தளர்வதில் இல்லை வாழ்க்கை ; மலர்வதில் தான்.**** தன்னம்பிக்கை நமது மூன்றாவது கை *** வாழும் வரை வாழ்விப்போம்.

சனி, 30 செப்டம்பர், 2023

மருத்துவ முன்னோடி தமிழர்

 

மருத்துவ முன்னோடி தமிழர்

 

            மருத்துவத்திற்குத் தேவையான வேதியியல் பொருட்கள் அனைத்தும் கண்டுபிடிப்பதற்கு முன்னரே மக்களைப் பல்வகையான நோய்களிலிருந்து காப்பாற்றியவர்கள் தமிழர்கள். போர்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாகவே எண்ணி வாழ்ந்த வரலாறே தமிழர் வரலாறு. போர்களால் காயங்களும் மரணங்களும் இயல்பான அக்காலகட்டத்தில் மருத்துவர்களே பல உயிர்களைக் காப்பாற்றினர். அம்மருத்துவர்கள் அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டுள்ளனர். தாவரங்களை உயிர்காக்கும் வரங்களாக ஆக்கிய பெருமை இம்மருத்துவர்களுக்கு இருந்தது. ஒவ்வொரு தாவரத்தையும் மூலிகைத் தாவரம், நிவாரணத்தாவரம் சீரமைக்கும் தாவரம் என வகுத்து மருத்துவம் பார்த்துள்ளனர். மருத்துவர் மன்னர் பரம்பரைக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் நெருக்கமானவராகவே இருந்தனர். மருத்துவர்கள் இரவுபகல்பாராது எக்காலத்தும் தம்மை மருத்துவத்தொழிலுக்காக அர்ப்பணித்திருந்தனர். சங்க இலக்கியக்காலத்தில் மக்களை நோக்கி மருத்துவம் செய்த அருமையினைக் காணமுடிகிறது. மருத்துவர் நோயாளியைக்காண தம் மருத்துவப்பெட்டியுடன் வந்துவிடுவார். மருத்துவர், நோயாளியின் நோயினை அறிந்து அங்கேயே மருந்து தயாரித்து பிழைக்கவைத்துவிடுவார். அந்த அளவிற்கு மருத்துவர்கள் மனித உடலையும் மருந்து உருவாக்குவதையும் அறிந்திருந்தனர். மனித உயிர்களைப் போற்றும் அன்பும் ஆர்வமும் அவர்களுடைய பண்பாகவே இருந்தது. நோய்கள் குறைவாக இருந்ததனால் மருத்துவர்களும் குறைவாகவே இருந்தனர். மருத்துவர் வீட்டினை அனைத்து மக்களும் அறிந்திருந்தனர். மருத்துவர்கள் மனிதர்களை மட்டுமின்றி மருந்தினை அளிக்கும் மரங்களையும் காத்தனர். இவ்வாறு அன்புடன் விளங்கியதனை

            மரம் சா மருந்தும் கொள்ளார் (நற்றிணை-226)

என்னும் பாடலடிகள் உணர்த்துகின்றன. மரத்தைக் கொன்று மக்களைக் காக்கும் பணியினைச் செய்யாத மருத்துவர்களின் அறத்தையும் இங்கு காணலாம். அவர்கள் கொடுக்கும் மருந்து மூன்று நாட்களில் குணமளித்துவிடும் சிறப்பு வாய்ந்தனவாக இருந்ததனை, ‘விருந்தும் மருந்தும் மூன்று நாள்’ என்னும் பழமொழி எடுத்துக்காட்டுகிறது. ஏனெனில்  நோய்க்கான காரணத்தையும் அதன் தன்மையையும் அறிந்து அதனைத் தீர்க்கும் வழியினை அறிந்து உடலுக்கு ஏற்றவாறு மருத்துவம் பார்த்தனர்.

                        மருந்து ஆய்ந்துகொடுத்த அறவோன் போல (நற்றிணை – 136)

என்னும் பாடலடிகள் இதனை உணர்த்துகிறது. இவ்வாறு நொய்யச்செய்யும் (மெலியவைக்கும்) நோய்களுக்கும் ஒரே இடத்தில் பிணித்துவிடும் (முடக்கிவிடும்) பிணிகளுக்கு மட்டுமின்றி அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். அதனால்தான் போர்க்களத்தில்  புண்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்துக் காத்துள்ளனர். ஊசியைக் கொண்டு அறுபட்ட இடங்களைத் தைத்த திறத்தினை

            மீன் தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச்

            சிரல் பெயர்ந்தன்ன நெடுவள் ஊசி

            நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின் (பதிற்றுப்பத்து – 42)

என்னும் பாடல் உணர்த்துகிறது. மீன்கொத்திப்பறவையின் அலகானது குளத்தில் உள்ள மீனைக்கவ்வ  உள்சென்று வெளிவருவது போல மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த நுட்பத்தை அறியமுடிகிறது. வலிதெரியாமல் மருத்துவம் செய்யவேண்டும் என எண்ணிய தமிழ் மருத்துவர்களின் அருமையும் புலனாகிறது. 

           

 

நிலைக்கும் கற்கோவில் கட்டிய முதல்வன் – முதலாம் மகேந்திரவர்மன்

 

நிலைக்கும் கற்கோவில் கட்டிய முதல்வன் – முதலாம் மகேந்திரவர்மன்

செங்கல், மரம், உலோகம், சுண்ணாம்பு எனக் கோவில்கட்டிய காலத்திலிருந்து மாறுபட்டு கல்லால் கோவில் கட்டியவன் மகேந்திரவர்மன்(ஆட்சிக்காலம்,பொது ஆண்டு 600-630). மலைகளைக் குடைந்து கோவில்கட்டும் புதிய கட்டிடக்கலையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவன். சங்ககாலத்தில் கட்டிய கோவில்கள் செங்கல், மரம், சுண்ணாம்பால் கட்டப்பட்டவை. எனவே, அவைகாலப்போக்கில் சிதலமடைந்து அழிந்தன.  இயற்கைச் சீற்றங்களாலும், மனிதர்களுடைய தீய எண்ணத்தாலும், தீ பரவலாலும் அழிந்த கோவில்கள் எண்ணற்றவை. உலகத்தையே படைத்த இறைவனுக்கு அழியாத கோவில் கட்டவேண்டும் என எண்ணினான் மகேந்திரவர்மன். எனவே, காலத்தால் அழியாத கற்கோவில்களை உருவாக்கினான். கல்லிலேயே கடவுள் சிற்பங்களை உருவாக்குதில் வல்லவனாகவும் திகழ்ந்தான். சிற்பக் கலைஞர்களைக் கொண்டு நுணுக்கமான சிலைகளை கல்லில் செதுக்கச்செய்தான். இத்தகைய புதுமையான கோவிற்கலையைக் கண்டு மக்கள் வியந்தனர். விசித்திரமான இச்செயல்களைச் செய்தததால் ‘விசித்திர சித்தன்’ எனப் போற்றப்பட்டதனைக் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. மகேந்திரவர்மனின் இத்தகைய அரும்பணியால் ‘பல்லவர்களே கற்கோவிலின் முன்னோடிகள்’ என்னும் பெயர் வரலாற்றில் நிலைபெற்றது. மண்டகப்பட்டு, வல்லம், தளவானூர், மகேந்திரவாடி, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் மகேந்திரவர்மன் கட்டிய கோவில்கள் பல்லவர்களின் புகழினை நிலைநிறுத்துகின்றன.

மன்னர்கள் போர்க்கலைகளில் மட்டுமே வல்லவர்களாக இருந்த காலத்தில், மகேந்திரவர்மன் போர்க்கலையில் மட்டுமின்றி சிற்பக்கலையிலும், ஓவியக்கலையிலும் சிறந்து விளங்கினான். எனவே, கற்கோவில்களின் மேற்புறத்தில்  ஓவியங்களைத் தீட்டினான்.  இன்றும் புதுக்கோட்டை சித்தன்ன வாசலில் தீட்டிய ஓவியங்கள் நிறம்மாறாமல் இருப்பதனைக் காணமுடிகிறது. குளங்களில் தாமரைப் பூக்களும், சுற்றி நாட்டியாமாடும் பெண்களும் என அழகழான ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. மேலும், மகேந்திரவர்மன் ‘தக்ஷின் சித்ரா’ என்னும் ஓவியக்கலைக்கான  இலக்கணத்தை வரைந்தான்.  எனவே, ‘சித்திரகாரப்புலி’ எனப் போற்றப்பட்டான். தலைநகர் காஞ்சியில் மகேந்திரவர்மன், கட்டிய கைலாசநாதர் கோவில் இன்றும் அவனுடைய கலைப்பற்றினை பறைசாற்றுகிறது.

குடுமியான் மலையில் உள்ள கல்வெட்டுகள் மகேந்திரவர்மனின் இசைத்திறனை வெளிப்படுத்துகின்றன. நாடகக்கலையிலும் சிறந்து விளங்கியவன் மகேந்திரவர்மன் என்பதனை அவனுடைய ’மத்த விலாசப் பிரகசனம்” என்னும் நாடகநூல் எடுத்துரைக்கிறது.

கலைகளில் சிறந்துநின்ற மகேந்திரவர்மன் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக ‘மகேந்திரமங்கலம்’ என்னும் நகரத்தை உருவாக்கினான்.  மேலும் அங்கு ‘சித்திரமேக தடாகம்’ என்னும் குளத்தை வெட்டினான்.  பக்தியில் சிறந்து விளங்கியதால் சிவனடியார்களும் வைணவர்களும் இவனுடைய ஆட்சிக்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். இவ்வாறு பக்தியும் கலைகளும் சிறந்து விளங்கிய நல்லாட்சியாக மகேந்திரவர்மனின் ஆட்சி அமைந்ததனைக் கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன.  

 

****************

 

வெள்ளி, 29 செப்டம்பர், 2023

பேச்சு வழக்கில் மரபுச் சொற்கள்

 


            வெற்றி பெற்றதை ‘வாகை சூடுதல்’ எனக் குறிப்பிடுவதுண்டு. ‘வாகை’ என்பது மணிமுடியினைக் குறிக்கும். மன்னர் காலத்தில் இருந்த மணிமுடி இப்பொழுது  இல்லாவிட்டாலும் அவர்கள் பயன்படுத்திய சொல் இன்று வெற்றி பெற்றோரைப்  பாராட்டப் பயன்படுகிறது.

            “தலை தப்பியது” என்னும் சொல் சிக்கலிலிருந்து விடுபட்டதனைக் குறிக்கும். தொடர்வண்டி இருப்புப்பாதையினை எப்பொழுதும் கடந்து செல்லக்கூடாது. தொடர்வண்டியின் வேகத்தைக் கணிக்க இயலாது. நொடிப்பொழுதில் கடந்துவிடும். சுரங்கப்பாதையையோ  மேம்பாலத்தையோ பாதையாக்கிக் கடக்கவேண்டும். அறியாமை நிறைந்த ஒருவர், தெரியாமல் இருப்புப்பாதையினை கடக்கும்பொழுது வேகமாகத் வந்த தொடர்வண்டி வேறு இருப்புப்பாதையில் சென்று விடுகிறது. இச்சூழலை அவருடைய ‘தலை தப்பியது’ என்னும் சொல் உணர்த்திவிடுகிறது.

            “மூக்கறு பட்டான்” என்னும் சொல் ஒருவர் தாழ்வு படுத்திப்பேசும் பொழுது அதற்கு அவரே காரணம் என உணர்த்திவிடுதல். ஒரு தேனீர் கடைக்காரரிடம் பால் காரர் “என்ன இது  தேநீரா” எனக் கிண்டல் செய்கிறார். நீ கொடுக்கும் பாலில்தான் தேநீர் அணியம் செய்தேன் என்கிறார். பால்காரர் ஏன் கேட்டு அவமானப்பட்டோம் என எண்ணுகிறார். இதுவே, மூக்கறுபடுவது.

            “தலை கவிழ்ந்தான்” என்பது  தோல்வியினைக் குறிப்பிடுவது. மட்டைப்பந்து விளையாட்டில் சதம் அடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, விளையாட்டு வீரர் அடித்த முதல் பந்து கோட்டுக்கு வெளியே செல்லாமல் எதிரணி வீரர் கையில் சிக்கிக் கொள்கிறது.  அப்பொழுது அந்த வீரர் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முடியவில்லை என தலை குனிந்து நடப்பார். இதுவே ‘தலை  கவிழ்தல்’ எனக் குறிக்கப்படுகிறது. இதனையே இழிவான வழக்கில் “மண்ணைக் கவ்வினான்” எனக் கூறிக் காயப்படுத்துவதும் உண்டு.

            “தலையில் கல்லைப் போட்டு விட்டான்” என்பது ஏமாற்றிவிட்டதனைக் குறிப்பிடுகிறது.  குடும்பத்தைக் காப்பாற்றுபவன் ஏதோ ஒரு விபத்தில் சிக்கிக்கொண்டால் அந்தக் குடும்பத்தின் நிலை என்னாகும். எனவே, முதுமையில் உள்ள பெற்றோர் என் செய்வர். எனவே, அவர்கள் “தலையில் கல்லைப் போட்டுவிட்டான்” எனக் கூறி  வருந்துவர்.

            “ஊசிக்காது” என்பது கூர்மையாகக் கேட்கும் திறனுடைய காதினைக் குறிக்கப்பயன்படுத்துவது வழக்கம். ஊசியின் காதில் மெல்லிய நூல் நுழைவது போல், காதில் மெல்லிய செய்திகள் நுழைந்தால் “ ஊசிக்காது” எனக் குறிப்பிடுவதனைக் காணமுடிகிறது.

            ஒரு பேச்சாளர் தொடர்ந்து சிறப்பாகப் பேசுகிறார் எனில்  அருவி போல் பேச்சு எனக் குறிப்பிடுவர். வாய்ப்பு கொடுத்தால் கருத்துக்களை அள்ளிக் கொட்டும் ஆற்றலுடைய பேச்சாளர்கள் உண்டு. அவ்வாறு பேசப்படும் பேச்சினை “மடை திறந்த வெள்ளம்” போல எனக் குறிப்பிடுவர்.

            தலைமுடி படியாமல் குச்சிபோல் நின்று கொண்டிருந்தால் “முள்ளம்பன்றி” தலை எனக் குறிப்பிடுவர்.  ஆனால் இன்று அப்படி தலைமுடியை வெட்டச்சொல்வதனைக் காணமுடிகிறது. காசு கொடுத்து அவ்வாறு  தலைமுடியை நிற்கவைக்கும் வழக்கம் வந்துவிட்டது. ஆனால் படியவைத்தலே பணிவின் பெருமையை உணர்த்தும். அது தலை முடியாக இருந்தாலும் சரி மன்னனின் மணி முடியாக இருந்தாலும் சரி. 

-   

NSS PROGRAM

 


    காஞ்சி மாமுனிவர் அரசினர்ப் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மகாத்மா காந்தியடிகளின் 154 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி கொண்டாடும் வகையில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்படஉள்ளது.