தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

செவ்வாய், 16 ஜூலை, 2019

தமிழ்மொழி ஆசிரியராக காந்தியடிகள் -Mahatma Ghandhi as Tamil Teacher

தமிழ்மொழி ஆசிரியராக காந்தியடிகள்
இலக்கியம், அழகிய வரலாற்று ஆவணம். எனவே நாட்டு விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் ஓர் இதழின் ஆசிரியர்களாகத் தம்மை மாற்றிக்கொண்டனர். அண்ணல் காந்தியடிகள் யங் இந்தியா, இந்தியன் ஒப்பினியன், ஹரிஜன், நவஜீவன் என்னும் நான்கு வார இதழ்களின் ஆசிரியராக விளங்கினார். இவ்வெண்ணத்திற்கு அடிப்படையாக அமைந்தது அவரிடம் இருந்த நாட்டுப்பற்று மட்டுமன்று. மொழிகளிடம் கொண்டிருந்த ஈடுபாடும் முக்கியக் காரணமாகும். தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோதே மொழியாசிரியராகத் தம்மை மாற்றிக்கொண்டு குழந்தைகளுக்குப் பாடம் நடத்தி மகிழ்ந்தார். “தமிழ்ச்சிறுவர்கள் எல்லோரும் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்கள். ஆகையால் அவர்களுக்குத் தமிழ் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் எழுத்துக்கள் அவர்களுக்குக் கொஞ்சமும் தெரியாது. ஆகவே அவர்களுக்கு நான் தமிழ் எழுத்துக்களையும் ஆரம்ப இலக்கண விதிகளையும் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. இது மிகவும் எளிதானதேஎனச் சத்தியசோதனையில்இலக்கியப் பயிற்சிஎன்னும் தலைப்பில் கூறுகிறார். தமிழ்மொழியிடம் மிகுந்த பற்றும் மதிப்பும் கொண்ட அண்ணல் காந்தியடிகள்இராஜாஜி மகனிடம் தந்தைக்கு தமிழ்மொழியிலேயே கடிதம் எழுதல் வேண்டும் என அறிவுறுத்தினார். அதுவே தாய்மொழிக்குக் கொடுக்கும் மதிப்பு என்றார்.  
அண்ணல் பாடம் நடத்தியதன் விளைவாகத் குழந்தைகளின் கற்கும் திறனை நன்குணர்ந்தார். “எப்பொழுதும் குழந்தைகள் கண்ணால் பார்த்துத் தெரிந்து கொள்ளுவதைவிட அதிகமாகவும் கஷ்டமின்றியும் காதால் கேட்டுத் தெரிந்து கொள்கின்றனர்”. பெற்றோர்கள் கற்பிப்பதில் காட்டவேண்டிய ஈடுபாடு குறித்தும் விளக்கியுள்ளார். “அனுபவத்தினாலும் சோதனைகளினாலும் உண்மையானதொரு கல்வி முறையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமும் எனக்கு இருந்த்து. ஒன்றை மாத்திரம் நான் அறிவேன். அதாவது மிகவும் சிறப்பான ஒரு நிலையில் பெற்றோரினாலேயே உண்மையான கல்வியினை அளிக்கமுடியும்எனத் தம் சத்தியசோதனையில்பள்ளி ஆசிரியனாகஎன்னும் தலைப்பில் குறிப்பிடுகிறார் அண்ணல் காந்தியடிகள்.


தமிழ் அறிவோம்- பிழையைத் தவிர்ப்போம் - Learn Tamil

தமிழ் றிவோம்- பிழையைத் தவிர்ப்போம்
       தமிழ் என்னும் சொல்லே மெய்யெழுத்துக்களின் மூன்று இனங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. ’த்என்பது வல்லினத்தையும்ம்என்பது மெல்லினத்தையும்ழ்என்பது இடையினத்தையும் எடுத்துரைக்கிறது. ஒரு வீட்டிலோ அல்லது நாட்டிலோ வன்மையானவர் முன்னிற்க மென்மையானவர் இடையில் நிற்க இடைநிலையில் உள்ளவர் பின்னின்று காக்க வேண்டும் என்னும் அறத்தை உணர்த்துவதாக இச்சொல்லமைப்பு அமைந்துள்ளதனை எண்ணி வியக்கமுடிகிறது.
       க்ச்ட்த்ப்ற் - வல்லினம், ங்ஞ்ண்ந்ம்ன் - மெல்லினம், ய்ர்ல்வ்ழ்ள் - இடையினம் என வரையறுக்கப்பட்டுள்ளதனை அனைவரும் அறிவீர். ஆனால் அவ்வெழுத்துக்கள் ஒலிக்கும் முறையினைப் பயிற்சி செய்தால் தமிழின் அருமை மேலும் நன்கு விளங்கும். க்ச்ட்த்ப்ற் என்னும் ஐந்து எழுத்துக்களைப் பொறுமையாக ஒவ்வொரு எழுத்தாக ஒலித்துப்பார்த்தால் காற்று அடைபடும் இடத்தை அறிந்து கொள்ள இயலும். க்  - என ஒலிக்கும் பொழுது அண்ணத்தின் பின்பகுதியில் (உள் நா பகுதியில்) காற்று அடைக்கப்படுகிறது.  ச் - என ஒலிக்கும் பொழுது சற்று முன்னும்ட் - என ஒலிக்கும் பொழுது இடை அண்ணத்திலும், த் - என ஒலிக்கும் போது அண்ணமும் பல்லும் (அண்பல்) இணையும் இடத்திலும்ப் என ஒலிக்கும் பொழுது இதழிலும், காற்று அடைக்கப்பட்டு ஒலிப்பதனை உணரமுடியும். அவ்வாறே ங்ஞ்ண்ந்ம் என்னும் எழுத்துக்களை ஒலிக்கும் பொழுது மேற்கூறிய முறைப்படிச் சீராக அவ்விடத்திலேயே ஒலிப்பதனை உணர்ந்துகொள்ள முடியும். ற்ன் என்னும் எழுத்துக்களும் அவ்வாறே ஓரிடத்தையே ஒலிப்பிடமாகக் கொண்டு ஒலிப்பதனை அறிந்துகொள்ளமுடியும். ஓரிடத்தில் ஒலிக்கும் எழுத்துக்களை இன எழுத்துக்கள் எனலாம். எழுதும் போது எழுதுகோலைக் காணாத கண் போலவே நாம் பல முறை இவ்வெழுத்துக்களை ஒலித்திருந்தாலும் இவ்வொழுங்கு முறையில் ஒலிப்பது குறித்து எண்ணிப்பார்த்தது இல்லை. ஒலிப்பு முறையினை பயிற்சி செய்தால் க்ங், ச்- ஞ், ட்-ண், த்-ந், ப்-ம், ற்-ன் என எளிதில் இன எழுத்துக்களை உணர்ந்துகொள்ளமுடியும். இன எழுத்துக்கள் என்பதற்கான காரணத்தையும் அறிய இயலும்.
       சொற்களை எழுதும்போது ந--ண என்னும் மூன்றில் எது வரும் எனச் சிலருக்குக் குழப்பம் வருவதுண்டு. இதற்கான வாய்ப்பே இல்லாமல் இருக்க இன எழுத்துக்களின் ஒழுங்குமுறையினை அறிதல் வேண்டும்.
ந் - என்னும் எழுத்து இணையாக உள்ள  த் - உடன் மட்டுமே வரும்.
எடுத்துக்காட்டுதந்தை.
ன் என்னும் எழுத்து இணையாக உள்ள ற்- உடன் மட்டுமே வரும்.
எடுத்துக்காட்டு - நன்றி.
ண்என்னும் எழுத்து இணையாக உள்ள ட்- உடன் மட்டுமே வரும்
எடுத்துக்காட்டுகண்டேன்.
க்- என்னும் எழுத்து இணையாக உள்ள ங் உடன் மட்டுமே வரும்.
எடுத்துக்காட்டுகங்கை,
ச் - என்னும் எழுத்து இணையாக உள்ள ஞ் உடன் மட்டுமே வரும். எடுத்துக்காட்டுமஞ்சள்
ப் - என்னும் எழுத்து இணையாக உள்ள ம் உடன் மட்டுமே வரும்.
எடுத்துக்காட்டுகங்கை,
இனத்தின் அருமையை உணர்ந்து வாழ்ந்தால் பெருமை வரும் தானே.
**********


திங்கள், 15 ஜூலை, 2019

வில்லை வெல்லும் சொல் - The Word Power

வில்லை வெல்லும் சொல்

பஞ்சானது நூலாகி ஆடையாகும் என்பது போல எழுத்தானது சொல்லாகிப் பொருளாகும் என்பதனாலேயே பனுவல் எனப் புலவர்கள் குறிப்பிட்டனர்.  நூல் ஆடையாகி மானத்தைக் காப்பது போலவே நூலும் இலக்கியமாகி இனத்தின் பெருமையைக் காக்கிறது. எனவே புரவலர்கள் (மன்னர்கள்) புலவர்கள் பாடுவதனையே பெருமையாகக் கருதினர். புலவர்கள் பாடாதிருப்பதனை இழிவாக எண்ணினர்.  அவ்வாறு எண்ணிய பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி  
மாங்குடி மருதன்  தலைவன் ஆக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக
என் நிலவரை

எனப் பாடுகிறான். புறநானூற்றில் 72 ஆம் பாடலில் இவ்வடிகள் இடம்பெற்றுள்ளன.


பகைவர்கள் பாண்டியனுடைய நாட்டு மக்களைச் சிரிக்கத்தக்கவர்கள் என எள்ளி நகையாடுகின்றனர். தமது யானைப்படை, தேர்ப்படை, குதிரைப்படை, காலாட்படை வலிமையைக்கூறி பாண்டியநாட்டை இகழ்கின்றனர். அத்தகைய இழிவான சொற்களைக் கூறிய அரசர்களை சிதறி ஓடும்படி வெற்றிகொள்ளேனாயின் என் மக்கள் என்னைக்  கொடியன் எனக்கூறி இகழ்வாராக. உலகத்தில் என்றும் நிலைக்கக்கூடிய பாடல்களைப் பாடக்கூடிய உயந்த தலைமையினையும் அறிவினையும் கொண்ட மாங்குடி மருதனார்  உள்ளிட்ட புலவர்கள் பாடாது நீங்குக எனப் பாண்டியன் வஞ்சினம் கூறுகிறான். புலவர் சொல் அரசர் வில்லையும் வெல்லும் தானே.  

கவியரசர் கண்ணதாசன் - Kannadasan - The Emperor of Poets

கவியரசர் கண்ணதாசன்

24.06.2019 கவியரசரின் 92 ஆவது பிறந்த நாள். அவர் எழுதும் எழுத்து உயிரோ, மெய்யோ, உயிர்மெய்யோ அனைத்தும் உயிர் பெற்றுவிடும். ‘கலங்காதிரு மனமேஎன்னும் அவருடைய முதல் திரைப்பாடல் முதல்கண்ணே கலைமானேஎன்னும் கடைசி திரைப்பாடல்வரை அனைத்துமே இன்றும் கூட, ஏதேனும் ஒரு இதழில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறது என்பதே அவருடைய பாடல்களின் அருமைக்குச்சான்று

ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில்முத்தான முத்தல்லவோஎன்னும் திரைப்பாடலை எழுதினார் என அவருடைய புலமைக்குச் சான்று காட்டுவர். அவருடைய ஆளுமை அழகானது. “அவரைப் பார்க்கும் போது ஒரு கவிஞரைப்பார்ப்பது போல் தோன்றுவதில்லை. ஒரு அரசரைப் பார்ப்பது போல் தோன்றும்என எழுத்தாளர் ஜெயகாந்தன் குறிப்பிடுவார். ஒரு முறை பாடல் எழுத காலம் நீட்டித்ததால் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள்அண்ணே மே மாதம் வந்துவிட்டது. படம் வெளியாகவேண்டும் என மேமேமே என அடிக்கடி நினைவுபடுத்திக்கொண்டே இருந்தார். “அன்பு நடமாடும்  கலைக்கூடமேஎனப் பாடல் முழுதும் மே .. மே, என ஒவ்வொரு அடியும் இயைபுடன் அமைத்துப் பாடினார் என்று கவியரசர் புகழினைக் கூறுவார்.

தான் நாத்திகராகவும், அரசியல் வாழ்வில் இருந்த காலத்தையும்வன வாசம்என்னும் நூலாக எழுதினார். ஒருமுறை அவர் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது ஊசி குத்திய போதுகிருஷ்ணா, கிருஷ்ணாஎன அவ்வலியிலும் கிருஷ்ணரையே அழைத்தாராம். அந்த அளவுக்கு பின்னாளில் ஆத்திகரானார். ‘அர்த்தமுள்ள இந்து மதம்அவருடைய பக்திக்குச் சான்றுபாடல் எழுதும்போது காலில் செருப்பு கூட அணியமாட்டார். அந்த அளவிற்கு கலையினை மதித்தார். அவர் அழகினைக் கூட்டும் தங்கச்சங்கிலி சில நேரங்களில் அவர் கழுத்தில் இருக்காது. நண்பர்கள் சங்கிலி எங்கே ? எனக் கேட்டால்பள்ளிக்கூடம் சென்றிருக்கின்றனஎனக் கூறுவார். அடகுக்கடையைத் தான் பள்ளிக்கூடம் என்பார். யாருக்கும் அஞ்சாத ஞானச்செருக்கு கொண்டவர் கவியரசர். “எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லைஎனக் கூறும் துணிவு அவருக்கு மட்டுமே உண்டு. இன்றும் எத்தனை மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

***********

சேர, சோழ, பாண்டியர் பெயர்கள் - Names of Chera, Chola, Pandya

சேர, சோழ, பாண்டியர் பெயர்கள்

பெயர்கள் தான் அடையாளங்கள். பெயர்களால் அழைப்பதனைக்கொண்டு இருவரிடையே உள்ள நெருக்கத்தை அறிந்துகொள்ள இயலும். பெயரில்லையென்றால் வாழ்க்கை முறையே கடினமாகிவிடும். ஒரே பெயருடைய இருவர் ஒரு சூழலில் இருந்தாலே எத்தனை இடர்ப்பாடு. ஒரே உருவம் கொண்ட இரட்டையர்களைப் பெயர்கள்தான் அடையாளம் காட்டுகின்றன. சிலர் தங்கள் விருப்பப்படி தாங்களே பெயர்களைப் புனைந்துகொள்வர். அவையே புனைப்பெயர்களாகின்றன. மன்னர் காலத்தில் தாமே புனைந்துகொண்டதும், புலவர் புனைந்ததும், மக்கள் புனைந்ததும் எனப்பல வகைகளில் புனைப்பெயர்கள் அமைந்திருந்ததனைக் காணமுடிகிறது. மன்னர்களைப் பாடிய புலவர்கள் புனைப்பெயர்களைக்கொண்டு பாடல்களை இயற்றினர். தோற்றம், பண்பு, ஆட்சிமுறை, வாழ் நிலம் இவற்றை அடிப்படையாகக்கொண்டு பல பெயர்களால் வாழ்த்தினர். பழந்தமிழகம்வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்க்கூறு நல்லுலகம்என்னும் தொல்காப்பிய அடிகளுக்கேற்ப பரந்த எல்லையினைக் கொண்டதாக இருந்ததுஎனவே அந்நிலப்பரப்பினைச் சேர, சோழ, பாண்டியர்கள்  ஆண்டனர் என்பதனைத் தமிழக வரலாறு எடுத்தியம்புகிறது. மன்னர்களுக்குரிய பெயர்களை திருவேங்கட பாரதியாரால் ஆக்கப்பெற்றபாரதி தீபம்என்னும் நிகண்டு நூல், மக்கட்பெயர்த் தொகுதியில் தெளிவாக எடுத்துரைக்கிறது.

சேரனுக்குரிய பெயர்கள் :

வில்லவன் கேரளன் வானவன் வஞ்சிக்கு வேந்தன்குடக்
கொல்லியன் குன்றன் குடநாடன் குட்டுவன் கோதைகொங்கன்
மல்லுதியன் பொறை யன்போந்தின் மாலையன் வானவரம்
பெல்லையன் சேரலன் சேரன் பொருனைக் கிறையவனே (11)

சோழனுக்குரிய பெயர்கள் :

பொன்னிநன் நாடன் புகாரிறை கிள்ளி புலியுயர்த்த
மன்னவ னேரியன் வீர னிரவி குலன்வளவன்
சென்னி யிமையவன் செம்பியன் கண்டன் றிறலபையன்
நன்னெறி யாரத்தன் சோழ னுறந்தைக் குரியவனே (12)

பாண்டியனுக்குரிய பெயர்கள் :

வழுதி கவுரியன் பஞ்சவன் மீனவன் மாறன்கொற்கைச்
செழியன் மதுரைமன் பூழியன் கைதவன் றென்னவன்சே
லெழுது புரவலன் வைகைத் துறையவ னிந்துகுலம்
பழகு மிறையவ னிம்பத் தொடையினன் பாண்டியனே (13)

என்னும் பாடல்கள் மன்னர்களின் பெயர்களை எடுத்துரைக்கிறது.

சேரனுக்குரிய பெயர்கள் :

வில்லவன், கேரளன்வானவன்,   வஞ்சிக்கு வேந்தன், குடக்கொல்லியன், குன்றன், குடநாடன், குட்டுவன், கோதை, கொங்கன், மல்லுதியன், பொறையன், போந்தின் மாலையன், வானவரம்பு எல்லையன், சேரலன் , சேரன், பொருனைக்கு இறையவன்.

சோழனுக்குரிய பெயர்கள் :

பொன்னி நன்னாடன், புகார் இறை, கிள்ளி, புலி உயர்த்த மன்னவன், ஏரியன், வீரன், இரவிகுலன், வளவன், சென்னி, இமையவன், செம்பியன், கண்டன், திறல் அபயன், நன்னெறி ஆரத்தன், சோழன், உறந்தைக்கு உரியவன்.

பாண்டியனுக்குரிய பெயர்கள் :

வழுதி, கவுரியன், பஞ்சவன், மீனவன், மாறன், கொற்கைச் செழியன், மதுரைமன், பூழியன், கைதவன், தென்னவன், சேல் எழுது புரவலன், வைகைத் துறையவன், இந்துகுலம், பழகும் இறையவன், இம்பத் தொடையினன், பாண்டியன்

உயிர் இருக்கும் வரை பெயர் இருப்பதனால், பெயரை மதித்துக் காத்துக்கொள்வது தான் நன்று.


************