தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 30 செப்டம்பர், 2023

அதியமான் செய்த பிழை

 

அதியமான் செய்த பிழை

 

புகழெனின் உயிரைக் கொடுப்பது உயர்ந்தோர் போக்கு. பசியெனின் உணவைக் கொடுப்பது  நல்லோர் போக்கு.  திறமெனின் பரிசு கொடுப்பது செல்வர் போக்கு. இம்மூன்று கொள்கையினையும் உடையவராகவே தமிழரசர்கள் திகழ்ந்தனர் என்பதனைச் சங்க இலக்கியங்கள் உணர்த்துகின்றன. ஒவ்வொருவருடைய திறத்தை அறிந்து பரிசு கொடுப்பது ஒரு கலை. அவ்வாறு மக்களின் ஒவ்வொரு கலையினையும் ஊக்குவிப்பவனாக அரசன் இருந்தான். அதனால்தான் ஓவியம், பாட்டு, இசை, சிற்பம் எனப் பல கலைகள் வளர்ந்தன. அதனால்தான் சித்திரக்காரர்களும் பாணர்களும் புலவர்களும் சிற்பிகளும் அரசனிடம் பொருள்பெற்று வாழ்ந்தனர். அரசர்கள், இத்திறமுடையோரை ஊக்குவிக்கும்வகையில் உளம் மகிழ வரவேற்று அக்கலைஞர்களுக்குப் பரிசளித்தனர். பரிசு பெற்றவர்கள் மீண்டும் மீண்டும் வந்தாலும் முதல்நாள் பார்த்து மகிழ்ச்சியுடன் வரவேற்றதைப் போலவே வரவேற்று பரிசளித்தார்கள். அதியமான் நெடுமான் அஞ்சி அத்தகையோரில் சிறந்து விளங்கினான் என்பதனை

ஒருநாள் செல்லலம் ; இருநாள் செல்லலம்

பலநாள் பயின்று  பலரொடு செல்லினும்

தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ (புறநானூறு – 101)

ஏன்னும் புறநானூற்றுப்பாடல் எடுத்துக்காட்டுகிறது. இப்பாடலில் அரசனின் உயர்ந்த பண்பினை இருநிலைகளில் உணர்த்துகிறார் தமிழ்மூதாட்டி ஔவையார். பலநாள் சென்றாலும் வரவேற்பான் என்பது ஒன்று. பலரோடு சென்றாலும் வெறுப்படையாது விருப்புடன் அளிப்பான் என்பது மற்றொன்று. இவ்வாறு அள்ளிக்கொடுக்கும் அதியமானை அனைவரும் புகழ்வர் என்பதனை உணர்த்துகிறார் ஔவையார்.

இவ்வாறு, தத்தமது கலைகளில் திறம் மிகுந்தார்க்கும் இடைப்பட்டார்க்கும் இளையார்க்கும் ஒன்றுபோலவே பரிசளிப்பது நன்றன்று என எண்ணுகிறார் புலவர் பெருஞ்சித்திரனார்.  அரசனின் பெருமைக்கு நிலவில் உள்ள கலங்கம்போன்று இச்செயல்பாடு குறைபாடுடையதே எனப் புலவர் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுகிறார். ஒருமுறை அதியமானை காணச்சென்ற பெருஞ்சித்திரனார் அரசனைக்  காணக் காத்திருக்கிறார். அரசன் பணியின் காரணமாக அவரைக் காணமுடியவில்லை. இருப்பினும், உரிய பணியாட்களிடம் பெருஞ்சித்திரனார்க்குப் பரிசினைக் கொடுத்துவிடப் பணிக்கிறார். அவ்வாறு, காணாது கொடுக்கும் பரிசினை இழிவாகக் கருதுகிறார் பெருஞ்சித்திரனார்.

காணாது ஈந்த இப்பொருட்கு யான் ஓர்

வாணிகப் பரிசிலன் அல்லேன் ; பேணி

தினை அனைத்து ஆயினும், இனிது  அவர்

துணை அளவு அறிந்து நல்கினர் விடினே ( புறநானூறு- 208)

எனப்பாடி மறுக்கிறார். பெருஞ்சித்திரனார், பரிசு குறையினும் குறையில்லை.  அரசன் தன் புலமையினைக் காணாது கொடுத்ததே குறை என எண்ணுவதனைக் காணமுடிகிறது. புலமையினை அறிதலே பொருளினும் பெரிது என எண்ணிய புலவரின் ஆளுமையினையும் இப்பாடல் உணர்த்திவிடுகிறது.

           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக