தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

தியான்சந்த் – ஹாக்கியின் கதாநாயகன்

 


தியான்சந்த் – ஹாக்கியின் கதாநாயகன்

     தியான்சந்த் ஆடக்கூடிய  ஹாக்கி (வளைதடி) கட்டையை ‘மந்திரக்கட்டை’ என நினைத்தனர். அதனை வாங்கி உடைத்தும்பார்த்தனர். அதில் ஏதாவது பந்தை ஈர்க்கும் காந்தம் இருக்கிறதா? என ஆய்வு செய்தனர். ‘இல்லை’யென அறிந்தபின்னர் அவருடைய விளையாட்டுத்திறனைக்கண்டு தலைவணங்கினர். அந்த அளவிற்குப் பந்தை எடுத்துச்செல்லும் திறன் வியக்கத்தக்கது. எதிர்நிலையில் நிற்கும் வீரர்களுக்குப் பந்து மாயமாவதே தெரியாமல் திணறுவர். வெறுங்காலோடு ; சீரற்ற விளையாட்டுத்திடலில் ; அந்நியர் ஆண்ட இந்தியாவில் இத்தனை திறமைகளுடன் ஒருவர் விளையாடினார் எனில், அவரை இந்தியர் ஒவ்வொருவரும் தலைமேல்வைத்துத்தானே கொண்டாடவேண்டும்.

இவருடைய ஆட்டம் ஐரோப்பியநாடுகளுக்கு அச்சமூட்டியது. இந்தியா அனைத்து நாடுகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கியது. அன்று அவர்தொடங்கிய ஆட்டமே இன்று தேசிய விளையாட்டாக்கும் பெருமையினைக் கொண்டதாகத் திகழ்கிறது. இப்போட்டியில் இந்தியாவைக் கண்டு அனைத்து நாடுகளும் அஞ்சின. 1928 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் நெதர்லாந்தை  மூன்றுக்கு ஒன்று என்னும் புள்ளிக்கணக்கில் வென்று சாதனைப் படைத்தது. பின்னர் 1932 ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இருபத்துநான்குக்கு ஒன்று என்னும் புள்ளிக்கணக்கில் வென்று சாதனைப்படைத்தது. 1936 ஆம் ஆண்டு எட்டுக்கு ஒன்று என்னும் புள்ளிக்கணக்கில் வென்று சாதனைப்படைத்தது. இவ்வெற்றிக்குப் பின்னால் நின்றவர் தியான்சந்த். இவர் விளையாடிய பன்னிரண்டு ஒலிம்பிக் போட்டியில் முப்பத்துமூன்று கோல்கள் அடித்தார்.

1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற விளையாட்டில், உலகமே கண்டு அஞ்சிய ஜெர்மனியின் தலைவர் ஹிட்லர் தியான்சந்தின் ஆட்டத்திறனில் மயங்கினார். தியான்சந்தை அழைத்து ஜெர்மனியின் குடிமகனாக மாறவும் தரைப்படையின் உயர்ந்தபதவியான கர்னல் பதவியைத் தருவதாகவும் கூறினார். “உங்கள் நாடு மிஞ்சிப்போனால் என்ன பதவியை அளித்துவிடப்போகிறது. என்னைப்போல் உன்னை உயர்த்தும் கடமையினை உன்னுடைய நாடு செய்யாது” என்றார். அதற்கு தியான்சந்த “என்னுடைய நாட்டிற்கு என்னை உயர்த்துவது மட்டும் பொறுப்பில்லை. அங்கு கோடிக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஆனால், எனக்கு என் நாட்டைப் உயர்த்தும் பொறுப்பு இருக்கிறது” எனக் கூறினார். கொடுங்கோலரான ஹிட்லர்,  தியான்சந்தின் ஆட்டத்தை மட்டுமில்லாமல் நாட்டுப்பற்றைக் கண்டு வியந்துநின்றார்.

ஐரோப்பியர்களின் அடிமைப்பிடியில் இருந்த இந்தியர்கள், தியான்சந்த் விளையாட்டில் ஐரோப்பியர்களை திணறடிப்பதைக் கண்டு மகிழ்ந்தனர் ; பெருமை கொண்டனர்.

மேஜர் தியான்சந்த் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் இருபத்தொன்பதாம் நாள் இராஜபுத்திரவம்சத்தில் அலகாபாத்தில் பிறந்தார். தந்தை இராணுவத்தில் பணிசெய்தார். பணிமாற்றம் பெற்றதால் உத்தரப்பிரதேச மாநில ஜான்சியில் வளர்ந்தார். ஹாக்கி வீரரின் மகனாகப் பிறந்ததால் இயல்பாகவே அவ்விளையாட்டில் திறமையுடையவராக விளங்கினார். இதனை அவர் உணராமல் மலியுத்தம் குத்துச்சண்டை விளையாட்டுகளில்தான் ஆர்வமுடையவராக விளங்கினார். பதினாறு வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்தார். இராணுவத்தில் ஒவ்வொரு பிரிவினருக்கும் நடைபெற்ற ஹாக்கிப்போட்டியில் இவருடைய திறமையை அனைவரும் கண்டு வியந்தனர்.

தியான்சந்த் இரவு நேரத்தில் பணிக்குப்பின் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபடுவார். சந்திரன் வெளிச்சத்தில் விளையாடிய அவரை அனைவரும் ‘சந்த்’  என்றே அழைத்தனர். என்ன அழகான பெயர்பொருத்தம் பாருங்கள்.

புதிதாகத் தொடங்கிய இந்திய ஹாக்கி கூட்டமைப்பு 1928 ஆம் ஆண்டு தியான்சந்தைத் தேர்வு செய்து ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பியது. அங்கு நடைபெற்ற ஐந்து போட்டியில் பதினான்கு கோல்கள் அடித்தார். 1932 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இவருடைய சகோதரர் ரூப் சிங்கும் பங்கேற்றார். 1936 ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிக்குத் தலைமைப்பொறுப்பேற்று கலந்து கொண்டார். இப்போட்டியில் இரண்டாவது சுற்றில்  வெறுங்காலோடு ஆடிவெற்றிபெற்றார்.  

 

ஹாக்கியின் மந்திரவாதியாகவே மதிக்கப்பட்டார். 1926 முதல் 1949 வரை அவர் விளையாடிய 185 போட்டிகளில் 570 கோல்களை அடித்தார்.

     தியான்சந்த் பிறந்த ஆகஸ்டு 29 ஆம் நாள் தேசிய விளையாட்டு நாளாகக் கொண்டாடப்படுகிறது. தலைநகரில் உள்ள தேசிய அரங்கம் “மேஜர் தயான் சந்த்’ தேசிய அரங்கமாக ஒளிர்கிறது.  

1928 இல்  இந்தியா ஒலிம்பிக்கின் எட்டுத்தங்கப்பதக்கங்களில் ஏழினை வெற்றிப்பயணத்தைத் தொடங்கினார். தொடர்ந்து இந்தியாவின் பெருமையினை உலகறியச்செய்தார். அவர் 1979 ஆம் ஆண்டு திசம்பர் மூன்றாம் நாள் மறைந்தாலும் 1956 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கிப் பாராட்டியது.  

     இப்பொழுது சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு அவருடைய பெயரால் விருது தரப்படுகிறதென்றால் பொற்குடத்தில் வைரக்கல் வைப்பதுபோலத்தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக