தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 13 ஜூன், 2021

மணிமேகலை என்னும் மாதரசி

 


மணிமேகலை என்னும் மாதரசி

     கொடுப்பவர் உயர்ந்தவர் ; பெறுபவர் தாழ்ந்தவர் என்பது உலகியல் வழக்கு. கொடுப்பவர்கரம் உயர்ந்திருப்பதும், பெறுபவர்கரம் தாழ்ந்திருப்பதும் இதனை உணர்த்திவிடுகிறது. இக்கூற்று அருளுக்கும் பொருந்தும் ; பொருளுக்கும் பொருந்தும். இத்தகைய வரையறையோடு மணிமேகலைக் காலத்துக் கணிகையர்க்குலத்தை நோக்கினால், அது தாழ்ந்த குலமாகக் குறிப்பிட்டுள்ளதனை உணர்ந்துகொள்ள இயலும். மன்னவர் கொடுக்கக் குடிகள் பெறுவது இயல்புதானே? எனினும் கலைகளில் சிறந்தோரையும் தாழ்வாக எண்ணிய காலம் அது. இன்று அப்படியே தலைகீழாக மாறிவிட்டதுதானே?. நடிகர்களைத் தலைமேல் தூக்கிக்கொண்டு ஆடும் நிலைக்குச் சமுதாயம் மாறிவிட்டிருக்கிறது. அதனால்தான் நடிகர்களின் பதாகைகளில்கூட பாலாறு ஓடுகிறது.

     மணிமேகலை, கணிகையர் குலத்தில் பிறந்த மாதவியின் மகள். அழகின் உரு. அழகு இருக்கும் இடத்தில் ஆணவம் இருப்பது இயல்புதானே? அந்த ஆணவமே கூட சில பெண்களின் அழகினை மிகுவிக்கும்தானே? ஆனால் மணிமேகலையோ, அழகில் இமயமாயினும் அன்பையும் பண்பையும் அணிகலனாகக் கொண்டவள் ; ஆணவத்தின் அடிச்சுவடும் அறியாதவள். மணிமேகலையின் அழகினை,

     மணிமேகலை தன் மதிமுகம் தன்னுள்

அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய

     கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின்

     படை இட்டு நடுங்கும் காமன் பாவையை

     ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?

     பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?

(மலர்வனம்புக்ககாதை:20-25)

என்னும் அடிகளில் சீத்தலை சாத்தானார் எழிலுற  எடுத்துக்காட்டுகிறார். கோவலன், கண்ணகியை இழந்த துயர்கேட்டு அழும் நிலையில்கூட மணிமேகலையின் அழகை எடுத்துக்காட்டுகிறார். மதிமுகம் ; அழகான நீலமலரை வென்ற கண்கள் ; காமனும் நடுக்குறும் அளவிற்குக் கடைமணியில் கண்ணீர். அவளைக்கண்டால் ஆடவர் அகலார் ; அகன்றால் அவர் ஆடவராகார் எனப்பாடியுள்ளார் சீத்தலைசாத்தனார்.

     அத்தகைய பேரழகுடைய மணிமேகலையின் பிறப்பின் நோக்கம் அவ வாழ்க்கைக்கன்று ; தவ வாழ்க்கைக்கே. “காமனையே வெல்லும் தவச்செல்வியைப் பெறுவாய்” என மணிமேகலை பிறக்கும் முன்னரே மணிமேகலா தெய்வம் மாதவியின் கனவில்தோன்றிக் கூறியதனை,

     காமன் கையறக் கடுநவை அறுக்கும்

     மா பெருந்தவக்கொடி ஈன்றனை என்றே

     நனவே போலக்கனவு அகத்து உரைத்தேன்

(துயிலெழுப்பிய காதை: 36-38)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.   

     உதயகுமரன் தன்னைக் காதலிப்பதை உணர்ந்துகொண்ட மணிமேகலை, “நான் எவ்வாறு அவனைக் காதலிக்க எண்ணினம்?” என எண்ணுகிறாள். அவன்பின்னே உள்ளம் சென்ற நிலையினை

     புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்

     இதுவோ, அன்னாய்! காமத்து இயற்கை

     இதுவே ஆயின் கெடுக தன் திறம்

           (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை:89-91)

என்னும் அடிகளில் உணர்த்திவிடுகிறாள். அதற்கான காரணத்தை அறியவிழைகிறாள். பின்னர், முற்பிறவியின் கணவனாக வாழ்ந்த இராகுலனே இப்பிறவியில் உதயகுமாரானாகப் பிறப்பெடுத்தான் என்பதனை அறிந்துகொள்கிறாள்:

தன் அளவில்லாத ; அடக்கவியலாத காமத்தை அறிகிறாள். பின் தன் பிறப்பின் நோக்கத்தை அறிகிறாள். காமத்தை வெல்கிறாள்.    உதயகுமரன், தன் காதலைக் கூறி நெருங்க விழையும்பொழுது, அவனுக்கு வாழ்வின் மெய்யியல் குறித்து விளக்குகிறாள்.

     பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு  இரங்கலும்

     இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்

     மக்கள் யாக்கை இது என உணர்ந்து

மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்

                     (உதயகுமரன் அம்பலம் புக்ககாதை: 136-139)

எனக் கூறுகிறாள். இவ்வாழ்க்கை பிறத்தல், மூத்தல், பிணிபட்டு வருந்தல், இறத்தல் என்னும் நான்கு படிநிலைகளை உடையது. இதுவே இவ்வுடலுக்கான செயல். எனவே, இவ்வுடலின் விருப்பத்திற்காக வாழ்வதைக் காட்டிலும் அனைத்து உயிர்களுக்கும் நல்லன செய்து வாழ்ந்தால் பிறப்பு பொருளுடையதாகும் என உணர்த்துகிறாள் மணிமேகலை.

வாழ்க்கையின் உண்மையை அறியாமல், பிறப்பின் நோக்கம் புரியாமல், பெற்றோரின் அருமையினை உணராமல் காதலித்து வாழ்க்கையை இழந்து வருந்தும் பெண்களுக்கு மணிமேகலையே பாடம் கற்பிக்கிறாள். உணர்வுகளைக் கையாளும் திறம் இருப்பின் காமத்தின் ஆற்றலை கடமைக்கு மடைமாற்றம் செய்ய இயலும். அவ்வாறு இளமையை வெற்றிகொண்டேரே ஆட்சியராக ; மருத்துவராக ; விளையாட்டு வீர்ர்களாக வலம்வருவதனைக் காணமுடிகிறது.

அவ்வாறின்றி காதலால் ; காமத்தால் தவறானவர்களிடம் சிக்கிக்கொண்டு, பெற்றோரை இழந்து, உறவுகளை இழந்து, கணவனை இழந்து, பிள்ளைகளை இழந்து (திருமணமானவர்களும்தான்) சிறையில் வாடும் நிலை இருப்பதனைக் காணமுடிகிறது. நாளிதழ்களில் நாள்தோறும் கொலைச்செய்திகள். அவை, தன்னடக்கத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்திவருகின்றன. பொருளுக்காகக் காதலித்து ஏமாற்றும் வழக்கம் இனி இருக்காது. ஏனெனில், பெற்றோரின் ஒப்புதலின்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை எனச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. பெற்றோர்கள் உள்ளம் குளிரும்தானே?

தன்னடக்கத்தால் உயர்ந்த மணிமேகலையின் பெருமையினை எடுத்துரைக்கும் இலக்கியமாகவும் “மணிமேகலை” இலக்கியத்தைக்கொள்ளமுடியும்தானே? மணிமேகலையில் இன்னும் பல புதையல்கள் இக்காலத்திற்கும் வழிகாட்டுவனவாக அமைகின்றன. இன்று மணிமேகலையின் அறிவுரை ஒன்றைப்பார்த்துவிட்டோம். அறியாத வயதிலும் அறிவினை ஊட்டிய மணிமேகலை மாதரசிதானே.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக