தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

வியாழன், 17 ஜூன், 2021

வாழ்வது எப்படி? – கவியரசர் கண்ணதாசன் காட்டும் வழி


பொய்  வாழ்க்கை வாழலாமா? –  கவியரசர் கண்ணதாசன் காட்டும் வழி

     ஓர் ஊரில் ஒரு செல்வந்தர். ஊருக்கு உணவிட்டபின் தன் வீட்டுக்கு உணவிடுவார். தம் வயலில் நெல் விளைந்தபின், மக்களுக்குக் கொடுத்தபிறகே தன் வீட்டிற்கு படியளப்பார். அவருக்கு ஊரில் செல்வாக்குப் பெருகிற்று. பெருமையுடையவர்கள் வாழும் நாட்டில் பொறாமை உடையவர்களும்தானே வாழ்வார்கள். ஒரு நல்லவனைப் படைத்த கடவுள் ஓராயிரம் தீயவர்களைப் படைத்துவிடுகிறார். தீயவர்கள் நன்றாக வாழ நல்லவர்கள் வருந்தி வாழ்கிறார்களே என நீங்கள் நினைக்கிறீர்கள்தானே? நீங்கள் இப்படி நினைப்பீர்கள் என்பதனை முன்னரே உணர்ந்தேதான் தெய்வப்புலவர் திருவள்ளுவர் அன்றே

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும் (திருக்குறள்-167)

 

எனப்பாடிவைத்தார். இதற்கு விடை சொல்ல கவியரசர் கவிதை காத்திருக்கிறது. சரி! கதையைப் பாதியில் விட்டுவிட்டோமே? ஆம். தீயவர்கள் ஒன்றுகூடி செல்வந்தரைப் பற்றி பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். உங்களால்தான் அவர் கோடீஸ்வரனானவர். உங்களுக்குக் கிடைக்கவேண்டிய பணத்தைத்தான் எடுத்துகொள்கிறார். வெளியூரில் பிள்ளைகளைப் படிக்கவைக்கிறார். நீங்கள் அவரை எதிர்த்துக்கேட்டால்தான் அந்தப் பயன் உங்களுக்குக் கிடைக்கும் எனத் தூண்டிவிடுகின்றனர்.  

வெள்ளந்தியான மக்களும், செல்வந்தரால்தான் பஞ்சமின்றி மகிழ்ச்சியாக வாழ்கிறோம் என உணராமல் நாளும் வேலைக்குச் செல்லாமல் போராட்டம் செய்தனர். எதிரிகள் கூறிய பொய்யையே இவர்களும் எல்லோருடைய உள்ளத்திலும் விதைத்தனர் ; வேலைக்கு வருவோரையும் தடுத்தனர். செல்வந்தர் பொறுமை இழந்தார், நிலத்தை விற்றுவிட்டு நகரத்திற்குச் சென்றுவிடுகிறார். விளைநிலம் தொழிற்சாலையாக மாறுகிறது. அந்த தொழில்நிறுவனத்தில் பணிசெய்ய வேலையாட்கள் வெளியூரிலிருந்து வருகின்றனர். செல்வந்தரை எதிர்த்துப்போராடக் கூறியவர்கள் வீடெல்லாம் மாளிகையாகிவிடுகிறது. அப்பாவி மக்கள் அன்றாடங்காய்ச்ச கஞ்சியுமின்றி வருந்தினர். “பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்னும் சத்தியமான வாக்கினை உணர்ந்தனர். கண்கெட்டபின்னே சூரிய நமஸ்காரம் செய்தால் நல்லது எனத்தெரிந்து கொண்டனர். என்ன புண்ணியம்?

அப்பாவி மக்களை ஏமாற்றியவன்தானே பாவத்தை அனுபவிக்கவேண்டும். மக்கள் என்ன செய்வார்கள்? என்றுதானே கேட்கிறீர்கள். உணவிட்டவரை மனம் நோகவைத்தல் எத்தனை பாவம். அதுவே வினைப்பயன்(விதி). நல்லோர்கள் சிலராக இருக்க தீயோர்கள் பலராக இருக்கின்றனர். இதற்கு என்னதான் விடை என்றுதானே கேட்கிறீர்கள்? மேற்கூறிய அனைத்து வினாக்களுக்கும் ஒரே விடை சொல்கிறார் கவியரசர்.

 

ஆண்டவன் வாசல் அளவில் சிறியது

சாத்தான் வாசல் சாலையிற் பெரியது!

அதிலே செல்பவர் அளவில் குறைவே

இதிலே செல்பவர் எத்தனை பேரோ!

 

எனக்கூறுவது எத்தனை அழகு. இறைவனுடைய வீட்டிற்கான வாசல் சிறியது. அவ்வாசலில் பலர் நுழைவது கடினம். எனவே நல்லவர்களைக் குறைவாக்கினார். தீயவர்கள் குறித்து சொல்லத்தேவையில்லை. நீங்கள் புரிந்துகொண்டீர்கள்தானே?

     இப்போது நீங்கள் எந்த வரிசையில் நிற்கவேண்டும் என உணர்ந்துகொண்டீர்கள்தானே?. எனக் கவியரசர் கேட்கிறார். நல்வழிதான். ஆனால், அதற்கு என்ன செய்யவேண்டும் என்றுதானே கேட்கிறீர். இதோ, கவியரசர் கூறும் கருவழி பிறப்பைத் தடுக்கும் அருவழி.

எவரைப் பற்றி எந்த நேரத்திலும்

குற்றம் பேசிக் குறை சொல்லாதீர்!’

அப்படிச் சொன்னால் அடுத்தநாள் உமக்கும்

சட்டம் அதுவே தாக்குதல் திரும்பும்

கண்டனம் செய்தால் கண்டிக்கப்படுவீர்

மன்னித்துவிட்டால் மன்னிக்கப்படுவீர்

கொடுங்கள் அதுபோல் கொடுக்கப்பெறுவீர்

அளக்கும் அளவே அளக்கப்படுமே!

 

என்னும் அடிகள் எத்தனை எளிமையோ அத்தனை வலிமையும் கூட. எனவே, அன்புடன் வாழ்வோம். அன்பைப் பெறுவோம்.

அன்பின் ஆழத்தை அறிந்துகொள்ள படித்த கதை ஒன்றை சொல்லட்டுமா? கணவனை இழந்த தாயானவள் பலவீடுகளில் வேலைசெய்து ஒரே மகனைச் செல்லமாக வளர்க்கிறாள். வறுமைச் சுவடே தெரியாமல் வளர்க்கிறாள். “பிறகு, எப்படி அந்தக் குழந்தை உருப்படும்” என்றுதானே கேட்கிறீர்? ஆம்! அந்தக் குழந்தை உருப்படாமல் போனது. உருப்படாத நண்பர்களுடன் சேர்ந்து தீய பழக்கமே நன்மை என உணரும் அளவிற்குப் போதைப் பழக்கம் உண்டாயிற்று. இப்போது, உணவுக்கான பணத்தையும் அடித்துப் பிடிங்கிக்கொண்டு போய்விடுகிறான். என்னதான் இருந்தாலும் தாய்மனம் பித்துதானே!. பக்கத்துவீட்டில், எதிர்வீட்டில் எனக் கடன்வாங்கி சமைத்துப்போட்டுவிடுகிறாள், குடித்துவிட்டு, சாப்பிடாமல் இருந்தால் வயிறு புண்ணாகிவிடும் இறந்துவிடுவான் என்று கவலை.

ஒருநாள், குடித்துவிட்டுவந்த மகன் தாயை அடிக்க வழக்கம்போல் எல்லோரும் சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அந்தத் தாயானவள், வழக்கத்திற்கு மாறாகத் தேம்பித்தேம்பி அழுகிறாள். சுற்றி இருந்தவர்கள் இதற்காகவே காத்திருந்தவர்கள் போல் மகனை அடித்துத் துவைத்துவிடுகிறார்கள். தாயானவள், அவர்களிடமிருந்து மகனைக் காப்பாற்றுகிறாள். எதிர்வீட்டுக்காரர், “என்னம்மா? எப்போதும் அழமாட்டீர்கள். இன்று அழுகிறீர்கள். அதனால்தானே அடித்தோம்” என்றனர். அதற்கு அந்த தாய், “நான் தினமும் அடிவாங்குவேன். அழுதால் நீங்கள் மகனை அடித்துவிடுவீர்கள் எனத்தெரியும். எனவே, அழாமல் வலியைப் பொறுத்துக்கொள்வேன். ஆனால் இன்று, அவன் அடித்து ஒரு வலியும் இல்லை. குடித்துக்குடித்து அவன் வலுவிழந்துவிட்டான். அதனை எண்ணினேன். கட்டுப்படுத்தமுடியாமல் அழுகைவந்துவிட்டது.” என்றாள். சுற்றி இருந்தவர்கள் அனைவருடைய கண்களிகளிலும் கண்ணீர் எட்டிப்பார்த்தது.  இவ்வுலகில் செய்யும் ஒவ்வொரு வரவு செலவுக்கான கணக்கும் மேலுலகில் சரிபார்க்கப்படும் என்னும் கவியரசர் சொல்லுக்கு இலக்கணமே இத்தாய்.

இனி, பொய்யான வாழ்க்கை வாழ மனம் வராதுதானே. வாழ்க்கைச் சகதியில் சிக்கிக்கொள்ள நேரிட்டால் கவியரசர் பாடல்தான் உங்களுக்கு ஊன்றுகோல்.

 

 

 



 

புதன், 16 ஜூன், 2021

குழந்தைக்குக் கற்பிக்கவேண்டிய பாடம் - திருக்குறள் விளக்கம்

 



குழந்தைகளை மலரச்செய்வீர்

குழந்தைகளுக்கு வீட்டுப்பற்றும், நாட்டுப்பற்றும் வளரவேண்டும் என என்றாவது நீங்கள் உரைத்ததுண்டா? ஆம்! என்பது உங்கள் விடையானால், வாழ்வின் இறுதிவரை உங்கள் குழந்தை உங்களுடன் பாசத்துடன் இருக்கும் எனக் கூறமுடியும். அவ்வாறு அனைத்துக் குழந்தைகளும் வளரவேண்டுமானால்,  உடலையும் உயிரையும்  வளர்க்கும் வீட்டுக்கும், அறிவை வளர்க்கும் நாட்டுக்கும் நன்றியுடையவர்களாக வளர்க்கவேண்டும்.

     இவ்வுலகில் எந்த ஒன்றையும் ஒருவன் தானே உருவாக்கி உண்பதில்லை ; அது இயலவும் இயலாது. பிறர் துணையால் பெற்ற வளத்தை உண்டே உயிர்வாழ இயலும். அந்த நன்றியுணர்வை பணத்தை வீசிப்பெற்றுவிடுவதோடு முடியாது. அன்புநிறை உள்ளத்துடன் நன்றி கூறவேண்டும். நிலத்தை விற்று நன்றாக வாழமுடியும் என்றாலும், உணவளிப்பதே அறமென உழுதுமகிழும் உழவர்களால்தானே இந்நாடு வளம் பெறுகிறது. இத்தியாகிகள் உள்நாட்டுப் பாதுகாப்புப்படைவீரர்கள் எனில் மிகையில்லை. அவர்களுக்கும் நன்றி சொல்ல குழந்தைகளுக்குக் கற்பிக்கவேண்டும்.

     குழந்தைகள் களிமண்தான். நல்ல குயவனிடம் அகப்பட்டால் அழகான சிலைகளாகும் ; சிறந்த பாத்திரங்களாகும். எனவே, குழந்தைகளிடம் நல்ல குயவனாக நடந்துகொள்ளவேண்டியது ஒவ்வொருவருடைய கடன்.

     ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு வகையில் ஏதேனும் ஒரு நன்மை செய்துவிட்டுத்தான் உறங்கவேண்டும். அதுவே, உயிரைத்தாங்கும் பூமிக்குச்செய்யும் நன்றிக்கடன். ‘சுமை’ எனப் பொறுப்புகளைக் கடந்து செல்வது அறிவுடைமையன்று. உலகையே சுமக்கும் பூமிகூட உன் காலடியில்தான் இருக்கிறது என்பார் சுவாமி விவேகானந்தர். அப்படியெனில், நீ எத்தனை உயர்ந்தவன் என்பதனை எண்ணிப்பார்க்கமுடிகிறதுதானே?

     “மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்” எனச் சோம்பிக்கிடத்தல் கூடாது. விதை மண்ணைக் கிழித்த பின்னர்தான் செடியானது ; செடி மரமானது. ஒரு நாளும் சோம்பிக்கிடப்பதில்லை. அதனால்தானே அது எவ்வுயிர்க்கும் வரமானது. தன்னை வளர்த்த வானுக்குப் பூக்களைத் தருகிறது. தன்னைத் தாங்கும் பூமிக்கு நிழலைக் கொடுக்கிறது. தன்னை நம்பிய பறவைகளுக்கு வீட்டைக் கொடுக்கிறது. தன்னை நம்பிய மனிதர்களுக்கு கனியைக் கொடுக்கிறது. இத்தனையும் தருவதால் அது ‘தரு’ ஆயிற்று. தன் பணியை தரு செய்வதால்தான் அது வாழ்நாள் முழுதும் வளர்ந்துகொண்டேபோகிறது.

     பொறுப்பில்லாமல் வாழ்வதால் என்ன கேடு என்று கேட்கிறீர்களா?.  ஒரு கதை சொல்லட்டுமா?. ஒரு நாட்டில் வற்கடம்(பஞ்சம்) ஏற்பட்டது. மக்கள் அனைவரும் வேறு ஊருக்குப் புறப்பட்டனர். நீண்ட தூரம் செல்லவேண்டி இருக்கலாம் என்று எண்ணிய ஊரின் தலைவர், கையில் கட்டைகளை எடுத்துக்கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினார். ஒவ்வொருவரும் சிறிய அளவிலான கட்டைகளை எடுத்துக்கொண்டனர். பெரியவர் பேச்சினை மதித்து ஒரே ஒருவன் மட்டும் இரண்டு மூன்று கட்டைகளை எடுத்துக்கொண்டான். ஒரிரு நாள் பயணம் சென்ற பிறகு ஒரு ஆழமான பள்ளத்தாக்கு வந்தது. அதனைக் கடப்பதற்கு அவர்கள் எடுத்துவந்த கட்டை உதவவில்லை. அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கில் இறங்கித்தான் செல்லவேண்டும் என எண்ணிச் சென்றனர். ஆனால், ஒரே ஒருவன் மட்டும் தான் சுமந்துவந்த நிறைய கட்டைகளை இணைத்து அழகாகப் பலகையாக்கி எளிதாகக் கடந்துசென்றான். சுமப்பது கடினமென எண்ணினால் வெற்றி கிடைக்காது. அவ்வாறு எண்ணாது வாழ்ந்தால் வாழ்க்கை வெறுக்காது. இக்கூற்று உண்மைதானே?

“நம்மால் பணத்தாலோ, புகழாலோ உதவமுடியாதே” என எண்ணும் கோடிக்கணக்கான மக்களில் நீங்களும் ஒருவரா?. கவலைவேண்டாம். இதோ ஒருவர் வழிகாட்டுகிறார். “எப்படி நீங்கள் இந்தச் சமுதாயத்திற்கு உதவுகிறீர்கள்?” எனக் கேட்டபோது, அவருடைய விடைதெளிவான பாதையைக் காட்டியது. “என்ன? என்றுதானே கேட்கிறீர்கள். இதோ, அவர்கூறியவிடை “நான் படிக்காதவன். நல்ல வேலையில்லை. அன்றாடங்காய்ச்சி. பணமில்லை. ஆனால் இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என்னும் எண்ணம் மட்டும் இருந்தது. அதனால் நாள்தோறும் பணிக்குப் பேருந்தில் செல்லும்போதும், திரும்பும்போதும் முதியோர்களோ, உடல்நலம் குறைந்தவர்களோ இருக்கையைத் தேடினால் உடனே அவர்கள் இருக்க இடம்கொடுத்துவிடுவேன். உட்கார்ந்து பயணிக்கும் பயணத்தைவிட  ஒருவர்க்கு இடம்கொடுத்துவிட்டு பயணிப்பது அந்நாளை பயனுடைய நாளாக மாற்றிவிடுகிறது. நான் செய்வது பெரிய செயலல்ல. ஆனாலும் என்னைப் பாராட்டுகிறார்கள்” எனக் கூறுகிறார். இதன்வழி, தனக்கு நன்மை செய்யும் சமூகத்திற்கு தான் எவ்வாறு உதவமுடியும் என எண்ணிச் செய்த செயல் எத்தனை மதிப்புடையது. உண்மைதானே?

நாட்டிற்காக உழைத்தவர்களுக்கும், வீட்டிற்காக உழைத்தவர்களுக்கும் நன்றியுடையவர்களாக விளங்கவேண்டும். அவர்களுடைய செயலை மறந்துவிடக்கூடாது. ஒவ்வொரு குழந்தையையும் தாய் பெற்றுவிடுகிறாள். ஆனால், அந்தக் குழந்தையைப் பத்திரமாகக் காத்து, குளிப்பாட்டி; சீராட்டி ; பாராட்டி ; நலம் காத்து ; அறிவூட்டி வளர்க்கும் பாட்டிக்கும், தாத்தாவிற்கும் எத்தனைக் குழந்தைகள் நன்றியுடையவர்களாக ; பாசமலர்களாக இருக்கிறார்கள். அப்படி இல்லையே. முதியோர் இல்லங்கள் பெருகுகின்றனவே. குழந்தைகள் மலரவேண்டுமா?  தெய்வப்புலவர் திருவள்ளுவர் தாத்தா சொல்வதைச் சொல்லிக்கொடுங்கள்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயர் நட்பு (திருக்குறள்-106)

 

இந்த இரண்டு அடிகளை உள்ளத்தில் பதியவைப்பீர். வீடும் நாடும் நலம்பெறும் ; முதியோர் இல்லமும் குறைந்துவிடும்.

 

செவ்வாய், 15 ஜூன், 2021

பாரதியார் விதைக்கும் நாட்டுப்பற்று

 


     மகாகவி பாரதியார் தூக்கத்தை விரட்டிய சூரியன். அதனால்தான் பாரதத்தாய்க்குப் (பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி) பள்ளியெழுச்சி மட்டும் பாடினார். பாவிற்கு அரசன் தாலாட்டுப் பாடவில்லை. ஏன் பாடவில்லை? தாய் உறங்கினால் குழந்தைகள் அடித்துக்கொள்கிறார்கள். பின் எப்படித்தூங்கமுடியும். ஒற்றுமையுடன் வாழத்தெரியாத பிள்ளைகளைப்பெற்றுவிட்டு அன்னையால் அமைதியாய்த் தூங்கமுடியுமா? முடியாதுதானே? அதனால்தான் தனக்குத் தாலாட்டுப் பாடிய தாய்க்குத் தாலாட்டுப் பாடமுடியாமல் தன் கைகளைத்தானே கட்டிப்போட்டுக்கொண்டார்.

“மதலையர் எழுப்பவும் தாய் துயில்வாயோ

மாநிலம் பெற்றவள் இஃதுணராயோ?”

 

எனத்தூங்காததாயை தூங்கியதாக எண்ணியெழுப்பும் இப்பாடலடிகள் அழகோஅழகுதானே?. ஆங்கிலேயனின் அடக்குமுறையினை கவிழ்க்கவே அவருடைய எழுதுகோல் தலைகவிழ்ந்தது. அந்த எழுதுகோல் கவிழ்ந்தபோதெல்லாம் இச்சமுதாயத்தில் விடுதலை உணர்வு எழுந்தது ; ஆங்கிலேயர் குருதி உறைந்தது ; விடுதலைப்போராட்டத்தியாகிகளின் உளம் நிறைந்தது.

     “உன் நாடு உன்னுடையது” எனச் சொல்வதற்கு ஒரு மகாகவி தேவைப்படுகிறார். கொடுமைதானே?. தந்தையானவர் மகனை அழைத்து, ‘இது உன்வீடு” எனக் கூறினால், என்ன பொருள்?. “பொறுப்பில்லாத மகன்” என்பதுதானே பொருள். “குடும்பம் இல்லை என்றால் நீ அநாதையாகி விடுவாய்” என ஒரு தந்தை மகனுக்கு உரைப்பதுபோல “உன்னைத் தாங்கிக்கொண்டிருக்கும் நாடு இல்லாவிட்டால் நீ அநாதையாகிவிடுவாய் என்பதனை  உணர்த்துகிறார் மகாகவி பாரதியார்.

உனக்கு நாட்டுப்பற்று உண்டா? என எந்தக் குழந்தையையாவது கேட்டுப்பாருங்கள். அப்படியென்றால்? எனக் கேட்கும். குழந்தைகளிடம் தவறில்லை. நாட்டுப்பற்று என்றால் என்னவென்று எந்தப்பாடத்தில் சொல்லிக்கொடுத்தீர்கள்.? தமிழ் மன்னர்கள் அந்நியரை வெற்றிகொண்டதையோ, நாட்டுக்காகப் போராடிய தியாகிகளையோ பாடத்தில் பார்க்கமுடியாதபோது அவர்கள் எப்படி அறிந்திருப்பார்கள். அந்நியர்களின் புகழை மட்டுமே படிக்க வாய்ப்பளித்துவிட்டு நாட்டுப்பற்று குறித்துப் பேசினால் என்ன பயன்? குழந்தைகளுக்கு நாட்டு உணர்வு வருவதில்லை. நடிகர்களை மட்டுமே காண்பதால் அவர்களையே கொண்டாடுகிறார்கள். குழந்தைகளிடம் உண்மையான வீரர்களைக் கொண்டு சேர்க்கவேண்டியது பெரியோர்களின் கடன்.

நாட்டுப்பற்று எப்படி இருக்கவேண்டும்? ஒரு உண்மை கதை சொல்லட்டுமா?... 1962 ஆம் ஆண்டில் வடகிழக்கு எல்லையான நூரானங் (அருணாசலப்பிரதேசம்) என்னும் இடத்தில் சீனாவுடன் இந்தியா போர் செய்கிறது. பெரும்படைகொண்ட சீனா, போரினை எண்ணிப்பார்க்காத இந்தியப் படையை எதிர்க்கிறது. எளிமையான ஆயுதங்களை மட்டுமே கொண்ட இந்தியப்படைவீரர்களை நவீன எந்திரத்துப்பாக்கிகளைக் கொண்டு குருவி சுடுவதைப் போல சுட்டழிக்கிறது. இந்தியப்படை பின் வாங்குகிறது. சீனா, அமைதிக்கான உடன்படிக்கை பேசிவிட்டு போர்தந்திரத்தைக் கையாண்டது. சீனா, வெற்றிகொண்டது வீரத்தால் அன்று ; துரோகத்தால்தான். போர்ச்சூழலில், அதனை துரோகத்தை அவமானமாகக் கருதிய மூன்று வீரர்கள், புறமுதுகிட்டுச் செல்வதை விரும்பவில்லை. சீனப்படையுடன் போர்செய்யத் துணிகின்றனர். சீனப்படைக்குள் சென்று அவர்களுடைய கனரக ஆயுதங்களைக் கைப்பற்றினால் அன்றி ஒன்றும் செய்யமுடியாது என சீனப்படைக்குள் நுழைய முன்னேறுகிறார்கள். இருவர் கொல்லப்படுகின்றனர். ஜஸ்வந்த்சிங்ராவத் என்னும் போர்வீரர் மட்டும் தவழ்ந்து தவழ்ந்து சீனப்படைக்குள் நுழைந்துச்சென்று ஓர் கனரகத்துப்பாக்கியைக் கைப்பற்றுகிறார்.

“இப்பொழுது வாங்கடா ! பார்ப்போம்” என அழைக்க சீனப்படையினர் சூழ்கின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் எதிரிகள் தரையில் சரிந்துகிடந்தனர். அடுத்தடுத்து சீனப்படையினர் தொடர்ந்து குவிந்துகொண்டே இருந்தனர். எழுபத்திரண்டு மணி நேரம் தனி மனிதனாக சீனப்படையை எதிர்கொண்டார். முந்நூறு சீன வீரர்களைக் கொன்றார். சீனப்படை அதிர்ந்தது. “இந்தியப்படையில் எவ்வளவு வீரர்கள் இருக்கிறார்கள்” என ஆய்கிறார்கள். “ஒரே ஒருவன்தான் ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறான்” எனச்செய்திப்பறக்கிறது. இதனை அறிந்துகொண்ட சீனப்படை, திட்டமிட்டுச் சுற்றிவளைத்து ஜஸ்வந்த்சிங்ராவத்தை சுட்டு வீழ்த்துகிறார்கள். “முந்நூறு வீரர்களை இவன் ஒருவன் கொன்றானே” என்று  இறந்தபின்னும் தலைசிறந்தவீரனின் தலையைவெட்டி ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கின்றனர். ஆனால், இன்றும் பாரதத்தின் பாதுகாப்புப்படை அவ்வீரனின் புகழைக் கொண்டாடுகிறது. இன்றும் ஜஸ்வந்த்சிங்ராவத் உயிருடன் இருப்பதாக எண்ணிப் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஓர் உயர்அதிகாரிக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கப்படுமோ அதே மதிப்பினை இன்றும் அவருடைய நினைவாலயத்திலுள்ள அவருடைய சிலைக்குக்கொடுக்கப்படுகிறது. அந்த இடம் இன்று “ஜஸ்வந்த் கர்” என அழைக்கப்படுகிறது. இதுதான் பாரதத்தாயின் தவப்புதல்வனின் செயல். தாயாரின் புகழ்க்காத்த இருபத்தோரு வயது வீரப்புதல்வனை ஒவ்வொருநாளும் பாரதம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

இத்தகைய தேசப்பற்றையே மகாகவி பாரதியார் ஒவ்வொரு குடிமகனிடம் எதிர்நோக்குகிறார். பாரதம் வளத்தாலும் பண்பு நலத்தாலும் பிறநாடுகளுக்கெல்லாம் தலையாயது. இதனை உணர்ந்து பெருமிதம் கொள்வாய் என அறிவுறுத்துகிறார்.

“பாரத நாடு பார்க்கெலாம் திலகம்

நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்”

 

எனப்பாடியுள்ளார். சத்ரபதி சிவாஜி தன் படைக்கு அறிவுறுத்துவதுபோல் பாரதப்புதல்வர் ஒவ்வொருவருக்கும் அறிவுறுத்தும் திறத்தைக் காணமுடிகிறது.  இன்று அவருடைய கனவு நினைவாகியிருக்கிறதா? என்றுதானே கேட்கிறீர்கள். ஆம். இக்கால நிகழ்வு ஒன்றைக் கூறட்டுமா?

 

“உங்கள் நாட்டில் எரிபொருள் விலை அதிகமாக உள்ளது ? எதிர்த்துப்போராடுங்கள்” எனத் தூண்டிவிடுகிறது எதிர்தேசம். அதற்கு இன்றைய நாட்டுப்பற்றுடைய பாரதப்புதல்வனின் விடை “என்னுடைய நாட்டிற்காக நான் கொடுக்கும் பணம் ஒவ்வொன்றும் மீண்டும் எங்கள் நலனுக்கே செலவழிக்கப்படும். எங்களுடைய நாட்டின் ஒரு மாநிலம் தான் உங்கள் நாடு. உங்களால் முடிந்தால் எங்கள் முப்படையுடன் போர் செய்துப்பாருங்கள். அச்சமாக இருந்தால் அமைதியாக இருங்கள். எங்களையே எங்கள் நாட்டுக்கு எதிராகப் போராடச்செய்யும் கீழ்த்தரமான செயல்களைச் செய்யாதீர்கள்.” எனக்கூறி வீரநடைபோடும் இளைஞனும் மகாகவி காணவிழைந்த பாரதத்தாயின் தவப்புதல்வன்தானே?  

மகாகவி ஒவ்வொருவர் உள்ளத்திலும் நாட்டுப்பற்றினை, விதைத்தார் ; விதைக்கின்றார் ; விதைப்பார். அத்தகைய வலிமையுடைய எழுத்துத்திறத்தை எண்ணிப்பார்க்கும்பொழுதே விண்ணைத் தொடுகிறது மகாகவியிடம் கொண்ட பேரன்பு.

ஞாயிறு, 13 ஜூன், 2021

மணிமேகலை என்னும் மாதரசி

 


மணிமேகலை என்னும் மாதரசி

     கொடுப்பவர் உயர்ந்தவர் ; பெறுபவர் தாழ்ந்தவர் என்பது உலகியல் வழக்கு. கொடுப்பவர்கரம் உயர்ந்திருப்பதும், பெறுபவர்கரம் தாழ்ந்திருப்பதும் இதனை உணர்த்திவிடுகிறது. இக்கூற்று அருளுக்கும் பொருந்தும் ; பொருளுக்கும் பொருந்தும். இத்தகைய வரையறையோடு மணிமேகலைக் காலத்துக் கணிகையர்க்குலத்தை நோக்கினால், அது தாழ்ந்த குலமாகக் குறிப்பிட்டுள்ளதனை உணர்ந்துகொள்ள இயலும். மன்னவர் கொடுக்கக் குடிகள் பெறுவது இயல்புதானே? எனினும் கலைகளில் சிறந்தோரையும் தாழ்வாக எண்ணிய காலம் அது. இன்று அப்படியே தலைகீழாக மாறிவிட்டதுதானே?. நடிகர்களைத் தலைமேல் தூக்கிக்கொண்டு ஆடும் நிலைக்குச் சமுதாயம் மாறிவிட்டிருக்கிறது. அதனால்தான் நடிகர்களின் பதாகைகளில்கூட பாலாறு ஓடுகிறது.

     மணிமேகலை, கணிகையர் குலத்தில் பிறந்த மாதவியின் மகள். அழகின் உரு. அழகு இருக்கும் இடத்தில் ஆணவம் இருப்பது இயல்புதானே? அந்த ஆணவமே கூட சில பெண்களின் அழகினை மிகுவிக்கும்தானே? ஆனால் மணிமேகலையோ, அழகில் இமயமாயினும் அன்பையும் பண்பையும் அணிகலனாகக் கொண்டவள் ; ஆணவத்தின் அடிச்சுவடும் அறியாதவள். மணிமேகலையின் அழகினை,

     மணிமேகலை தன் மதிமுகம் தன்னுள்

அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய

     கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின்

     படை இட்டு நடுங்கும் காமன் பாவையை

     ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?

     பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?

(மலர்வனம்புக்ககாதை:20-25)

என்னும் அடிகளில் சீத்தலை சாத்தானார் எழிலுற  எடுத்துக்காட்டுகிறார். கோவலன், கண்ணகியை இழந்த துயர்கேட்டு அழும் நிலையில்கூட மணிமேகலையின் அழகை எடுத்துக்காட்டுகிறார். மதிமுகம் ; அழகான நீலமலரை வென்ற கண்கள் ; காமனும் நடுக்குறும் அளவிற்குக் கடைமணியில் கண்ணீர். அவளைக்கண்டால் ஆடவர் அகலார் ; அகன்றால் அவர் ஆடவராகார் எனப்பாடியுள்ளார் சீத்தலைசாத்தனார்.

     அத்தகைய பேரழகுடைய மணிமேகலையின் பிறப்பின் நோக்கம் அவ வாழ்க்கைக்கன்று ; தவ வாழ்க்கைக்கே. “காமனையே வெல்லும் தவச்செல்வியைப் பெறுவாய்” என மணிமேகலை பிறக்கும் முன்னரே மணிமேகலா தெய்வம் மாதவியின் கனவில்தோன்றிக் கூறியதனை,

     காமன் கையறக் கடுநவை அறுக்கும்

     மா பெருந்தவக்கொடி ஈன்றனை என்றே

     நனவே போலக்கனவு அகத்து உரைத்தேன்

(துயிலெழுப்பிய காதை: 36-38)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.   

     உதயகுமரன் தன்னைக் காதலிப்பதை உணர்ந்துகொண்ட மணிமேகலை, “நான் எவ்வாறு அவனைக் காதலிக்க எண்ணினம்?” என எண்ணுகிறாள். அவன்பின்னே உள்ளம் சென்ற நிலையினை

     புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்

     இதுவோ, அன்னாய்! காமத்து இயற்கை

     இதுவே ஆயின் கெடுக தன் திறம்

           (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை:89-91)

என்னும் அடிகளில் உணர்த்திவிடுகிறாள். அதற்கான காரணத்தை அறியவிழைகிறாள். பின்னர், முற்பிறவியின் கணவனாக வாழ்ந்த இராகுலனே இப்பிறவியில் உதயகுமாரானாகப் பிறப்பெடுத்தான் என்பதனை அறிந்துகொள்கிறாள்:

தன் அளவில்லாத ; அடக்கவியலாத காமத்தை அறிகிறாள். பின் தன் பிறப்பின் நோக்கத்தை அறிகிறாள். காமத்தை வெல்கிறாள்.    உதயகுமரன், தன் காதலைக் கூறி நெருங்க விழையும்பொழுது, அவனுக்கு வாழ்வின் மெய்யியல் குறித்து விளக்குகிறாள்.

     பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு  இரங்கலும்

     இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்

     மக்கள் யாக்கை இது என உணர்ந்து

மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்

                     (உதயகுமரன் அம்பலம் புக்ககாதை: 136-139)

எனக் கூறுகிறாள். இவ்வாழ்க்கை பிறத்தல், மூத்தல், பிணிபட்டு வருந்தல், இறத்தல் என்னும் நான்கு படிநிலைகளை உடையது. இதுவே இவ்வுடலுக்கான செயல். எனவே, இவ்வுடலின் விருப்பத்திற்காக வாழ்வதைக் காட்டிலும் அனைத்து உயிர்களுக்கும் நல்லன செய்து வாழ்ந்தால் பிறப்பு பொருளுடையதாகும் என உணர்த்துகிறாள் மணிமேகலை.

வாழ்க்கையின் உண்மையை அறியாமல், பிறப்பின் நோக்கம் புரியாமல், பெற்றோரின் அருமையினை உணராமல் காதலித்து வாழ்க்கையை இழந்து வருந்தும் பெண்களுக்கு மணிமேகலையே பாடம் கற்பிக்கிறாள். உணர்வுகளைக் கையாளும் திறம் இருப்பின் காமத்தின் ஆற்றலை கடமைக்கு மடைமாற்றம் செய்ய இயலும். அவ்வாறு இளமையை வெற்றிகொண்டேரே ஆட்சியராக ; மருத்துவராக ; விளையாட்டு வீர்ர்களாக வலம்வருவதனைக் காணமுடிகிறது.

அவ்வாறின்றி காதலால் ; காமத்தால் தவறானவர்களிடம் சிக்கிக்கொண்டு, பெற்றோரை இழந்து, உறவுகளை இழந்து, கணவனை இழந்து, பிள்ளைகளை இழந்து (திருமணமானவர்களும்தான்) சிறையில் வாடும் நிலை இருப்பதனைக் காணமுடிகிறது. நாளிதழ்களில் நாள்தோறும் கொலைச்செய்திகள். அவை, தன்னடக்கத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்திவருகின்றன. பொருளுக்காகக் காதலித்து ஏமாற்றும் வழக்கம் இனி இருக்காது. ஏனெனில், பெற்றோரின் ஒப்புதலின்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை எனச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. பெற்றோர்கள் உள்ளம் குளிரும்தானே?

தன்னடக்கத்தால் உயர்ந்த மணிமேகலையின் பெருமையினை எடுத்துரைக்கும் இலக்கியமாகவும் “மணிமேகலை” இலக்கியத்தைக்கொள்ளமுடியும்தானே? மணிமேகலையில் இன்னும் பல புதையல்கள் இக்காலத்திற்கும் வழிகாட்டுவனவாக அமைகின்றன. இன்று மணிமேகலையின் அறிவுரை ஒன்றைப்பார்த்துவிட்டோம். அறியாத வயதிலும் அறிவினை ஊட்டிய மணிமேகலை மாதரசிதானே.?

சனி, 12 ஜூன், 2021

கல்வி என்னும் மலைவாழை

 


ஆசிரியப் பணியைவிட உலகில் உயர்ந்த பணி உலகில் இல்லை. ஏனென்றால் உயிருள்ள பொம்மைகளை உயர்ந்த மனிதர்களாக உலகில் உலவச்செய்யும் கலை ; அது ஆசிரியர்களுக்கு மட்டுமே கைவந்தகலை. ஒருவர் மருத்துவரை வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என்றால் அவர் போற்றப்படுவார். ஆனால், ஆசிரியரைச் சந்தித்ததே இல்லை என்றால்?... அவர் மதிக்கப்படுவாரா? இல்லைதானே?. வாழ்நாளில் எப்பொழுதாவது ஒருவர் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்திருந்தால் அந்த மருத்துவமனையை மறக்கவே முயற்சிப்பார். ஆனால், கல்வி கற்ற பள்ளியை மறப்பார்களா? எந்நாளும் மறவார். வயதான பின்பும் அங்குசென்று பார்த்து மகிழ்வார் ; நின்று மகிழ்வார் ; முடிந்தால் ஓடியும் ஆடியும் மகிழ்வார்தானே?

கல்வி அத்துணை அருமையானது ; பெருமையானது ; அகலமானது ; ஆழமானது ; அழகானது.  அதனால்தான் கல்விகற்ற இடத்தைப் பார்ப்பதில் அத்துணை மகிழ்ச்சி.

மலச்சிக்கலைப் போக்கும் மலைவாழை. மனச்சிக்கலைப் போக்கும் கல்வி. அதனால்தான் பாவேந்தர் ‘மலைவாழை அல்லவோ கல்வி” என்றார்.  இச்சொற்றாடரை ஆய்வு செய்வதே இக்கட்டுரை.

வாழை – மங்கலக்கனி  - அதனால் ஒவ்வொரு விழாவிலும் முதலிடம்பெறும். இது ஒரு கற்பகக் கனி. “கற்றவர் விழுங்கும் கற்பகக்கனி”. இது இறைவனை மட்டுமன்று அவர்படைத்த வாழையையும் குறிக்கும். ஏனெனில், இப்பழம் காலத்திற்கேற்ப கிடைக்கும் கனியன்று; காலம் தவறாமல் கிடைப்பது. எக்காலமும் பசி தீர்க்கும் பெருமையுடையது. அதனால்தான் இறைவனுக்கும் படைக்கப்படுகிறது.

கல்வியும் அப்படித்தான். இறைவனே தொடக்கமும் இறைவனே முடிவும். அகரத்தில் தொடங்கி முப்பாற்புள்ளியில் முடிகிறது. அகரம் அறிவுக்கண் திறப்பு. முப்பாற்புள்ளி என்பது மெய்யறிவுக் (மூன்றாவது) கண் திறப்பு. என்ன தலைப்பு மாறிப்போகிறதே? என எண்ணுகிறீரா? என்ன செய்வது. எண்ணியதை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் ஒரு மகிழ்ச்சி. சரி, தலைப்புக்கு வந்துவிடுவோம்.

மலைவாழையை, பெருமலைவாழை, சிறுமலைவாழை என இருவகையாகப் பிரிப்பர். கல்வியும் அப்படியே கலை, அறிவியல் என்னும் இருபிரிவுக்குள் அனைத்தையும் அடக்கிவிடமுடிகிறது.

மலை வாழை சூட்டைத் தரும் – குளிர் பிரேதசங்களுக்குரிய நல்ல கனி. மலைவாழை. சளி (கோழை) பிடிக்காமல் காக்கும். கல்வியும் அறிவுச்சூட்டினை உருவாக்கும். கோழையாகாமல் வீரனாக வளரவழி செய்யும். 

மலைவாழை, மனித உடலில் மகிழ்ச்சியை உண்டாக்கும் “செரட்டோனின்” என்னும் இயக்குநீரை (ஹார்மோன்) சுரக்கச்செய்கிறது. கல்வி அறிவுத்திறனைச் சுரக்கச்செய்து தன்னம்பிக்கையை வளர்த்து  மகிழ்ச்சியுடன் வாழவழிவகுக்கிறது.

மலைவாழை தாய்ப்பால் சுரக்கத் துணைசெய்கிறது. கல்வியறிவு தாய்மொழிப் பற்றையும், தாய்நாட்டுப் பற்றையும் உருவாக்கி நாடு வாழவழிசெய்கிறது.

மலைவாழை மந்தத்தை நீக்கும். கல்வியறிவு அறிவு மந்தத்தை நீக்கிப் புதைந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்கிறது.

மலைவாழை குருதியில் (ரத்தத்தில்) குருதிவளிக்காவி (ஹீமோகுளோபினை) அதிகரிக்கும். கல்வி தன்னம்பிக்கையினை வளர்த்து ஊக்கமுடன் வாழவைக்கும்.

 மலைவாழையினால் உயிரணு (செல்கள்) சுறுசுறுப்பாகும். கல்வியால் விழிப்புணர்வு உண்டாகும். செல்கள் சேர்ந்து உடலில் பல்வேறு உறுப்புகளாக மாறுவதுபோல் கல்வியறிவு முயற்சிக்கும் பயிற்சிக்கும் விரும்புகின்ற துறையில் வல்லவராக மாற்றுகிறது.

மலைவாழையினைச் சர்க்கரை நோயாளிகளும் உண்ணலாம். கல்வியினைப் பெறுவதற்கு உடல்வலிமை தேவையில்லை. ஆர்வம் மட்டும் இருந்தால் எவரும் கற்க இயலும்.

மலைவாழை புற்றுநோயைத் தடுக்கும். பிறந்ததே வீண் என நாளும் எண்ணியெண்ணி உடலும் உள்ளமும் வருந்த தாழ்வுமனப்பான்மையுடன் திரிவோரைக் கல்வி மேம்படுத்தும்.

மலைவாழை, உணவைச் சீரணமாக்கத் துணை செய்யும். கல்வி, வறுமை, ஏழ்மை அனைத்தையும் உண்டு வளமாக வாழவழி செய்யும்.

மலைவாழை தோல் கருத்தாலும் பழம் நன்றாக இருக்கும். கல்வி நிறத்தைப் பார்க்காமல் அவருடைய பதவியைப் பார்க்கச்செய்யும் ; மதிப்பினை உண்டாக்கும் ; இழிவு செய்தோரையும் வணங்கவைக்கும்.

மலைவாழை அழிந்துவரும் பயிர்களுள் ஒன்றாக இருக்கிறது. உரிய நடவடிக்கை எடுத்தால் காக்க இயலும். கல்வியில் பிறமொழிச்செல்வாக்கானது திறமானவர்களை உருவாக்க இயலாமல் தேய்ந்துவருகிறது. தாய்மொழிக்கல்வியால் மட்டுமே எண்ணங்கள் விரியும் ; உலகிற்கும் திறமை தெரியும்.

மலைவாழை சீறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு வேண்டாம். கல்வியை ; ஆசிரியர்களை, ஏன் மதிக்கவேண்டும்? என்னும் சிறுமதிகொண்ட கோளாறு உள்ளவர்களுக்கு கல்வி கற்பித்தால் ஆபத்துதான். அவர்களால் வீட்டிற்கோ நாட்டிற்கோ பயன் இருக்காது.

இனி, மலைவாழையையும் கல்வியையும் நாம் பெறுவதோடு மற்றவர்களும் பெற வழிகாட்டுவோம். இனிப்பாவேந்தர் பாடலைக் காண்போமா?

‘தனனான தனனான னானா – தான

தானன்ன தானன்ன தானன்ன தான”

இந்த தாளத்தில் பாடினால் இன்னும் மலைவாழை போல் எளிதில் உள்ளத்துள் இறங்கும். பாடிப் பார்க்கிறீர்களா?

“தலைவாரிப் பூச்சூடி உன்னைப் – பாட

சாலைக்குப் போவென்று சொன்னால் உன்அன்னை

சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி

வேளைதோறும் கற்றுவருவதால் படியும்

மலைவாழை அல்லவோ கல்வி? – நீ

வாயார உண்ணுவாய் போயென் புதல்வி.”

எத்தனை அழகு பாருங்கள். இன்னும் சுவைக்க ஆசை உண்டா? உண்டாயின் உங்களுக்காகப் பாவேந்தர் “இசையமுது”  நூலில் “பெண்ணுக்கு” எனப்பாடியுள்ள பாடலை முழுதாகப் படித்துச் சுவைப்பீர் ; மகிழ்வீர்.