தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 18 மே, 2021

தமிழில் பெயர் வைப்போம் – Keep Name in Tamil

 

 


இருகால் மலர்கள்

     தமிழில் பெயரிட்டால் தமிழ்ப்பண்போடு குழந்தைகள் வளரும். அப்பெயரில்மீண்டும் மீண்டும் அழைக்க அழைக்க அப்பண்பு எளிதில் வாய்க்கும் என்பது நம்பிக்கை. உலக நாடுகள் அனைத்தும் தம் தாய்மொழியிலேயே பெயரிடும்போது, தமிழர்கள் பிறமொழியில் பெயரிடலாமா? அப்படியே பெரியோர்கள் சொல்வதைக் கேட்டாலும் அப்பெயர்கள் இக்காலத்திற்கேற்றபடி புதிதாக இல்லை ; சிறியதாக இல்லை எனக்கூறுவோரும் உண்டுதானே? திரைப்படங்களும் விளம்பரங்களும்தான் பெயரழகை கிண்டல்செய்து கெடுத்துவிட்டது. விளம்பரங்களில் தமிழர்பெயரைக்கேட்பது குதிரைக்கொம்பு. பெயர்களால், குழந்தைகளால் மதிப்பு உண்டாகவேண்டும் என நீங்கள் நினைப்பதைவிட, பெயர்களுக்கு குழந்தைகளால் மதிப்பு உண்டாக்கவேண்டும் என நினையுங்கள். நல்ல பெயர்களே உங்கள் குழந்தையை புகழின் உச்சத்திற்குக்கொண்டுசெல்லும். வருங்காலத்தில் உங்கள் குழந்தையின் பெயரை உலகம் உச்சரிக்கும். ‘பிச்சை’ என்று பெயர் வைத்த ‘சுந்தரம் பிச்சை’ கோடிக்கணக்கில் கொடை (தானம்) அளிக்கிறார்.  அவருடைய பெற்றோர் அக்குழந்தையை இறைவன் இட்ட பிச்சையாகத்தானே கருதியிருக்கவேண்டும். இன்று உலகமே கொண்டாடும் தமிழனாக ; உலகத்தையே ஆளும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருப்பது நமக்கெல்லாம் பெருமைதானே! நீண்ட பெயர்களை குலப்பெயரோடு சேர்த்துவைக்கும் பெருமையுடையவர்கள் அவர்கள் பணியைத் தொடர்க.

விமானத்தில் செல்ல சுருக்கமான பெயர்கள் தேவை. என்ன பெயர் வைக்கலாம் ? சுருக்கமா ஓரிரு எழுத்தில் தமிழில் பெயர் இருக்கா ? என என் நண்பர் கேட்டார். தமிழில் இல்லாத பொருள் இல்லை அல்லவா? அவர்போன்ற பலருக்காக சில பெயர்கள் கீழே:

அ – அன்பு, அரசு, அழகு, அணி, அறிவு, அரி

ஆ – ஆடல், ஆதி, ஆண்டாள், ஆரூரன், ஆரூரி

இ – இனி (யான்), இனியாள், இன்னிசை, இரும்பொறை, இசை, இன்பா, இறைவி,

ஈ – ஈகையான், ஈரா, ஈஸ்வரன், ஈடாகான், ஈசா,

உ – உமை, உமா, உரன், உலகன், உவகை(கா), உலகநாயகி

ஊ – ஊரா, ஊரி, ஊக்கி, ஊக்கன், ஊடி

எ – எழிலி, எழிலன், எம்பி, எவ்வி, எல்லி.

ஏ – ஏகன், ஏகி, ஏகாம்பரன், ஏடன், ஏரன், ஏரா

ஐ – ஐயன், ஐயள். ஐயர் (தலைவர்), ஐயா, ஐமுகன்

ஒ – ஒப்பிலி, ஒளியா(ள்), ஒளிஇறை, ஒற்றி(ஊரன்), ஒயில்

ஓ – ஓமி, ஓவியா, ஓவி, ஓரி, ஓசைநாயகி

ஔ – ஔவை, ஔடதா

க – கலை, காசி, கிருத்திகா, கீதை, குளிர், கூர்பிறை, கெடிலா, கேசவா, கைலாசம், கொற்றா, கோ, கௌரி

ச – சரண், சாரா(ல்), சிலம்பு, சீரா, சுகி, சூடன், செங்கோ, சேரா, சைலா, சொல்லா(ள்), சோமா, சௌரா.

த – தருண், தாரிணி, திரு, தீக்கா(கை), துணா, தூரா, தென்னி, தேனீ, தை, தொடி, தோடி, தௌரி

ப – பரன், பாரி, பிரான், பீடு, புரன், பூவை, பெருந்தேவி, பேரழகி, பைரா(வன்), பொன், போகி, பௌன்,

ம – மறன், மாரி, மின்னி, மீரா, முகில், மூரி, மெல்லியள், மேலான், மைனா, மொட்டு, மோடி (சக்தி), மௌலி (முடி)

வ – வசி, வாரி, விண்ணி, வீரி, வெண்ணிலா, வேம்பு, வைகா(கை),

பெயர் வைத்தால் அணிகலனும் சூடவேண்டும்தானே? என்ன அணிகலன் எனக் கேட்கிறீர்களா? தமிழ்க்குழந்தையாயிற்றே தமிழன்னைக்குச் சூட்டிய அனைத்தையும் சூட்டுங்கள். அழகுக்கு அழகு சேர்ப்பதும் தமிழர் கலைதானே. தமிழன்னைக்கு என்ன சூட்டினார் எனக் கேட்கிறீர்களா? இதோ, சுத்தானந்த பாரதியின் பாடல்.

 

காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணைமார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப் போதொளிரும் திருவடியும் பொன்முடி சூளாமணியும் பொலியச்சூடி 
 நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்குதமிழ் நீடு வாழ்க.

 

“தமிழில் பெயர் வைப்போம் ! தமிழில் கையொப்பமிடுவோம்”

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக