தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

புதன், 4 ஆகஸ்ட், 2021

பிர்ஸா முண்டா - வனம் காத்த வல்லவர்

 


பிர்ஸா முண்டா 


“விடுதலை ! விடுதலை ! விடுதலை ! என மூன்று முறை சொல்லிப்பாருங்கள். உங்கள் மனம் புத்துணர்வு பெறும் முடங்கிக்கிடப்பதில் பெருமையில்லை.  உழைத்துச் சோர்வதில் சிறுமையில்லை. சந்தனம் வாழும்வரை வாசம் தருகிறது. தென்றல் வீசும்வரை இன்பம் தருகிறது. மலர்கள்  வாடும்வரை வாசம் தருகிறது. ஆறானது வாழும்வரை தாகம் தீர்க்கிறது. அப்படி வாழும்வரை , ஆறாக ; சந்தனமாக ; தென்றலாக ; மலர்களாக நாட்டின் நலனுக்காக வாழ்ந்த நல்லோர்கள் குறித்தே இன்று சிந்திக்க இருக்கிறோம்.

மகாகவி பாரதியார் பாடிய “பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் எனப் பாடியது போலவே “நீர் நமது ; நிலம் நமது வனம் நமது” என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார,.  பிர்ஸா முண்டா, மலைவாழ் மக்களில் ஒருவரான விடுதலைப் போராட்டவீரர். ராஜஸ்தான் மாநிலத்தில் மலைவாழ் மக்கள் இயக்கத்தை உருவாக்கினார். 1875 ஆம் ஆண்டு பிறந்தவர்.  சுக்ணா முண்டா, கர்மி ஹட்டு இவரது பெற்றோர்.

திறமையாகப் படித்த இவரை பெற்றோர்கள் பள்ளியில் சேர்க்க எண்ணினர். ஆனால் அங்கு படிக்கவேண்டுமானால் ஆங்கிலேயர்கள் தங்கள் சமயத்திற்கு மாறவேண்டும் எனக் கூறினர். படித்தாகவே வேண்டுமே என ‘பிர்ஸா டேவிட்’ என மாறினார். பின்னர் சர்தார் வல்லபாய்படேல் இயக்கத்தில் சேர்ந்தார். ஆங்கிலேயருக்கு அடிமையாகும் மலைவாழ்மக்களைக் காக்கவேண்டும் என எண்ணினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1895 ஆம்ஆண்டு தமது பத்தொன்பதாம் வயதிலேயே  மக்களைத் திரட்டிப் போராட்டத்தைத் தொடங்கினார். “ஆங்கிலேய அரசு முடியட்டும். நம் அரசு மலரட்டும்” என்பதே அவருடைய முழக்கமாக நின்றது. இத்தகைய வீர முழக்கமிட்டு ஓர் இனத்தையே நாட்டின் வளர்ச்சிக்காக வழிநடத்திய பெருமையுடைய இவருடைய படம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்புதானே.

ஆங்கிலேய அரசாங்கம் எப்படியெல்லாம் நிலத்தைக் கொள்ளையடிக்கலாம் என எண்ணிக்கொண்டிருந்தது.  வாரிசு இல்லாத நிலத்தை தனக்குச் சொந்தம் என அறிவித்தது. வாரிசுகளைத் தத்து எடுக்கவும் தடைவிதித்தது. எதைப்பயிரிடவேண்டும் என ஆங்கில அரசே முடிவு செய்து மக்கள் வறுமையில் சாக வழி செய்தது.

“வனங்கள் அனைத்தும் இனி ஆங்கில அரசுக்கே சொந்தம்” என்னும் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதனை எதிர்த்துப் போராடியவர்தான் இந்த பிர்ஸா முண்டா. வணிகம் செய்ய வந்தவர்கள் இயற்கை அன்னை கொடுத்ததை உரிமை கொள்வது கொடுமை எனப் போராடினார். ஜமீந்தார்களையும் நிலவுடைமையாளர்களையும் மிரட்டியும் பொருள்கொடுத்தும் அச்சுறுத்தியும் தன்வசமாக்கியது ஆங்கிலேய அரசு.  “தனி மரம் தோப்பாகாது” என மக்களைத் திரட்டி நாட்டைக்காக்கப் போராடினார். மண்ணைக் காக்கப் போராடியதால் இவருடன் மலைவாழ் மக்களும் இணைந்து போராடினர். “மண்ணின் தந்தை’ எனக் கொண்டாடினர்.

ஆங்கிலேயர்கள், இந்தியர்களை எப்போதும் வெல்ல முடியாத அளவிற்கு வீரத்தில் குன்றியே இருந்தனர். ஆனால், ஆயுதங்களைக்கொண்டே இந்தியர்களை வீழ்த்தினர்.. துப்பாக்கி, பீரங்கி குறித்து அறியாத மக்களிடம் வீரத்தைக் காட்டியவர்கள் ஆங்கிலேயர்கள். அறநெறியாகப் போர்செய்தே பழக்கப்பட்ட இனமாக இருந்த இந்தியர்கள், அக்காலத்தில் புதிதாகக் கண்டுபிடித்த இத்தகைய வெடிக்கும் ஆயுதங்களைப் புரிந்துகொள்ளமுடியாமலே தோற்றனர். இதனைக் கண்டு பலரும் அஞ்சினர். அஞ்சுவது இயல்புதானே. ஆனால் அஞ்சாது போராடிய வல்லவர்களும் இருந்தனர். அவர்கள் முண்டாவுடன் இணைந்து போராடினார். 1899 ஆம் ஆண்டு கொரில்லா முறையில் ஆங்கிலேயர்களை எதிர்கொண்டனர். தம்மிடமிருந்த வில், அம்புகளைக் கொண்டு போராடினர்.  ‘உல்குலான்; என இப்போர் அழைக்கப்பட்டது.  உல்குலான் என்பது புரட்சியைக் குறிக்கும். 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் நாள் இவரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். கொடுமையாகத் தண்டித்தனர்.

ஆங்கிலேயர்கள் மக்களை அச்சுறுத்தசெய்த முதல் காரியம், மக்களிடம் செல்வாக்கு மிகுந்தவர்களை மிகவும் இழிவாக நடத்துவது. சாலையில் ஆடைகளின்றி அடித்து இழுத்துச்செல்வது, சாட்டையால் அடிப்பது, எட்டி உதைப்பது, மக்களுக்கு நடுவே தூக்கிலிடுவது. தலையை வெட்டுவது எனப் பல கொடுமைகள் செய்தனர். ஒவ்வொரு ஊரிலும் எதிர்த்த அல்லது ஒன்றுகூட்டிய தலைவர்களையே இவ்வாறு கொடுமை செய்தனர். ஆனால், நயவஞ்சகமாகச் சிலர் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சொந்த தாய்நாட்டுக்கு எதிராக நின்றனர் ; வீரத்துடன் போராடிய தலைவர்களைக் காட்டிக்கொடுத்து பணத்தையும் ; பதவியையும் பெற்றனர். அத்தகைய துரோகிகளால் வீரர்கள் தோல்வியடைந்தனர் ; உயிரிழந்தனர்.

சிறையில் கொடுமைக்குள்ளான அவ்வீரர் இரத்த வாந்தியெடுத்து கடும் நோயால் பாதிக்கப்பட்டார். இக்கொடுமைகளால் இறந்ததனை மக்கள் அறிந்தால் போராட்டம் எழக்கூடும் என எண்ணிய ஆங்கில அரசு “காலரா பெருந்தொற்று நோயால் இறந்தார்” என அறிவித்தது. அப்போது அவருடைய வயது இருபத்தைந்துதான். இருபத்தைந்து வயதிலேயே நாட்டுப்பற்று கொண்டு மக்களின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களைப் போற்றுவது நம்கடமைதானே. அவர் அன்றுபோராடியதால்தான், பஞ்சமர் நிலத்தை யாரும் கையகப்படுத்தக்கூடாது என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உழைப்பவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் எனவும் போராடியவர்.

       நம்முடைய நாடு எத்தனை ஆண்டுகள் ஆயினும் இத்தகைய பொன்னான மனிதர்களின் உழைப்பினைப் போற்ற மறந்ததில்லை. இன்று அவருடைய பெயரில் கல்லூரி திறக்கப்பட்டிருக்கிறது. ஜார்கண்ட் விமான நிலையத்துக்கே அவருடைய பெயர்தான் சூட்டப்பட்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் – இது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்

என்னும் மகாகவியின் சொற்களுக்கு செயல்வடிவமாக நின்றவர் இந்த பிர்ஸாமுண்டா. தேசத்தைக்காக்கப் போராடியமுன்னோர்களைப்போல் தேசத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்.

       மானம் மட்டுமல்ல தேசமும் உயிரை விடப்பெரிது என்பதனை உணர்த்துவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக