தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 3 ஜூலை, 2021

வரவேற்புரை எப்படி? இதோ ஒரு எடுத்துக்காட்டு.

 


வரவேற்புரை எப்படி? இதோ ஒரு எடுத்துக்காட்டு.

     (03.07.2021 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் பணிநிறைவுபெற்ற ஆசிரியர், கவிஞர் இராசமாணிக்கனாரின் நூல் வெளியீட்டு விழாவிற்காக எழுதிய வரவேற்புரை)

எண்ணங்கள்  தளர்ந்த போதெல்லாம் வாழ்வில் வண்ணங்களைக்கூட்டும் அன்னைத்தமிழே! உன்னை வணங்கி விழாவைத் தொடங்குகிறோம்.

இவ்விழா ஒரு பிரசவவிழா. இது பெண் பிரசவம் அன்று . ஆண் பிரசவம். அதுவும் பணி நிறைவுக்குப்பின். பிரசவ வலி பெண்ணுக்கு மட்டுமன்று. ஆணுக்கும் உண்டு. கவிஞர்களைக் கேட்டுப்பாருங்கள்.  ஒரு நூல் விழும்போதெல்லாம் ஒரு புதிய  எண்ணம் விழவேண்டும். அதனால் சமூகம் எழ வேண்டும்.

புத்தகம்  திறந்திருப்பதைப் பாருங்கள். பறவையின் சிறகுகள் விரிந்திருப்பதுபோல் இருக்கும்.  அப்படி இரண்டு சிறகுகள் கொண்டு பறந்திருக்கிறார். இன்று நம் பார்வையில் உயர்ந்திருக்கிறார். நூலாசிரியர் இராச மாணிக்கனார்.

அவைதாம் –     1.வாக்குமூலம், 2. கனவுகள்

கனவுகள் – ஆழ்மனதின் பிரசவம், வாக்குமூலம் – ஒப்புதல், தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்புவித்தல்.  வாழ்க்கை வானமாகிவிடும்போது கவிஞன் பறவையாகிவிடுகிறான்.  எல்லா உண்மைகளும் தெரிகிறது. மலையின் முதல் படிக்கட்டில் நிற்பவனைவிட உச்சிக்குச்செல்பவனுக்குத்தானே காட்சி நன்றாகத் தெரியும்.’

இத்தகைய அருமையான நூல்வெளியீட்டுவிழாவிற்கு வந்திருக்கும் பெரியோர்களே , தமிழார்வலர்களே ! புலவர்களே ! இறையடியார்களே ! அனைவரையும் வரவேற்கிறோம்.

முன்னிலை – ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி தாயார்

“புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப் பண்ணி நம் சென்னிமேல் பத்மபாதம் பதித்திடவே.” என்னும் அபிராமிபட்டரின் பாடலுடன், ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மையாரையே முன்னிலையாகக் கொண்டு இக்கவிதை  நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.  அக்காலத்தில் இறைவன் முன்னிலையில் வெளியிட்ட தமிழர் மரபினைப் புதிப்பிப்பதாக இவ்விழாவை ஏற்பாடு செய்த விழாக்குழுவினரைப் பாராட்டி மகிழ்கிறேன்.   

நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னிலை வகிக்கும் எல்லாம் வல்ல தாயாரை வருக ! வருக !  என வரவேற்கின்றோம்

 

தலைமை – சக்திவேல் ஐயா

     மரத்தின் கிளைகளை, பூக்களை, கனிகளை ஒருவர் எடுக்கவந்தாலும் மரம் நிழல்கொடுத்து அவர்களைக் காப்பதுபோல வந்தவர்களை மதித்துப் போற்றும் நல்லவர்.

தலைமை பண்புக்குச் சிறந்தவர் ; தளர்ந்து செல்வோர்க்கு மருந்தவர்

அனைவரும் விரும்பும் பண்பாளர் ; நம் நூலாசிரியரின் அன்பாளர்.

தலைமைதாங்க வந்துள்ள சக்திவேல் ஐயா அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்

நூல் வெளியீடு - சட்டமன்ற உறுப்பினர்  

உலகமே கொரோனாவால் நோயுற்று வருந்தியவேளையில் அச்சம் நீக்கி காத்தவர் யார்? வைத்தியர்களுக்கெல்லாம் நாதனாகிய வைத்தியநாதன்தானே?

அப்படி, இந்த இலாசுப்பேட்டையின் மக்களுக்காகத் தமது கமலா அறக்கட்டளையின் வழி மக்களுக்கு உதவிகள் பல செய்தவர். இப்போதும் தெருத்தெருவாக தானியில் (ஆட்டோ) ஒலிப்பெருக்கிவழி ஊசிபோடவரும்படி அழைக்கிறார்.

தாயார் பெயரில் அறக்கட்டளை நிறுவி வேலைவாய்ப்பு, கல்வி, நலப்பணி எனத் தொடர்ந்துசெய்துவருகிறார்.

தாய்ப்பாசத்தில் இவர் எம்.ஜி.ஆர்

கொடைகுணத்தில் இவரை மிஞ்ச யார்?

மனத்தின் நிறத்தை ஆடையில் காணலாம்

குணத்தின் நிறத்தை மேடையில் காணலாம்.

நூல் வெளியிடவந்துள்ள சட்டமன்ற உறுப்பினரை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

நூல் பெற்று வாழ்த்துரை – வேல்முருகன் ஐயா

     உலகின் முதல்மொழி தமிழ்மொழி. இதனை உணர்த்த நாளும் பாடுபடுபவர். தம் இல்லத்தையே அருங்காட்சிக்கூடமாக்கித் தமிழ்க்காப்பவர்.

தமிழ்க்கடவுள் இல்லாமல் தமிழ் விழாவா?

வேல்முருகன் ஐயா இல்லாமல் கவிதை விழாவா?

சிறந்த ஆய்வாளர், பன்மொழி வித்தகர், கல்வெட்டு அறிஞர், தொல்லியல் பொருட்களைத் தொடர்ந்து சேகரித்து வருபவர். தமிழினத்தின் பெருமையை காத்து வருபவர்

நூலை பெற்றுக்கொள்ள வந்திருக்கும் சொல்லாய்வுச் செல்வர் வேல்முருகன் ஐயா அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : முனைவர் ஔவை.நிர்மலா

பார்புகழும் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்த்துறைத்தலைவர், நன்றாக சமைப்பார், ஆனாலும் கரண்டியைப் பிடித்து சமையலறையில் முடங்கிவிடக்கூடாதென, எழுதுகோல்பிடித்து பல்கலைக்கழகம் சென்றவர். முனைவர் பட்டம் வென்றவர். படைப்பாளராய் நின்றவர் (45 நூல்கள்).

பலமொழிகள் படித்தவர் ; பல நூல்கள் படைத்தவர் ; பேராசிரியராக உயர்ந்தவர் ; ஏழைகளுக்கு பொருளையும் நாளும் கொடுத்துமகிழ்பவர். இவர் தொண்டும் நி(ற்)க்காமல் இருக்க நிக்கி ஐயா (கணவர்) உடன் நிற்பார்.

நூலாசிரியரை வாழ்த்த வந்துள்ள தமிழ்த்துறைத்தலைவர் ஔவை நிர்மலா அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : மு.பாலசுப்பிரமணியம்

புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் ; பொதுப்பணியில் பொறியாளர்.

தமிழ்விழாக்கள் சிறந்திடவே தவறாது முன்னிற்பார்.

கண்ணுக்கு ஒளிகொடுக்கும் கண்ணாடியையும் மதித்திடுவார். மூக்குக்கு மேல் நிற்கும் கண்ணாடியைக்கூட தலைமேல் தூக்கிவிட்டு மகிழ்ந்திடுவார்.

எறும்புபோல் உழைத்திடுவார் ; கரும்புபோல் பழகிடுவார்

            கவிதை சிறந்தால் கரம் கொட்டி மகிழ்ந்திடுவார்

தவறென உணர்ந்தாலே கரம்கொட்டி அமர்த்திடுவார்

ஒரே செயலை இரண்டுக்கும் பயன்படுத்தும் நுட்பத்தை உணர்த்திடுவார். அதனால்தானே இவர் துணைத்தலைவர்.

வாழ்த்த வந்துள்ள பொறியாளர் மு. பா. ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை – இல. ஜெயராமன் ஐயா

சந்தனம் மென் குறடுதான் தேய்த்த காலத்தும் குறை படாது – சந்தனம் தேய்த்தாலும் வாசம் கொடுக்க மறுத்திடுமா? அதுபோல அனைவரிடமும் அன்புடன் பழகுபவர்.

இல்லை என்று சொல்லாததால் தான் இவர் இல. ஜெயராமன்

அன்பாலே நூலாசிரியரின் மனத்தை வென்றார்.

நட்பென்னும் முறையில் துணையாக நின்றவர்.

தம் உழைப்பாலே பகைவர்களை வென்றவர்.

வாழ்த்த வந்துள்ள இல. ஜெயராமன் ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : மாசிலாமணி ஐயா

சிறப்போடு வாழ்வதிலே சிறப்பொன்றும் இல்லை. ஏனென்றால் இவ்வுலகில் சிறப்போடு வாழ்ந்தோர்கள் பலருண்டு. ஆனால், தனித்தன்மையோடு வாழ்ந்து வழிகாட்டும் சிலருள்ளே ஒருவரிவர். பெயர் ஒன்றே அவர் குணம் காட்டும்.

நல்லோர்கள் சூழ இருப்பது இவர் பணி.

அவர்தான் நம் மாசிலாமணி

நூலாசிரியரின் அன்புக்குப் பாத்திரமானவர்

பல முடிவுகளுக்கு இவரே சூத்திரமானவர்

வாழ்த்த வந்துள்ள மாசிலாமணி ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : மகாலட்சுமி

     இவர் இல்லாத வீட்டினிலே பெருமையில்லை. இவருடைய பார்வைபட்டால் வறுமைபோகும். அவர்தான் மகாலட்சுமி. நல்ல ஆசிரியர்களின் பெருமைக்கு மாணாக்கர்தான் அளவுகோல். அப்படி நம் நூலாசிரியரின் ஆசிரியப்பணியினைப் போற்றிவளர்ந்த மாணவி, இன்று நூலாசிரியராகத் தம் ஆசிரியரை வாழ்த்த வந்திருக்கிறார்.

வாழ்த்த வந்துள்ள மகாலட்சுமி அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

ஏற்புரையும் நன்றியுரையும் – இராசமாணிக்கம் ஐயா

     “மருவினிய சுற்றமும் ; வான் பொருளும் ; நல் உருவும் ; உயர் குலமும் எல்லாம் திருமடந்தை ஆம் போது அவளோடு ஆம்” என்னும் பாடலுக்கேற்ப நல் சுற்றம், நல் பொருள், நல் உரு, நல் குலம் என அனைத்தும் வாய்க்கப்பெற்ற நூலாசிரியர்.

இவருக்குக் கடவுளைப் பிடிக்கும் என்பதைவிட, கடவுளுக்கு இவரைப் பிடிக்கும் என்பதே சிறப்பு. ஏனென்றால், ஏமாற்றுபவர்களை கடவுளுக்குப் பிடிக்காது. ஆனால், இவர் ஏமாறுபவர், அதனால் இவரைக் கடவுளுக்குப் பிடிக்கும்தானே.

வாழ்நாள் அனுபவம் கவிதையாக மலர்கிறது.

அதுதான் நூலெங்கும் எழுத்தாக தவழ்கிறது.

விழா நாயகரான கவிஞர். ஆசிரியர். மனிதநேயர் பண்பாளர் இராசமாணிக்கனார் ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

தமிழுக்காகவும் ; நட்புக்காகவும் ; உறவுக்காகவும்  கூடியுள்ள உங்கள் அனைவரும் விழாக்குழுவின் சார்பாக வரவேற்று மகிழ்கிறேன்.

 

தமிழார்வர்களாகிய உங்கள் வருகை ; தமிழன்னையைப் போற்றும் சிவிகை.

 

வாய்ப்பளித்தமைக்கு நன்றி ! வணக்கம்.!

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக