தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 30 செப்டம்பர், 2023

இந்திய நெப்போலியன் சமுத்திர குப்தர்

 

இந்திய நெப்போலியன் சமுத்திர குப்தர்

குப்தவம்சத்தின் ஆட்சியினைப் பிரயாகை (அலகாபாத்) கல்வெட்டு எடுத்துரைக்கிறது.  இக்கல்வெட்டின்வழி பிரயாகை முதல்  காஞ்சிபுரம் வரை ஆட்சி செய்த  சமுத்ரகுப்தரின் வீரம் புலப்படுகிறது.  ஸ்ரீகுப்தர் (பொது ஆண்டு 240-280) இவ்வம்ச ஆட்சியினைத் தொடங்கியதால் குப்தவம்சமாயிற்று. அவரைத்தொடர்ந்து கடோத்கஜர்(பொ.ஆ.280-319), முதலாம் சந்திரகுப்தர் (பொ.ஆ.319-335) , எனத் தொடர்ந்துவந்த இவ்வாட்சியில் சமுத்திரகுப்தர் (பொ.ஆ. 335- 375) சிறந்துவிளங்கினார்.   தில்லி, உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான், அசாம், வங்காளம், நேபாளம், பஞ்சாப் , தமிழகம் எனப் பல இடங்களில் தம்முடைய செல்வாக்கினை நிறுவினார். மன்னர் பரம்பரையினையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள்கொண்டுவந்தார். எனவே, பேரரசராகத் திகழ்ந்தார். நூற்றுக்கும் மேற்பட்ட போர்கள் செய்து நூற்றுக்கணக்கான விழுப்புண் பெற்றார். அதனால் ‘பராக்கிரமன்’ என்னும் பட்டத்தைப் பெற்றார். உலகத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என எண்ணினார். ‘தரணி பந்தம்’ என்பதனையே தன்னுடைய கொள்கையாகக் கொண்டிருந்தார். அச்யுதா, நாகசேனா, கணபதி நாகா எனப்பல மன்னர்களை வெற்றிகொண்டார். அவர்கள் மன்னிப்புகேட்கவே  மீண்டும் அவர்களையே தன்னுடைய கட்டுப்பாட்டுற்குட்பட்ட ஆட்சியாளராக்கினார். இவர்கள் மூவருடைய பெயரும் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பலமன்னர்களை வென்றாலும் இவர்களுடைய பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏனெனில்,  சந்திரகுப்தரின் தந்தை   இறப்பிற்குப்பின்  இம்மூவருமே பெருங்கலகம் விளைவித்தனர்.  இவருடைய எதிரிகள் கனவில் கண்டு அஞ்சும் அளவிற்கு வீரத்தில் சிறந்துவிளங்கினார் சமுத்திரகுப்தர்.  உலகவரலாற்றில் நெப்போலியன் போல்  பலபோர்களில் வென்றதால் சமுத்திரகுப்தரை ‘இந்திய நெப்போலியன்’ எனக் குறிப்பிடுவர்.

இலங்கை அரசன் மேகவர்மன் கயாவில் ஒரு மடம் கட்டிக்கொள்ள ஒப்புதல் வேண்டினார். அதற்காக சமுத்திரகுப்தருக்குப் பரிசுப்பொருட்களைக்  கொடுத்ததற்கான சான்றுகளும் உள்ளன. வெற்றிகளைக் குவித்த சமுத்திரகுப்தர் தன்னுடைய வெற்றியை எதிரிகள் அறியவும்   சிற்றரசர்கள் அறியவும் அசுவமேத யாகம் நடத்தினார்.  போரில் பல மன்னர்களை வெற்றிகொண்டதால் ‘மன்னர்களை வீழ்த்துபவர்’ எனப் போற்றினர். கவிதைகள் இயற்றி புலமையில் வல்லவராக விளங்கியதால்  இவரைக் ‘கவிஞர்களின் அரசர்’ எனவும்  போற்றினர். போரில் மட்டுமின்றி கலைகளிலும் ஆர்வம்கொண்ட சமுத்திரகுப்தர் பக்தியை வளர்ப்பதற்கும்  சமஸ்கிருத இலக்கியங்களை வளர்ப்பதற்கும் பணிசெய்தார். சமுத்திர குப்தர் இசையிலும் ஆர்வம் கொண்டிருந்தார். இதனை அவர்வெளியிட்ட தங்கநாணயங்கள்வழி அறியமுடிகிறது.  அந்நாணயத்தில்  வீணைவாசிப்பதைப்போல் அவருடைய உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஒரு மன்னனுக்கு உரிய குணங்கள் இப்படி இருந்தால் நலம் என வாழ்ந்துகாட்டியவர் சமுத்திரகுப்தர் என வரலாறு குறிப்பிடுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக