தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 31 ஜூலை, 2021

விடுதலையைப் போற்றலாம் வாருங்கள்

 


விடுதலையைப் போற்றலாம் வாருங்கள்

     வீட்டில் இருக்கும்போது, விடுதலை உணர்வுடன் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறோம். நாம் விரும்பும் ஆடை, நாம் விரும்பும் பணி, நாம் விரும்பும் பேச்சு என அத்தனை வாய்ப்புகளையும் மொத்தமாய்க் கொடுப்பது வீடுதானே. அதனால்தானே வீட்டிற்குள் எப்போது நுழைவோம் என ஏங்கியிருப்போம். ஆனால், இன்று வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என அடைத்துவிட்டால், எப்போது வெளியே சுதந்திரமாக நடக்கமுடியும் என்றுதானே மனம் அலைகிறது.  அனைத்துமே விடுதலை உணர்வுதானே?

     சுதந்திரமான நாட்டில் இருக்கும் நமக்கே விடுதலையாக வாழ்வதில் எத்தனை விருப்பம் இருக்கின்றதெனில் அடிமைப்பட்டுக்கிடந்த இந்தியாவின் நிலையினை எண்ணிப்பாருங்கள். தன்னை மதிக்கவில்லை என்பதற்காகவே ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றான் ஜெனரல் டயர். பதவியைக் கூறினால்தான் உங்களுக்குப் புரியும் என்பதால் அப்படிக்குறிப்பிட்டேன். பொறுத்தருள்க !. கொடுங்கோலன் டயர் என்றே குறிப்பிட்டிருக்கவேண்டும். ஆனால் சொல்லிக்கொடுக்கப்பட்ட வரலாறுகள் எல்லாம் உயிர்களை வேட்டையாடிய கொடுங்கோலர்களை, ஜெனரல், துரை, கவர்னர் என உயர்வான பெயர்களால் குறிப்பிட்டுள்ளன. இது வரலாற்றுப்பிழைதானே. இல்லையென்கிறீர்களா? இதோ அவர்கள் நிகழ்த்திய ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி கூறுகிறேன். ஒத்துக்கொள்வீர்கள்.

     பஞ்சாப் மக்களின் சமூகவிழாவான பைசாகி விழா 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் பதிமூன்றாம் நாள் கொண்டாடப்பட்டது. மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டிருந்தனர்.  எத்தகைய முன்னறிவிப்புமின்றி ஜெனரல் டயர் துப்பாக்கிச்சூட்டை நடத்தினான். பெண்கள், குழந்தைகள் என ஈவு இரக்கமின்றி ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டோரைக் கொன்றுகுவித்தான் கொடுங்கோலன். மக்கள் அங்கும் இங்கும் ஓடுவதைக்கண்டு மகிழ்ந்த கயவனை, ஒருவரும் எதுவும் கேட்கமுடியவில்லை. ஆனால், அவனை அனுப்பிய ஆங்கிலஅரசு கேட்டது. “என்பேச்சை கேட்காததால் சுட்டேன்” என ஆணவமாக விடைகூறினான். என்னிடம் இருந்த தோட்டாக்கள் முழுவதையும் சுட்டுவிட்டேன். இன்னும் இருந்திருந்தால் இன்னும் நிறைய இந்தியர்களைக் கொன்றிருப்பேன்” என்றான்.  டயரின் ஆணவப் பேச்சினைக் கேட்ட ஆங்கிலேய அரசு உடனே அவனுக்குப் பதவி உயர்வு வழங்கியது.

பெற்றோருடன் வாழ்ந்தவர்கள் எல்லோரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆதரவற்ற உத்தம்சிங் என்னும் இளைஞன் இந்தியர்களைக் கொன்ற டயரினைக் கொல்லவேண்டும் என முடிவுசெய்கிறார். இருபது ஆண்டுகள் அதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். 1940 ஆம் ஆண்டு மார்ச் பதிமூன்றாம் நாள் இலண்டனில் ஒரு விழாவில் சிறப்புப்பேச்சாளராகப் பங்கேற்கிறார். அவ்விழாவிற்கு உத்தம்சிங் ஒரு புத்தகத்தோடு செல்கிறார். புத்தகத்தின் நடுவே பக்கங்களுக்கு மாற்றாகத் துப்பாக்கி இருக்கிறது. புத்தகம் மிகச்சிறந்த ஆயுதம் என்பதனை உணர்த்தினார். “வறுமையில் நின்றவர்க்கு எப்படி துப்பாக்கி கிடைத்தது?” என்றுதானே கேட்கிறீர். அவர் கப்பலில் பயணம் செய்யும்போது பாத்திரங்கள் கழுவினார். பெற்ற சம்பளத்தில் துப்பாக்கி வாங்குகிறார். இருபது வருட தவம் ; இந்தியத்தாயிடம் கொண்ட பற்று ; இந்திய மக்களிடம் கொண்டபற்று தன்னலத்தை மறக்கச் செய்தது.  தன்னலமே நாட்டு நலம் என மாறியது. கனவு நினைவானது.

பெயருக்கேற்றார்போல் வாழ்ந்துகாட்டினார். உத்தமர் என்பவர் பிறர்வாழ தன்னைக்கொடுப்பவர்தானே. ‘உத்தம் சிங்’ என்னும் பெயர் பின்னாளில் வைக்கப்பட்டது அதுவும் பொருத்தமாயிற்று. அவருடைய இயற்பெயர் ஷேர்சிங். ஷேர் என்றால் சிங்கம். அதுவும் பொருத்தம்தானே. அவருடைய செயலை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மிகவும் பாராட்டினார். இலண்டன் நாளிதழான “டைம்ஸ் ஆஃப் லண்டன்” உத்தம் சிங் சுதந்திரப் போராட்ட வீரர். ஒடுக்கப்பட்ட இந்தியரின் உணர்ச்சி வெளிப்பாடு எனப் பாராட்டியது.

ஷேர்சிங் சுட்டுவிட்டு ஓடவில்லை. பெயருக்கேற்றார் போல் சிங்கம் போலவே நின்றார்.  ரோம் நகர் இதனை ‘தீரச்செயல்’ எனப் பாராட்டியது. ஜெர்மனி வானொலி இந்தியர்கள் யானையைப்போன்று மறக்காமல் பழிவாங்கும் திறமுடையவர்கள். உத்தம்சிங் இருபது ஆண்டுகள் கழித்துப் பழிதீர்த்துக்கொண்டார் எனப் பாராட்டியது. ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்கு ஒரு மிகப்பெரிய ஊக்கச்செயலாகவே உத்தம்சிங்கின் செயல்பாடு அமைந்தது.

முத்தாய்ப்பாக ஒன்று சொல்லவேண்டுமானால், உத்தம்சிங்கின் சொல்லைத்தான் சொல்லவேண்டும். “என் தாய்நாட்டிற்காக உயிரைவிடுவதைவிட வேறுபெருமை என்ன இருக்கிறது” என எழுதிச்சென்றிருக்கிறார். அதுமட்டுமன்று, தான் தூக்கிலிடப்படுவதை முன்னரே அறிந்த உத்தம்சிங், சாவினைக் கண்டு அஞ்சவில்லை. “என்னை நீங்கள் தூக்கிலிட்ட பிறகு எனது உடலை லண்டனிலேயே புதையுங்கள். எங்கள் மண்ணை நீங்கள் பிடித்துக்கொண்டீர். உங்கள் மண்ணின் ஆறடி மண்ணை நான் ஆள்வேன்” என்றார். பொன்னேடுகளில் பொறிக்கவேண்டிய சொற்களைத் தன் கடைசி ஆசையாகக் கூறினார் உத்தம்சிங்.

தாய்நாட்டில் விளையும் பொருட்களை உண்டு உடல்வளர்க்கும் ஒவ்வொருவரும் தாய்நாட்டிடம்பற்றுகொண்டுதானே வாழவேண்டும். நுனிக்கிளையில் அமர்ந்துகொண்டு வெட்டினால் விழுவது யார்?. “பத்துமாதம் தன் வயிற்றில் சுமந்த தாயைக் காப்பாற்றாவிட்டால், மகனுடைய மகளுடைய சம்பளத்தைப் பிடித்தம்செய்து நேரடியாக பெற்றோருக்கு அனுப்பிவிடுவோம்” எனச் சில மாநிலங்களில் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அவ்வாறே தாய்நாட்டைப் பழிப்போருக்கும் உரிய தண்டனை வழங்கவேண்டும். தண்டனை அவர்களை வருத்துவதற்கன்று ; திருத்துவதற்கே. நன்றியுணர்வின் அருமையினைச் சொல்லிக்கொடுக்காததால் வந்தவிளைவு அது

ஒரு பேருந்தில்  எண்பது பேர் பயணம் செய்கிறார்கள். எட்டு குண்டர்கள் நடுவழியில் பேருந்தை மறித்து கொள்ளை அடிக்கிறார்கள். எட்டுபேரை எண்பதுபேரால் ஒன்றும் செய்யமுடியாது. ஆயுதம் இருக்கிறது என்ன செய்வது? எனக் கூறாதீர்கள். ஆயுதம் இல்லாவிட்டாலும் ஒன்றுபட்டுவிட்டால் ஒழிந்துபோய்விடுவார்கள் எதிரிகள். நாம் செய்கின்ற தவறினைப் புரிந்துகொள்ள நான் படித்த ஒரு கதையைச் சொல்லட்டுமா?

     ஒரு விடுதியில் பல நாட்கள் உப்புமா தான் சிற்றுண்டி. நூறு பேரில் எண்பது பேர்  எதிர்த்தனர். காப்பாளர் ஓட்டெடுப்பு நிகழ்த்தினார். பெருவாக்குப்படியே சிற்றுண்டி என்றார். மீண்டும் உப்புமாவே தேர்வாகிறது. “எப்படி?” என்றுதானே கேட்கிறீர். உப்புமா விரும்பிகளின் ஓட்டு இருபதும் சரியாக விழுந்தது. மற்ற எண்பதுபேர்  இட்லி – 19, தோசை -19, பூரி -19, பரோட்டோ-19, சப்பாத்தி -4 என விழுந்தது. இப்படி விழுந்தால் காப்பாளர் என்ன செய்வார்? ஒன்றுபடுவோம். நாட்டைக்காப்போம்.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக