தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 7 ஆகஸ்ட், 2021

ஆகட்டும் பார்க்கலாம். ஆட்டத்தின் முடிவிலே - தியாகிகள்

 



ஆகட்டும் பார்க்கலாம். ஆட்டத்தின் முடிவிலே  - தியாகிகள்

 ஒரு குடிகாரன் குடித்துவிட்டு நடுசாலையில் அமர்க்களப்படுத்திக்கொண்டிருக்கிறான். கட்டுப்படுத்தமுடியவில்லை. காவல்காரர் வருகிறார். அவருடைய கையைப்பிடித்துக்கொண்டு நடனமாடுகிறான். அவருக்கு அடிக்க மனம்வரவில்லை. அடித்துவிட்டால் இறந்துவிடுவதற்கும் வாய்ப்புண்டு. குடும்பத்திற்கு யார் விடைசொல்வது என்னும் அச்சத்தின் காரணமாகவும் பொறுத்துக்கொண்டிருக்கலாம்தானே. யாருக்கும் அடங்காமல் அங்கேயே ஆடிக்கொண்டிருந்தவன் திடீரென காவலர் கையை உதறிவிட்டு ஓடினான். “என்ன ஆயிற்று?” என எல்லோரும் திரும்பிப்பார்க்கையில் அங்கு ஒருபெண்மணி தூய்மை செய்யும் ஆயுதம்தாங்கி வேகமாக முன்னேறி வருகிறாள். “யாரம்மா நீ” எனக் காவலர் கேட்க, அதோ அந்த மைக்கல் ஜாக்சனோட மனைவி என்றாள். எல்லோரும் சிரிப்பை வெளிப்படுத்தாமல் “வீட்டுக்குக் கூட்டிட்டுப்போம்மா” என்றனர். குடும்பத்திற்க்காகத் தன்னையே கரைத்துக்கொள்ளும் பெண்களுக்கு குடியின் கொடுமை வேறு. பாவம்தானே?

     டோக்கியோவில் நடந்த ஹாக்கிப்போட்டியில் முதலில் ஜெர்மன் கோல் அடித்தது. பின்னர் இந்தியர்கள் கோல் அடிக்க ஒன்றுக்கு ஒன்று எனப்புள்ளிகள் இருந்தன. அடுத்து இரண்டு கோல்களை ஜெர்மனி அடிக்கவே இந்தியா ஒன்றுக்கு மூன்று என்னும் நிலையில் பின் தங்கியது. அடுத்து, இந்தியா இரண்டு கோல்களை அடிக்கவே மூன்றுக்கு மூன்று என்றானது. அடுத்து, இரண்டு கோல்களை இந்தியா அடிக்க ஐந்து மூன்று என்னும் நிலையாயிற்று. ஜெர்மனி அணி மிகுந்த வேகத்துடன் நாற்பத்தெட்டாவது நிமிடத்தில் ஒருகோல்போட்டது. இந்தியா ஐந்து ; ஜெர்மனி நான்கு என்னும் நிலையில் இருந்தது. போட்டியைக்காண்போருக்கும் அனைவருக்கும் ஆர்வம் கூடிற்று. ஜெர்மானியர் அடித்தகோலை கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுக்கிறார். இந்திய அணியினர் வெற்றிக்கனியைப் பறித்தனர். நாற்பத்தோரு ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம். 1980 மாஸ்கோவில் தங்கம் வென்ற இந்தியா இன்று வெண்கலத்தைப் பெற்றிருக்கிறது. பதக்கக்கனவு நிறைவேறியது. தொடக்கத்தில் புள்ளிகளை இழந்தாலும் முடிவில் வெற்றி கிடைத்தது. இந்த அணியின் தலைவர் மன்பிரீத்சிங் “பதினைந்து மாதக் கடுமுயற்சியின் பலன் இது” எனக்கூறி, இந்த வெற்றியினை கொரோனோவில் மக்களைக்காத்த மருத்துவர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் காணிக்கையாக்கினார்.

     முதல் கதையில், நாயகனுக்கு முதலில் வெற்றிக்களிப்பு. பின் தோல்வி. இரண்டாவது நிகழ்வில்,  முதலில் நாயகர்களுக்குத் தோல்வி பின் வெற்றி. எது வரலாற்றில் நிலைபெறும் என்பதனை  அறிவோம்தானே. எந்தச் செயலுக்குப் பின்னால் உண்மையும் உழைப்பும் உள்ளதோ அதுவே வரலாறாகும் ; வழிகாட்டும்.

     முதலில் சிறுமையைப் பார்த்தோம் ; இரண்டாவது பெருமையைப் பார்த்தோம். இனி அருமையைப் பார்ப்போமா?

     இந்த வாரம் தாய்ப்பால்வாரம் . ஆகஸ்டு ஒன்று முதல் எட்டு வரை. தாய்ப்பாலின் அருமையினைக்கூட கொண்டாடவேண்டியிருக்கிறது. “மழை நீரைப் போற்றுங்கள்” எனக் கூறுவதைப்போல “தாய்ப்பாலினைக் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள்” எனச்சொல்லும் நிலைக்கு வந்துவிட்டது கொடுமைதானே. கலப்படப்பொருட்களை ; மசாலா பொருட்களை ; இனிப்புகளை (சாக்லெட்) ; பனிக்கூழினை (ஐஸ்க்ரீம்) தூய்மையில்லாத கடைஉணவுகளை உண்டு உடலைக்கெடுத்துக்கொள்ளும் பெண்களின் குழந்தைகள் என்ன செய்வார்கள். அத்தகைய பெண்களின் குழந்தை பாலுக்கு அழும்தானே. அத்தகைய குழந்தைகளுக்காகவே தாய்ப்பாலைச் சேமித்துவைக்கும் மருத்துவமனைகள் இருக்கின்றன. சில கொடையுள்ளம்கொண்ட தாய்மார்கள் தம்குழந்தைக்குக் கொடுத்து எஞ்சியபாலை கொடையளித்தனர் ; அளிக்கின்றனர். இந்நிகழ்வு தாயுள்ளத்தின் அருமையினை எடுத்துக்காட்டுகிறதுதானே? இது கலியுக தியாகம்.

     தாயுள்ளம் கொண்டு எத்தனையோ ஆண்கள் சமைக்கின்றனர் ; உணவிடுகின்றனர். நளபாகம் , பீம பாகம் என அவர்கள் சுவையுடன் சமைப்பதனைப் பாராட்டுவதனையும் காணமுடிகிறது. சரி அதற்கென்ன? என்றுதானே கேட்கிறீர். உணவளிப்பவரை தாயாக எண்ணுவதுதானே தமிழர் இயல்பு. அவ்வாறு எண்ணி மடிந்த வீரனைத் தெரியுமா? அவர்தான் தீரன் சின்னமலை.

     பெயரைக் கூறினாலே வீரம் பொங்கும் பெயர். சிலையைக் கண்டாலே வீரம்பொங்குகிறதே. அடுத்தமுறை தீரன் சின்னமலையின் சிலையைக் கண்டால் உற்றுப்பாருங்கள். அந்நியர்கள் அஞ்சியதில் தவறில்லை எனத்தோன்றும். திப்பு சுல்தானை வீழ்த்திய ஆங்கிலேயர்கள், தீரன் சின்னமலையை எளிதாக வென்றுவிடலாம் என எண்ணி போரிட்டனர். அறச்சலூர் போரில் தீரன்சின்னமலை கர்னல் ஹாரிஸை துரத்தியடித்தார். “இத்தகைய வீரனை எதிர்கொள்ளமுடியாது” என எண்ணிய ஆங்கிலேயர்கள் மிரண்டனர். துரோகிகள் யாரென ஆய்ந்தாய்ந்து அவர்கள்வழியாக அப்பாவித்தமிழர்களை வென்றனர் ; கொன்றனர். அப்படித்தான் தீரன் சின்னமலையின் சமையல்காரனுக்கு ஆசையைமூட்டி காட்டிக்கொடுக்கச்செய்தனர். 1805 ஆம் ஆண்டு ஜூலை முப்பத்தோராம் நாள் தீரன் சின்னமலையை உடன்பிறந்தோரையும் தூக்கிலிட்டுக் கொன்றனர். நேருக்குநேர் நின்று போர்செய்யாமல் துரோகத்தால் கொன்றவர்களை என்னென்பது?

     பக்கத்து நாடுகளில் கொள்ளையடித்துச்சென்றாலும் அவர்களைத் தடுத்து “எங்களுடைய செல்வங்களை நீங்கள் கொள்ளையடிக்கக் கூடாது” எனக்கூறி அஞ்சாமல் எதிர்நின்ற தீரம் தீரன்சின்னமலைக்கு உண்டு.  மறக்கருணையோடு அறக்கருணை கொண்டவராகவும் தீரன்சின்னமலை விளங்கினார். “சென்னி மலைக்கும் சிவன்மலைக்கும் இடையே சின்னமலை இருக்கிறது. அதுதான் செல்வங்களை எடுத்துக்கொண்டது. என உங்கள் தலைவரிடம் சொல்லுங்கள்” என வீரத்துடன் எதிரிகளை எதிர்கொண்ட பெருமையே தமிழர்பெருமைக்கு எடுத்துக்காட்டு.

     துரோகம் என்பதனை அறியாத தமிழ் மன்னர்கள் எளிதில் ஏமாந்திருக்கின்றனர். உன் மனதையே உன்னால் அறியமுடியாதபோது எப்படி எதிரிகளை அறிந்துகொள்ளமுடியும் என ஆங்கிலேயன் தூரோகத்தின் பாடத்தைக் கற்பித்தான். தமிழர்கள் அந்நியர்களுக்கு எப்படி அன்புடன் வாழவேண்டும் எனக் கற்பிக்க, அந்நியர்கள் எப்படி அன்புடன் வாழக்கூடாதெனக் கற்பித்தனர்.

     தொடக்கத்தில் எது நன்மை? எது தீமை? என்று அறியாமல் ; எந்தப்பக்கம் நிற்கவேண்டும் என்பது புரியாமல் மக்கள் தவித்தனர். ஆங்கிலேயர்களுக்கு அடிமையாகி நல்லோர்களைக் காட்டிக்கொடுப்பதா? விடுதலை வீரர்களின் பக்கம் நின்று நாட்டு விடுதலைக்காகப் போராடுவதா? என எண்ணினர். கோடாலிக்காம்புகளையும் தந்தங்களையும் ஒன்றாக ஒப்பிடுவது சரியில்லைதானே.

     இப்படி மக்களைக்காக்க தமிழ் மன்னர்களும் , மன்னர்களைக்காக்க மக்களும் போராடிய போராட்டமாகவே விடுதலைப்போராட்டம் அமைந்தது. எண்ணற்றதியாகிகளின் உழைப்பெல்லாம் வீணாகவில்லை. இன்று கல்வி கற்பதற்கும் பணிக்குச் செல்வதற்கும் முழுமையான விடுதலை கிடைத்திருக்கிறது. தொய்வின்றி உழைத்தால் வறுமை ஓடும் ; வளமை கூடும் என்பதில் ஐயமில்லை.  அவர்களுடைய வீழ்வு அடுத்த தலைமுறைக்கான வாழ்வாக அமைந்திருக்கிறதுதானே?

     ஆட்டத்தின் தொடக்கம் எப்படி இருந்தாலும் முடிவைக்கொண்டுதான் உங்கள் திறமையினை உலகம் அறியும் என வாழ்ந்துகாட்டியோர் பலர். வெற்றிபெறாதவரை வீண்முயற்சி என்பதும் வெற்றி பெற்றுவிட்டால் விடாமுயற்சி என்பதும் உலகத்தின் இயல்புதானே? எனவே தொடக்கத்தைக் குறித்த கவலையின்றி இலக்கினை அடைய துணிந்து நிற்போம் ; வழிகாட்டியாக வாழ்வோம்

    

    

வெள்ளி, 6 ஆகஸ்ட், 2021

என் மனைவி ஊருக்குப் போயிட்டா

 



“என் மனைவி ஊருக்குப் போயிட்டா”

“என் மனைவி ஊருக்குப் போயிட்டா” எனச் சொல்வதில் ஆனந்தப்படுவோர் எத்தனைபேர் . சிலபேர் மட்டுமே கை உயர்த்துகிறீர்கள். மற்றவர்கள் அமைதியாகப் பக்கத்தில் பார்க்கிறார்கள்.  கைதூக்கியவர்களின் மனைவிமார்கள் இவர்கள் பக்கத்தில் இல்லை என்றுதானே. அந்த மனைவிமார்கள் இவர்களுக்காக எதையோ வீட்டில் சமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

     மனைவி ஊருக்குச்செல்லும் நாளில்கூட, அன்றைய உணவு சமையலறையிலும் குளிரூட்டியிலும் வைக்கப்பட்டிருப்பதனைக் கூறிவிட்டேசெல்வாள். அப்படியென்றால் எத்தனை அன்பு என்பதனை எண்ணிப்பார்த்திருக்கிறீர்களா?

     பெண்ணுக்கு மட்டுமே கயிறில்லாமல் கட்டிப்போடும் வித்தை தெரிந்திருக்கிறது. அத்தகைய அறிவினைப் பெற்றிருப்பதால்தான் பெண்ணைக்கேட்டே ஆண்கள் செயல்படுவதனைக் காணமுடிகிறது.

     ஆண்கள் நடுரோட்டில் பெண்களை அடிப்பதனைப் பார்க்கமுடிகிறது. ஆனால், அத்தகைய ஆணை பெண்கள் திருப்பி அடிப்பதில்லை. காரணம் என்ன என்று யோசித்திருக்கிறீர்களா? அடியைக் கொடுப்பதைவிட அடியைப் பொறுத்துக்கொள்வதற்குத்தானே வீரம் வேண்டும்.

     விடுதலைப் போராட்டத்தைக் கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். உடல்வலிமை பெற்றிருந்தாலும் தம்மைவிட உடல்பலம் குன்றிய ஆங்கிலேயரிடம் அடிவாங்கிக்கொண்டு கொடியினைக் கூட விடாமல் “எவ்வளவு வேண்டுமானலும் அடி ; கையிலிருந்து விழாது கொடி” எனத் துணிந்து நின்றவீரம் போற்றத்தக்கதுதானே. புழு பூச்சிகூட எதிரியை எதிர்த்துப்போராடும். ஆனாலும் விடுதலை வீரர்கள் திறமை இருந்தும் ; ஆயுதம் இருந்தும் ; அடிவாங்கியது எத்தனை பொறுமை. அத்தகைய பொறுமையானகுணம் படைத்தவர்களை அடிக்க வேண்டுமென்றால் அவன் விலங்கினும் கீழாகவன்றோ இருந்திருக்கவேண்டும்.

     மனைவியை அடிப்பவனுக்கும் இது பொருந்தும்தானே. அவர்களுக்காக 1098 என்னும் எண் எப்பொழுதும் விழிப்புடன் காத்திருக்கிறது. இருப்பினும் கணவன், குடும்பம் என்னும் அமைப்பிற்காக எவ்வளவு பொறுமையுடன் புகாரளிக்காமல் செயல்படுகிறார்கள்.

     அத்தனை பொறுமையுடன் விஞ்சிநிற்பதால்தானே, குழந்தைகளுக்கு வகுப்பெடுக்க பெண்களே ஆசிரியர்களாக முன்வருகிறார்கள். ஒரு குழந்தையாக இருந்தாலும் ; ஒருவகுப்புக்குரிய குழந்தைகளானாலும் ஈடுகட்ட பெண்ணால்மட்டுமே முடிகிறது. நலமான குழந்தையானாலும் உடல்நலம் குறைந்த குழந்தைகளாயினும் செவிலித்தாயானவள் எவ்வளவு அழகாகப் பார்த்துக்கொள்கிறாள்.

      ஒரு ஆண் வெற்றிபெறுவதற்காக உழைக்கும் உழைப்பைவிட பெண்ணுக்கான போராட்டம் பெரிதுதானே. ஒரு பெண் வெற்றிபெற்றால் அது நல்லூழ் (அதிர்ஷ்டம்) எனக்கூறிவிடுவோரும் உண்டு. அதற்காக உழைத்த உழைப்பை (பெற்றோரோ/ கணவரோ) உடனிருந்தோர் மட்டுமே அறிவர். எனவேதான் ஒருமுறை வெற்றிபெறுவதனைவிட ஒவ்வொரு முறையும் வெற்றிபெறவேண்டும் என்பார் ஏவுகணை நாயகரும் முன்னாள் குடியரசுத்தலைவருமான அப்துல்கலாம்.

     விண்வெளியில் ராக்கெட்டை செலுத்துவதுபோல் ‘பெண்கல்வி’யானது பெருமுயற்சியாக இருந்தநிலைமாறிவிட்டதுதானே. அதனால்தான் நன்றாகக் கல்விகற்ற பெண்ணாயினும் கணவனின் தவறினை நேரடியாகச் சொல்வதில்லை. ஏனென்றால் அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் கணவனுக்கு இருக்காது ; இருந்தாலும் தன்முனைப்பு அவனை ஏற்றுக்கொள்ளவிடாது. அதனால்தான் ‘இவன் எது கூறினாலும் கேட்கமாட்டான்” எதற்குச்சொல்லவேண்டும் எனப் பெண்கள் அமைதியாகவே இருந்துவிடுவதனைக் காணமுடிகிறது. “தலைக்கவசம் அணிந்துகொள்ளுங்கள்” எனக் கூறினாள். “அதெல்லாம் தேவையில்லை” எனக்கூறிவிடுவான். தான் மறந்ததை ஒத்துக்கொள்ளமாட்டான். வழியில் போக்குவரத்துக்காவலரிடம் சிக்கித்தண்டம் கட்டியபிறகு அசடுவழிவான்.

     பெண்களை தேனீக்களுடன் ஒப்பிடலாம்தானே. ‘இ’கரம் பெண்பால் விகுதிதானே. ரேவதி, செல்வி, தேவி, ராணி இப்படி சொல்லிப்பாருங்கள் புரிந்துவிடும். இலக்கியப்பார்வையிலும் தேனீதான். ‘தேனீ’ எப்படி உழைக்குமோ அப்படித்தானே பெண்கள் உழைக்கிறார்கள். எந்தத் தேனீயாவது நான் இவ்வளவு கடினப்படுகிறேன் என்று கூறியதுண்டா. அது இயல்பான ஈக்களைக் காட்டிலும் கடினமாக உழைப்பதால்தானே அது கெடாத தேனை உருவாக்கிவிடுகிறது. சாகாமருந்தாகும் தேனை உணவாகக்கொடுக்கும் அரிய பூச்சாக இருக்கும் தேனீ எத்தனை அழகு. அப்படித்தானே பெண்ணும் வாழ்நாள் முழுதும் உணவினைச் சமைத்துத்தருகிறாள்.

     விடுப்பின்றி கடுப்பின்றி அடுப்பில் இடுப்பொடிய வேலைசெய்யும் துடிப்புடைய பெண்களால்தானே குடும்பம் குடும்பமாக இருக்கிறது.

     கடவுளும் மனைவியும் ஒன்றுதானே. எவ்வளவு கொடுத்தாலும் திட்டுவது அவர்களைத்தான். அவர்கள்மட்டுமே காதுகொடுத்து கேட்பார்கள், பிறரிடம் குறைகளைச் சொல்லமாட்டார்கள். அப்படியே கேட்காவிட்டாலும் அவர்களிடம் சொல்வதில் ஏதோஒரு மகிழ்ச்சி இருக்கிறதுதானே? மனக்குறை நீங்கிவிடுகிறது. தெளிவாக செயல்படமுடிகிறது.

     பெண்ணுக்காகவே வாழும் ஆண் போருக்குச் செல்கிறான். போரில் சண்டையிட்டு முகத்தில் காயப்படுகிறான். மீண்டும் தன் மனைவியின் முகத்தைக்காண வெட்கப்படுகிறான். மனைவி அவனை ஏற்பாளா? என்னும் அச்சத்துடன் ஒதுங்கி நிற்கிறான். அவன் வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்த தலைவி முன்பிருந்த காதலைவிட பல மடங்கு பெருகிய காதலோடு அவனை அணைத்துக்கொள்கிறாள். அப்படியென்றால் மனைவியின் பேரன்பு பெருமையுடையதுதானே. இக்காட்சி தமிழ் இலக்கியத்தில் களிறு என்னும் ஆண் யானையையும் பிடி என்னும் பெண்யானையையும்கொண்டு விளக்கப்படும். களிறானது போரில் எதிரிகளுடைய கோட்டையை தந்தத்தால் தகர்த்துவிடுகிறது. எதிர்த்துநின்ற யானைகளை வீழ்த்துகிறது. இதனால் தந்தம் உடைந்து அழகுகுன்றி இருக்கிறது. பிடி என்னும் தன் பெண்யானையைக் காண வெட்கப்படுகிறது. என்பது எத்தனை அழகான காட்சி. விருப்புடன் பெண்யானை நோக்குகிறது. இது எத்தனையோ பாதுகாப்புபடை வீரர்களின் வாழ்க்கை நிகழ்வுதான்.

     அத்தகைய பெண்யானையைப் போன்றவர்களே பெண்கள். எத்தனை இடர்வரினும் அன்பு நிறைந்த கணவனுடன் இல்வாழ்க்கையில் சிறப்புற்று விளங்கும்பேறு சிறப்புடையது. ஆணுக்கும் இக்கூற்று பொருந்தும் என்பதில் ஐயமில்லை.

 

     இனி “என் மனைவி ஊருக்குப் போயிட்டா” எனச் சொல்வதற்குமுன் ஒருமுறை உறவுகள் அனைத்தையும் விட்டுவந்த தியாகத்தை எண்ணிப்பார்ப்பீர்கள்தானே?

         

 

 

               

புதன், 4 ஆகஸ்ட், 2021

பிர்ஸா முண்டா - வனம் காத்த வல்லவர்

 


பிர்ஸா முண்டா 


“விடுதலை ! விடுதலை ! விடுதலை ! என மூன்று முறை சொல்லிப்பாருங்கள். உங்கள் மனம் புத்துணர்வு பெறும் முடங்கிக்கிடப்பதில் பெருமையில்லை.  உழைத்துச் சோர்வதில் சிறுமையில்லை. சந்தனம் வாழும்வரை வாசம் தருகிறது. தென்றல் வீசும்வரை இன்பம் தருகிறது. மலர்கள்  வாடும்வரை வாசம் தருகிறது. ஆறானது வாழும்வரை தாகம் தீர்க்கிறது. அப்படி வாழும்வரை , ஆறாக ; சந்தனமாக ; தென்றலாக ; மலர்களாக நாட்டின் நலனுக்காக வாழ்ந்த நல்லோர்கள் குறித்தே இன்று சிந்திக்க இருக்கிறோம்.

மகாகவி பாரதியார் பாடிய “பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர் எனப் பாடியது போலவே “நீர் நமது ; நிலம் நமது வனம் நமது” என்னும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார,.  பிர்ஸா முண்டா, மலைவாழ் மக்களில் ஒருவரான விடுதலைப் போராட்டவீரர். ராஜஸ்தான் மாநிலத்தில் மலைவாழ் மக்கள் இயக்கத்தை உருவாக்கினார். 1875 ஆம் ஆண்டு பிறந்தவர்.  சுக்ணா முண்டா, கர்மி ஹட்டு இவரது பெற்றோர்.

திறமையாகப் படித்த இவரை பெற்றோர்கள் பள்ளியில் சேர்க்க எண்ணினர். ஆனால் அங்கு படிக்கவேண்டுமானால் ஆங்கிலேயர்கள் தங்கள் சமயத்திற்கு மாறவேண்டும் எனக் கூறினர். படித்தாகவே வேண்டுமே என ‘பிர்ஸா டேவிட்’ என மாறினார். பின்னர் சர்தார் வல்லபாய்படேல் இயக்கத்தில் சேர்ந்தார். ஆங்கிலேயருக்கு அடிமையாகும் மலைவாழ்மக்களைக் காக்கவேண்டும் என எண்ணினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். 1895 ஆம்ஆண்டு தமது பத்தொன்பதாம் வயதிலேயே  மக்களைத் திரட்டிப் போராட்டத்தைத் தொடங்கினார். “ஆங்கிலேய அரசு முடியட்டும். நம் அரசு மலரட்டும்” என்பதே அவருடைய முழக்கமாக நின்றது. இத்தகைய வீர முழக்கமிட்டு ஓர் இனத்தையே நாட்டின் வளர்ச்சிக்காக வழிநடத்திய பெருமையுடைய இவருடைய படம் பாராளுமன்றத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்புதானே.

ஆங்கிலேய அரசாங்கம் எப்படியெல்லாம் நிலத்தைக் கொள்ளையடிக்கலாம் என எண்ணிக்கொண்டிருந்தது.  வாரிசு இல்லாத நிலத்தை தனக்குச் சொந்தம் என அறிவித்தது. வாரிசுகளைத் தத்து எடுக்கவும் தடைவிதித்தது. எதைப்பயிரிடவேண்டும் என ஆங்கில அரசே முடிவு செய்து மக்கள் வறுமையில் சாக வழி செய்தது.

“வனங்கள் அனைத்தும் இனி ஆங்கில அரசுக்கே சொந்தம்” என்னும் சட்டத்தைக் கொண்டுவந்தது. அதனை எதிர்த்துப் போராடியவர்தான் இந்த பிர்ஸா முண்டா. வணிகம் செய்ய வந்தவர்கள் இயற்கை அன்னை கொடுத்ததை உரிமை கொள்வது கொடுமை எனப் போராடினார். ஜமீந்தார்களையும் நிலவுடைமையாளர்களையும் மிரட்டியும் பொருள்கொடுத்தும் அச்சுறுத்தியும் தன்வசமாக்கியது ஆங்கிலேய அரசு.  “தனி மரம் தோப்பாகாது” என மக்களைத் திரட்டி நாட்டைக்காக்கப் போராடினார். மண்ணைக் காக்கப் போராடியதால் இவருடன் மலைவாழ் மக்களும் இணைந்து போராடினர். “மண்ணின் தந்தை’ எனக் கொண்டாடினர்.

ஆங்கிலேயர்கள், இந்தியர்களை எப்போதும் வெல்ல முடியாத அளவிற்கு வீரத்தில் குன்றியே இருந்தனர். ஆனால், ஆயுதங்களைக்கொண்டே இந்தியர்களை வீழ்த்தினர்.. துப்பாக்கி, பீரங்கி குறித்து அறியாத மக்களிடம் வீரத்தைக் காட்டியவர்கள் ஆங்கிலேயர்கள். அறநெறியாகப் போர்செய்தே பழக்கப்பட்ட இனமாக இருந்த இந்தியர்கள், அக்காலத்தில் புதிதாகக் கண்டுபிடித்த இத்தகைய வெடிக்கும் ஆயுதங்களைப் புரிந்துகொள்ளமுடியாமலே தோற்றனர். இதனைக் கண்டு பலரும் அஞ்சினர். அஞ்சுவது இயல்புதானே. ஆனால் அஞ்சாது போராடிய வல்லவர்களும் இருந்தனர். அவர்கள் முண்டாவுடன் இணைந்து போராடினார். 1899 ஆம் ஆண்டு கொரில்லா முறையில் ஆங்கிலேயர்களை எதிர்கொண்டனர். தம்மிடமிருந்த வில், அம்புகளைக் கொண்டு போராடினர்.  ‘உல்குலான்; என இப்போர் அழைக்கப்பட்டது.  உல்குலான் என்பது புரட்சியைக் குறிக்கும். 1990 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் நாள் இவரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். கொடுமையாகத் தண்டித்தனர்.

ஆங்கிலேயர்கள் மக்களை அச்சுறுத்தசெய்த முதல் காரியம், மக்களிடம் செல்வாக்கு மிகுந்தவர்களை மிகவும் இழிவாக நடத்துவது. சாலையில் ஆடைகளின்றி அடித்து இழுத்துச்செல்வது, சாட்டையால் அடிப்பது, எட்டி உதைப்பது, மக்களுக்கு நடுவே தூக்கிலிடுவது. தலையை வெட்டுவது எனப் பல கொடுமைகள் செய்தனர். ஒவ்வொரு ஊரிலும் எதிர்த்த அல்லது ஒன்றுகூட்டிய தலைவர்களையே இவ்வாறு கொடுமை செய்தனர். ஆனால், நயவஞ்சகமாகச் சிலர் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து சொந்த தாய்நாட்டுக்கு எதிராக நின்றனர் ; வீரத்துடன் போராடிய தலைவர்களைக் காட்டிக்கொடுத்து பணத்தையும் ; பதவியையும் பெற்றனர். அத்தகைய துரோகிகளால் வீரர்கள் தோல்வியடைந்தனர் ; உயிரிழந்தனர்.

சிறையில் கொடுமைக்குள்ளான அவ்வீரர் இரத்த வாந்தியெடுத்து கடும் நோயால் பாதிக்கப்பட்டார். இக்கொடுமைகளால் இறந்ததனை மக்கள் அறிந்தால் போராட்டம் எழக்கூடும் என எண்ணிய ஆங்கில அரசு “காலரா பெருந்தொற்று நோயால் இறந்தார்” என அறிவித்தது. அப்போது அவருடைய வயது இருபத்தைந்துதான். இருபத்தைந்து வயதிலேயே நாட்டுப்பற்று கொண்டு மக்களின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களைப் போற்றுவது நம்கடமைதானே. அவர் அன்றுபோராடியதால்தான், பஞ்சமர் நிலத்தை யாரும் கையகப்படுத்தக்கூடாது என்னும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. உழைப்பவனுக்கே நிலம் சொந்தமாக வேண்டும் எனவும் போராடியவர்.

       நம்முடைய நாடு எத்தனை ஆண்டுகள் ஆயினும் இத்தகைய பொன்னான மனிதர்களின் உழைப்பினைப் போற்ற மறந்ததில்லை. இன்று அவருடைய பெயரில் கல்லூரி திறக்கப்பட்டிருக்கிறது. ஜார்கண்ட் விமான நிலையத்துக்கே அவருடைய பெயர்தான் சூட்டப்பட்டிருக்கிறது.

நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம் – இது

நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம்

என்னும் மகாகவியின் சொற்களுக்கு செயல்வடிவமாக நின்றவர் இந்த பிர்ஸாமுண்டா. தேசத்தைக்காக்கப் போராடியமுன்னோர்களைப்போல் தேசத்தின் வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்.

       மானம் மட்டுமல்ல தேசமும் உயிரை விடப்பெரிது என்பதனை உணர்த்துவோம்.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

நீங்கள் யார்?

 


“நீங்கள் யார்?”

“நீங்கள் யார்?” என்று யாராவது கேட்டால் என்ன சொல்வீர்கள். வீட்டில் வந்துகேட்டால் “நான் இன்னாரது மகன் அல்லது மகள் ; இன்னாரது தந்தை அல்லது தாய்” என்று யாரேனும் ஒருவரை மையமிட்டு அடையாளம் காட்டுவீர். சாலையில் கேட்டால், கேட்பவர் யாரென்று பார்த்து, “எதற்காகக் கேட்கிறீர்கள்” எனக் கேட்பதுண்டுதானே? அவர் பணம் கொடுப்பவராக இருந்தால் விருப்பாகவும் ; பணம் கேட்பவராக இருந்தால் வெறுப்பாகவும் விடை சொல்வதும் இயல்புதானே. காகிதப்பணம்தான் குணத்தைத் தீர்மானிக்கும் திறமுடையதாக இருக்கிறது. ஒரு அலுவலகத்தில் இதே கேள்வியைக் கேட்டால் “இந்தப் பதவி” எனக்கூறுவதனையும் காணமுடிகிறது. கையூட்டு பெறுபவர்தான் பதவியினையும் பெயரினையும் சொல்ல அஞ்சுவர். அதனால்தான் யாரேனும் தவறுசெய்தால்,  “உன் பெயர் என்ன?” என்று  கேட்டுப்பாருங்கள். உடனே, கோபம் பலூனில் வெடித்துவரும் காற்றுபோல் “ஏன்…கேட்கிறாய்?” என வேகத்துடன் ஒலிக்கும்.

“நீங்கள்” என்பது அத்தனை வலிமையுடைய சொல். உங்கள் ஊரிலிருந்து நகரத்திற்குச் செல்லும்போது “நீங்கள் யார்?” எனக் கேட்டால்  என்ன சொல்வீர்கள். ‘இந்த ஊரன்” எனச் சொல்வீர். வேறு மாநிலத்திற்குச் சென்றிருக்கிறீர். என்ன சொல்வீர்?. “இந்த மாநிலத்தன்” என்று சொல்வீர். வேறு நாட்டிற்குச் சென்றிருக்கிறீர். என்ன சொல்வீர். உங்கள் நாட்டின் பெயரைத்தானே சொல்வீர். அப்படியென்றால் உங்களுடைய பெரிய அடையாளம் உங்கள் நாடுதானே? அந்த நாட்டை நீங்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கிறீரா?. ‘இல்லை’ என்றாலும் ‘ஆம்’ என்றாலும் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க. எத்தனை மதிப்பெண் என்று கேட்கிறீரா? ஒவ்வொரு வினாவிற்கும் பத்து மதிப்பெண் போட்டுக்கொண்டு எத்தனை மதிப்பெண் என நீங்களே கணக்கிட்டுக்கொள்க. அந்த மதிப்பெண்தான் உங்களுக்குரிய மதிப்பெண். மதிப்பெண் கூடுதலாக இருந்தால் நீங்கள் உங்களை பெருமிதமாகக் காட்டிக்கொள்வதில் வல்லவர் என நீங்களே தோளில் தட்டிக்கொள்ளுங்கள். மதிப்பெண் குறைவாக இருந்தால், நேர்மையாக ஒப்புக்கொண்ட உம் நற்குணத்திற்காக நீங்களே உங்களைப் பாராட்டிக்கொள்ளுங்கள்.

வினா 1. உங்களுடைய நாடு இறைமை நாடு – அப்படியென்றால்?

“இறைமை” என்பது இத்தகைய பெருமை உடையது என வரையறுக்க இயலாத பெருமையினை உடையது. தானேதன்னை இயக்கிக்கொள்ளும் முழுமையினை உடையது. பிறநாடுகளின் தலையீடு இல்லாமல் முழுமையாகச் செயல்படும் திறமுடையது

வினா -2 : உங்கள் நாடு குடியரசு நாடு - அப்படியென்றால்?

குடிமக்களால் இயக்கப்படுவது. குடிமக்களே தம் தலைவரைத் தேர்வுசெய்து ஆளச்செய்வது. பரம்பரையால் வருவதில்லை.

வினா -3 : உங்கள் நாடு பொதுவுடைமை நாடு – அப்படியென்றால் ?

தன்னுடைமைக்கு எதிரான சொல் பொதுவுடைமை. தனக்காகப் பொருளைவைத்துக்கொள்ளாமல் அனைவருடனும் பங்கிட்டுக்கொள்வது.

வினா -4 : உங்கள் நாடு மதச்சார்பற்ற நாடு – அப்படியென்றால்?

அனைத்து மதத்தினருக்கும் ஒரே வகையான உரிமையினையும் சுதந்திரத்தையும் அளிப்பது.

வினா -5 : உங்கள் நாடு சமத்துவத்தைப் பின்பற்றும் நாடு – அப்படியென்றால்?

சாதி, மதம், நிலை என எவ்வகை வேறுபாடுமின்றி ஒரே நிலையில் அனைவரையும் நோக்குவது.

வினா -6 : உங்கள் நாடு அரசியல் உரிமை உடைய நாடு – அப்படியென்றால்?

எத்தகைய மனிதராக இருந்தாலும் அவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு. ஒவ்வொரு ஓட்டிற்கும் சமமான மதிப்பெண் அளிக்கப்படுவது.

வினா – 7 : உங்கள் நாடு நீதிமன்றத்தையே உச்சநிலையாகக் கொண்டு செயல்படுவது – அப்படியென்றால்?

அனைவர்க்கும் அரசியல் நிர்ணயச்சட்டத்தின்படி ஒரே வகையான நீதியினை வழங்குவது.

வினா – 8 : உங்கள் நாடு சகோதரத்துவத்தைப் பின்பற்றுவது – அப்படியென்றால்?

அனைத்து மக்களையும் உடன் பிறந்தவராக எண்ணி அன்பு பாராட்டுவது.

வினா- 9 : மக்களாட்சியை மூன்று தூண்களே தாங்கிக்கொண்டிருக்கிறது . அப்படியென்றால் ?

சட்டமன்றம், நீதித்துறை, நிர்வாகத்துறை என மூன்றும் மக்களைக் காக்கச் செயல்படுவது.

வினா – 10 : உங்கள் நாட்டிற்கென ஒரு உறுதிமொழி உண்டு – அப்படியென்றால்?

இந்தியா என் நாடு . இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்.

என் நாட்டை நான் பெரிதும் நேசிக்கிறேன். இந்நாட்டின் பழம்பெருமைக்காகவும், பன்முக மரபுச்சிறப்புக்காகவும் நான் பெருமிதம் அடைகிறேன். இந்நாட்டின் பெருமைக்குத் தகுந்து விளங்கிட என்றும் பாடுபடுவேன். என்னுடைய பெற்றோர், ஆசிரியர்கள் எனக்கு வயதில் மூத்தோர் அனைவரையும் மதிப்பேன். எல்லோரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன். என் நாட்டிற்கும் என் நாட்டும் மக்களுக்கும் உழைத்திட முனைந்து நிற்பேன். அவர்கள் நலமும் வளமும் பெறுவதிலேதான் என்றும் மகிழ்ச்சி காண்பேன். ஜெய் ஹிந்த்.

இப்போது நீங்கள் நூற்றுக்கு நூறு பெற்றிருந்தால் உங்களுடைய மதிப்பினை நீங்கள் முழுமையாக உணர்ந்துவிட்டீர்கள். அப்படி உங்கள் குழந்தைகளையும் பெரியோர்களை மதித்து வாழக் கற்றுக்கொடுத்துவிட்டால்போதும். நாட்டில் சோம்பல் இருக்காது ; குடி இருக்காது ; முதியோர் இல்லம் இருக்காது ; வறுமை இருக்காது.

இந்தக்கருத்துக்களை எல்லாம் குழந்தைகள் காதில் நூல்போல் நுழையவிடுங்கள். அவர்கள் ஆடையாக்கி தங்கள் மானத்தைக் காத்து நாட்டையும் காத்துவிடுவார்கள்.

வறுமை நிலையில் வளர்ந்த குழந்தைகள் எல்லாம் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு நாட்டுக்குப் பெருமை தேடித்தந்துள்ளார்களே. சில குழந்தைகள் வறுமை நிலையிலிருந்து ஆட்சியராக, பட்டயக்கணக்கராக, மருத்துவராக வந்தார்கள் ; வருகிறார்கள் ; வருவார்கள். உங்கள் குழந்தையையும் அப்பெருமைக்குரியவரில் ஒருவராக மாற்றலாம்தானே? மாற்றிவிட்டால் நீங்கள் நீங்கள் தான்.

 

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

உழவு மட்டுமில்லை நலிந்தது

 


உழவு மட்டுமில்லை நலிந்தது

     தாய்மொழியில் பாடங்களைக் கற்பிக்கவேண்டும் என்று சொல்லாதவர் எவரேனும் உண்டா? எல்லோரும் அதற்காகப் பாடுபடுகிறார்கள். ஆனால் நடைமுறையில் நடைபெறவில்லை. எப்படி? இதற்கான சதியில் பின்னால் இருந்து யாரோ தடுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பது வெள்ளிடைமலை. உணவில் உப்பு போன்றது, சமூகத்தில் கல்வி. அது இல்லாவிட்டால் வாழ்க்கை சுவைக்காது. ஆனால், உப்பு என்பது கெடுதியானது. உயிருள்ள நுண்ணுயிரிகளைக் கொன்றுவிடுகிறது. அதனால்தன் இறந்தவற்றைக் கூட கெடாமல் வைத்திருக்க உப்பு பயன்படுத்தப்படுகிறது. அந்த உப்பிலும் கல் உப்பா? பொடி உப்பா? எனக் கேள்வி கேட்டு ஒவ்வொரு நாளும் இது நல்லது ! அது நல்லது ! என மக்களைக் குழப்பிவிடும் நிலையினையும் காணமுடிகிறது. யார் என்று கேட்கிறீர்களா?

இன்று வீட்டில் பெரியவர்கள் இருந்தால் பெரியவர்கள் சொல்வதைக் கேட்போம். வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் முதியோர் இல்லங்களிலும் வீட்டு மூளைகளிலும்  முடங்கித்தானே கிடக்கிறார்கள். அவர்களுக்குரிய மதிப்புடன் அவர்கள் மதிக்கப்படுகிறார்களா? இல்லைதானே. அப்படி மதிப்பதாயிருந்தால் உலகம் வெப்பமயமாகி இருக்காது ! வெள்ளம் ஊருக்குள் புகுந்திருக்காது ! முப்போகம் விளைவது கனவாகி இருக்காது ! உழவு நிலம் வறண்டிருக்காது ! உழவன் வறுமையில் உழன்றுக்கொண்டிருக்கமுடியாது ! குளங்களில் வீடுகள் கட்டப்பட்டிருக்காது ; தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்காது. இன்னும் எத்தனையோ காதுகள் சொல்லலாம். ஆனால், காது கொடுத்து கேட்பவர்கள் எத்தனை பேர்?. உங்களைப்போல் சில நல்லவர்களைத் தவிர.

உழவுத்தொழில் வேர். மற்றவை கிளைகளும் இலைகளும். மற்றதொழில்களுக்கு அடிப்படையாக வேர் போன்ற உழவுத்தொழில் உணவிடும். மற்ற தொழில்கள் இலைகள் பச்சையம் சேர்ப்பதுபோல் சேர்த்து வேருக்குப் பலம் சேர்ப்பதுபோல் உழவைக் காக்கவேண்டும். ஆனால், செய்கிறதா? அனைத்துத் தொழில்களும் வானைத் தொட முயற்சிக்கின்றனவே அன்றி உழவுத்தொழிலைக் கவனிக்க மறந்துவிட்டது.  கதிரவன் எழும் முன்னே எழும் கதிரவன்கள் உழவர்கள்தானே. மற்றவர்கள் எவ்வெவ்வாறோ வளர்ச்சியடைந்துவிடும்போது உழவர்கள் மட்டும் எப்படி ஏழையாகவே இருக்கிறார்கள். எண்ணிப்பார்க்கவேண்டும்தானே? இதற்குப் பின்னணி என்ன?

அன்றைய இளைஞர்கள் தலைவர்கள் அழைத்த பாதையில் சென்று நாட்டு விடுதலைக்குப் போராடினர். விடுதலை பெற்றனர். பின்னர் இளைஞர்களுக்கு என்ன வேலை? புதிது புதிதாகத் தொழில் தொடங்கினரா? மகாகவி பாரதியார் கூறிய ‘ஆலை அமைப்போம்.. ஊசிகள் செய்வோம்” என்றெல்லாம் பாடினாரே. எத்தனை இளைஞர்கள் முன் வந்தார்கள். நாட்டில் சட்டங்களும் வாய்ப்புகளும் குவிந்துகிடக்கின்றன. முன்வரவேண்டியது யார் பொறுப்பு? இன்றைய இளைஞர்களுக்குத் தலைவர்களாக திரைநாயகர்களே இருக்கிறார்கள். அவர்கள் கூறினால்தான் ஒரு தொழிலைத் தொடங்குவார்கள் என்னும் நிலையில் இருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இதை உணர்ந்து நாயகர்கள் தொழிற்சாலைகளை உருவாக்கச்சொல்லலாம்தானே? எல்லைகளில் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான பொருட்களை வாங்கிக்கொண்டிருப்பதுதான் இன்றைய கவலைக்குரிய நிலை. நாமே எதிரிக்குக் காசு கொடுத்தால் என் செய்வது? இதற்குப் பின்னணியில் இருப்பதுயார்?

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் யார் இத்தகைய செயல்களுக்கு எல்லாம் பின்னால் இருந்துகொண்டு செயல்படுவார்கள் என்று. ஆம், நாட்டிற்கு எதிரானவர்கள்தான். “அவர்கள் யார்?” என்று கேட்கிறீர்களா? எந்த நாட்டிலெல்லாம் தங்கள் பொருட்களை விற்பனையாக வேண்டும் என எண்ணுகிறார்களோ, எங்கே நம் நாடு வளர்ந்துவிட்டால் அவர்கள் வருமானம் குறையும் என்று நினைக்கிறார்களோ அந்த நாடுகள்தான். அவர்களே, நம் நாட்டில் உள்ளவர்களை சோம்பேறிகளாக ; போதைக்கு அடிமைகளாக ; குடிகாரர்களாக ; புகைப்பவர்களாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். பசியை மறக்க இப்பழக்கத்திற்கு அடிமையானவர்களையும் பார்த்திருக்கிறேன். அவர்களையெல்லாம் காப்பாற்றுவது யார்? இளம் வயதிலேயே போதைப்பொருட்களில் சிக்கிக்கொண்டு இறப்பவர்களைக் காப்பாற்றுவது யார்? அவர்களின் குடும்ப உறுப்பினர்களைக் காப்பது யார்? அநாதைக் குழந்தைகளை உருவாக்கும் சூழலை உருவாக்குவது யார்? இந்த இத்தனை யாருக்குப் பின்னும் பெருமுதலைகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. விழிப்புணர்வோடு பாருங்கள்.

நம் நாடு முதலிடத்தில் வந்துவிடக்கூடாதென எண்ணும் கயவர்களே அவர்கள். நாளிதழைப் புரட்டிப்பாருங்கள். சொத்தினைக் கேட்ட மகனைக் கொன்ற தந்தை ; குடிகாரக் கணவனைத் திருத்தமுடியாமல் தாயும் மகளும் தற்கொலை ; குடிப்பதைக் கண்டித்ததால் கணவன் தற்கொலை என ஒரே நாளில் ; ஒரே பக்கத்தில் வெளிவந்த செய்திகள்தான் இவை. இப்படி இறப்பவர்கள் பெரும்பாலும் இருபது முதல் நாற்பது வயதுக்குள் இருப்பவர்கள் தான். யாரால் உலகில் உள்ள நாடுகள் அனைத்து வளம் பெற்றுக்கொண்டிருக்கிறதோ அத்தகைய மக்களை தெருக்களில் மயங்கிக்கிடக்கவைத்திருக்கிறது அந்நியரின் ஆளுமை.

எப்போதிலிருந்து தொடங்கியது எனக் கேட்கிறீரா? இதற்கு இயற்கை வேளாண் அறிஞர் காலஞ்சென்ற நம்மாழ்வாருடைய சொற்களைச்சொல்கிறேன், எளிமையாகப் புரிந்துகொள்வீர்.  “ஆங்கிலேயர்கள் பாலில் தண்ணீரைக் கலக்க மாவினைக் கண்டுபிடித்தார்கள். ஆனால், தமிழர்கள் பாலில் தண்ணீரைக் கலந்துகுடித்தார்கள். தமிழர்களின் அறிவுத்திறத்தைக் கண்டு வியந்த ஆங்கிலேயன் மாட்டின் வளத்தை அறிந்தான். இதனால்தான் இவர்கள் எவ்வளவு பஞ்சத்தை உண்டாக்கினாலும் நன்றாக விளைவித்து உடம்பைத் தேக்குபோல் வைத்திருக்கிறார்கள் என எண்ணுகிறான். எனவே, மாடுகளைக் கொல்வதற்கென்றே சாவடிகளைக் கொண்டுவருகிறான். நாடுமுழுதும் இலட்சக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டன. மாடுகள், மனிதர்கள் எதைத் தின்பதில்லையோ (புல், வைக்கோல்) அதனைத் தின்று குழந்தைகளுக்குப் பால்கொடுத்தன. மாடுகளைக் கொன்றபிறகு போனவை: குழந்தைகளுக்குப் பால் போனது ; பயிர்களுக்கு எரு போனது ; ஏர் உழும் உழவு போனது. வந்தவை : டிராக்டர் வண்டி , புகை, டீசல் எரிபொருள், குப்பை குவிதல், எந்திரங்கள். இவை அனைத்தும் இயங்க மின்சாரம். இவை அனைத்திலும் எவ்வளவும் பணம். எவ்வளவு சிக்கல்கள். இத்தனை சிக்கல்களையும் தீர்க்கும் ஒரே தீர்வாக மாடுகள் இருந்தன. அவை மிகவும் நன்றியுணர்வுடன் தன்னை வளர்ப்பவர்களுக்குத் துணைசெய்ய வருடந்தோறும் கன்றினைக்கொடுத்தது. அந்தக் கன்றினைக்கொன்று பொள்ளாச்சியில் பஜ்ஜி செய்துவிடுகின்றனர் ; அப்படியும் விலைபோகாவிட்டால் கேரளாவுக்கு அடிமாட்டுக்கு விற்றுவிடுகின்றனர். குருடனிடம் அரிக்கன் விளக்கு கிடைத்தது போல் ஆகிவிடுகிறது” என உழவுத்தொழில் நலிந்ததற்கான காரணத்தைத் தெளிவாகவும் வருத்தத்துடனும்  குறிப்பிட்டுள்ளார்.

அன்று இந்தியாவிற்குள் அவர்கள் நின்றுகொண்டு கெடுத்தார்கள். இன்று அவர்களுடைய எந்திரங்களும் பொருட்களும் எடுபிடிகளும் கெடுத்துக்கொண்டிருக்கின்றன.

விழிப்புணர்வுடன் வாழ்ந்தால்தான் உழவர்களைக்காக்கமுடியும். மாடுகளைப் பெருக்குவோம் ; உழவுத்தொழிலைப் பெருக்குவோம் ; பிற தொழில்களை உருவாக்குவோம். அதுவே நம் கடமை.