தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 6 ஜூலை, 2021

கவனமா இருங்க – ஔவையாரின் அறிவுரை

 


கவனமா இருங்க – ஔவையாரின் அறிவுரை

     ஒருவன் காட்டின் வழியே அடுத்த ஊருக்குச் செல்ல வேண்டுமெனத் தன் பாட்டியிடம் விடைபெற்று செல்கிறான். அப்போது பாட்டி, “காட்டில், ‘புலி’ என்ற கொடிய விலங்கு இருக்கும். அது கூர்மையான நகங்களுடன் இருக்கும் ; வரிகளுடன் இருக்கும் ; நான்கு கால்களுடன் இருக்கும் ; கூரிய பார்வை மற்றும் மீசையுடன் இருக்கும் ; அச்சத்தை உருவாக்கும் ; பதுங்கும் ; பின் பாயும். ஒரே அடியில் கொன்றுவிடும் கவனமாகச் செல்லவேண்டும்” என அறிவுறுத்தினாள்.  “சரி, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று வீட்டை வீட்டு வெளியே சென்றவன் ஐந்தே நிமிடத்தில் ஓடி வருகிறான்.

“பாட்டி நீ சொன்ன மிருகம் வந்துவிட்டது. அதனால்தான் வந்துவிட்டேன்.” எனப் பதற்றத்துடன் கூறினான். “எங்கே இங்கெல்லாம் புலிவராதே. சரி ! வா,” எனத் தீப்பந்தத்தை எடுத்துச் செல்கிறாள். “புலியைக் காணவில்லையே” என்றாள். அப்போது ஓரமாக நின்று “மியாவ் மியாவ்” என ஒரு விலங்கு கத்துகிறது. “இதோ நீங்க சொன்ன புலி என்றான் பேரன். “அடக்கோழையே ! இது, புலியில்லை பூனை” என்றாள். “கொடியில் சிக்கிக்கொண்டிருக்கிறதே” எனக் கூறிக்கொண்டே அந்தப் பூனையைக் கொடியிலிருந்து விடுவித்தாள். பூனை நன்றி கூறுவதுபோல் அவளுடைய காலைச் சுற்றிவந்து ஓடிவிட்டது.  

இரண்டு நாள் ஓடியது. பேரன் மறுபடியும் பாட்டியிடம் விடைபெற்றுச்செல்கிறான்.  . அப்போது காட்டின் வழியே செல்லும்போது ஒரு புலி பள்ளத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறது. உடனே, தன் பாட்டி உதவி செய்ததை எண்ணி, பக்கத்திலிருந்த நீளமான மரக்கட்டையை எடுத்து சறுக்குமரம்போல் போட்டான். புலி, உடனே எளிமையாக அக்கட்டையில் ஏறிவந்து, ஒரே அடி அடித்து அவனைக் கொன்றுவிட்டது. பேரனின் அறியாமையே அவனைக் கொன்று விட்டது. ஒவ்வொரு விலங்கின் இயல்பினை அறிந்துகொண்டால் மட்டுமே அந்த விலங்கிடமிருந்து காத்துக்கொள்ளமுடியும்.

     ஒரு விலங்கின் இயல்பை அறியாதவனே கொல்லப்படுகிறான் எனில், பல விலங்கின் இயல்பினைக் கொண்ட மனிதர்களுடன் பழகும்போது எப்படி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். அப்படி எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் என்னாகும், என்பதனை,

     வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்குஅதனுக்கு ஆகாரம் ஆனாற்போள் - பாங்கறியாப்

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின் மேல் இட்ட கலம். (மூதுரை-15)

 

என்னும் பாடலின்வழி தமிழ் மூதாட்டி ஔவையார் அழகாக உணர்த்திவிடுகிறார்.

மருத்துவர்கள், தம்முடைய அறிவால், பிறருடைய  உயிரைக்காத்து நிற்கின்றனர். அதனால்தானே, அவர்களைக் கடவுளாக எண்ணுகிறோம். மிகவும் கருணை உடையவர்களாக வாழும் மருத்துவர்கள் பிற உயிர்களின் துன்பத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். ஆனால், அவர்கள் தங்கள் பாதுகாப்பையும் உணரவேண்டும்தானே? உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா? எளிமையாகப் புரிந்துகொள்வீர்கள்.

     ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமையாக்க, இந்திய வீரர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலம். ஆங்கிலேயர்கள், ஆயுதமில்லாத இந்தியர்களை ஆயுதம் கொண்டு தாக்கி ; துன்புறுத்தி ; சித்திரவதை செய்து கொன்றுகுவித்த காலம். துணிவுடன் எதிர்த்த தலைவர்களின் தலையைக்கொய்து, நடு சாலையில் பல நாட்கள் தொங்கவிடுவர். இவ்வாறு அச்சத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்திய கோழைகளாகவே ஆங்கிலேயர் விளங்கினர்.  நெல்மணிகளை பயிரிட தடைவிதித்து வறுமையில் உழலவைத்தனர். வணிகம் செய்யவிடாமல் தடுத்தனர். தலைப்பாகையுடன் பெருமிதத்துடன் வாழ்ந்த ஊர்த்தலைவர்களையெல்லாம் ஆயுதத்தால் தாக்கி, அச்சத்தை ஊட்டி, ஆடையைக் கழற்றி ஓடஓட விரட்டியடித்தனர். நம் நாட்டில் காட்டிக்கொடுக்கும் குணமுடைய சிலரைத் தம்முடன் வைத்துக்கொண்டு, விடுதலை வீரர்களை வேட்டையாடினர்.

ஒரு முறை, விடுதலை வீரர்கள் இருவரைத் துரத்திக்கொண்டு ஆங்கிலப்படை வீர்ர்கள் (அவர்களுள் பலர் இந்தியர்கள்தான் ஆங்கிலேயரிடம் இருந்துதப்பிக்க அவர்களுடன் கூட்டுசேர்ந்து காட்டிக்கொடுத்தவர்கள்)  வருகின்றனர். ஒரு வீட்டிற்குள் இரண்டு வீரர்களும் நுழைந்துவிடுகின்றனர். அங்கு நின்ற பெண்மணியிடம் “நாங்கள் விடுதலை வீர்ர்கள், எங்களை ஆங்கிலப்படை துரத்துகிறது” எனக் கூறுகின்றனர். அந்தத்தாய், அவர்களை தானிய அறையில் மறைந்துகொள்ளும்படி கூறித்தாழிட்டுவிடுகிறாள். கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. அவள்,  படபடப்புடன் கதவைத் திறக்கிறாள். “என்ன, இங்கே ஓடிவந்த இரண்டு பேர் எங்கே?” எனக் கேட்கின்றனர். “இதோ எனக் கைகாட்டுகிறாள். போர்வைக்குள் ஒளிந்திருக்கிறார்கள் என எண்ணி பல குண்டுகளால் இருவரையும் சுட்டனர்.  “இனி, விடுதலை வீரன் என எவர் வந்தாலும் இடம்கொடுக்கக் கூடாது” எனக்கூறிச் சென்றுவிட்டனர். அவர்கள் சென்றதை உறுதிசெய்துகொண்டு தாழினைத் திறக்கிறாள். வெளியே வந்த வீரர்கள், அங்கே இறந்துகிடந்த இரண்டு இளைஞர்களைக் கண்டு “தாயே ! யார் இவர்கள்?” எனக் கேட்கிறார்கள். “என்னுடைய இரண்டு மகன்கள்” என்கிறாள். “ஏன்? எங்களைக்காட்டிக்கொடுக்காமல் எங்களைக்காக்க உங்கள் மகன்களை இழந்த்தீர்” எனக் கேட்கிறான். “என்னுடைய மகன்களை இழப்பதால் எனக்கு மட்டுமே இழப்பு. ஆனால், உங்களைப்போல நாட்டின் விடுதலைக்காகப் போராடும் வீரர்களை இழந்தால் நாட்டிற்கே இழப்பாயிற்றே”. எனக்கூறி அழுகிறாள். உள்ளம் நெகிழ்ந்த வீரர்கள், “உம்போன்ற வீர்த்தாய்மார்களால்தான் நாடு விடுதலைப்பெறப்போகிறது” எனக்கூறி, காலில் விழுந்து வணங்கி விடைபெறுகின்றனர். என்ன எங்கிருந்து எங்கோ தாவிவிட்டீர் என்கிறீரா. எல்லாம் காரணமாகத்தான். இரக்ககுணத்தை நல்லோரிடம் காட்டலாம் தீயோரிடம் காட்டக்கூடாது. காட்டினால் என்னாகும் என்றுதானே கேட்கிறீர்.?

விடத்தை நீக்கும் மருத்துவர், பாம்பு கடித்த புலியின் விடத்தை நீக்குகிறார். விடம் நீங்கியபுலி மருத்துவரையே அடித்துக்கொன்றுவிடுகிறது. இவ்வாறு, நன்றி உணர்வில்லாதவர்களுக்கு ஒருவர் உதவிசெய்தால், மண்ணால் செய்யப்பட்ட கலத்தைப்பாறையில் போட்டு உடைப்பதைப்போல அவ்வுதவியினை மறந்து உதவிசெய்தவர்க்கே கேடு செய்வர் என விடை சொல்கிறார் தமிழ்முதாட்டி. பாட்டி சொல்லைத் தட்டலாமா? தட்டக்கூடாதுதானே?.

 

ஞாயிறு, 4 ஜூலை, 2021

சுவையான நிகழ்வுகள் - சுவாமி விவேகானந்தர் வாழ்வில்

 


சுவையான நிகழ்வுகள் – சுவாமி விவேகானந்தர் என்னும் வீரத்துறவி

(119 ஆவது நினைவுநாள்)

ஒரு கோழியானது தனது பத்துக்குஞ்சுகளை பாம்பிடமிருந்துகாக்க இறக்கைக்குள் அவற்றை மறைத்துக்கொள்கிறது.  கோழியைச் சுற்றிச்சுற்றி படமெடுத்துவரும் மூன்று பாம்புகளைத் துணிவுடன் எதிர்கொள்கிறது. இதுதான் வீரம்.

பிறரை வெற்றிகொள்பவன் வீரன். தன்னை வெற்றிகொள்பவன் மாவீரன். அவ்வாறு தன்னை வெற்றிகொண்ட நரேந்திரன் என்னும் இளைஞனே சுவாமிவிவேகானந்தர் (12.01.1863 – 04.07.1902) ஆனார். அவருடைய வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளைக் காண்போமா?

நிகழ்வு 1 :

பாஸ்கர் சேதுபதிக்கு அமெரிக்காவிலிருந்து “சமய மாநாட்டிற்கு வருக” என அழைப்பு வருகிறது. தன்னைவிட சுவாமி விவேகானந்தர் சென்றால் நம் நாட்டின் பெருமை உலகிற்குத் தெரியும் என எண்ணினார்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல் (திருக்குறள் : 517)

 

என்னும் திருக்குறளுக்குத் தலைசிறந்த சான்றானார்.

 

சான்றாக வாழக்கூடியவர் சான்றோர்தானே?. அவ்வகையில் சான்றோரான பாஸ்கரசேதுபதி அவர்கள், தன்னை பின்னிறுத்தி சமுதாய நலத்தை முன்னிறுத்த எண்ணி சுவாமி விவேகானந்தரை அனுப்பினார். சான்றோர், தமக்குக் கிடைக்கும் நல் வாய்ப்பை பிறர்க்குக் கொடுத்து மகிழ்வர். நல்லோர், தம் வாய்ப்பினை மட்டும் அனுபவிப்பர். வஞ்சகர், பிறர் வாய்ப்பையும் தனதாக்கிக்கொள்வர். அவ்வாறு நோக்குகையில்,  தன்னைக் காட்டிலும் சுவாமி விவேகானந்தர் சென்றால்தான் நன்றாக இருக்கும் என எண்ணினார் ; உலகிற்கு ஒளியூட்டினார். சுவாமி விவேகானந்தரை முன்னிறுத்தி தன்னைப் பின்னிறுத்திய  பாஸ்கர சேதுபதியின் பெயர், (பாஸ்கரன் – சூரியன்) காரணப் பெயர்தானே.

நிகழ்வு – 2

“சகோதர சகோதரிகளே!” எனத் தன்னுடைய உரையைத் தொடங்குகிறார் சுவாமி விவேகானந்தர்.  தொடக்கமே அத்தனை உள்ளங்களையும் நெகிழவைக்கிறது. இந்த இரண்டு சொற்கள் எப்படி நெகிழவைத்தன?  இந்த ஐயம் அனைவருக்கும் வருவது இயல்புதானே?. இதனை அறிவதே அருமை. உண்மையான துறவை மேற்கொண்டவன் மற்ற மனிதர்களை உடன் பிறந்தோராகக் கருதுவான் அதுவே துறவு. அவ்வாறு உண்மையாக வாழ்ந்துவரும் நிலையினை இரண்டே சொற்களில் உணர்த்தினார். உண்மையின் வலிமையை உலகுக்கு உணர்த்தியதால் “இவர்தான் உண்மைத்துறவி” என உடனடியாக உணர்ந்தது அந்த விழிப்புடைய அரங்கு. அதனால்தான் அரங்கு அதிர்ந்தது. பாரதத்தின் பெருமையினை உலகம் அறிந்தது. உலக அரங்கையே அவர்பால் ஈர்த்தது.

நிகழ்வு - 3

உண்மையான ; தெளிவான ; கம்பீரமான ; அழகான அவருடைய பேச்சில் மயங்காதவர் எவரும் இல்லை.  பெரியோர்கள் அவரை வாழ்த்தி மயங்கினர். சிறியோர்கள் அவரை குருவாக எண்ணி மயங்கினர். இடைப்பட்டோர் சொல்லழகிலும் பொருளழகிலும் மயங்கினர்.

துறவிகள், ஆணையும் பெண்ணையும் ஒன்றாகக் காண்பர். அவர்களுக்கு உயிர் மட்டுமே தெரியும். உடலைத் தெரியாது. அத்தகைய துறவிதானே சுவாமி விவேகானந்தர். அமெரிக்காவில் ஒரு வளரிளம் பெண், அவருடைய பேச்சை தொடர்ந்து பல மேடைகளில் கேட்கிறாள். சுவாமி விவேகானந்தரிடம் காதல்கொண்டதைச் சொல்கிறாள். “நான் உங்களுடன் வாழ விரும்புகிறேன்” என்றாள். வளரிளம் பெண்ணின்  காதல்மொழியைக் கேட்ட இளைய துறவியின் விடை என்ன தெரியுமா? “ஏன் என்னுடன் வாழவேண்டும் என நினைக்கிறீர்”  எனக்கேட்கிறார். “எனக்கு, உங்களைப்போன்ற ஒரு அறிவு நிறைந்த குழந்தையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதுவே என் ஆசை” என்றாள். உடனே “நீங்கள் அதற்காகக் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. என்னையே நீங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார் சுவாமி விவேகாந்தர்.  இதுவே நம் பண்பாடு. இதற்குமுன் அவ்வாறு வாழ்ந்தவர் மாவீர்ர சத்ரபதி சிவாஜி.(19.02.1630 -  03.04.1680)

வீர சிவாஜியின் அருமையினை உணராத அயலார், நாட்டைக்கைப்பற்ற எல்லைக்குள் நுழைகின்றனர். சிவாஜியின் படை கொலைவெறி பிடித்த எதிரிகளை வீழ்த்தியது. அப்போது எதிர்த்துவீழ்ந்த சுல்தானின் மனையாளான பேரழகியை சிறைப்பிடித்து பல்லக்கில் தூக்கிவருகிறார்கள். மாவீரன் சிவாஜி, “பல்லக்கில் யார்? “ எனக் கேட்க, “பகைவனின் மனைவி” என்கின்றனர். சிவாஜி அப்பேரழகியிடம் சென்று “தாயே, பொறுத்தருள்க. பெண்களைத் தெய்வமாக எண்ணுவதே எங்கள் பண்பாடு. உங்கள் வயிற்றில் நான் பிறந்திருந்தால் நானும் அழகாக இருந்திருப்பேன்” என்றார். மாவீரன் சிவாஜி பெயரைக்கேட்டவுடன் அஞ்சி நடுங்கியவள், சிவாஜியின் அன்பு நிறைந்த பேச்சினைக்கேட்டும் மதிப்புடன் வணங்கினாள். இப்பரம்பரையில் வளர்ந்தவர்தானே சுவாமி விவேகானந்தர்.

நிகழ்வு – 4

சுவாமி விவேகானந்தர், ஒரு முறை இளைஞர்கள் துப்பாக்கி சுடும் விளையாட்டு விளையாடுவதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒருவராலும் இலக்கினைச் சுடமுடியவில்லை. புன்னகைத்தார். உடனே, ஒரு இளைஞன் “எங்களைக் கேலி செய்யாதீர். உம்மால் முடியுமா?” எனக் கேட்கிறான்.  எப்படித் துப்பாக்கியைப் பிடிக்கவேண்டும்? எப்படிச் சுட வேண்டும்? என அந்தக் கடைக்காரனிடம் கேட்டறிந்து சுடுகிறார். துறவாடை உடுத்தியவர், எப்படிச் சுடப்போகிறார்?. என இளைஞர்கள் எண்ணினர். ஆனால், கொடுத்த அத்தனை குண்டுகளையும் குறிதவறாமல் சுடுகிறார். உடனே ஒரு இளைஞர், “ஏற்கெனவே நீங்கள் பயிற்சி பெற்றுள்ளீர்தானே?” எனக் கேட்டார்.  “நான் இப்போதுதான் முதல்முறையாகத் துப்பாக்கியைப் பிடிக்கிறேன்” என்றார் சுவாமிவிவேகானந்தர். அனைவரும் வியந்து நிற்கின்றனர். “இலக்கை மட்டுமே நோக்கும் தன்னம்பிக்கை உடையவர்க்கு எல்லாம் எளிமையாகும்” என்றார். இதுவும் நம் முன்னோர் வழக்குதான்.

அர்ச்சுனனுக்கும் துரியோதனனுக்கும் துரோணர் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது, மரக்கிளையில் நின்ற பறவையின் கண்ணுக்குக் குறிபார்க்கச்சொல்கிறார். துரியோதனன் முதலில் அம்பு தொடுக்க நிற்கிறான். “என்ன தெரிகிறது?” எனக் கேட்கிறார். “மரம், கிளை, பறவை, கண்” என ஒவ்வொன்றாய் கூறிச்செல்கிறான். அடுத்து, அர்ச்சுனன் அம்பை எடுத்துக் குறி வைக்கிறான். “என்ன தெரிகிறது?” எனக் கேட்கிறார். “பறவையின் கண் மட்டுமே தெரிகிறது” என்கிறான். அத்தகைய குருபரம்பரையில் வந்தவர்தானே சுவாமிவிவேகானந்தர்.

நிகழ்வு – 5

     கன்னியாகுமரியில் தவம் செய்வதற்காக, கடலுக்குள் நின்ற மிகப்பெரியபாறைக்குச் செல்ல விரும்புகிறார் சுவாமி விவேகானந்தர். கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் இருந்ததால், படகோட்டி காசு கேட்கிறான். “என்னிடம் காசு இல்லையே” எனக் குழந்தை உள்ளத்துடன் கூறுகிறார் சுவாமி விவேகானந்தர். துறவிகள் என்போர், அடுத்த வேளை உணவையே இறைவன் அளிப்பான் என்னும் தன்னம்பிக்கையுடன் வாழ்பவர்கள்தானே?. உடனே படகுக்காரன், “காசு இல்லையென்றால், நீந்திச்செல்லுங்கள்” என்கிறான். வாழ்க்கை என்னும் நீளக்கடலையே நீந்தத்தெரிந்த சுவாமி விவேகானந்தருக்கு நீலக்கடலா தடையாகும்? உடனே, நீந்திசென்று தவம் பல நாட்கள் தவம் செய்து திரும்புகிறார். அவருடைய மனபலத்தைக் கண்ட படகோட்டி வியந்து வணங்கினான்.

     இப்படி வாழ்நாள் முழுதும் சோதனைகளையெல்லாம் சாதனையாக்கினார். அவரால்தான் இன்றும் பாரதத்தின் பெருமையினை உலகம் வியந்துபார்க்கிறது எனில் மறுப்பார்யார்? இல்லைதானே?

 

 

சனி, 3 ஜூலை, 2021

வரவேற்புரை எப்படி? இதோ ஒரு எடுத்துக்காட்டு.

 


வரவேற்புரை எப்படி? இதோ ஒரு எடுத்துக்காட்டு.

     (03.07.2021 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் பணிநிறைவுபெற்ற ஆசிரியர், கவிஞர் இராசமாணிக்கனாரின் நூல் வெளியீட்டு விழாவிற்காக எழுதிய வரவேற்புரை)

எண்ணங்கள்  தளர்ந்த போதெல்லாம் வாழ்வில் வண்ணங்களைக்கூட்டும் அன்னைத்தமிழே! உன்னை வணங்கி விழாவைத் தொடங்குகிறோம்.

இவ்விழா ஒரு பிரசவவிழா. இது பெண் பிரசவம் அன்று . ஆண் பிரசவம். அதுவும் பணி நிறைவுக்குப்பின். பிரசவ வலி பெண்ணுக்கு மட்டுமன்று. ஆணுக்கும் உண்டு. கவிஞர்களைக் கேட்டுப்பாருங்கள்.  ஒரு நூல் விழும்போதெல்லாம் ஒரு புதிய  எண்ணம் விழவேண்டும். அதனால் சமூகம் எழ வேண்டும்.

புத்தகம்  திறந்திருப்பதைப் பாருங்கள். பறவையின் சிறகுகள் விரிந்திருப்பதுபோல் இருக்கும்.  அப்படி இரண்டு சிறகுகள் கொண்டு பறந்திருக்கிறார். இன்று நம் பார்வையில் உயர்ந்திருக்கிறார். நூலாசிரியர் இராச மாணிக்கனார்.

அவைதாம் –     1.வாக்குமூலம், 2. கனவுகள்

கனவுகள் – ஆழ்மனதின் பிரசவம், வாக்குமூலம் – ஒப்புதல், தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்புவித்தல்.  வாழ்க்கை வானமாகிவிடும்போது கவிஞன் பறவையாகிவிடுகிறான்.  எல்லா உண்மைகளும் தெரிகிறது. மலையின் முதல் படிக்கட்டில் நிற்பவனைவிட உச்சிக்குச்செல்பவனுக்குத்தானே காட்சி நன்றாகத் தெரியும்.’

இத்தகைய அருமையான நூல்வெளியீட்டுவிழாவிற்கு வந்திருக்கும் பெரியோர்களே , தமிழார்வலர்களே ! புலவர்களே ! இறையடியார்களே ! அனைவரையும் வரவேற்கிறோம்.

முன்னிலை – ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி தாயார்

“புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப் பண்ணி நம் சென்னிமேல் பத்மபாதம் பதித்திடவே.” என்னும் அபிராமிபட்டரின் பாடலுடன், ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மையாரையே முன்னிலையாகக் கொண்டு இக்கவிதை  நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.  அக்காலத்தில் இறைவன் முன்னிலையில் வெளியிட்ட தமிழர் மரபினைப் புதிப்பிப்பதாக இவ்விழாவை ஏற்பாடு செய்த விழாக்குழுவினரைப் பாராட்டி மகிழ்கிறேன்.   

நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னிலை வகிக்கும் எல்லாம் வல்ல தாயாரை வருக ! வருக !  என வரவேற்கின்றோம்

 

தலைமை – சக்திவேல் ஐயா

     மரத்தின் கிளைகளை, பூக்களை, கனிகளை ஒருவர் எடுக்கவந்தாலும் மரம் நிழல்கொடுத்து அவர்களைக் காப்பதுபோல வந்தவர்களை மதித்துப் போற்றும் நல்லவர்.

தலைமை பண்புக்குச் சிறந்தவர் ; தளர்ந்து செல்வோர்க்கு மருந்தவர்

அனைவரும் விரும்பும் பண்பாளர் ; நம் நூலாசிரியரின் அன்பாளர்.

தலைமைதாங்க வந்துள்ள சக்திவேல் ஐயா அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்

நூல் வெளியீடு - சட்டமன்ற உறுப்பினர்  

உலகமே கொரோனாவால் நோயுற்று வருந்தியவேளையில் அச்சம் நீக்கி காத்தவர் யார்? வைத்தியர்களுக்கெல்லாம் நாதனாகிய வைத்தியநாதன்தானே?

அப்படி, இந்த இலாசுப்பேட்டையின் மக்களுக்காகத் தமது கமலா அறக்கட்டளையின் வழி மக்களுக்கு உதவிகள் பல செய்தவர். இப்போதும் தெருத்தெருவாக தானியில் (ஆட்டோ) ஒலிப்பெருக்கிவழி ஊசிபோடவரும்படி அழைக்கிறார்.

தாயார் பெயரில் அறக்கட்டளை நிறுவி வேலைவாய்ப்பு, கல்வி, நலப்பணி எனத் தொடர்ந்துசெய்துவருகிறார்.

தாய்ப்பாசத்தில் இவர் எம்.ஜி.ஆர்

கொடைகுணத்தில் இவரை மிஞ்ச யார்?

மனத்தின் நிறத்தை ஆடையில் காணலாம்

குணத்தின் நிறத்தை மேடையில் காணலாம்.

நூல் வெளியிடவந்துள்ள சட்டமன்ற உறுப்பினரை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

நூல் பெற்று வாழ்த்துரை – வேல்முருகன் ஐயா

     உலகின் முதல்மொழி தமிழ்மொழி. இதனை உணர்த்த நாளும் பாடுபடுபவர். தம் இல்லத்தையே அருங்காட்சிக்கூடமாக்கித் தமிழ்க்காப்பவர்.

தமிழ்க்கடவுள் இல்லாமல் தமிழ் விழாவா?

வேல்முருகன் ஐயா இல்லாமல் கவிதை விழாவா?

சிறந்த ஆய்வாளர், பன்மொழி வித்தகர், கல்வெட்டு அறிஞர், தொல்லியல் பொருட்களைத் தொடர்ந்து சேகரித்து வருபவர். தமிழினத்தின் பெருமையை காத்து வருபவர்

நூலை பெற்றுக்கொள்ள வந்திருக்கும் சொல்லாய்வுச் செல்வர் வேல்முருகன் ஐயா அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : முனைவர் ஔவை.நிர்மலா

பார்புகழும் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்த்துறைத்தலைவர், நன்றாக சமைப்பார், ஆனாலும் கரண்டியைப் பிடித்து சமையலறையில் முடங்கிவிடக்கூடாதென, எழுதுகோல்பிடித்து பல்கலைக்கழகம் சென்றவர். முனைவர் பட்டம் வென்றவர். படைப்பாளராய் நின்றவர் (45 நூல்கள்).

பலமொழிகள் படித்தவர் ; பல நூல்கள் படைத்தவர் ; பேராசிரியராக உயர்ந்தவர் ; ஏழைகளுக்கு பொருளையும் நாளும் கொடுத்துமகிழ்பவர். இவர் தொண்டும் நி(ற்)க்காமல் இருக்க நிக்கி ஐயா (கணவர்) உடன் நிற்பார்.

நூலாசிரியரை வாழ்த்த வந்துள்ள தமிழ்த்துறைத்தலைவர் ஔவை நிர்மலா அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : மு.பாலசுப்பிரமணியம்

புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் ; பொதுப்பணியில் பொறியாளர்.

தமிழ்விழாக்கள் சிறந்திடவே தவறாது முன்னிற்பார்.

கண்ணுக்கு ஒளிகொடுக்கும் கண்ணாடியையும் மதித்திடுவார். மூக்குக்கு மேல் நிற்கும் கண்ணாடியைக்கூட தலைமேல் தூக்கிவிட்டு மகிழ்ந்திடுவார்.

எறும்புபோல் உழைத்திடுவார் ; கரும்புபோல் பழகிடுவார்

            கவிதை சிறந்தால் கரம் கொட்டி மகிழ்ந்திடுவார்

தவறென உணர்ந்தாலே கரம்கொட்டி அமர்த்திடுவார்

ஒரே செயலை இரண்டுக்கும் பயன்படுத்தும் நுட்பத்தை உணர்த்திடுவார். அதனால்தானே இவர் துணைத்தலைவர்.

வாழ்த்த வந்துள்ள பொறியாளர் மு. பா. ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை – இல. ஜெயராமன் ஐயா

சந்தனம் மென் குறடுதான் தேய்த்த காலத்தும் குறை படாது – சந்தனம் தேய்த்தாலும் வாசம் கொடுக்க மறுத்திடுமா? அதுபோல அனைவரிடமும் அன்புடன் பழகுபவர்.

இல்லை என்று சொல்லாததால் தான் இவர் இல. ஜெயராமன்

அன்பாலே நூலாசிரியரின் மனத்தை வென்றார்.

நட்பென்னும் முறையில் துணையாக நின்றவர்.

தம் உழைப்பாலே பகைவர்களை வென்றவர்.

வாழ்த்த வந்துள்ள இல. ஜெயராமன் ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : மாசிலாமணி ஐயா

சிறப்போடு வாழ்வதிலே சிறப்பொன்றும் இல்லை. ஏனென்றால் இவ்வுலகில் சிறப்போடு வாழ்ந்தோர்கள் பலருண்டு. ஆனால், தனித்தன்மையோடு வாழ்ந்து வழிகாட்டும் சிலருள்ளே ஒருவரிவர். பெயர் ஒன்றே அவர் குணம் காட்டும்.

நல்லோர்கள் சூழ இருப்பது இவர் பணி.

அவர்தான் நம் மாசிலாமணி

நூலாசிரியரின் அன்புக்குப் பாத்திரமானவர்

பல முடிவுகளுக்கு இவரே சூத்திரமானவர்

வாழ்த்த வந்துள்ள மாசிலாமணி ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : மகாலட்சுமி

     இவர் இல்லாத வீட்டினிலே பெருமையில்லை. இவருடைய பார்வைபட்டால் வறுமைபோகும். அவர்தான் மகாலட்சுமி. நல்ல ஆசிரியர்களின் பெருமைக்கு மாணாக்கர்தான் அளவுகோல். அப்படி நம் நூலாசிரியரின் ஆசிரியப்பணியினைப் போற்றிவளர்ந்த மாணவி, இன்று நூலாசிரியராகத் தம் ஆசிரியரை வாழ்த்த வந்திருக்கிறார்.

வாழ்த்த வந்துள்ள மகாலட்சுமி அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

ஏற்புரையும் நன்றியுரையும் – இராசமாணிக்கம் ஐயா

     “மருவினிய சுற்றமும் ; வான் பொருளும் ; நல் உருவும் ; உயர் குலமும் எல்லாம் திருமடந்தை ஆம் போது அவளோடு ஆம்” என்னும் பாடலுக்கேற்ப நல் சுற்றம், நல் பொருள், நல் உரு, நல் குலம் என அனைத்தும் வாய்க்கப்பெற்ற நூலாசிரியர்.

இவருக்குக் கடவுளைப் பிடிக்கும் என்பதைவிட, கடவுளுக்கு இவரைப் பிடிக்கும் என்பதே சிறப்பு. ஏனென்றால், ஏமாற்றுபவர்களை கடவுளுக்குப் பிடிக்காது. ஆனால், இவர் ஏமாறுபவர், அதனால் இவரைக் கடவுளுக்குப் பிடிக்கும்தானே.

வாழ்நாள் அனுபவம் கவிதையாக மலர்கிறது.

அதுதான் நூலெங்கும் எழுத்தாக தவழ்கிறது.

விழா நாயகரான கவிஞர். ஆசிரியர். மனிதநேயர் பண்பாளர் இராசமாணிக்கனார் ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

தமிழுக்காகவும் ; நட்புக்காகவும் ; உறவுக்காகவும்  கூடியுள்ள உங்கள் அனைவரும் விழாக்குழுவின் சார்பாக வரவேற்று மகிழ்கிறேன்.

 

தமிழார்வர்களாகிய உங்கள் வருகை ; தமிழன்னையைப் போற்றும் சிவிகை.

 

வாய்ப்பளித்தமைக்கு நன்றி ! வணக்கம்.!

 

 

 

புதன், 30 ஜூன், 2021

குழந்தைகள் ஊமைகளாகின்றன

 


ஊமைகளாகும் குழந்தைகள் – தாய்மொழியை வாய்மொழியாக்குவோம்

மூளை,  தலைக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதால்தானே “எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்” என்னும் பொன்மொழி  உண்டாயிற்று. அந்த மூளையை எல்லாக் குழந்தைகளுக்கும் ஒன்றுபோலவே இறைவன் படைத்துள்ளார். அதனை உணர்ந்துகொள்ளவேண்டியது முதல்கடமை. இதை உணர்ந்துகொண்டாலே மற்றவையெல்லாம் தெளிவாகிவிடும். எப்படி? என்றுதானே கேட்கிறீர்கள். உடல் என்னும் அரசாங்கத்தின் தலைமைச்செயலகம்தான் மூளை. பிறக்கும்பொழுது எல்லோருக்கும் 300 கிராம் தான்.  வளரவளர ஆண்களுக்கு 1,500 கிராம் அளவிற்கு வளர்கிறது. பெண்களுக்கு 1,300 கிராம். உடனே பெண்களுக்கு …? என இழுக்காதீர். எடை தான் குறைவு. செயல்பாடு அனைவருக்கும் ஒன்றுபோலவே இருக்கும். பெண்கள், சரியாகப் பயிற்சி கொடுப்பதால் எல்லாவற்றையும் நினைவில்வைத்துக்கொள்கின்றனர். எடையுள்ள கைப்பேசியைவிட எடைகுறைந்த கைப்பேசிதான் விலை அதிகம்.

 இப்போது ஒரு உண்மையை உணர்ந்துகொண்டீர்தானே. குழந்தைகள் அறிவுமிக்கவர்களாக வளர்வது வளர்ப்பவர்களின் பொறுப்பன்றி குழந்தைகளின் பொறுப்பில்லை. எந்தக் குழந்தையையும் அறிவு இருக்கா? எனக் கடிந்துகொள்ளக்கூடாது. அப்படிக் கடிந்துகொண்டால் கடிந்துகொள்பவரின் அறிவைத்தான் ஆய்வுசெய்யவேண்டும்.

*எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே

பின் நல்லவராவது தீயவராவது அன்னை வளர்க்கையிலே

 

என்னும் புலவர்  புலமைப்பித்தனின் பாடலடிகளைப் பாடிப்பாருங்கள். குழந்தைகள் அறிவும் குணமும் மாறுவதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.

     அன்னை என்றால் அன்னையை மட்டுமன்று, இந்த உலகத்தில் அந்தக் குழந்தை வளர்ச்சிக்குத் துணைசெய்வோர் அனைவரும்தான் காரணம். சூழலால்தானே குழந்தைகள் வளர்கிறார்கள். இவ்வரிசையில் முதல் இடம் பெறுவோர் ஆசிரியர்கள்.

     அதனால்தான் “ஆசிரியர்கள் சம்பளத்திற்குக் கணக்குப் பார்க்கக்கூடாது. விதை நெல்லுக்குக் கணக்குப் பார்க்கலாமா?” எனக்கேட்டார் கல்விக்கண் திறந்த காமராசர். கல்விச்சாலை என்னும் கோவிலை நன்றாகக் கட்டிவிட்டு பணிசெய்வோர்க்கு உரிய வசதிகள் செய்யாவிட்டால் என்னாகும். கடவுள் என்னும் கல்வியைப் போற்ற இயலுமா? முடியாதுதானே? ஆசிரியர்கள் சுதந்திரமாகச் செயல்பட வழிவகை செய்யவேண்டும். அப்படியென்றால், தாய்மொழியில் கற்பிப்பதுதானே சிறப்பாக அமையும். கற்போருக்கும் கற்பிப்போருக்கும் அதுதானே எளிமை. அங்குதானே கற்பித்தல் சீராக அமையும்.

     தாய்மொழியில் கேள்வி கேட்க எண்ணும் ஆசிரியர், அவருக்கு அறிவுறுத்தப்பட்டபடி ஆங்கிலத்தில் “Flowers Name …” எனக் கேள்வி கேட்கட் தொடங்குகிறார். “செவ்வந்தி, சாமந்தி, கனகாம்பரம், செம்பருத்தி, மல்லி, அல்லி, லில்லி, ரோஜா… எனக் குழந்தைகள் அடுக்கிக்கொண்டே சென்றனர். உடனே ஆசிரியர் “நோ டமில். ஒன்லி இங்க்லீஷ்” என்றார். சுடுகாட்டு மௌனம் நிலவிற்று. குழந்தைகளுக்கு நன்றாக விடைதெரிந்தும் தாய்மொழியில் கூறக்கூடாதென்பதால் ஊமைபோல் நிற்கின்றனர். ‘ஊமை’ என்னும் சொல்லால், இங்கு குறிப்பிடுவது வாய்பேசமுடியாத மாற்றுத் திறனாளிகளை அன்று. வாயிருந்தும் பேசமுடியாத ; பேச விடாத சமூக அமைப்பில் சிக்கிக்கொண்டவர்களையே குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.

     தாய்மொழிக்குத் தடைவிதித்ததால், நன்றாக விடைதெரிந்தும் கூற முடியாது தவிக்கும் குழந்தைகளின் அறிவாற்றால் மேம்படுமா? கீழ்ப்படுமா? இப்படி நாளுக்கு நாள் தன்னம்பிக்கை இழக்கும் குழந்தைகள், கல்வியை விட்டுவிடும் சூழலும் மேற்படிப்பினைத் தொடரமுடியாத சூழலும் பெருகிவிடுகிறது. அரசு பள்ளிகளில் நாளுக்குநாள் குழந்தைகள் குறைவதற்கு அதுதானே மிகப்பெரிய காரணமாக இருக்கிறது. இனி, தாய்மொழியில் கற்றோர்க்கு மட்டுமே கல்வி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு எனில் என்னாகும். அரசுப்பள்ளியில் பிள்ளைகள் குவிவார்கள்தானே?

     வீட்டு மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் இருந்தால் அனைத்துக் குழாய்களிலும் தண்ணீர் வரும்தானே? தாய்மொழிக்கான வாய்ப்பு இருந்தால் சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் தமிழ்ப்பயிலும் குழந்தைகள் வளமாக வாழ்வார்கள்தானே.

     ஆங்கிலம் தெரியாவிட்டால் பெரியகுற்றம்போல் நினைக்கும்நிலை மாறவேண்டும். நம் நாட்டில் பிறநாட்டுமொழி செம்மாந்து நடக்க, தாய்மொழி கற்ற குழந்தைகள் தலைகுனிந்து நடக்கும் சூழல் எத்தனை இழிவானது.

     *பாதை தவறிய கால்கள், விரும்பிய ஊர் சென்று சேர்வதில்லை

     நல்ல பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர், பேர்சொல்லி வாழ்வதில்லை.

 

என்னும் புலவர் புலமைப்பித்தனின் அடிகளை உணர்ந்து சரியான பாதையில் சென்றால் விரும்பிய ஊரினை அடையமுடியும். குழந்தைகளுக்கும் நல்ல பண்பினை வளர்க்கமுடியும். பேர் சொல்லும் பிள்ளையாக சிறப்புடன் வாழவழிகாட்டமுடியும்.

 

     தமிழர்கள் அனைத்துத் துறைகளிலும் சிறந்துவிளங்கியதைப் பொறுத்துக்கொள்ளமுடியாத ஆங்கிலேயர்கள், அடிமையாக்கவே தங்கள் மொழியான ஆங்கிலக்கல்வியைப் புகுத்தினார். அம்மொழியைக் கற்றவர்க்கும் மட்டுமே அரசு வேலையும் கொடுத்தனர். இக்கொடும்போக்கினை எதிர்த்த தமிழர்கள் தங்கள் அரசுப்ப்பணியினை விட்டு விடுதலை வீரர்களாக மாறினர். இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்ட சில துரோகிகள் ஆங்கிலேயர்களுடன் கைகோத்துக்கொண்டு தமிழர்களைப் பேசவிடாது ஊமைகளாக்கினர். “இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்” என்னும் கொள்கையைப் பின்பற்றினர். இப்படி மொழியின் வழி ஊமைகளாக்கும் நிலையினை அந்நியர்கள் வழிவகை செய்தனர். அவர்கள்வழியிலிருந்து விடுபட்டு, தாய்மொழியில் கற்றுக்கொடுத்தால்  பேசாத குழந்தைகளும். எங்கும் தமிழ்மணம் வீசும். உண்மைதானே?

 

(‘நீதிக்குத்தலைவணங்கு’ என்னும் திரைப்படப்பாடலான “இந்தப் பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத் தொட்டிலில் கட்டிவைத்தேன்” என்னும் பாடலிலுள்ள அடிகள்)

திங்கள், 28 ஜூன், 2021

நகைச்சுவை மருந்து – திருவள்ளுவர் வழியில்

 


நகைச்சுவை மருந்து – திருவள்ளுவர் வழியில்

     இம்மருந்து கசக்காது ; புளிக்காது ; துவர்க்காது .கரிக்காது ; காராது, இனிக்கமட்டுமே செய்யும்.  மருந்து கொடுப்போர்க்கும் இனிக்கும் ; உண்போர்க்கும் இனிக்கும். பக்கத்தில் நின்று கேட்போர்க்கும் இனிக்கும்.

     நகைச்சுவை என்பது பிறரைக் காயப்படுத்துவதல்ல ; காயத்திற்கு மருந்திடுவது. நகைச்சுவை எவ்வகையிலும் பிறரைக் காயப்படுத்திவிடக்கூடாது என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி  பகையுள்ளும்

பண்புள பாடறிவார் மாட்டு (திருக்குறள் – 995)

 

என்னும் அடிகளில் பண்புடையவர்களின் மாண்பை நகைச்சுவையிலும் காணமுடியும் எனத் தெளிவுறுத்துகிறார்தானே? சில நகைச்சுவைகளைக் காண்போமா?

 

நகை : 1

 

     ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருக்கிறார். “திணை – இரண்டு, உயர்திணை, அஃறிணை, திணையிலிருந்து பால் பிரியும்.  உயர்திணை – ஆண் பால், பெண்பால், பலர் பால் என மூன்றாகப் பிரியும்” எனப் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். ஒரு மாணவன் கவனிப்பதுபோல கண்களைத் திறந்தே தூங்கிக்கொண்டிருக்கிறான். “அது ஒரு கலைதானே”. அவனைப் பக்கத்திலிருந்த மாணவன் சீண்டுஉலுக்குகிறான். உலுக்கிய வேகத்தில் “ஐயா” என்கிறான். பால் எதிலிருந்து பிரிகிறது. பசுவின் பால் என நினைத்து “மடியிலிருந்து” என்றான். எல்லோரும் சிரித்தார்கள். ஆசிரியர் அவனுடைய திறமையைப் பாராட்டினார். உண்மைக்குப் பாராட்டுக் கிடைப்பது இயல்புதானே.

நகை - 2

பெண்கள், தங்களுக்குப் பிரச்சினை ஏற்படக்கூடும் என எண்ணும்பொழுதே, அதனைத் தடுத்துவிடவேண்டும். வளர்ந்துவிட்டால் தடுக்கமுடியாது.  மருத்துவரான மகனுக்கு மருத்துவரான மருமகளையே திருமணம் செய்வித்தார் ஒரு பெரியவர். நாட்கள் நகர்கின்றன. ஒருநாள், மருமகளும் மகனும் பணி முடித்துவந்தபின், மகன் இருக்கையில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார். மருமகள் காஃபி கலந்துவந்துகொடுத்தார். காஃபியை ஒரு வாய் குடித்துவிட்டு, “காஃபியா இது” எனக் கீழே தட்டிவிட்டார். காஃபி குறித்த அன்று காலை நடைபெற்ற முதியோர் கலந்துரையாடலில் “மருமகளை முதலிலேயே அடக்கிவைக்கவேண்டும்” என ஆலோசனைக் கூறப்பட்டதன் விளைவு அது. மீண்டும், செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்த அவர் காலுக்கருகே பாத்திரம் தவறி விழுந்த சத்தம் கேட்டது. திருமகளாய் நின்ற மருமகள் காளியாக அவர்முன் நின்றுகொண்டிருந்தாள். அவள்தான் பால் பாத்திரத்தை அவர்முன் போட்டுடைத்தாள். வீடு முழுதும் பால் சிதறிக்கிடந்தது. காளி முன் சிவன் போல் அமைதியாக எழுந்து வெளியே போனார் மகன்.  மருமகளின் கோபம் அரை லிட்டர் பாலுடனும் பாத்திரம் நசுங்கியதோடும் முடியவில்லை. காளியின் கோபத்தால் என்ன விளையுமோ? என்னும் அச்சம் பெரியவர் முகத்தில் பரவியிருந்தது. தன் தவறை உணர்ந்தார். அடுத்தநாள் காலை, மருமகள் மகளாகி இருந்தாள். மிகுந்த பாசத்துடன் பேசினார். காளி திருமகளானாள். மாமனார் தந்தையானார்.

நகை - 3

குழந்தைக்குச் சோறூட்டும் கலை – குழந்தைக்குச் சோறூட்டும் தாய் தனக்குப் பக்கத்தில் குழந்தைக்கு நிகரான உருவத்தில் ஒரு பொம்மையை வைத்திருக்கிறாள். குழந்தைக்கு முதலில் சோறூட்டாமல் பொம்மைக்குச் சோறூட்டுவதுபோல் ஊட்டுகிறாள். “வேண்டாம்” என்பதுபோல் அவளே பொம்மையின் தலையினை இடதுகையால் ஆட்டுகிறாள். வேண்டாமா? எனக் கேட்டுவிட்டு, பக்கத்தில் இருந்த பூரிக்கட்டையால் வேண்டாமெனத் தலையாட்டிய பொம்மையை இரண்டு அடி அடிக்கிறாள். மீண்டும் சோறூட்டுவதுபோல் கையை எடுத்துச்செல்கிறாள். பொம்மை அமைதியாக இருக்கிறது. “சாப்பிட்டுவிட்டாயே” எனக் கூறிவிட்டு தனது குழந்தையின் பக்கம் திரும்புகிறாள். குழந்தைக்கும் சோறூட்ட கையினை வாயருகே கொண்டு செல்கிறாள். உடனே மறுக்காமல் குழந்தை உண்டுவிடுகிறது. பொம்மை அடிவாங்கியதைப் பார்த்த குழந்தையாயிற்றே. பாம்பின் கால் பாம்பறியும் என்பது இதுதானோ?

நகை - 4

கைப்பேசியால் குடும்பங்கள் சீரழிந்து வருவது உண்மைதானே?  அன்று, வேவ்வேறு இடத்தில் இருந்தாலும் மனிதர்கள் ஒன்றாக இருந்தனர் ; பாசத்துடன் இருந்தனர். ஆனால், இன்று ஒரே இடத்தில் இருந்தாலும் ஆளுக்கு ஒரு கைப்பேசியில் இருக்கிறார்கள். உலகத்தவரோடு நட்பு கொள்ள விரும்புவோர், பக்கத்தில் இருக்கும் உறவுகளோடு பேசுவதில்லை.  ஒரு காட்சி எல்லோரையும் திருத்திவிடுகிறது. ஓர் அறையில் கணவன், தம்பி, குழந்தைகள் என ஆளுக்கு ஒரு கைப்பேசியைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். மனைவி கணவரிடம் கைப்பேசியைக் கேட்கிறாள். அவர் கொடுக்கவில்லை. ‘பளார்’ என்று கன்னத்தில் ஒரு அடி. உடனே கொடுத்துவிடுகிறார். பக்கத்தில் இருந்த குழந்தைகளும் கையை நீட்டியதும் கொடுத்துவிடுகின்றன. என்ன அழகான ஆளுமை. திட்டமிட்டு செய்தது தான் என்றாலும் கணவரின் நடிப்பால்தான் எல்லாம் சாத்தியமானது. உண்மைதானே?. மனைவி இதுதான் வாய்ப்பென்று நடிகர்திலகம் போல் முழுத்திறமையையும் வெளிப்படுத்தியிருந்தாள். எப்படி என்று கேட்கிறீர்களா? கணவனின் சிவந்த கன்னம் தான் அதற்குச் சாட்சி. 

“நல்லதா நாலு வார்த்தை சொல்” என்றுதானே பெரியோர் சொல்வார்கள். அதனால் நான்கு நகைச்சுவைகளை மட்டும் கூறியுள்ளேன். இதைப் படித்தபின்னும் உங்கள் கவலை விலகவில்லையா? நீங்கள் ஆழமான ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டிருக்கிறீர்கள் என்றுபொருள். இனி, நீங்கள் காலையில் எழுந்தவுடன் நாள்காட்டியில் நாள் தாளைக் கிழிக்கும் போது பழைய எண்ணங்களையும் கிழித்துவிடுங்கள். புதிதாக நாளைத் தொடங்குங்கள். மகிழ்ச்சியாக இருப்பதுபோல் நடியுங்கள். நாளடைவில் அதுவே பழகிவிடும். உலகமே மகிழ்ச்சியாக இருப்பதுபோல் தோன்றும். இருளாக இருந்த வாழ்வில் வெளிச்சம் கூடும்.

நகல்வல்லார் அல்லார்க்கு  மாயிரு ஞாலம்

பகலும்பாற் பட்டன்று இருள் (திருக்குறள் – 999)

 

என்னும் திருக்குறளின் வழிநின்று இருளை விலக்குவோம். இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி. அது உங்களைத் திருத்தாது. அதனைக் கண்டு நீங்கள்தான் திருந்தவேண்டும். உண்மைதானே? திருவள்ளுவர் வழியில் நின்று மகிழ்வோம் ; மகிழ்விப்போம்.

ஞாயிறு, 27 ஜூன், 2021

பெண்ணியம் பேசிய முதல்வர் – திருவள்ளுவர்

 


பெண்ணியம் பேசிய முதல்வர் – திருவள்ளுவர்

     பெண்ணியம் பேசிக்கொண்டே காலத்தைக் கடந்துகொண்டேபோகும் சூழலைக் காணமுடிகிறது. எத்தனையோ நூற்றாண்டுகள் ; எத்தனையோ தலைமுறைகள் கடந்தபின்னும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நின்றபாடில்லை. மாறாகப் பெருகிவரும் சூழலையும் காணமுடிகிறது. இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமாயின் பெண்களை இழிவுபடுத்தும் சூழல் கொடூரமானதாக மாறிவருகிறது.

     “பெண்விடுதலை” என்னும் மாயையினை நம்பி வெளியே துணிவுடன் எதிர்த்து நிற்கும் பெண்கள் நாள்தோறும் காணாமல் போவது வாடிக்கையாகிவிட்டது. நாள்தோறும் அப்பெண்களைப் பெற்ற தாய்மார்களின் கண்ணீர்தான் எழுத்துக்களாக செய்தித்தாள்களில் வெளிவந்துகொண்டு இருக்கின்றன.

     குற்றங்கள் செய்தவர்களைத் தண்டிக்கும் முன் பணம், புகழ், பதவி என எத்தனையோ கவசங்கள் குற்றவாளிகளைக் காப்பாற்றிவிடுகிறது. சரி, பிறரை குறை சொல்லியே தப்பித்துக்கொள்ள நினைப்பதில் ஒரு பயனும் இல்லை. ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவிற்கு பெண்களின் மீதான மதிப்பினை உயர்த்துவஹ்டு ஒன்றுதான் வழி. விதைகள் நன்றாக அமைந்துவிட்டால் செடி நச்சுடையதாக அமையாதுதானே? எனவே சிறுவயது முதலே பெண்களை மதித்துவாழ ஆண் குழந்தைகளுக்கு ; இளைஞர்களுக்கு ; பெரியோர்களுக்குக் கற்றுக்கொடுக்கவேண்டும். பெண்களைப் பாதுகாப்பாக வளர்க்கவேண்டும். பெண்களைக் காப்பதாக எண்ணி அவர்களுடைய திறமையை முடக்கிவிடக்கூடாது.

     ஆண்களுக்குப் பெண்ணிய அறிவை ஊட்டுவது முள் மேல் படர்ந்துவிட்ட சேலையை எடுக்கும் அளவிற்கான கவனம் தேவை. வீடுகளில் ; பள்ளிகளில் ; கல்லூரிகளில் ; பணியிடங்களில் ; சாலைகளில் ; மண்ணில் ; விண்ணில் என அனைத்து இடங்களிலும் பெண்கள் மதிக்கப்படவேண்டும்.

     ‘பெண்ணிய முழக்கம்’ என்பது பெண்களின் திறத்தை மதிக்கவேண்டும் என்பதற்கான ஒரு வழக்குதானே? மனிதர்களை மனிதனாக எண்ணவேண்டும் என்னும் இயல்பான ஒரு வாழ்வைக்கூடப் போராடித்தான் பெறவேண்டுமென்றால், மனித இனத்துக்கு ஆறறிவிருந்து என்ன பயன்? என்றுதானே கேட்கத்தோன்றுகிறது. அதனால் வீட்டில் பெண்குழந்தைகளை ஆண்குழந்தைகளுக்கு இணையாக; மேலாக வளர்க்கவேண்டும். அப்பொழுதுதான் மதிக்கவேண்டும் என்னும் எண்ணம் ஆண் குழந்தைகளுக்கும், வீரத்துடன் வளரவேண்டும் என்னும் எண்ணம் பெண்களுக்கும் ஏற்படும். முதலில் இப்படி வளர்ப்பது சாத்தியமில்லாததாகத் தோன்றினாலும் காலப்போக்கில் பழகிவிடும்.

     காசுக்காக தன் உடலையே விற்கும் பெண்களைக் கூட “வரைவின் மகளிர்” என எத்தனை மதிப்புடன் சுட்டியிருக்கிறார் திருவள்ளுவர். வரைவு எனில் திருமணம் என்று பொருள். திருமணம் செய்யாத பெண்கள் எனக்கூறுவது எத்தனை மேன்மை.

     “வரைவுஇலா மாண் இழையார் மென் தோள்”  (திருக்குறள்- 919) எனக் குறிப்ப்பிடுகிறார். மேலும் “இருமனப் பெண்டீர்” (திருக்குறள் – 920)  பொது நலத்தார் (திருக்குறள் – 915) பொருட்பெண்டீர் (திருக்குறள் -914) என எத்தனை மதிப்புடைய சொற்களால் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இன்று வாடி, போடி என ஊடகங்களில் பெண்களை அழைப்பது, பெண்ணே மற்றொரு பெண்ணை, ஆணை அழைத்துக் கொடுமை செய்யச்சொல்வது என எத்தனைக் காட்சிகளைக்காணமுடிகிறது. இதுவா வளர்ச்சி? சமூகத்திற்கே இகழ்ச்சிதானே?

பெண்களை ‘கட்டை’ என அழைப்பதும் ‘குட்டி’ என அழைப்பதும் பாடல் எழுதுவதும் இன்னும் எத்தனையோ இழிவான சொற்களால் பெண்களைக் குறிப்பது வாடிக்கையாகிவிட்டது.

தமிழர்களுடைய வாழ்வில் பசுவானது மிகவும் புனிதமானது. அதனால்தான் மாட்டுப்பொங்கல் அன்று காளைகளை மட்டுமின்றி பசுக்களையும் வணங்குவர். பசு புனிதமானது என்பதனை பண்பாட்டு அடிப்படையில் மட்டும் குறிக்கப்படுவதில்லை. தாயனவள் குழந்தைக்குப் பாலூட்டி வளர்ப்பதுபோல், பசுவும் பாலினைக் கொடுத்து குழந்தையைக் காக்கிறது. கைக்குழந்தை முதல் இறக்கும் நிலையில் உள்ளவர் வரை பால் எத்தனை முக்கியத்துவம் பெறுகிறது. ஏன்? இன்னும் சொல்லப்போனால் இறந்த பின்னும் பாலூற்றும்நிகழ்வு நடக்கத்தானே செய்கிறது. என்ன கட்டுரைக்குத் தொடர்பில்லாமல் பால் குறித்துப் பேசப்படுகிறதே என்றுதானே எண்ணுகிறீர்கள். காரணம் இருக்கிறது. சொல்லட்டுமா?

கன்று உயிருடன் இருக்கும்வரை, முதலில் கன்றினை பசுவின் மடியினை முட்டச்செய்து பால் கறப்பர். பசு தன் கன்றுக்குப் பால் சுரக்கும். அதனை மனிதன் பிடித்துக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிடுவான். அது தன் குழந்தையாக இருக்கலாம். அல்லது சமூகத்தில் ஏதேனும் ஒரு குழந்தையாக இருக்கலாம். ஆனால் பயன் அடைவது மனித குலமே. பசுவினது கன்று இறந்துவிட்டாலும், வைக்கோலைவைத்து கன்று வடிவத்தில் பசுவின் முன் காட்டுவர்கள். அப்பொழுதுதான் பால் கறக்கும். பசுவிற்கு கன்று இறந்துவிட்டது. இது பொம்மை எனத்தெரியும். ஆனால், அதன் பாசம், பாலாக வடியும்.  

அப்படித்தான் பெண்களும். பசுவிடம் கன்றின் பொம்மையைக் காட்டி மயக்குவது போல கயவர்கள் பெண்ணின் இரக்க உணர்வுகளைப் புரிந்துகொண்டு, பாசம் என்னும் பெயரில் பெண்களை அடிமையாக்கிவிடுகின்றனர். ஆசை வார்த்தைகளால் மோசம் செய்கின்றனர். “நீ இல்லை என்றால் தற்கொலை” எனப்பேசிப்பேசி வசப்படுத்தி வலையில்வீழ்த்திவிடுகின்றனர். இத்தகைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் பக்குவம் பெண்களுக்கு வேண்டும். திட்டமிட்டு ஏமாற்றும் கயவனின் பண்பை அறியாமல் “அவன் தீங்கு செய்யமாட்டான்” என எண்ணினால் பின்னால்வருந்தவேண்டி வரும். எல்லா துன்பங்களுக்கும் அந்த இரக்கமே காரணமாகிவிடும். எல்லோரையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கும் காவலர்தான் குற்றவாளிகளை அடையாளம் காண்பார். குற்றம் நிகழாது காப்பார். அவ்வாறே ஒவ்வொரு பெண்ணும் தன்னைக் காத்துக்கொள்ள விழிப்புடன் செயல்படவேண்டும். ஆண்கள் எவராயினும், பெண்களுக்குக் கேடு செய்தால் உடனடியாகத் தண்டிக்க வழி செய்யவேண்டும். தொடக்கத்தில் மன்னித்து விட்டுவிட்டால் நாளுக்கு நாள் பெருகி பெரும் ஆபத்தை விளைவித்துவிடும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பல பழகியவர்களாலேயே ஏற்படுகிறது எனக் காவல்துறை கூறுகிறது. உங்களுடைய நகம்தானே என வளரவிட்டால் முகத்தைக் கீறிவிடும்தானே?  பகையை வெல்ல பெண்களுக்கு வழிகாட்டுகிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

     இளைதாக முள்மரம் கொல்க களையுநர்

     கைகொல்லும் காழ்த்த இடத்து (திருக்குறள்- 879)

 

     முளைவிட்ட முள்மரத்தை பார்த்த உடனே வெட்டிவிடவேண்டும். வளர்ந்தபின் வெட்டலாம் என எண்ணினால் அதனால் காயங்கள் ஏற்படும் என அறிவுரை கூறுகிறார். பெண்களைத் துணிவுடன் வாழச்செய்ய அறிவுறுத்துவதால் பெண்ணியம் பேசிய முதல்வர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் எனக் குறிப்பிடலாம்தானே?

 

 

    

 

 

சனி, 26 ஜூன், 2021

குடிகார நண்பர்களே – திருவள்ளுவர் அழைக்கிறார்

 




குடிகார நண்பர்களே – திருவள்ளுவர் அழைக்கிறார்

“இராமன் ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும் எனக்கொரு கவலை இல்ல” எனப் பாடிக்கொண்டு குடித்துவிழும் குடிகாரரர்களைப் பார்த்திருப்பீர்கள்தானே? 1980- இல் வெளிவந்த ‘முள்ளும் மலரும்’ படத்தில் வெளிவந்தபாடல் இது. இன்றும் அந்தப்பாட்டைப் பாடிக்கொண்டு குடித்து விழுந்துகொண்டிருக்கிறார்கள் என்றால், என்ன பொருள்?. அந்த அளவிற்கு அந்தப் பாடலை விரும்பியிருக்கிறார்கள் என்றுதானே பொருள். அதுபோலவே 1974 இல் வெளிவந்த “அவள் ஒரு தொடர்கதை“ படத்தில் “தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு” என்னும் பாடலும் குடித்துவிட்டுப்பாடும் பாடல். அப்பாடலைப் பாடுவதனையும் அன்றாடம் பார்க்கமுடிகிறதுதானே. அறுபது வயது குடிகாரரின் கச்சேரியில் இப்பாடலுடன் நடிப்பும் பார்ப்பவரை ஈர்க்கும். இளைய குடிகாரர்களுக்குப் பாடல் பஞ்சமே இல்லை. இன்று வெளிவரும் படங்களில் ஒரு பாட்டு குடிப்பாட்டாக இருக்கவேண்டும் என்பது விதியாகவே எழுதப்பட்டுவிட்டிருக்கிறதுபோல.  குழந்தைகள்கூட இப்பாடல்களைப்பாடித்திரிவதுதான் வேதனை. தெரிந்தோ தெரியாமலோ சில நடிகர்கள் தங்கள் ரசிகர்களைக் குடிகாரர்களாக  மாற்றிக்கொண்டுதான் இருந்தனர் ; இருக்கின்றனர். சிங்கம்போன்று வீறுநடை போட வேண்டிய இளைஞர்கள் வீதீயில் விழுந்து கிடப்பது எத்தனை இழிவு. இந்நிலையினை மாற்றுவது நடிகர்களுடைய பொறுப்பு.   ஏன் இயக்குநர்களுக்குப் பொறுப்பில்லையா? எனக் கேட்காதீர். பெற்றோர் பேச்சைக்கேட்காத பிள்ளைகள்கூட நடிகர்பேச்சைக்கேட்டுத்தான் நடக்கிறார்கள் : நடக்கவும் செய்கிறார்கள்.

தாயானவள், குழந்தையின் எந்த நிலையினையும் கண்டு பொறுத்துக்கொள்வாள். ஆனால், குடித்து விழுந்திருக்கும் நிலையினைக் கண்டால் மனம் பொறாள். பெற்றவளே மன வருத்தம்கொள்ளும்போது, சான்றோர்கள் கண்டால் என்ன ஆகும்? எனக்கேட்கிறார் திருவள்ளுவர். படிப்பு, பணி, திருமணம், உடல் நலம் என அனைத்தையும் ஒருங்கே கெடுத்துவிடும்தானே?

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்

சான்றோர் முகத்துக் களி (திருக்குறள் – 923)

 

என்னும் திருக்குறள் குழந்தையின் முகத்தைக் கண்டு இன்பமடைந்த தாயின் மனம், துன்பமடையக்கூடிய நிலைக்குக் குடி மாற்றிவிடுவதனை எடுத்துக்காட்டியுள்ளது.

குடிகாரர்கள் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்களே எப்படி?. குடிகாரன் எப்படி உளறுவான்? எப்படி நடப்பான்? எப்படி விழுவான்? என்பதைப் பார்க்க எல்லோருக்கும் ஆவல் உண்டு. அதனால்தான் கயவர்கள் ‘விருந்து’ என்னும் பெயரில் நேர்மையானவர்களை குடிக்கவைத்து, தவறான செயல்களில் ஈடுபடவைத்து படமெடுத்துவைத்துக்கொள்கின்றனர். பின்னாளில் மயக்கியோ, அச்சுறுத்தியோ பணியவைக்கின்றனர். போதையில் கையெழுத்துபோட்டுவிட்டு வீட்டையும் நாட்டையும் இழந்தவரலாறு பலவுண்டு. பெரிய விடயங்களுக்குள் புகவேண்டாம். குடும்பங்களில் கலவரம் ஏற்படுத்தும் குடியினைத் தடுக்கத் திருவள்ளுவர் என்ன கூறுகிறார்? என்பதைப் பார்த்தால் போதும். வீடு நன்றாக இருந்தால்தானே நாடு நன்றாக இருக்கும்.

அரசு குடும்ப வறுமையை நீக்க உதவித்தொகை கொடுத்தால், உடனே அப்பணத்தை எடுத்துக்கொண்டு குடிக்கச்சென்றுவிடும் குடிகாரர்களைப் பார்க்கமுடிகிறது. குழந்தைகளுக்குக் கஞ்சி வார்க்கவும் வழியின்றித் தவிக்கும் குடும்பச்சூழலை மறந்துவிட்டு எங்கோ விழுந்துகிடக்கும் பொறுப்பற்ற குடிகாரர்களை என்னென்பது? அப்படிக் கேட்பாரற்று அளவுக்கு அதிகமாகக் குடித்து இறந்துபோகும் குடிகாரர்கள் இருபத்தைந்து (25) முதல் நாற்பத்தைந்து (45) வரை வயதுள்ளோரே. திருமணம் நடந்து சில மாதங்கள், வருடங்களானோர், ஒன்று, இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்றோர் என எத்தனையோபேர்  இறப்பது அன்றாட நிகழ்வாகிவிட்டிருக்கிறது.

ரோஜா மலர் போன்ற பிஞ்சுக்குழந்தைகளை விட்டுவிட்டு குடியில் மூழ்கி இறக்கின்றனர். அதனால் பிச்சை எடுக்கும் நிலைக்கு அக்குடும்பம் தாழ்ந்துபோகிறது. தந்தையை இழந்த குழந்தை வேலைக்காரியாகி பத்துப்பாத்திரம் தேய்த்துக் கைகள் காய்ந்து புண்ணாகிவிடும் நிலையினைப்பார்க்கமுடிகிறது. இதனை, குடிப்பவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்தானே? மருத்துவராக ; பொறியாளராக ; ஆசிரியராக ; விளையாட்டு வீர்ர்களாக ; கலைஞர்களாக வரவேண்டிய குழந்தைகள் வறுமையில் உணவுக்காகவே வாழ்ந்து வாழ்க்கையை முடித்துக்கொள்வது எத்தனை அவலம். தன் குடும்பத்தினரிடம் பாசம் கொண்டவர்கூட, குடியானது நஞ்சு எனத்தெரிந்தும் குடிக்கின்றனர். அத்தகையோர் அறிவுடையராகார் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்உண் பவர் (திருக்குறள் – 926)

 

என்னும் திருக்குறளின்வழி, குடும்ப நன்மையையும், உடல் நலத்தின் அவசியத்தையும் உணர்ந்தால் மட்டுமே இக்குடியிலிருந்து ; நஞ்சிலிருந்து விடுபடமுடியும் என உணர்த்துகிறார் தெய்வப்புலவர்.

     ஒருவன் குடித்துவிட்டு சாலையில் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் வருகிறான். போவோர் வருவோரையெல்லாம் கிண்டல் செய்கிறான். ஊடகங்கள் அப்படித்தானே குடிகாரர்களைக் காட்டிக்கொண்டிருக்கிறது. இதனைக் கண்ட இளைஞர் ஒருவர் அவரைத் தண்டிக்கும் வகையில் தான் வைத்திருந்த குச்சியில் ஒரு அடி அடிக்கிறார். சுற்றி இருந்தவர்கள். “நல்லா அடிங்கய்யா? குடித்துவிட்டு சாலையில் ஆட்டம் போடுகிறான்”. என இளைஞரை ஊக்கப்படுத்துகின்றனர். அடித்த அடியினைத்தாங்கமுடியாமல் அவன்மேல் விழுகிறான் குடிகாரன். “என்மேலா கைவைத்தாய்” என இளைஞன் பலமாக அடிக்க, குடிகாரன் மயங்கி விழுகிறான். சுற்றி இருந்தவரில் ஒருவன் ஓடி வந்து விழுந்த குடிகாரனின் நாடியைப் பார்த்தான். “செத்துட்டான்பா” என்கிறான். கூட்டம் புலம்பிக்கொண்டு இருக்கிறது. ஒரு பெண்ணும், மூன்று பெண்குழந்தைகளும் ஓடி வருகிறார்கள்.  “இது ஒரு கதை” என எண்ணாதீர். அன்றாட நிகழ்வு. கேட்பதற்கு நாதியின்றி நாள்தோறும்  இறக்கும் குடிகாரர்கள் பலர்.

     மதுக்கடைகள் எத்தனைக் குடும்பங்களை அழித்துக்கொண்டிருக்கிறது? எனக் கேட்ட காலம் மலையேறிவிட்டது. குடி எத்தனைக் குடும்பங்களை வாழ்விக்கிறது? எனக் கேட்கும் அளவிற்கு, குடிப்பது நகைச்சுவையாகிவிட்டதுதான் கொடுமை.

இவர்களைத் திருத்தவே முடியாதா? என்றுதானேகேட்கிறீர்கள். குடியில் மூழ்கி இருக்கும்போது திருத்த எண்ணுவது, விளக்கினை ஏற்றி எடுத்துக்கொண்டு  நீரில் மூழ்கியவனைக் காப்பது போன்றது என்கிறார் தெய்வப்புலவர்.

     களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைக் தீத்துரீஇ அற்று (திருக்குறள் – 929)

 

சேற்றில் விழுந்த செங்கதிர்போல் ஒளியின்றி வாழ்வைக்கெடுத்துக்கொள்வோரைப் பார்த்தால் வெறுப்பினைவிட அவர்களுடைய குழந்தைகளை ; மனைவியை ; பெற்றோரை எண்ணி வருந்தவே வேண்டியிருக்கிறது. குடியை எதிர்த்து எத்தனை ஆயிரம் மக்கள் போராடினாலும் பயனில்லை. இதற்கு அந்த ஆலைகளை வைத்திருக்கும் ஒருசிலர் எண்ணினால் போதும். நாடும் வீடும் நலம்பெறும்தானே.

குடி குடிப்போரே கேளுங்கள் ! குடி விற்போரே கேளுங்கள் ! இன்று  உங்களுக்கு மகிழ்ச்சி தருவதால் இச்செயலைச் செய்கிறீர்கள்.  ஆனால் இது  மகிழ்ச்சியைத் தராது. அப்படியே நிகழ்காலத்தில் மகிழ்ச்சி தந்தாலும் எதிர்காலத்தில் துன்பத்தையே தரும் என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

     கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்

     முடிந்தாலும் பீழை தரும் (திருக்குறள் – 658)

 

     சான்றோர்கள் போற்றாத செயல்களைச் செய்தால் இழிவுமட்டுமே உண்டாகும். குடிப்பதுபோல் நடிப்பது தவறு. நடிப்பதுபோல் குடிப்பது அதனைக் காட்டிலும் தவறு.  இதனை, உணர்ந்து தவறான வழியில் செல்லாதிருத்தலே பெருமைக்கு வழி. தெய்வப்புலவர் பேச்சைக் கேட்கலாம்தானே?