தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 14 ஆகஸ்ட், 2021

ராணி காயிதின்லியு : ‘மலையின் மகள்’

 



ராணி காயிதின்லியு : ‘மலையின் மகள்’

என்னை எங்காவது வெளியில் அழைத்துச்செல்கிறீர்களா? எனக் கேட்காத குழந்தைகள் உண்டா? அல்லது பெரியவர்கள்தான் உண்டா? சுதந்திரமாகத் திரிவதில் இருக்கும் சுகமே சுகம்தான். எல்லாவசதிகளும் இருந்தாலும் நான்கு சுவர்களுக்குள் சிறைபட்டிருப்பது கொடுமைதானே. அப்படித்தான் ஆங்கிலேயர்கள் இந்தியர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்.  அதனை எதிர்த்துப்போராடியவர்கள் வேர்களைப் போல் அடையாமல் காணப்படாமலே மறைந்துவிட்டனர். அவர்களைக் கண்டறிந்து நினைவுகொள்வது நல்லோர் கடமை.

  ராணி காயிதின்லியு, நாகா இனத்தைச் சார்ந்த ஆன்மிகத்தலைவராகப் போற்றப்பட்டவர். தம் மக்களை ஆங்கிலேயர்கள் மலைவாழ்மக்களின் சமயத்திலிருந்து மாற்றியதால் அவர்களை எதிர்த்துப்போராடினார்.

ஆயுதமேந்தி வருபவர்களுக்கு நேராகப் புறாக்களை விடுவதும் மலர்களைக் கொடுத்து அமைதிப்பேச்சு நடத்துவதும் தவறென எண்ணியவர் அவர். எதிரிகள் எந்தமொழியில் பேசுகிறார்களோ அதே மொழியில் பேசினால்தான் அவர்களுக்குப் புரியும் என்னும் கொள்கையை முன்னிறுத்தியவர். ஆயுதத்தால் அடக்கிய ஆங்கிலேயரை ஆயுதம் கொண்டே எதிர்த்தவர்.    26 ஜனவரி 1915 இல் மணிப்பூர்  அருகில் ‘நுங்கோ’ என்னும் இடத்தில் பிறந்தார். நாகா மக்களிடையே பெரும் இனமாக விளங்கிய ‘ரோங்க்மீ’ என்னும் மலைவாழ்மக்கள் இனத்தில் பிறந்தார். கற்றுக்கொள்ளக்கூடிய ஆர்வமும் திறமையும் உடையவராக இருந்தாலும் பள்ளிகள் இல்லாததால் அவரால் முறையான கல்வியைக் கற்கமுடியவில்லை. ஆங்கிலேயர்கள் அங்குள்ள மக்களையெல்லாம் தம்சமயத்துமக்களாக மாற்றுவதில் தீவிரம் காட்டினர். இதனை எதிர்த்து, இவருடைய உறவினர் ‘ஜெடாநங்க்’ தோற்றுவித்த ‘ஹெரேகா’ என்னும் இயக்கத்தில்தான் தம்மை இணைத்துக்கொண்டார். பழமையான ‘நாகா’ மக்களின் பண்பாட்டைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார். இவருடைய இனக்குழுவுடன் பிற இனக்குழுக்களும் தம் இனப் பண்பாட்டினை ஆங்கிலேயரிடமிருந்து மீட்பது குறித்து எண்ணி ஆங்கிலேயருக்கு எதிராகப்போராடத்தொடங்கினர்.  ஆங்கிலேயர்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டு வருந்தினர். எனவே, பெண்குழந்தைகளையும், மகளிரையும் இணைத்துக்கொண்டார். பெண்களும் தம்முடைய வீரத்தை வெளிப்படுத்த இவ்வாய்ப்பை மகிழ்வுடன் ஏற்றுப் போராடினர்.

துப்பாக்கிகளைக் கண்டறியாத மலைவாழ்மக்களை ஆங்கிலேயர்கள் அன்றைய புதியகண்டுபிடிப்புகளானத் துப்பாக்கிகளைக் கொண்டு கொன்றுகுவித்தனர். எனவே, மறைந்திருந்து தாக்கும் கொரில்லா போர் முறையிலேயே ஆங்கிலேயரை எதிர்த்தனர்.  “சுதந்திரம் எங்களது பிறப்புரிமை” என்னும் விடுதலை மந்திரத்தை முழக்கிய பாலகங்காதர திலகரின் பொன்மொழியினைப் பின்பற்றினார். “நாங்கள் சுதந்திரமான மனிதர்கள். வெள்ளைக்காரர்கள் எங்களை அடிமைப்படுத்தக்கூடாது’ என்னும் முழக்கத்துடன் போராடினார்.

1931 ஆம் ஆண்டு தமது உறவினரான ‘ஹெரேகா இயக்கத்தின் தலைவர் ஜடோனங்க்,-ஐ கைது செய்து தூக்கிலிட்டது. உடனே  ஆங்கிலேயரைக் கண்டு அஞ்சாது, குருவாகத் தாம் எண்ணிய ஜடோங்கின் தலைமைப்பொறுப்பினை கயிதான்லியு ஏற்றுக்கொண்டார். மக்களுக்குத் தன்னம்பிக்கையூட்டுவதற்காகவும் தலைமையின்றித் தடுமாறாமல் இருக்கவும் தம்இனத்தைக் காப்பதே முதல் கடமை என விழிப்புணர்வூட்டினார். ஆங்கிலேயரின் சதி வலையில் சிக்காதீர். என மக்களுக்கு அறிவுறுத்தினார். தேசிய உணர்வினை உண்டாக்கினார். நாட்டுப்பற்று இருந்தால்தான் பண்பாட்டினைக் காக்கமுடியும் எனத் தெளிவுறுத்தினார். மத அமைப்புகள் மக்களை அடிமைப்படுத்தும் வேளையில் ஆங்கிலேயருக்கு ஆதரவாக நின்றன. எனவே இவர் மதத்துவ அமைப்புகளையும் எதிர்த்தார். இவரைக் கண்டுபிடிக்க முடியாமல் ஆங்கிலேய அரசு திணறியது. மேலும், கண்டுபிடித்துத்தருவோர்க்கு 500 பணமும், பத்தாண்டுகளுக்கான வரிவிலக்கும் அளிக்கப்படும் என அறிவித்தது. ஆனால் மக்கள் அவரைக் காட்டிக்கொடுக்கவில்லை. ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் நின்றனர். அத்தனை மதிப்புக்கொண்டிருந்தனர். அன்று அப்பகுதியில் பலரும் இவருடைய பெயரையே வைத்திருந்தனர். இதனால் காவல்துறை திண்டாடியது.   மக்கள் கொண்ட ஈடுபாட்டால் காவலர்களிடம் சிக்காமலே போராடினார்.  மரத்தால் கோட்டை கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுது ‘புலோமி’ கிராமத்தில் இவரை ஆங்கிலேயர் கைதுசெய்தனர்.

1932 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 16. ஆயுள்தண்டனை வழங்கப்பட்டது. அவருக்குத் துணை நின்றவர்களுக்கும் ஆயுள்தண்டனையும் தூக்குத்தணடனையும் வழங்கப்பட்டன. 1933 முதல் 1947 வரை பதினைந்து ஆண்டுகள் பல்வேறு சிறைகளில் அடைத்துக் கொடுமை செய்தனர். பதினைந்து ஆண்டுகள் விடுதலைப்போராட்டத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டவர் இவரே.  நாட்டு விடுதலைக்குப் பின்னரே விடுவிக்கப்பட்டார். விடுதலையான பின்னரும் இவர் ‘நாகா’ மக்களின் பண்பாடு மறைந்துபோவதனைக் கண்டு மனம்வருந்தினார். மலைவாழ்மக்களின் பண்பாட்டை விட்டுவிட்டு ஆங்கிலேயர் மதத்திற்கு ‘நாகா’ மக்கள் மாற்றப்படுவதனை எதிர்த்துப் போராடினார்.  எனவே மக்கள் இவரை அவர்களுடைய கடவுளாகவே பார்த்தனர்.  வடகிழக்கு மாநிலங்களின் விடிவெள்ளியாகவே இவர் விளங்கினார். நாகா மக்களின் தெய்வமான ‘சேராச்சாமுண்டி’ -இன் வடிவமாகவே இவரைக்கண்டனர். 

ஆங்கிலேயர்களை எதிர்த்துப்போராடிய இவரை 1937 இல்  சிறையிலிருந்தபோது பண்டிட் ஜவஹர்லால் நேரு சந்தித்து அவர் விடுதலைக்கு உறுதியளித்தார்.  ‘ராணி’ என்னும் பட்டத்தை வழங்கினார். தியாகியான இவருக்கு 1982 ஆம் ஆண்டு ‘பத்மபூஷன்’ விருதும் வழங்கியது. ‘விவேகானந்தா’ சேவைவிருது 1972 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தியாகிகளுக்காக வழங்கப்படும் ‘தாமரைப்பத்திர’ விருதும் வழங்கப்பட்டது.  1993 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் பதினேழாம் நாள் 78 வயதில் மறைந்தார். இவருக்கும் ‘பிர்ஸா முண்டா’ விருதும் இறப்புக்குப்பின் வழங்கப்பட்டது. அவர் மறைந்தாலும் இன்றும் அவருடைய வீரம் கொண்டாடப்படுகிறது.

‘மலையின் மகள்’  என ராணி கயிதன்லியு கொண்டாடப்படுகிறார். மக்களுக்காகப் போராடியவர்களின் வரலாறுதான் மக்களுக்கு வழிகாட்டுதலாக அமைகிறது. எத்தனையோ மழைத்துளிகளின் தியாகத்தால்தானே நிலம் செழிக்கிறது. இப்படி எத்தனையோ தியாகிகளின் இரவு பகல் பாராத உழைப்பால்தான் நாடு பாதுகாப்புடன் திகழ்கிறது.

 

வியாழன், 12 ஆகஸ்ட், 2021

படிப்பு எதற்கு ? - கடவுளே சொன்ன கதை

 


படிப்பு எதற்கு ? - கடவுளே சொன்ன கதை

“கடவுளே ! படிக்காத குழந்தையா கொடு” மருத்துவமனையில் பிரசவப்பிரிவுக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த கணவன் வேண்டுகிறான். “குழந்தை பிறக்க வைப்பதுதான் என் பொறுப்பு. அதற்குப் பின் நீதான் குழந்தையை வளர்க்கிறாய். படிக்கவைப்பதும் மறுப்பதும் உன் பொறுப்பு. புரிகிறதா” என்றார் கடவுள். “என்ன கடவுளே. இப்படி சொல்லிவிட்டீர்” என்றான் அந்த பக்தன். “சரி! கவலைப் படாதே ! அந்த வேலையைத் திரைப்படமும் தொடர்களும் பார்த்துக்கொள்ளும். இல்லாவிட்டால் மதுவும், புகையும் பார்த்துக்கொள்ளும். அதுவும் இல்லையெனில் தீய பழக்கமுடைய நண்பர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று கடவுள் சொல்கிறார். “அப்படியென்றால் என்மகனை நீ இந்த நிலையிலிருந்து காப்பாற்றமாட்டாயா?” எனக்கேட்கிறான். “யார் என்ன கேட்கிறார்களோ அதைத்தான் கொடுப்பேன். எது நல்லது? எது கெட்டது ? யாரை நம்பவேண்டும்? யாரை நம்பக்கூடாது? என்னும் தெளிவையும் கொடுத்துவிட்டேன். வேறு என்ன செய்யவேண்டும்” எனக் கடவுள் கேட்டார். வேறு எதுவும் பேசமுடியாமல் திகைத்துவிடுகிறான் பக்தன்.

அந்த இடைவெளியில் கடவுள் கேட்கிறார் “நான் ஒன்று உன்னைக் கேட்கட்டுமா?”. “கேளுங்கள்” என்றான் பக்தன். “நீ எதற்குப் படிக்காத குழந்தையைக் கேட்கிறாய்” என்றார் கடவுள். “படித்தால் வேறு எந்த வேலையும் செய்யமாட்டன். குழந்தை படிக்கிறான் என எந்த வேலையும் சொல்லவும் முடியாது. கடைக்குச் செல்லவும், திருமணம், விழாக்கள் என எந்த விழாக்களுக்கு அழைத்துச்செல்லவும் முடியாது. திருநீறு அணிவது, கயிறுகட்டுவது பொட்டுவைத்துக்கொள்வது என எந்தப் பழக்கவழக்கமும் பின்பற்றமுடியாது. தாய்மொழியில் பேசமுடியாது. பிறமொழியில் பேசத்திணறவேண்டும். தாய்மொழியில் பேசினால் தண்டம் விதிப்பார்கள். எந்தக்கேள்வியும் கேட்கமுடியாது. கேட்டால் வீட்டுக்கு அனுப்பிவிடுவோம் என அச்சுறுத்துவார்கள். படித்தால் இப்படி எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன” எனக் கூறினான் பக்தன். “அடடா ! இவ்வளவு பிரச்சினைகளா ! இது எதுவும் தெரியாமல் நாள்தோறும் எத்தனையோபேர் என்னிடம் வந்து என் பிள்ளைக்கு நல்ல படிப்பைக்கொடு” என என்னிடம் வேண்டுகிறார்களே” என்றார் கடவுள்.

     “அப்படித்தான் வேண்டுவார்கள் கடவுளே. காலம் போகப்போகத்தான் குழந்தைகளின் மனநிலையை சரியாக்குதல் எத்தனை கடினம் என்பது புரியும். குழந்தையாக இருக்கும்போதுதான் அவர்களைப் பாதுகாப்பது கடினம். ‘வளர்ந்தபின்னாலே நிம்மதியாக இருக்கலாம்’ என எண்ணுவார்கள். ஆனால் காலம் செல்லச்செல்ல அவர்களுக்கு பிரச்சினைகள் பெருகிக்கொண்டுதான் இருக்குமேயன்றி குறைவதில்லை. அப்போதுதான் உன்னிடம் வருவார்கள் கடவுளே” என்றான். “நீ மட்டும் எப்படி பிறப்பதற்கு முன்னரே கேட்டுவிட்டாய்” என்றார் கடவுள்.

     “அதுவா! நேற்று எங்கள் வீட்டுப் பக்கத்துவீட்டில் ஒரு கோடீஸ்வரர் இறந்துவிட்டார். அவர் பிணத்தை எரித்து சடங்குகளைச்செய்ய வெளிநாட்டில் பணிசெய்துகொண்டிருந்த மகனை வரச்சொன்னார்கள். “வீடியோ காலில் வாருங்கள். இங்கிருந்தே கொள்ளிவைத்துவிடுகிறேன். நீங்கள் தொடர்ந்து சடங்குகளைச் செய்துவிடுங்கள்” எனக் கூறினான். அதனைக்கேட்டு அவனுடைய தாய் அழுதுஅழுது கன்னங்கள் வீங்கி காய்ச்சல்வந்து மருத்துவமனையில் இருக்கிறார். அப்போதுதான் பணம் எவ்வளவு இருந்தாலும் குணம்தான் முக்கியம் என்பது தெரிந்தது. அதுமட்டுமன்று படித்ததால்தானே வெளிநாட்டுக்குச் செல்கிறான். படிக்காவிட்டால் தாய்தந்தையோடு நிலத்தையும் ஆடுமாடுகளையும் பார்த்துக்கொள்வான். இயற்கையான உணவு உண்பான். உடல் நலமும் நன்றாக இருக்கும். நாள்தோறும் கடவுளை வணங்கமுடியும். திருநீறு அணியமுடியும். கையிலும் கழுத்திலும் கயிறு அணிந்துகொள்ளமுடியும். யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக வாழமுடியும்” என்றான். “படிப்பதில் இவ்வளவு சிக்கல் இருக்கிறதா?” என்றார் கடவுள்.

“நீங்கள் பள்ளிக்கூடம் சேர்ந்தால்தான் தெரியும். காலையில் ஆட்டோவிலோ வேனிலோ உங்களை அடைத்துச்செல்லும் ஒரே நாளில் அவ்வளவுதான். நீங்கள் தனியாக ஒரு அறையில் இருந்து பழக்கப்பட்டவராயிற்றே. உங்களால் முடியுமா? அதுவும் நல்ல ஆட்டோ ஓட்டுநராக இருந்தால் தப்பித்தீர். இல்லாவிட்டால் ஆட்டுகிற ஆட்டத்தில் பள்ளிக்குச்சேர்வதற்குள் அவ்வளவுதான்” என்றான் பக்தன். “சரி! உன் புலம்பலைக்கேட்டு வந்தால் என்னையே நீ பள்ளியில் சேர்த்துவிடுகிறாய். நான் வருகிறேன்” எனக்கூறிவிட்டு கடவுள் புறப்படுகிறார்.

“கடவுளே கொஞ்சம் நில்லுங்கள். எங்கள் உணவுக்குத் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும் வேண்டும்” என்றான் பக்தன். “மனிதர்களின் தேவைக்கு மேலாகவே உணவு கொடுத்துவிட்டேன். அதனை ஒளித்துவைத்துக்கொள்ளாமல் இருந்தால் ஒருவர்கூட வறுமையில் சாகமாட்டார்கள். தன்னலத்தால் திருட்டுத்தனமாக ஒளித்துவைப்பவர்களால்தான் நாள்தோறும் பலர் வறுமையால் இறக்கிறார்கள்.  இதையெல்லாம் என்னால் பார்க்கமுடியவில்லை. கோவிலுக்குள் இருப்பதே நன்றாக இருக்கிறது. அன்புடையவர்கள் மட்டுமே அங்குவருவதால் அவர்களுக்கு அருள்வது எளிமையாகவும் இருக்கிறது” என்றார் கடவுள். “அப்படியென்றால் வறுமையில் சாவது உங்களுக்குச் சம்மதமா?”எனக்கேட்டான் பக்தன்.

“நான் ஒருகதை சொல்லட்டுமா” எனக்கேட்டார் கடவுள். “சொல்லுங்களேன்” என்றான் பக்தன். ஒரு ஓட்டலுக்கு நான்குபேர் குடும்பத்துடன் செல்கின்றனர். செல்வந்தர்கள் போல நால்வர் சாப்பிட எட்டுபேர் சாப்பிடுவதுபோல் பல உணவுகளைக் கேட்டார்கள். பணிவுடன் பரிமாறப்படுகிறது. விருப்பமான உணவுகளை உண்டுவிட்டனர். மீதமுள்ள உணவை அப்படியே விட்டுவிட்டார்கள்.  கடைசியில் கட்டணத்திற்கான சீட்டினைக் கொடுத்தார்கள். இரண்டு சீட்டு இருந்தது ஒன்றில் முந்நூறு என்றும் இரண்டாவது சீட்டில் அறுநூறு என்றும் இருந்தது. மொத்தம் தொள்ளாயிரம் என்றனர். “ஏன்” எனக்கேட்டார் செல்வந்தர். “இந்த முந்நூறு ரூபாய் சீட்டு நீங்கள் உண்ட உணவிற்கு. அறுநூறு ரூபாய் நீங்கள் வீண்செய்த உணவிற்கான தண்டம்” என்றார் உணவு பரிமாறியவர் கூறினார். “ஏன்” எனக்கேட்டார் செல்வந்தர். நீங்கள் உண்ட உணவு கடவுள் உங்களுக்காக கொடுத்த உணவு . நீங்கள் வீண்செய்த உணவானது,  வேறு ஒருவருக்கான உணவு. அதனால் அதற்கு இருபங்கு கட்டணம். மேலும் இனி உங்களுக்கு இந்த ஓட்டலில் உணவு வழங்கத்தடையும் விதிக்கப்பட்டுவிட்டது. இனி தயவுசெய்து இந்த ஓட்டலுக்கு வரவேண்டாம் என்றனர். “ஏன்” எனக் கேட்டார் செல்வந்தர். “இந்த ஓட்டல் கடவுளின் கருணையால் நடைபெறுவது. எத்தனை ஏழைகளின் உழைப்பை வீணாக்கினீர்” என்றார் பணியாளர். “பொறுத்தருள்க” என்றார் செல்வந்தர். “பெரிய சொற்களையெல்லாம் சொல்லாதீர்கள். இந்த வீணான உணவை நீங்கள் விரும்பினால் கட்டிக்கொடுக்கிறோம். அதை யாராவது ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டால் உங்களை அடுத்தமுறை வரவேற்போம்” என்றார். “அப்படியா கொண்டுவந்துகொடுங்கள். யாருக்காவது கொடுத்துவிடுகிறேன்” என்றார் செல்வந்தர். புன்னகையுடன் கட்டிக்கொடுத்தனர். இப்படி ஒவ்வொருவரும் பொறுப்புடன் வாழ்ந்தால் வறுமை இருக்குமா?” எனக்கேட்டார் கடவுள். எல்லாவற்றிற்கும் நாங்களே காரணமாகிவிட்டு உன்னைக் குறைசொல்கிறோம் பொறுத்தருள்க கடவுளே” என்றான் பக்தன்.

“சரி நான் செல்லட்டுமா?”. என்றார் கடவுள். உள்ளே “குவா குவா” என்று புதிய உயிரின் ஓசை கேட்கிறது.

புதன், 11 ஆகஸ்ட், 2021

அடிப்படை உரிமைகள் ஏழு

 


அடிப்படை உரிமைகள் ஏழு

  அடிப்படை உரிமைகள் ஏழும் உங்களுக்குத் தெரியுமா? 1. அனைவரையும் சமமாக நடத்தும் உரிமை 2. சுதந்திரமாக வாழும் உரிமை 3. சுரண்டலை எதிர்க்கும் உரிமை 4. சமயத்தைத் தேர்வு செய்யும் உரிமை 5. பண்பாடு மற்றும் கல்வியைப்  பின்பற்றுவதற்கான உரிமை 6. அரசியல் நிர்ணயச்சட்டத்தை தீர்வுகளை செயல்படுத்துவதற்கான உரிமை 7. கல்வி கற்பதற்கான உரிமை.

     இந்த ஏழு உரிமைகளையும் நீங்கள் பின்பற்றுகிறீரா? பின்பற்றினீர்கள் என்றால் நீங்கள் சுதந்திரமானவர்தான். ஒலிம்பிக் போட்டியில் இரண்டு முறை பதக்கம் பெற்ற வீராங்கனை சிந்துவின் வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள். பெற்றோர் துணை நின்றதால் எத்தனை வெற்றிகளைக் குவித்து இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார். தம் திறமையை வெளிப்படுத்த முடிந்த விடுதலை உணர்வின் வெளிப்பாடுதான் சிறந்த வீரங்கனையாக மிளிர்வதன் காரணம். சிலர் தம் ஆற்றலை அறிவார் ; செயல்படுத்த இயலாது. சிலரால் செயல்படுத்த முடியும். ஆனால் அதற்கான முயற்சி இருக்காது.

தன்னம்பிக்கை, குறிக்கோள், திறமை இவற்றின் முதல் மூன்றெழுத்தும் அவர்களுக்கான தகுதியினை கூறிவிடும்தானே. இவை மூன்றையும் முறையாகச் செயல்படுத்தி தங்கப்பதக்கம் பெற்றுத்தந்த நீரஜ் சோப்ராவையும், பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கம் பெற்ற மீராபாய் சானுவையும், வெண்கலப்பதக்கம் வென்ற வளைதடி அணியையும், மலியுத்த வீரர் ரவிகுமார் தஹியா, பஜ்ரங் புனியா வீராங்கனை லவ்லினாபோர்கோஹைன் அனைவரும் தம் தகுதியைப்போற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்கள்தானே. இவர்கள் அனைவரும் இவ்வேழு உரிமைகளையும் பெற்றவர்கள்.

     முதல் உரிமை, அனைவருக்கும் ஒன்றுபோலவே வாய்ப்பு. பாதுகாப்புப்படையில் சேரவேண்டுமானால் உடல்நலத்தில் சிறந்தவர் எவரும் சேரலாம். வணிகம் தெரிந்த எவரும் வணிகம் செய்யலாம். கற்றவர் எவரும் கற்பிக்கலாம். உழைக்கத்தெரிந்தவர் எவரும் உழைக்கலாம். கேட்பதற்கே மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறது. இதனை உணர்ந்து செயல்படுவதே முதல் விடுதலை.

     இரண்டாவது உரிமை, ஒரு பெண் சாலையில் தனியாக நடந்து செல்கிறார். இருவர் கிண்டல் செய்கின்றனர். தப்பித்தால்போதும் என வீட்டிற்குவந்து தம்பியிடம் சொல்கிறாள். தம்பி “யாரது? எங்கே?” எனத் திரைப்படத்தில் வருவதுபோல் இல்லாமல், “என்னிடம் ஏன் சொல்கிறாய்.” என்றான். ‘பளார்’ என அறைந்துவிட்டு “சரியான கோழை” என்கிறாள். “உன்னையே நீ காப்பாற்றிக்கொள்ளமுடியாவிட்டால் நீ எப்படி குடும்பத்தை ; நாட்டைக் காப்பாற்றப் போகிறாய். பகல் நேரம். பலரும் நடமாடும் சாலை. சத்தமாக குரல் எழுப்பினாலே போதும். அரசு 1098 என்னும் எண்ணையும் கொடுத்திருக்கிறது. பிறகு ஏன் இப்படி ஓடி வருகிறாய். பெண்ணுக்குச் சம உரிமை எனப்பேச மட்டும் தெரிகிறது. இன்று ஓடிவந்தால் நாளையும் அப்படித்தானே கிண்டல் செய்வார்கள்” என்றான். உடனே, கிண்டல் செய்த அதே இடத்திற்குச் செல்கிறாள். இருவரையும் “பளார்” என்று அறைகிறாள். அவர்கள் ஓடிவிடுகிறார்கள். தம்பி பின்னால் நின்று இப்படித்தான் ஒவ்வொரு பெண்ணும் வீரத்துடன் இருக்கவேண்டும் என்கிறான். சுதந்திரமாக வாழ்வதன் பொருளை அறிந்து தம்பிக்கு நன்றி கூறுகிறாள்.

     மூன்றாவது உரிமை, இயற்கை அனைவருக்குமான சொத்து. இதனை எவரும் கொள்ளையடிக்க உரிமை இல்லை. நீர், மணல், கல், மலை, கனிமம் அனைத்தும் மக்களுக்கானது. இதனை எவர் சுரண்டினாலும் தவறுதான். சிலர் பணத்தையும் சிலர் உழைப்பையும் சுரண்டுவர் எதுவானாலும் தவறுதான். அதனால்தான் இத்தனை மணிநேர உழைப்பு  என அரசு நிர்ணயித்து இருக்கிறது. இயற்கையாக ஓடும் நீரை குடுவையில் அடைத்து அதிக விலைக்கு விற்பது எத்தனை ஏமாற்றுத்தனம்தானே. ஆயிரம் லிட்டர் தண்ணீர் பத்துரூபாய்க்குப் பெற்று ஒரு லிட்டர் நீரை இருபது ரூபாய்க்கு விற்கும் நிலையினைக் காணமுடிகிறதுதானே. இப்படி உணவுப்பொருட்களை அதிக விலைக்கு விற்பது. குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வேலைவாங்குவது. திருமணமாகாத பெண்களை மட்டுமே வேலைக்கு வைப்பது. திருமணமான பெண் எனில் சமைப்பது ; குழந்தையைப் பார்த்துக்கொள்வது எனக் கூறுவது. பெண்கள் எனவும் பாராமல் இரவு காலம் கடந்து பணியிலிருந்து அனுப்புவது. மகப்பேறுக்கு விடுப்பு கொடுக்காமலிருப்பது ; அப்படியே கொடுத்தாலும் சம்பளப்பிடித்தம் செய்வது. இப்படி எத்தனையோ சுரண்டல்கள் உள்ளன. இவற்றைச்செய்வோர் அனைவரும் குற்றவாளிகளே. தவறான பாதையில் வேகமாகச் செல்வதைவிட நல்லவழியில் மெதுவாகச் செல்வதே பெருமை என்று உணரவேண்டும். தண்ணீர் அனைத்தையும் விற்று பணமாக்கியவர்கள் நாளைய தலைமுறைக்குத் தண்ணீர் கிடைக்காது வாடும்நிலை ஏற்படுவதனை உணரவேண்டும். பணத்தைவைத்து வாழமுடியாதுதானே.

     நான்காவது உரிமை, எந்தச்சமயத்தையும் எவர் வேண்டுமானாலும் பின்பற்றும் உரிமை. எவருடைய தலையீடும் இல்லாமல் எந்தக்கடவுளையும் வணங்கும் உரிமை. மன அமைதியைத் தருவதற்கும் நாட்டில் அமைதி நிலவுவதற்கு சமயம் துணையாக நிற்கவேண்டும். அதற்கான சுதந்திர உரிமை.

     ஐந்தாவது உரிமை, முன்னோர் மரபினைப் பின்பற்றுவதில் உரிமை. முன்னோர்கள் காரணமறிந்தே பழக்கவழக்கங்களை வரையறுத்தார். அதனை உணர்ந்து பின்பற்றவேண்டும். அவற்றை மறந்து புதிய வழக்கங்களுக்கு ஆட்பட்டதனாலேயே நோய்கள் பெருகி வருந்துவதனைப் பார்க்கமுடிகிறது. அவ்வாறே விருப்பம்போல் விரும்பிய கல்வியினைப் படிப்பதிலும் உரிமை. யாரையும் கட்டாயப் படுத்தக்கூடாது. இன்றுகூட ‘தானே’ என்னுமிடத்தில் பதினைந்து வயது சிறுமியை ‘நீட்’ தேர்வுக்குப் படித்தே ஆகவேண்டும் என வற்புறுத்தியுள்ளார்கள். தாய்க்கும் மகளுக்கும் நடந்த சண்டையில் என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் தாயைத்தள்ளிவிடுகிறாள் மகள். தலை கட்டிலின்மீது பட்டதும் ரத்தம் தெறிக்கிறது. தாய் இறக்கிறாள். எத்தனை கொடுமை. கட்டாயப்படுத்துவதால் ஒரு குடும்பம் என்ன நிலைக்கு மாறிவிடுகிறது. எனவே, ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் கல்வியைப் பயில்வதற்கான உரிமை.

     ஆறாவது உரிமை, அரசியல் நிர்ணயச்சட்டம் செயல்படுத்தப்படவேண்டிய நிலையினைப் பின்பற்றும் உரிமை. நாட்டை வழிநடத்தும் சட்டதிட்டங்களை எவர் அவமதித்தாலோ, பின்பற்றப்படாவிட்டாலோ அதனை உணர்த்துவதற்கான உரிமை.

     இந்த ஆறு உரிமையுடன் ஏழாவது உரிமையாகச் சொத்துரிமை இருந்தது. ஆனால், இந்தச் சொத்துரிமையைத் தவறாகப் பயன்படுத்தி அளவுக்கு மீறிய சொத்துக்களைச் சேர்த்தனர். அரசுக்குத்தேவையானபோது சாலை, தொடர்வண்டி போக்குவரத்து பாலம், தொழிற்சாலை, என ஏதேனும் ஒரு நாட்டு நலனுக்காக ; மக்களின் வேலை வாய்ப்புக்காக ; அந்நிய இறக்குமதியைக் குறைப்பதற்காக ; அந்நிய ஏற்றுமதியை ஊக்குவிக்க என அரசு பல திட்டங்கள் வைத்திருக்கும்தானே. நாடு வல்லரசாவதனைப் பிறநாடுகள் விரும்புமா? அதனால் யாருக்காவது காசுகொடுத்து போராட்டம் நடத்தி நாட்டுநலனைக் கெடுத்துவிடுவர். பணத்திற்கு ஆசைப்பட்டு, “அரசு தரும் நிலத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டோம்” எனத் தங்கள் அரசையே எதிர்ப்பர். எனவே இந்தச் சொத்துரிமை அடிப்படை உரிமையிலிருந்து 1978 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. அதனால் ஆறாக மட்டுமே இருந்தது. ஆனால் குழந்தைகளின் கல்வி குறித்து எண்ணிய அரசு அதற்கான உரிமையை ஏழாவது உரிமையாகக் கொண்டுவந்தது.  

     ஏழாவது உரிமை:  சில குழந்தைகள் கற்கவும் ; சில குழந்தைகள் பணிக்குச் சென்று உழைப்பதும் ஏற்றத்தாழ்வாகும். எனவே, அனைத்துக் குழந்தைகளும் கல்வி கற்க அரசு ஆவன செய்யவேண்டும். இச்சட்டம் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் நாள்முதல் நடைமுறைக்குக்கொண்டு வரப்பட்டுள்ளது.  எனவே, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி கற்பிப்பதன் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. இதுவே கல்வி உரிமை.

     இந்த ஏழு உரிமையினை அனைவரும் அறிந்து செயல்படுத்தினால் நாடு வல்லராசாகும். பின் என்ன நாட்டு மக்களும் வல்லரசர்தானே.

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2021

கடவுளுக்கு உங்களைப் பார்க்கவேண்டுமே

 


கடவுளுக்கு  உங்களைப் பார்க்கவேண்டுமே

“யாராவது காப்பாத்துங்க” எனச் சொல்லி முடிப்பதற்குள் மூழ்கி விடுகிறான் ஒரு சிறுவன் அவனுடன் விளையாடியவன் திரும்பிப்பார்ப்பதற்குள் கைமட்டும் ஆடிக்கொண்டிருந்தது. உடனே மற்றொருவன் அந்தக் கையைப் பிடித்துவிட்டான். ஆனால் அவனையும் இழுத்துவிட்டான் முதலில் மூழ்கியவன். மூன்றாவது ஒருவன் கைகொடுக்க, அவனும் உள்ளுக்கு இழுக்கப்பட்டான். கடைசியாக இவர்கள் மூவர் விளையாடுவதை வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் கையைக்கொடுக்காமல் தலைமுடியைப் பிடித்து இழுத்தான். ஒவ்வொருவருவராய் வெளியில் வந்தார்கள். முதலில் சென்றவன் மயங்கிக்கிடந்தான். தண்ணீர் தெளித்து கன்னத்தில் தட்டி வயிற்றை அழுத்தி போனஉயிரை ஒரு சிறுவன் கொண்டுவந்துவிட்டான். ஒருவர்பின் ஒருவர் மூழ்கினாலும் ஒருவர் மற்றொருவரை விடாமல் இருந்ததுதான் ஒவ்வொருவரும்செய்த புண்ணியம். கடைசியில் இருந்த சிறுவனை அனைவரும் தெய்வமாகவே பார்த்தார்கள். ஆம், அந்த நான்கு சிறுவர்களும் வெளியூரிலிருந்து கோவிலுக்கு வந்தவர்கள்.

கோயிலுக்குப்பக்கத்தில் வயல்வெளி. கொஞ்சமாக சேற்றுநிலத்தில் தண்ணீர். தாய் தந்தை செல்லவேண்டாம் எனக் கூறினாலும் கேட்காமல் சென்றனர். அங்கு மகிழ்ச்சியாக விளையாடியபோது நடந்த நிகழ்வுதான் இது. அந்நிகழ்வுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னால்தான் அந்தக்கோவிலில் கூழு கொடுத்தார்கள். கூழினை விரும்பாது மூவர் ஓடிப்போனார்கள். சிறுவன் மட்டும் கூழ் குடித்தான். அதனால், அம்மன் அருள்தான் இந்தச்சிறுவனாக வந்து எங்களைக் காப்பாற்றியது எனத் தலைமேல் தூக்கிவைத்துக்கொண்டாடினர். தாயும் தந்தையும் காப்பாற்றிய சிறுவனுக்கு கண்ணேறு கழித்தனர். சென்றவாரம் நடந்த நிகழ்வு இது.

 “கோவிலுக்குச் சென்று வா” எனப் பெரியோர்கள் கூறினாலும் இளையோர்கள் “நான் வரல” என்கிறார்கள். என்ன செய்வது? பெற்ற பாவத்திற்காக பெற்றோரே கோவிலுக்குச் சென்று பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என அர்ச்சனை செய்கின்றனர். உள்ளத்தை மென்மையாக மாற்றும் கலை பக்திக்குத்தானே உண்டு. மகிழ்ச்சி வெளியே கிடைக்கும் பொருளா? உள்ளிருந்து வருவதுதானே மகிழ்ச்சி.  உணர்வுகள் எத்தனை அருமையானவை. அதனை இன்று இளைஞர்கள் கைப்பேசிகளிடம் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். எப்போதாவது அவர்கள் மன அமைதியுடன் இருப்பதைக் காணமுடிகிறதா? எப்போதும் கைப்பேசியில் பதற்றத்துடன் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அல்லது கண்ட நிகழ்ச்சிகளைக்கண்டு மனதைக் கெடுத்துக்கொள்கிறார்கள். அவர்களை மாற்றவேண்டியது பெரியோர்கடமைதானே.

உடைமைகளும் பதவிகளும் பெறுவதற்காக உழைப்பவர்கள்கூட மன அமைதிக்காகக் கோவிலுக்குச் செல்வதனைக் காணமுடிகிறது. எனவே, நாள்தோறும் கோவிலுக்குச்செல்லவேண்டும். நடைபயிற்சியும் மனப்பயிற்சியும் நலம்தரும். எல்லா உயிரினங்களையும் விட அழகாக, அறிவாக மனிதனைப் படைத்த கடவுளுக்கு நன்றி கூற வேண்டாமா? நன்றியுணர்வுக்காக இன்னொரு இனிய நிகழ்ச்சி ஒன்றைக் கூறட்டுமா?

ஒரு யானை பள்ளத்தில் விழுந்து எழமுடியாமல் தவிக்கிறது. அந்தப்பக்கம் பொக்லைன் எந்திரம் ஓட்டிவந்த ஒருவர் யானை தவிப்பதைப் பார்க்கிறார்.  கை போன்ற அள்ளும் அந்த கருவியை பின் பக்கமாகத் திருப்பி யானையின் பின்னேமுட்டி தூக்கிவிடுகிறார். யானை மேலேறிவிடுகிறது. மேலேறி வந்தயானை உடனே அந்த இடத்தைவிட்டுப்போய்விடவில்லை. யானை அந்த எந்திரத்தை திரும்பிவந்து முட்டி அன்பை வெளிப்படுத்துகிறது. யானை எப்படி தலையை ஆட்டுமோ அந்த பொக்லைன் ஓட்டுநரும் அந்தக்கருவியை ஆட்டுகிறார். என்ன அருமையான நிகழ்ச்சி. இதுவும் யாரோ படம்பிடித்த அருமையான நிகழ்வுதான். நன்றியுணர்வுக்கு இதனைக் கூறலாம்தானே?

     பாரா ஒலிம்பிக் என்னும் ஒரு போட்டி. மாற்றுத்திறனாளிக்காக நடைபெறும்போட்டி. இதில் எத்தனைத்துணிவுடன் போட்டி போடுகிறார்கள். அனைத்து உறுப்புகளையும் இயல்பாகக் கொண்டவர்கள் சிலர் சோம்பலால் தண்ணீர் கூட எடுத்துக்கொடுக்க பிறரை அழைப்பர். இந்நிகழ்வை வீடுகளில் பார்க்கலாம்தானே. எனவே, கடவுளுக்கு நாளும் நன்றி கூறும் பழக்கத்தினை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும்

     கோயிலுக்கு எதற்குப் போகவேண்டும். கோவிலுக்குச் சென்று நீங்கள் இறைவனைப் பார்க்கவேண்டும் என்பதற்காக அன்று. கடவுளுக்கு உங்களைப்பார்க்கவேண்டும் எனத்தோன்றும்தானே.

     உங்களுக்காக மட்டுமே நீங்கள் படைக்கப்படவில்லை. எத்தனைபேர் உங்களால் பயன்பெறவேண்டியிருக்கும் என அறிவீரா? ஒரு சிலர் இலட்சம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள், பலர் ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறார்கள். இன்னும் பலர் நூற்றுக்கணக்கான ; பத்துக்கணக்கான மக்களுக்கு வேலைகொடுக்கிறார்கள். ஏன் ஒருவரை வாழவைத்தாலும் அது எவ்வளவு பெரிய பெருமை. அப்படி சிலர் வேலை கொடுப்பதற்காகப் பிறந்திருப்பார்கள் ; சிலர் வேலை செய்யப் பிறந்திருப்பார்கள். இருவரும் பெருமைக்குரியவர்கள்தான். கடவுள் யாருக்கு என்ன கடமை கொடுத்திருக்கிறார் என்பதை உணரமுடியாதே !

     குளத்தை வெட்டினால் மழைநீர் தேங்கும். குளம் கட்ட வேண்டிய இடத்தில் மணலை அள்ளிவிட்டாலோ, வீடுகட்டி விட்டாலே மழைநீர் என்னாகும்?. அதுபோலத்தான், கடவுளின் கருணை. ஏற்றுக்கொள்ளும் வகையில் கருணையோடு வாழவேண்டும். எப்போது யாருக்குக் என்ன கிடைக்கும் எனக் கூறமுடியாது. எவர் வழியாவது நன்மை நிகழும். அந்த ஒருவர் நீங்களாகக் கூட இருக்கலாம்தானே.

     அனைத்து உயிர்களும் கடவுளின் படைப்பு என்பதனை உணர்ந்தாலே கடவுள் உங்களை கவனிக்கத்தொடங்குவார். ஆனால் உண்மையான கருணையாக இருக்கவேண்டும். யாரேனும் ஏழையைப் பார்த்து ‘உச்’ கொட்டிவிட்டு கார் கண்ணாடியை மேலேற்றிவிட்டு படம்பார்த்துக்கொண்டு செல்வதில்  என்ன இருக்கிறது. துளியேனும் பயனுண்டா. அப்படி பலபேரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நான் படித்த ஒருநிகழ்வைக் கூறினால் நீங்களே வியப்பீர்கள்.

     ஒரு வடை விற்கும் சிறுவன் தொடர்வண்டியில் ஏறினான். (சமோசா நம் உணவன்று என்பதால் வடைக்கு மாற்றிவிட்டேன்) அவனைப் பார்த்ததும் அங்கு அமர்ந்திருந்த இளைஞன் பக்கத்தில் அழைத்தான். “ஏன் தம்பி இவ்வளவு கஷ்டப்படுகிறாயே. என்னைப்போல் படித்திருந்தால் மாதம் இருபத்தைந்தாயிரம் சம்பாதிக்கலாமே” எனக்கேட்டான். உடனே அந்த சிறுவன் “நானும் படித்திருக்கிறேன். இந்த வேலை பிடித்திருப்பதால் செய்கிறேன்” என்றான். “சரி! ஒரு நாளைக்கு எத்தனை வடை விற்பாய்?” எனக் கேட்கிறான் இளைஞன். “ஒரு வண்டிக்கு இருநூறு வடை விற்றுவிடுவேன். ஒரு நாளைக்கு இருபதுவண்டி. நாலாயிரம் வடை விற்றுவிடுவேன்” என்றான். “அப்படியா ! என வாயைப்பிளந்துமூடி “எவ்வளவு பணம் இலாபம் கிடைக்கும்” எனக் கேட்கிறான். “ஒரு வடைக்கு ஒருரூபாய்” என் முதலாளி கொடுப்பார் எனச்சிறுவன் கூற இளைஞன் “நான்தான் சிறுவனிடம் பாடம் கற்க வேண்டும்” என நினைக்கிறான். வெற்று சொற்களை மட்டுமே சொல்வதை விட்டுவிட்டு முடிந்த செயலை ஆற்றுவதில்தான் பெருமை இருக்கிறது என்பதனை கூறாமல் கூறிச்செல்கிறான் சிறுவன்.

“நம்மால் இது முடியுமா? முடியாது” என அந்தச் சிறுவன் சென்ற பாதையையே பார்த்துக்கொண்டிருக்கிறான். கடவுளின் கணக்கினை அறிவார் யார்?

 

 

 

திங்கள், 9 ஆகஸ்ட், 2021

இந்தியா உலகுக்கு வழிகாட்டும்

 


உலகுக்கு வழிகாட்டும் இந்தியா

இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் எல்லாம் அடிதடிதான். ஆனால், இங்குமட்டும் அமைதியாக வாழமுடிகிறதே எப்படி? இதுதான் புண்ணியபூமி. எண்ணிப்பாருங்கள் நமது முன்னோர்கள் கற்றுக்கொடுத்த பாடம் அப்படி.

     வீரச்சிறுவர்களுக்கு விருதளிக்கும் விழா நடந்துகொண்டிருக்கிறது.  விருதுவாங்கவந்த குழந்தைகளைக்கண்டு விருதளிக்கும்விழாவிற்கு வந்தோர் வியப்படைந்தனர். யார் இவர்கள் எலும்பும் தோலுமாய்? என கேட்டபோதுதான் தெரிந்தது. அந்தக் குழந்தைகள், ஏரியின் நீரைக் கடத்திச்செல்ல செய்யப்பட்ட குழாய்களையே வீடாகக் கொண்டவர்கள் என்பது. இவர்களுக்கு ஏன் வீர விருது.  அந்த சின்ன வட்டத்திற்குள் இவர்கள் வாழ்க்கை வட்டம் அமைந்துள்ளதே அதற்காகவா? என்றுதானே கேட்கிறீர்கள். இல்லை. அப்படியென்றால் விருதுக்கு ஆயிரக்கணக்கானோர் தகுதியாகிவிடுவார்கள். சுனாமி வெள்ளத்தின்போது வீடுகளில் இருந்தவர்கள் எல்லாம் மாடிக்கு ஓடிப்போய் உயிரைக்காப்பாற்றிக்கொண்டார்கள் நினைவிருக்கிறதா?. ஆம் ! அந்த நேரத்தில் விமானத்திலிருந்தும் உலங்கு (ஹெலிகாப்டர்) ஊர்தியிலிருந்தும் உணவுப்பொட்டலங்களை வீசினார்களே நினைவிருக்கிறதா?. ஆம் ! அந்நேரத்தில் மாடியில் விழாமல் வெள்ளத்தில் விழுந்த பொட்டலங்களை எடுத்துக்கொடுத்த குழந்தைகள்தான் இவர்கள். அதற்காகத்தான் இந்த விருது. அவர்களின் உண்மையான அன்பினை அரசு பாராட்டுவது சிறப்புதானே !

     ஒட்டிய வயிறுடன் நிற்கும் அந்தக் குழந்தைகளிடம், “நீங்கள் உணவுப்பொட்டலங்களையெல்லாம் எங்களுக்குக் கொடுக்கிறீர்களே. நீங்கள் சாப்பிடவில்லையா?” என மாடியில்நின்றுகொண்டு பசியில்தவித்த ஒருவர் கேட்கிறார். “நீங்க பசிதாங்க மாட்டீங்க சாமி. எங்களுக்குப் பட்டினி பழகிவிட்டது” எனக் கூறி சிரித்த முகத்துடன் அடுத்த பொட்டலத்தை எடுக்க தண்ணீருக்குள் பாய்ந்தான் அந்த வீரச்சிறுவன். இங்கு, “யார் சாமி?” என்றுதானே எண்ணுகிறீர்கள். உண்மைதான். எத்தனையோ இயல்பான நாட்களில் எல்லாம் அவர்கள் சோறுகேட்டார்கள். இவர்கள் துரத்திவிட்டார்கள். ஆனால், இன்று அவர்கள் கேட்காமலே இவர்கள் சோறு போடுகிறார்கள். கடவுள் எப்போதும் யார் வழியாகவே படி அளக்கிறார். பாடமும் அளிக்கிறார்தானே. இப்படிப்பட்ட மண் நம் மண். நம்புகிறீர்களா? இல்லையா? மேலே நடந்த நிகழ்வினைப் படம்பிடித்துக்காட்டியவர் ஒரு சிறந்தசொற்பொழிவாளர். நீங்கள் நம்பினால் நன்றி. முன்னரே நம்பியிருந்தால் மிக்க நன்றி.

     இந்தப்பொன்னான பூமியில் விளைவதை உண்டுகொண்டே இந்நாட்டினை இழிவாகப் பேசுவோரைக்கண்டால்தான் கவலையாக இருக்கிறது. பெற்றதாயையே குறைசொல்லும் மகனை என்னென்பது?. கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் திறமையைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு அவரைக் கைதுசெய்தது. மொட்டை அடித்தது. கோணியில் ஆடைசெய்து அணியச்செய்தது. செக்கிழுக்க வைத்து சாட்டையில் அடித்தது. கயிறு திரிக்கவைத்து கைகளைப் புண்ணாக்கியது. புழுக்கள் நெளியும் உணவைக் கொடுத்தது.

நாள்தோறும் பலருக்கு உணவிட்டு வேலைகொடுத்து மகிழ்வித்த பெருமகனை இவ்வாறெல்லாம் இழிவுபடுத்தியது ஆங்கிலேய அரசு. தன்மானத்துடன் எதிர்த்தவர்களை எல்லாம் பறவைகளைச் சுட்டுத்தள்ளியதுபோல் தள்ளினர். பறவைகளாவது பறக்கமுடியும். ஆனால், விடுதலை வீரர்களை (கை, கால்களில்) சங்கிலியால் பிணைத்திருந்தனர். தன்னலம் பெரிதென எண்ணியிருந்தால் வக்கீல் தொழிலில் பெரும் பணக்காரராக வாழ்ந்திருக்கலாம். மக்களை அடிமை நிலையிலிருந்து காக்கவேண்டும் என எண்ணினார். அதனால் கொடுமைக்கு உள்ளானார். வக்கீல் தொழில் செய்யக்கூடாதென்று உரிமையைப் பறித்துக்கொண்டனர் ஆங்கிலேயர்கள். அரிசி கடையில் வேலைசெய்து அரிசியினைக் கூலியாகப் பெற்றார். அதனைக்கண்டு பொறுக்கமுடியாமல் அவருக்கு வேலைக்கொடுத்த கடைக்குப் பூட்டுபோட்டனர். இப்படி வாழ்நாள் முழுதும் தலைவணங்கி வாழவேண்டிய தலைவரை இழிவுபடுத்தி மகிழ்ந்தனர். கப்பலோட்டிய தமிழர் வழியில் தேசத்திற்காக தனது இன்ப வாழ்வை துன்பமாக்கிக்கொண்டவர்கள் பலர்.

உலகையே ஆண்ட தமிழினம் ; கடல் கடந்துசெல்ல கற்றுக்கொடுத்த தமிழினம் ; கோவில்களையும் அணைகளையும் கட்டி உலகமே வியக்கவாழ்ந்த தமிழினத்தை ஆங்கிலேயர்கள் வஞ்சகத்தால் அடிமையாக்கினர். தமிழர்கள் வீரத்தைக்கண்டு மிரண்டவர்கள் ஆங்கிலேயர்கள். அதனால்தான் தங்களால் எதிர்க்கமுடியாத நிலையில் பல நாட்டவருடன் கூட்டுசேர்ந்து சதிசெய்து வீழ்த்தினர். திப்புசுல்தானை வெல்லமுடியாத ஆங்கிலேயர்கள் நெப்போலியனின் துணைகொண்டு வீழ்த்தினார்கள். ஆனால், அதற்குப் பின் தீரன் சின்னமலையுடன் போரிட்டு தோற்றோடினார்கள். நம் முன்னோர்கள், மாவீரன் நெப்போலியன் எனப்பாடம் சொல்லிக்கொடுத்தார்களேயன்றி ‘மாவீரன்’ தீரன் சின்னமலை எனப் பாடம்சொல்லிக்கொடுக்க மறந்தனர்.

ஒவ்வொருவரும் தேசியகீதத்தை நாள்தோறும் பாட வேண்டும். தேச உறுதிமொழியை நாள்தோறும் ஒரு முறையாவது முழங்கவேண்டும். அப்பொழுதுதான் தேசப்பற்றுவளரும். தேசப்பற்று வளர்ந்தால்தான் நாட்டினை முன்னிறுத்த வேண்டும் என உழைக்கும் எண்ணம் ஏற்படும். குடும்பமும் நலம்பெறும். நாடும் நலம்பெறும்.

தேசியகவி இரவீந்திரநாத்தாகூருக்கு ‘சர்’ பட்டம் என்னும் உயரிய பட்டத்தை வழங்கினார். 1919 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில் நடைபெற்ற படுகொலையில் அப்பாவி மக்களைக் கொன்றான் டயர். ஈவு இரக்கமற்ற அச்செயலைக்கண்ட ‘தேசியகவி’ அந்தப்பட்டத்தைத் திருப்பிக்கொடுத்தார். ஒவ்வொரு குடிமகனும் தம்மால் இயன்ற செயலைச்செய்தாலே போதும். இந்தியா வல்லரசாகிவிடும். வெளிநாடுகளுக்கு இது பொறுக்குமா? பொறுக்காது. அதனால்தான் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த பெண்களுக்கு தொலைக்காட்சி, குழந்தைகளுக்கு விளையாட்டு, இளைஞர்களுக்குப் போதை, தவறான உணவுப்பழக்கம்  என தீய பழக்கங்களை இறக்குமதி செய்துவருகின்றனர். மக்கள் அறியாமையால் சிக்கிக்கொண்டு உடல் வலிமையை இழந்துவிடுகின்றனர். 

தங்களுடைய நாட்டு மக்களுக்கு, விளையாட்டுப்பயிற்சியளிக்க தொழில் நுட்ப விஞ்ஞானிகளையும் வல்லுநர்களையும் தொழில் நிறுவனங்களையும், வானவியல் தொழில்நுட்பத்தையும் கொண்டு பயிற்சியளிக்கின்றனர். உலக நாடுகள் வளர்வதில் தவறில்லை. ஆனால், நம்மை வளரவிடாமல் செய்வது எத்தனை தவறு. இதனை இன்றைய தலைமுறை நன்குணரவேண்டும். உங்கள்மீது வீசப்படும் வலைகளில் சிக்கிக்கொள்ளக்கூடாது. உங்கள் நலமே முக்கியம் ; உங்கள் குடும்பம் முக்கியம் ; உங்கள் தலைமுறை முக்கியம் என்பதனை உணரவேண்டும்

உலகமே இன்று இந்தியாவை வியந்துபார்க்கிறது. அதற்குக்காரணம் வேகம் மட்டுமன்று ; விவேகமும்தான்.