தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

ஞாயிறு, 11 ஜூலை, 2021

எப்படி வாழ்வது? – நல்லாதனார் காட்டும் வழி

 

 

எப்படி வாழ்வது? – நல்லாதனார் காட்டும்  வழி.

நல்ல வழி காட்ட நல்லாதானார் பொருத்தமானவர்தானே. செல்வந்தர் ஒருவர் தன்னுடைய நிறுவனத்தின் பொறுப்புகளை ஒப்படைக்க நம்பிக்கையான ஒருவரைத் தேடுகிறார். “நகரத்தைவிட கிராமத்தில்தான் நல்லவர்கள் இருப்பார்கள்” என ஒருவர்கூற, செல்வந்தர் கிராமத்திற்குச் செல்கிறார். அங்கு ஒருவர் பண்ணையார்போல் அமர்ந்திருக்கிறார். “ஐயா, உங்களைப் பார்த்தால் இந்த ஊர் பெரியவர்போல் தெரிகிறது” என்றார். “யார் சொன்னது? அப்படியெல்லாம் முடிவெடுத்துவிடாதீர்.  இந்தப் பண்ணை என்னுடையது அவ்வளவுதான்” என்றார் பண்ணையார். “ஐயா, உங்களுடைய உண்மையான பேச்சு எனக்கு நம்பிக்கை தருகிறது. நீங்கள்தான் எனக்கு உதவமுடியும்.” என நினைக்கிறேன்” என்றார். “கேளுங்கள். முடிந்தால் உதவுகிறேன்” என்றார் பண்ணையார். “நம்பிக்கையான ஒருவரை என்னுடைய நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில்விடவேண்டும். அதற்காகத்தான் வந்தேன்” என்றார். “அப்படி ஒருவரும் இங்கு இருப்பதாகத் தெரியவில்லை” என்றார். “உங்களுக்குப் பிள்ளைகள் இல்லையா” எனக்கேட்டார். “எனக்கு எட்டுப் பிள்ளைகள்” என்றார் பண்ணையார்.  “அப்படியா? உங்கள் பிள்ளைகளில் ஒரு நல்ல பிள்ளையை என்னுடன் அனுப்புங்களேன்” என்றார். “அதோ அந்தக் கூரையின் மீது தீ வைக்கிறானே அவன்தான் என் பிள்ளைகளிலேயே மிகவும் நல்லவன்” என்றார் பண்ணையார். அடுத்தநொடி செல்வந்தர் காணாமல் போகிறார்.

இப்படித்தான் நல்லவர்கள் எல்லாம் நாளுக்குநாள் குறைந்துவருகின்றனர். மதிப்பும் மரியாதையும் எதிர்பார்க்கவேண்டிய பொருளாகிப்போனது. “ஏன் மரியாதைக் கொடுக்கவேண்டும்?. வெளிநாடுகளில் பெயர் சொல்லித்தானே அழைக்கிறார்கள். பெயரே அதற்காகத்தானே இருக்கிறது” எனக் கேட்கும் இளைஞர்கள் பலர். வெளிநாடுகளில், உறவுகளின் அருமையினை உணர்ந்தவர்கள் மிகவும் குறைவு. அதற்குக் காரணம் அவர்களுக்கென்று நிலையான வாழ்வு கிடையாது. இன்று ஒருவர் ; நாளை மற்றொருவர் என  உறவுகளை மாற்றிக்கொண்டே இருப்பர். அதனால் பெயர்மட்டுமே அவர்களுடைய உறவுக்குப் பாலமாக அமையும். அதனால்தான், பெயரிட்டு அழைப்பர். ஆனால், நம்மிடையே உறவு முறைகள் உண்டு, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமன், அத்தை என அழைப்பதே எத்தனை அழகு. பண்பாடு மாறாத கோவை மக்கள், அனைவரையும் அக்கா, அண்ணன் என்றுதானே அழைக்கிறார்கள். கேட்பதற்கே செவிகள் இனிக்கிறதுதானே?

ஓர் இளைஞர் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மருத்துவமனைக்குச் சென்று அங்குள்ள ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவிசெய்வார். எத்தனையோ அவசர ஊர்திகள் வந்தவண்ணம் இருக்கும். பலதரப்பட்ட நோயாளிகளை இறக்கிச்செல்லும். செவிலியர்களோ, வண்டியைத்தள்ளிச்செல்லும் பணியாளர்களோ வரக்காலதாமதாமானால் உடனே இவர்சென்று நோயாளியை வண்டியில் ஏற்றி மருத்துவரிடம் கொண்டுசெல்வார். சனி, ஞாயிறு எப்போது வரும் எனக் காத்திருக்கும் பணியாளர்களும் உண்டு. தவறாமல் துணைக்கு வரும் இளைஞரை எதிர்பார்த்திருப்பார்கள்.

விபத்தில் சிக்கிய நோயாளிகளானால், விபத்தில் சிக்கிய உறவினர்கள் பதற்றத்தில் இருப்பர். அப்போது அவர்களால் விண்ணப்பப்படிவத்தை எழுத இயலாது. இவர் விவரங்களைக் கேட்டுஎழுதி உடனடியாக மருத்துவம் பார்க்க வழிசெய்வார். மருத்துவமனை வளாகத்தைத் தூய்மை செய்வார். அதனால்தான் நோய் உண்டாகிறது என்பதனை உணர்ந்தவர்தானே அவர். வறுமையிலிருக்கும் நோயாளிகளின் உறவினர்க்கு உணவளிப்பார். எத்தனையோ மருத்துவர்கள் இளைஞர் செய்யும் பணியைப் பார்த்து வியப்படைவர்.

“உனக்கு என்ன உதவி வேண்டும் கேள்” என்றுகூட பலர் கேட்டிருக்கிறார்கள். அப்போது மட்டுமே “தான் பல இலட்சங்கள் வருமானம் பெறுவதையும் இப்பணியை இலட்சியத்துக்காகச் செய்கிறேன்” என்றும் கூறுவார். “எத்தனையோ பாதுகாப்புப்படைவீர்ர்கள் இரவு பகல் பாராது நம் நாட்டைக் காக்கின்றனர். எத்தனையோ மருத்துவர்களும், எத்தனையோ ஓட்டுநர்களும், எத்தனையோ உழைப்பாளிகளும் இரவைப் பகலாக எண்ணி உழைக்கிறார்கள். அவர்களைப்போல் முடியாவிட்டாலும் விடுப்பு நாட்களில் நேரடியாக இந்தச் சமுதாயத்திற்கு ஏதாவது செய்யவேண்டும் என எண்ணுகிறேன். எனவே இப்பணியைச் செய்கிறேன்” (என்பான் தவறு) என்பார் அவ்விளைஞர்.

அந்த இளைஞரை அவனுடன் பணியாற்றுவோர் ‘துறவி’ என்றே அழைப்பர். ‘சாமியார்’ எனக் கேலிபேசுவர். அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளாமல் சமூகப்பணியினைச் செய்துவந்தார் அந்த இளைஞர். “தொழுநோயாளிகளின் கால்களைக் கழுவும்போது இறைவனை வணங்குவதாகவே உணர்கிறேன்” என்றார் ,மெகர்பாபா என்ற ஞானி. தொழுநோயாளிகளுக்கு, ஏழைகளுக்கு என்றே வாழ்நாளை அர்ப்பணித்தவர். தான்பெற்ற செல்வமான நிலங்களை ; சொத்துக்களை ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டுச்சென்றார். நாற்பத்து நான்கு ஆண்டுகள் மௌனமாக இருந்த குருவாதலால் “தி சைலண்ட் மாஸ்டர்” என அழைத்தனர். அவரை எத்தனைபேர் கொண்டாடினார்கள். இன்றைய தலைமுறைக்கு அவர்பெயர் தெரியுமா? அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைபட்டாரா? இல்லைதானே?

நற்பணி செய்வோரை எளிதில் மற்றவர்கள் காயப்படுத்திவிடுவார்கள். அதைக்கேட்டு நற்பணியை நிறுத்திவிடுவது நன்றன்று. ஒருவர் உணவுதானம் செய்வதனை சிலர் எதிர்ப்பர் ; பள்ளிக்கூடம் கட்டுவதனை எதிர்ப்பர் ; நூலகம் கட்டுவதனை எதிர்ப்பர்.  இந்த எதிர்ப்புகளால் நற்பணிகள் தடைபட்டால் இழப்பு மக்களுக்குத்தானே. ஆனால், இன்றைய எதிர்ப்பை பற்றி கவலைப்படாது, நாளைய தலைமுறை வாழ்வை எண்ணி நற்பணி செய்யும் நல்லோர்களாலேயே நாடு நலம்பெறுகிறது.

அத்தகைய சகிப்புத்தன்மை ஒவ்வொருவரிடையேயும் வளரவேண்டும். மெதுவாகச் செல்லும் ஆமையையும் நத்தையையும் கேலி பேசுவோர்கள்கூட, பொறுமைக்கு எடுத்துக்காட்டாக அவற்றைத்தானே எடுத்துக்காட்டுவர். வீட்டினையே சுமந்துசெல்லும் அவ்வுயிர்களைக் கேலி பேசலாமா?

இதுதான் வாழ்வதற்கான வழிமுறை என்கிறார். இகழுரையைக் கேட்டாலும், புகழுரையே என எண்ணுங்கள். எளிய உணவாயினும், விருந்தென எண்ணுங்கள். பாகல்காய் எனினும் தேங்காய்போல் எண்ணுங்கள். இவ்வாறு வாழ்வோர் இவ்வுலக வாழ்க்கையிலும் சிறப்பர். இறைவனாகிய மெய்ப்பொருளைக் கண்டும் சிறப்பர் என்கிறார் திரிகடுகம் இயற்றிய நல்லாதானார்.

வைததனை இன்சொல்லாக் கொள்வானும் நெய்பெய்த

சோறென்றே கூழை மதிப்பானும் – ஊறிய

கைப்பதனை கட்டி என்று உண்பானும் இம்மூவர்

மெய்ப்பொருள் கண்டு வாழ்வர் (திரிகடுகம் -48)

எனப் பாடுகிறார். பிறர் வசைச்சொல் கூறுவதனை இன்சொல் எனக்கொள்ளவேண்டும். ஏழைகளின் உணவான கூழை நெய்பெய்த சோறென்றே மதிக்கவேண்டும். கசக்கின்ற பொருளாயினும் இனிப்பென்று எண்ணி உண்ணவேண்டும். இவை மூன்றையும் செய்வோர் இறைவனைக் காண்பர் என்கிறது திரிகடுகம்.

     இதனை நாமும் பின்பற்றலாம்தானே? நற்பணிகளைத் தொடர்ந்து செய்பவர்கள் இறைவனை அறிவார்கள் என்பதனைக் காட்டிலும் இறைவன் இவர்களை அறிவார் என உணரலாம்தானே?


        குப்பையை உரமாக்கும் கலையைக் கற்றுக்கொண்டீர்தானே

************

சனி, 10 ஜூலை, 2021

தமிழில் விளையாடும் பள்ளியர்கள்

 


தமிழில் விளையாடும் பள்ளியர்கள்

பள்ளத்தில் வாழ்ந்த மக்களைத்தான் ‘பள்ளர்கள்’ என இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. பள்ளர் வாழ்வை ‘முக்கூடற்பள்ளு’ எழிலுற எடுத்தியம்புகிறது. அவர்கள் உழவுத்தொழிலில் ஈடுபட்டு மக்கள் வளத்துடன் வாழ வழிசெய்தனர்.

முக்கூடற்பள்ளு எழுதியவர் யார்? எனக் கேட்டால் பலரும் சரியான விடையைச் சொல்லிவிடுவார்கள். ஏனென்றால் ‘தெரியாது’ என்பதே அவ்வினாவிற்கான விடை. மக்களையும், அவர்கள் வாழும் முறைமைகளையும் இவ்விலக்கியம் கற்பதன்வழி எளிதில் உணரலாம். இந்நூலை இயற்றிய புலவரின் பெருமையினை இருபள்ளிகளின் உரையாடலில் ஒரு சிறுபகுதியின் வழி அறிவோம். ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு தானே பதம்”.

இரு மனைவிகளுடன் வாழ்பவன் நிலை என்னாகும். கேலிக்கூத்தாகத்தானே அமையும். இயல்பான மனிதன் செய்யாத செயலை ஒருவன் செய்யும்போது அது நகைச்சுவையாகிவிடுவது இயல்புதானே. முகத்திற்குப் போட வேண்டிய முகக் கவசத்தை தனது குழந்தைக்கு உள்ளாடைபோல் அணிவித்துப் புகைப்படம் எடுப்பது நகைச்சுவைக்காகத்தானே?

பள்ளனின் பொறுப்பில்லாத போக்கால் மூத்தபள்ளியான முக்கூடற்பள்ளியும், மருதூர் பள்ளியான இளையபள்ளியும் சண்டையிட்டுக்கொள்கின்றனர். (இருவரும் பள்ளனை மணந்ததால் சகக்களத்திகள்) அப்போது இருவரும் வன்சொற்களைப் பரிமாறிக்கொள்கின்றனர். கணவன் மனைவியிடையே சண்டை என்றால், தோற்றுக்கொண்டே போகும் கணவன், கடைசி முயற்சியாக, மனைவியின் வீட்டில் இருப்பவர்களைப்பற்றிப் பேசுவான். மனைவியின் சினத்தைத் தூண்டிவிட அவன் கையாளும் தந்திரம். வேறு எல்லா பந்துகளுக்கும் ஆறு ஓட்டங்கள் எடுத்துவிடும் திறன்கொண்ட மனைவி, இப்பந்தில் வீழ்ந்துவிடுவாள்தானே. அதேபோல், இப்பள்ளிகள் கடைசியாக, கடவுளை இழிவாகப் பேசி சண்டையிட்டுக் கொள்கின்றனர். அதில் விளையாடும் தமிழழகைப் பார்ப்போமா?

சிவன், சிவனே என்றிருக்க, மூத்தபள்ளி இளையபள்ளியை இழிவாகப்பேச, அவள் வழிபடும் சிவனை  குறைசொல்கிறாள்.

மங்கை ஒரு பங்கிருக்க ; யோகி என்றுதான் – கையில்

மழுவேந்தி நின்றான் உங்கள் மத்தன் அல்லோடி

 

என வசைபாடுகிறாள். “பெண்ணைத்தன் இடப்பாகத்தில் வைத்துக்கொண்டே ‘யோகி’ என்பது ஏமாற்றுவித்தைதானே.  சிவனை வழிபடுபவள்தானே நீ. நீமட்டும் சொல் ஒன்று ; செயல் ஒன்றாகவா இருப்பாய்” என வசைபாடுகிறாள்

     இதற்கு இளையபள்ளி, “யோகி” ஆண், பெண் என்னும் வேறுபாட்டைக் களைந்து அனைத்து உயிரும் ஒன்று என நோக்குவர். அதனை உணர்த்தவே தன்னில் பாதியைக் கொடுத்தான் சிவபெருமான். இதனை அறிந்தால்தான் சிவன் ‘யோகி’ என்பதனை உணரமுடியும்” என இளையபள்ளி விடைகூற விரும்பவில்லை. ‘அடிக்கு அடி’ என்னும் நிலையில் மூத்தபள்ளி வணங்கும் கடவுளான கண்ணனை இழிவாகப் பேசுகிறாள்.

கொங்கைதனில் ஆய்ச்சியரைச் சங்கை இல்லாமல் – பண்டு

கூடி நெய்யில் கையிட்டானும் கொண்டல் அல்லோடி

 

எனச் சாடுகிறாள். “வெட்கமில்லாமல் ஆய்ச்சியர் பெண்களுடன் விளையாடியவனும், பானையிலிருந்து வெண்ணையைத் திருடித் தின்னவனும் உங்கள் கண்ணன்தான். அதனால்தான் உனக்கும் வெட்கம் இல்லாமல் இருக்கிறது” என வசைபாடுகிறாள்.

     உடனே, முத்தபள்ளி “உறவின் அருமை தெரியாதவன் உன்னுடைய கடவுளான  சிவபெருமான்”

காமனை மருகனென்று எண்ணிப் பாராமல் – காய்ந்து

கண்ணிலேறு பட்டான் உங்கள் கர்த்தன் அல்லோடி

 

என வசைபாடுகிறாள். சிவபெருமான் மருமகனாயினும் மன்மதனை எரித்த ‘மன்மத தகனத்தைக்’ குறிப்பிடுகிறாள். மேலும், ‘”கண்’ கருணையைப் பொழியும் ஆற்றலுடையது. ஆனால் அக்கண்ணாலேயே எரித்துவிட்டான்” என வசைபாடுகிறாள். உடனே இளையபள்ளி, “மருமகனாக இருந்தாலும் கடமையைத் தடுத்தால் வீழ்த்திவிடுவான். எனவே, கடமை உணர்வுடன் வாழவேண்டும் என உணர்த்தவே அவ்வாறு செய்தான். அதுவும் கருணை பொழியும் கண்களில் எரிக்கவில்லை. மூன்றாவதுகண்ணால்தான் எரித்தான்.” என விடை கூறவிழையவில்லை. மாறாக கண்ணனைக் குற்றம் சொல்லத் துணிகிறாள்.

     “என்னுடைய சிவபெருமான் மருமகனைத்தான் கொன்றான். உன்னுடைய கண்ணனோ தாய்மாமனையே கொன்றானே” என்பதனை,

மாமனென்று பாராமல் முன் கஞ்சனைக் கொன்றே – கண்கள்

மாறாதே பூப்பட்டான் உங்கள் மாயன் அல்லோடி

 

என்னும் அடிகளில் சாடுகிறாள் இளையபள்ளி. மேலும், அதனால்தான், “அவன் கண்ணில் நிலையான பூ விழுந்துவிட்டது” என்கிறாள். அதற்கு, மூத்தபள்ளி, “கஞ்சனை (கம்சன்) கஞ்சக் (தாமரை) கண்ணன்தான் கொல்லமுடியும். அதனால் ‘தாமரைக்கண்ணன் என்பது அழகுக்கு அழகுதானே” எனக் கூறாமல் சிவனை வசைபாடுகிறாள்.

     “பெண்ணாசை கொண்டே பனிமலை என்றும்பாராமல் உங்கள் சிவன் போனான் என்றால் அவன் எத்தனை இழிவானவனாக இருப்பான்” என்பதனை,

மாதொருத்திக்கு ஆசைப்பட்டுப் பொன்னின் மயமாம் – பனி

மலையேறிப் போனான் உங்கள் மத்தன் அல்லோடி

என்னும் அடிகளில் சாடுகிறாள். “மணப்பதற்கு பெண்தேடி செல்வது புதுமை இல்லை பதுமையே” எனக்கூறாமல் மூத்தபள்ளி வணங்கும் இராமனை வசைபாடுகிறாள்.

காதலித்து தம்பியுடன் சீதை பொருட்டால் – அன்று

கடலேறிப் போனான் உங்கள் கண்ணன் அல்லோடி

 

எனச் சாடுகிறாள். “பெண்ணாசை கொண்டே இராமன் தான் மட்டுமின்றி தம்பியையும் துணைக்கு அழைத்துப்போனான். அதுவும் கடல்கடந்துபோனானே. இது அழகா?” எனக் கேட்கிறாள். மனைவியை, “கண் போல் காப்பதால்தான் கணவன். அவன் அவ்வாறு செய்துது தானே அழகு” எனக் கூறாமல் தொடர்ந்து சிவனைச் சாடுகிறாள் மூத்தபள்ளி.

     இவ்வாறு மூத்தபள்ளியும் இளையபள்ளியும் சண்டையிட்டுக்கொள்வதாகக் காட்டுவது, முக்கூடற்பள்ளினை இயற்றிய பெயர்தெரியாத புலவரின் புலமை விளையாட்டுதானே. எத்தனை வரலாறுகளை ; திருவிளையாடல்களை, பெண்கள் இருவருடைய சண்டையின் வழி வெளிப்படுத்தியுள்ளார்.

     அந்நியர்கள், தமிழர் செல்வத்தை கொள்ளை அடித்துக் கப்பல் கப்பலாக ஏற்றிக்கொண்டு போனது கொடுமை எனில், இலக்கியச் செல்வங்களை எரியூட்டி அழித்தது கொடுமையிலும் கொடுமைதானே. இத்தனை பாவங்கள் செய்தாலும் உலகை இணைக்கும் பாலமாய் தமிழ்மொழி திகழ்கிறதெனில், தன்னிகரற்ற மொழிதானே தமிழ்.

******************

வெள்ளி, 9 ஜூலை, 2021

தமிழில் விளையாடிய ஔவையார்

 


தமிழில் விளையாட்டு

     ‘தமிழ்’ மூன்றெழுத்து முத்து. அது மூவுலகையும் மகிழ்விக்கும் அருமொழி. அதனால்தான், எவ்வளவு காலமாகவோ தமிழ்மொழியை, தமிழரே படிக்கக் கூடாதென எத்தனையோ ஆங்கிலப்பள்ளிகள் தடுத்து நின்றாலும் தமிழின் பெருமையினைக் குறைக்கமுடியவில்லை. ஏனெனில், இது தெய்வத்தமிழ். தமிழுக்கு எதிராக நின்றோரெல்லாம் தமிழ்ப்படித்து மயங்கி நின்றார் ; தமிழுக்கு உறவானார் ; நூல் படைத்தார்.  உருகி நின்றார் ; தமிழராக இறப்பதிலே பெருமை கொண்டார் ; அடுத்த பிறவியில் தமிழராகப் பிறந்திடவே வேண்டி நின்றார். உலகமொழிகளிலேயே ஒரு மொழிக்குத்தலைமையாகத் தெய்வமே இருக்கிறதெனில், அது தமிழுக்கு மட்டும்தான். ‘தமிழ்க்கடவுள் முருகன்” சினந்து நின்றபோது தமிழால் திருத்திய ‘தமிழ் மூதாட்டி’ ஔவையின் தமிழறிவை அறியாதார் யார்?

     ஔவையாரின் தமிழ் விளையாட்டு ஒன்றைப்பற்றிப் பேசுவோமா?. இவ்விளையாட்டு கவிச்சக்கரவர்த்தி கம்பரிடம். முத்துக்களை இருவரும் வாரி இரைத்தால் மகிழாதார் யார்?

  கம்பன் ஔவையைக் கண்டு புதிர்போடுகிறார். அதனை விடுவிக்கவேண்டும் என்பதே விளையாட்டு.

ஒருபுதிரை – இரு பார்வையில் நோக்குவோம்

முதல் பார்வை:

     “ஒரு காலடி நாலிலைப் பந்தலடி” இதுவே புதிர்.

ஒரு காலுடையது. நான்கு இலைகள் உள்ளது எது? என்பதனை ஒரே அடியில் இரண்டு அடி’ போட்டுக் கேட்கிறார்.

விளையாட்டு என்றாலும் விதிமுறைகள் இருக்கும்தானே? விதிமுறை இல்லாத விளையாட்டு ஏது? ஆனால், கம்பன் மகழ்ச்சியில் மதிப்பின்றி விளித்துவிடுகிறார்.

இதைக் கேட்டு ஔவையார் விட்டுவிடுவாரா? மகாகவி காணாத புதுமைப்பெண்ணாயிற்றே அவர்.

எட்டே கால் இலட்சணமே எமன் ஏறும் வாகனமே பரியே

மட்டில் பெரியம்மை வாகனமே – முட்டமேல்

கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாய் அடாது.  (ஔவையார் பாடல்)

 

எட்டே கால் இலட்சணமே : அகரம் எட்டைக் குறிக்கும். வகரம் கால் அளவினைக்        குறிக்கும். எனவே எட்டேகால் என்பது அ+வ = அவ என வரும்தானே.  எனவே அவலட்சணமே என்பது முதல் வசை.

எமன் ஏறும் வாகனம் : எருமை - இரண்டாம் வசை

பெரியம்மை வாகனம் : ஸ்ரீதேவிக்கு மூத்தவளான மூதேவியின் வாகனம் – கழுதை –   மூன்றாம் வசை.

கூரையில்லா வீடு : குட்டிச்சுவர் – நான்காம் வசை.

குலராமனின் தூதுவன் : குரங்கு – ஐந்தாம் வசை

ஆரையடா  : ‘ஆரைக்கீரை’தான் விடை என்றாள்.

சொன்னாய்? : சொல் நாய் – ஆறாம் வசை

அடா : மதிப்பு குறைவாக சொல்லுதல்.

என்னே புலமை?  ‘ஆரைக்கீரை’ என விடையை நேரடியாகக் கூறாமல் பாடலில் சொல்லும் அழகே அழகுதானே?. ‘முள்ளை முள்ளால்தானே எடுக்கமுடியும்’ என இரண்டு ‘அடி’ போட்டு மதிப்பின்றி விளித்துப்பாடிய புலவனை ‘அடா’ என இரு முறை கூறியதோடு ஆறு வசைச்சொற்களுடன் பாடினார்.

இது இருவரும் அரங்கேற்றிய நாடகமாகத்தான் இருக்கும். மக்கள் மதிப்புடன் பேசப்பழகவேண்டும் என உணர்த்துவதற்காகவே இந்நாடகம். இல்லையெனில், ஒழுக்க சீலரான இராமனையும், பொறுமைக்கு பெருமை சேர்த்த சீதையையும் பாடிய கம்பர் தமிழ் மூதாட்டியை இப்படிப் பாடி இருப்பாரா? இல்லைதானே. இப்படி எண்ணுவதால் யாருக்கும் கேடில்லை எனில் இப்படியே எண்ணுவோம்.

இரண்டாவது பார்வை

கவிச்சக்கரவர்த்தி தமிழ்மூதாட்டியை மதிப்பின்றி பேசியிருக்கமாட்டார். “ஔவையார், இவ்வாறு பாடியது தவறு” எனக் கம்பரின் அடியார் ஔவையாரின் அடியாரிடம் கேட்கிறார்.

“ஒரு காலடி நாலிலைப் பந்தலடி”

என்பதன் முதல் ‘அடி’ அளவினைக் குறிக்கும். ஆரைக்கீரையினது காம்பு ‘கால் அடி’ என்னும் அளவினைத்தானே குறிப்பிட்டார். இரண்டாவது ‘அடி’யானது ‘கீழ்’ என்னும் பொருளினைக் குறிக்கிறது. நான்கு இலைகள் கீழே அந்த காம்பு உள்ளது என்பதனை உணர்த்தவே அவ்வாறு பாடினார் எனக் கூறுகிறார்.

 உடனே ஔவையாரின் அடியார் விடையளித்தார். அவர்மட்டும் புலமையில் குறைந்தவராகவா இருப்பார்?. கம்பரைப் போலத்தான் ஔவையாரும் மதிப்புடன் பாடியுள்ளார் எனக் கூறினார்.  “ஔவையாருடைய பாட்டில் குற்றம் இல்லை. உம் நோக்கில்தான் குற்றம் இருக்கிறது.” என்றார்.

     எட்டே கால் இலட்சணமே : எட்டி அடிவைத்து விரைந்து நடக்கும் கால் அழகன்.-                                                                                   முதல் வாழ்த்து

     எமன் : எமக்கு உற்றவனே – இரண்டாம் வாழ்த்து

ஏறும் வாகனம் : வளர்கின்ற செல்வம் உடையவனே - மூன்றாம் வாழ்த்து

முட்டமேல் கூரையில்லா வீடு : இணையற்ற உலகமாகிய தேவலோகம்                                        போன்றவனே –நான்காம் வாழ்த்து

குலராமனின் தூதுவன் :  இராமனின் பெருமைகளை எடுத்தியம்பியவனே –

ஐந்தாம் வாழ்த்து

ஆரையடா  சொன்னாய் : ஆரைக்கீரை புதிரை என்னிடமா சொன்னாய் ?

அடா : வெற்றிகொள்ளமுடியுமா? முடியாது.

என வாழ்த்தித்தானே பாடியுள்ளார். சரியாகப் பாருங்கள் என்றார்.

     புலவர்கள் தமிழில் விளையாடுவதும், புலவரின் வழித்தோன்றல்கள் தமிழில் விளையாடுவது அழகுதானே. பாடல் இயற்றிய புலவரின் உள்ளத்தை அவரன்றி யாரறிவார்? எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பொருள்கொண்டு மகிழலாம். ஆனால், அது ‘பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ?” என வருந்தும் அளவிற்கு இல்லாமல் பார்த்துக்கொள்ளுதல் நன்று. வள்ளலார் வழியில் சென்றால் அனைவருக்கும் நன்மைதானே?

 

************

வியாழன், 8 ஜூலை, 2021

சிரிக்கலாம் வாங்க

 


சிரிக்கலாம் வாங்க

     காலை முதல் மாலை வரை எப்போதும் உழைத்துக் களைத்தவர்களுக்கு கடவுள் அளிக்கும் பரிசு – சிரிப்பு.

    கணவன் மனைவியைக் கொண்டு அமையும் சிரிப்புகளுக்கே முதலிடம். ஏனென்றால், நண்பர்கள் உறவுகூட நகைச்சுவையால் முறியும். ஆனால், மனைவி கணவன் என்ன கூறினாலும் ரசிப்பர். இருவரும் பெருமையுடையவர்கள்தானே. அந்த எண்ணத்தில் எழுந்தனவே இவை.

 

நகை:1

மனைவி:

ஏங்க ஒரு வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருக்கீங்க. உங்க நண்பர்தான் முடிவெட்டும் வேலைக்கு அழைத்தாரே. போகலாமில்லையா?

கணவன்:

தண்ணிபோட்டு முடிவெட்டச்சொல்றான். அதனால்தான் போகலை.

 

நகை:2

 

கணவன் : இரண்டு வருஷத்துக்கும் முன்னாடி என்னை விவகாரத்து செய்திட்டு இப்ப ஒன்னா சேர்ந்து வாழாலாம்னு சொல்றியே. ஏன்?

மனைவி :

ஏனா? நான் இல்லாம நீ சந்தோஷமா இருக்கிறத பார்க்கும்போது எப்படி இருக்கும் தெரியுமா?, அதுக்கு இதுவே தேவலாம்னு தோணுது. அதான்.

 

நகை :3

கணவன்:

நல்ல மனைவி இருந்தாதான், நல்ல குடும்பம்னு  ஊர் பாராட்டும். தெரியுமா?

மனைவி:

ஆமா, உண்மைதான் அப்படி இருந்திருந்தா உங்கம்மா  உங்கள ஒழுங்கா வளர்த்திருப்பாங்களே.

 

நகை: 4

கணவன்:

ஏம்மா ஏன் உன் தோழி வீட்டுக்கு வாசப்படியே வெக்கலை?.

மனைவி:

அப்பதான. படி தாண்டா பத்தினின்னு பாராட்டுவாங்களாம்.

 

நகை:5

மனைவி:

ஏங்க நீங்க படிக்கிற புத்தகத்தில் என் படத்தை வெச்சிருக்கீங்க?.

கணவன்:

இந்தப் பக்கம்வரைதான் படிச்சுருக்கோம்னு அடையாளத்துக்காகத்தான்.

 

நகை: 6

மனைவி:

ஏங்க. வெளிநாட்டுக்காரங்க மனைவியைக் கைபிடித்து அழைச்சுட்டு போறாங்க.

கணவன்:

அவனுக்கு இன்னுக்கு இருக்கும் மனைவி அவதான்னு மறந்திடும் அதான்.

 

நகை: 7

மனைவி:

எனக்கு கணக்கு நல்லா தெரியுமுன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க.?

கணவன்:

நீ தினமும் வீட்டைக் கூட்டிப் பெருக்கிறத வெச்சுத்தான்

 

நகை: 8

மனைவி:

நன்கொடைன்னு யார் கேட்டாலும் புண்ணியமுன்னு கொடுக்கிறீங்களே. அவங்க நல்லவங்களா தெரியுமா?

கணவன்:

கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி பார்த்துபார்த்துதான் செய்யாமவிட்டேன். இப்ப அனுபவிக்கிறேன்.

 

நகை:9

மனைவி:

மார்கழி மாசத்தில நோன்பு இருந்தா நல்ல வாழ்க்கைத்துணை அமையும்னு சொன்னாங்க. அதை ஒழுங்கா செஞ்சேன். நீங்க கெடச்சீங்க.

கணவன்:

அதை நான்  செய்யாததனாலே நீ கெடச்ச.

 

நகை: 10

எங்கம்மா அம்மில சட்னி அரைப்பாங்க. இப்பல்லாம் மிக்ஸி. வாசனையே வரலை.

மனைவி:

இனிமே நீங்க மிக்ஸியை, திறந்துவெச்சு அரைங்க. மூக்குக்கு வாசனையில்ல, வாய்க்குச் சட்னியே வரும்.

 

நகை: 11

மனைவி:

மனைவிக்கும் மைக்செட்டுக்கும் போட்டி வெச்சா யார் ஜெயிப்பாங்க.?

கணவன்:

மைக்செட் கரெண்ட் இல்லனா வேலை செய்யாதே.

 

நகை: 12

கணவன்:

கல்யாணத்துக்கு பின்னாடி சண்டை இல்லாம வாழமுடியாதா?

மனைவி:

முகமுடி போட்டுக்குட்டு சாப்பிடமுடியுமா??

 

நகை: 13

மனைவி:

காதலிக்கும் மனைவிக்கும் என்ன வித்தியாசம் ?

கணவன்:

செல்ஃபோனில் மெதுவா பேசினா காதலி.  செல்போனில்லாம சத்தமா பேசினா மனைவி.

 

நகை: 14

மனைவி:

ஏங்க. எப்ப பாத்தாலும் ஃபோனும் கையுமா? நானும் அப்படி பேசட்டுமா?

கணவன்:

அப்படி பேசாதே? இது ஆண்ட்ராய்டு ஃபோன். பெண்ராய்டு  வந்தா நீயும் பேசலாம்.

 

நகை:15

கணவன்:

என்கூட ஆஃபிஸ்ல வேலை செய்றவர்,  நரின்னு திட்டிட்டார்.

மனைவி:

அவருக்கு அறிவிருந்தா நரின்னு திட்டுவாரா? நரிக்கு யோசிக்கும் புத்தி இருக்குமுன்னுகூட தெரியலை. அவர் திட்டினதபோய் பெரிசா எடுத்துக்கிறீங்களே?

 

**********

 

 

செவ்வாய், 6 ஜூலை, 2021

கவனமா இருங்க – ஔவையாரின் அறிவுரை

 


கவனமா இருங்க – ஔவையாரின் அறிவுரை

     ஒருவன் காட்டின் வழியே அடுத்த ஊருக்குச் செல்ல வேண்டுமெனத் தன் பாட்டியிடம் விடைபெற்று செல்கிறான். அப்போது பாட்டி, “காட்டில், ‘புலி’ என்ற கொடிய விலங்கு இருக்கும். அது கூர்மையான நகங்களுடன் இருக்கும் ; வரிகளுடன் இருக்கும் ; நான்கு கால்களுடன் இருக்கும் ; கூரிய பார்வை மற்றும் மீசையுடன் இருக்கும் ; அச்சத்தை உருவாக்கும் ; பதுங்கும் ; பின் பாயும். ஒரே அடியில் கொன்றுவிடும் கவனமாகச் செல்லவேண்டும்” என அறிவுறுத்தினாள்.  “சரி, நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று வீட்டை வீட்டு வெளியே சென்றவன் ஐந்தே நிமிடத்தில் ஓடி வருகிறான்.

“பாட்டி நீ சொன்ன மிருகம் வந்துவிட்டது. அதனால்தான் வந்துவிட்டேன்.” எனப் பதற்றத்துடன் கூறினான். “எங்கே இங்கெல்லாம் புலிவராதே. சரி ! வா,” எனத் தீப்பந்தத்தை எடுத்துச் செல்கிறாள். “புலியைக் காணவில்லையே” என்றாள். அப்போது ஓரமாக நின்று “மியாவ் மியாவ்” என ஒரு விலங்கு கத்துகிறது. “இதோ நீங்க சொன்ன புலி என்றான் பேரன். “அடக்கோழையே ! இது, புலியில்லை பூனை” என்றாள். “கொடியில் சிக்கிக்கொண்டிருக்கிறதே” எனக் கூறிக்கொண்டே அந்தப் பூனையைக் கொடியிலிருந்து விடுவித்தாள். பூனை நன்றி கூறுவதுபோல் அவளுடைய காலைச் சுற்றிவந்து ஓடிவிட்டது.  

இரண்டு நாள் ஓடியது. பேரன் மறுபடியும் பாட்டியிடம் விடைபெற்றுச்செல்கிறான்.  . அப்போது காட்டின் வழியே செல்லும்போது ஒரு புலி பள்ளத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறது. உடனே, தன் பாட்டி உதவி செய்ததை எண்ணி, பக்கத்திலிருந்த நீளமான மரக்கட்டையை எடுத்து சறுக்குமரம்போல் போட்டான். புலி, உடனே எளிமையாக அக்கட்டையில் ஏறிவந்து, ஒரே அடி அடித்து அவனைக் கொன்றுவிட்டது. பேரனின் அறியாமையே அவனைக் கொன்று விட்டது. ஒவ்வொரு விலங்கின் இயல்பினை அறிந்துகொண்டால் மட்டுமே அந்த விலங்கிடமிருந்து காத்துக்கொள்ளமுடியும்.

     ஒரு விலங்கின் இயல்பை அறியாதவனே கொல்லப்படுகிறான் எனில், பல விலங்கின் இயல்பினைக் கொண்ட மனிதர்களுடன் பழகும்போது எப்படி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும். அப்படி எச்சரிக்கையாய் இல்லாவிட்டால் என்னாகும், என்பதனை,

     வேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி

ஆங்குஅதனுக்கு ஆகாரம் ஆனாற்போள் - பாங்கறியாப்

புல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்

கல்லின் மேல் இட்ட கலம். (மூதுரை-15)

 

என்னும் பாடலின்வழி தமிழ் மூதாட்டி ஔவையார் அழகாக உணர்த்திவிடுகிறார்.

மருத்துவர்கள், தம்முடைய அறிவால், பிறருடைய  உயிரைக்காத்து நிற்கின்றனர். அதனால்தானே, அவர்களைக் கடவுளாக எண்ணுகிறோம். மிகவும் கருணை உடையவர்களாக வாழும் மருத்துவர்கள் பிற உயிர்களின் துன்பத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். ஆனால், அவர்கள் தங்கள் பாதுகாப்பையும் உணரவேண்டும்தானே? உங்களுக்கு ஒரு கதை சொல்லட்டுமா? எளிமையாகப் புரிந்துகொள்வீர்கள்.

     ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமையாக்க, இந்திய வீரர்களை வேட்டையாடிக்கொண்டிருந்த காலம். ஆங்கிலேயர்கள், ஆயுதமில்லாத இந்தியர்களை ஆயுதம் கொண்டு தாக்கி ; துன்புறுத்தி ; சித்திரவதை செய்து கொன்றுகுவித்த காலம். துணிவுடன் எதிர்த்த தலைவர்களின் தலையைக்கொய்து, நடு சாலையில் பல நாட்கள் தொங்கவிடுவர். இவ்வாறு அச்சத்தை ஏற்படுத்தி அடிமைப்படுத்திய கோழைகளாகவே ஆங்கிலேயர் விளங்கினர்.  நெல்மணிகளை பயிரிட தடைவிதித்து வறுமையில் உழலவைத்தனர். வணிகம் செய்யவிடாமல் தடுத்தனர். தலைப்பாகையுடன் பெருமிதத்துடன் வாழ்ந்த ஊர்த்தலைவர்களையெல்லாம் ஆயுதத்தால் தாக்கி, அச்சத்தை ஊட்டி, ஆடையைக் கழற்றி ஓடஓட விரட்டியடித்தனர். நம் நாட்டில் காட்டிக்கொடுக்கும் குணமுடைய சிலரைத் தம்முடன் வைத்துக்கொண்டு, விடுதலை வீரர்களை வேட்டையாடினர்.

ஒரு முறை, விடுதலை வீரர்கள் இருவரைத் துரத்திக்கொண்டு ஆங்கிலப்படை வீர்ர்கள் (அவர்களுள் பலர் இந்தியர்கள்தான் ஆங்கிலேயரிடம் இருந்துதப்பிக்க அவர்களுடன் கூட்டுசேர்ந்து காட்டிக்கொடுத்தவர்கள்)  வருகின்றனர். ஒரு வீட்டிற்குள் இரண்டு வீரர்களும் நுழைந்துவிடுகின்றனர். அங்கு நின்ற பெண்மணியிடம் “நாங்கள் விடுதலை வீர்ர்கள், எங்களை ஆங்கிலப்படை துரத்துகிறது” எனக் கூறுகின்றனர். அந்தத்தாய், அவர்களை தானிய அறையில் மறைந்துகொள்ளும்படி கூறித்தாழிட்டுவிடுகிறாள். கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. அவள்,  படபடப்புடன் கதவைத் திறக்கிறாள். “என்ன, இங்கே ஓடிவந்த இரண்டு பேர் எங்கே?” எனக் கேட்கின்றனர். “இதோ எனக் கைகாட்டுகிறாள். போர்வைக்குள் ஒளிந்திருக்கிறார்கள் என எண்ணி பல குண்டுகளால் இருவரையும் சுட்டனர்.  “இனி, விடுதலை வீரன் என எவர் வந்தாலும் இடம்கொடுக்கக் கூடாது” எனக்கூறிச் சென்றுவிட்டனர். அவர்கள் சென்றதை உறுதிசெய்துகொண்டு தாழினைத் திறக்கிறாள். வெளியே வந்த வீரர்கள், அங்கே இறந்துகிடந்த இரண்டு இளைஞர்களைக் கண்டு “தாயே ! யார் இவர்கள்?” எனக் கேட்கிறார்கள். “என்னுடைய இரண்டு மகன்கள்” என்கிறாள். “ஏன்? எங்களைக்காட்டிக்கொடுக்காமல் எங்களைக்காக்க உங்கள் மகன்களை இழந்த்தீர்” எனக் கேட்கிறான். “என்னுடைய மகன்களை இழப்பதால் எனக்கு மட்டுமே இழப்பு. ஆனால், உங்களைப்போல நாட்டின் விடுதலைக்காகப் போராடும் வீரர்களை இழந்தால் நாட்டிற்கே இழப்பாயிற்றே”. எனக்கூறி அழுகிறாள். உள்ளம் நெகிழ்ந்த வீரர்கள், “உம்போன்ற வீர்த்தாய்மார்களால்தான் நாடு விடுதலைப்பெறப்போகிறது” எனக்கூறி, காலில் விழுந்து வணங்கி விடைபெறுகின்றனர். என்ன எங்கிருந்து எங்கோ தாவிவிட்டீர் என்கிறீரா. எல்லாம் காரணமாகத்தான். இரக்ககுணத்தை நல்லோரிடம் காட்டலாம் தீயோரிடம் காட்டக்கூடாது. காட்டினால் என்னாகும் என்றுதானே கேட்கிறீர்.?

விடத்தை நீக்கும் மருத்துவர், பாம்பு கடித்த புலியின் விடத்தை நீக்குகிறார். விடம் நீங்கியபுலி மருத்துவரையே அடித்துக்கொன்றுவிடுகிறது. இவ்வாறு, நன்றி உணர்வில்லாதவர்களுக்கு ஒருவர் உதவிசெய்தால், மண்ணால் செய்யப்பட்ட கலத்தைப்பாறையில் போட்டு உடைப்பதைப்போல அவ்வுதவியினை மறந்து உதவிசெய்தவர்க்கே கேடு செய்வர் என விடை சொல்கிறார் தமிழ்முதாட்டி. பாட்டி சொல்லைத் தட்டலாமா? தட்டக்கூடாதுதானே?.