தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 28 ஜூன், 2021

தேநீர் கவிதை

 


சிங்கைப்பெண்ணின் தங்கக் கவிதை 


(மொழிபெயர்ப்பு மட்டுமே நான். கவிதை பேராசிரியர் லீ சூ பெங்க் , சிங்கப்பூர் பண்பாட்டுப் பதக்க வெற்றியாளருடையது)

 

தேநீர் கவிதை

 

தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும் ….

இறுதிப் பயணம்

எப்போதென்று யாரறிவார்?

இருக்கும்வரை மகிழ்ந்திடுவாய்

 

தேநீரைச் சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்  

 

பனித்துளி வாழ்க்கை

கடலாய்த் தெரியும்

உலகமே உன்னால் விடிவதாய்த் தெரியும்

செய்யும் செயலெல்லாம் தடையாய் முடியும்

போராட்ட வாழ்க்கை இது. எதிர்கொள்ளக் கற்றுக்கொள்

காலம் கடந்தபின் ஞானம் வழிந்தென்ன?

காலன் இங்கே காத்திருக்கிறான்

 

தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்

 

நட்புகள் சில மலர்ந்திருக்கும்

இன்னும் சில மாய்ந்திருக்கும்

வானவில்லாய் உடன் நின்றபலரும்

வானத்தின் முகவரியில் மறைந்தே போயிருப்பர்

குழந்தைகளுக்கு இறக்கை முளைக்கும்

பறந்துசென்றே பார்வை மறைக்கும்

வாழ்க்கை இப்படித்தான் கடக்குமென்று

கணித்திட ஒருவர் பிறந்திடவில்லை.

 

அதனால், தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்

 

இறுதிவாழ்க்கை அன்பால் நிறையும்

உலகம் முழுதும் உறவாய்த் தெரியும்

விண்மீன் வெளிச்சம் அன்பால் ஒளிரும்

பாசத்துடன் வாழ்ந்தோரைப் பாராட்டிடுவோம்

 

புன்னகையோடு சுவாசிப்போம்

கவலைகள் யாவும் ஓடிவிடும்

 

அதனால், தேநீரை சுவைத்திடு நீ

அழகாகவும் மெதுவாகவும்

 

உறவுகளைக் கடந்தது இக் கவிதை

அனைவர்க்குமானது இக்கவிதை

 

நான் இறந்தபின்னே

கண்ணீர்துளிகளை  காணிக்கையாக்குவீர்

அப்போது அதைநான்  அறிவேனோ?

இன்றே என்னுடன் அழுதிடுவீர்.

 

மலர்களைத் தூவி வணங்கிடுவீர்

என்னால் பார்க்க இயலாதே?

இன்றே மலர்களைக் கொடுத்திடுவீர்.

 

என்னை அன்று புகழ்ந்திடுவீர்

எனது செவிக்குள் நுழையாது

இன்றே என்னைப் புகழ்ந்திடுவீர்

 

எந்தன் பிழைகளை மன்னிப்பீர்

எனக்கு ஒன்றும் தெரியாது

இன்றே என்னை மன்னிப்பீர்

 

என்னை இழந்து வருந்திடுவீர்

என்னால் உணர முடியாதே

இன்றே என்னை இழந்திடுவீர்.

 

என்னுடன் பழக விரும்பிடுவீர்

என்னால் அறிய  முடியாதே

இன்றே பழக வருவீரே.

 

 

பல்லாண்டாய் பிரிந்த நண்பரெல்லாம்

அஞ்சலி செலுத்த வந்திடுவீர்

அப்போது நானும் அறிவேனா?

இப்போதே என்னைத் தேடிடுவீர்.

 

நேரத்தை யாவர்க்கும் செலவிடுவீர்

உதவிகள் செய்து  மகிழ்ந்திடுவீர்

குடும்பத்தை நட்பை மதித்திடுவீர்

எப்போதும் எதுவும் நடந்திடலாம்

யாரை இழப்பீர் அறியீரே

 

தனியாக நீங்கள் புலம்பலாம்

இணைந்தால்தானே பேசலாம்

தனியாக நீங்கள் மகிழலாம்

இணைந்தால்தானே கொண்டாடலாம்

தனியாக நீங்கள் புன்னகைக்கலாம்

இணைந்தால்தானே சிரிக்கலாம்

 

இப்போதில்லையெனில் எப்போது?

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக