தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 9 மே, 2021

தமிழே முதல்மொழி – தமிழா ! நீ விழி – Tamil Language is the world’s first Language.

 


தமிழே ! அமுதே ! அழகிய மொழியே ! எனதுயிரே 

    தமிழ்மொழி உலகின் முதல்மொழி என்பதற்கான சான்றுகள் காலந்தோறும் கிடைத்துவருகின்றன. மன்னர் காலத்துச் செப்பேடுகள், கோட்டை, கோவில் கல்வெட்டுகள் முதலாக இன்று கிடைக்கும் காலடி அகழ்வாய்வுகள் வரை சான்றுகள் கொட்டிக்கிடக்கின்றன. உங்கள் மொழி பழமையானதா? இல்லவே இல்லை என ஒன்றும் தெரியாதவர்களெல்லாம் எளிதில் தமிழரின் பெருமையை மறைத்துவிடுகின்றனர் ; மறுத்து வருகின்றனர்.

    தமிழ் மூத்தமொழி என ஒத்துக்கொள்வதில் உலகத்தவர்க்குத் தயக்கம் உண்டு. அத்தயக்கத்தை நீக்குதல் ; உரிய சான்று அளித்தல் , தமிழர் கடன். நம் தாயின் பெருமையினைச் சொல்வதற்கே நாமே தயங்குவது எத்தனை இழுக்கு. சொல்லத்தெரியவில்லையெனில் எத்தனை அறியாமை? இளைய தலைமுறையினரிடம் கேட்டுப்பாருங்கள். விழிப்பார்கள். அவர்கள் சொல்வதற்கு என்ன கற்றுக்கொடுத்திருக்கிறோம்? யாரிடம் பிழை? இக்குறையை நீக்கவேண்டுமெனில் ஒவ்வொரு கோவில் கல்வெட்டுக்களையும் ஆய்வு செய்யவேண்டும். ஆவணங்களை ஆய்வு செய்யவேண்டும். இலக்கியத் தரவுகளை ஆய்வுசெய்ய வேண்டும்.  இப்பணிகளை மேற்கொண்டால் உலகறியச் செய்ய இயலும்

    சரி, இத்தனைப் பணிகளையும் ஒவ்வொரு தமிழரும் செய்யத்தொடங்கினால் என்னாகும்? தமிழின் அருமையினை உலகம் அறியும். உலகமே தமிழைக்கற்க வேண்டிய சூழல் உருவாகும்?.  தமிழர் உலகாளும் சூழல் உருவாகிவிடுமோ? என்னும் அச்சமும் கூட இப்பணிகளைச் செய்யத்தூண்டாமல் இருக்க காரணமாக இருக்கலாம்தானே.

ஓலைச்சுவடிகளின் அருமையினை அறிந்தும், கோவில் சிலைகளின் அருமையினை அறிந்தும் எத்தனை வெளிநாட்டினர் அதனைக் கடத்திச்சென்றுள்ளனர். எத்தனையோ மருத்துவச் சுவடிகள் எல்லாம் கோடிக்கணக்கான பணம் கொடுத்து அந்நிய நாடுகள் போட்டிபோட்டு வாங்கிக்கொள்கின்றன. அந்த ஓலைச்சுவடியின்படி மருந்து தயாரித்து நமக்கே அவை விற்றுவருவதனையும் காணமுடிகிறது.

அப்படி எத்தனையோ நாடுகளில் எத்தனையோ சுவடிகள், எத்தனையோ சிலைகள் பாதுகாப்பாகத்தான் இருக்கின்றன. வெளிநாட்டார் தமிழர்கள் செய்த சிலையின் அருமையினை உணர்ந்தே அதனை வாங்கிக்கொள்கின்றனர். அவர்கள் வாங்காவிட்டால் இங்கு ஏன் சிலை திருடுபோகிறது. அத்தனையும் பொக்கிஷங்கள். தமிழரின் கலை வடிவங்கள். காக்கவேண்டியது நம் கடமை. இதனை உணர்தலே தமிழரின் தலையாய கடன். இதையெல்லாம் பலமுறை கேட்டு, காது புளித்துவிட்டது என்கிறீர்களா? நாக்கு தானே புளிக்கும். காது எப்படி புளிக்கும்?. எனக்கேட்டால் உங்களுக்குக் கோபம் வருகிறது இல்லையா? இந்த மரபு கூட தெரியாத இவனிடம் பேசினோமோ என்று. உண்மைதான் மரபு தெரியாவிட்டால் முட்டாளாகிவிடுவோம். அதனால்தான் ஒவ்வொருவரும் நம் மொழியைப் பாதுகாக்கவேண்டும் ; போற்றவேண்டும்.

    தமிழ் மூத்தமொழி என்பதற்கான சான்றுகள் என்ன? அதனை முதலில் சொல் என்கிறீர்களா? ஒரு சான்று கொடுத்தால்போதும்தானே. பிறவற்றைத் தாங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள்.

    உலகிலேயே பழமையான மொழி கிரேக்கம்,  அம்மொழியில் தமிழின் தாக்கம் மிகுதியாக உள்ளதெனில் என்ன பொருள் தமிழ் அதனைவிட மூத்த மொழி என்பதுதானே?

    ‘எறி திரை’ என்னும் கடலை ‘எறுதிரான்’ என்றும்

    ‘நீர்’  என்னும் தண்ணீரை ‘நீரியோஸ்’ என்றும்

    ‘நாவாய்’ என்னும் கப்பலை ‘நாயு’ என்றும்

    ‘தோணி’ என்னும் படகினை ‘தோணீஸ்’ என்றும்

கிரேக்கச்சொற்கள் தமிழ்மொழியிலிருந்து சிறிய மாற்றத்துடன் வழங்கப்படுவதனை ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.

    இனியேனும், தமிழர்கள் தங்கள் மொழியின் முதன்மையை உலகறியச் செய்யலாம்தானே?

சனி, 8 மே, 2021

சிலப்பதிகாரம் - தமிழ்த்தாயின் சிலம்பு -Cilappathikaram - An ornament of Tamil Mother

 


மதுரையை எரித்த மல்லிகை

        என்றும் நிலைத்திருக்கும் அதிகாரம் சிலப்பதிகாரம்தானே. மற்ற அதிகாரங்கள் மாறிக்கொண்டே இருக்கும். தமிழரின் பெருமைகளைக் காத்து நிற்கும் ஐம்பெருங்காப்பியங்களுள் தலை சிறந்ததாகத் திகழ்வது சிலப்பதிகாரம். தமிழ்த்தாத்தா உத்தமதானபுரம் வெங்கடப்பர் மகனாகிய சாமிநாதர் தான் 1892 ஆம் ஆண்டு ஓலைச் சுவடியில் இருந்த சிலப்பதிகாரத்தை நூல்வடிவில்  கொண்டு வந்து தமிழரின் பெருமைகளை ஆவணப் படுத்தினார். “என் உயிரைவிட தமிழ் பெரிது” எனத் தமிழ்ச்சுவடிகளைக் காப்பதற்காக பல ஆபத்தான சூழ்நிலைகளைக் கடந்தவராயிற்றே. “தமிழுக்காக உயிரையும் கொடுப்பேன்” என்று பேசும் வழக்கம் இவரிடமிருந்தே வந்திருக்கவேண்டும். ஓலைச்சுவடியைக் காக்க ஒவ்வொரு ஊராக இரவுபகல் பாராது எத்தனையோ இடங்களுக்குச்சென்று சேகரித்தார். பின் இரவுபகல் பாராது படி எடுத்தார்.  அவரைத் தமிழ்த்தாத்தா என்பது மிகவும் பொருத்தம்தானே. அவருடைய சொத்தை அல்லவா இன்றும் நாம் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். அத்தகைய சொத்துக்களுள் சிலப்பதிகாரம் மிக்க சிறப்புடைத்து.

 

        சிலப்பதிகாரம் – சிலம்பினால் அதிகரித்த கதை மட்டுமல்ல. சிலம்பினால் அதிகாரம் பெற்ற கதையும் கூட. அதனால் தான்  காலாட் படை, குதிரைப் படை , யானைப் படை , தேர்ப்படை,  என எப்படையாலும் வெல்ல முடியாத பாண்டியன் நெடுஞ்செழியனை சிலம்பு வென்றது. அதுவும் போரால் அல்ல ஊழால். ஊழ் வினை மன்னனேயாயினும் விடுவதில்லை என்னும் அறத்தினை உணர்த்தி அறத்துடன் வாழ வழி காட்டுவதே சிலப்பதிகாரம்.

 

        காப்பியத்தின் பண்பு அறவழியில் நின்று பொருள் ஈட்டி இன்பம் துய்த்து வாழ வேண்டும் என்பதே. அவ்வாறு வாழ வழிகாட்டுவதுதான் சிலப்பதிகாரம்.  ஒருவர் அறவழியில் நிற்க வேண்டுமாயின் என்ன செய்ய வேண்டும்?.  ஒரு தாய் குழந்தைக்கு சோறு ஊட்ட வேண்டுமானால் என்ன சொல்லிச் சோறூட்டுகிறாள். நீ ஒழுங்காகச் சாப்பிடவில்லை என்றால் அஞ்சுகண்ணன் வந்து பிடித்துக்கொள்வான். பூதம் வந்து பிடித்துக்கொள்ளும் எனப்பொய்சொல்லி அச்சமூட்டித் தன்  குழந்தையை உண்ண வைப்பாள். அது போல மற்றொரு தாய், சாலையில் சென்றால் ஏதாவது வண்டி வந்து இடித்து விடும். கவனமாகப் பார்த்துச் செல்ல வேண்டும் என உண்மையைக் கூறி  அறிவுறுத்துகிறாள். அப்படித்தான் இளங்கோவடிகளும் தாய் போல நின்று வாழ்க்கை என்னும் பாதையைக் கடக்க கவனமாகச் செல்ல வேண்டுமென, சேய் போன்ற தமிழர்களுக்கு  ஊழ்வினையின் வழி நின்று வழி காட்டுகிறார்.

 

        நீங்கள் செய்யும் ஒவ்வொரு வேலையும் அதற்கான பலனை உங்களுக்குத் தருவது உறுதி. எனக் கூறி எல்லோரையும் நல்வழிப் படுத்த வேண்டும் என எண்ணுகிறார். அதன் விளைவாகவே இந்தக் காப்பியத்தில் மூன்று உண்மைகளை முன் வைக்கிறார்.

 

1. அரைசியல்பிழைத்தோர்க்குஅறங்கூற்றாகும் ,

2. உரைசால்பத்தினியைஉயர்ந்தோர்ஏத்துவர்

3. ஊழ்வினைஉருத்துவந்துஊட்டும். என்பன.

 

        ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் வீடு நன்றாக இருக்க வேண்டும். வீடு நன்றாக இருக்க வேண்டுமானால் அந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் நன்றாக இருக்க வேண்டும். அப்படி ஒவ்வொருவரும் ஒழுக்கத்துடன் வாழ வேண்டுமானால் எல்லோரையும் வழிப்படுத்திக் கொண்டிருக்க ஒருவரால் மட்டுமே முடியும்.  நான் என்பவரே அவர். அவரவர் அவரவர்களையே திருத்த முயன்றால் மட்டுமே சமூகத்தில் குற்றம் நிகழாமல் பார்த்துக்கொள்ள முடியும் அந்த உணர்வை ஊட்டுவதற்குத் தான் நமக்கு ஒரு வழிகாட்டித் தேவைப்படுகிறார். அவர் தான் இளங்கோவடிகள். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட ஆயுதம் தான் ஊழ்.

இத்தனையும் கற்பித்த தமிழை நாம் மகிழ்ச்சியுடன் கற்கலாம் ; கற்பிக்கலாம்தானே.

       தமிழ்த்தாய் நம்மை வளர்க்க எவ்வளவு பாடுபட்டாள். ஆனால் நாம் தமிழைக் காக்க என் செய்கின்றோம். சிலம்பு அணிந்த கால்களுக்கு விலங்கைப்பூட்டிச் சிறையிலிட்டோம். தமிழ்க்குழந்தைகள் தமிழின் வழி ஆங்கிலம் கற்கும் நிலை மாறிற்று. ஆங்கிலத்தின் வழியே தமிழைக் கற்கின்றனர். 'ஆறாம் வாய்ப்பாடு சொல்' என்றால் புரிந்துகொள்ளமுடியவில்லை. 'சிக்ஸ்த் டேபிளா' எனக் கேட்கிறார்கள். எத்தனை இடர்ப்பாடு. 

     ஒருகதை தான் நினைவுக்கு வருகிறது.  ஐம்பது வயது மகன் நொறுங்கி வளைந்த தட்டில்  இரண்டுபிடி சோறு, ஒரு ஓரத்தில் சாம்பார், ஒரு ஓரத்தில் ரசம், மற்றொரு ஓரத்தில் தயிர் என ஊற்றி, மீதமிருந்த இடத்தில் தொடுகறியோடு கொண்டு சொல்கிறான். பொறுப்புணர்வோடு அல்ல ; கடமைக்காக. அந்தத் தட்டினை, பக்கத்து அறையில் கட்டிலில் காத்திருந்த எண்பது வயது தாய்க்கு வேண்டா வெறுப்பாக  தட்டை ஒலியுடன் வைத்துவிட்டு வருகிறான். அந்த ஒலி தான் 'அம்மா ! சாப்பாடு" என்பதற்கானப் பொருளாக இருக்கவேண்டும்.

    பசியில் இருந்த தாய் மெதுவாகத் தேடித்தேடி கைகள் நடுங்க உண்ணத் தொடங்குகிறாள். அவன் வெளியே வரும்போது  மனைவி குழந்தைகளுக்குச் சோறூட்டுகிறாள். அதனைக் கண்டதும், இத்தனை நாள் கரையாத  உள்ளம் கரைகிறது. சிறு வயதில் வெள்ளித் தட்டில் வீதி வீதியாகத் தூக்கிச்சென்று பறவைகளையும் விலங்குகளையும் காட்டி, வானத்தையும்  மரங்களையும் காட்டி சிரித்து சிரித்து, கதை சொல்லிச் சோறூட்டிய நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.  மீண்டும் தாய் இருந்த அறைக்குச் செல்கிறான். தாய்க்குச் சோறூட்ட வேண்டும் என நினைத்து அவள் காலடியில் அமர்கிறான். உடனே, நடுங்கிய கைகள் அவனுக்குச் சோறூட்டின.  கண்கள் குளமாயின. கண்ணீர் தாயின் கால்களில் சிந்தியது. இது தான் கண்ணீரால் கால்களைக் கழுவுவதோ.? 

    இப்படித்தான் தமிழ்த்தாய் நம் நலனை ; பெருமிதத்தைக் காக்கிறாள். அதனுள் சிலப்பதிகாரத்தின் அருமை பெருமை என அனைத்தையும் படித்து மகிழ்வோம். தொடர்வோம்.


வியாழன், 6 மே, 2021

தமிழர் விளையாட்டு - மறந்து போன மருந்து - TAMIL GAME - LIFE FAME

 




தமிழர் விளையாடல்கள்

பொழுதைப்போக்கும் விளையாட்டுகள் அறிவையும், அன்பையும் வளர்ப்பனவாக அமைதல் நன்று. எந்திர விளையாட்டு உடல்நலத்தைக் கெடுத்துவிடுகிறது. குழந்தைகளை அடிமையாக்கி நரம்பு பிரச்சினைகளை உண்டாக்கிவிடுகிறது. தமிழர்களின் விளையாட்டு அன்பை ஊட்டும். அறிவை வளர்க்கும். உடல்நலத்தைப் பாதுகாக்கும் ; உள்ளத்தை தெளிவாக்கும்

 விளையாட்டு, குழந்தைகள் நன்கு விளைவதற்கு அல்லது வளர்வதற்கு வழிகாட்டுவது. பிறப்பு முதல் இறப்பு வரை ஆடும் வழக்கம் இன்றும்  இருப்பதனைக் காணமுடிகிறது. நாட்டுப்புறப்பாடல்களில்விளையாட்டுப் பாடல்கள்எனத் தனிவகையே இடம்பெற்றிருக்கின்றன. இவை அனைத்தையும் உடலையும், உள்ளத்தையும் ஒருங்கே வளர்ப்பன. குழந்தைப் பருவம் அனைத்தையும் கற்றுக்கொள்ளும் பருவம். ஏதேனும் ஒன்றைக் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என விழையும் பருவம். அப்பருவத்தில் கற்றுக்கொடுக்காவிட்டால் வளர்ச்சி தடைபடும். ஆளுமையினை வளர்க்கும் வகையில் விளையாட்டினை அமைத்த தமிழரின் அறிவுத்திறத்தை நாட்டுப்புற விளையாட்டுக்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தாய்ச்சி

வினாவிடைச் சங்கிலி : குழந்தைகள் விளையாடும்தாய்ச்சி’ என்னும் விளையாட்டு சொல் வளத்தைக் கூட்டுவிக்கும். அதுவினாவிடைச்சங்கிலி’ என்பதாக அமைகிறது. தாய்போல் நின்று வழிபடுத்தும் கிழவிகளையேதாய்ச்சிஎனக் குறிப்பிடுவர். நல்ல பழக்கவழக்கங்களை நினைவுறுத்தி நல்வழிகாட்டுவர். ‘பெரியோர் சொன்னால் பெருமாள் சொன்னா மாதிரிஎன்னும் வழக்கத்தையும் இங்கு எண்ணலாம். குழந்தைகளுக்குத்தலைக்குளிப்பாட்டுவதுமுதல் இறந்தார்க்கு சடங்குசெய்வதுஅனைத்தையும்தாய்ச்சியே முன்நின்று வழிகாட்டுவார். எனவேதாய்ச்சியாக ஒரு குழந்தை மற்ற குழந்தைகளை வழிப்படுத்தும். ’தாய்ச்சிவிளையாட்டில் விளையாட்டாக நல்ல பழக்க வழக்கங்களை விளையாட்டாகவே கற்றுக்கொடுத்துவிடுவர்.

தண்ணி தண்ணிஎன்ன தண்ணி ? – பச்சைத் தண்ணிஎன்ன பச்சை ? – எலை பச்சைஎன்ன எலை ? -  மா எலைஎன்ன மா ? – உப்பு மாஎன்ன உப்பு ? – அரலி உப்புஎன்ன அரலி ? – சோத்து அரலி ? – என்ன சோறு ? – பொங்கச் சோறுஎன்ன பொங்கல் ? – மாட்டுப் பொங்கல்என்ன மாடு ? – நாட்டு மாடுஎன்ன நாடு ? – பாரத நாடுஎன்ன பாரதம் ? – வட பாரதம் – என்ன வட ? – ஆம வடைஎன்ன ஆமை ? – குளத்தாமைஎன்ன குளம் ? – கோயில் குளம்என்ன கோயில்சிவன் கோயில்என்ன சிவன் ? – திரிசடை சிவன்என்ன திரிவிளக்குத்திரிஎன்ன விளக்கு? – குத்து விளக்குஎன்ன குத்து ? – கும்மாங்குத்துஎனக்கூறி முன் நிற்பவரை விளையாட்டாகக் குத்திவிட்டு ஓடுவர். குத்து வாங்கியவர் பின்னே துரத்திச்சென்று பிடிப்பர். குடும்பம் நடத்தும் முறையோடு அன்றாட செயல்களை வெளிப்படுத்துவதாக இவ்விளையாட்டு அமையும். இதனால் மொழி வளம் கூடும். இவ்வாறுதாய்ச்சிஒவ்வொன்றாய் கேட்டு விளக்கம் பெறுதல் அருமையான விளையாட்டாக அமையும். சொல்லழகையும் பொருளழகையும் கற்பிக்கும் விளையாட்டு. கற்பித்தலை விளையாட்டாக அமைப்பது.

கண்ணாமூச்சி

தாய்ச்சியாக ஒரு குழந்தை நின்றுகொண்டு, ஒரு குழந்தையின் கண்களைக் கைகளால் மூடும். மற்றவர்களை ஒளிந்துகொள்ளச்சொல்லும். ஒளிந்துகொண்டபின் கைகளை விடுவித்து கண்டுபிடிக்கச்சொல்லும். குழந்தைகளின் எண்ணிக்கைக்கேற்ப குழுக்களாகவும் விளையாடுவர். ஒரு குழு தேட மற்றொரு குழு ஒளிந்துகொள்ளும்.  தாய்ச்சியான குழந்தையே நடுவராக நின்று இவ்விளையாட்டை வழிநடத்தும். கண்களைப் பொத்தி ஆடுவதால்கண்பொத்தியாட்டம்எனவும் கண்ணாமூச்சி எனவும் அழைப்பர். குழந்தை தவழும் போதும், நடக்கக் கற்கும் போதும் தாயோ, பிறரோ ஒளிந்திருந்து அழைப்பர். குழந்தை ஒளிந்திருப்பவரைத் தேடிவரும். நெருங்கி வந்ததும் அப்பூச்சிஎன ஒலியெழுப்பி மகிழ்வர். குழந்தையும் சிரித்து மகிழும். இதனை, ‘அப்பூச்சிக்காட்டும் விளையாட்டுஎனவும் அழைப்பர். தேடிப் பழகுவது ; தன்னம்பிக்கை வளர்ப்பது ; அச்சத்தை நீக்குவது எனப் பல நிலைகளில் இவ்வாட்டம் மனத்தை வளப்படுத்தும்.

  ஓடி விளையாடு பாப்பாஎன்றும்மாலை முழுதும் விளையாட்டுஎன மகாகவி பாரதியார் பாடியுள்ளது இங்கு எண்ணத்தக்கது.

புதன், 5 மே, 2021

தாகூர் - மனிதமே என் சமயம் - Tagore - Humanity is my religion

 




கவியோகி இரபீந்திரநாத் தாகூர் (07.05.1861 – 07.08.1941)

எண்பது ஆண்டுகள் மனிதனாக வாழ்ந்த கவிதையே கவியோகி இரபீந்திரநாத் தாகூர். சொல்லை நெல் போல் பயனுடையதாக மாற்றிய கவிஞர். ஊடகம் வளராத காலத்திலேயே நாடகம் எழுதியவர். உயர்ந்த உண்மைகளை நயம்பட உரைத்த மெய்யியலாளர். தம் கவிதைக்கு தாமே மெட்டமைக்கும் வல்லமைபெற்ற இசையமைப்பாளர். விதைகளை கதைகளாக்கிய சிறுகதையாசிரியர். எழுத்து மொழியும் இசைமொழியும் ஓவிய மொழியும் அறிந்த  தன்னிகரற்ற அறிஞர். எழுத்துமொழியில் வங்காளம், ஆங்கிலம், சமஸ்கிருதம் எனப் பலமொழிகளைக் கற்றறிந்தவர்.

            “சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்” என்னும்  சொற்றொடருக்கு முரணானவர் ; வளமான கவிதைகளுக்கு அரணானவர். கவிதைகளைத் தொகுத்து ‘கீதாஞ்சலி’ ஆக்கினார். பாரத நாட்டில் இலக்கியத்திற்காக முதன்முதலாக (1913) நோபல் பரிசு  பெற்றவரும் இவரே. அன்னிய நாட்டவர் மட்டுமே பெற்றுவந்த இப்பரிசினை முதன்முதலாகப் பெற்றவரும் இவரே. இலக்கியத்தில் இறைவனைக் கலந்த பெருமைக்குரிய கவிஞர்.

“மனிதமே என் சமயம்” என முழங்கிய மாமனிதர் தாகூர், கொல்கத்தாவில் ஜமீந்தார் பரம்பரையில் தேவேந்திரநாத் தாகூருக்கும் சாரதாதேவி அம்மையாருக்கும் பிறந்தவர். 1883 ஆம் ஆண்டு திசம்பர் 9 ஆம் நாள் மிருணாளினிதேவியை மணந்தார். எட்டுவயதில் கவிதை எழுதிப் பாராட்டு பெற்றவர். ஆங்கில அரசையே சிங்கம்போல் எதிர்த்து நின்றவர். அதனால்தான் அவருடைய கவிதைகள் ‘பானுசிங்கோ’ என்னும் புனைப்பெயரில் வெளிவந்தது.  பானு என்றால் சூரியனையும், ‘சிங்கோ’ என்பது சிங்கத்தையும் குறித்தது.  

எட்டு வயதில் கவிஞர் ; பதினாறு வயதில் சிறுகதை ஆசிரியர் ; இருபது வயதில் நாடக ஆசிரியர் ; இளமையில் நாட்டு விடுதலைக்கும் முதுமையில் ஆன்ம விடுதலைக்கும் வழிகாட்டியவர். இவருடைய ‘கீதாஞ்சலியை” ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஆண்ட்ரூஸ் தாகூரின் புலமையில் மயங்கி அமைதிப் பூங்காவான சாந்திநிகேதனில் தம்மை இணைத்துக்கொண்டார். கவிஞன் மக்களுடன் கலந்து அவர்கள் சுவாசத்தை உணர்ந்து கவிதைகளைப் படைக்கவேண்டும் என்னும்  தந்திரத்தை அறிந்தவர் தாகூர். அரேபிய பழங்குடி மக்களுடன் மக்களாக வாழ்ந்து கவிதை படைத்தார்.

பள்ளியில் படிப்பதைவிட இயற்கையைப் படிப்பதையே பெரிதும் விரும்பினார். படிப்பில் கவனம் இல்லையென இவரை, படிப்புக்காக இலண்டன் அனுப்பினர். ஆனால் அவருடைய மனம்  கலைகளோடும் கடவுளோடும் ஒன்றியிருந்தது. கல்வியால் பெறும் அனுபவத்தைக் காட்டிலும், அனுபவத்தால் பெறும் கல்வி உயர்ந்தது என எண்ணி அதனையே தம் படைப்புகளின் வழி உலகிற்கு உணர்த்திக்காட்டினார்.  எனினும், கல்வியால் மட்டுமே குழந்தைகளை நல்வழிப்படுத்த இயலும் என எண்ணினார்.

கல்வியின் அருமையினை உணர்ந்தே கல்விக்கூடங்களையும் நிறுவினார். கலைகளுடன் கூடிய கல்வியே உயர்ந்ததென எண்ணி, தனது சாந்திநிகேதனில் பள்ளியைத் தொடங்க எண்ணினார். அவருடைய மனைவி நகைகளை விற்று, பள்ளி தொடங்குவதற்காகப் பணம் கொடுத்தார். அலைகளின் ஒலியையும் காற்றின் மொழியையும் உணர்ந்து கவிதைகளைப் படைத்தார். பொறுப்புணர்வுமிக்க இல்லறத்தைக் காட்டிலும் துறவறம் சிறந்ததன்று” என்னும் கருத்தை ‘துறவி’ என்னும் நாடகத்தில் உணர்த்தியுள்ளார்.

மக்களிடம் கொண்ட கருணை அவரை விடுதலை வீரராக மாற்றியது. நாட்டுப்பற்றும் கருணை உள்ளமும் வீரமும் நிறைந்த கவிஞராகத் திகழ்ந்தார். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டு ஆங்கிலேயர் கொடுத்த ‘சர்’ பட்டத்தைத் திருப்பிக்கொடுத்தார். உலகமே அஞ்சி நடுங்கிய இத்தாலிய கொடுங்கோலனான முஸோலினிக்கு அறிவுரை கூறிய பெருமை இவருக்கே உண்டு.

            இரண்டாயிரம் பாடல்கள் எழுதிய பெருமைக்குரியவர். கலைஞர்களின் கடமை, புகழையும் பணத்தையும் மக்களிடமிருந்து அள்ளிக்கொள்வதன்று ; மக்களின் மறுமலர்ச்சிக்கு வித்திடுவது. அதன் பலன் வாழும் காலத்தில் பயனளித்தாலும் அளிக்காவிட்டாலும் வருங்காலத்திற்கு உரமூட்டவேண்டும். அதற்காக சொல்லில் மட்டுமின்றி செயலாலும் சிறந்து நின்றவர் தாகூர். விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவி கல்வி கற்க வழிசெய்தார். இன்றும் பொலிவுடன் கல்விப்பணியில் முன்னிற்கும் அப்பல்கலைக்கழக அழகிற்கு பின்னிற்பவர் கவியோகி. கல்விப்பணியில் மட்டுமின்றி இலக்கியப்பணியிலும் அவர்தொடாததுறையே இல்லை. எனவே, பல்கலைக்கழகத்தை நிறுவிய பல்கலைக்கழகம் என கவியோகியைக் குறிப்பிடலாம்தானே?.

            முப்பது நாடுகளுக்கு மேலாகப் பயணம் செய்தவர். இவ்வனுபவத்தை ‘யாத்ரி’ என்னும் நூல் எடுத்தியம்பும். விஞ்ஞானி ஐன்ஸ்டீன், இலக்கியவாதி பங்கிம் சந்திரர், எச்.ஜி.வெல்ஸ், மகாத்மா காந்தியின் சீடரான ஆண்ட்ரூஸ், ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் ஈட்ஸ், எஸ்ரா பவுண்ட்  எனப் பல அறிஞர்கள் இவரைப் பாராட்டி மகிழ்ந்தனர்.

இருநாடுகளுக்கு தேசிய கீதம் எழுதிய ஒரே கவிஞர் என்னும் பெருமையும் தாகூருக்கே உண்டு . பாரதத்தில் ‘ஜன கன மண..” என்னும் கீதமும் பங்களாதேஷில் “அமர் சோனார் பங்களா..” என்னும் கீதமும் நாட்டு மக்களுக்கு உயிரூட்டுவன ; ஊக்கமூட்டுவன. நாட்டுப்பற்றை வளர்க்கும் நயமான வரிகள் அவை.

வங்காளக் கவிஞரின் தங்கமான வரிகள் வங்காளிகளை ஈர்த்தன. பேச்சு நடையில் கவிதை வீச்சு கொண்ட எழுத்துக்கள் அவருடையவை.  தங்கப்படகு (சோனார் தரி - 1894) , சித்ரா (சித்ரங்கடா-1892) புகழ்பெற்றவை. இவ்வாறு ஒவ்வொரு படைப்பும் காலத்தை விஞ்சி நிற்பன. பல பதிப்புகள் கடந்தும் நன்கு விற்பன.

கவிதையை மொழிபெயர்ப்பது கடினம். மொழியின் அருமையும் கவித்துவமும் காணாமல் போய்விடும். சிறுகதை, நாவல், நாடகம் எப்படைப்பாயினும் தத்துவமே ஆயினும் தாய்மொழியில் காட்டிய உணர்வை மொழிபெயர்ப்பில் ஊட்டுதல் இயலாது. முயன்று எழுதும்பொழுது கவியோகியின் வரிகள்  பொன்னிழைகளாகி மின்னுகின்றன.

·        தண்ணீரைக் கண்டு அஞ்சும்வரை கடலைக் கடக்க இயலாது.

·        அன்பு கட்டுப்படுத்துவதில்லை ; விடுதலை உணர்வையே தரும்.

·        கடவுள் மனித இனத்தை விரும்புவதை குழந்தை பிறப்பே உணர்த்துகிறது.

·        நிருபிக்கப்பட்ட உண்மைகள் பல ; நிருபிக்கப்படாத உண்மை ஒன்றுதான்.

·        மனம் ஒரு கத்தி. பயன்படுத்த தெரியாதபோது ரத்தம் சிந்த நேர்கிறது.

·        பட்டாம்பூச்சிகள் நிகழ்காலத்தில் சிறகடிப்பதால்தான் அழகாக இருக்கிறது.

·        ஒரு மலரானது, பல முட்களைப் பார்த்து பொறாமை கொள்வதில்லை

·        இலை நுனியின் பனித்துளிபோல் வாழ்க்கை. மெல்ல ஆடுவோம்.

·        மகிழ்ச்சியாக வாழ்வது எளிது. எளிமையாக வாழ்வது கடினம்

·        மனம் அஞ்சாதபோது தலை நிமிரும்.

கடலின் சில துளிகள் இவை. 1961 ஆம் ஆண்டு  பாரதத்தின் “திரையுலக மேதை”யான சத்யஜித்ரே  ‘ரபீந்திரநாத் தாகூர்’ என்னும் ஆவணப்படத்தை எடுத்து  கவியோகிக்குக் காணிக்கையாக்கினார். “கவியோகியின் இறுதி ஊர்வலத்தில் மக்கள் கூட்டம் கிளப்பிய புழுதியை விட சிறந்த அஞ்சலி இருக்கமுடியாது” என அறிஞர் மிருணாள்சென் குறிப்பிடுகிறார்.  நாம் என்ன செய்வோம்? கவியோகியின் ஒவ்வொரு சொல்லும் வாழ்க்கையை அழகாக்கும்தானே?. நன்றிக்கடனாய் நன்கு வாழ்ந்துகாட்டுவோம்.

தேசியக்கவியினைக் கற்போம் ; கற்பிப்போம் ; கலைகளை வளர்ப்போம் ; வாழ்க்கையைக் கொண்டாடுவோம் ;

 

செவ்வாய், 4 மே, 2021

புன்னகைக்கு ஒரு (சிரிப்பு) நாள் - எல்லோரையும் மகிழ்விக்கும் பூ - சிரிப்பு - LAUGHTER IS THE FIRST MEDICINE


சிரிப்பு - நோய் தீர்க்கும் இனிப்பு மருந்து

     அன்பின் மொழி சிரிப்பு. உலகையே தன்வசப்படுத்தும் ஆற்றல் புன்னகைக்கு உண்டு. அதனை உணர்ந்தவர்கள் வாழ்க்கையை மலரவனமாக்கி மகிழ்கிறார்கள்.  சிரிக்க மறந்தவர்கள்  வாழ்க்கையைச் சிறையாக்கிக் கொள்கிறார்கள்.  

    பொன்னகையைக் காட்டிலும் உயர்ந்தது புன்னகை.  அதனால்தான் அது ஏழைகளுக்கும் வசப்பட்டு இருக்கிறது. எந்திர உலகில் மனிதன் தந்திரமாக வாழ்ந்து வாழ்ந்து நொந்து போகிறான். ஒவ்வொருவர்க்காகவும் அவன் ஒவ்வொரு முகமூடி அணிந்து தன் இயல்பான முகத்தையே மறந்துவிடுகிறான். அவனுடைய உண்மையான முகத்தை உண்மையான சிரிப்பின்போது மட்டுமே கண்டுகளிக்கமுடியும். ஒருவர் மற்றொருவரைப் பார்த்து மரியாதையுடன் சிரித்தால் மற்றவர்கள் மனம் நெகிழ்வது இயல்புதானே. கோபம், பதற்றம் உடையவரையும் அழுத்தம் குறையச்செய்யும் அற்புத மருந்து சிரிப்பு.

    ஒவ்வொரு ஆண்டும் மே திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமையினை "உலக சிரிப்பு நாளாகக்" கொண்டாடுகிறோம். மும்பை வாழ் மருத்துவர் மதன் கதரியா, சிரிக்கும் யோகாவைத் தொடங்கினார். 2000- ஆண்டில் உலக நாடுகள் முழுதும் உலக சிரிப்பு நாளைக் கொண்டாடத்தொடங்கினர்.  அதனால்தான் இன்று பல பூங்காக்களில், காலையும் மாலையும் ;  கூடியும் தனித்தும் சிரித்து மகிழ்கின்றனர். காரணமின்றி சிரிப்பது கடினம் என்றாலும் தன் குழந்தைப்பருவத்தில் கோலிக்காகவும் பம்பரத்திற்காகவும் அழுததை எண்ணினாலும் சிரிப்புவரும். இளமைப்பருவத்தில் நண்பர்களுடன் அரட்டை அடித்ததனை நினைத்துப்பார்த்தாலும் சிரிப்பு வரும். அழுத தருணங்கள் கூட புன்னகையாகி இதழ்களை விரிக்கும் ;  ஆனந்த கண்ணீர் இதழ்பட்டு இனிக்கும். 

குழந்தை ஏன் அழகாக இருக்கிறது. அது சிரிப்புக்குத் தடை போடுவதில்லை. வயதாக ஆக சிரிப்பு குறைகிறது என்பது உண்மையல்ல. சிரிப்பு குறையக்குறைய வயதாகிறது என்பதே உண்மை. சிரித்து வாழ்வோம். வாழ்க்கையை மதித்து வாழ்வோம்.

 மருத்துவர்கள் கைவிட்டவர்கள் கூட இதழ்விரித்துப் புன்னகையால் உயிர் வாழ்ந்த வரலாறுகள் பல. மருத்துவமனையில் மருத்துவத்துடன் புன்னகை சேரும்போது வீடுசேர்வதும்  விரைவாகிவிடுகிறது. சிரிக்கும் முகங்கள்  அழகாக இருப்பதால் தான் திருமணத்தில் கூட சிரிக்கும்படி புகைப்படக்காரர் வேண்டுகிறார். இனி சிரிப்பதற்கான வாய்ப்புகள் குறையலாம் என்பதற்காக அல்ல. அப்போதுதான் படம் அழகாகவரும் என்பதால்தான். சில நொடிகள் சிரிக்கும்போதே  படம் அழகாக இருக்கிறது என்றால் வாழ்நாள் முழுதும் சிரித்து வாழக்கற்றுக்கொண்டால் வாழ்க்கை எத்தனை அழகாக இருக்கும்.  

       இறுக்கமான முகத்துடன் வாழ்வதால் எத்தனை நரம்புகள் முகத்தை முடக்கி விடுகின்றன. புன்னகைத்துப் பாருங்கள் பூவாய்  முகம் மலரும். பெண்களுடைய முகத்தை மட்டும்தான் பூ என் கிறார்கள் கவிஞர்கள். புன்னகைக்கும்போது முகம் சிவப்பதாலா?. என்று தெரியவில்லை. ஆண்கள் முகத்தைச் சொல்வதில்லையே?. பெண்களிடம் காதலைச்சொல்லி பெண்ணின் கைகள் ஆணின் கன்னத்தைச் சிவக்கச்செய்தாலும் அப்படியே. 

    காளைப்பருவத்தில் விருப்பப்படி ஊரைச் சுற்றினால் கால்கட்டுப் போடுவார்கள்தானே? திருமணம் சில நேரங்களில் பெண்ணுக்கு நகைக்குரியதாகவும் ஆணுக்கு நகைப்புக்குரியதாகவும் மாறிவிடுகிறது.  அதனை உணர்ந்தே திருமணம் செய்யும் ஐயர் கூட "நல்ல நேரம் முடியப் போகுது. சீக்கிரம் பொண்ணக் கூட்டிட்டு வாங்க" என்பார். 

    இருசக்கர வாகனத்தில் செல்லும்  தம்பதியரின் இருக்கையில் அமர்ந்திருக்கும் இடைவெளியைக் கொண்டே திருமணம் ஆன ஆண்டுகளைக் கணக்கிடமுடியும். பேசுவதைக்கொண்டும் கணக்கிடலாம். திருமணத்திற்கு முன் ஆசையாகப் பேசுவான். திருமணமான பின் கொஞ்சுவது குறையும். மனைவியே அதற்குக்காரணமாகிவிடுவதும் உண்டு. எப்படி எனக் கேட்ட மனைவிக்கு கணவனே விடை சொல்கிறான்.  முதல் இரவில் இனி நீங்கள் உண்மையை மட்டுமே பேசவேண்டும்" எனச் சத்தியம் வாங்கிக்கொண்டது நீதானே என்றான். பிறகு எப்படி "தங்கமே, மலரே:" என்றெல்லாம் வருணிக்கமுடியும் என்கிறான்.

 "என் பொண்டாட்டி உண்மையிலே ஊருக்குப் போயிட்டா" என்னும் சொல் எத்தனை  மன இறுக்கத்தைக் குறைத்துவிடுகிறது.  லாக்டவுன் என்னும்  வீட்டிருப்பு நேரத்தில் "ஞாயிற்றுக்கிழமை வெளியே போகக் கூடாது. இரவு நேரத்தில் வெளியே போகக்கூடாது. கண்டவர்களிடம் பேசக்கூடாது." என எத்தனையோ கட்டுப்பாடுகள். அனைத்தும் நன்மைக்குத்தான். ஆனால் இவை அத்தனையும்  திருமணமானவர்களுக்கு திருமணமான நாட்களிலேயே மனைவியால் விதிக்கப்பட்டுவிடுகிறதுதானே. கொரோனோவுக்கும் முன்னரே கட்டுப்பாடுகளை விதித்த மனைவி தீர்க்கதரிசிதானே.

     சிரிப்போம் . மற்றவர்களும் சிரிக்கும்படி இருந்தால் மட்டுமே.