தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

புதன், 21 ஜூலை, 2021

பட்டிமண்டபம்

 


பட்டிமண்டபம்

தலைப்பு : மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள் ஆண்களா? பெண்களா?

நடுவர்: மலையைக் குடைந்து ; கடலைக் கடந்து ; விண்ணை அளந்து ; மண்ணை அறிந்து ; காற்றைப் புரிந்து அனைத்துக்கலைகளிலும் பிறநாட்டார்க்கு தாயாய் விளங்கும் அன்னைத்தமிழே ! உன்னை வணங்கி இப்பட்டிமண்டபத்தைத் தொடங்குகின்றோம்.

     வாய்பேசும் மொழியைவிட கண்கள்பேசும் மொழி அழகானது. அதனை, அன்புடையவர்கள்மட்டும்தான் புரிந்துகொள்ளமுடியும். கொடுக்கும் கைகளை விட கண்ணீரைத் துடைக்கும் கைகள் மேலானவைதானே. பேச்சினைப்புரிந்துகொள்வதைவிட மௌனத்தைப் புரிந்துகொள்வோர் பெருமையானவர்கள்தானே. சரி, இப்படி மற்றவர்களைப்புரிந்துகொள்வதில் வல்லவர்கள் யார்? “ஆண்களே!” என என்னும் அணியில் மூவரும் “பெண்களே !” என்னும் அணியில் மூவரும் என ஆறு அறிஞர்கள். அறுசுவையுடன் பேசுவர்.

‘ஆண்களே’ என்னும் அணியில் அணித்தலைவர் உட்பட மூவேந்தராய் மூவர். ‘பெண்களே’ அணியில் முக்கனிபோல் மூவர்.  இனி தமிழைச் சுவைக்கலாம்தானே? முதலில் அணித்தலைவர். அடுத்து, அணியுளுள்ளவர் ஒருவர்பின் ஒருவராகத் தங்கள் கருத்தை முன்வைக்கலாம்.

ஆண்களே ! அணித்தலைவர் : தமிழ் படித்த தலைவரே !. நீங்கள் ஓர் ஆண். நாங்கள் எப்படி பேசினாலும் உங்களைப் பாராட்டுவார்கள். “எப்படி? என்று கேட்கிறீரா?” நீங்கள்தான் தொடக்கத்திலேயே ‘அறுசுவை’ யுடன் பேசுவார்கள் எனக்கூறிவிட்டீர்களே. அப்படி என்றால் எப்படியும் விடை சொல்லலாம் என்பதுதானே பொருள்.

எங்களுடைய குழந்தை பள்ளியில் பெற்றோர் நாள் கொண்டாடினார்கள். தாய், தந்தை இருவரும் வரவேண்டும். பெயர் கொடுத்துவிட்டுவர என் மனைவி கூறினாள். போனேன். எனக்கு முன்னால் இருவர் சென்று திரும்பினார்கள். “என்ன கேட்டார்கள்?” எனக் கேட்டேன். “திருப்பி அனுப்பிட்டாங்க.” என்றனர். பதிவிடத்தில் இரு ஆடவர் அமர்ந்திருந்தனர். நான் உள்ளே நுழைந்ததும் அமரச்சொன்னார்கள். “இப்போட்டியில், கணவன், மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும். யார் நிறைய தூரம் ஓடுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள்” என்றனர். “சரி !” என்று பெயர் கொடுத்தேன். “எனக்கு முன்னால் இருவர் வந்தார்களே ஏன் திருப்பி அனுப்பிவிட்டீர்கள்” எனக்கேட்டேன். முதலில் வந்தவர் “எனக்கு இரண்டு மனைவி’ எந்த மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும்?” எனக் கேட்டார். அதனால் திருப்பி அனுப்பிட்டோம். இரண்டாவது வந்தவர், “மனைவியைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும்” என்றதும் “யாருடைய மனைவியை?” என்றார். அதனால் அவரையும் திருப்பி அனுப்பிட்டோம் என்றார். இப்படிப்பட்டவர்களை எல்லாம் அழைத்துப் போட்டி நடத்தமுடியுமா? அதனால்தான் திருப்பி அனுப்பிவிட்டோம் என்றார். பிரச்சினைகள் எவரால் வரும் எனஆய்ந்து முன்னரே தவிர்த்த அந்த ஆசிரியர் மற்றவர்களைப் புரிந்துகொண்டவர்தானே. “நானும் அவர்கள் வருந்தக்கூடாது” என்றுதான் பெயர்கொடுத்தேன். எனக்கும் விருப்பமில்லை. பெயர்கொடுக்காவிட்டால் மனைவி திட்டுவாள். “இப்போட்டி ஒத்துவராது போய்விடலாம்” என்று போட்டியைச் சொன்னேன். ஒத்துக்கொண்டாள் ; தப்பித்தேன் ; வீடுவந்து சேர்ந்தேன். “அப்படி என்ன சொன்னீர்கள்” எனக் கேட்கிறீர்களா?. “மனைவி கணவனைத் தூக்கிக்கொண்டு ஓடவேண்டும் என்று கொஞ்சம் மாற்றிச்சொன்னேன் அவ்வளவுதான். என்னைப்போல் பலரும் காணாமல் போனார்கள் என்றால் ஆண்கள்தானே பெண்களை நன்கறிந்து இருக்கிறார்கள். அதனால், ஆண்களே மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி.

பெண்களே ! அணித்தலைவர் : பெண்கள் பொருத்தமான கணவனா என்பதனைக் காதலிக்கும்போதே அறிந்துகொள்வார்கள். காத்திருக்கவைப்பது? “அது ஒரு சுகம்” எனக் கவிஞர்கள் பாடுவார்கள்?. சுகமா அது,  போவோர் வருவோர் எல்லாம், வேலைவெட்டி இல்லாதவன் போலப் பார்ப்பார்கள். ஆனால், பெண் அப்படித்தான் சோதிப்பாள். திருமணத்திற்குப் பின் துணிக்கடைக்குப்போனால் காத்திருக்கவேண்டும். பாத்திரக்கடைக்குப் போனால் காத்திருக்கவேண்டும். கல்யாணத்துக்குப் போனால் காத்திருக்கவேண்டும். எங்கு போனாலும் காத்திருக்கவேண்டும். அதற்கான ஒரு முன்னோட்டமாகத்தான் காக்கவைப்பார்கள். அப்படியென்றால் மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள் பெண்தானே?

     மிகவும் பொறுமையுடையவரைத்தான் திருமணம் செய்வேன், என என்னுடைய தோழி நீண்டநாள் திருமணமாகாமலே இருந்தாள். பல வருடங்கள்கழித்து அவளைப் வழியில் பார்த்தபோது திருமணமாகிவிட்டது என்றாள். “இப்பதாண்டி மகிழ்ச்சியா இருக்கு. கணவன் என்ன செய்றார்?” எனக்கேட்டேன். “புடவை கடையில் வேலை செய்கிறார்” என்றாள். அதனால் பெண்களே நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி!

ஆண்களே -2 : நான் மனைவியிடம் “பள்ளிவிளையாட்டுவிழாவுக்கு விளையாட்டுவீரரை அழைக்கச்செல்கிறேன். எப்படி பேசுவார்ன்னு தெரியலை” என்றேன். உடனே அவள், “கால்பந்து வீரரா- திறமையாபேசுவார், இறகுபந்து வீரரா - மென்மையா பேசுவார். பூப்பந்து வீரரா - மணமாகப் பேசுவார். ஓட்டப்பந்தய வீரரா - பாய்ச்சல் பாய்ச்சலா பேசுவார். நீளம் தாண்டும் வீரரா - குதிச்சுகுதிச்சுப் பேசுவார். உயரம் தாண்டும் வீரரா -எகிறிஎகிறிப் பேசுவார். குத்துச்சண்டை வீரரா - அடிச்சு அடிச்சுப் பேசுவார்.” என்றாள். இப்படிச்சொன்ன என் மனைவிதான் மற்றவர்களைப் புரிந்துகொண்டு பேசுகிறாள் எனச் சொல்லாதீர்கள். இவர்கள் அத்தனைப்பேர் மாதிரியும் என் மனைவி பேசுவாள் எனப் புரிந்துகொண்டவன் நான்தானே. அதனால் ஆண்களே மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி !

பெண்களே-2: ஆன்லைனில் வகுப்பெடுப்பது பெண்களுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமா? குழந்தைகளோட பெற்றோர் மனநிலையையும் தெரிந்து வகுப்பெடுக்கவேண்டும். சில நேரம் குடித்துவிட்டு குழந்தைகளின் தந்தைகள் குறுக்கே பேசுவர்.  ஒரு பழக்கூடையில் இருபது மாம்பழம் மூன்றுபேருக்கு சரிசமமாகக் கொடுக்கமுடியுமா? மீதி எவ்வளவு இருக்கும்.” எனக்கேட்டார். பெற்றோர் ஒருவர் இடைபுகுந்து “சாறு பிழிந்து மூன்று குவளையில் கொடுக்கலாமே” என்றார். ஆசிரியர் பொறுத்துக்கொண்டார். அந்த ஆசிரியரை மடக்கிவிடலாம் எனப்பெற்றோர் ஒருவர் ஒரு மாம்பழம் 5 ரூபாய்னா எனக்கு என்ன வயது?” எனக்கேட்டார். “உங்களுக்கு ஐம்பது வயது” என்றார் ஆசிரியர். அவர் “சரி” எனக் காணாமல்போனார். வகுப்பு முடிந்த பிறகு முதல்வர், “எப்படி அவருடைய வயதைச் சொன்னீர்கள்?” என்றார். “எங்க வீட்டருகே அரைகுறையாக மனநிலைபாதிக்கப்பட்ட ஒருவர்க்கு இருபத்தைந்து வயது” என்றார் ஆசிரியர். அதனால் பெண்களே மற்றவர்களை நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி !

ஆண்களே- 3: கணவன் குடிச்சுட்டு வந்து மனைவியை அடிச்சார். “ஏன்யா அடிக்கிற? மனுஷன் தானா நீ? உன்னை நம்பி வந்த பொண்ண இப்படியா அடிப்ப” எனக் கேட்டனர். உடனே அவன், “எனக்கு மட்டும் பாசம் இல்லைனா நெனக்கிறீங்க . அவதாங்க என் உயிரு”. “அப்ப ஏன்யா அடிக்கிற” எனக்கேட்டனர் “இல்லாட்டி அவ அடிப்பாயா ! அதான்” என்றான். இப்படியும் மனைவியைப் புரிந்துகொள்கின்ற கணவனும் உண்டுதானே.

“அம்மா சமையல் செய்றாங்களான்னு ஆயா,  கைப்பேசியில் கேட்டாங்களே’ ஏன் சொல்லலே.” எனக் கேட்டான் மகன். “சொன்னால், உங்கம்மா என்ன கேட்பாங்கன்னு தெரியாதா? மத்த மருமக எல்லாம் வேலைக்குப் போறா. நான் வீட்ல சமையல் செய்றேன்னு குத்திக்காட்டத்தான் ‘சமைக்கிறாளான்னு’ கேட்டிருப்பாங்க. என அம்மாவைத் திட்டுவாள். இது தேவையா?” என்றான். அதனால், மற்றவர்களை ஆண்களே நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். நன்றி.

பெண்களே- 3 :

     தாயானவள் நினைத்தால் ஒரு மகனை வெற்றியாளனாக மாற்றிவிடமுடிகிறது. வீர சிவாஜியை ; மகாத்மா காந்தியை  என எத்தனையோ பேருண்டு.   

“என்னிடம் பத்து மரத்துப் பெயர் கேட்டாங்க. பதில் சொன்னேன். வேலை இல்லைன்னு சொல்லிட்டாங்க” என்றான் கணவன். “நீங்க என்ன பதில் சொல்லி இருப்பீங்கன்னு எனக்குத்தெரியும். “ஐந்து வேப்பமரம் ஐந்து புளியமரமுன்னுதானே சொன்னீங்க”. என்றாள்.

மகனுடைய நண்பன் ஒருவன் :’அம்மா ! உங்க மகனுக்கு எங்க கம்பெனியில வேலை கெடச்சிடுச்சு. என்றான். “தெரியும். இப்பதான் ஜோசியன் அவன் ஜாதகப்படி இந்த மாதம் எதுவும் உருப்படாது” எனச்சொன்னார். இப்படி கணவரையும் மகனையும் புரிந்துகொண்டவள் பெண்தானே? அதனால் மற்றவர்களைப் பெண்களே நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள் நன்றி.

நடுவர்: பட்டிமண்டபத்து நடுவர் என்றால் நல்ல கருத்துக்களை நடுபவர் என்றே பொருள். அவ்வகையில் நல்ல கருத்துக்களை எல்லாம் இப்போது பேசிய, அறுவர் அல்ல ஆறுபேரும் அழகாகத் தம் கருத்தை முன்வைத்தனர்.

     மனைவியிடம் சண்டைபோட்ட கணவன், சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே போனான். “வெயிலில் வெளியே போகாதே” எனத் தாய் சொல்கிறாள். கேட்காமல் போகிறான். உடனே மருமகளிடம் “என் புள்ளய கெடுத்து வெச்சுருக்க” என்றாள். “நானா கெடுத்தேன். அவர்தான் கெடுத்தார். அதனால்தான் நாலு பேரக்குழந்தைங்க. என்பேச்சைக் கேட்டு இரண்டோட நிறுத்தி இருக்கலாம். காசு பிரச்சினை இல்லாம இருந்திருக்கும். இப்ப சண்டைனா என்ன பண்றது. சாப்பாட்டு செலவுக்காவது பணம் கொடுக்கணும் இல்லையா?”. என்றாள். “அதுக்கு இப்படியா திட்டி வெயிலில் அனுப்புவ. அவன மடிமேல பூவாட்டம் தாங்கினேன். தெரியுமா” என்றாள் மாமியார். “நீங்க தாங்கும்போது ஐந்துகிலோ. இப்ப அவர் எவ்வளவு கிலோ தெரியுமா? வீட்டுத்தேவைக்கு காசு கொடுத்தா நான் ஏன் அவரை குறை சொல்லப்போறேன்” என்றாள். கணவனையும் மாமியாரையும் கையாள்வது  ஒரு கலை தானே.

     புகுந்தவீட்டினையே சொந்தவீடாக மாற்றும் திறமை ஆணைவிட பெண்ணுக்குத்தானே அதிகம். தனியாக வந்து அனைவரையும் புரிந்துகொண்டு செயலாற்றும் திறனுடையவளாகப் பெண்தானே இருக்கிறாள் ; சிறக்கிறாள்.

எனவே, மற்றவர்களைப் புரிந்துகொள்வதில் வல்லவர்கள் பெண்களே என உங்கள் கரவொலியைக் கொண்டு தீர்ப்பு வழங்குகிறேன். நன்றி ! வணக்கம் !

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக