தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

தமிழ்க்கற்பிக்கும் விடுகதை – Riddle –Play way to learn tamil


தமிழ்க்கற்பிக்கும் விடுகதை – Riddle –Play way to learn tamil

விடுகதை என்பது கதை விடுவதன்று ; கேட்கப்படும் வினாவிற்கு விடைகூறிச் சிக்கலை விடுவிப்பது. எச்சொல்லையும் ஆய்ந்து நோக்கும் பண்பினை வளர்ப்பது. குழந்தைகளின் கற்கும் ஆரவத்தைத் தூண்டுவது. மொழியின் அருமையினை உணர்த்துவது. எடுத்துக்காட்டிற்கு ஒரு விடுகதை :  

உயிர் இல்லாமல் ஓடித் திரிவான்

மூக்கு இல்லாமல் மூச்சு விடுவான்

வாய் இல்லாமல் தண்ணீர் குடிப்பான்

வயிறு இல்லாமல் கரியைத் தின்பான்

காற்றிற்கு அஞ்சான் மழைக்கு அஞ்சான்

காட்டிலும் மேட்டிலும் அலைவான்

உயிர் இல்லாமல் எப்படி ஓட முடியும்?. மூக்கில்லாமல் எப்படி மூச்சு விடமுடியும்.? வாய் இல்லாமல் எப்படித் தண்ணீர் குடிக்க முடியும் ? வயிறு இல்லாமல் எப்படித் தின்ன முடியும்? இத்தனையும் இருந்தால் அந்த உயிர் காற்றிற்கு அஞ்சாமல் மழைக்கு அஞ்சாமல் எப்படி இருக்கமுடியும் ?. இத்தகைய வீரன் காட்டிலும் மேட்டிலும் எப்படி அலைவான் ? எனக்கேட்டு ஆர்வத்தைத் தூண்டுகிறார்கள் விடுகதை கேட்போர். யாரும் சொல்லமுடியாதபோது ‘புகைவண்டி” எனக் கூறி விடையை விடுவிக்கிறார்.

ஞாயிறு, 28 ஜூலை, 2019

ஆணுக்கும் ஒன்பது பருவங்கள் - Nine Stages of Man

ஆணுக்கும் ஒன்பது பருவங்கள் - Nine Stages of Man
தமிழ் வளமுடைய மொழி என்பதற்குப் பழமை, வளமை, செம்மை, தனிமை எனப்பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று ஒரு பொருளுக்குப் பல சொற்கள் அமைந்துள்ளதேபெண்களைப் பூக்களோடு ஒப்பிட்டு இரண்டிற்கும் ஏழு பருவம் எனக் குறிப்பிடுவர்.
அரும்புமுன் இதழ்கள் குவிந்து சிறிதாக அரும்பும் நிலை, மொட்டுமுன் இதழ்கள் குவிந்து மொக்கு விடும் நிலைமுகைமலர்வதற்கு முகிழ்க்கும் (தோன்றும்) நிலை, மலர்மலர்ந்த நிலை , அலர்- மலர்ந்து (மலர் அல்லாத) விரிந்த மலர்வீவீழ்கின்ற நிலை , செம்மல்விடுதலைக்கு பக்குவப்பட்ட நிலை.
பேதை – 5-8 வயது, பெதும்பை – 9 -10 வயது, மங்கை – 11- 14 வயது, மடந்தை – 15 -18 வயது, அரிவை – 19 – 24 வயது, தெரிவை – 25-29 வயது, பேரிளம்பெண் – 30 – 36 வயது,
அரும்பு பேதைக்கும், மொட்டு பெதும்பைக்கும், முகை மங்கைக்கும், மலர் மடந்தைக்கும், அலர் அரிவைக்கும், வீ தெரிவைக்கும், செம்மல் பேரிளம்பெண்ணுக்கும் ஒப்பிட்டுக் காட்டுவர்.
பெண்களுக்கு மட்டும்தான் பருவங்கள் வரையறுக்கப்பட்டுள்ளதா ? ஆணுக்கு இல்லையா எனக் கேட்கிறீர்களா ? தமிழில் எது இல்லை. ஆணுக்கும் பருவங்கள் உண்டு.
பாலன் – 1- 7 வயது, மீளி – 8-10 வயது, மறவோன் – 11-14 வயது, திறவோன் – 15 வயது, காளை – 16 வயது, விடலை -17 – 30 வயது, முதுமகன் – 30 வயதுக்கு மேல் என அகராதி குறிப்பிடுகிறது.
ஆண்,பெண்ணுக்கான ஏழு பருவத்தை,
ஆடவர் காளைய ராடூஉ மகன்மைந்த னாளன்பூம
னீடு குமரனு மாண்பெயர் பேதை நிகர்பெதும்பை
தேடிய மங்கை மடந்தை யரிவை தெரிவையுடன்
கூடிய பேரிளம் பெண்ணேழ் பருவஞ்செய் கோதையரே
என திருவேங்கடபாரதியாரின் நிகண்டு நூலானபாரத தீபத்தின்பதினெட்டாம் பாடல் குறிப்பிடுகிறது. ஆடவர், காளையர், ஆடூ, மகன், மைந்தன், பூமன், குமரன் என ஆணுக்கும், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எனப் பெண்ணுக்கும் வரையறுத்துள்ளதைக் காணலாம்.

***********

இலக்கியம் காட்டும் சுவர்க்கம் - Route for Heaven

இலக்கியம் காட்டும் சுவர்க்கம் - Route for Heaven 

உடுப்பது உடையானது போல் கொடுப்பது கொடையாயிற்று. மக்கட் பிறவியின் பயன் பிறர்க்குக் கொடுத்து வாழ்வதே. இதனை இலக்கியங்கள் ஏதேனும் ஓர் கருப்பொருளைக்கொண்டு காலந்தோறும் உணர்த்திவருவதனைக் காணமுடிகிறதுதமிழர்கள் வீடுகட்டும்போது பிறர் ஓய்வெடுத்துச்செல்ல திண்ணை கட்டினர். வெயிலில் நடந்து செல்லும் போது களைப்பாற நீர்ப்பந்தல், மோர்ப்பந்தல் சத்திரம், சாவடி என அமைத்து வழிப்போக்கர்களைக் காத்தனர். இவ்வறத்தைத் தொடர்ந்து செய்தல் வேண்டும் எனச் சிறுபஞ்சமூலம் எடுத்துரைக்கிறது.

மக்களின் நீர் தேவையினை நிறைவு செய்யும் வகையில் குளம் வெட்டுவர். வெயில் தாக்காத வகையில் கிளைகளை நட்டு மரமாக்கி நிழற்பாதை அமைப்பர். மேடு பள்ளங்களுடைய கரடுமுரடான வழியினைச் சீராக்கிப் போக்குவரத்தை எளிதாக்குவர். தரிசு நிலத்தை உழுது விளை நிலமாக்குவர். ஊருக்குள்ளேயே மக்களின் தாகத்தைத் தீர்க்க கிணறு வெட்டுவர். இவ்வைந்து தொழிலையும் செய்வோர் சுவர்க்கத்தை அடைவர் எனச் சிறுபஞ்சமூலத்தின் அறுபத்தாறாவது பாடல் வழிகாட்டுகிறது.

குளம்தொட்டுக் கோடு பதித்துவழி சீத்து
உளந்தொட்டு உழுவயல் ஆக்கிவளந்தொட்டுப்
பாகு படுங்கிணற்றோடு என்றிவ்வைம் பாற்படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது

 மானிடர்க்கு மூன்று பக்கம் படிக்கட்டுகள் வைத்தும் கால்நடைகளுக்கு ஒரு பக்கம் சரிவான பாதையும் அமைத்து குளம் வெட்டுவதும் உண்டு. நாடாள்பவரே இச்செயல்களைச் செய்யவேண்டும் என்பதில்லை. மக்களும் செய்யலாம் என்பதனையே இப்பாடல் உணர்த்தி நிற்கின்றது. அப்போது சுவர்க்கம் இங்கேயே வந்துவிடும் தானே.

*****************

கண்கள் உறவை வளர்க்கும் - Eye -grows relationship

கண்கள் உறவை வளர்க்கும் - Eye -grows relationship

அறம் என்பது வாழ்க்கை முறைமை. இப்படி வாழ்ந்தால் தான் அழகு என ஆய்ந்து மனநிறைவுடன் வாழக்கற்றுக்கொடுத்தவர்கள் தமிழர்கள். அன்பை அடித்தளமாகக்கொண்டு குடும்பம் என்னும் ஒழுங்கு முறைமையைக் கொண்டு, தாய், தந்தை, மகன், தமக்கை, தம்பி, அண்ணன், சிற்றப்பன், சித்தி, அத்தை, மாமன், அத்தான், கொழுநன் (கணவன்), மனைவி, கொழுந்தன் (கணவனின் உடன்பிறப்பு) கொழுந்தி (மனைவியின் உடன் பிறப்பு) பாட்டன், பாட்டி என  உறவுகளுக்குப் பெயர்வைத்துக் கூடிவாழக் கற்றுக்கொடுத்தனர். எப்படி வாழ வேண்டும் எனக் கற்பது மட்டுமன்று எப்படி வாழக்கூடாது எனக் கற்பதும் நன்று. அன்பில்லாது வாழ்தல் கூடாது. அன்பு மழை போல் பொழிதல் வேண்டும். நிலம்பார்த்து மழை பெய்தல் இல்லை. அதுபோல் அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்டல் வேண்டும். மழை இல்லாவிடில் மரத்தில் கிளை ஏது ? அவ்வாறே அன்புமழை இல்லாவிடில் கிளை என்னும் சுற்றம் ஏது ? நட்பு ஏது ? எனவே அன்பு என்னும் ஈரத்தை கண்களில் பெருக்கி வாழ்தல் வேண்டும். முதுமொழிக்காஞ்சியில்அல்ல பத்துஎன்னும் தலைப்பில்ஈரமில்லாதது கிளை நட்பு அன்றுஎன மதுரைக்கூடலூர்கிழார் குறிப்பிடுகிறார்.

நா கூட சில நேரங்களில் வறண்டுவிடுகிறது. கண்கள் எப்போதும் கருணை என்னும் ஈரத்துடன் விளங்குவதால் தானே ஒளிவீசுகிறது. எண் சாண் உடம்புக்குத் தலையே தலை. தலைக்குக் கண்கள் தானே

நோயற்றவாழ்வுக்கு மகாத்மா வழி - For Healthy Life - Mahatma's Policy

நோயற்றவாழ்வுக்கு மகாத்மா வழி - For Healthy Life - Mahatma's Policy


அஞ்ச வேண்டிய செயல்களுக்கு அஞ்சாதிருப்பதும் அஞ்சக்கூடாத செயல்களுக்கு அஞ்சாதிருப்பதும் அறியாமை என்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தீய பழக்கவழக்கங்களால் தம் உடலைக் கெடுத்துக்கொள்ளும் மானிடர்கள் கணக்கிலர். தீயை நெருங்கினால் தான் சுடும். தீயபழக்கம் தேடிச்சென்று சுட்டுக்கொள்ளும். எனவே எந்நாளும் உண்மைக்குப் புறம்பாக நடக்கமாட்டேன் எனத்தன் தாயாரிடம் சத்தியம் செய்துகொடுத்தார் அண்ணல் காந்தியடிகள். தீயவை செய்தால் பெரியோரின் பழிக்கு ஆளாக நேரிடும் என எண்ணல் வேண்டும். தீயவற்றிலிருந்து விலகுவதும் பாவத்திலிருந்து நீங்குவதும் ஒன்றே. அவ்வழியில் செல்வோர்க்கு எக்கேடும் நிகழ்வதுமில்லை. அதனால் நோயற்ற வாழ்வு வாழ இயலும். இவையனைத்தும் நிகழவேண்டுமாயின் ஒருவரை எப்போதும் கண்காணிக்கக்கூடிய தாயுள்ளம் ஒன்று வேண்டும். தாயாரால் அனைத்து இடங்களுக்கும் சென்று கண்காணிக்க இயலுமா ? இயலாது. எனவே எங்கும் நிறைந்திருக்கும் இறைவனே எப்போதும் மானிடரைக்காக்க வல்லவன் என எண்ணுகிறார் திருஞானசம்பந்தர்.

அச்சம் இலர் பாவமிலர் கேடும் இலர் அடியார் 
 நிச்சமுறு நோயுமிலர் தாமுந் நின்றியூரில் 
நச்சமிடறு உடையார் நறுங் கொன்றை நயந்து ஆளும் 
பச்சமுடை அடிகள் திருப் ; பாதம் பணிவாரே

எனத் தேவாரத் திருநின்றியூர் பதிகத்தில் ஆளுடைய பிள்ளை பாடியுள்ளார். இப்பாடலுக்கு எடுத்துக்காட்டாக இறைவழிபாடு செய்து அச்சமில்லாது துணிவுடன் வாழ்ந்தவர் தானே அண்ணல் காந்தியடிகள்.