தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

இந்தியா உலகுக்கு வழிகாட்டும்

 


உலகுக்கு வழிகாட்டும் இந்தியா

இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் எல்லாம் அடிதடிதான். ஆனால், இங்குமட்டும் அமைதியாக வாழமுடிகிறதே எப்படி? இதுதான் புண்ணியபூமி. எண்ணிப்பாருங்கள் நமது முன்னோர்கள் கற்றுக்கொடுத்த பாடம் அப்படி.

     வீரச்சிறுவர்களுக்கு விருதளிக்கும் விழா நடந்துகொண்டிருக்கிறது.  விருதுவாங்கவந்த குழந்தைகளைக்கண்டு விருதளிக்கும்விழாவிற்கு வந்தோர் வியப்படைந்தனர். யார் இவர்கள் எலும்பும் தோலுமாய்? என கேட்டபோதுதான் தெரிந்தது. அந்தக் குழந்தைகள், ஏரியின் நீரைக் கடத்திச்செல்ல செய்யப்பட்ட குழாய்களையே வீடாகக் கொண்டவர்கள் என்பது. இவர்களுக்கு ஏன் வீர விருது.  அந்த சின்ன வட்டத்திற்குள் இவர்கள் வாழ்க்கை வட்டம் அமைந்துள்ளதே அதற்காகவா? என்றுதானே கேட்கிறீர்கள். இல்லை. அப்படியென்றால் விருதுக்கு ஆயிரக்கணக்கானோர் தகுதியாகிவிடுவார்கள். சுனாமி வெள்ளத்தின்போது வீடுகளில் இருந்தவர்கள் எல்லாம் மாடிக்கு ஓடிப்போய் உயிரைக்காப்பாற்றிக்கொண்டார்கள் நினைவிருக்கிறதா?. ஆம் ! அந்த நேரத்தில் விமானத்திலிருந்தும் உலங்கு (ஹெலிகாப்டர்) ஊர்தியிலிருந்தும் உணவுப்பொட்டலங்களை வீசினார்களே நினைவிருக்கிறதா?. ஆம் ! அந்நேரத்தில் மாடியில் விழாமல் வெள்ளத்தில் விழுந்த பொட்டலங்களை எடுத்துக்கொடுத்த குழந்தைகள்தான் இவர்கள். அதற்காகத்தான் இந்த விருது. அவர்களின் உண்மையான அன்பினை அரசு பாராட்டுவது சிறப்புதானே !

     ஒட்டிய வயிறுடன் நிற்கும் அந்தக் குழந்தைகளிடம், “நீங்கள் உணவுப்பொட்டலங்களையெல்லாம் எங்களுக்குக் கொடுக்கிறீர்களே. நீங்கள் சாப்பிடவில்லையா?” என மாடியில்நின்றுகொண்டு பசியில்தவித்த ஒருவர் கேட்கிறார். “நீங்க பசிதாங்க மாட்டீங்க சாமி. எங்களுக்குப் பட்டினி பழகிவிட்டது” எனக் கூறி சிரித்த முகத்துடன் அடுத்த பொட்டலத்தை எடுக்க தண்ணீருக்குள் பாய்ந்தான் அந்த வீரச்சிறுவன். இங்கு, “யார் சாமி?” என்றுதானே எண்ணுகிறீர்கள். உண்மைதான். எத்தனையோ இயல்பான நாட்களில் எல்லாம் அவர்கள் சோறுகேட்டார்கள். இவர்கள் துரத்திவிட்டார்கள். ஆனால், இன்று அவர்கள் கேட்காமலே இவர்கள் சோறு போடுகிறார்கள். கடவுள் எப்போதும் யார் வழியாகவே படி அளக்கிறார். பாடமும் அளிக்கிறார்தானே. இப்படிப்பட்ட மண் நம் மண். நம்புகிறீர்களா? இல்லையா? மேலே நடந்த நிகழ்வினைப் படம்பிடித்துக்காட்டியவர் ஒரு சிறந்தசொற்பொழிவாளர். நீங்கள் நம்பினால் நன்றி. முன்னரே நம்பியிருந்தால் மிக்க நன்றி.

     இந்தப்பொன்னான பூமியில் விளைவதை உண்டுகொண்டே இந்நாட்டினை இழிவாகப் பேசுவோரைக்கண்டால்தான் கவலையாக இருக்கிறது. பெற்றதாயையே குறைசொல்லும் மகனை என்னென்பது?. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் திறமையைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு அவரைக் கைதுசெய்தது. மொட்டை அடித்தது. கோணியில் ஆடைசெய்து அணியச்செய்தது. செக்கிழுக்க வைத்து சாட்டையில் அடித்தது. கயிறு திரிக்கவைத்து கைகளைப் புண்ணாக்கியது. புழுக்கள் நெளியும் உணவைக் கொடுத்தது.

நாள்தோறும் பலருக்கு உணவிட்டு வேலைகொடுத்து மகிழ்வித்த பெருமகனை இவ்வாறெல்லாம் இழிவுபடுத்தியது ஆங்கிலேய அரசு. தன்மானத்துடன் எதிர்த்தவர்களை எல்லாம் பறவைகளைச் சுட்டுத்தள்ளியதுபோல் தள்ளினர். பறவைகளாவது பறக்கமுடியும். ஆனால், விடுதலை வீரர்களை (கை, கால்களில்) சங்கிலியால் பிணைத்திருந்தனர். தன்னலம் பெரிதென எண்ணியிருந்தால் வக்கீல் தொழிலில் பெரும் பணக்காரராக வாழ்ந்திருக்கலாம். மக்களை அடிமை நிலையிலிருந்து காக்கவேண்டும் என எண்ணினார். அதனால் கொடுமைக்கு உள்ளானார். வக்கீல் தொழில் செய்யக்கூடாதென்று உரிமையைப் பறித்துக்கொண்டனர் ஆங்கிலேயர்கள். அரிசி கடையில் வேலைசெய்து அரிசியினைக் கூலியாகப் பெற்றார். அதனைக்கண்டு பொறுக்கமுடியாமல் அவருக்கு வேலைக்கொடுத்த கடைக்குப் பூட்டுபோட்டனர். இப்படி வாழ்நாள் முழுதும் தலைவணங்கி வாழவேண்டிய தலைவரை இழிவுபடுத்தி மகிழ்ந்தனர். கப்பலோட்டிய தமிழர் வழியில் தேசத்திற்காக தனது இன்ப வாழ்வை துன்பமாக்கிக்கொண்டவர்கள் பலர்.

உலகையே ஆண்ட தமிழினம் ; கடல் கடந்துசெல்ல கற்றுக்கொடுத்த தமிழினம் ; கோவில்களையும் அணைகளையும் கட்டி உலகமே வியக்கவாழ்ந்த தமிழினத்தை ஆங்கிலேயர்கள் வஞ்சகத்தால் அடிமையாக்கினர். தமிழர்கள் வீரத்தைக்கண்டு மிரண்டவர்கள் ஆங்கிலேயர்கள். அதனால்தான் தங்களால் எதிர்க்கமுடியாத நிலையில் பல நாட்டவருடன் கூட்டுசேர்ந்து சதிசெய்து வீழ்த்தினர். திப்புசுல்தானை வெல்லமுடியாத ஆங்கிலேயர்கள் நெப்போலியனின் துணைகொண்டு வீழ்த்தினார்கள். ஆனால், அதற்குப் பின் தீரன் சின்னமலையுடன் போரிட்டு தோற்றோடினார்கள். நம் முன்னோர்கள், மாவீரன் நெப்போலியன் எனப்பாடம் சொல்லிக்கொடுத்தார்களேயன்றி ‘மாவீரன்’ தீரன் சின்னமலை எனப் பாடம்சொல்லிக்கொடுக்க மறந்தனர்.

ஒவ்வொருவரும் தேசியகீதத்தை நாள்தோறும் பாட வேண்டும். தேச உறுதிமொழியை நாள்தோறும் ஒரு முறையாவது முழங்கவேண்டும். அப்பொழுதுதான் தேசப்பற்றுவளரும். தேசப்பற்று வளர்ந்தால்தான் நாட்டினை முன்னிறுத்த வேண்டும் என உழைக்கும் எண்ணம் ஏற்படும். குடும்பமும் நலம்பெறும். நாடும் நலம்பெறும்.

தேசியகவி இரவீந்திரநாத்தாகூருக்கு ‘சர்’ பட்டம் என்னும் உயரிய பட்டத்தை வழங்கினார். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற படுகொலையில் அப்பாவி மக்களைக் கொன்றான் டயர். ஈவு இரக்கமற்ற அச்செயலைக்கண்ட ‘தேசியகவி’ அந்தப்பட்டத்தைத் திருப்பிக்கொடுத்தார். ஒவ்வொரு குடிமகனும் தம்மால் இயன்ற செயலைச்செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும். வெளிநாடுகளுக்கு இது பொறுக்குமா? பொறுக்காது. அதனால்தான் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த பெண்களுக்கு தொலைக்காட்சி, குழந்தைகளுக்கு விளையாட்டு, இளைஞர்களுக்குப் போதை, தவறான உணவுப்பழக்கம்  என தீய பழக்கங்களை இறக்குமதி செய்துவருகின்றனர். மக்கள் அறியாமையால் சிக்கிக்கொண்டு உடல் வலிமையை இழந்துவிடுகின்றனர். 

தங்களுடைய நாட்டு மக்களுக்கு, விளையாட்டுப்பயிற்சியளிக்க தொழில் நுட்ப விஞ்ஞானிகளையும் வல்லுநர்களையும் தொழில் நிறுவனங்களையும், வானவியல் தொழில்நுட்பத்தையும் கொண்டு பயிற்சியளிக்கின்றனர். உலக நாடுகள் வளர்வதில் தவறில்லை. ஆனால், நம்மை வளரவிடாமல் செய்வது எத்தனை தவறு. இதனை இன்றைய தலைமுறை நன்குணரவேண்டும். உங்கள்மீது வீசப்படும் வலைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது. உங்கள் நலமே முக்கியம் ; உங்கள் குடும்பம் முக்கியம் ; உங்கள் தலைமுறை முக்கியம் என்பதனை உணரவேண்டும்

உலகமே இன்று இந்தியாவை வியந்துபார்க்கிறது. அதற்குக்காரணம் வேகம் மட்டுமன்று ; விவேகமும்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக