தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வெள்ளி, 28 மே, 2021

திருக்குறளில் வாய்மை என்னும் பொய்யாவிளக்கு

 


அக இருள் நீக்கும் வாய்மை விளக்கு 

வாய்மை சுடும். அதனால்தான் அதனைப் பேசப் பெரும்பாலோனோர் தயங்குகின்றனர். உண்மை பேசத்தெரிந்தவர்களைவிட பொய் பேசத்தெரிந்தவர்கள் திறமைசாலிகள்தான். ஏனென்றால் யார் யாரிடம் என்னென்ன பொய் பேசிஇருக்கிறோம்? என்னும் நினைவுடன் இருத்தல்வேண்டும். திறமையான பொய்யாளர் நினைவாற்றலில் சிறந்தவர் என்பதில் ஐயமில்லைதானே. அப்படித் திறமையாகப்  பேசத்தெரிந்தவர்களையே சில நிறுவனங்கள் தேர்வு செய்கின்றன. திறமையாகப் பேசத்தெரிந்தால்போதும் அவர்களுக்குப் “பொய்களை எவ்வாறு பேசவேண்டும்?” என்னும் பயிற்சி கொடுத்துத் தேற்றிவிடுவர். அப்பாவி மக்கள்தான் இப்படிப்பட்ட கயவர்களிடம் சிக்கிக்கொண்டு பொருளையும் செல்வாக்கையும் இழக்கின்றனர். ஏமாற்றப்பட்டதை வெளியே சொல்லவும் தயங்குவர். அது மக்களுக்கு மானப்பிரச்சினைதானே?

“அகத்தின் அழகு முகத்தில் தெரிவதில்லை” என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் பொய்யர்கள் “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” என்னும் உண்மையினை அறியாமல் வாழ்கின்றனர். இளமையில் பணத்திற்கு ஆசைப்பட்டு பொய்சொல்லிப் பழகுபவன் வாழ்நாள் முழுதும் பொய் சொல்லியே இழிவாகச் சாகிறான். பொய்யனாக வாழ்பவனைப் பொய்யாகவே சமூகம் மதிப்பதை அவன் அறிவதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக பெரிய பெரிய பொய்களைச் சொல்லி நிறுவனத்தின் வயிற்றையும் தங்கள் வயிற்றினையும் வளர்ப்பவர்கள் உண்டு. வெயிலைப் பாராது பாலம் கட்டும் தொழிலாளர்களின் ஐந்து நிமிட உழைப்பையாவது அவர்கள் பார்க்கவேண்டும். “உழைத்து உண்மையாக வாழவேண்டும்” என்னும் மன உறுதியின் அருமையினை அவர்களிடம் கற்றுக்கொள்ளமுடியும்.

பொய்களைப்பேசி வாழும் பெண்கள், ஐந்து வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்யும் பாட்டியைப் பார்க்கவேண்டும். “வாழும்வரை நேர்மையாக உழைக்கவேண்டும்” என எண்ணும் அந்தப்பாட்டியின் பெருமையினை அறியவேண்டும். பிச்சை எடுக்காமல் உழைத்து உண்மையாகவாழும் பாட்டியை வணங்கத்தானே வேண்டும்? ஏதோ ஒரு நிறுவனத்துக்காக பொய்களைப்பேசி மயக்குவது மக்களுக்கு எத்தனைத் துன்பம்தரும். கிடைக்கும் ஊதியத்துக்காக எத்தனைப் பொய்களைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். பொய்களுக்கேற்ப ஊதியம் அளிக்கும் நிறுவனங்களால் மூளை பொய்சுரபிகளாக மாறிவருவது ஆபத்துதானே?

பொய்பேசாமல் எப்படி வாழமுடியும்? எனக் கேட்பது வழக்கமாகவே மாறிவிட்டது. “பொய்சொன்னால் வாய்க்குச் சூடுபோடுவேன்” எனக்கண்டித்த தாய்மார்கள் காணாமல் போய்விட்டார்கள். குழந்தைகள் தேர்வுக்குப் படித்ததைக் கூடச் சொல்லக்கூடாது எனக் கற்றுக்கொடுத்துவிடுகிறார்கள். ‘கண்ணடி பட்டுவிடும்’ என்பதனால் அவ்வாறு சொல்லிக்கொடுக்கிறார்கள். அவ்வாறே ‘யாருக்கும் கொடுக்காமல் சாப்பிட்டுவிடவேண்டும்’ எனச் சொல்வதும் உண்டு? இது குழந்தையிடம் கொண்ட அக்கறைதான் என்றாலும் குழந்தையின் சமூக மதிப்பு குறைவதற்கும் அவர்களே காரணமாகிவிடுகிறார்கள்.  பின்னாளில் தாயை காக்கும் அறத்தையும் மறந்து முதியோர் இல்லத்துக்கு அனுப்பிவிடுகின்றனர். விதை ஒன்று விதைக்க  வேறொன்றா விளையும்.?

இப்போது, “வாய்மை சுட்டுவிடுமோ” என்னும் அச்சத்தால் பொய்பேசும் இளைஞர்களை ; குழந்தைகளை ; தாய்மார்களை, பார்த்தோம்தானே? வாய்மைபேசினால் வேலை கிடைக்காது. வாய்மைபேசினால் தன்னலம் பாதிக்கும். என்னும் எண்ணங்கள் பரவிவிட்டது. யாரும் யாரையும் நம்புவதில்லை. எந்திரம் கொடுக்கும் சீட்டுகளையும், பத்திரங்களையுமே நம்பும் நிலைக்கு வந்துவிட்டோம்தானே? எந்தப்பெற்றோராவது பிள்ளைகள் நம்மைக் காப்பாற்றுவார்கள் என்னும் நம்பிக்கையுடன் வாழ்கிறார்களா? அதற்கு மாறாக, அவ்வாறு பிள்ளைகளை எதிர்பார்த்து வாழ்வது தவறு எனக் கற்பித்துவருகின்றனர். குழந்தைகளைப் பெற்றோர் நம்புவது தவறா? “வயதான பெற்றோர்கள் ஏமாற்றம் அடையக்கூடாது” என்னும் எண்ணத்தில் இக்கூற்று பரவியிருந்தால் நன்றே.  

மின்சாரத்தில் எரியும் பல விளக்குகளுக்கிடையே ஒரு அகல் விளக்கு ஏற்றப்படுகிறது. மின் துண்டிப்பு ஏற்பட்டவுடன் அகல் விளக்கு மட்டும்தானே எரியும். அப்படித்தான் பொய் விளக்குகள் ஏற்றப்பட்டுவிட்டதால் உண்மை விளக்கின் வெளிச்சம் தெரியாமலே போய்விட்டது. சமூகத்தின் நிலையும் அப்படித்தான் மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால், அறத்தின் அறையில் அவ்விளக்கு மட்டுமே எரியும். இதனையே தெய்வப்புலவர் திருவள்ளுவர்

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்

பொய்யா விளக்கே விளக்கு (திருக்குறள்:299)

என அறிவுறுத்துகிறார். புற இருளை நீக்கும் விளக்குகளைக் காட்டிலும் அக இருளை நீக்கும் விளக்குதானே உயர்ந்தது. வாய்மை என்னும் தீ மற்ற தீயைக் காட்டிலும் உயர்ந்ததுதானே.

     விடுதலைப் போராட்டத்தின்போது, ஆங்கிலேயர்கள் ‘கப்பலோட்டிய தமிழர்’ வ.உசி. மற்றும் ‘வீர முரசு’ சுப்பிரமணிய சிவாவையும் தெரியுமா? எனக்கேட்டால் “தெரியவே தெரியாது” என அனைவரும் உயிருக்கு அஞ்சி பொய் கூறினர். அவர்களிடையே “சூரியனையும் சந்திரனையும் பார்த்து தெரியுமா? எனக் கேட்கிறீர்” எனத் துணிவுடன் வாய்மையைப்  பேசிய மகாகவியின் சொற்கள் “தசையினைத் தீச்சுடினும் சிவசக்தியைப் பாடும் நல் அகம் தானே.

 

 

 

 

               

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக