமை என்று உணரவேண்டும். தண்ணீர் அனைத்தையும் விற்று பணமாக்கியவர்கள் நாளைய தலைமுறைக்குத் தண்ணீர் கிடைக்காது வாடும்நிலை ஏற்படுவதனை உணரவேண்டும். பணத்தைவைத்து வாழமுடியாதுதானே.

     நான்காவது உரிமை, எந்தச்சமயத்தையும் எவர் வேண்டுமானாலும் பின்பற்றும் உரிமை. எவருடைய தலையீடும் இல்லாமல் எந்தக்கடவுளையும் வணங்கும் உரிமை. மன அமைதியைத் தருவதற்கும் நாட்டில் அமைதி நிலவுவதற்கு சமயம் துணையாக நிற்கவேண்டும். அதற்கான சுதந்திர உரிமை.

     ஐந்தாவது உரிமை, முன்னோர் மரபினைப் பின்பற்றுவதில் உரிமை. முன்னோர்கள் காரணமறிந்தே பழக்கவழக்கங்களை வரையறுத்தார். அதனை உணர்ந்து பின்பற்றவேண்டும். அவற்றை மறந்து புதிய வழக்கங்களுக்கு ஆட்பட்டதனாலேயே நோய்கள் பெருகி வருந்துவதனைப் பார்க்கமுடிகிறது. அவ்வாறே விருப்பம்போல் விரும்பிய கல்வியினைப் படிப்பதிலும் உரிமை. யாரையும் கட்டாயப் படுத்தக்கூடாது. இன்றுகூட ‘தானே’ என்னுமிடத்தில் பதினைந்து வயது சிறுமியை ‘நீட்’ தேர்வுக்குப் படித்தே ஆகவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்கள். தாய்க்கும் மகளுக்கும் நடந்த சண்டையில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் தாயைத்தள்ளிவிடுகிறாள் மகள். தலை கட்டிலின்மீது பட்டதும் ரத்தம் தெறிக்கிறது. தாய் இறக்கிறாள். எத்தனை கொடுமை. கட்டாயப்படுத்துவதால் ஒரு குடும்பம் என்ன நிலைக்கு மாறிவிடுகிறது. எனவே, ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் கல்வியைப் பயில்வதற்கான உரிமை.

     ஆறாவது உரிமை, அரசியல் நிர்ணயச்சட்டம் செயல்படுத்தப்படவேண்டிய நிலையினைப் பின்பற்றும் உரிமை. நாட்டை வழிநடத்தும் சட்டதிட்டங்களை எவர் அவமதித்தாலோ, பின்பற்றப்படாவிட்டாலோ அதனை உணர்த்துவதற்கான உரிமை.

     இந்த ஆறு உரிமையுடன் ஏழாவது உரிமையாகச் சொத்துரிமை இருந்தது. ஆனால், இந்தச் சொத்துரிமையைத் தவறாகப் பயன்படுத்தி அளவுக்கு மீறிய சொத்துக்களைச் சேர்த்தனர். அரசுக்குத்தேவையானபோது சாலை, தொடர்வண்டி போக்குவரத்து பாலம், தொழிற்சாலை, என ஏதேனும் ஒரு நாட்டு நலனுக்காக ; மக்களின் வேலை வாய்ப்புக்காக ; அந்நிய இறக்குமதியைக் குறைப்பதற்காக ; அந்நிய ஏற்றுமதியை ஊக்குவிக்க என அரசு பல திட்டங்கள் வைத்திருக்கும்தானே. நாடு வல்லரசாவதனைப் பிறநாடுகள் விரும்புமா? அதனால் யாருக்காவது காசுகொடுத்து போராட்டம் நடத்தி நாட்டுநலனைக் கெடுத்துவிடுவர். பணத்திற்கு ஆசைப்பட்டு, “அரசு தரும் நிலத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டோம்” எனத் தங்கள் அரசையே எதிர்ப்பர். எனவே இந்தச் சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து 1978 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அதனால் ஆறாக மட்டுமே இருந்தது. ஆனால் குழந்தைகளின் கல்வி குறித்து எண்ணிய அரசு அதற்கான உரிமையை ஏழாவது உரிமையாகக் கொண்டுவந்தது.  

     ஏழாவது உரிமை:  சில குழந்தைகள் கற்கவும் ; சில குழந்தைகள் பணிக்குச் சென்று உழைப்பதும் ஏற்றத்தாழ்வாகும். எனவே, அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க அரசு ஆவன செய்யவேண்டும். இச்சட்டம் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் நாள்முதல் நடைமுறைக்குக்கொண்டு வரப்பட்டுள்ளது.  எனவே, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. இதுவே கல்வி உரிமை.

     இந்த ஏழு உரிமையினை அனைவரும் அறிந்து செயல்படுத்தினால் நாடு வல்லராசாகும். பின் என்ன நாட்டு மக்களும் வல்லரசர்தானே.

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

இந்தியா உலகுக்கு வழிகாட்டும்

 


உலகுக்கு வழிகாட்டும் இந்தியா

இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் எல்லாம் அடிதடிதான். ஆனால், இங்குமட்டும் அமைதியாக வாழமுடிகிறதே எப்படி? இதுதான் புண்ணியபூமி. எண்ணிப்பாருங்கள் நமது முன்னோர்கள் கற்றுக்கொடுத்த பாடம் அப்படி.

     வீரச்சிறுவர்களுக்கு விருதளிக்கும் விழா நடந்துகொண்டிருக்கிறது.  விருதுவாங்கவந்த குழந்தைகளைக்கண்டு விருதளிக்கும்விழாவிற்கு வந்தோர் வியப்படைந்தனர். யார் இவர்கள் எலும்பும் தோலுமாய்? என கேட்டபோதுதான் தெரிந்தது. அந்தக் குழந்தைகள், ஏரியின் நீரைக் கடத்திச்செல்ல செய்யப்பட்ட குழாய்களையே வீடாகக் கொண்டவர்கள் என்பது. இவர்களுக்கு ஏன் வீர விருது.  அந்த சின்ன வட்டத்திற்குள் இவர்கள் வாழ்க்கை வட்டம் அமைந்துள்ளதே அதற்காகவா? என்றுதானே கேட்கிறீர்கள். இல்லை. அப்படியென்றால் விருதுக்கு ஆயிரக்கணக்கானோர் தகுதியாகிவிடுவார்கள். சுனாமி வெள்ளத்தின்போது வீடுகளில் இருந்தவர்கள் எல்லாம் மாடிக்கு ஓடிப்போய் உயிரைக்காப்பாற்றிக்கொண்டார்கள் நினைவிருக்கிறதா?. ஆம் ! அந்த நேரத்தில் விமானத்திலிருந்தும் உலங்கு (ஹெலிகாப்டர்) ஊர்தியிலிருந்தும் உணவுப்பொட்டலங்களை வீசினார்களே நினைவிருக்கிறதா?. ஆம் ! அந்நேரத்தில் மாடியில் விழாமல் வெள்ளத்தில் விழுந்த பொட்டலங்களை எடுத்துக்கொடுத்த குழந்தைகள்தான் இவர்கள். அதற்காகத்தான் இந்த விருது. அவர்களின் உண்மையான அன்பினை அரசு பாராட்டுவது சிறப்புதானே !

     ஒட்டிய வயிறுடன் நிற்கும் அந்தக் குழந்தைகளிடம், “நீங்கள் உணவுப்பொட்டலங்களையெல்லாம் எங்களுக்குக் கொடுக்கிறீர்களே. நீங்கள் சாப்பிடவில்லையா?” என மாடியில்நின்றுகொண்டு பசியில்தவித்த ஒருவர் கேட்கிறார். “நீங்க பசிதாங்க மாட்டீங்க சாமி. எங்களுக்குப் பட்டினி பழகிவிட்டது” எனக் கூறி சிரித்த முகத்துடன் அடுத்த பொட்டலத்தை எடுக்க தண்ணீருக்குள் பாய்ந்தான் அந்த வீரச்சிறுவன். இங்கு, “யார் சாமி?” என்றுதானே எண்ணுகிறீர்கள். உண்மைதான். எத்தனையோ இயல்பான நாட்களில் எல்லாம் அவர்கள் சோறுகேட்டார்கள். இவர்கள் துரத்திவிட்டார்கள். ஆனால், இன்று அவர்கள் கேட்காமலே இவர்கள் சோறு போடுகிறார்கள். கடவுள் எப்போதும் யார் வழியாகவே படி அளக்கிறார். பாடமும் அளிக்கிறார்தானே. இப்படிப்பட்ட மண் நம் மண். நம்புகிறீர்களா? இல்லையா? மேலே நடந்த நிகழ்வினைப் படம்பிடித்துக்காட்டியவர் ஒரு சிறந்தசொற்பொழிவாளர். நீங்கள் நம்பினால் நன்றி. முன்னரே நம்பியிருந்தால் மிக்க நன்றி.

     இந்தப்பொன்னான பூமியில் விளைவதை உண்டுகொண்டே இந்நாட்டினை இழிவாகப் பேசுவோரைக்கண்டால்தான் கவலையாக இருக்கிறது. பெற்றதாயையே குறைசொல்லும் மகனை என்னென்பது?. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் திறமையைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு அவரைக் கைதுசெய்தது. மொட்டை அடித்தது. கோணியில் ஆடைசெய்து அணியச்செய்தது. செக்கிழுக்க வைத்து சாட்டையில் அடித்தது. கயிறு திரிக்கவைத்து கைகளைப் புண்ணாக்கியது. புழுக்கள் நெளியும் உணவைக் கொடுத்தது.

நாள்தோறும் பலருக்கு உணவிட்டு வேலைகொடுத்து மகிழ்வித்த பெருமகனை இவ்வாறெல்லாம் இழிவுபடுத்தியது ஆங்கிலேய அரசு. தன்மானத்துடன் எதிர்த்தவர்களை எல்லாம் பறவைகளைச் சுட்டுத்தள்ளியதுபோல் தள்ளினர். பறவைகளாவது பறக்கமுடியும். ஆனால், விடுதலை வீரர்களை (கை, கால்களில்) சங்கிலியால் பிணைத்திருந்தனர். தன்னலம் பெரிதென எண்ணியிருந்தால் வக்கீல் தொழிலில் பெரும் பணக்காரராக வாழ்ந்திருக்கலாம். மக்களை அடிமை நிலையிலிருந்து காக்கவேண்டும் என எண்ணினார். அதனால் கொடுமைக்கு உள்ளானார். வக்கீல் தொழில் செய்யக்கூடாதென்று உரிமையைப் பறித்துக்கொண்டனர் ஆங்கிலேயர்கள். அரிசி கடையில் வேலைசெய்து அரிசியினைக் கூலியாகப் பெற்றார். அதனைக்கண்டு பொறுக்கமுடியாமல் அவருக்கு வேலைக்கொடுத்த கடைக்குப் பூட்டுபோட்டனர். இப்படி வாழ்நாள் முழுதும் தலைவணங்கி வாழவேண்டிய தலைவரை இழிவுபடுத்தி மகிழ்ந்தனர். கப்பலோட்டிய தமிழர் வழியில் தேசத்திற்காக தனது இன்ப வாழ்வை துன்பமாக்கிக்கொண்டவர்கள் பலர்.

உலகையே ஆண்ட தமிழினம் ; கடல் கடந்துசெல்ல கற்றுக்கொடுத்த தமிழினம் ; கோவில்களையும் அணைகளையும் கட்டி உலகமே வியக்கவாழ்ந்த தமிழினத்தை ஆங்கிலேயர்கள் வஞ்சகத்தால் அடிமையாக்கினர். தமிழர்கள் வீரத்தைக்கண்டு மிரண்டவர்கள் ஆங்கிலேயர்கள். அதனால்தான் தங்களால் எதிர்க்கமுடியாத நிலையில் பல நாட்டவருடன் கூட்டுசேர்ந்து சதிசெய்து வீழ்த்தினர். திப்புசுல்தானை வெல்லமுடியாத ஆங்கிலேயர்கள் நெப்போலியனின் துணைகொண்டு வீழ்த்தினார்கள். ஆனால், அதற்குப் பின் தீரன் சின்னமலையுடன் போரிட்டு தோற்றோடினார்கள். நம் முன்னோர்கள், மாவீரன் நெப்போலியன் எனப்பாடம் சொல்லிக்கொடுத்தார்களேயன்றி ‘மாவீரன்’ தீரன் சின்னமலை எனப் பாடம்சொல்லிக்கொடுக்க மறந்தனர்.

ஒவ்வொருவரும் தேசியகீதத்தை நாள்தோறும் பாட வேண்டும். தேச உறுதிமொழியை நாள்தோறும் ஒரு முறையாவது முழங்கவேண்டும். அப்பொழுதுதான் தேசப்பற்றுவளரும். தேசப்பற்று வளர்ந்தால்தான் நாட்டினை முன்னிறுத்த வேண்டும் என உழைக்கும் எண்ணம் ஏற்படும். குடும்பமும் நலம்பெறும். நாடும் நலம்பெறும்.

தேசியகவி இரவீந்திரநாத்தாகூருக்கு ‘சர்’ பட்டம் என்னும் உயரிய பட்டத்தை வழங்கினார். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற படுகொலையில் அப்பாவி மக்களைக் கொன்றான் டயர். ஈவு இரக்கமற்ற அச்செயலைக்கண்ட ‘தேசியகவி’ அந்தப்பட்டத்தைத் திருப்பிக்கொடுத்தார். ஒவ்வொரு குடிமகனும் தம்மால் இயன்ற செயலைச்செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும். வெளிநாடுகளுக்கு இது பொறுக்குமா? பொறுக்காது. அதனால்தான் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த பெண்களுக்கு தொலைக்காட்சி, குழந்தைகளுக்கு விளையாட்டு, இளைஞர்களுக்குப் போதை, தவறான உணவுப்பழக்கம்  என தீய பழக்கங்களை இறக்குமதி செய்துவருகின்றனர். மக்கள் அறியாமையால் சிக்கிக்கொண்டு உடல் வலிமையை இழந்துவிடுகின்றனர். 

தங்களுடைய நாட்டு மக்களுக்கு, விளையாட்டுப்பயிற்சியளிக்க தொழில் நுட்ப விஞ்ஞானிகளையும் வல்லுநர்களையும் தொழில் நிறுவனங்களையும், வானவியல் தொழில்நுட்பத்தையும் கொண்டு பயிற்சியளிக்கின்றனர். உலக நாடுகள் வளர்வதில் தவறில்லை. ஆனால், நம்மை வளரவிடாமல் செய்வது எத்தனை தவறு. இதனை இன்றைய தலைமுறை நன்குணரவேண்டும். உங்கள்மீது வீசப்படும் வலைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது. உங்கள் நலமே முக்கியம் ; உங்கள் குடும்பம் முக்கியம் ; உங்கள் தலைமுறை முக்கியம் என்பதனை உணரவேண்டும்

உலகமே இன்று இந்தியாவை வியந்துபார்க்கிறது. அதற்குக்காரணம் வேகம் மட்டுமன்று ; விவேகமும்தான்.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

தியான்சந்த் – ஹாக்கியின் கதாநாயகன்

 


தியான்சந்த் – ஹாக்கியின் கதாநாயகன்

     தியான்சந்த் ஆடக்கூடிய  ஹாக்கி (வளைதடி) கட்டையை ‘மந்திரக்கட்டை’ என நினைத்தனர். அதனை வாங்கி உடைத்தும்பார்த்தனர். அதில் ஏதாவது பந்தை ஈர்க்கும் காந்தம் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். ‘இல்லை’யென அறிந்தபின்னர் அவருடைய விளையாட்டுத்திறனைக்கண்டு தலைவணங்கினர். அந்த அளவிற்குப் பந்தை எடுத்துச்செல்லும் திறன் வியக்கத்தக்கது. எதிர்நிலையில் நிற்கும் வீரர்களுக்குப் பந்து மாயமாவதே தெரியாமல் திணறுவர். வெறுங்காலோடு ; சீரற்ற விளையாட்டுத்திடலில் ; அந்நியர் ஆண்ட இந்தியாவில் இத்தனை திறமைகளுடன் ஒருவர் விளையாடினார் எனில், அவரை இந்தியர் ஒவ்வொருவரும் தலைமேல்வைத்துத்தானே கொண்டாடவேண்டும்.

இவருடைய ஆட்டம் ஐரோப்பியநாடுகளுக்கு அச்சமூட்டியது. இந்தியா அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கியது. அன்று அவர்தொடங்கிய ஆட்டமே இன்று தேசிய விளையாட்டாக்கும் பெருமையினைக் கொண்டதாகத் திகழ்கிறது. இப்போட்டியில் இந்தியாவைக் கண்டு அனைத்து நாடுகளும் அஞ்சின. 1928 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் நெதர்லாந்தை  மூன்றுக்கு ஒன்று என்னும் புள்ளிக்கணக்கில் வென்று சாதனைப் படைத்தது. பின்னர் 1932 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இருபத்துநான்குக்கு ஒன்று என்னும் புள்ளிக்கணக்கில் வென்று சாதனைப்படைத்தது. 1936 ஆம் ஆண்டு எட்டுக்கு ஒன்று என்னும் புள்ளிக்கணக்கில் வென்று சாதனைப்படைத்தது. இவ்வெற்றிக்குப் பின்னால் நின்றவர் தியான்சந்த். இவர் விளையாடிய பன்னிரண்டு ஒலிம்பிக் போட்டியில் முப்பத்துமூன்று கோல்கள் அடித்தார்.

1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற விளையாட்டில், உலகமே கண்டு அஞ்சிய ஜெர்மனியின் தலைவர் ஹிட்லர் தியான்சந்தின் ஆட்டத்திறனில் மயங்கினார். தியான்சந்தை அழைத்து ஜெர்மனியின் குடிமகனாக மாறவும் தரைப்படையின் உயர்ந்தபதவியான கர்னல் பதவியைத் தருவதாகவும் கூறினார். “உங்கள் நாடு மிஞ்சிப்போனால் என்ன பதவியை அளித்துவிடப்போகிறது. என்னைப்போல் உன்னை உயர்த்தும் கடமையினை உன்னுடைய நாடு செய்யாது” என்றார். அதற்கு தியான்சந்த “என்னுடைய நாட்டிற்கு என்னை உயர்த்துவது மட்டும் பொறுப்பில்லை. அங்கு கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு என் நாட்டைப் உயர்த்தும் பொறுப்பு இருக்கிறது” எனக் கூறினார். கொடுங்கோலரான ஹிட்லர்,  தியான்சந்தின் ஆட்டத்தை மட்டுமில்லாமல் நாட்டுப்பற்றைக் கண்டு வியந்துநின்றார்.

ஐரோப்பியர்களின் அடிமைப்பிடியில் இருந்த இந்தியர்கள், தியான்சந்த் விளையாட்டில் ஐரோப்பியர்களை திணறடிப்பதைக் கண்டு மகிழ்ந்தனர் ; பெருமை கொண்டனர்.

மேஜர் தியான்சந்த் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் இருபத்தொன்பதாம் நாள் இராஜபுத்திரவம்சத்தில் அலகாபாத்தில் பிறந்தார். தந்தை இராணுவத்தில் பணிசெய்தார். பணிமாற்றம் பெற்றதால் உத்தரப்பிரதேச மாநில ஜான்சியில் வளர்ந்தார். ஹாக்கி வீரரின் மகனாகப் பிறந்ததால் இயல்பாகவே அவ்விளையாட்டில் திறமையுடையவராக விளங்கினார். இதனை அவர் உணராமல் மலியுத்தம் குத்துச்சண்டை விளையாட்டுகளில்தான் ஆர்வமுடையவராக விளங்கினார். பதினாறு வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் நடைபெற்ற ஹாக்கிப்போட்டியில் இவருடைய திறமையை அனைவரும் கண்டு வியந்தனர்.

தியான்சந்த் இரவு நேரத்தில் பணிக்குப்பின் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவார். சந்திரன் வெளிச்சத்தில் விளையாடிய அவரை அனைவரும் ‘சந்த்’  என்றே அழைத்தனர். என்ன அழகான பெயர்பொருத்தம் பாருங்கள்.

புதிதாகத் தொடங்கிய இந்திய ஹாக்கி கூட்டமைப்பு 1928 ஆம் ஆண்டு தியான்சந்தைத் தேர்வு செய்து ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பியது. அங்கு நடைபெற்ற ஐந்து போட்டியில் பதினான்கு கோல்கள் அடித்தார். 1932 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இவருடைய சகோதரர் ரூப் சிங்கும் பங்கேற்றார். 1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்குத் தலைமைப்பொறுப்பேற்று கலந்து கொண்டார். இப்போட்டியில் இரண்டாவது சுற்றில்  வெறுங்காலோடு ஆடிவெற்றிபெற்றார்.  

 

ஹாக்கியின் மந்திரவாதியாகவே மதிக்கப்பட்டார். 1926 முதல் 1949 வரை அவர் விளையாடிய 185 போட்டிகளில் 570 கோல்களை அடித்தார்.

     தியான்சந்த் பிறந்த ஆகஸ்டு 29 ஆம் நாள் தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. தலைநகரில் உள்ள தேசிய அரங்கம் “மேஜர் தயான் சந்த்’ தேசிய அரங்கமாக ஒளிர்கிறது.  

1928 இல்  இந்தியா ஒலிம்பிக்கின் எட்டுத்தங்கப்பதக்கங்களில் ஏழினை வெற்றிப்பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து இந்தியாவின் பெருமையினை உலகறியச்செய்தார். அவர் 1979 ஆம் ஆண்டு திசம்பர் மூன்றாம் நாள் மறைந்தாலும் 1956 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கிப் பாராட்டியது.  

     இப்பொழுது சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அவருடைய பெயரால் விருது தரப்படுகிறதென்றால் பொற்குடத்தில் வைரக்கல் வைப்பதுபோலத்தானே.

புதன், 4 ஆகஸ்ட், 2021

பிர்ஸா முண்டா - வனம் காத்த வல்லவர்

 


பிர்ஸா முண்டா 


“விடுதலை ! விடுதலை ! விடுதலை ! என மூன்று முறை சொல்லிப்பாருங்கள். உங்கள் மனம் புத்துணர்வு பெறும் முடங்கிக்கிடப்பதில் பெருமையில்லை.  உழைத்துச் சோர்வதில் சிறுமையில்லை. சந்தனம் வாழும்வரை வாசம் தருகிறது. தென்றல் வீசும்வரை இன்பம் தருகிறது. மலர்கள்  வாடும்வரை வாசம் தருகிறது. ஆறானது வாழும்வரை தாகம் தீர்க்கிறது. அப்படி வாழும்வரை , ஆறாக ; சந்தனமாக ; தென்றலாக ; மலர்களாக நாட்டின் நலனுக்காக வாழ்ந்த நல்லோர்கள் குறித்தே இன்று சிந்திக்க இருக்கிறோம்.

மகாகவி பாரதியார் பாடிய “பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் எனப் பாடியது போலவே “நீர் நமது ; நிலம் நமது வனம் நமது” என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார,.  பிர்ஸா முண்டா, மலைவாழ் மக்களில் ஒருவரான விடுதலைப் போராட்டவீரர். ராஜஸ்தான் மாநிலத்தில் மலைவாழ் மக்கள் இயக்கத்தை உருவாக்கினார். 1875 ஆம் ஆண்டு பிறந்தவர்.  சுக்ணா முண்டா, கர்மி ஹட்டு இவரது பெற்றோர்.

திறமையாகப் படித்த இவரை பெற்றோர்கள் பள்ளியில் சேர்க்க எண்ணினர். ஆனால் அங்கு படிக்கவேண்டுமானால் ஆங்கிலேயர்கள் தங்கள் சமயத்திற்கு மாறவேண்டும் எனக் கூறினர். படித்தாகவே வேண்டுமே என ‘பிர்ஸா டேவிட்’ என மாறினார். பின்னர் சர்தார் வல்லபாய்படேல் இயக்கத்தில் சேர்ந்தார். ஆங்கிலேயருக்கு அடிமையாகும் மலைவாழ்மக்களைக் காக்கவேண்டும் என எண்ணினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1895 ஆம்ஆண்டு தமது பத்தொன்பதாம் வயதிலேயே  மக்களைத் திரட்டிப் போராட்டத்தைத் தொடங்கினார். “ஆங்கிலேய அரசு முடியட்டும். நம் அரசு மலரட்டும்” என்பதே அவருடைய முழக்கமாக நின்றது. இத்தகைய வீர முழக்கமிட்டு ஓர் இனத்தையே நாட்டின் வளர்ச்சிக்காக வழிநடத்திய பெருமையுடைய இவருடைய படம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்புதானே.

ஆங்கிலேய அரசாங்கம் எப்படியெல்லாம் நிலத்தைக் கொள்ளையடிக்கலாம் என எண்ணிக்கொண்டிருந்தது.  வாரிசு இல்லாத நிலத்தை தனக்குச் சொந்தம் என அறிவித்தது. வாரிசுகளைத் தத்து எடுக்கவும் தடைவிதித்தது. எதைப்பயிரிடவேண்டும் என ஆங்கில அரசே முடிவு செய்து மக்கள் வறுமையில் சாக வழி செய்தது.

“வனங்கள் அனைத்தும் இனி ஆங்கில அரசுக்கே சொந்தம்” என்னும் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதனை எதிர்த்துப் போராடியவர்தான் இந்த பிர்ஸா முண்டா. வணிகம் செய்ய வந்தவர்கள் இயற்கை அன்னை கொடுத்ததை உரிமை கொள்வது கொடுமை எனப் போராடினார். ஜமீந்தார்களையும் நிலவுடைமையாளர்களையும் மிரட்டியும் பொருள்கொடுத்தும் அச்சுறுத்தியும் தன்வசமாக்கியது ஆங்கிலேய அரசு.  “தனி மரம் தோப்பாகாது” என மக்களைத் திரட்டி நாட்டைக்காக்கப் போராடினார். மண்ணைக் காக்கப் போராடியதால் இவருடன் மலைவாழ் மக்களும் இணைந்து போராடினர். “மண்ணின் தந்தை’ எனக் கொண்டாடினர்.

ஆங்கிலேயர்கள், இந்தியர்களை எப்போதும் வெல்ல முடியாத அளவிற்கு வீரத்தில் குன்றியே இருந்தனர். ஆனால், ஆயுதங்களைக்கொண்டே இந்தியர்களை வீழ்த்தினர்.. துப்பாக்கி, பீரங்கி குறித்து அறியாத மக்களிடம் வீரத்தைக் காட்டியவர்கள் ஆங்கிலேயர்கள். அறநெறியாகப் போர்செய்தே பழக்கப்பட்ட இனமாக இருந்த இந்தியர்கள், அக்காலத்தில் புதிதாகக் கண்டுபிடித்த இத்தகைய வெடிக்கும் ஆயுதங்களைப் புரிந்துகொள்ளமுடியாமலே தோற்றனர். இதனைக் கண்டு பலரும் அஞ்சினர். அஞ்சுவது இயல்புதானே. ஆனால் அஞ்சாது போராடிய வல்லவர்களும் இருந்தனர். அவர்கள் முண்டாவுடன் இணைந்து போராடினார். 1899 ஆம் ஆண்டு கொரில்லா முறையில் ஆங்கிலேயர்களை எதிர்கொண்டனர். தம்மிடமிருந்த வில், அம்புகளைக் கொண்டு போராடினர்.  ‘உல்குலான்; என இப்போர் அழைக்கப்பட்டது.  உல்குலான் என்பது புரட்சியைக் குறிக்கும். 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் நாள் இவரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். கொடுமையாகத் தண்டித்தனர்.

ஆங்கிலேயர்கள் மக்களை அச்சுறுத்தசெய்த முதல் காரியம், மக்களிடம் செல்வாக்கு மிகுந்தவர்களை மிகவும் இழிவாக நடத்துவது. சாலையில் ஆடைகளின்றி அடித்து இழுத்துச்செல்வது, சாட்டையால் அடிப்பது, எட்டி உதைப்பது, மக்களுக்கு நடுவே தூக்கிலிடுவது. தலையை வெட்டுவது எனப் பல கொடுமைகள் செய்தனர். ஒவ்வொரு ஊரிலும் எதிர்த்த அல்லது ஒன்றுகூட்டிய தலைவர்களையே இவ்வாறு கொடுமை செய்தனர். ஆனால், நயவஞ்சகமாகச் சிலர் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சொந்த தாய்நாட்டுக்கு எதிராக நின்றனர் ; வீரத்துடன் போராடிய தலைவர்களைக் காட்டிக்கொடுத்து பணத்தையும் ; பதவியையும் பெற்றனர். அத்தகைய துரோகிகளால் வீரர்கள் தோல்வியடைந்தனர் ; உயிரிழந்தனர்.

சிறையில் கொடுமைக்குள்ளான அவ்வீரர் இரத்த வாந்தியெடுத்து கடும் நோயால் பாதிக்கப்பட்டார். இக்கொடுமைகளால் இறந்ததனை மக்கள் அறிந்தால் போராட்டம் எழக்கூடும் என எண்ணிய ஆங்கில அரசு “காலரா பெருந்தொற்று நோயால் இறந்தார்” என அறிவித்தது. அப்போது அவருடைய வயது இருபத்தைந்துதான். இருபத்தைந்து வயதிலேயே நாட்டுப்பற்று கொண்டு மக்களின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களைப் போற்றுவது நம்கடமைதானே. அவர் அன்றுபோராடியதால்தான், பஞ்சமர் நிலத்தை யாரும் கையகப்படுத்தக்கூடாது என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உழைப்பவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் எனவும் போராடியவர்.

       நம்முடைய நாடு எத்தனை ஆண்டுகள் ஆயினும் இத்தகைய பொன்னான மனிதர்களின் உழைப்பினைப் போற்ற மறந்ததில்லை. இன்று அவருடைய பெயரில் கல்லூரி திறக்கப்பட்டிருக்கிறது. ஜார்கண்ட் விமான நிலையத்துக்கே அவருடைய பெயர்தான் சூட்டப்பட்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் – இது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்

என்னும் மகாகவியின் சொற்களுக்கு செயல்வடிவமாக நின்றவர் இந்த பிர்ஸாமுண்டா. தேசத்தைக்காக்கப் போராடியமுன்னோர்களைப்போல் தேசத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்.

       மானம் மட்டுமல்ல தேசமும் உயிரை விடப்பெரிது என்பதனை உணர்த்துவோம்.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

நீங்கள் யார்?

 


“நீங்கள் யார்?”

“நீங்கள் யார்?” என்று யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள். வீட்டில் வந்துகேட்டால் “நான் இன்னாரது மகன் அல்லது மகள் ; இன்னாரது தந்தை அல்லது தாய்” என்று யாரேனும் ஒருவரை மையமிட்டு அடையாளம் காட்டுவீர். சாலையில் கேட்டால், கேட்பவர் யாரென்று பார்த்து, “எதற்காகக் கேட்கிறீர்கள்” எனக் கேட்பதுண்டுதானே? அவர் பணம் கொடுப்பவராக இருந்தால் விருப்பாகவும் ; பணம் கேட்பவராக இருந்தால் வெறுப்பாகவும் விடை சொல்வதும் இயல்புதானே. காகிதப்பணம்தான் குணத்தைத் தீர்மானிக்கும் திறமுடையதாக இருக்கிறது. ஒரு அலுவலகத்தில் இதே கேள்வியைக் கேட்டால் “இந்தப் பதவி” எனக்கூறுவதனையும் காணமுடிகிறது. கையூட்டு பெறுபவர்தான் பதவியினையும் பெயரினையும் சொல்ல அஞ்சுவர். அதனால்தான் யாரேனும் தவறுசெய்தால்,  “உன் பெயர் என்ன?” என்று  கேட்டுப்பாருங்கள். உடனே, கோபம் பலூனில் வெடித்துவரும் காற்றுபோல் “ஏன்…கேட்கிறாய்?” என வேகத்துடன் ஒலிக்கும்.

“நீங்கள்” என்பது அத்தனை வலிமையுடைய சொல். உங்கள் ஊரிலிருந்து நகரத்திற்குச் செல்லும்போது “நீங்கள் யார்?” எனக் கேட்டால்  என்ன சொல்வீர்கள். ‘இந்த ஊரன்” எனச் சொல்வீர். வேறு மாநிலத்திற்குச் சென்றிருக்கிறீர். என்ன சொல்வீர்?. “இந்த மாநிலத்தன்” என்று சொல்வீர். வேறு நாட்டிற்குச் சென்றிருக்கிறீர். என்ன சொல்வீர். உங்கள் நாட்டின் பெயரைத்தானே சொல்வீர். அப்படியென்றால் உங்களுடைய பெரிய அடையாளம் உங்கள் நாடுதானே? அந்த நாட்டை நீங்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறீரா?. ‘இல்லை’ என்றாலும் ‘ஆம்’ என்றாலும் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க. எத்தனை மதிப்பெண் என்று கேட்கிறீரா? ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண் போட்டுக்கொண்டு எத்தனை மதிப்பெண் என நீங்களே கணக்கிட்டுக்கொள்க. அந்த மதிப்பெண்தான் உங்களுக்குரிய மதிப்பெண். மதிப்பெண் கூடுதலாக இருந்தால் நீங்கள் உங்களை பெருமிதமாகக் காட்டிக்கொள்வதில் வல்லவர் என நீங்களே தோளில் தட்டிக்கொள்ளுங்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால், நேர்மையாக ஒப்புக்கொண்ட உம் நற்குணத்திற்காக நீங்களே உங்களைப் பாராட்டிக்கொள்ளுங்கள்.

வினா 1. உங்களுடைய நாடு இறைமை நாடு – அப்படியென்றால்?

“இறைமை” என்பது இத்தகைய பெருமை உடையது என வரையறுக்க இயலாத பெருமையினை உடையது. தானேதன்னை இயக்கிக்கொள்ளும் முழுமையினை உடையது. பிறநாடுகளின் தலையீடு இல்லாமல் முழுமையாகச் செயல்படும் திறமுடையது

வினா -2 : உங்கள் நாடு குடியரசு நாடு - அப்படியென்றால்?

குடிமக்களால் இயக்கப்படுவது. குடிமக்களே தம் தலைவரைத் தேர்வுசெய்து ஆளச்செய்வது. பரம்பரையால் வருவதில்லை.

வினா -3 : உங்கள் நாடு பொதுவுடைமை நாடு – அப்படியென்றால் ?

தன்னுடைமைக்கு எதிரான சொல் பொதுவுடைமை. தனக்காகப் பொருளைவைத்துக்கொள்ளாமல் அனைவருடனும் பங்கிட்டுக்கொள்வது.

வினா -4 : உங்கள் நாடு மதச்சார்பற்ற நாடு – அப்படியென்றால்?

அனைத்து மதத்தினருக்கும் ஒரே வகையான உரிமையினையும் சுதந்திரத்தையும் அளிப்பது.

வினா -5 : உங்கள் நாடு சமத்துவத்தைப் பின்பற்றும் நாடு – அப்படியென்றால்?

சாதி, மதம், நிலை என எவ்வகை வேறுபாடுமின்றி ஒரே நிலையில் அனைவரையும் நோக்குவது.

வினா -6 : உங்கள் நாடு அரசியல் உரிமை உடைய நாடு – அப்படியென்றால்?

எத்தகைய மனிதராக இருந்தாலும் அவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு. ஒவ்வொரு ஓட்டிற்கும் சமமான மதிப்பெண் அளிக்கப்படுவது.

வினா – 7 : உங்கள் நாடு நீதிமன்றத்தையே உச்சநிலையாகக் கொண்டு செயல்படுவது – அப்படியென்றால்?

அனைவர்க்கும் அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி ஒரே வகையான நீதியினை வழங்குவது.

வினா – 8 : உங்கள் நாடு சகோதரத்துவத்தைப் பின்பற்றுவது – அப்படியென்றால்?

அனைத்து மக்களையும் உடன் பிறந்தவராக எண்ணி அன்பு பாராட்டுவது.

வினா- 9 : மக்களாட்சியை மூன்று தூண்களே தாங்கிக்கொண்டிருக்கிறது . அப்படியென்றால் ?

சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை என மூன்றும் மக்களைக் காக்கச் செயல்படுவது.

வினா – 10 : உங்கள் நாட்டிற்கென ஒரு உறுதிமொழி உண்டு – அப்படியென்றால்?

இந்தியா என் நாடு . இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்.

என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்நாட்டின் பழம்பெருமைக்காகவும், பன்முக மரபுச்சிறப்புக்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன். என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள் எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன். எல்லோரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன். என் நாட்டிற்கும் என் நாட்டும் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன். ஜெய் ஹிந்த்.

இப்போது நீங்கள் நூற்றுக்கு நூறு பெற்றிருந்தால் உங்களுடைய மதிப்பினை நீங்கள் முழுமையாக உணர்ந்துவிட்டீர்கள். அப்படி உங்கள் குழந்தைகளையும் பெரியோர்களை மதித்து வாழக் கற்றுக்கொடுத்துவிட்டால்போதும். நாட்டில் சோம்பல் இருக்காது ; குடி இருக்காது ; முதியோர் இல்லம் இருக்காது ; வறுமை இருக்காது.

இந்தக்கருத்துக்களை எல்லாம் குழந்தைகள் காதில் நூல்போல் நுழையவிடுங்கள். அவர்கள் ஆடையாக்கி தங்கள் மானத்தைக் காத்து நாட்டையும் காத்துவிடுவார்கள்.

வறுமை நிலையில் வளர்ந்த குழந்தைகள் எல்லாம் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு நாட்டுக்குப் பெருமை தேடித்தந்துள்ளார்களே. சில குழந்தைகள் வறுமை நிலையிலிருந்து ஆட்சியராக, பட்டயக்கணக்கராக, மருத்துவராக வந்தார்கள் ; வருகிறார்கள் ; வருவார்கள். உங்கள் குழந்தையையும் அப்பெருமைக்குரியவரில் ஒருவராக மாற்றலாம்தானே? மாற்றிவிட்டால் நீங்கள் நீங்கள் தான்.

 

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

உழவு மட்டுமில்லை நலிந்தது

 


உழவு மட்டுமில்லை நலிந்தது

     தாய்மொழியில் பாடங்களைக் கற்பிக்கவேண்டும் என்று சொல்லாதவர் எவரேனும் உண்டா? எல்லோரும் அதற்காகப் பாடுபடுகிறார்கள். ஆனால் நடைமுறையில் நடைபெறவில்லை. எப்படி? இதற்கான சதியில் பின்னால் இருந்து யாரோ தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை. உணவில் உப்பு போன்றது, சமூகத்தில் கல்வி. அது இல்லாவிட்டால் வாழ்க்கை சுவைக்காது. ஆனால், உப்பு என்பது கெடுதியானது. உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொன்றுவிடுகிறது. அதனால்தன் இறந்தவற்றைக் கூட கெடாமல் வைத்திருக்க உப்பு பயன்படுத்தப்படுகிறது. அந்த உப்பிலும் கல் உப்பா? பொடி உப்பா? எனக் கேள்வி கேட்டு ஒவ்வொரு நாளும் இது நல்லது ! அது நல்லது ! என மக்களைக் குழப்பிவிடும் நிலையினையும் காணமுடிகிறது. யார் என்று கேட்கிறீர்களா?

இன்று வீட்டில் பெரியவர்கள் இருந்தால் பெரியவர்கள் சொல்வதைக் கேட்போம். வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் முதியோர் இல்லங்களிலும் வீட்டு மூளைகளிலும்  முடங்கித்தானே கிடக்கிறார்கள். அவர்களுக்குரிய மதிப்புடன் அவர்கள் மதிக்கப்படுகிறார்களா? இல்லைதானே. அப்படி மதிப்பதாயிருந்தால் உலகம் வெப்பமயமாகி இருக்காது ! வெள்ளம் ஊருக்குள் புகுந்திருக்காது ! முப்போகம் விளைவது கனவாகி இருக்காது ! உழவு நிலம் வறண்டிருக்காது ! உழவன் வறுமையில் உழன்றுக்கொண்டிருக்கமுடியாது ! குளங்களில் வீடுகள் கட்டப்பட்டிருக்காது ; தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்காது. இன்னும் எத்தனையோ காதுகள் சொல்லலாம். ஆனால், காது கொடுத்து கேட்பவர்கள் எத்தனை பேர்?. உங்களைப்போல் சில நல்லவர்களைத் தவிர.

உழவுத்தொழில் வேர். மற்றவை கிளைகளும் இலைகளும். மற்றதொழில்களுக்கு அடிப்படையாக வேர் போன்ற உழவுத்தொழில் உணவிடும். மற்ற தொழில்கள் இலைகள் பச்சையம் சேர்ப்பதுபோல் சேர்த்து வேருக்குப் பலம் சேர்ப்பதுபோல் உழவைக் காக்கவேண்டும். ஆனால், செய்கிறதா? அனைத்துத் தொழில்களும் வானைத் தொட முயற்சிக்கின்றனவே அன்றி உழவுத்தொழிலைக் கவனிக்க மறந்துவிட்டது.  கதிரவன் எழும் முன்னே எழும் கதிரவன்கள் உழவர்கள்தானே. மற்றவர்கள் எவ்வெவ்வாறோ வளர்ச்சியடைந்துவிடும்போது உழவர்கள் மட்டும் எப்படி ஏழையாகவே இருக்கிறார்கள். எண்ணிப்பார்க்கவேண்டும்தானே? இதற்குப் பின்னணி என்ன?

அன்றைய இளைஞர்கள் தலைவர்கள் அழைத்த பாதையில் சென்று நாட்டு விடுதலைக்குப் போராடினர். விடுதலை பெற்றனர். பின்னர் இளைஞர்களுக்கு என்ன வேலை? புதிது புதிதாகத் தொழில் தொடங்கினரா? மகாகவி பாரதியார் கூறிய ‘ஆலை அமைப்போம்.. ஊசிகள் செய்வோம்” என்றெல்லாம் பாடினாரே. எத்தனை இளைஞர்கள் முன் வந்தார்கள். நாட்டில் சட்டங்களும் வாய்ப்புகளும் குவிந்துகிடக்கின்றன. முன்வரவேண்டியது யார் பொறுப்பு? இன்றைய இளைஞர்களுக்குத் தலைவர்களாக திரைநாயகர்களே இருக்கிறார்கள். அவர்கள் கூறினால்தான் ஒரு தொழிலைத் தொடங்குவார்கள் என்னும் நிலையில் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இதை உணர்ந்து நாயகர்கள் தொழிற்சாலைகளை உருவாக்கச்சொல்லலாம்தானே? எல்லைகளில் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொருட்களை வாங்கிக்கொண்டிருப்பதுதான் இன்றைய கவலைக்குரிய நிலை. நாமே எதிரிக்குக் காசு கொடுத்தால் என் செய்வது? இதற்குப் பின்னணியில் இருப்பதுயார்?

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் யார் இத்தகைய செயல்களுக்கு எல்லாம் பின்னால் இருந்துகொண்டு செயல்படுவார்கள் என்று. ஆம், நாட்டிற்கு எதிரானவர்கள்தான். “அவர்கள் யார்?” என்று கேட்கிறீர்களா? எந்த நாட்டிலெல்லாம் தங்கள் பொருட்களை விற்பனையாக வேண்டும் என எண்ணுகிறார்களோ, எங்கே நம் நாடு வளர்ந்துவிட்டால் அவர்கள் வருமானம் குறையும் என்று நினைக்கிறார்களோ அந்த நாடுகள்தான். அவர்களே, நம் நாட்டில் உள்ளவர்களை சோம்பேறிகளாக ; போதைக்கு அடிமைகளாக ; குடிகாரர்களாக ; புகைப்பவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பசியை மறக்க இப்பழக்கத்திற்கு அடிமையானவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களையெல்லாம் காப்பாற்றுவது யார்? இளம் வயதிலேயே போதைப்பொருட்களில் சிக்கிக்கொண்டு இறப்பவர்களைக் காப்பாற்றுவது யார்? அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் காப்பது யார்? அநாதைக் குழந்தைகளை உருவாக்கும் சூழலை உருவாக்குவது யார்? இந்த இத்தனை யாருக்குப் பின்னும் பெருமுதலைகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. விழிப்புணர்வோடு பாருங்கள்.

நம் நாடு முதலிடத்தில் வந்துவிடக்கூடாதென எண்ணும் கயவர்களே அவர்கள். நாளிதழைப் புரட்டிப்பாருங்கள். சொத்தினைக் கேட்ட மகனைக் கொன்ற தந்தை ; குடிகாரக் கணவனைத் திருத்தமுடியாமல் தாயும் மகளும் தற்கொலை ; குடிப்பதைக் கண்டித்ததால் கணவன் தற்கொலை என ஒரே நாளில் ; ஒரே பக்கத்தில் வெளிவந்த செய்திகள்தான் இவை. இப்படி இறப்பவர்கள் பெரும்பாலும் இருபது முதல் நாற்பது வயதுக்குள் இருப்பவர்கள் தான். யாரால் உலகில் உள்ள நாடுகள் அனைத்து வளம் பெற்றுக்கொண்டிருக்கிறதோ அத்தகைய மக்களை தெருக்களில் மயங்கிக்கிடக்கவைத்திருக்கிறது அந்நியரின் ஆளுமை.

எப்போதிலிருந்து தொடங்கியது எனக் கேட்கிறீரா? இதற்கு இயற்கை வேளாண் அறிஞர் காலஞ்சென்ற நம்மாழ்வாருடைய சொற்களைச்சொல்கிறேன், எளிமையாகப் புரிந்துகொள்வீர்.  “ஆங்கிலேயர்கள் பாலில் தண்ணீரைக் கலக்க மாவினைக் கண்டுபிடித்தார்கள். ஆனால், தமிழர்கள் பாலில் தண்ணீரைக் கலந்துகுடித்தார்கள். தமிழர்களின் அறிவுத்திறத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயன் மாட்டின் வளத்தை அறிந்தான். இதனால்தான் இவர்கள் எவ்வளவு பஞ்சத்தை உண்டாக்கினாலும் நன்றாக விளைவித்து உடம்பைத் தேக்குபோல் வைத்திருக்கிறார்கள் என எண்ணுகிறான். எனவே, மாடுகளைக் கொல்வதற்கென்றே சாவடிகளைக் கொண்டுவருகிறான். நாடுமுழுதும் இலட்சக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டன. மாடுகள், மனிதர்கள் எதைத் தின்பதில்லையோ (புல், வைக்கோல்) அதனைத் தின்று குழந்தைகளுக்குப் பால்கொடுத்தன. மாடுகளைக் கொன்றபிறகு போனவை: குழந்தைகளுக்குப் பால் போனது ; பயிர்களுக்கு எரு போனது ; ஏர் உழும் உழவு போனது. வந்தவை : டிராக்டர் வண்டி , புகை, டீசல் எரிபொருள், குப்பை குவிதல், எந்திரங்கள். இவை அனைத்தும் இயங்க மின்சாரம். இவை அனைத்திலும் எவ்வளவும் பணம். எவ்வளவு சிக்கல்கள். இத்தனை சிக்கல்களையும் தீர்க்கும் ஒரே தீர்வாக மாடுகள் இருந்தன. அவை மிகவும் நன்றியுணர்வுடன் தன்னை வளர்ப்பவர்களுக்குத் துணைசெய்ய வருடந்தோறும் கன்றினைக்கொடுத்தது. அந்தக் கன்றினைக்கொன்று பொள்ளாச்சியில் பஜ்ஜி செய்துவிடுகின்றனர் ; அப்படியும் விலைபோகாவிட்டால் கேரளாவுக்கு அடிமாட்டுக்கு விற்றுவிடுகின்றனர். குருடனிடம் அரிக்கன் விளக்கு கிடைத்தது போல் ஆகிவிடுகிறது” என உழவுத்தொழில் நலிந்ததற்கான காரணத்தைத் தெளிவாகவும் வருத்தத்துடனும்  குறிப்பிட்டுள்ளார்.

அன்று இந்தியாவிற்குள் அவர்கள் நின்றுகொண்டு கெடுத்தார்கள். இன்று அவர்களுடைய எந்திரங்களும் பொருட்களும் எடுபிடிகளும் கெடுத்துக்கொண்டிருக்கின்றன.

விழிப்புணர்வுடன் வாழ்ந்தால்தான் உழவர்களைக்காக்கமுடியும். மாடுகளைப் பெருக்குவோம் ; உழவுத்தொழிலைப் பெருக்குவோம் ; பிற தொழில்களை உருவாக்குவோம். அதுவே நம் கடமை.  

 

சனி, 31 ஜூலை, 2021

விடுதலையைப் போற்றலாம் வாருங்கள்

 


விடுதலையைப் போற்றலாம் வாருங்கள்

     வீட்டில் இருக்கும்போது, விடுதலை உணர்வுடன் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாம் விரும்பும் ஆடை, நாம் விரும்பும் பணி, நாம் விரும்பும் பேச்சு என அத்தனை வாய்ப்புகளையும் மொத்தமாய்க் கொடுப்பது வீடுதானே. அதனால்தானே வீட்டிற்குள் எப்போது நுழைவோம் என ஏங்கியிருப்போம். ஆனால், இன்று வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என அடைத்துவிட்டால், எப்போது வெளியே சுதந்திரமாக நடக்கமுடியும் என்றுதானே மனம் அலைகிறது.  அனைத்துமே விடுதலை உணர்வுதானே?

     சுதந்திரமான நாட்டில் இருக்கும் நமக்கே விடுதலையாக வாழ்வதில் எத்தனை விருப்பம் இருக்கின்றதெனில் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவின் நிலையினை எண்ணிப்பாருங்கள். தன்னை மதிக்கவில்லை என்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றான் ஜெனரல் டயர். பதவியைக் கூறினால்தான் உங்களுக்குப் புரியும் என்பதால் அப்படிக்குறிப்பிட்டேன். பொறுத்தருள்க !. கொடுங்கோலன் டயர் என்றே குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆனால் சொல்லிக்கொடுக்கப்பட்ட வரலாறுகள் எல்லாம் உயிர்களை வேட்டையாடிய கொடுங்கோலர்களை, ஜெனரல், துரை, கவர்னர் என உயர்வான பெயர்களால் குறிப்பிட்டுள்ளன. இது வரலாற்றுப்பிழைதானே. இல்லையென்கிறீர்களா? இதோ அவர்கள் நிகழ்த்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி கூறுகிறேன். ஒத்துக்கொள்வீர்கள்.

     பஞ்சாப் மக்களின் சமூகவிழாவான பைசாகி விழா 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் பதிமூன்றாம் நாள் கொண்டாடப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.  எத்தகைய முன்னறிவிப்புமின்றி ஜெனரல் டயர் துப்பாக்கிச்சூட்டை நடத்தினான். பெண்கள், குழந்தைகள் என ஈவு இரக்கமின்றி ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோரைக் கொன்றுகுவித்தான் கொடுங்கோலன். மக்கள் அங்கும் இங்கும் ஓடுவதைக்கண்டு மகிழ்ந்த கயவனை, ஒருவரும் எதுவும் கேட்கமுடியவில்லை. ஆனால், அவனை அனுப்பிய ஆங்கிலஅரசு கேட்டது. “என்பேச்சை கேட்காததால் சுட்டேன்” என ஆணவமாக விடைகூறினான். என்னிடம் இருந்த தோட்டாக்கள் முழுவதையும் சுட்டுவிட்டேன். இன்னும் இருந்திருந்தால் இன்னும் நிறைய இந்தியர்களைக் கொன்றிருப்பேன்” என்றான்.  டயரின் ஆணவப் பேச்சினைக் கேட்ட ஆங்கிலேய அரசு உடனே அவனுக்குப் பதவி உயர்வு வழங்கியது.

பெற்றோருடன் வாழ்ந்தவர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆதரவற்ற உத்தம்சிங் என்னும் இளைஞன் இந்தியர்களைக் கொன்ற டயரினைக் கொல்லவேண்டும் என முடிவுசெய்கிறார். இருபது ஆண்டுகள் அதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு மார்ச் பதிமூன்றாம் நாள் இலண்டனில் ஒரு விழாவில் சிறப்புப்பேச்சாளராகப் பங்கேற்கிறார். அவ்விழாவிற்கு உத்தம்சிங் ஒரு புத்தகத்தோடு செல்கிறார். புத்தகத்தின் நடுவே பக்கங்களுக்கு மாற்றாகத் துப்பாக்கி இருக்கிறது. புத்தகம் மிகச்சிறந்த ஆயுதம் என்பதனை உணர்த்தினார். “வறுமையில் நின்றவர்க்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது?” என்றுதானே கேட்கிறீர். அவர் கப்பலில் பயணம் செய்யும்போது பாத்திரங்கள் கழுவினார். பெற்ற சம்பளத்தில் துப்பாக்கி வாங்குகிறார். இருபது வருட தவம் ; இந்தியத்தாயிடம் கொண்ட பற்று ; இந்திய மக்களிடம் கொண்டபற்று தன்னலத்தை மறக்கச் செய்தது.  தன்னலமே நாட்டு நலம் என மாறியது. கனவு நினைவானது.

பெயருக்கேற்றார்போல் வாழ்ந்துகாட்டினார். உத்தமர் என்பவர் பிறர்வாழ தன்னைக்கொடுப்பவர்தானே. ‘உத்தம் சிங்’ என்னும் பெயர் பின்னாளில் வைக்கப்பட்டது அதுவும் பொருத்தமாயிற்று. அவருடைய இயற்பெயர் ஷேர்சிங். ஷேர் என்றால் சிங்கம். அதுவும் பொருத்தம்தானே. அவருடைய செயலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மிகவும் பாராட்டினார். இலண்டன் நாளிதழான “டைம்ஸ் ஆஃப் லண்டன்” உத்தம் சிங் சுதந்திரப் போராட்ட வீரர். ஒடுக்கப்பட்ட இந்தியரின் உணர்ச்சி வெளிப்பாடு எனப் பாராட்டியது.

ஷேர்சிங் சுட்டுவிட்டு ஓடவில்லை. பெயருக்கேற்றார் போல் சிங்கம் போலவே நின்றார்.  ரோம் நகர் இதனை ‘தீரச்செயல்’ எனப் பாராட்டியது. ஜெர்மனி வானொலி இந்தியர்கள் யானையைப்போன்று மறக்காமல் பழிவாங்கும் திறமுடையவர்கள். உத்தம்சிங் இருபது ஆண்டுகள் கழித்துப் பழிதீர்த்துக்கொண்டார் எனப் பாராட்டியது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய ஊக்கச்செயலாகவே உத்தம்சிங்கின் செயல்பாடு அமைந்தது.

முத்தாய்ப்பாக ஒன்று சொல்லவேண்டுமானால், உத்தம்சிங்கின் சொல்லைத்தான் சொல்லவேண்டும். “என் தாய்நாட்டிற்காக உயிரைவிடுவதைவிட வேறுபெருமை என்ன இருக்கிறது” என எழுதிச்சென்றிருக்கிறார். அதுமட்டுமன்று, தான் தூக்கிலிடப்படுவதை முன்னரே அறிந்த உத்தம்சிங், சாவினைக் கண்டு அஞ்சவில்லை. “என்னை நீங்கள் தூக்கிலிட்ட பிறகு எனது உடலை லண்டனிலேயே புதையுங்கள். எங்கள் மண்ணை நீங்கள் பிடித்துக்கொண்டீர். உங்கள் மண்ணின் ஆறடி மண்ணை நான் ஆள்வேன்” என்றார். பொன்னேடுகளில் பொறிக்கவேண்டிய சொற்களைத் தன் கடைசி ஆசையாகக் கூறினார் உத்தம்சிங்.

தாய்நாட்டில் விளையும் பொருட்களை உண்டு உடல்வளர்க்கும் ஒவ்வொருவரும் தாய்நாட்டிடம்பற்றுகொண்டுதானே வாழவேண்டும். நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு வெட்டினால் விழுவது யார்?. “பத்துமாதம் தன் வயிற்றில் சுமந்த தாயைக் காப்பாற்றாவிட்டால், மகனுடைய மகளுடைய சம்பளத்தைப் பிடித்தம்செய்து நேரடியாக பெற்றோருக்கு அனுப்பிவிடுவோம்” எனச் சில மாநிலங்களில் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அவ்வாறே தாய்நாட்டைப் பழிப்போருக்கும் உரிய தண்டனை வழங்கவேண்டும். தண்டனை அவர்களை வருத்துவதற்கன்று ; திருத்துவதற்கே. நன்றியுணர்வின் அருமையினைச் சொல்லிக்கொடுக்காததால் வந்தவிளைவு அது

ஒரு பேருந்தில்  எண்பது பேர் பயணம் செய்கிறார்கள். எட்டு குண்டர்கள் நடுவழியில் பேருந்தை மறித்து கொள்ளை அடிக்கிறார்கள். எட்டுபேரை எண்பதுபேரால் ஒன்றும் செய்யமுடியாது. ஆயுதம் இருக்கிறது என்ன செய்வது? எனக் கூறாதீர்கள். ஆயுதம் இல்லாவிட்டாலும் ஒன்றுபட்டுவிட்டால் ஒழிந்துபோய்விடுவார்கள் எதிரிகள். நாம் செய்கின்ற தவறினைப் புரிந்துகொள்ள நான் படித்த ஒரு கதையைச் சொல்லட்டுமா?

     ஒரு விடுதியில் பல நாட்கள் உப்புமா தான் சிற்றுண்டி. நூறு பேரில் எண்பது பேர்  எதிர்த்தனர். காப்பாளர் ஓட்டெடுப்பு நிகழ்த்தினார். பெருவாக்குப்படியே சிற்றுண்டி என்றார். மீண்டும் உப்புமாவே தேர்வாகிறது. “எப்படி?” என்றுதானே கேட்கிறீர். உப்புமா விரும்பிகளின் ஓட்டு இருபதும் சரியாக விழுந்தது. மற்ற எண்பதுபேர்  இட்லி – 19, தோசை -19, பூரி -19, பரோட்டோ-19, சப்பாத்தி -4 என விழுந்தது. இப்படி விழுந்தால் காப்பாளர் என்ன செய்வார்? ஒன்றுபடுவோம். நாட்டைக்காப்போம்.

 

 

சனி, 24 ஜூலை, 2021

உழைப்பின் அருமை

 


உழைப்பின் அருமை

     இருபதாம் நூற்றாண்டுக் கடைசியில் பிறந்தவர்கள் “ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்” என்னும் பாடலையும் “உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே” என்னும் பாடலையும் அறிந்திருப்பார்கள் ; பாடியிருப்பார்கள். அத்தனை அழகான பாடல். அழகு என்பது அறிவுடன் கூடியது மட்டும்தான். ஏனெனில் புற அழகிற்குக் காலஎல்லை உண்டு.  இந்தப்பாடலடிகள் எத்தனை வேகமாகவும் எத்தனை அன்பாகவும் காலம் கடந்தும் கருத்துக்களைப் பதித்துவிட்டிருக்கிறது. அதனால்தான் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தனர். வாழ்க்கை அழகானது. வாழ்வதிலும் விருப்பம் உண்டானது.

     இன்றைய இளைஞர்களைப்பற்றி கேட்டுப்பாருங்கள். “அவன் சொன்ன பேச்சை கேட்கமாட்றான்” “அவன் இந்த வேலைக்கெல்லாம் போகமாட்டானாம்” “அவன் எப்பபார்த்தாலும் கைப்பேசியில் படம்பாத்துக்கிட்டு இருக்கான்” “அவன் திறன்பேசியில் விளையாடிக்கிட்டே இருக்கான்” இப்படித்தான் சொல்வார்கள். அப்படி சொல்லாமலிருந்தால் அவர்களே தவத்தின் பயனாகப் பிள்ளைகளைப் பெற்றோர் ஆவர். இளைஞர்களிடம் ஒரு குறையும் இல்லை. இந்தச்சூழல்தான் அவர்களை அவ்வாறு கெடுத்துவிட்டிருக்கிறது.

     “உழைப்பது நம்ப உடம்புக்கு ஆகாது” என்று ஒரு திரைப்படத்தில் கதாநாயகர் சொல்கிறார். அவருக்கு ஒரு துணை நடிகர் “என்னை எங்கம்மா வேலைக்குப் போகச் சொல்லி கொடுமைப்படுத்துறாங்க” எனக் கிண்டலாகப் பேசுகிறார். இவை, பிஞ்சு மனத்தில் பதியத்தானே செய்யும். இளைஞர்கள் என்றாலே பல்துலக்காமல் பேருந்து நிலையத்தில் குளிர்க்கண்ணாடியைப் போட்டுக்கொண்டு (ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் என கண்ணாடியை மாற்றிப்போட்டுக்கொண்டு) நிற்பதாகக் காட்டுவது எத்தனை அவலம். உலகம் இப்படங்களைப் பார்க்கும்பொழுது என்ன நினைக்கும்? எதையாவது நினைத்துக்கொண்டு போகட்டும். திரைப்படம் என்பது மாயைதானே. விட்டுவிடலாம்  என நினைத்தால் பல மதுக்கடைகளில் இளைஞர்கள் கூட்டம்தான் அதிகமாக இருக்கிறது.

நாட்டை தலைநிமிர்ந்து நடத்தவேண்டிய தலைமுறை தெருஓரங்களில் விழுந்துகிடக்கிறது. அவர்களை நம்பிய நாட்டுக்கும் வீட்டுக்கும் எத்தனை இழப்பு. அதுமட்டுமா? அவர்களுக்கே எத்தனை இழப்பு. திரை நாயகர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாக நடிக்கிறார்களே ஒழிய உண்மையான வாழ்வில் யோகப்பயிற்சியும் உடற்பயிற்சியும் செய்து அழகாகத் தம்மைப் பாதுகாத்துக்கொள்கின்றனர். ஏமாற்றுவது அவர்கள் பாத்திரம் ; ஏமாறுவது இளைஞர்களின் அறியாமை.

     “இதையெல்லாம் எப்படிச் சொல்கிறீர்?” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதோ நான் கண்ட ஒரு அருமையான நேர்காணல், ஒரு தொழிலதிபரிடம் நீங்கள் தமிழராக இருந்தும் ஏன் தமிழர்களுக்கு உங்கள் நிறுவனத்தில் வேலை கொடுப்பதில்லை. பெரும்பாலும் வடநாட்டார்தான் வேலைசெய்கிறார்களே” எனக் கேட்டார். “நான் தமிழர்களைத்தான் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்றுதேடுகிறேன். ஒருவரும் வேலைக்கென்றால் வருவதில்லை. அதனால் வடமாநிலங்களிலிருந்து விமானம் வழியாக இலட்சக்கணக்கில் பணம் செலவுசெய்து அழைத்துவருகிறேன்” என்றார். அது மட்டுமன்று “சனிக்கிழமை கூலிகொடுப்பதால், ஞாயிற்றுக்கிழமை குடித்துவிட்டு, திங்கள் கிழமை எழமுடியாமல், செவ்வாய்க்கிழமைதான் வேலைக்கு வருகிறார்கள்” எனக்கூறுகிறார். இந்நிலையை உருவாக்கியது யார்?.” இக்குரல் ஒவ்வொரு தாயாரின் குரல் ;  வறுமையில் தவிக்கும் மனைவியின் குரல் ; பசியோடு தவிக்கும் குழந்தைகளின் குரல்.  இதற்குத்தீர்வு காணவேண்டிய பொறுப்பு ஒவ்வொரு தமிழர்க்கும் உண்டு.

நாயகர்கள் நினைத்தால் மாற்றமுடியும். ஒவ்வொரு நடிகரும் உழைப்பின் அருமையினை விளக்கவேண்டும். தொழிற்சாலைகள் உருவாக்க வேண்டும் என்னும் எண்ணத்தைப் பரப்பவேண்டும். குடிப்பது தவறு என்பதனை துணிந்து அனைவர்க்கும் சொல்லவேண்டும். பிறநாட்டிலிருந்துவரும் இறக்குமதியைக் குறைக்கவேண்டும். உறபத்தியால் ஏற்றுமதி நிறையவேண்டும். செய்வார்களா ?

     முன்னைய காலத்தில் இலக்கியங்கள்தான் மக்களுக்கு நல்வழிகாட்டின. இந்த வேலையைப் புலவர்கள் என்ன அழகாக செய்திருக்கிறார்கள். உலகநாதர் இயற்றிய ‘உலகநீதி’ சொல்லும் கருத்துக்களைப் பாருங்களேன்.

     சேராத இடம் தனிலே சேரவேண்டாம்

     செய்த நன்றி ஒருநாளும் மறக்கவேண்டாம்

ஊரோடும் குண்டுணியாய்த் திரியவேண்டாம்

உற்றாரை உதாசினங்கள் சொல்லவேண்டாம்

பேரான காரியத்தைத் தவிர்க்கவேண்டாம்

பிணைபட்டுத் துணைபோகித் திரியவேண்டாம்

வாராரும் குறவரிடை வள்ளிபங்கண்

மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே        (உலகநீதி:8)

 

என எத்தனை வலிமையான கருத்துக்களையெல்லாம் தரமான பூக்களைக்கொண்டு கட்டிய மாலைபோல் கட்டியிருக்கிறார் உலகநாதர்.

     சேராத இடத்தில் சேர்வது முதல் தவறு. அப்படித் தவறி சேர்ந்தால் உடனே விலகிவிடு. தாய்தந்தை செய்த நன்றியை மறந்துவிடாதே. தேவையில்லாத செய்திகளை ; பழிச்சொற்களை வீசாதே. நல்வழி சொல்லும் உறவினர்களை இழிவாகப்பேசாதே ; புகழ்தரும் பணி கிடைக்குமாயின் அதனைத் தவிர்க்காதே. வீணாணவர்களுடன் நின்று பெருமைகளை இழந்துவிடாதே. இவையெல்லாம் அமையவேண்டுமெனில் மனதை ஒருநிலைப்படுத்து என்கிறார். அவர் முருகபக்தர் ஆதலால், அவர்கண்ட மயிலேறும் பெருமானாகிய முருகப்பெருமானை வாழ்த்தவேண்டும் என்கிறார். அதுவும் வள்ளி மகளை இணையாகக் கொண்ட முருகப்பெருமானை எனக் கூறியுள்ளார். இதனுள் பெண்களை மதிக்கவேண்டும் என்னும் குறிப்பும் அடங்கியுள்ளதுதானே.

     தாய்,தந்தை சொல்லை மதிக்காமல் இருப்பதிலிருந்து தவறு தொடங்குகிறது. அதனால் தவறானவர்களின் நட்பு கிடைக்கிறது. தவறுசெய்யும்போது சிக்கிக்கொண்டால் பொய்சொல்ல நேரிடுகிறது. பிறரைப்பழிசொல்லி ; துன்பம்செய்து தப்ப மனம் நினைக்கிறது. இத்தகைய தவறுகளைச்செய்யக்கூடாது என எவரேனும் சொல்லிவிட்டால் என்செய்வது என உறவுகளை எதிர்க்கிறது. தவறான வழியில் செல்வம் சேர்ப்பது எளிதாக இருப்பதனால், புகழான வழியில் வரும் செல்வத்தை ஏற்க மறுக்கிறது. தீயவர்களுடன் இருப்பதே நல்லதெனத் தோன்றிவிடுகிறது. அதனால் வாழ்க்கைவாழ்வதே வீணென்று எண்ணத்தோன்றுகிறது. இத்தகைய குற்றங்களிலிருந்து மீளவேண்டுமெனில் மனதை ஒருநிலைப்படுத்தவேண்டும். பெற்றோரின் பேச்சைக்கேட்டு உழைத்து வாழவேண்டும் என்கிறார் உலகநாதர்.

     உழைப்பில் இருக்கும் உப்பு தான் வாழ்க்கையைப் பெருமையாக்கும். ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே” எனக்கூறியது உழைப்பின்றி உண்பது அனைத்தும் குப்பை என்பதனை உணர்த்தத்தானோ?

 

வியாழன், 22 ஜூலை, 2021

மனைவி என்னும் மந்திரி

 


மனைவி என்னும் மந்திரி

      எந்த மந்திரியாக இருந்தாலும் ‘மனைவி’ என்னும் தந்திரியின் பேச்சைக்கேட்டுத்தானே ஆகவேண்டும்.  தலைகுனிந்து தலைவன் வீட்டிற்குவந்தவள் பின்னர், அந்தக் குடும்பத்தையே தலைநிமிரச் செய்துவிடுகிறாள். ஒரு மரம் பல கிளையாகப் பரவி நிழல்தருவதுபோல ஒவ்வொரு குடும்பமும் செழித்துக்கிளைத்து அழகுடன் வளரச்செய்தவள் மனைவிதானே. கணவன் ‘அவளுக்கு ஒன்றும் தெரியாது’ என எத்தனை எளிமையாகச் சொல்லிவிடுகிறான். ஏமாந்தபின்னால்தான் “பெண்புத்தி பின் (கூர்மை) புத்தி” என்பதனை உணர்கிறான்..  உலகமே எதிர்த்து நின்றாலும் கணவனுக்காக இறுதிவரைப் போராடுபவள் அவள்மட்டும்தானே. வீழ்ந்தபின், வீதி வரும் வரைமனைவியானவள் வாழும்வரை கணவன் வீதிக்கு வராமல் காக்கிறாள்தானே.

     தன்னுடைய நலனைப்பற்றிக்கவலைப்படாதவள் அவள். உறங்குவதும் எழுவதும் தெரியாமல் குடும்பத்திற்குச் சேவைசெய்யும் அளவிற்கு அவளுக்குப்பொறுமையைக் கற்றுக்கொடுத்தது யார்? அதுதான் மரபு. மரபு என்பது அடக்குமுறையல்ல ; அது வாழ்வின் ஒழுங்குமுறை. ஒருவர் பணம் ஈட்ட, ஒருவர் இல்லம் காக்கவேண்டும். அப்போதுதானே வாழ்க்கை ஓடும் ; நடக்காவது செய்யும். அது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கலாம். தவறில்லை. ஆனால், பெரும்பாலும் பெண்கள்தான் தாயுள்ளத்தோடு குழந்தைகளுக்குச் சோறூட்டமுடியும். தன் வயிற்றிலிருந்து பிறந்த குழந்தையினைக் காப்பதில் அவளுக்கும் மகிழ்ச்சி இருக்கும்தானே.

குடும்பத்தின் அனைத்து முடிவுகளையும் அவளே எடுக்கிறாள். அவளுக்குக் குரல் கொடுப்பவனாக மட்டுமே கணவன் இருக்கிறான். அனைத்துச் செயல்களையும் பின்னால் இருந்துசெய்துகொண்டே ஒன்றும் தெரியாதவள் போல் மௌனம் என்னும் அணிகலனை அணிந்திருப்பாள். அவள் பேசினால் கணவனின் அறியாமை புலப்பட்டுவிடுமோ என எண்ணி, அமைதிகாப்பாள். எந்த முடிவைக் கூறினாலும் ‘அவரை ஒரு வார்த்தை கேட்டுட்டுச் சொல்கிறேன்’ என்பாள். தனக்கு முழுமையான ஆற்றல் இருப்பினும் கணவன் செயலால் அன்றி மீளக்கூடாது எனச் சீதை வாழ்ந்தது பெண்ணின் பெருமையால்தானே? அவள் வீரத்தை வெளிப்படுத்தியிருந்தால் இராமனின் வீரத்தினை உலகம் அறிந்திருக்குமோ?

கோவலனின் காலொடித்துக் ‘கேவலன்’ எனத் தவறுதலாக எழுதிவிட்டு, கண்ணகியைப் பிரிந்த கால்களை ஒடித்ததில் தவறில்லையே எனக் கூறும் மாணாக்கர் பலருண்டு. நாடாளும் மன்னனையே தலைகுனியச் செய்தவளுக்கு வீடாண்ட மன்னனாகிய கோவலனையா அடக்கத்தெரியாது. மரபினைக்காக்கவேண்டும் என்னும் குணம்தானே அவளை அடக்கமாக்கிற்று. குழந்தை தன் பேச்சைக் கேட்கவில்லை என எத்தனைப்பெற்றோர்கள் இன்று வருந்துகிறார்கள். குழந்தைகள் குறிப்பிட்ட நேரத்தில் வீடுவந்துசேராவிடில் எந்தப்பெற்றோர் தவிப்பின்றி இருப்பார்? இவை அனைத்தும் மரபைக்காக்கத்தானே. தலைவாரி விடும்போதும், உலைவடித்து இடும்போது எத்தனை அறிவுரைகளை பின்னிவிடுகிறாள் ; ஊட்டிவிடுகிறாள்.

தன்குடும்பம், தன்தலைவன் குடும்பம் என இருகுடும்பத்தின் பெருமைதனைக்காப்பவள் மனைவிதானே. மகன் தறிகெட்டுப்போய்விடுவான் என அஞ்சிக்கால்கட்டுப் போட்டிடவே திருமணம் செய்துவைப்பர். ஊர்திரிந்த கணவனவன்  கரத்தினிலே கைக்கடிகாரம் கட்டிவிட்டு, சிறியமுள், பெரியமுள்ளும் நாம் இருவர் எனச்சொல்லி சரியாக வீட்டிற்கு வரவைத்த பெருமை மனைவிக்குத்தானே?

முருங்கையினை முறுக்கியும், செம்முள்ளங்கியைக் (கேரட்) கீறியும், வெண்டைக்காயை உடைத்தும் வாங்கவேண்டுமென உலகியலை அவள்தானே கற்பித்தாள். வெறும்பயலாய் சுற்றித்திரிந்தவனை குடும்பத்தலைவனென அடையாளம் கொடுத்தாவளும் அவள்தானே. இத்தனைப்பெருமைகளையும் மொத்தமாய்க்கொடுத்ததற்குக் காரணம், திருமணச்சடங்கினிலே, அம்மிமிதித்து, அருந்ததி பார்த்து இறுதி வரை உடனிருப்பேன் ; குலப்பெயரைக் காத்து நிற்பேன் என்னும் உறுதிமொழியால்தானே?.

இன்று, சொன்னசொல்லைக் காப்பாற்றிவிட்டு என்னை வருத்தத்தில்விட்டுவிட்டு மறைந்தாளே என வருந்துகிறான் ஒரு மன்னன். புறாநானூற்று மன்னனவன். சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை. மன்னன்பாடிய கையறு நிலைப்பாடல் இதுதான்

யாங்குப்பெரிது ஆயினும், நோய் அளவு எனைத்தே

உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின்?

கள்ளி போகிய களரியம் பறந்தலை

வெள்ளிடைப் பொத்திய விளை விறகு ஈமத்து

ஒள்ளழற் பள்ளிப்பாயல் சேர்த்தி

ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை

இன்னும் வாழ்வல் ; என்இதன் பண்பே !       (புறநானூறு :245)

 

இருக்கும் வரை மனைவியின் அருமை தெரியாது. இல்லாதபோது அவளைத் தவிர வேறொன்றும் தெரியாது. அவள் இருக்கின்றாள் என்ற ஒன்றே வாழ்வை வரமாக்கும் என அறியும் பிரிவின் ஆழத்தைப் பாடலாக வடித்துள்ளான் இம்மன்னன்.  

     அவளைப் பிரிந்த துன்பம் பெரியது ; அவளைப்பிரிந்து வாழும் என் உயிர் சிறியது. இருவரும் இணைந்தே வாழ்வோம் என்றவள், அவள் சொல்லைக்காத்தாள். நான் சொல்லைக்காக்காமல் தோற்றேன். மென்மையான அவள் உடலை வன்மையான விறகடுக்கில் படுக்கவைத்து, தீயினை இட்டுவைத்தேன். பின்னும் வாழ்கின்றேன். இந்த இழிவான பிறவிக்கு என் செய்வேன் என வேண்டுகின்றான். மன்னன் தன் மனைவியிடம் கொண்ட அன்பு புலப்படுகிறதுதானே?

     மக்களிடம் உயர்வு தாழ்வு உண்டு. ஆனால் உணர்வுகள் ஒன்றுதானே?. மன்னனாக இருந்தாலும் மனைவியை இழந்தபின்னால் உயிரில்லா உடம்பாகிறான். தேய்பிறையாய்த் தேய்கிறான். இவ்வாறு மனைவியின் அன்பினை சங்க இலக்கியங்கள் உணர்த்திநிற்பது மன்னனின் புகழைக் குறிப்பதற்கு மட்டுமன்று. எவ்வாறு மனைவியுடன் வாழும்போதே அன்புடன் இணைந்து வாழவேண்டும் என்பதற்காகவும்தானே?

     “அப்பாவை எதிர்த்துப்பேசாதே” என மகனிடமும் “தாத்தாவை எதிர்த்துப்பேசாதே” எனப்பேரனிடமும் பாசத்தை வளர்ப்பவள் அவள்தானே.

     எப்போது அன்பாக ; எப்போது கோபமாக ; எப்போது அடக்கமாக ; எப்போது வேகமாக ; எப்போது மென்மையாக ; எப்போது ஊக்கமாக ; எப்போது ஆதரவாக ; எப்போது சோகமாகப் பேசவேண்டுமெனச் சூழலை அறிந்துபேசும் மந்திரி அவளன்றி வேறுயார்? அவளை மதித்து நடப்போம். ஆண்மையின் சிறப்பு அதுவே என உலகிற்கு இயம்புவோம்.    

    

செவ்வாய், 20 ஜூலை, 2021

நட்பிலக்கணம் : அதியமானும் ஔவையும்

 


புறநானூற்றின் வழி நட்பிலக்கணம் : அதியமானும் ஔவையும்

     வாழ்க்கை என்பது வாழும் தன்மையினைக்கொண்டு மாறுபடுவது. கார்மேகம், ஒருவர்க்கு மகிழ்ச்சியையும் மற்றவர்க்கு வருத்தத்தையும் தரக்கூடும். உழவுத்தொழில் செய்வோர்க்கும் உப்பளம் கொண்டோர்க்கும் ஓரெண்ணம் தோன்றுமெனெ எண்ணுதல் ஏற்புடைத்தன்று. ஆனால், பெரும்பான்மையினரின் நலத்தைக் கொண்டும் பெரும்பயன் கருதியும் மழை போற்றப்படுகிறது. இவ்வுலக உயிர்கள் செழிப்பதற்கு அம்மழையே அடிப்படையாகிறது. எனவே, மழைபோல் வள்ளல் குணம்கொண்ட புரவலர்களாக தமிழ் மன்னர்கள் விளங்கினர். அவ்வாறு வாழ்ந்த தமிழ் மன்னர்கள் என்றும் நிலைபேறுடையவர்களாக விளங்கவேண்டும் என எண்ணிய புலவர்கள் பலர். அத்தகைய இலக்கியங்களில் தலையாயன சங்க இலக்கியங்கள். அவ்விலக்கியங்களுள் புறநானூறு தனித்த சிறப்புடையது. அப்புறநானூற்றில் தமிழ்மூதாட்டி ஔவையாரின் பாடல் மேலும் தனித்த சிறப்புடையது. அவர் பாடிய பாடல்களிலும் அதியமான் குறித்துப்பாடிய ‘கையறு நிலை’ பாடல்வழி, நட்பின் அருமையினைக்காண எண்ணியதன் விழைவாகவே இக்கட்டுரை அமைகிறது.

அதியமானும் ஔவையும்

     புரவலரெனில் இவ்வாறிருக்கவேண்டுமென வாழ்ந்தவன் அதியமான். புலவரெனில் இவ்வாறிருக்கவேண்டுமென வாழ்ந்தவர் தமிழ்மூதாட்டி ஔவையார். இவ்விருவர் கொண்ட நட்பே தலையாய நட்பு. இந்நட்பின் பெருமையினை உலகறிய எடுத்துச்சொல்லும் இலக்கியமாகவே ‘புறநானூறு’ அமைகிறது. ஏனெனில், மன்னர்களின் புகழை உலகறியச்செய்யும் கலைஞர்களாகவே புலவர்கள் திகழ்ந்தனர். அவர்களுடைய சொல்வெட்டுக்கள் அனைத்தும் பாடல்களாக இலக்கியங்களில் இடம்பெற்றன. அத்தகைய பாடல்களின் வழி அதியமானின் இயல்புகளைச் சுட்டிக்காட்டியவர் ஔவையார். அவருடைய பாடல் வழியாக அதியமானுடைய நட்பு இலக்கணத்தை எடுத்துக்காட்டியுள்ளதனைக் காணமுடிகிறது. தனது வாழ்நாள் நீட்டிக்கும் கருநெல்லிக்கனியினை ஔவையாருக்குக் கொடுத்த  அதியமானின் நட்பின் பெருமையே இக்கட்டுரையின் ஆய்வுப்பொருளாகிறது. 

பெண்மையைப் போற்றிய புரவலன்

     ‘பெண்களை ஆண்கள் எவ்வாறு மதிக்கவேண்டும்’  என்பதனை இன்று ‘பெண்ணிய’ இயக்கங்கள் பறைசாற்றுகின்றன. ஆனால், இவை அனைத்தையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச்சமூகம் இயல்பாகப் பின்பற்றியிருந்ததனை சங்க இலக்கியங்கள் நிறுவுகின்றன. நேர்முகமாகக் குறைகளையும் புறத்தே நிறைகளையும் எடுத்தியம்பும் பெண்ணை சங்க இலக்கியகாலத்தில் காணமுடிகிறது. கல்வி அறிவில் ஆணுக்கும் இணையாகவும் ; மேலாகவும் பெண்கள் இருந்ததனை ஔவையாரின் பாடல்வழி அறிந்துகொள்ளமுடிகிறது. பெண்ணைப் போற்றிய புரவலனாக அதியமான் நின்றதனை

     நரந்த நாறும் தன்கையால்

     புலவு நாறு மென்றலை தைவருமன்னே ( புறநானூறு-235 ; 8-9)

 

என்னும் அடிகளில் புலப்படுத்துகிறார். தாயின் தலையினை வருடிவிடும் மகனைப் போல் புலவரிடம் தலையாயநட்பு கொண்டவனாக அதியமான் விளங்குவதனை இவ்வடிகள் உணர்த்தி நிற்கின்றன. புலால் நாற்றம் வீசும் தலையாயினும் வருடும் அன்பின்வழி, நட்பின் அருமையினை இப்பாடலடிகள் படம்பிடித்துக்காட்டுகிறன.

கள்ளைப் பகிர்ந்த நட்பு

     ‘கள்’ நொதிப்பதால் மட்டுமே மயக்கத்தை ஏற்படுத்தும். புளிக்காத கள் வெப்பத்தை நீக்கும் ; வாய்ப்புண், குடல்புண் நீக்கும். அத்தகைய கள்ளினை (இன்று ‘பதநீர்’) குடித்தல் மக்கள் வழக்கமாகவே இருந்தது. அத்தகைய கள்ளினைக் குடிக்கும்போதும் அதியமானும் ஔவையும் புரவலன் புலவன் என்னும் உயர்வுதாழ்வின்றி தனக்கு நிகராக அமர்த்திய நிலையினை

பெரிய கட் பெறினே

யாம் பாடத்தான் மகிழ்ந்துண்ணு மன்னே  ( புறநானூறு-235 ; 8-9)

 

என்னும் அடிகளில் புலப்படுத்துகிறார்.  ‘கள்’ மயக்கம் ஏற்படுத்துவதாயிற்றே அதனை உயர்ந்தோர் குடிப்பரோ? என்னும் அச்சம் இங்கு ஏற்படுதல் இயற்கை. திராட்சைசாறினைக் குடிப்பவரை ‘மது அருந்தினார்’ எனில், பார்ப்பவரும் கூட நிறத்தைக் கொண்டு நம்புவர். அவ்வாறு ஒவ்வொருவருடைய உணர்வுக்கேற்ப அதனைப் பெருமையாக எண்ணுவதும் சிறுமையாக எண்ணுவதும் இயல்பு. மதுவானது, கள்ளினை விட பத்து மடங்கு மயக்கத்தினை உண்டாக்குவது ; உயிரைப்போக்கும் தன்மையது. மயக்கம் தரும் கள்ளினையே கொண்டாரெனினும் அதியமான் ஔவையாரைப் பாடல்கேட்டு மகிழ்ந்த நிலையினைக் காணமுடிகிறது. இதன்வழி, இன்றைய பெண்ணுரிமை கொள்கைகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்துள்ளதனையும் காணமுடிகிறது.

இனி இது கழிந்தது

     மனிதன் இறக்கும்பொழுது, அவனுடைய பண்புநலன்களும் அழிந்துவிடுகின்றன. அதியமானின் நட்பும் கொடையும் அவனுடனே அழிந்துவிட்டதனை

அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ

இரப்போர் கையுளும் போகி

புரப்போர் புன்கண் பாவை சோர

அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்

சென்று வீழ்ந்தன்று, அவன்

அருநிறத்து இயங்கிய வேலே (புறநானூறு-235 ; 10-15)

 

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. இவ்வடிகளில் ஔவையாரின் உயர் நட்புத்திறம் புலப்படுகிறது. பகைவர் எறிந்த வேலானது,  என்னை நட்பில் வென்ற அதியமானின் நெஞ்சினைத் துளைக்கவில்லை, பாணர்களின் உண்கலத்தை ; இரந்துண்டு வாழ்வோரின் கைகளை ;  மக்களைப் பாதுகாக்கும் கருணையுடையோர் கண்களை ; புலமையுடையோர் நாவினைத் துளைத்துவிட்டது எனப் பாடியுள்ளதன் வழி அதியமானிடம் கொண்ட நட்பு புலப்படுகிறது.

கையறு நிலையில் நட்பு

உறவின் பெருமையினைப் பிரிவில் அறியமுடியும் என்பதனை ஔவையாரின் இக்கையறுநிலைப்பாடல் உணர்த்துகிறது. அதியமானிடம் கொண்ட நட்பின் திறத்தை தந்தையின் அன்போடு புலப்படுத்துவதனை

ஆசாகு எந்தை யாண்டுளன் கொல்லோ (புறநானூறு-235 ; 16)

என்னும் அடிகள் உணர்த்துகின்றன. அதியமான் வாழும்பொழுது இடித்துரைத்த ஔவையார், இக்கையறுநிலைப் பாடலில் அதியமானின் நற்குணங்களை நிரல்படுத்துவதனைக் காணமுடிகிறது.  

நிறைவாக

     தமிழ் மன்னர்களின் பெருமையினை அறிவதற்கு இலக்கியங்களே ஆவணங்களாகின்றன. அவ்வகையில் அதியமானிடம் கொண்ட நட்புத்திறத்தை ஔவையாரின் இப்பாடல் தெளிவுறுத்துகிறது.

     பெண்மைக்குரிய சிறப்பினைப் போற்றுவதில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் சிறப்புற்று விளங்கினர். இதற்கு எடுத்துக்காட்டாகவே அதியமானிடம் கொண்ட ஔவையாரின் நட்பு விளங்குவதனை இப்பாடல் உணர்த்துகிறது.

     ‘இலக்கியங்கள் மக்களின் இலக்கினை ; பண்பு நலன்களைப் போற்றுவதாக அமைகின்றன’ என்னும் கூற்றுக்கு தமிழ்மூதாட்டியின் இப்பாடல் சான்றாவதனை உணர்ந்துகொள்ளமுடிகிறது.

*************