தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வியாழன், 1 ஜூலை, 2021

கதாநாயகன் யார்? – திருக்குறள் சொல்லும் ‘வீரம்

 


 

கதாநாயகன் யார்? – திருக்குறள் சொல்லும் ‘வீரம்

     ஊடக நண்பர் ஒரு ஆளுமையைப்  பேட்டி காண்கிறார். “உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார்?”.” … என்ன? “கேள்வியை மீண்டும் கேட்கிறார். “உங்களுக்குப் பிடித்த நடிகர்…” எனக் கேட்கிறார் பேட்டி காண்பவர். அக்கேள்விக்குக் கூறிய விடை இன்றைய இளைஞர்களுக்கு ஓர் அருமையான பாடம். “மக்களைக் காக்கப் போராடும் முப்படை வீரர்களும், காவலர்களும் தான் கதாநாயகர்கள். அவ்வேடத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகர்கள் மட்டுமே. அவர்கள் கதாநாயகர்கள் அன்று.  ஏழ்மையான நிலையிலிருந்து குழந்தைகளைப் படிக்கவைக்கும் பெற்றோர்கள்தான் கதாநாயகர்கள் என்றார்.

“நடிப்பவர்களை எல்லாம் கதாநாயகர்களாக எண்ணுவதால்தான் குழந்தைகள் மது குடித்து, புகை பிடித்து, ஆசிரியர்களிடம் மதிப்பின்றி, தாய்தந்தையை எதிர்த்துப் பேசி நாளும் கெடுகின்றனர்” என்பதனை உணர்த்தும் அவருடைய அறிவுரையை எத்தனைத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நடிகர்களின் நடிப்பினைப் பாராட்டுவதோடு நின்றுவிடவேண்டும். நடிகர்கள் எப்படி நடித்துமுடித்தவுடன் இயல்பான மனிதர்களைப்போல் நடந்துகொள்கிறார்களோ அவ்வாறே மக்களும் நடிப்பினை நடிப்பாக மட்டுமே கொள்ளவேண்டும். நடிகர்களை கிள்ளிப்பார்ப்பது, தொட்டுப்பார்ப்பது நடிகர்களுக்கு எரிச்சலைத்தான் ஊட்டும் என்பதனை உணர்தல்வேண்டும்.

வாழ்க்கையின் வழிகாட்டியாக, தேசத்திற்காகப் போராடும் வீர்ர்ர்களை ; தேசத்தின் புகழைக்காக்கும் வீரர்களைக் கொண்டாடவேண்டும். இருபத்தோரு வயதில் எல்லையில் எதிர்களைப் பந்தாடும் வீர்ர்களின் உண்மையான வீர்த்தைக் கொண்டாடவேண்டும். ஒரு இந்திய இராணுவ வீர்ர் எதிரே நின்ற முந்நூறு பகைவர்களை வீழ்த்திய பெருமையினைக் கொண்டாடவேண்டும். உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த ஆங்கிலேயனின் கடுங்காவல் உள்ள கோட்டையிலேயே நுழைந்து, ஆங்கிலக்கொடியை இறக்கி இந்தியக்கொடியை ஏற்றிய வீரரைக் கொண்டாட வேண்டும். பொய்களை விட்டுவிட்டு உண்மையைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால்தான் நாட்டுப்பற்றை ஊட்டிவிடமுடியும்.  

விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்

ஒட்டுஅன்றோ வன்கண் அவர்க்கு (திருக்குறள் – 775)

 

என்னும் திருக்குறள் போர்க்களத்தை எதிர்கொண்ட தமிழரின் வீரத்தைப் படம்பிடித்துக்காட்டுகிறது.  எதிரி எறியும் வேலினைக் கண்டு கண்களை இமைக்காது எதிர்கொள்வான். அப்படி இமைப்பானாயின் அதனைத் தோல்வி எனக் கருதுவான். இதுவன்றோ வீரம். இவர்களைத்தானே நாயகர்களாகக் கொண்டாடவேண்டும். அப்படி எண்ணற்றோர் வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

விளையாட்டுக் களத்தைப் போர்க்களம் போலும், போர்க்களத்தை விளையாட்டுக்களம்போலும் தொலைக்காட்சியில் பார்க்கும் நிலையினைக் காணமுடிகிறது. அப்படியெனில் விளையாட்டினை உயிர்ப்போராட்டம் போன்றும், மக்களைக்காக்கும் உயிர்ப்போராட்டம் விளையாட்டு போன்றும் காணும் அறியாமையைக் கற்றுக்கொடுத்தது யார் என்பதனை எண்ணிப்பார்க்கவேண்டும்.  சமூகக் காவலர்களின் குற்றமா? அந்தச் சமூகத்தில் காவலராக தன்னை எண்ணாத மக்களின் குற்றமா?

உண்மையாக நடக்கும் வாழ்க்கையை உணராமல், திரைப்படங்களின் காதல்கதையை உண்மை என நம்பும் இளையோரை என்னென்பது? பெற்றோரை அழவைத்துவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்யக் கற்றுக்கொடுக்கும் திரைப்படங்கள் பல. காதலுக்குப்பின் என்ன நடக்கும்? எனக்கூறும் துணிவுடைய படங்கள் எடுப்பது கடினம். திருமணம் செய்துகொள்ள முடியாத சகோதர சகோதரிகள் ; நடைபிணமாய் தாய் ; தலைநிமிர்ந்து நடக்கமுடியாத தந்தை என எத்தனையோ சோகங்கள். காவல் நிலையங்களில் இக்காட்சியைக் அன்றாடம் காணமுடிகிறது. அவர்களுடைய துன்பத்தைத் துடைப்பது யார் பொறுப்பு? காவலர்களும் பெற்றோர்போல் அறிவுறுத்திக்கொண்டுதான இருக்கின்றனர். அவர்களும் கதாநாயகர்கள்தான்.

 மக்களைப் பாதுகாக்கும் வீர்ர்களை மட்டும்தான் கொண்டாடவேண்டுமா? என்றுதானே கேட்கிறீர்கள். நாட்டிற்குப் பெருமை சேர்ப்போர்; வீட்டின் வறுமையினைப் போக்குவோர் என எவரையும் வாழ்க்கை வழிகாட்டிகளாகக் கொள்ளலாம். ஏன் பிற உயிர்களிடமும் இரக்கம்கொண்டு காக்கும் உண்மையான மனிதர்களையும் வாழ்க்கை வழிகாட்டியாகக் கொள்ளலாம்தானே? ஒரு கதையைக் கூறினால் நீங்களே ஒத்துக்கொள்வீர்.  

ஆற்றுப்பாலத்திலிருந்து தவறிவிழுந்த ஒரு நாய்  ஆற்றில் சிக்கிக்கொள்கிறது. வேகமான நீரோட்டம். மேலும் நடந்தால் இழுத்துக்கொண்டு பள்ளத்தில் வீழநேரும் என உணர்ந்து ஒரே இடத்தில் நிற்கிறது. ஆற்றுப்பாலத்திலிருந்து மேலிருந்து நால்வர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவர் இவர்கள் வேடிக்கைப்பார்ப்பதைப் பார்த்தார். நாய் மரணவாயிலில் நிற்பதைப் புரிந்துகொண்டார். கீழே கவனமாக இறங்குகிறார் ஆற்றின் சரிவான பக்கவாட்டில் மெதுவாக இறங்குகிறார். வேகமான நீரோட்டம் குறித்து கவலைப்படவில்லை. மெதுவாக நாய்க்கருகே சென்று அதனை இருகைகளாலும் பிடித்துக்கொண்டு வருகிறார். நாயாலும் சரிவில் ஏறமுடியவில்லை. அவராலும் ஏற்றமுடியவில்லை. வேடிக்கைப் பார்த்த நால்வரும் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்து கீழே   தவறிவிழுந்த நாயைப்பிடிக்க முயல்கின்றனர். முடியவில்லை. அந்தப்பக்கம் செல்லும் ஒருவர் இக்காட்சியைப் பார்த்து அவரும் கைகொடுக்கிறார். உடனே மற்றொருவரும் உதவ வருகிறார். இப்பொழுது  நாயைப் பற்றிக்கொண்டு கரைசேர்கிறார் அந்தக்கதாநாயகர். எல்லோர்க்கும் மகிழ்ச்சி. அன்பின் புன்னகை எல்லோருடைய முகத்திலும். அங்கிருந்தோர்க்கிடையே நட்போ, உறவோ இல்லை. ஒருவர்க்கு மற்றொருவரைத் தெரியாது. ஆனால், அன்பு அவர்களை ஒன்றிணைத்தது எத்தனை அழகு!. அடுத்து என்ன நடக்கும் என்ற எண்ணம் சிறிதுமின்றி நாயைக் காப்பாற்றிவிட வேண்டும் என எண்ணம் கொண்டவர் கதாநாயகர்தானே?

நாத்திகம் பேசுவதில் வல்லவரான நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா. அவரைப்போல் பிறரைக் கிண்டல்செய்ய எவராலும் இயலாது. யார் மேடை போட்டு பேச அழைத்தார்களோ அவர்களையே திட்டுவார்.  அதைத் தவறாக எண்ணமாட்டார்கள். உண்மைதானே பேசுகிறார் என ரசிப்பார்கள். அதுபோல “நடிகர்களை நம்பாதே. அவன் நல்லவன் மாதிரிபேசுவான். ஆனால் மக்கள் வரிப்பணத்தை ஒழுங்கா கட்டமாட்டான்” எனக்கூறுவார்.  ஒரு திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசனை கிண்டல் செய்தார்.  திரைப்படக்காட்சியானாலும் இருவரின் உள்ளத்தையும் படம்பிடித்துக்காட்டும் காட்சி.  நடிகவேள் கவியரசரிடம் கேட்பார் “ஏன்பா. உனக்கு கிருஷ்ணரைத் தவிர வேறுகடவுளே தெரியாதா? எனக் கேட்பார். உடனே, கவியரசர் “என் கண்ணுக்கு அவன் தான் எங்கும் காட்சி அளிக்கிறான் என்பார். “எங்க கண்ணுக்குத் தெரியலையே” என்பார் நடிகவேல்.  உடனே கவியரசர், ஞானக்கண்ணால் தான் பார்க்க முடியும் எனக் கூறிவிட்டு,

“இல்லை எனச் சொன்னவர்தான் இருந்தாரா? வாழ்ந்தாரா?

எனது தேவன் எல்லையில்தான் போய்ச்சேர்ந்தார்”

 

என்பார்.  “லட்டுகள் சண்டை போட்டால் பூந்தி கிடைக்கும்” எனச் சொல்வார்கள். அப்படி அந்தக் காட்சி அமைந்திருக்கும். நாத்திகம் எங்கும் பரவிநின்ற காலத்தில் ஆத்திகத்தைப் பேசிய கவியரசரும் ஒரு கதாநாயகர்தானே?

     எத்தனை துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது துணிவுடன் நிற்பவரே, ஊக்கம் உடையவர் என்கிறார் தெய்வப்புலவர். களிறானது, எத்தனை அம்புகள் தைத்தாலும் தம் பெருமையை நிலைநிறுத்தும் வீர்ர்க்களே வீர்ர்கள்.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்

பட்டுப் பாடூன்றும் களிறு (திருக்குறள் :597)

 

என்னும் திருக்குறளின்வழிவாழ்வோர் வழியில் செல்வோம்.

     இப்படி வாழ்க்கைக்குத் துணைநிற்கும் ; வாழ்க்கையை மேம்படுத்தும் பெருமையுடையவர்களை மட்டுமே நாயகர்களாகத் தமிழர் கொண்டாட வேண்டும். தெய்வப்புலவர் காட்டிய வீரம்தான் தமிழர் வீரம் என்பதனை உணர்ந்திடுவோம் ; உணர்த்திடுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக