தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 4 ஜூலை, 2021

சுவையான நிகழ்வுகள் - சுவாமி விவேகானந்தர் வாழ்வில்

 


சுவையான நிகழ்வுகள் – சுவாமி விவேகானந்தர் என்னும் வீரத்துறவி

(119 ஆவது நினைவுநாள்)

ஒரு கோழியானது தனது பத்துக்குஞ்சுகளை பாம்பிடமிருந்துகாக்க இறக்கைக்குள் அவற்றை மறைத்துக்கொள்கிறது.  கோழியைச் சுற்றிச்சுற்றி படமெடுத்துவரும் மூன்று பாம்புகளைத் துணிவுடன் எதிர்கொள்கிறது. இதுதான் வீரம்.

பிறரை வெற்றிகொள்பவன் வீரன். தன்னை வெற்றிகொள்பவன் மாவீரன். அவ்வாறு தன்னை வெற்றிகொண்ட நரேந்திரன் என்னும் இளைஞனே சுவாமிவிவேகானந்தர் (12.01.1863 – 04.07.1902) ஆனார். அவருடைய வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளைக் காண்போமா?

நிகழ்வு 1 :

பாஸ்கர் சேதுபதிக்கு அமெரிக்காவிலிருந்து “சமய மாநாட்டிற்கு வருக” என அழைப்பு வருகிறது. தன்னைவிட சுவாமி விவேகானந்தர் சென்றால் நம் நாட்டின் பெருமை உலகிற்குத் தெரியும் என எண்ணினார்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல் (திருக்குறள் : 517)

 

என்னும் திருக்குறளுக்குத் தலைசிறந்த சான்றானார்.

 

சான்றாக வாழக்கூடியவர் சான்றோர்தானே?. அவ்வகையில் சான்றோரான பாஸ்கரசேதுபதி அவர்கள், தன்னை பின்னிறுத்தி சமுதாய நலத்தை முன்னிறுத்த எண்ணி சுவாமி விவேகானந்தரை அனுப்பினார். சான்றோர், தமக்குக் கிடைக்கும் நல் வாய்ப்பை பிறர்க்குக் கொடுத்து மகிழ்வர். நல்லோர், தம் வாய்ப்பினை மட்டும் அனுபவிப்பர். வஞ்சகர், பிறர் வாய்ப்பையும் தனதாக்கிக்கொள்வர். அவ்வாறு நோக்குகையில்,  தன்னைக் காட்டிலும் சுவாமி விவேகானந்தர் சென்றால்தான் நன்றாக இருக்கும் என எண்ணினார் ; உலகிற்கு ஒளியூட்டினார். சுவாமி விவேகானந்தரை முன்னிறுத்தி தன்னைப் பின்னிறுத்திய  பாஸ்கர சேதுபதியின் பெயர், (பாஸ்கரன் – சூரியன்) காரணப் பெயர்தானே.

நிகழ்வு – 2

“சகோதர சகோதரிகளே!” எனத் தன்னுடைய உரையைத் தொடங்குகிறார் சுவாமி விவேகானந்தர்.  தொடக்கமே அத்தனை உள்ளங்களையும் நெகிழவைக்கிறது. இந்த இரண்டு சொற்கள் எப்படி நெகிழவைத்தன?  இந்த ஐயம் அனைவருக்கும் வருவது இயல்புதானே?. இதனை அறிவதே அருமை. உண்மையான துறவை மேற்கொண்டவன் மற்ற மனிதர்களை உடன் பிறந்தோராகக் கருதுவான் அதுவே துறவு. அவ்வாறு உண்மையாக வாழ்ந்துவரும் நிலையினை இரண்டே சொற்களில் உணர்த்தினார். உண்மையின் வலிமையை உலகுக்கு உணர்த்தியதால் “இவர்தான் உண்மைத்துறவி” என உடனடியாக உணர்ந்தது அந்த விழிப்புடைய அரங்கு. அதனால்தான் அரங்கு அதிர்ந்தது. பாரதத்தின் பெருமையினை உலகம் அறிந்தது. உலக அரங்கையே அவர்பால் ஈர்த்தது.

நிகழ்வு - 3

உண்மையான ; தெளிவான ; கம்பீரமான ; அழகான அவருடைய பேச்சில் மயங்காதவர் எவரும் இல்லை.  பெரியோர்கள் அவரை வாழ்த்தி மயங்கினர். சிறியோர்கள் அவரை குருவாக எண்ணி மயங்கினர். இடைப்பட்டோர் சொல்லழகிலும் பொருளழகிலும் மயங்கினர்.

துறவிகள், ஆணையும் பெண்ணையும் ஒன்றாகக் காண்பர். அவர்களுக்கு உயிர் மட்டுமே தெரியும். உடலைத் தெரியாது. அத்தகைய துறவிதானே சுவாமி விவேகானந்தர். அமெரிக்காவில் ஒரு வளரிளம் பெண், அவருடைய பேச்சை தொடர்ந்து பல மேடைகளில் கேட்கிறாள். சுவாமி விவேகானந்தரிடம் காதல்கொண்டதைச் சொல்கிறாள். “நான் உங்களுடன் வாழ விரும்புகிறேன்” என்றாள். வளரிளம் பெண்ணின்  காதல்மொழியைக் கேட்ட இளைய துறவியின் விடை என்ன தெரியுமா? “ஏன் என்னுடன் வாழவேண்டும் என நினைக்கிறீர்”  எனக்கேட்கிறார். “எனக்கு, உங்களைப்போன்ற ஒரு அறிவு நிறைந்த குழந்தையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதுவே என் ஆசை” என்றாள். உடனே “நீங்கள் அதற்காகக் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. என்னையே நீங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார் சுவாமி விவேகாந்தர்.  இதுவே நம் பண்பாடு. இதற்குமுன் அவ்வாறு வாழ்ந்தவர் மாவீர்ர சத்ரபதி சிவாஜி.(19.02.1630 -  03.04.1680)

வீர சிவாஜியின் அருமையினை உணராத அயலார், நாட்டைக்கைப்பற்ற எல்லைக்குள் நுழைகின்றனர். சிவாஜியின் படை கொலைவெறி பிடித்த எதிரிகளை வீழ்த்தியது. அப்போது எதிர்த்துவீழ்ந்த சுல்தானின் மனையாளான பேரழகியை சிறைப்பிடித்து பல்லக்கில் தூக்கிவருகிறார்கள். மாவீரன் சிவாஜி, “பல்லக்கில் யார்? “ எனக் கேட்க, “பகைவனின் மனைவி” என்கின்றனர். சிவாஜி அப்பேரழகியிடம் சென்று “தாயே, பொறுத்தருள்க. பெண்களைத் தெய்வமாக எண்ணுவதே எங்கள் பண்பாடு. உங்கள் வயிற்றில் நான் பிறந்திருந்தால் நானும் அழகாக இருந்திருப்பேன்” என்றார். மாவீரன் சிவாஜி பெயரைக்கேட்டவுடன் அஞ்சி நடுங்கியவள், சிவாஜியின் அன்பு நிறைந்த பேச்சினைக்கேட்டும் மதிப்புடன் வணங்கினாள். இப்பரம்பரையில் வளர்ந்தவர்தானே சுவாமி விவேகானந்தர்.

நிகழ்வு – 4

சுவாமி விவேகானந்தர், ஒரு முறை இளைஞர்கள் துப்பாக்கி சுடும் விளையாட்டு விளையாடுவதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒருவராலும் இலக்கினைச் சுடமுடியவில்லை. புன்னகைத்தார். உடனே, ஒரு இளைஞன் “எங்களைக் கேலி செய்யாதீர். உம்மால் முடியுமா?” எனக் கேட்கிறான்.  எப்படித் துப்பாக்கியைப் பிடிக்கவேண்டும்? எப்படிச் சுட வேண்டும்? என அந்தக் கடைக்காரனிடம் கேட்டறிந்து சுடுகிறார். துறவாடை உடுத்தியவர், எப்படிச் சுடப்போகிறார்?. என இளைஞர்கள் எண்ணினர். ஆனால், கொடுத்த அத்தனை குண்டுகளையும் குறிதவறாமல் சுடுகிறார். உடனே ஒரு இளைஞர், “ஏற்கெனவே நீங்கள் பயிற்சி பெற்றுள்ளீர்தானே?” எனக் கேட்டார்.  “நான் இப்போதுதான் முதல்முறையாகத் துப்பாக்கியைப் பிடிக்கிறேன்” என்றார் சுவாமிவிவேகானந்தர். அனைவரும் வியந்து நிற்கின்றனர். “இலக்கை மட்டுமே நோக்கும் தன்னம்பிக்கை உடையவர்க்கு எல்லாம் எளிமையாகும்” என்றார். இதுவும் நம் முன்னோர் வழக்குதான்.

அர்ச்சுனனுக்கும் துரியோதனனுக்கும் துரோணர் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது, மரக்கிளையில் நின்ற பறவையின் கண்ணுக்குக் குறிபார்க்கச்சொல்கிறார். துரியோதனன் முதலில் அம்பு தொடுக்க நிற்கிறான். “என்ன தெரிகிறது?” எனக் கேட்கிறார். “மரம், கிளை, பறவை, கண்” என ஒவ்வொன்றாய் கூறிச்செல்கிறான். அடுத்து, அர்ச்சுனன் அம்பை எடுத்துக் குறி வைக்கிறான். “என்ன தெரிகிறது?” எனக் கேட்கிறார். “பறவையின் கண் மட்டுமே தெரிகிறது” என்கிறான். அத்தகைய குருபரம்பரையில் வந்தவர்தானே சுவாமிவிவேகானந்தர்.

நிகழ்வு – 5

     கன்னியாகுமரியில் தவம் செய்வதற்காக, கடலுக்குள் நின்ற மிகப்பெரியபாறைக்குச் செல்ல விரும்புகிறார் சுவாமி விவேகானந்தர். கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் இருந்ததால், படகோட்டி காசு கேட்கிறான். “என்னிடம் காசு இல்லையே” எனக் குழந்தை உள்ளத்துடன் கூறுகிறார் சுவாமி விவேகானந்தர். துறவிகள் என்போர், அடுத்த வேளை உணவையே இறைவன் அளிப்பான் என்னும் தன்னம்பிக்கையுடன் வாழ்பவர்கள்தானே?. உடனே படகுக்காரன், “காசு இல்லையென்றால், நீந்திச்செல்லுங்கள்” என்கிறான். வாழ்க்கை என்னும் நீளக்கடலையே நீந்தத்தெரிந்த சுவாமி விவேகானந்தருக்கு நீலக்கடலா தடையாகும்? உடனே, நீந்திசென்று தவம் பல நாட்கள் தவம் செய்து திரும்புகிறார். அவருடைய மனபலத்தைக் கண்ட படகோட்டி வியந்து வணங்கினான்.

     இப்படி வாழ்நாள் முழுதும் சோதனைகளையெல்லாம் சாதனையாக்கினார். அவரால்தான் இன்றும் பாரதத்தின் பெருமையினை உலகம் வியந்துபார்க்கிறது எனில் மறுப்பார்யார்? இல்லைதானே?

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக