தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

புதன், 30 ஜூன், 2021

குழந்தைகள் ஊமைகளாகின்றன

 


ஊமைகளாகும் குழந்தைகள் – தாய்மொழியை வாய்மொழியாக்குவோம்

மூளை,  தலைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதால்தானே “எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்” என்னும் பொன்மொழி  உண்டாயிற்று. அந்த மூளையை எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்றுபோலவே இறைவன் படைத்துள்ளார். அதனை உணர்ந்துகொள்ளவேண்டியது முதல்கடமை. இதை உணர்ந்துகொண்டாலே மற்றவையெல்லாம் தெளிவாகிவிடும். எப்படி? என்றுதானே கேட்கிறீர்கள். உடல் என்னும் அரசாங்கத்தின் தலைமைச்செயலகம்தான் மூளை. பிறக்கும்பொழுது எல்லோருக்கும் 300 கிராம் தான்.  வளரவளர ஆண்களுக்கு 1,500 கிராம் அளவிற்கு வளர்கிறது. பெண்களுக்கு 1,300 கிராம். உடனே பெண்களுக்கு …? என இழுக்காதீர். எடை தான் குறைவு. செயல்பாடு அனைவருக்கும் ஒன்றுபோலவே இருக்கும். பெண்கள், சரியாகப் பயிற்சி கொடுப்பதால் எல்லாவற்றையும் நினைவில்வைத்துக்கொள்கின்றனர். எடையுள்ள கைப்பேசியைவிட எடைகுறைந்த கைப்பேசிதான் விலை அதிகம்.

 இப்போது ஒரு உண்மையை உணர்ந்துகொண்டீர்தானே. குழந்தைகள் அறிவுமிக்கவர்களாக வளர்வது வளர்ப்பவர்களின் பொறுப்பன்றி குழந்தைகளின் பொறுப்பில்லை. எந்தக் குழந்தையையும் அறிவு இருக்கா? எனக் கடிந்துகொள்ளக்கூடாது. அப்படிக் கடிந்துகொண்டால் கடிந்துகொள்பவரின் அறிவைத்தான் ஆய்வுசெய்யவேண்டும்.

*எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

பின் நல்லவராவது தீயவராவது அன்னை வளர்க்கையிலே

 

என்னும் புலவர்  புலமைப்பித்தனின் பாடலடிகளைப் பாடிப்பாருங்கள். குழந்தைகள் அறிவும் குணமும் மாறுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

     அன்னை என்றால் அன்னையை மட்டுமன்று, இந்த உலகத்தில் அந்தக் குழந்தை வளர்ச்சிக்குத் துணைசெய்வோர் அனைவரும்தான் காரணம். சூழலால்தானே குழந்தைகள் வளர்கிறார்கள். இவ்வரிசையில் முதல் இடம் பெறுவோர் ஆசிரியர்கள்.

     அதனால்தான் “ஆசிரியர்கள் சம்பளத்திற்குக் கணக்குப் பார்க்கக்கூடாது. விதை நெல்லுக்குக் கணக்குப் பார்க்கலாமா?” எனக்கேட்டார் கல்விக்கண் திறந்த காமராசர். கல்விச்சாலை என்னும் கோவிலை நன்றாகக் கட்டிவிட்டு பணிசெய்வோர்க்கு உரிய வசதிகள் செய்யாவிட்டால் என்னாகும். கடவுள் என்னும் கல்வியைப் போற்ற இயலுமா? முடியாதுதானே? ஆசிரியர்கள் சுதந்திரமாகச் செயல்பட வழிவகை செய்யவேண்டும். அப்படியென்றால், தாய்மொழியில் கற்பிப்பதுதானே சிறப்பாக அமையும். கற்போருக்கும் கற்பிப்போருக்கும் அதுதானே எளிமை. அங்குதானே கற்பித்தல் சீராக அமையும்.

     தாய்மொழியில் கேள்வி கேட்க எண்ணும் ஆசிரியர், அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடி ஆங்கிலத்தில் “Flowers Name …” எனக் கேள்வி கேட்கட் தொடங்குகிறார். “செவ்வந்தி, சாமந்தி, கனகாம்பரம், செம்பருத்தி, மல்லி, அல்லி, லில்லி, ரோஜா… எனக் குழந்தைகள் அடுக்கிக்கொண்டே சென்றனர். உடனே ஆசிரியர் “நோ டமில். ஒன்லி இங்க்லீஷ்” என்றார். சுடுகாட்டு மௌனம் நிலவிற்று. குழந்தைகளுக்கு நன்றாக விடைதெரிந்தும் தாய்மொழியில் கூறக்கூடாதென்பதால் ஊமைபோல் நிற்கின்றனர். ‘ஊமை’ என்னும் சொல்லால், இங்கு குறிப்பிடுவது வாய்பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளை அன்று. வாயிருந்தும் பேசமுடியாத ; பேச விடாத சமூக அமைப்பில் சிக்கிக்கொண்டவர்களையே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

     தாய்மொழிக்குத் தடைவிதித்ததால், நன்றாக விடைதெரிந்தும் கூற முடியாது தவிக்கும் குழந்தைகளின் அறிவாற்றால் மேம்படுமா? கீழ்ப்படுமா? இப்படி நாளுக்கு நாள் தன்னம்பிக்கை இழக்கும் குழந்தைகள், கல்வியை விட்டுவிடும் சூழலும் மேற்படிப்பினைத் தொடரமுடியாத சூழலும் பெருகிவிடுகிறது. அரசு பள்ளிகளில் நாளுக்குநாள் குழந்தைகள் குறைவதற்கு அதுதானே மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இனி, தாய்மொழியில் கற்றோர்க்கு மட்டுமே கல்வி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு எனில் என்னாகும். அரசுப்பள்ளியில் பிள்ளைகள் குவிவார்கள்தானே?

     வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இருந்தால் அனைத்துக் குழாய்களிலும் தண்ணீர் வரும்தானே? தாய்மொழிக்கான வாய்ப்பு இருந்தால் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் தமிழ்ப்பயிலும் குழந்தைகள் வளமாக வாழ்வார்கள்தானே.

     ஆங்கிலம் தெரியாவிட்டால் பெரியகுற்றம்போல் நினைக்கும்நிலை மாறவேண்டும். நம் நாட்டில் பிறநாட்டுமொழி செம்மாந்து நடக்க, தாய்மொழி கற்ற குழந்தைகள் தலைகுனிந்து நடக்கும் சூழல் எத்தனை இழிவானது.

     *பாதை தவறிய கால்கள், விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை

     நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர், பேர்சொல்லி வாழ்வதில்லை.

 

என்னும் புலவர் புலமைப்பித்தனின் அடிகளை உணர்ந்து சரியான பாதையில் சென்றால் விரும்பிய ஊரினை அடையமுடியும். குழந்தைகளுக்கும் நல்ல பண்பினை வளர்க்கமுடியும். பேர் சொல்லும் பிள்ளையாக சிறப்புடன் வாழவழிகாட்டமுடியும்.

 

     தமிழர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்துவிளங்கியதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத ஆங்கிலேயர்கள், அடிமையாக்கவே தங்கள் மொழியான ஆங்கிலக்கல்வியைப் புகுத்தினார். அம்மொழியைக் கற்றவர்க்கும் மட்டுமே அரசு வேலையும் கொடுத்தனர். இக்கொடும்போக்கினை எதிர்த்த தமிழர்கள் தங்கள் அரசுப்ப்பணியினை விட்டு விடுதலை வீரர்களாக மாறினர். இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்ட சில துரோகிகள் ஆங்கிலேயர்களுடன் கைகோத்துக்கொண்டு தமிழர்களைப் பேசவிடாது ஊமைகளாக்கினர். “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்னும் கொள்கையைப் பின்பற்றினர். இப்படி மொழியின் வழி ஊமைகளாக்கும் நிலையினை அந்நியர்கள் வழிவகை செய்தனர். அவர்கள்வழியிலிருந்து விடுபட்டு, தாய்மொழியில் கற்றுக்கொடுத்தால்  பேசாத குழந்தைகளும். எங்கும் தமிழ்மணம் வீசும். உண்மைதானே?

 

(‘நீதிக்குத்தலைவணங்கு’ என்னும் திரைப்படப்பாடலான “இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத் தொட்டிலில் கட்டிவைத்தேன்” என்னும் பாடலிலுள்ள அடிகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக