தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 6 ஜூலை, 2021

கவனமா இருங்க – ஔவையாரின் அறிவுரை

 


கவனமா இருங்க – ஔவையாரின் அறிவுரை

     ஒருவன் காட்டின் வழியே அடுத்த ஊருக்குச் செல்ல வேண்டுமெனத் தன் பாட்டியிடம் விடைபெற்று செல்கிறான். அப்போது பாட்டி, “காட்டில், ‘புலி’ என்ற கொடிய விலங்கு இருக்கும். அது கூர்மையான நகங்களுடன் இருக்கும் ; வரிகளுடன் இருக்கும் ; நான்கு கால்களுடன் இருக்கும் ; கூரிய பார்வை மற்றும் மீசையுடன் இருக்கும் ; அச்சத்தை உருவாக்கும் ; பதுங்கும் ; பின் பாயும். ஒரே அடியில் கொன்றுவிடும் கவனமாகச் செல்லவேண்டும்” என அறிவுறுத்தினாள்.  “சரி, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று வீட்டை வீட்டு வெளியே சென்றவன் ஐந்தே நிமிடத்தில் ஓடி வருகிறான்.

“பாட்டி நீ சொன்ன மிருகம் வந்துவிட்டது. அதனால்தான் வந்துவிட்டேன்.” எனப் பதற்றத்துடன் கூறினான். “எங்கே இங்கெல்லாம் புலிவராதே. சரி ! வா,” எனத் தீப்பந்தத்தை எடுத்துச் செல்கிறாள். “புலியைக் காணவில்லையே” என்றாள். அப்போது ஓரமாக நின்று “மியாவ் மியாவ்” என ஒரு விலங்கு கத்துகிறது. “இதோ நீங்க சொன்ன புலி என்றான் பேரன். “அடக்கோழையே ! இது, புலியில்லை பூனை” என்றாள். “கொடியில் சிக்கிக்கொண்டிருக்கிறதே” எனக் கூறிக்கொண்டே அந்தப் பூனையைக் கொடியிலிருந்து விடுவித்தாள். பூனை நன்றி கூறுவதுபோல் அவளுடைய காலைச் சுற்றிவந்து ஓடிவிட்டது.  

இரண்டு நாள் ஓடியது. பேரன் மறுபடியும் பாட்டியிடம் விடைபெற்றுச்செல்கிறான்.  . அப்போது காட்டின் வழியே செல்லும்போது ஒரு புலி பள்ளத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறது. உடனே, தன் பாட்டி உதவி செய்ததை எண்ணி, பக்கத்திலிருந்த நீளமான மரக்கட்டையை எடுத்து சறுக்குமரம்போல் போட்டான். புலி, உடனே எளிமையாக அக்கட்டையில் ஏறிவந்து, ஒரே அடி அடித்து அவனைக் கொன்றுவிட்டது. பேரனின் அறியாமையே அவனைக் கொன்று விட்டது. ஒவ்வொரு விலங்கின் இயல்பினை அறிந்துகொண்டால் மட்டுமே அந்த விலங்கிடமிருந்து காத்துக்கொள்ளமுடியும்.

     ஒரு விலங்கின் இயல்பை அறியாதவனே கொல்லப்படுகிறான் எனில், பல விலங்கின் இயல்பினைக் கொண்ட மனிதர்களுடன் பழகும்போது எப்படி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். அப்படி எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் என்னாகும், என்பதனை,

     வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்குஅதனுக்கு ஆகாரம் ஆனாற்போள் - பாங்கறியாப்

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின் மேல் இட்ட கலம். (மூதுரை-15)

 

என்னும் பாடலின்வழி தமிழ் மூதாட்டி ஔவையார் அழகாக உணர்த்திவிடுகிறார்.

மருத்துவர்கள், தம்முடைய அறிவால், பிறருடைய  உயிரைக்காத்து நிற்கின்றனர். அதனால்தானே, அவர்களைக் கடவுளாக எண்ணுகிறோம். மிகவும் கருணை உடையவர்களாக வாழும் மருத்துவர்கள் பிற உயிர்களின் துன்பத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். ஆனால், அவர்கள் தங்கள் பாதுகாப்பையும் உணரவேண்டும்தானே? உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா? எளிமையாகப் புரிந்துகொள்வீர்கள்.

     ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமையாக்க, இந்திய வீரர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலம். ஆங்கிலேயர்கள், ஆயுதமில்லாத இந்தியர்களை ஆயுதம் கொண்டு தாக்கி ; துன்புறுத்தி ; சித்திரவதை செய்து கொன்றுகுவித்த காலம். துணிவுடன் எதிர்த்த தலைவர்களின் தலையைக்கொய்து, நடு சாலையில் பல நாட்கள் தொங்கவிடுவர். இவ்வாறு அச்சத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்திய கோழைகளாகவே ஆங்கிலேயர் விளங்கினர்.  நெல்மணிகளை பயிரிட தடைவிதித்து வறுமையில் உழலவைத்தனர். வணிகம் செய்யவிடாமல் தடுத்தனர். தலைப்பாகையுடன் பெருமிதத்துடன் வாழ்ந்த ஊர்த்தலைவர்களையெல்லாம் ஆயுதத்தால் தாக்கி, அச்சத்தை ஊட்டி, ஆடையைக் கழற்றி ஓடஓட விரட்டியடித்தனர். நம் நாட்டில் காட்டிக்கொடுக்கும் குணமுடைய சிலரைத் தம்முடன் வைத்துக்கொண்டு, விடுதலை வீரர்களை வேட்டையாடினர்.

ஒரு முறை, விடுதலை வீரர்கள் இருவரைத் துரத்திக்கொண்டு ஆங்கிலப்படை வீர்ர்கள் (அவர்களுள் பலர் இந்தியர்கள்தான் ஆங்கிலேயரிடம் இருந்துதப்பிக்க அவர்களுடன் கூட்டுசேர்ந்து காட்டிக்கொடுத்தவர்கள்)  வருகின்றனர். ஒரு வீட்டிற்குள் இரண்டு வீரர்களும் நுழைந்துவிடுகின்றனர். அங்கு நின்ற பெண்மணியிடம் “நாங்கள் விடுதலை வீர்ர்கள், எங்களை ஆங்கிலப்படை துரத்துகிறது” எனக் கூறுகின்றனர். அந்தத்தாய், அவர்களை தானிய அறையில் மறைந்துகொள்ளும்படி கூறித்தாழிட்டுவிடுகிறாள். கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. அவள்,  படபடப்புடன் கதவைத் திறக்கிறாள். “என்ன, இங்கே ஓடிவந்த இரண்டு பேர் எங்கே?” எனக் கேட்கின்றனர். “இதோ எனக் கைகாட்டுகிறாள். போர்வைக்குள் ஒளிந்திருக்கிறார்கள் என எண்ணி பல குண்டுகளால் இருவரையும் சுட்டனர்.  “இனி, விடுதலை வீரன் என எவர் வந்தாலும் இடம்கொடுக்கக் கூடாது” எனக்கூறிச் சென்றுவிட்டனர். அவர்கள் சென்றதை உறுதிசெய்துகொண்டு தாழினைத் திறக்கிறாள். வெளியே வந்த வீரர்கள், அங்கே இறந்துகிடந்த இரண்டு இளைஞர்களைக் கண்டு “தாயே ! யார் இவர்கள்?” எனக் கேட்கிறார்கள். “என்னுடைய இரண்டு மகன்கள்” என்கிறாள். “ஏன்? எங்களைக்காட்டிக்கொடுக்காமல் எங்களைக்காக்க உங்கள் மகன்களை இழந்த்தீர்” எனக் கேட்கிறான். “என்னுடைய மகன்களை இழப்பதால் எனக்கு மட்டுமே இழப்பு. ஆனால், உங்களைப்போல நாட்டின் விடுதலைக்காகப் போராடும் வீரர்களை இழந்தால் நாட்டிற்கே இழப்பாயிற்றே”. எனக்கூறி அழுகிறாள். உள்ளம் நெகிழ்ந்த வீரர்கள், “உம்போன்ற வீர்த்தாய்மார்களால்தான் நாடு விடுதலைப்பெறப்போகிறது” எனக்கூறி, காலில் விழுந்து வணங்கி விடைபெறுகின்றனர். என்ன எங்கிருந்து எங்கோ தாவிவிட்டீர் என்கிறீரா. எல்லாம் காரணமாகத்தான். இரக்ககுணத்தை நல்லோரிடம் காட்டலாம் தீயோரிடம் காட்டக்கூடாது. காட்டினால் என்னாகும் என்றுதானே கேட்கிறீர்.?

விடத்தை நீக்கும் மருத்துவர், பாம்பு கடித்த புலியின் விடத்தை நீக்குகிறார். விடம் நீங்கியபுலி மருத்துவரையே அடித்துக்கொன்றுவிடுகிறது. இவ்வாறு, நன்றி உணர்வில்லாதவர்களுக்கு ஒருவர் உதவிசெய்தால், மண்ணால் செய்யப்பட்ட கலத்தைப்பாறையில் போட்டு உடைப்பதைப்போல அவ்வுதவியினை மறந்து உதவிசெய்தவர்க்கே கேடு செய்வர் என விடை சொல்கிறார் தமிழ்முதாட்டி. பாட்டி சொல்லைத் தட்டலாமா? தட்டக்கூடாதுதானே?.

 

திங்கள், 5 ஜூலை, 2021

நூலகம் அறிவின் தாயகம்

 


நூலகம் அறிவின் தாயகம்

கல்லாதவருடைய கல்விக் கனவினையும் நிறைவேற்றும் கல்விச்சாலைதான் நூலகங்கள். கல்லாதவர்களையும் ‘படிக்காத மேதை’ ஆக்குவன. இன்று, பார்வை குறைபாடுடையோர், செவிவழி அறிவைப்பெறுவதற்கு ஒலி நூலகங்களும், கேட்கும் திறன் குறைபாடுடையோர், கண் வழி அறிவைப்பெறுவதற்கு ஒளி நூலகங்களும் வந்துவிட்டன. முத்தாய்ப்பாக கணினி நூலகங்கள், இணைய நூலகங்கள், மின் நூலகங்கள் என நாளும் வளர்ச்சிபெற்று வருவதும் சிறப்பு.

கற்றவர்க்கு நூலகம் சொர்க்கவாசல். அங்குக் கற்றவர்கள்தான் போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று, வறுமையினை ஓட்டி வளமையினைக் கூட்டி வாழ்கிறார்கள். நேர்மையான நாளிதழ்களின் செய்திகளை ஆய்ந்து படிக்கும் அறிவு உலகியல் அறிவை வளர்க்கும். நாளிதழ்களைத் தொடர்ந்து கற்ககற்கத்தானே இத்திறன்வாய்க்கும். மக்களுக்காக செய்திகளை வெளியிடுவோரும் காசுக்காக மக்களுக்குத் தவறான வழிகாட்டுவோரும் யாரென அறியவேண்டும்.

“தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்” எனப் பல இதழ்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில், சில இதழ்கள் “தடுப்பூசியால் கை வீங்கியது, கால் வீங்கியது” எனப் பொய்யான செய்திகளை வெளியிட்டு மக்களைக் குழப்பத்தில் தவிக்கவிடுவர். மக்களின் அச்சத்தை நீக்க அறிவு ஒன்றே வழி.

கற்பதால் மட்டுமே பகுத்தறிந்து உண்மையான செய்திகளைப் பதிவுசெய்துகொள்ளமுடியும். அவ்வறிவினை வளர்க்கவே நூலகங்கள் துணைபுரிகின்றன. அவை, காலக்கட்டுப்பாடின்றி பகல் மட்டுமின்றி இரவிலும் செயல்படுவதனைக் காணமுடிகிறது. பகல் வேளைகளில் கல்விச்சாலைக்குச் செல்வோர் மாலை, இரவு நேரங்களில் நூலகங்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். “எங்கள் ஊரில் பகல் நேர்த்திலேயே யாரும் நூலகத்தைப் பயன்படுத்துவதில்லை” எனச் சொல்லாதீர்கள். தொலைக்காட்சி வசதிகளும் கைப்பேசி வசதிகளும் செய்துக்கொடுத்துவிட்டபின் நூலகத்தைப் பயன்படுத்த அவர்கள் என்ன தவசீலர்களா? இயல்பான குழந்தைகள்தானே? படிப்படியாக நூலகத்தின் மதிப்பினைக் கற்பிக்கவேண்டியது பெரியோர்களின் கடமை.

பெரியோர்கள், உடல்நலத்திற்கு உள்ள நலத்திற்காகவும் கோவில்களுக்கு அழைத்துச்செல்வதுபோல், அறிவுக் கோயிலாகத் திகழும் நூலகங்களுக்கும் அழைத்துச்செல்லவேண்டும். நீங்கள் உங்கள் பேரக்குழந்தைகளுக்கென வீடு, பணம், நிலம், அணிகலன்கள் என எத்தனைச் செல்வங்களைச் சேர்த்துவைத்தாலும் அவை பின்னாளில் நன்மையும் செய்யலாம். அல்லது அதனாலேயே பிரச்சினைகள் உருவாகி ; உறவுகளை இழந்து  வாடும் அளவிற்கு தீமையும் செய்யலாம். ஆனால் கல்வி அப்படியா?

 

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை. (திருக்குறள் – 400)

 

என்னும் தெய்வப்புலவர் திருவள்ளுவர் கூற்றின்படி, கேடு செய்யாத ஒரே செல்வமான கல்விச்செல்வத்தை ஊட்டிவிடுவதே அருமையான சொத்து என்பதனை அனைவரும் உணரவேண்டும். எனவே, உடல் பயிற்சிக்கு விளையாட்டுத்திடலில் நேரத்தைச் செலவிடுவதுபோல அறிவு வளர்ச்சிக்கு நூலகங்களைப் பயன்படுத்தவேண்டும்.

     கல்வி கற்போர்க்கு மட்டுமே நூலகங்கள் என நினைத்துவிடக்கூடாது. விளையாட்டு வீர்ர்களும் களத்தில் பயிற்சியில் ஈடுபடாதபோது நூலகங்களைப் பயன்படுத்தவேண்டும். ஏனெனில், தாம் விரும்பும் விளையாட்டுப் போட்டியில் சாதனைப் படைத்தவர்களின் வரலாற்றை, வழிகாட்டுதல்களைப் படிக்க நூலகங்கள் துணைசெய்யும். எனவே, அறிவுப் பயிற்சியும் விளையாட்டு வீர்ர்களுக்கு ஊட்டப்படுதல் வேண்டும். அதனால் வெற்றி எளிதாகும். நூலகம் செல்லும் வழக்கம்,அனைத்து முயற்சியாளர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் தேவைதானே?

இனி, நூலகத்தின் சொல்லழகைப் பார்க்கலாம். நூல் + அகம் = நூலகம். புத்தகச்சாலை, நூல் நிலையம் எனவும் அழைக்கப்பெறும். ‘அகம்’ என்றால் ‘வீடு’ என்றும் பொருள்படும். அதனால் தான் ‘அகம் உடையான்’ எனக் கணவனைக் குறிப்பிட்டனர். அது பின்னால் ‘ஆம்படையான்’ எனப் பேச்சுவழக்கில் மருவிவிட்ட நிலையினையும் காணமுடிகிறது. அவ்வாறே ‘அகத்துக்காரர்’ என்னும் சொல் ‘ஆத்துக்காரர்’ எனப் பேச்சுவழக்கில் மருவி நிற்பதனையும் காணமுடிகிறது. “இதெல்லாம் இப்போது எதற்கு?” என்றுதானே நினைக்கிறீர்கள். இப்போது “நூல் வீடு” என்றால் என்ன? எனப் புரிந்துகொண்டீர்தானே. இனி, “நூல் வீடு” சிலந்திக்கு மட்டும் பாதுகாப்பானது என எண்ணக்கூடாது, மனிதர்களுக்கும்தான் என உணர்ந்துகொள்ளலாம்தானே?

படி…. படி….. என ஒவ்வொரு படியாய் ஏறினால்தானே உயரே செல்ல முடியும். அதுபோலவே படித்துப்படித்து உயர்ந்தால்தானே உயர்பதவிகளை அடையமுடியும். எனவேதான், படிக்காதமேதையான கல்விக்கண் திறந்த காமராசரும் “படிப்புதான் ஒருவர் உயரவழி” என்றார். காலையில் நாளிதழ்கள் விற்கும் பணிசெய்த சிறுவன், நாளிதழ் செய்திகளை உள்வாங்கிக்கொண்டு கல்வித்தாகத்துடன் நூலகங்களைப் பயன்படுத்தினான். நூல் வாங்க காசில்லாத அச்சிறுவன்தான் பின்னாளில் நாளிதழின் முதல்பக்கத்தை அணிசெய்யும் குடியரசுத்தலைவரானார். அவர்தான் “புத்தகங்கள் படிப்பதையே வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்” எனக்கூறியவரும் ‘ஏவுகணைமனிதர்’ எனக் கொண்டாடப்படுபவருமான அ.ப.ஜெ.அப்துல்கலாம்.

யாருடைய துணியுமின்றி ஒரு சிறப்பான காரியத்தைச் செய்யமுடியும் எனில் அது படிப்பது ஒன்றுதான். நூலகத்தில் நுழையும்போது பல அறிஞர்கள் அங்கு வாழ்ந்துகொண்டிருப்பதை உணரவேண்டும். அப்போதுதான் பயபக்தியுடன் படிக்கமுடியும். அங்கு படிப்போருக்கும் எவ்வகையான இடையூறுமின்றி படிப்பது அறிவின் அடையாளம். அதனால்தான் “மோனம் என்பது ஞான வரம்பு” என்றார் தமிழ் மூதாட்டி ஔவையார். நூலகத்தில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அங்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறாரா? என்றுதானே கேட்கிறீர். “நூல்பல கல்” என  ஆத்திசூடி இலக்கியத்தில் கூறியிருக்கிறாரே. சரி, அப்படி படித்தால் என்ன நன்மை? எனக் கேட்கிறீரா. “கைப்பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி” எனக் கொன்றை வேந்தனில் விளக்குகிறார். கைப்பொருள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். அதனைவிட கல்விச்செல்வம் ஏற்படுத்தும் நம்பிக்கை நிலையானது ; நிகரற்றது என உணர்த்துகிறார். உண்மைதானே?

உலகிலேயே கல்வியின் அருமையினை உணர்ந்தவர்கள் நம் பாரத மக்கள். அதனால்தான் ‘குருகுலக்கல்வியை’  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருந்தனர். நாலந்தா பல்கலைக்கழகத்தில் பல்வேறு வெளிநாட்டவர் கல்வி கற்க வந்திருந்த சான்று ஒன்று போதுமே.

இங்கிலாந்தில் முதல் பள்ளிக்கூடம் 1811 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது பாரதத்தில் ஏழு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் (7,32,000) கல்விச்சாலைகள் இருந்தன எனில் எண்ணிப்பாருங்கள். அதுவே பாரதம். ஆங்கிலேயர்கள், அவற்றையெல்லாம் அழித்துவிட்டு தம் பெருமையினை உலகிற்குக் காட்டவே ஆங்கிலக் கல்வியை அறிமுகம் செய்தனர். அவ்வாறு இருந்தும், இன்றும் ஆசியாவில் பழமையான நூலகமாகத் தஞ்சை சரசுவதி மகால் நூலகம் திகழ்கிறது.  இங்கு அக்கால ஓலைச்சுவடிகள் பாதுகாக்கப்படுகிறது. தமிழில் மட்டுமின்றிப் பல மொழி ஓலைச்சுவடிகள் உள்ளன எனில் தமிழரின் பன்மொழிப்புலமையினையும் உணரலாம்தானே?

     களிமண்ணில் எழுதப்பட்ட காலத்தில் அரசர்கள் மட்டுமே நூலகத்தைப் பயன்படுத்தினர். மற்றவர்கள் படிக்கத்தடை இருந்தது. நாளடைவில் பொதுமக்களுக்காக நூலகங்கள் திறக்கப்பட்டன.  இந்தியாவின் பெரிய நூலகமான, கொல்கத்தா தேசிய நூலகம் 1836 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1953 இல் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டதே, இதற்குச் சான்று.

இன்றைய நூலக நிலை பற்றி தெரிந்துகொள்ளத் தானே நினைக்கிறீர்கள்.  உலகின் மிகப் பெரியநூலகமாக “அமெரிக்காவிலுள்ள “லைப்ரரி ஆஃப் காங்கிரஸ்” நூலகம் திகழ்கிறது. இந்தியாவில் தொடங்கிய முதல் பொதுநூலகமாகத் திருவனந்தபுரம் நடுவண் நூலகம் திகழ்கிறது. உலகில் தமிழ்நூல்கள் அதிகம் உள்ள நூலகம் – சென்னை. கன்னிமாரா நூலகம் திகழ்கிறது.

நூலகம் செல்வோம் ; தேர்வினை வெல்வோம்

ஞாயிறு, 4 ஜூலை, 2021

சுவையான நிகழ்வுகள் - சுவாமி விவேகானந்தர் வாழ்வில்

 


சுவையான நிகழ்வுகள் – சுவாமி விவேகானந்தர் என்னும் வீரத்துறவி

(119 ஆவது நினைவுநாள்)

ஒரு கோழியானது தனது பத்துக்குஞ்சுகளை பாம்பிடமிருந்துகாக்க இறக்கைக்குள் அவற்றை மறைத்துக்கொள்கிறது.  கோழியைச் சுற்றிச்சுற்றி படமெடுத்துவரும் மூன்று பாம்புகளைத் துணிவுடன் எதிர்கொள்கிறது. இதுதான் வீரம்.

பிறரை வெற்றிகொள்பவன் வீரன். தன்னை வெற்றிகொள்பவன் மாவீரன். அவ்வாறு தன்னை வெற்றிகொண்ட நரேந்திரன் என்னும் இளைஞனே சுவாமிவிவேகானந்தர் (12.01.1863 – 04.07.1902) ஆனார். அவருடைய வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வுகளைக் காண்போமா?

நிகழ்வு 1 :

பாஸ்கர் சேதுபதிக்கு அமெரிக்காவிலிருந்து “சமய மாநாட்டிற்கு வருக” என அழைப்பு வருகிறது. தன்னைவிட சுவாமி விவேகானந்தர் சென்றால் நம் நாட்டின் பெருமை உலகிற்குத் தெரியும் என எண்ணினார்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன் கண் விடல் (திருக்குறள் : 517)

 

என்னும் திருக்குறளுக்குத் தலைசிறந்த சான்றானார்.

 

சான்றாக வாழக்கூடியவர் சான்றோர்தானே?. அவ்வகையில் சான்றோரான பாஸ்கரசேதுபதி அவர்கள், தன்னை பின்னிறுத்தி சமுதாய நலத்தை முன்னிறுத்த எண்ணி சுவாமி விவேகானந்தரை அனுப்பினார். சான்றோர், தமக்குக் கிடைக்கும் நல் வாய்ப்பை பிறர்க்குக் கொடுத்து மகிழ்வர். நல்லோர், தம் வாய்ப்பினை மட்டும் அனுபவிப்பர். வஞ்சகர், பிறர் வாய்ப்பையும் தனதாக்கிக்கொள்வர். அவ்வாறு நோக்குகையில்,  தன்னைக் காட்டிலும் சுவாமி விவேகானந்தர் சென்றால்தான் நன்றாக இருக்கும் என எண்ணினார் ; உலகிற்கு ஒளியூட்டினார். சுவாமி விவேகானந்தரை முன்னிறுத்தி தன்னைப் பின்னிறுத்திய  பாஸ்கர சேதுபதியின் பெயர், (பாஸ்கரன் – சூரியன்) காரணப் பெயர்தானே.

நிகழ்வு – 2

“சகோதர சகோதரிகளே!” எனத் தன்னுடைய உரையைத் தொடங்குகிறார் சுவாமி விவேகானந்தர்.  தொடக்கமே அத்தனை உள்ளங்களையும் நெகிழவைக்கிறது. இந்த இரண்டு சொற்கள் எப்படி நெகிழவைத்தன?  இந்த ஐயம் அனைவருக்கும் வருவது இயல்புதானே?. இதனை அறிவதே அருமை. உண்மையான துறவை மேற்கொண்டவன் மற்ற மனிதர்களை உடன் பிறந்தோராகக் கருதுவான் அதுவே துறவு. அவ்வாறு உண்மையாக வாழ்ந்துவரும் நிலையினை இரண்டே சொற்களில் உணர்த்தினார். உண்மையின் வலிமையை உலகுக்கு உணர்த்தியதால் “இவர்தான் உண்மைத்துறவி” என உடனடியாக உணர்ந்தது அந்த விழிப்புடைய அரங்கு. அதனால்தான் அரங்கு அதிர்ந்தது. பாரதத்தின் பெருமையினை உலகம் அறிந்தது. உலக அரங்கையே அவர்பால் ஈர்த்தது.

நிகழ்வு - 3

உண்மையான ; தெளிவான ; கம்பீரமான ; அழகான அவருடைய பேச்சில் மயங்காதவர் எவரும் இல்லை.  பெரியோர்கள் அவரை வாழ்த்தி மயங்கினர். சிறியோர்கள் அவரை குருவாக எண்ணி மயங்கினர். இடைப்பட்டோர் சொல்லழகிலும் பொருளழகிலும் மயங்கினர்.

துறவிகள், ஆணையும் பெண்ணையும் ஒன்றாகக் காண்பர். அவர்களுக்கு உயிர் மட்டுமே தெரியும். உடலைத் தெரியாது. அத்தகைய துறவிதானே சுவாமி விவேகானந்தர். அமெரிக்காவில் ஒரு வளரிளம் பெண், அவருடைய பேச்சை தொடர்ந்து பல மேடைகளில் கேட்கிறாள். சுவாமி விவேகானந்தரிடம் காதல்கொண்டதைச் சொல்கிறாள். “நான் உங்களுடன் வாழ விரும்புகிறேன்” என்றாள். வளரிளம் பெண்ணின்  காதல்மொழியைக் கேட்ட இளைய துறவியின் விடை என்ன தெரியுமா? “ஏன் என்னுடன் வாழவேண்டும் என நினைக்கிறீர்”  எனக்கேட்கிறார். “எனக்கு, உங்களைப்போன்ற ஒரு அறிவு நிறைந்த குழந்தையைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அதுவே என் ஆசை” என்றாள். உடனே “நீங்கள் அதற்காகக் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. என்னையே நீங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார் சுவாமி விவேகாந்தர்.  இதுவே நம் பண்பாடு. இதற்குமுன் அவ்வாறு வாழ்ந்தவர் மாவீர்ர சத்ரபதி சிவாஜி.(19.02.1630 -  03.04.1680)

வீர சிவாஜியின் அருமையினை உணராத அயலார், நாட்டைக்கைப்பற்ற எல்லைக்குள் நுழைகின்றனர். சிவாஜியின் படை கொலைவெறி பிடித்த எதிரிகளை வீழ்த்தியது. அப்போது எதிர்த்துவீழ்ந்த சுல்தானின் மனையாளான பேரழகியை சிறைப்பிடித்து பல்லக்கில் தூக்கிவருகிறார்கள். மாவீரன் சிவாஜி, “பல்லக்கில் யார்? “ எனக் கேட்க, “பகைவனின் மனைவி” என்கின்றனர். சிவாஜி அப்பேரழகியிடம் சென்று “தாயே, பொறுத்தருள்க. பெண்களைத் தெய்வமாக எண்ணுவதே எங்கள் பண்பாடு. உங்கள் வயிற்றில் நான் பிறந்திருந்தால் நானும் அழகாக இருந்திருப்பேன்” என்றார். மாவீரன் சிவாஜி பெயரைக்கேட்டவுடன் அஞ்சி நடுங்கியவள், சிவாஜியின் அன்பு நிறைந்த பேச்சினைக்கேட்டும் மதிப்புடன் வணங்கினாள். இப்பரம்பரையில் வளர்ந்தவர்தானே சுவாமி விவேகானந்தர்.

நிகழ்வு – 4

சுவாமி விவேகானந்தர், ஒரு முறை இளைஞர்கள் துப்பாக்கி சுடும் விளையாட்டு விளையாடுவதனை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஒருவராலும் இலக்கினைச் சுடமுடியவில்லை. புன்னகைத்தார். உடனே, ஒரு இளைஞன் “எங்களைக் கேலி செய்யாதீர். உம்மால் முடியுமா?” எனக் கேட்கிறான்.  எப்படித் துப்பாக்கியைப் பிடிக்கவேண்டும்? எப்படிச் சுட வேண்டும்? என அந்தக் கடைக்காரனிடம் கேட்டறிந்து சுடுகிறார். துறவாடை உடுத்தியவர், எப்படிச் சுடப்போகிறார்?. என இளைஞர்கள் எண்ணினர். ஆனால், கொடுத்த அத்தனை குண்டுகளையும் குறிதவறாமல் சுடுகிறார். உடனே ஒரு இளைஞர், “ஏற்கெனவே நீங்கள் பயிற்சி பெற்றுள்ளீர்தானே?” எனக் கேட்டார்.  “நான் இப்போதுதான் முதல்முறையாகத் துப்பாக்கியைப் பிடிக்கிறேன்” என்றார் சுவாமிவிவேகானந்தர். அனைவரும் வியந்து நிற்கின்றனர். “இலக்கை மட்டுமே நோக்கும் தன்னம்பிக்கை உடையவர்க்கு எல்லாம் எளிமையாகும்” என்றார். இதுவும் நம் முன்னோர் வழக்குதான்.

அர்ச்சுனனுக்கும் துரியோதனனுக்கும் துரோணர் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது, மரக்கிளையில் நின்ற பறவையின் கண்ணுக்குக் குறிபார்க்கச்சொல்கிறார். துரியோதனன் முதலில் அம்பு தொடுக்க நிற்கிறான். “என்ன தெரிகிறது?” எனக் கேட்கிறார். “மரம், கிளை, பறவை, கண்” என ஒவ்வொன்றாய் கூறிச்செல்கிறான். அடுத்து, அர்ச்சுனன் அம்பை எடுத்துக் குறி வைக்கிறான். “என்ன தெரிகிறது?” எனக் கேட்கிறார். “பறவையின் கண் மட்டுமே தெரிகிறது” என்கிறான். அத்தகைய குருபரம்பரையில் வந்தவர்தானே சுவாமிவிவேகானந்தர்.

நிகழ்வு – 5

     கன்னியாகுமரியில் தவம் செய்வதற்காக, கடலுக்குள் நின்ற மிகப்பெரியபாறைக்குச் செல்ல விரும்புகிறார் சுவாமி விவேகானந்தர். கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் இருந்ததால், படகோட்டி காசு கேட்கிறான். “என்னிடம் காசு இல்லையே” எனக் குழந்தை உள்ளத்துடன் கூறுகிறார் சுவாமி விவேகானந்தர். துறவிகள் என்போர், அடுத்த வேளை உணவையே இறைவன் அளிப்பான் என்னும் தன்னம்பிக்கையுடன் வாழ்பவர்கள்தானே?. உடனே படகுக்காரன், “காசு இல்லையென்றால், நீந்திச்செல்லுங்கள்” என்கிறான். வாழ்க்கை என்னும் நீளக்கடலையே நீந்தத்தெரிந்த சுவாமி விவேகானந்தருக்கு நீலக்கடலா தடையாகும்? உடனே, நீந்திசென்று தவம் பல நாட்கள் தவம் செய்து திரும்புகிறார். அவருடைய மனபலத்தைக் கண்ட படகோட்டி வியந்து வணங்கினான்.

     இப்படி வாழ்நாள் முழுதும் சோதனைகளையெல்லாம் சாதனையாக்கினார். அவரால்தான் இன்றும் பாரதத்தின் பெருமையினை உலகம் வியந்துபார்க்கிறது எனில் மறுப்பார்யார்? இல்லைதானே?

 

 

சனி, 3 ஜூலை, 2021

வரவேற்புரை எப்படி? இதோ ஒரு எடுத்துக்காட்டு.

 


வரவேற்புரை எப்படி? இதோ ஒரு எடுத்துக்காட்டு.

     (03.07.2021 அன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் புதுச்சேரி, இலாசுப்பேட்டையில் பணிநிறைவுபெற்ற ஆசிரியர், கவிஞர் இராசமாணிக்கனாரின் நூல் வெளியீட்டு விழாவிற்காக எழுதிய வரவேற்புரை)

எண்ணங்கள்  தளர்ந்த போதெல்லாம் வாழ்வில் வண்ணங்களைக்கூட்டும் அன்னைத்தமிழே! உன்னை வணங்கி விழாவைத் தொடங்குகிறோம்.

இவ்விழா ஒரு பிரசவவிழா. இது பெண் பிரசவம் அன்று . ஆண் பிரசவம். அதுவும் பணி நிறைவுக்குப்பின். பிரசவ வலி பெண்ணுக்கு மட்டுமன்று. ஆணுக்கும் உண்டு. கவிஞர்களைக் கேட்டுப்பாருங்கள்.  ஒரு நூல் விழும்போதெல்லாம் ஒரு புதிய  எண்ணம் விழவேண்டும். அதனால் சமூகம் எழ வேண்டும்.

புத்தகம்  திறந்திருப்பதைப் பாருங்கள். பறவையின் சிறகுகள் விரிந்திருப்பதுபோல் இருக்கும்.  அப்படி இரண்டு சிறகுகள் கொண்டு பறந்திருக்கிறார். இன்று நம் பார்வையில் உயர்ந்திருக்கிறார். நூலாசிரியர் இராச மாணிக்கனார்.

அவைதாம் –     1.வாக்குமூலம், 2. கனவுகள்

கனவுகள் – ஆழ்மனதின் பிரசவம், வாக்குமூலம் – ஒப்புதல், தன்னை முழுமையாக இறைவனிடம் ஒப்புவித்தல்.  வாழ்க்கை வானமாகிவிடும்போது கவிஞன் பறவையாகிவிடுகிறான்.  எல்லா உண்மைகளும் தெரிகிறது. மலையின் முதல் படிக்கட்டில் நிற்பவனைவிட உச்சிக்குச்செல்பவனுக்குத்தானே காட்சி நன்றாகத் தெரியும்.’

இத்தகைய அருமையான நூல்வெளியீட்டுவிழாவிற்கு வந்திருக்கும் பெரியோர்களே , தமிழார்வலர்களே ! புலவர்களே ! இறையடியார்களே ! அனைவரையும் வரவேற்கிறோம்.

முன்னிலை – ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி தாயார்

“புண்ணியம் செய்தனமே மனமே புதுப்பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப் பண்ணி நம் சென்னிமேல் பத்மபாதம் பதித்திடவே.” என்னும் அபிராமிபட்டரின் பாடலுடன், ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி அம்மையாரையே முன்னிலையாகக் கொண்டு இக்கவிதை  நூல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.  அக்காலத்தில் இறைவன் முன்னிலையில் வெளியிட்ட தமிழர் மரபினைப் புதிப்பிப்பதாக இவ்விழாவை ஏற்பாடு செய்த விழாக்குழுவினரைப் பாராட்டி மகிழ்கிறேன்.   

நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னிலை வகிக்கும் எல்லாம் வல்ல தாயாரை வருக ! வருக !  என வரவேற்கின்றோம்

 

தலைமை – சக்திவேல் ஐயா

     மரத்தின் கிளைகளை, பூக்களை, கனிகளை ஒருவர் எடுக்கவந்தாலும் மரம் நிழல்கொடுத்து அவர்களைக் காப்பதுபோல வந்தவர்களை மதித்துப் போற்றும் நல்லவர்.

தலைமை பண்புக்குச் சிறந்தவர் ; தளர்ந்து செல்வோர்க்கு மருந்தவர்

அனைவரும் விரும்பும் பண்பாளர் ; நம் நூலாசிரியரின் அன்பாளர்.

தலைமைதாங்க வந்துள்ள சக்திவேல் ஐயா அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்

நூல் வெளியீடு - சட்டமன்ற உறுப்பினர்  

உலகமே கொரோனாவால் நோயுற்று வருந்தியவேளையில் அச்சம் நீக்கி காத்தவர் யார்? வைத்தியர்களுக்கெல்லாம் நாதனாகிய வைத்தியநாதன்தானே?

அப்படி, இந்த இலாசுப்பேட்டையின் மக்களுக்காகத் தமது கமலா அறக்கட்டளையின் வழி மக்களுக்கு உதவிகள் பல செய்தவர். இப்போதும் தெருத்தெருவாக தானியில் (ஆட்டோ) ஒலிப்பெருக்கிவழி ஊசிபோடவரும்படி அழைக்கிறார்.

தாயார் பெயரில் அறக்கட்டளை நிறுவி வேலைவாய்ப்பு, கல்வி, நலப்பணி எனத் தொடர்ந்துசெய்துவருகிறார்.

தாய்ப்பாசத்தில் இவர் எம்.ஜி.ஆர்

கொடைகுணத்தில் இவரை மிஞ்ச யார்?

மனத்தின் நிறத்தை ஆடையில் காணலாம்

குணத்தின் நிறத்தை மேடையில் காணலாம்.

நூல் வெளியிடவந்துள்ள சட்டமன்ற உறுப்பினரை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

நூல் பெற்று வாழ்த்துரை – வேல்முருகன் ஐயா

     உலகின் முதல்மொழி தமிழ்மொழி. இதனை உணர்த்த நாளும் பாடுபடுபவர். தம் இல்லத்தையே அருங்காட்சிக்கூடமாக்கித் தமிழ்க்காப்பவர்.

தமிழ்க்கடவுள் இல்லாமல் தமிழ் விழாவா?

வேல்முருகன் ஐயா இல்லாமல் கவிதை விழாவா?

சிறந்த ஆய்வாளர், பன்மொழி வித்தகர், கல்வெட்டு அறிஞர், தொல்லியல் பொருட்களைத் தொடர்ந்து சேகரித்து வருபவர். தமிழினத்தின் பெருமையை காத்து வருபவர்

நூலை பெற்றுக்கொள்ள வந்திருக்கும் சொல்லாய்வுச் செல்வர் வேல்முருகன் ஐயா அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : முனைவர் ஔவை.நிர்மலா

பார்புகழும் காஞ்சிமாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்த்துறைத்தலைவர், நன்றாக சமைப்பார், ஆனாலும் கரண்டியைப் பிடித்து சமையலறையில் முடங்கிவிடக்கூடாதென, எழுதுகோல்பிடித்து பல்கலைக்கழகம் சென்றவர். முனைவர் பட்டம் வென்றவர். படைப்பாளராய் நின்றவர் (45 நூல்கள்).

பலமொழிகள் படித்தவர் ; பல நூல்கள் படைத்தவர் ; பேராசிரியராக உயர்ந்தவர் ; ஏழைகளுக்கு பொருளையும் நாளும் கொடுத்துமகிழ்பவர். இவர் தொண்டும் நி(ற்)க்காமல் இருக்க நிக்கி ஐயா (கணவர்) உடன் நிற்பார்.

நூலாசிரியரை வாழ்த்த வந்துள்ள தமிழ்த்துறைத்தலைவர் ஔவை நிர்மலா அவர்களை வருக வருக என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : மு.பாலசுப்பிரமணியம்

புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் ; பொதுப்பணியில் பொறியாளர்.

தமிழ்விழாக்கள் சிறந்திடவே தவறாது முன்னிற்பார்.

கண்ணுக்கு ஒளிகொடுக்கும் கண்ணாடியையும் மதித்திடுவார். மூக்குக்கு மேல் நிற்கும் கண்ணாடியைக்கூட தலைமேல் தூக்கிவிட்டு மகிழ்ந்திடுவார்.

எறும்புபோல் உழைத்திடுவார் ; கரும்புபோல் பழகிடுவார்

            கவிதை சிறந்தால் கரம் கொட்டி மகிழ்ந்திடுவார்

தவறென உணர்ந்தாலே கரம்கொட்டி அமர்த்திடுவார்

ஒரே செயலை இரண்டுக்கும் பயன்படுத்தும் நுட்பத்தை உணர்த்திடுவார். அதனால்தானே இவர் துணைத்தலைவர்.

வாழ்த்த வந்துள்ள பொறியாளர் மு. பா. ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை – இல. ஜெயராமன் ஐயா

சந்தனம் மென் குறடுதான் தேய்த்த காலத்தும் குறை படாது – சந்தனம் தேய்த்தாலும் வாசம் கொடுக்க மறுத்திடுமா? அதுபோல அனைவரிடமும் அன்புடன் பழகுபவர்.

இல்லை என்று சொல்லாததால் தான் இவர் இல. ஜெயராமன்

அன்பாலே நூலாசிரியரின் மனத்தை வென்றார்.

நட்பென்னும் முறையில் துணையாக நின்றவர்.

தம் உழைப்பாலே பகைவர்களை வென்றவர்.

வாழ்த்த வந்துள்ள இல. ஜெயராமன் ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : மாசிலாமணி ஐயா

சிறப்போடு வாழ்வதிலே சிறப்பொன்றும் இல்லை. ஏனென்றால் இவ்வுலகில் சிறப்போடு வாழ்ந்தோர்கள் பலருண்டு. ஆனால், தனித்தன்மையோடு வாழ்ந்து வழிகாட்டும் சிலருள்ளே ஒருவரிவர். பெயர் ஒன்றே அவர் குணம் காட்டும்.

நல்லோர்கள் சூழ இருப்பது இவர் பணி.

அவர்தான் நம் மாசிலாமணி

நூலாசிரியரின் அன்புக்குப் பாத்திரமானவர்

பல முடிவுகளுக்கு இவரே சூத்திரமானவர்

வாழ்த்த வந்துள்ள மாசிலாமணி ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

வாழ்த்துரை : மகாலட்சுமி

     இவர் இல்லாத வீட்டினிலே பெருமையில்லை. இவருடைய பார்வைபட்டால் வறுமைபோகும். அவர்தான் மகாலட்சுமி. நல்ல ஆசிரியர்களின் பெருமைக்கு மாணாக்கர்தான் அளவுகோல். அப்படி நம் நூலாசிரியரின் ஆசிரியப்பணியினைப் போற்றிவளர்ந்த மாணவி, இன்று நூலாசிரியராகத் தம் ஆசிரியரை வாழ்த்த வந்திருக்கிறார்.

வாழ்த்த வந்துள்ள மகாலட்சுமி அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

ஏற்புரையும் நன்றியுரையும் – இராசமாணிக்கம் ஐயா

     “மருவினிய சுற்றமும் ; வான் பொருளும் ; நல் உருவும் ; உயர் குலமும் எல்லாம் திருமடந்தை ஆம் போது அவளோடு ஆம்” என்னும் பாடலுக்கேற்ப நல் சுற்றம், நல் பொருள், நல் உரு, நல் குலம் என அனைத்தும் வாய்க்கப்பெற்ற நூலாசிரியர்.

இவருக்குக் கடவுளைப் பிடிக்கும் என்பதைவிட, கடவுளுக்கு இவரைப் பிடிக்கும் என்பதே சிறப்பு. ஏனென்றால், ஏமாற்றுபவர்களை கடவுளுக்குப் பிடிக்காது. ஆனால், இவர் ஏமாறுபவர், அதனால் இவரைக் கடவுளுக்குப் பிடிக்கும்தானே.

வாழ்நாள் அனுபவம் கவிதையாக மலர்கிறது.

அதுதான் நூலெங்கும் எழுத்தாக தவழ்கிறது.

விழா நாயகரான கவிஞர். ஆசிரியர். மனிதநேயர் பண்பாளர் இராசமாணிக்கனார் ஐயா அவர்களை வருக ! வருக ! என வரவேற்கின்றோம்

தமிழுக்காகவும் ; நட்புக்காகவும் ; உறவுக்காகவும்  கூடியுள்ள உங்கள் அனைவரும் விழாக்குழுவின் சார்பாக வரவேற்று மகிழ்கிறேன்.

 

தமிழார்வர்களாகிய உங்கள் வருகை ; தமிழன்னையைப் போற்றும் சிவிகை.

 

வாய்ப்பளித்தமைக்கு நன்றி ! வணக்கம்.!

 

 

 

வியாழன், 1 ஜூலை, 2021

கதாநாயகன் யார்? – திருக்குறள் சொல்லும் ‘வீரம்

 


 

கதாநாயகன் யார்? – திருக்குறள் சொல்லும் ‘வீரம்

     ஊடக நண்பர் ஒரு ஆளுமையைப்  பேட்டி காண்கிறார். “உங்களுக்குப் பிடித்த ஹீரோ யார்?”.” … என்ன? “கேள்வியை மீண்டும் கேட்கிறார். “உங்களுக்குப் பிடித்த நடிகர்…” எனக் கேட்கிறார் பேட்டி காண்பவர். அக்கேள்விக்குக் கூறிய விடை இன்றைய இளைஞர்களுக்கு ஓர் அருமையான பாடம். “மக்களைக் காக்கப் போராடும் முப்படை வீரர்களும், காவலர்களும் தான் கதாநாயகர்கள். அவ்வேடத்தில் நடிக்கும் நடிகர்கள் நடிகர்கள் மட்டுமே. அவர்கள் கதாநாயகர்கள் அன்று.  ஏழ்மையான நிலையிலிருந்து குழந்தைகளைப் படிக்கவைக்கும் பெற்றோர்கள்தான் கதாநாயகர்கள் என்றார்.

“நடிப்பவர்களை எல்லாம் கதாநாயகர்களாக எண்ணுவதால்தான் குழந்தைகள் மது குடித்து, புகை பிடித்து, ஆசிரியர்களிடம் மதிப்பின்றி, தாய்தந்தையை எதிர்த்துப் பேசி நாளும் கெடுகின்றனர்” என்பதனை உணர்த்தும் அவருடைய அறிவுரையை எத்தனைத் தமிழர்கள் உணர்ந்திருக்கிறார்கள். நடிகர்களின் நடிப்பினைப் பாராட்டுவதோடு நின்றுவிடவேண்டும். நடிகர்கள் எப்படி நடித்துமுடித்தவுடன் இயல்பான மனிதர்களைப்போல் நடந்துகொள்கிறார்களோ அவ்வாறே மக்களும் நடிப்பினை நடிப்பாக மட்டுமே கொள்ளவேண்டும். நடிகர்களை கிள்ளிப்பார்ப்பது, தொட்டுப்பார்ப்பது நடிகர்களுக்கு எரிச்சலைத்தான் ஊட்டும் என்பதனை உணர்தல்வேண்டும்.

வாழ்க்கையின் வழிகாட்டியாக, தேசத்திற்காகப் போராடும் வீர்ர்ர்களை ; தேசத்தின் புகழைக்காக்கும் வீரர்களைக் கொண்டாடவேண்டும். இருபத்தோரு வயதில் எல்லையில் எதிர்களைப் பந்தாடும் வீர்ர்களின் உண்மையான வீர்த்தைக் கொண்டாடவேண்டும். ஒரு இந்திய இராணுவ வீர்ர் எதிரே நின்ற முந்நூறு பகைவர்களை வீழ்த்திய பெருமையினைக் கொண்டாடவேண்டும். உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த ஆங்கிலேயனின் கடுங்காவல் உள்ள கோட்டையிலேயே நுழைந்து, ஆங்கிலக்கொடியை இறக்கி இந்தியக்கொடியை ஏற்றிய வீரரைக் கொண்டாட வேண்டும். பொய்களை விட்டுவிட்டு உண்மையைக் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால்தான் நாட்டுப்பற்றை ஊட்டிவிடமுடியும்.  

விழித்தகண் வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்

ஒட்டுஅன்றோ வன்கண் அவர்க்கு (திருக்குறள் – 775)

 

என்னும் திருக்குறள் போர்க்களத்தை எதிர்கொண்ட தமிழரின் வீரத்தைப் படம்பிடித்துக்காட்டுகிறது.  எதிரி எறியும் வேலினைக் கண்டு கண்களை இமைக்காது எதிர்கொள்வான். அப்படி இமைப்பானாயின் அதனைத் தோல்வி எனக் கருதுவான். இதுவன்றோ வீரம். இவர்களைத்தானே நாயகர்களாகக் கொண்டாடவேண்டும். அப்படி எண்ணற்றோர் வரலாற்றில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

விளையாட்டுக் களத்தைப் போர்க்களம் போலும், போர்க்களத்தை விளையாட்டுக்களம்போலும் தொலைக்காட்சியில் பார்க்கும் நிலையினைக் காணமுடிகிறது. அப்படியெனில் விளையாட்டினை உயிர்ப்போராட்டம் போன்றும், மக்களைக்காக்கும் உயிர்ப்போராட்டம் விளையாட்டு போன்றும் காணும் அறியாமையைக் கற்றுக்கொடுத்தது யார் என்பதனை எண்ணிப்பார்க்கவேண்டும்.  சமூகக் காவலர்களின் குற்றமா? அந்தச் சமூகத்தில் காவலராக தன்னை எண்ணாத மக்களின் குற்றமா?

உண்மையாக நடக்கும் வாழ்க்கையை உணராமல், திரைப்படங்களின் காதல்கதையை உண்மை என நம்பும் இளையோரை என்னென்பது? பெற்றோரை அழவைத்துவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்யக் கற்றுக்கொடுக்கும் திரைப்படங்கள் பல. காதலுக்குப்பின் என்ன நடக்கும்? எனக்கூறும் துணிவுடைய படங்கள் எடுப்பது கடினம். திருமணம் செய்துகொள்ள முடியாத சகோதர சகோதரிகள் ; நடைபிணமாய் தாய் ; தலைநிமிர்ந்து நடக்கமுடியாத தந்தை என எத்தனையோ சோகங்கள். காவல் நிலையங்களில் இக்காட்சியைக் அன்றாடம் காணமுடிகிறது. அவர்களுடைய துன்பத்தைத் துடைப்பது யார் பொறுப்பு? காவலர்களும் பெற்றோர்போல் அறிவுறுத்திக்கொண்டுதான இருக்கின்றனர். அவர்களும் கதாநாயகர்கள்தான்.

 மக்களைப் பாதுகாக்கும் வீர்ர்களை மட்டும்தான் கொண்டாடவேண்டுமா? என்றுதானே கேட்கிறீர்கள். நாட்டிற்குப் பெருமை சேர்ப்போர்; வீட்டின் வறுமையினைப் போக்குவோர் என எவரையும் வாழ்க்கை வழிகாட்டிகளாகக் கொள்ளலாம். ஏன் பிற உயிர்களிடமும் இரக்கம்கொண்டு காக்கும் உண்மையான மனிதர்களையும் வாழ்க்கை வழிகாட்டியாகக் கொள்ளலாம்தானே? ஒரு கதையைக் கூறினால் நீங்களே ஒத்துக்கொள்வீர்.  

ஆற்றுப்பாலத்திலிருந்து தவறிவிழுந்த ஒரு நாய்  ஆற்றில் சிக்கிக்கொள்கிறது. வேகமான நீரோட்டம். மேலும் நடந்தால் இழுத்துக்கொண்டு பள்ளத்தில் வீழநேரும் என உணர்ந்து ஒரே இடத்தில் நிற்கிறது. ஆற்றுப்பாலத்திலிருந்து மேலிருந்து நால்வர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்தப் பக்கமாகச் சென்ற ஒருவர் இவர்கள் வேடிக்கைப்பார்ப்பதைப் பார்த்தார். நாய் மரணவாயிலில் நிற்பதைப் புரிந்துகொண்டார். கீழே கவனமாக இறங்குகிறார் ஆற்றின் சரிவான பக்கவாட்டில் மெதுவாக இறங்குகிறார். வேகமான நீரோட்டம் குறித்து கவலைப்படவில்லை. மெதுவாக நாய்க்கருகே சென்று அதனை இருகைகளாலும் பிடித்துக்கொண்டு வருகிறார். நாயாலும் சரிவில் ஏறமுடியவில்லை. அவராலும் ஏற்றமுடியவில்லை. வேடிக்கைப் பார்த்த நால்வரும் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்து கீழே   தவறிவிழுந்த நாயைப்பிடிக்க முயல்கின்றனர். முடியவில்லை. அந்தப்பக்கம் செல்லும் ஒருவர் இக்காட்சியைப் பார்த்து அவரும் கைகொடுக்கிறார். உடனே மற்றொருவரும் உதவ வருகிறார். இப்பொழுது  நாயைப் பற்றிக்கொண்டு கரைசேர்கிறார் அந்தக்கதாநாயகர். எல்லோர்க்கும் மகிழ்ச்சி. அன்பின் புன்னகை எல்லோருடைய முகத்திலும். அங்கிருந்தோர்க்கிடையே நட்போ, உறவோ இல்லை. ஒருவர்க்கு மற்றொருவரைத் தெரியாது. ஆனால், அன்பு அவர்களை ஒன்றிணைத்தது எத்தனை அழகு!. அடுத்து என்ன நடக்கும் என்ற எண்ணம் சிறிதுமின்றி நாயைக் காப்பாற்றிவிட வேண்டும் என எண்ணம் கொண்டவர் கதாநாயகர்தானே?

நாத்திகம் பேசுவதில் வல்லவரான நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா. அவரைப்போல் பிறரைக் கிண்டல்செய்ய எவராலும் இயலாது. யார் மேடை போட்டு பேச அழைத்தார்களோ அவர்களையே திட்டுவார்.  அதைத் தவறாக எண்ணமாட்டார்கள். உண்மைதானே பேசுகிறார் என ரசிப்பார்கள். அதுபோல “நடிகர்களை நம்பாதே. அவன் நல்லவன் மாதிரிபேசுவான். ஆனால் மக்கள் வரிப்பணத்தை ஒழுங்கா கட்டமாட்டான்” எனக்கூறுவார்.  ஒரு திரைப்படத்தில் கவியரசு கண்ணதாசனை கிண்டல் செய்தார்.  திரைப்படக்காட்சியானாலும் இருவரின் உள்ளத்தையும் படம்பிடித்துக்காட்டும் காட்சி.  நடிகவேள் கவியரசரிடம் கேட்பார் “ஏன்பா. உனக்கு கிருஷ்ணரைத் தவிர வேறுகடவுளே தெரியாதா? எனக் கேட்பார். உடனே, கவியரசர் “என் கண்ணுக்கு அவன் தான் எங்கும் காட்சி அளிக்கிறான் என்பார். “எங்க கண்ணுக்குத் தெரியலையே” என்பார் நடிகவேல்.  உடனே கவியரசர், ஞானக்கண்ணால் தான் பார்க்க முடியும் எனக் கூறிவிட்டு,

“இல்லை எனச் சொன்னவர்தான் இருந்தாரா? வாழ்ந்தாரா?

எனது தேவன் எல்லையில்தான் போய்ச்சேர்ந்தார்”

 

என்பார்.  “லட்டுகள் சண்டை போட்டால் பூந்தி கிடைக்கும்” எனச் சொல்வார்கள். அப்படி அந்தக் காட்சி அமைந்திருக்கும். நாத்திகம் எங்கும் பரவிநின்ற காலத்தில் ஆத்திகத்தைப் பேசிய கவியரசரும் ஒரு கதாநாயகர்தானே?

     எத்தனை துன்பம் வந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது துணிவுடன் நிற்பவரே, ஊக்கம் உடையவர் என்கிறார் தெய்வப்புலவர். களிறானது, எத்தனை அம்புகள் தைத்தாலும் தம் பெருமையை நிலைநிறுத்தும் வீர்ர்க்களே வீர்ர்கள்.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பின்

பட்டுப் பாடூன்றும் களிறு (திருக்குறள் :597)

 

என்னும் திருக்குறளின்வழிவாழ்வோர் வழியில் செல்வோம்.

     இப்படி வாழ்க்கைக்குத் துணைநிற்கும் ; வாழ்க்கையை மேம்படுத்தும் பெருமையுடையவர்களை மட்டுமே நாயகர்களாகத் தமிழர் கொண்டாட வேண்டும். தெய்வப்புலவர் காட்டிய வீரம்தான் தமிழர் வீரம் என்பதனை உணர்ந்திடுவோம் ; உணர்த்திடுவோம்.