தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

புதன், 16 ஜூன், 2021

குழந்தைக்குக் கற்பிக்கவேண்டிய பாடம் - திருக்குறள் விளக்கம்

 



குழந்தைகளை மலரச்செய்வீர்

குழந்தைகளுக்கு வீட்டுப்பற்றும், நாட்டுப்பற்றும் வளரவேண்டும் என என்றாவது நீங்கள் உரைத்ததுண்டா? ஆம்! என்பது உங்கள் விடையானால், வாழ்வின் இறுதிவரை உங்கள் குழந்தை உங்களுடன் பாசத்துடன் இருக்கும் எனக் கூறமுடியும். அவ்வாறு அனைத்துக் குழந்தைகளும் வளரவேண்டுமானால்,  உடலையும் உயிரையும்  வளர்க்கும் வீட்டுக்கும், அறிவை வளர்க்கும் நாட்டுக்கும் நன்றியுடையவர்களாக வளர்க்கவேண்டும்.

     இவ்வுலகில் எந்த ஒன்றையும் ஒருவன் தானே உருவாக்கி உண்பதில்லை ; அது இயலவும் இயலாது. பிறர் துணையால் பெற்ற வளத்தை உண்டே உயிர்வாழ இயலும். அந்த நன்றியுணர்வை பணத்தை வீசிப்பெற்றுவிடுவதோடு முடியாது. அன்புநிறை உள்ளத்துடன் நன்றி கூறவேண்டும். நிலத்தை விற்று நன்றாக வாழமுடியும் என்றாலும், உணவளிப்பதே அறமென உழுதுமகிழும் உழவர்களால்தானே இந்நாடு வளம் பெறுகிறது. இத்தியாகிகள் உள்நாட்டுப் பாதுகாப்புப்படைவீரர்கள் எனில் மிகையில்லை. அவர்களுக்கும் நன்றி சொல்ல குழந்தைகளுக்குக் கற்பிக்கவேண்டும்.

     குழந்தைகள் களிமண்தான். நல்ல குயவனிடம் அகப்பட்டால் அழகான சிலைகளாகும் ; சிறந்த பாத்திரங்களாகும். எனவே, குழந்தைகளிடம் நல்ல குயவனாக நடந்துகொள்ளவேண்டியது ஒவ்வொருவருடைய கடன்.

     ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வகையில் ஏதேனும் ஒரு நன்மை செய்துவிட்டுத்தான் உறங்கவேண்டும். அதுவே, உயிரைத்தாங்கும் பூமிக்குச்செய்யும் நன்றிக்கடன். ‘சுமை’ எனப் பொறுப்புகளைக் கடந்து செல்வது அறிவுடைமையன்று. உலகையே சுமக்கும் பூமிகூட உன் காலடியில்தான் இருக்கிறது என்பார் சுவாமி விவேகானந்தர். அப்படியெனில், நீ எத்தனை உயர்ந்தவன் என்பதனை எண்ணிப்பார்க்கமுடிகிறதுதானே?

     “மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்” எனச் சோம்பிக்கிடத்தல் கூடாது. விதை மண்ணைக் கிழித்த பின்னர்தான் செடியானது ; செடி மரமானது. ஒரு நாளும் சோம்பிக்கிடப்பதில்லை. அதனால்தானே அது எவ்வுயிர்க்கும் வரமானது. தன்னை வளர்த்த வானுக்குப் பூக்களைத் தருகிறது. தன்னைத் தாங்கும் பூமிக்கு நிழலைக் கொடுக்கிறது. தன்னை நம்பிய பறவைகளுக்கு வீட்டைக் கொடுக்கிறது. தன்னை நம்பிய மனிதர்களுக்கு கனியைக் கொடுக்கிறது. இத்தனையும் தருவதால் அது ‘தரு’ ஆயிற்று. தன் பணியை தரு செய்வதால்தான் அது வாழ்நாள் முழுதும் வளர்ந்துகொண்டேபோகிறது.

     பொறுப்பில்லாமல் வாழ்வதால் என்ன கேடு என்று கேட்கிறீர்களா?.  ஒரு கதை சொல்லட்டுமா?. ஒரு நாட்டில் வற்கடம்(பஞ்சம்) ஏற்பட்டது. மக்கள் அனைவரும் வேறு ஊருக்குப் புறப்பட்டனர். நீண்ட தூரம் செல்லவேண்டி இருக்கலாம் என்று எண்ணிய ஊரின் தலைவர், கையில் கட்டைகளை எடுத்துக்கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினார். ஒவ்வொருவரும் சிறிய அளவிலான கட்டைகளை எடுத்துக்கொண்டனர். பெரியவர் பேச்சினை மதித்து ஒரே ஒருவன் மட்டும் இரண்டு மூன்று கட்டைகளை எடுத்துக்கொண்டான். ஒரிரு நாள் பயணம் சென்ற பிறகு ஒரு ஆழமான பள்ளத்தாக்கு வந்தது. அதனைக் கடப்பதற்கு அவர்கள் எடுத்துவந்த கட்டை உதவவில்லை. அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கில் இறங்கித்தான் செல்லவேண்டும் என எண்ணிச் சென்றனர். ஆனால், ஒரே ஒருவன் மட்டும் தான் சுமந்துவந்த நிறைய கட்டைகளை இணைத்து அழகாகப் பலகையாக்கி எளிதாகக் கடந்துசென்றான். சுமப்பது கடினமென எண்ணினால் வெற்றி கிடைக்காது. அவ்வாறு எண்ணாது வாழ்ந்தால் வாழ்க்கை வெறுக்காது. இக்கூற்று உண்மைதானே?

“நம்மால் பணத்தாலோ, புகழாலோ உதவமுடியாதே” என எண்ணும் கோடிக்கணக்கான மக்களில் நீங்களும் ஒருவரா?. கவலைவேண்டாம். இதோ ஒருவர் வழிகாட்டுகிறார். “எப்படி நீங்கள் இந்தச் சமுதாயத்திற்கு உதவுகிறீர்கள்?” எனக் கேட்டபோது, அவருடைய விடைதெளிவான பாதையைக் காட்டியது. “என்ன? என்றுதானே கேட்கிறீர்கள். இதோ, அவர்கூறியவிடை “நான் படிக்காதவன். நல்ல வேலையில்லை. அன்றாடங்காய்ச்சி. பணமில்லை. ஆனால் இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்னும் எண்ணம் மட்டும் இருந்தது. அதனால் நாள்தோறும் பணிக்குப் பேருந்தில் செல்லும்போதும், திரும்பும்போதும் முதியோர்களோ, உடல்நலம் குறைந்தவர்களோ இருக்கையைத் தேடினால் உடனே அவர்கள் இருக்க இடம்கொடுத்துவிடுவேன். உட்கார்ந்து பயணிக்கும் பயணத்தைவிட  ஒருவர்க்கு இடம்கொடுத்துவிட்டு பயணிப்பது அந்நாளை பயனுடைய நாளாக மாற்றிவிடுகிறது. நான் செய்வது பெரிய செயலல்ல. ஆனாலும் என்னைப் பாராட்டுகிறார்கள்” எனக் கூறுகிறார். இதன்வழி, தனக்கு நன்மை செய்யும் சமூகத்திற்கு தான் எவ்வாறு உதவமுடியும் என எண்ணிச் செய்த செயல் எத்தனை மதிப்புடையது. உண்மைதானே?

நாட்டிற்காக உழைத்தவர்களுக்கும், வீட்டிற்காக உழைத்தவர்களுக்கும் நன்றியுடையவர்களாக விளங்கவேண்டும். அவர்களுடைய செயலை மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு குழந்தையையும் தாய் பெற்றுவிடுகிறாள். ஆனால், அந்தக் குழந்தையைப் பத்திரமாகக் காத்து, குளிப்பாட்டி; சீராட்டி ; பாராட்டி ; நலம் காத்து ; அறிவூட்டி வளர்க்கும் பாட்டிக்கும், தாத்தாவிற்கும் எத்தனைக் குழந்தைகள் நன்றியுடையவர்களாக ; பாசமலர்களாக இருக்கிறார்கள். அப்படி இல்லையே. முதியோர் இல்லங்கள் பெருகுகின்றனவே. குழந்தைகள் மலரவேண்டுமா?  தெய்வப்புலவர் திருவள்ளுவர் தாத்தா சொல்வதைச் சொல்லிக்கொடுங்கள்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயர் நட்பு (திருக்குறள்-106)

 

இந்த இரண்டு அடிகளை உள்ளத்தில் பதியவைப்பீர். வீடும் நாடும் நலம்பெறும் ; முதியோர் இல்லமும் குறைந்துவிடும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக