தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 13 ஜூன், 2021

மணிமேகலை என்னும் மாதரசி

 


மணிமேகலை என்னும் மாதரசி

     கொடுப்பவர் உயர்ந்தவர் ; பெறுபவர் தாழ்ந்தவர் என்பது உலகியல் வழக்கு. கொடுப்பவர்கரம் உயர்ந்திருப்பதும், பெறுபவர்கரம் தாழ்ந்திருப்பதும் இதனை உணர்த்திவிடுகிறது. இக்கூற்று அருளுக்கும் பொருந்தும் ; பொருளுக்கும் பொருந்தும். இத்தகைய வரையறையோடு மணிமேகலைக் காலத்துக் கணிகையர்க்குலத்தை நோக்கினால், அது தாழ்ந்த குலமாகக் குறிப்பிட்டுள்ளதனை உணர்ந்துகொள்ள இயலும். மன்னவர் கொடுக்கக் குடிகள் பெறுவது இயல்புதானே? எனினும் கலைகளில் சிறந்தோரையும் தாழ்வாக எண்ணிய காலம் அது. இன்று அப்படியே தலைகீழாக மாறிவிட்டதுதானே?. நடிகர்களைத் தலைமேல் தூக்கிக்கொண்டு ஆடும் நிலைக்குச் சமுதாயம் மாறிவிட்டிருக்கிறது. அதனால்தான் நடிகர்களின் பதாகைகளில்கூட பாலாறு ஓடுகிறது.

     மணிமேகலை, கணிகையர் குலத்தில் பிறந்த மாதவியின் மகள். அழகின் உரு. அழகு இருக்கும் இடத்தில் ஆணவம் இருப்பது இயல்புதானே? அந்த ஆணவமே கூட சில பெண்களின் அழகினை மிகுவிக்கும்தானே? ஆனால் மணிமேகலையோ, அழகில் இமயமாயினும் அன்பையும் பண்பையும் அணிகலனாகக் கொண்டவள் ; ஆணவத்தின் அடிச்சுவடும் அறியாதவள். மணிமேகலையின் அழகினை,

     மணிமேகலை தன் மதிமுகம் தன்னுள்

அணிதிகழ் நீலத்து ஆய்மலர் ஓட்டிய

     கடைமணி உகுநீர் கண்டனன் ஆயின்

     படை இட்டு நடுங்கும் காமன் பாவையை

     ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?

     பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?

(மலர்வனம்புக்ககாதை:20-25)

என்னும் அடிகளில் சீத்தலை சாத்தானார் எழிலுற  எடுத்துக்காட்டுகிறார். கோவலன், கண்ணகியை இழந்த துயர்கேட்டு அழும் நிலையில்கூட மணிமேகலையின் அழகை எடுத்துக்காட்டுகிறார். மதிமுகம் ; அழகான நீலமலரை வென்ற கண்கள் ; காமனும் நடுக்குறும் அளவிற்குக் கடைமணியில் கண்ணீர். அவளைக்கண்டால் ஆடவர் அகலார் ; அகன்றால் அவர் ஆடவராகார் எனப்பாடியுள்ளார் சீத்தலைசாத்தனார்.

     அத்தகைய பேரழகுடைய மணிமேகலையின் பிறப்பின் நோக்கம் அவ வாழ்க்கைக்கன்று ; தவ வாழ்க்கைக்கே. “காமனையே வெல்லும் தவச்செல்வியைப் பெறுவாய்” என மணிமேகலை பிறக்கும் முன்னரே மணிமேகலா தெய்வம் மாதவியின் கனவில்தோன்றிக் கூறியதனை,

     காமன் கையறக் கடுநவை அறுக்கும்

     மா பெருந்தவக்கொடி ஈன்றனை என்றே

     நனவே போலக்கனவு அகத்து உரைத்தேன்

(துயிலெழுப்பிய காதை: 36-38)

என்னும் அடிகள் எடுத்துக்காட்டுகின்றன.   

     உதயகுமரன் தன்னைக் காதலிப்பதை உணர்ந்துகொண்ட மணிமேகலை, “நான் எவ்வாறு அவனைக் காதலிக்க எண்ணினம்?” என எண்ணுகிறாள். அவன்பின்னே உள்ளம் சென்ற நிலையினை

     புதுவோன் பின்றைப் போனது என் நெஞ்சம்

     இதுவோ, அன்னாய்! காமத்து இயற்கை

     இதுவே ஆயின் கெடுக தன் திறம்

           (மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய காதை:89-91)

என்னும் அடிகளில் உணர்த்திவிடுகிறாள். அதற்கான காரணத்தை அறியவிழைகிறாள். பின்னர், முற்பிறவியின் கணவனாக வாழ்ந்த இராகுலனே இப்பிறவியில் உதயகுமாரானாகப் பிறப்பெடுத்தான் என்பதனை அறிந்துகொள்கிறாள்:

தன் அளவில்லாத ; அடக்கவியலாத காமத்தை அறிகிறாள். பின் தன் பிறப்பின் நோக்கத்தை அறிகிறாள். காமத்தை வெல்கிறாள்.    உதயகுமரன், தன் காதலைக் கூறி நெருங்க விழையும்பொழுது, அவனுக்கு வாழ்வின் மெய்யியல் குறித்து விளக்குகிறாள்.

     பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டு  இரங்கலும்

     இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்

     மக்கள் யாக்கை இது என உணர்ந்து

மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்

                     (உதயகுமரன் அம்பலம் புக்ககாதை: 136-139)

எனக் கூறுகிறாள். இவ்வாழ்க்கை பிறத்தல், மூத்தல், பிணிபட்டு வருந்தல், இறத்தல் என்னும் நான்கு படிநிலைகளை உடையது. இதுவே இவ்வுடலுக்கான செயல். எனவே, இவ்வுடலின் விருப்பத்திற்காக வாழ்வதைக் காட்டிலும் அனைத்து உயிர்களுக்கும் நல்லன செய்து வாழ்ந்தால் பிறப்பு பொருளுடையதாகும் என உணர்த்துகிறாள் மணிமேகலை.

வாழ்க்கையின் உண்மையை அறியாமல், பிறப்பின் நோக்கம் புரியாமல், பெற்றோரின் அருமையினை உணராமல் காதலித்து வாழ்க்கையை இழந்து வருந்தும் பெண்களுக்கு மணிமேகலையே பாடம் கற்பிக்கிறாள். உணர்வுகளைக் கையாளும் திறம் இருப்பின் காமத்தின் ஆற்றலை கடமைக்கு மடைமாற்றம் செய்ய இயலும். அவ்வாறு இளமையை வெற்றிகொண்டேரே ஆட்சியராக ; மருத்துவராக ; விளையாட்டு வீர்ர்களாக வலம்வருவதனைக் காணமுடிகிறது.

அவ்வாறின்றி காதலால் ; காமத்தால் தவறானவர்களிடம் சிக்கிக்கொண்டு, பெற்றோரை இழந்து, உறவுகளை இழந்து, கணவனை இழந்து, பிள்ளைகளை இழந்து (திருமணமானவர்களும்தான்) சிறையில் வாடும் நிலை இருப்பதனைக் காணமுடிகிறது. நாளிதழ்களில் நாள்தோறும் கொலைச்செய்திகள். அவை, தன்னடக்கத்தின் முக்கியத்துவத்தினை உணர்த்திவருகின்றன. பொருளுக்காகக் காதலித்து ஏமாற்றும் வழக்கம் இனி இருக்காது. ஏனெனில், பெற்றோரின் ஒப்புதலின்றி திருமணம் செய்தால் சொத்துரிமை இல்லை எனச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. பெற்றோர்கள் உள்ளம் குளிரும்தானே?

தன்னடக்கத்தால் உயர்ந்த மணிமேகலையின் பெருமையினை எடுத்துரைக்கும் இலக்கியமாகவும் “மணிமேகலை” இலக்கியத்தைக்கொள்ளமுடியும்தானே? மணிமேகலையில் இன்னும் பல புதையல்கள் இக்காலத்திற்கும் வழிகாட்டுவனவாக அமைகின்றன. இன்று மணிமேகலையின் அறிவுரை ஒன்றைப்பார்த்துவிட்டோம். அறியாத வயதிலும் அறிவினை ஊட்டிய மணிமேகலை மாதரசிதானே.?

சனி, 12 ஜூன், 2021

கல்வி என்னும் மலைவாழை

 


ஆசிரியப் பணியைவிட உலகில் உயர்ந்த பணி உலகில் இல்லை. ஏனென்றால் உயிருள்ள பொம்மைகளை உயர்ந்த மனிதர்களாக உலகில் உலவச்செய்யும் கலை ; அது ஆசிரியர்களுக்கு மட்டுமே கைவந்தகலை. ஒருவர் மருத்துவரை வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என்றால் அவர் போற்றப்படுவார். ஆனால், ஆசிரியரைச் சந்தித்ததே இல்லை என்றால்?... அவர் மதிக்கப்படுவாரா? இல்லைதானே?. வாழ்நாளில் எப்பொழுதாவது ஒருவர் மருத்துவமனையில் மருத்துவம் பார்த்திருந்தால் அந்த மருத்துவமனையை மறக்கவே முயற்சிப்பார். ஆனால், கல்வி கற்ற பள்ளியை மறப்பார்களா? எந்நாளும் மறவார். வயதான பின்பும் அங்குசென்று பார்த்து மகிழ்வார் ; நின்று மகிழ்வார் ; முடிந்தால் ஓடியும் ஆடியும் மகிழ்வார்தானே?

கல்வி அத்துணை அருமையானது ; பெருமையானது ; அகலமானது ; ஆழமானது ; அழகானது.  அதனால்தான் கல்விகற்ற இடத்தைப் பார்ப்பதில் அத்துணை மகிழ்ச்சி.

மலச்சிக்கலைப் போக்கும் மலைவாழை. மனச்சிக்கலைப் போக்கும் கல்வி. அதனால்தான் பாவேந்தர் ‘மலைவாழை அல்லவோ கல்வி” என்றார்.  இச்சொற்றாடரை ஆய்வு செய்வதே இக்கட்டுரை.

வாழை – மங்கலக்கனி  - அதனால் ஒவ்வொரு விழாவிலும் முதலிடம்பெறும். இது ஒரு கற்பகக் கனி. “கற்றவர் விழுங்கும் கற்பகக்கனி”. இது இறைவனை மட்டுமன்று அவர்படைத்த வாழையையும் குறிக்கும். ஏனெனில், இப்பழம் காலத்திற்கேற்ப கிடைக்கும் கனியன்று; காலம் தவறாமல் கிடைப்பது. எக்காலமும் பசி தீர்க்கும் பெருமையுடையது. அதனால்தான் இறைவனுக்கும் படைக்கப்படுகிறது.

கல்வியும் அப்படித்தான். இறைவனே தொடக்கமும் இறைவனே முடிவும். அகரத்தில் தொடங்கி முப்பாற்புள்ளியில் முடிகிறது. அகரம் அறிவுக்கண் திறப்பு. முப்பாற்புள்ளி என்பது மெய்யறிவுக் (மூன்றாவது) கண் திறப்பு. என்ன தலைப்பு மாறிப்போகிறதே? என எண்ணுகிறீரா? என்ன செய்வது. எண்ணியதை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் ஒரு மகிழ்ச்சி. சரி, தலைப்புக்கு வந்துவிடுவோம்.

மலைவாழையை, பெருமலைவாழை, சிறுமலைவாழை என இருவகையாகப் பிரிப்பர். கல்வியும் அப்படியே கலை, அறிவியல் என்னும் இருபிரிவுக்குள் அனைத்தையும் அடக்கிவிடமுடிகிறது.

மலை வாழை சூட்டைத் தரும் – குளிர் பிரேதசங்களுக்குரிய நல்ல கனி. மலைவாழை. சளி (கோழை) பிடிக்காமல் காக்கும். கல்வியும் அறிவுச்சூட்டினை உருவாக்கும். கோழையாகாமல் வீரனாக வளரவழி செய்யும். 

மலைவாழை, மனித உடலில் மகிழ்ச்சியை உண்டாக்கும் “செரட்டோனின்” என்னும் இயக்குநீரை (ஹார்மோன்) சுரக்கச்செய்கிறது. கல்வி அறிவுத்திறனைச் சுரக்கச்செய்து தன்னம்பிக்கையை வளர்த்து  மகிழ்ச்சியுடன் வாழவழிவகுக்கிறது.

மலைவாழை தாய்ப்பால் சுரக்கத் துணைசெய்கிறது. கல்வியறிவு தாய்மொழிப் பற்றையும், தாய்நாட்டுப் பற்றையும் உருவாக்கி நாடு வாழவழிசெய்கிறது.

மலைவாழை மந்தத்தை நீக்கும். கல்வியறிவு அறிவு மந்தத்தை நீக்கிப் புதைந்திருக்கும் திறமையை வெளிக்கொணர்கிறது.

மலைவாழை குருதியில் (ரத்தத்தில்) குருதிவளிக்காவி (ஹீமோகுளோபினை) அதிகரிக்கும். கல்வி தன்னம்பிக்கையினை வளர்த்து ஊக்கமுடன் வாழவைக்கும்.

 மலைவாழையினால் உயிரணு (செல்கள்) சுறுசுறுப்பாகும். கல்வியால் விழிப்புணர்வு உண்டாகும். செல்கள் சேர்ந்து உடலில் பல்வேறு உறுப்புகளாக மாறுவதுபோல் கல்வியறிவு முயற்சிக்கும் பயிற்சிக்கும் விரும்புகின்ற துறையில் வல்லவராக மாற்றுகிறது.

மலைவாழையினைச் சர்க்கரை நோயாளிகளும் உண்ணலாம். கல்வியினைப் பெறுவதற்கு உடல்வலிமை தேவையில்லை. ஆர்வம் மட்டும் இருந்தால் எவரும் கற்க இயலும்.

மலைவாழை புற்றுநோயைத் தடுக்கும். பிறந்ததே வீண் என நாளும் எண்ணியெண்ணி உடலும் உள்ளமும் வருந்த தாழ்வுமனப்பான்மையுடன் திரிவோரைக் கல்வி மேம்படுத்தும்.

மலைவாழை, உணவைச் சீரணமாக்கத் துணை செய்யும். கல்வி, வறுமை, ஏழ்மை அனைத்தையும் உண்டு வளமாக வாழவழி செய்யும்.

மலைவாழை தோல் கருத்தாலும் பழம் நன்றாக இருக்கும். கல்வி நிறத்தைப் பார்க்காமல் அவருடைய பதவியைப் பார்க்கச்செய்யும் ; மதிப்பினை உண்டாக்கும் ; இழிவு செய்தோரையும் வணங்கவைக்கும்.

மலைவாழை அழிந்துவரும் பயிர்களுள் ஒன்றாக இருக்கிறது. உரிய நடவடிக்கை எடுத்தால் காக்க இயலும். கல்வியில் பிறமொழிச்செல்வாக்கானது திறமானவர்களை உருவாக்க இயலாமல் தேய்ந்துவருகிறது. தாய்மொழிக்கல்வியால் மட்டுமே எண்ணங்கள் விரியும் ; உலகிற்கும் திறமை தெரியும்.

மலைவாழை சீறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு வேண்டாம். கல்வியை ; ஆசிரியர்களை, ஏன் மதிக்கவேண்டும்? என்னும் சிறுமதிகொண்ட கோளாறு உள்ளவர்களுக்கு கல்வி கற்பித்தால் ஆபத்துதான். அவர்களால் வீட்டிற்கோ நாட்டிற்கோ பயன் இருக்காது.

இனி, மலைவாழையையும் கல்வியையும் நாம் பெறுவதோடு மற்றவர்களும் பெற வழிகாட்டுவோம். இனிப்பாவேந்தர் பாடலைக் காண்போமா?

‘தனனான தனனான னானா – தான

தானன்ன தானன்ன தானன்ன தான”

இந்த தாளத்தில் பாடினால் இன்னும் மலைவாழை போல் எளிதில் உள்ளத்துள் இறங்கும். பாடிப் பார்க்கிறீர்களா?

“தலைவாரிப் பூச்சூடி உன்னைப் – பாட

சாலைக்குப் போவென்று சொன்னால் உன்அன்னை

சிலைபோல ஏனங்கு நின்றாய் – நீ

சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்

விலைபோட்டு வாங்கவா முடியும்? – கல்வி

வேளைதோறும் கற்றுவருவதால் படியும்

மலைவாழை அல்லவோ கல்வி? – நீ

வாயார உண்ணுவாய் போயென் புதல்வி.”

எத்தனை அழகு பாருங்கள். இன்னும் சுவைக்க ஆசை உண்டா? உண்டாயின் உங்களுக்காகப் பாவேந்தர் “இசையமுது”  நூலில் “பெண்ணுக்கு” எனப்பாடியுள்ள பாடலை முழுதாகப் படித்துச் சுவைப்பீர் ; மகிழ்வீர்.

 

 

 

 

ஞாயிறு, 6 ஜூன், 2021

கற்பு என்னும் திண்மை – தமிழ் இலக்கியப்பதிவுகள்

 


கற்பு என்னும் திண்மை – தமிழ் இலக்கியப்பதிவுகள்

“கற்பெனப்படுவது சொல் திறம்பாமை” - சொல் திறம்பாமல் வாழ்வதே ‘கற்பு’ என்பது ‘தமிழ் மூதாட்டி’ ஔவையின் வாக்கு.  இதனை முறையாகக் கற்பித்த ஒழுக்கமே கற்பாயிற்று. “ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்பதனைக் கற்பித்ததும், “கற்புடன் வாழவேண்டும்” எனக் கற்பித்துதும் இரண்டல்ல ; ஒன்றே.  

      இதை எவ்வாறு ஒப்புவது? என நீங்கள் கேட்பதுபுரிகிறது. ஒல்காப்புகழ் தொல்காப்பியம் கூறினால் ஒத்துக்கொள்வீர்தானே?

     கற்பெனப் படுவது கரணமொடு புணரக்

     கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்

     கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே (140)

என்னும் நூற்பாவில் ‘கற்பு’ குறித்து இலக்கணம் வகுத்துள்ளார் தொல்காப்பியர். இந்நூற்பாவில் மூன்று கருத்துக்களை வரிசைப்படுத்துகிறார். முதலில் ‘கரணமொடு புணர்வது”. ‘கரணம்’ என்பது வதுவையைக் குறிக்கும். ‘வதுவை’ என்பது கூடி வாழ்வதற்கான வழிவகை செய்தல்.  எனவே, எந்நாளும் கூடிவாழும் வகையில் தலைவனையும் தலைவியையும் இணைந்துவாழச்செய்வதே ‘கற்பு வழக்கு’ என்கிறார் தொல்காப்பியர். உண்மையாக வாழ்வதனால் மட்டுமே கூடிவாழஇயலும் என்பதனை வாழ்ந்தவர்கள் வழி அறியலாம்தானே? ‘உண்மையாக வாழ்தல்’ என்பது சொல் திறம்பாமையையும் குறிக்கும்தானே?

     இரண்டாவது,  திருமணம் செய்துகொள்ளும் பெண்ணின் கல்வி, பணம், புகழ், பதவி என எவற்றையெல்லாம் அளவீடாகக் கொள்ளமுடியுமோ அவற்றையெல்லாம் அறிந்து ஆண்வீட்டார் திருமணம் செய்விக்கவேண்டும். இதுவே கொளற்குரிய மரபு.

     மூன்றாவது, புகுந்தவீட்டில் எக்குறையுமின்றி வாழவேண்டும் என்பதனை உணர்ந்து பெண்வீட்டார் அத்தகைய வாய்ப்புடைய ஆண்மகனையே திருமணம் செய்விக்கவேண்டும். இதுவே கொடைக்குரிய மரபு.

     இவ்வாறு திருமணங்கள் செய்யப்படும்போது, வாழ்க்கை இனிதாகும். இல்லையேல் நரகம்தான். மருத்துவம் படித்த பெண்ணை, மருத்துவத்தைப் பற்றி ஒரு துளியும் அறியாத ஒருவனுக்குத் திருமணம் செய்துவைத்தால் என்னாகும்?. இரவுபகல் பாராது உழைக்கும் மருத்துவத்தின் அருமையினையும் பெருமையினையும் அறியாது செயல்படுவான். இதனால் வாழ்நாள் நரகமாகிவிடும்தானே? உணர்ந்தவனாயின் உயிர்காக்கும் தெய்வீகப்பணி என மனைவியைக் கொண்டாடுவான்தானே?

     கணவன் மட்டும்தான் மனைவியின் அருமையினை அறிவானா? மனைவி கணவனின் அருமையை அறியமாட்டாளா? என்றுதானே கேட்கவருகிறீர். நீங்கள் கேட்பீர்கள் என்பதால்தான், தற்காலத்தில் நிகழ்ந்த நெஞ்சை உருக்கும் நிகழ்வு ஒன்றினைக் கூறவிழைகிறேன்.

     நிகிதாகௌர் என்னும் பெண்மணிக்குத் திருமணம் நடக்கிறது. கணவன்  டோராடூனைச் சார்ந்த விபூதிசங்கர்தவுண்டி, இராணுவ மேஜர். பத்து மாதங்கள் ஓடின. 2019 பிப்ரவரிமாதம் இந்திய எல்லையான ஜம்முகாஷ்மீர் ‘புல்வாமா’வில் தாக்குதல் நடக்கிறது. எதிரிகளால் மத்திய இருப்புக்காவல் படை (சி.ஆர்.பி.எஃப்) நாற்பது வீரர்கள் கொல்லப்படுகிறார்கள். உடனடியாக எதிரிகளுக்குப் பாடம் கற்பிக்க இராணுவம் இறங்குகிறது. அப்படையில்தானே விரும்பி களம் இறங்குகிறார் விபூதிசங்கர்தவுண்டி. எதிரிகள் துரத்தப்படுகின்றனர் ; கொல்லப்படுகின்றனர். இப்போரில் மேஜரும் உயிரிழக்கிறார். காலம்காலமாக இப்படி நாட்டுக்காக வீரர்கள் உயிர்கொடுத்துக்கொண்டிருப்பது இயல்பான நிகழ்வுதானே என நினைக்கிறீர்கள். அப்படித்தானே? இத்துடன் அவர்களுடைய வீரப்பயணம் முடிந்துவிடவில்லை. இப்போதுதான்தொடங்கி இருக்கிறது என்கிறார் நிகிதா.

     கணவனை இழந்த துக்கத்தில் சோர்ந்துவிடாமல் கணவரின் தேசபக்தியினை தனதாக்கிக்கொள்கிறார். கணவனின் கனவினை நினைவாக்கத் தொடங்கினார். இலட்சக்கணக்கில் சம்பாதித்த தகவல் தொழில்நுட்ப நிறுவன வேலையை விட்டுவிட்டு, தகுதித்தேர்வெழுதி இராணுவத்தில் சேர்ந்துவிட்டார். கணவனின் இலட்சியக்கனவினை நினைவாக்கத் துணிந்த பெண்ணின் பெருமையினை என்னென்பது? ‘உனக்காக வாழ்வேன்’ என்னும் சொல்திறம்பாத கற்புத்திறம் பெருமையுடையதுதானே?

     பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

     திண்மை உண்டாகப் பெறின் (திருக்குறள்-54)

என்னும் தெய்வப்புலவரின் வாக்கிற்கு வாழ்க்கையான பெண்மணிதானே இவர்.

     ஆம்! அருமையான பெண்மணிதான். பெண்ணுக்கு மட்டும்தான் கற்பா ? ஆணுக்குக் கற்பில்லையா ? என்னும் கேள்வி உங்களுக்குள் எழுகிறதுதானே? அதனால்தான்  ‘ஏக பத்தினியுடன் வாழ்ந்த இராமனை இராமாயணத்தில் படம்பிடித்துக்காட்டினார் கம்பர். தமிழில் இல்லாத பொருளென்று எதுவும் இல்லைதானே?

 

வெள்ளி, 4 ஜூன், 2021

பெண்கள் சோர்வதில்லை – திருக்குறள் விளக்கம்

 

ஞாயிற்றிலும் உழைக்கும் திங்கள் – பெண்

எத்தனை விடுப்புகள் வந்தாலும்  வீட்டு வேலையில் பெண்களுக்கு விடுப்பு உண்டா?.  அனைவரும் ஓய்வெடுக்கும் நாளிலும் பெண்ணின் இடுப்பு ஒடிந்துபோகும் அளவிற்கு வேலை. ஏனென்றால் அன்றுதான் விருந்துபோல் உணவு சமைக்கவேண்டுமாயிற்றே. துணிதுவைக்கும் எந்திரம் துவைத்த பின் ஓய்வெடுக்கும். மாவரைத்த எந்திரமும் அரைத்த பின் ஓய்வெடுக்கும். சட்னி அரைத்த குறுஅரவையும் (மிக்ஸி) அரைத்தபின் ஓய்வெடுக்கும். ஆனால் ஓய்வறியாமல் நாளும் உழைத்திடும் பெண்கள் பலர். வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலை பார்க்கும் இடங்களில்தான் ஓய்வெடுக்கமுடிகிறது. வீட்டுவேலைகளைவிட அவர்களுக்கு அலுவலக வேலைகள் பெரிதாகத் தெரிவதில்லை. அதனால்தான் பலர் காலை சிற்றுண்டியையும் அலுவலகத்துக்கு எடுத்துச்சென்றே உண்கின்றனர். எந்திரம்போன்ற அவர்களின் ஓட்டத்தை, அலுவலகத்தில் நுழையும்போது அவர்களின் தலையிலிருந்து எட்டிப்பார்க்கும் சீப்பு நினைவுபடுத்தும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டிலுள்ள பெண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது என எண்ணுவதும், வீட்டில் உழைக்கும் பெண்கள் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஓய்வு கிடைக்கிறது என எண்ணுவதும் இக்கரைக்கு அக்கரை பச்சைதானே.

பெண்களுக்குத் தன்னைக் காத்துக்கொள்வதே அரும்பணி. சமூகத்தில் பெண்களைப் பகடி செய்வது பழக்கமாகி இருக்கிறது. ஒரு பெண்ணை, தாயாகவும் தங்கையாகவும் பார்க்கும் பழக்கம் குறைந்துவருவதற்கான அடையாளம் அது. ஆண் குழந்தைகளுக்குப் படிப்பதுமட்டுமே போராட்டமாக இருக்கிறது. கடினமாகப் படித்தால் வெற்றிவாகை சூடமுடிகிறது. ஆனால், பெண்கள் நன்றாகப் படித்தால் மட்டும்போதாது, நாளும் பள்ளிக்கோ கல்லூரிக்கோ சென்று திரும்புவதே போராட்டமாக இருக்கிறது. அதனை எதிர்கொள்ள முடியாத எளிய குடும்பங்களில் பெண்களின் படிப்பு கனவாகி நின்றுவிடுகிறது. நன்றாகப் படித்து பெண் மருத்துவர்களாக ; பொறியாளராக ; காவல்துறை அதிகாரியாக ; சிறந்த ஆசிரியராக ; விஞ்ஞானியாக வரவேண்டியவர்கள் வீட்டிற்குள் முடங்கிப்போய்விட்டதனைக் காணமுடிகிறது. பெண் குழந்தைகள் கல்வி பெறாவிட்டாலும் பாதுகாப்பாக வாழ்ந்தால்போதும் என்னும் எண்ணம் வளர்ந்துவிட்டது. இத்தனை இழிவுக்கும் யாரைக் காரணம் காட்டுவது? இழிவான ஆண்களையா? அப்படிப்பட்ட இழிவான ஆண்களை ஒழுக்கமாக வளர்க்கமுடியாத பெண்களையா? ஏன் இப்படிக் கூறுகிறீர்கள்?  வளர்ப்பதில் ஆண்களுக்குப் பங்கில்லையா? எனக் கேட்காதீர். ஆண்களைக் காட்டிலும் பெண்களே குடும்பத்தை மட்டுமின்றி தன்னைக் கொண்டானையும் பேணிப்பாதுகாக்க முடியும். ஆண்களுக்குள் ஒளிந்திருக்கும் திறமையினையே பெண்தானே அறிந்து வெளிப்படுத்துகிறாள். அதனால்தான் திருமணத்திற்குப் பின் ஆண்களின் வாழ்க்கை அழகானதாக மாறிவிடுகிறது.  இதனையே, தெய்வப்புலவர் திருவள்ளுவர்

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற

சொற்காத்துச் சோர்விலாள் பெண் (திருக்குறள் – 56)

 

என்னும் திருக்குறளில் உணர்த்தியுள்ளார்.

 

     ஒரு சொல் வெல்லும் ; ஒரு சொல் கொல்லும் என்பர் பெரியோர். அது இல்வாழ்க்கைக்குப் பெரிதும் பொருந்தும். பெண்ணுடைய கடைக்கண் பார்வையும் கனிந்த சொல்லும் எத்தகைய ஆணையும் திருத்திவிடும் அருமையுடையது. எச்சொற்களை, எப்போது பேசவேண்டும் என்னும் கலை பெண்ணுக்கு இயல்பாகவே அமைந்துவிடுகிறது. ஏனெனில், சிறுவயது முதலே இப்படி இருக்கவேண்டும். இப்படிப்பேச வேண்டும் என்னும் கட்டுப்பாடுகள் சமூகத்தால் கற்பிக்கப்பட்டுவிடுகிறது. எனவே, ஏன்? எதற்கு? இவை அனைத்தும் நன்மைக்கா? தீமைக்கா? என அளவறிந்து செயல்படும் திறம் பழக்கமாகிவிடுகிறது. எனவே, பெருமையுடைய பெண், புகழுக்குரிய செயல்களை மட்டுமே செயல்படுத்த விழைகிறாள்.

    

     தனக்கு உடல் நலம் சரியில்லாதபோது கூட சிறிதும் பொருட்படுத்தாமல் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் உணவு ஆக்கிவைத்துவிட்டே ஓய்வெடுப்பாள். தன் சோர்வினை வெளிப்படுத்தமாட்டாள். பின் தூங்கி முன் எழும் பெருமையுடையாள். வீட்டிலுள்ள அனைவரும் திருமணத்திற்கோ, கோவிலுக்கோ சென்று திரும்புவர். அனைவரும் வீட்டில் நுழைந்ததும் ஓய்வெடுப்பர். ஆனால், பெண்ணோ அடுத்த வேளை உணவிற்கு வழி செய்வாள். அவளுடைய சோர்வு என்ன ஆனது?. அவளுடைய அன்பில் சோர்வே சோர்வடைந்து ஓடிவிடுகிறது.

 

          தாயாருக்கு எண்பது வயதானாலும் தனக்குத் துணை செய்ய வேண்டுமென அன்புக்கட்டளையிடும் மகள்களையும் பல  இடங்களில் பார்க்கமுடிகிறதுதானே?. அந்த வயதிலும் முடிந்தும் முடியாமலும் அனைத்து இல்லப்பணிகளையும் செய்யும் தாய்மார்களும் தமிழகத்தில் உண்டுதானே?

“ஏன்? இப்படி சோர்வில்லாமல் உழைக்கின்றீர்கள்?” எனக் கேட்டுப்பாருங்கள். “‘ஏன் தனியாக ஊரில் கஷ்டப்படுகிறீர்கள். இங்கே வந்துவிடுங்கள்” என. மகள் அழைத்தாள். ராணி போல் வாழலாம் என நினைத்தேன். இங்கே வேலைக்காரிபோல் வாழ்கிறேன். அவளை நம்பிவந்ததன் விளைவு. இப்படியாகிவிட்டது. மீண்டும் ஊருக்குத்திரும்பவும் முடியாது. மகள் பார்த்துக்கொள்வதாக பெருமையுடன் கூறிவந்துவிட்டேன்.  சரி. பரவாயில்லை. பேரன் பேத்திகளைத் தானே பார்த்துக்கொள்கிறேன்” என்பாள்.  அந்த அன்பில்தான் அவளுடைய சோர்வுகள் காணாமல் போகின்றன. கருணை உள்ளங்களை காயப்படுத்தி வாழ்வது  சிலருக்கு வாடிக்கையாகிவிட்டதே வேடிக்கைதான்.

நாட்டு மக்கள் நன்றாக வாழவேண்டுமென எல்லைக்கோட்டில் உழைத்துக் கொண்டிருக்கும் பாதுகாப்புப்படைவீரர்கள் எத்தனைப் பெருமை உடையவர்கள். அவர்களைப்போலவே வீட்டில் உள்ள அனைவரின் நன்மைக்காகவும் தனது சோர்வை மறந்துபோகிறாள் பெண். அவர்களால்தான் நாடும், வீடும் செழிக்கிறது.  

எட்டு வயதில் தொடங்கிய பணி எண்பது வயதிலும் தொடர்கிறது என்றால் “சோர்விலாள் பெண்” என்னும் தெய்வப்புலவரின் வாக்கு தேக்குதானே.

வியாழன், 3 ஜூன், 2021

திருவள்ளுவர் காட்டிய வழியில் - ஊக்கம்ஆக்கம் தருமா? –

 

தளச்சியின்மையே முயற்சி

     ஊக்கம் உடைமை உடைமையில் உயர்ந்தது. ஏனென்றால் அது வெளியிலிருந்து வருவதில்லை. உள்ளிருந்து வருகிறது. வெளியிலிருந்து வரும் காற்று நின்றுவிட்டால் மின்விசிறியை ஓட விடலாம். உள்ளிருந்து வரும் காற்று நின்றுவிட்டால் …? அவ்வளவுதான். உவமை அச்சுறுத்துகிறதே என்கிறீர்களா? . நான் படித்ததைக் கூறினால் மகிழ்ச்சி அடைவீர்கள். சொல்லட்டுமா?. முட்டை வெளியிலிருந்து உடைபட்டால் இறப்பு. உள்ளிருந்து உடைபட்டால் பிறப்பு. சரிதானே?

     ஊக்கம் மனிதனுக்கு வேண்டுமா ? என்னும் கேள்விக்கே இடமில்லாத வகையில் மனிதனின் ஆளுமையே ஊக்கத்தால்தான் அமைகிறது என்பதனை உணர்த்தும் வகையில் “ஆள்வினை உடைமை” எனப் பெயரிட்டிருக்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

     மடியுளான் புகழின்றி மடிவான் ; மடியிலான் புகழோடு உயர்வான். ‘மடி’ என்னும் சோம்பல் எத்தகைய உயர்வையும் இழிவாக்கிவிடும். பணம், புகழ், பதவி அனைத்தும் சோம்பலால் சீரழிந்துபோகும். “குந்தி தின்றால் குன்றும் குறையும்” என்பது தானே முன்னோர் மொழி. முன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றுவதுதானே அறிவுடைமை.

     ‘மடி’ என்னும் சோம்பல் இன்றி வாழ்பவன் வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைசேர்ப்பான். ‘வாழ்பவன்’ மட்டும் தானா? ‘வாழ்பவள்’ இல்லையா? எனக் கேட்காதீர்கள்.  ‘சிவத்துக்குள் சக்தி’ இருக்கிறதுதானே. கடுமையாக உழைப்பவனுக்குத் திருமகளின் அருள்மழை அளவின்றி பொழியும். “எப்படி?” என்றுதானே கேட்கிறீர்கள். நான் படித்ததைக்கூறினால் ஒத்துக்கொள்வீர்கள்.

     கர்நாடக மாநிலத்தின் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவன் பிரதாப் என்னும் ஏழை உழவரின் மகன். சிறுவயது முதலே வறுமை வாழ்வு.  பள்ளியில் படிக்கும் காலத்திலேயே, படிப்பதற்குக் கிராமத்தில்  வசதியில்லாத போதும்  பக்கத்து ஊரில் கணினி மையத்தில் ‘ஏகலைவன்’ போல் தானாகவே கற்றுக்கொள்கிறான். பொறியியல் கல்லூரியில் சேர வசதி இல்லாமல் இயற்பியல் பாடத்தைப்படிக்கிறான். இருப்பினும் அவனுடைய ‘எந்திரப் பறவை’ என்னும் “ட்ரோன்” குறித்த எண்ணம் நாளும் வளர்ந்துகொண்டே இருந்தது. கல்லூரியில் பயிலும் காலத்தில் விடுதியில் பணம் கட்ட வசதியில்லாததால் துரத்தப்படுகிறார். மைசூர் பேருந்து நிலையத்தில் தங்கிக்கொண்டு கல்லூரிக்கு சென்றுவருகிறார். வசதியும் வாய்ப்பும் இல்லாததால் வீணான மின்னணுக் கழிவுகளைத் தேடி மும்பாயிலும், விசாகப்பட்டினத்திலும் அலைகிறான். அப்போதுதான் இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்பக்கழகம் (ஐ.ஐ.டி) தில்லியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி நடத்துகிறது. தொடர்வண்டியில் பயணச்சீட்டுப் பதிவு செய்யக்கூடப்பணம் இல்லாமல் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்கிறான். அத்தகைய பொருட்களைக் கொண்டு ‘எந்திரப்பறவை’யைப் பறக்கச்செய்கிறான்.  எண்பது முறை தோல்வி அடைகிறான். இறுதியில் வெற்றிபெறுகிறான். இந்திய அளவில் நடைபெற்ற அப்போட்டியில் இரண்டாம் இடம்பிடிக்கிறான். அவனுடைய அறிவியல் மேதைமையை உணர்ந்துகொண்ட அறிஞர் ஒருவர் ஜப்பான் நாட்டு “டோக்யோ”வில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள அறிவுறுத்துகிறார்.

     மைசூர் பேருந்து நிறுத்தத்தையே பார்த்து வியந்த ஏழை மகனுக்கு “டோக்யோ”  செல்லும் கனவினை நினைவாக்கும் ஊக்கம் பிறந்தது. அப்போட்டியில் கலந்துகொள்ள பேராசிரியர் பரிந்துரைக்கும் தகுதிச்சான்றிதழ் பெறவேண்டும் என்ற நிலையில் ஒரு பேராசிரியிடம் கேட்கிறான். “நீ படிக்கும் படிப்புக்கும் இப்போட்டிக்கும் சம்பந்தமில்லை” எனப் பேராசிரியர் பரிந்துரைக்க மறுக்கிறார். கையில் காசு இல்லாததால் பேருந்து நிலையங்களையே எங்கு சென்றாலும் இருப்பிடமாகக் கொள்கிறான். பொதுக்கழிப்பிடத்தையே பயன்படுத்துகிறான். ஒரு வேளைக்கு ஒரு ரொட்டிச் சாப்பிட்டு தண்ணீரைக் குடித்து வயிற்றை நிரப்பிக்கொள்கிறான். எண்ணம் முழுதும் “டோக்யோவில் எழுபதாவது இடத்தையாவது பிடித்துவிடவேண்டும்” என்னும் இலக்கு நோக்கியே இருந்தது

உணவும் இல்லை ; பணமும் இல்லை ; பரிந்துரை கடிதமும் இல்லை. இப்படி எத்தனையோ தடைகள். ஊக்கத்தை மட்டும் இழக்கவில்லை. முப்பது நாட்கள் நாளும் கடினமாக உழைக்கிறான். பரிந்துரைக் கடிதம் பெறுகிறான். சமயத்துறவி ஒருவர் உதவ முன்வருகிறார். ஆனால், அது விமானப் பயணக்கட்டணத்திற்குக் கூட போதவில்லை. தாயின் தாலிக்கொடியை விற்றுப் பயணச்சீட்டு எடுத்துச் செல்கிறான். 

“டோக்யோ” சென்ற பிறகு போட்டி நடக்கும் இடத்திற்குச் செல்ல வசதியான பேருந்து இருந்தாலும் கையில் காசு இல்லாததால் அத்தனைச் சுமைகளையும் எடுத்துக்கொண்டு கட்டணம் குறைந்த பேருந்துகளில் ஏறி இறங்கி ; ஏறி இறங்கிச் செல்கிறான். உடல் வருந்த உள்ளம் தளராமல்  பல இன்னல்களைக் கடந்து போட்டியில் கலந்துகொள்கிறான்.  பந்தயக் குதிரை கொள்ளைப் பார்க்குமா? புல்லைப் பார்க்குமா? இலக்கு மட்டுமே தெரிகிறது.

     முடிவுகள் வருகிறது. எழுபதாவது இடத்தில் இருந்து தொடங்குகிறது. எழுபதாவது இடத்திலாவது பெயர்வந்துவிடவேண்டும் என எண்ணுகிறான் : வரவில்லை. அறுபதாவது இடத்திலாவது பெயர்வந்துவிடவேண்டும் என எண்ணுகிறான் : வரவில்லை. ஐம்பதாவது ; நாற்பதாவது ; முப்பதாவது ; இருபதாவது  என எதிர்பார்த்துப் பார்த்து ஏங்கிவிடுகிறான். “இனி அவ்வளவுதான்” என மனதிற்குள் நினைத்துக்கொண்டு இருக்கையில் முதல் பத்து இடங்களுக்கான அறிவிப்பு வருகிறது. அமெரிக்காவின் ஸ்டான்ஸ்ஃபோர்டு தான் முதலிடம் பிடிக்கும் என அனைவரும் எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருக்கின்றனர்ன்.  ஸ்டான்ஸ்ஃபோர்டு இரண்டாம் இடம் என அறிவிப்பு வருகிறது. முதல் இடம் யார்? என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். “இந்தியாவின் பிரதாப் முதலிடம்” என அறிவிப்பு வருகிறது.  

இந்தியக்கொடி அனைத்து நாட்டுக்கொடிகளையும் விட உயரே பறக்கிறது. ஒரு லட்சம் டாலர் பரிசுத்தொகை கிடைக்கிறது. பிரதாப் ‘ட்ரோன்’ பிரதாப் என அழைக்கப்பட்டார்.  இந்தியாவுக்குத் திரும்பும்போது அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் வரவேற்று மகிழ்கின்றனர். ஊக்கத்தின் அருமை பெருமை அனைத்தும் அந்தத் தாயின் கண்களில் கண்ணீராகி வறுமையை அழித்துக்கொண்டிருந்தது. ஒரு நாளைக்கு (மாதத்திற்கல்ல) 60,000 ஆயிரம் சம்பளம் கொடுக்கிறோம் என ஃப்ரான்ஸ் அழைக்கிறது ; பல நாடுகள் அழைக்கின்றன.

     ‘ஏவுகணை மனிதர்’ ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் போல் “என் தாய்நாட்டிற்காகவே பணி செய்வேன்” எனக் கூறி அத்தனை வாய்ப்புகளையும் வேண்டாம் எனக்கூறுகிறார் பிரதாப். இனி, அவன் எனச்சொல்வது தவறுதானே. இந்தியப்பிரதமர் மோடி அவர்கள் விருது வழங்கினார். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற அமைப்பில் இணையக் கேட்டுக்கொண்டார். இன்று “இளைய அப்துல்கலாமாக” வலம்வருகிறார்.

      ஊக்கம் ஆக்கம் தந்துவிட்டதுதானே?. புகழ் ; பணம் ; பதவி எல்லாவற்றையும் மடியிலா மாணாக்கர் பெற்றுவிடுகிறார்.

     மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்

     தாள்உளாள் தாமரையி னாள் (திருக்குறள்:617)

என்னும் தெய்வப்புலவரின் வாக்கே  செல்வாக்குதானே.