தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 15 ஜூலை, 2019

கவியரசர் கண்ணதாசன் - Kannadasan - The Emperor of Poets

கவியரசர் கண்ணதாசன்

24.06.2019 கவியரசரின் 92 ஆவது பிறந்த நாள். அவர் எழுதும் எழுத்து உயிரோ, மெய்யோ, உயிர்மெய்யோ அனைத்தும் உயிர் பெற்றுவிடும். ‘கலங்காதிரு மனமேஎன்னும் அவருடைய முதல் திரைப்பாடல் முதல்கண்ணே கலைமானேஎன்னும் கடைசி திரைப்பாடல்வரை அனைத்துமே இன்றும் கூட, ஏதேனும் ஒரு இதழில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது என்பதே அவருடைய பாடல்களின் அருமைக்குச்சான்று

ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில்முத்தான முத்தல்லவோஎன்னும் திரைப்பாடலை எழுதினார் என அவருடைய புலமைக்குச் சான்று காட்டுவர். அவருடைய ஆளுமை அழகானது. “அவரைப் பார்க்கும் போது ஒரு கவிஞரைப்பார்ப்பது போல் தோன்றுவதில்லை. ஒரு அரசரைப் பார்ப்பது போல் தோன்றும்என எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிடுவார். ஒரு முறை பாடல் எழுத காலம் நீட்டித்ததால் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்அண்ணே மே மாதம் வந்துவிட்டது. படம் வெளியாகவேண்டும் என மேமேமே என அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். “அன்பு நடமாடும்  கலைக்கூடமேஎனப் பாடல் முழுதும் மே .. மே, என ஒவ்வொரு அடியும் இயைபுடன் அமைத்துப் பாடினார் என்று கவியரசர் புகழினைக் கூறுவார்.

தான் நாத்திகராகவும், அரசியல் வாழ்வில் இருந்த காலத்தையும்வன வாசம்என்னும் நூலாக எழுதினார். ஒருமுறை அவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஊசி குத்திய போதுகிருஷ்ணா, கிருஷ்ணாஎன அவ்வலியிலும் கிருஷ்ணரையே அழைத்தாராம். அந்த அளவுக்கு பின்னாளில் ஆத்திகரானார். ‘அர்த்தமுள்ள இந்து மதம்அவருடைய பக்திக்குச் சான்றுபாடல் எழுதும்போது காலில் செருப்பு கூட அணியமாட்டார். அந்த அளவிற்கு கலையினை மதித்தார். அவர் அழகினைக் கூட்டும் தங்கச்சங்கிலி சில நேரங்களில் அவர் கழுத்தில் இருக்காது. நண்பர்கள் சங்கிலி எங்கே ? எனக் கேட்டால்பள்ளிக்கூடம் சென்றிருக்கின்றனஎனக் கூறுவார். அடகுக்கடையைத் தான் பள்ளிக்கூடம் என்பார். யாருக்கும் அஞ்சாத ஞானச்செருக்கு கொண்டவர் கவியரசர். “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லைஎனக் கூறும் துணிவு அவருக்கு மட்டுமே உண்டு. இன்றும் எத்தனை மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

***********

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக